Vanga blogalam in Facebook

25 August 2011

மூட்டைபூச்சி - சிறுகதை

                   
        "கலைமகள்"  - எழுத்தாளர்கள் அமைப்பின் ஐந்தாவது  ஆண்டு விழா"  என்று நுழைவாயிலில் கட்டப்பட்டிருந்த பெரிய பேனரை பார்த்துக்கொண்டே அந்த ரிசார்ட்சுக்குள் நுழைந்தான் பரத்.. 

      ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இது போன்ற சந்திப்புகளால் புதிய எழுத்தாளர்களின் நட்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல்,இயற்கை எழில் மிகுந்த இடங்களில் நடப்பதால் , சென்னையின் இயந்திரத்தனத்திலிருந்து இரண்டு நாட்கள் விடுப்பு
கிடைக்கும்  என்பதாலும் ஒரு முறை கூட இந்த விழாவை தவறவிட்டதில்லை 

     அவன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போலவே இந்த முறை காடுகளுக்கு மத்தியில் அழகாக அமைந்திருந்தது அந்த ரிசார்ட்ஸ்..

     'சார்,என் பேர் பரத்"  என சொல்லி தனக்கென கொடுக்கப்பட்டிருந்த அடையாள அட்டையை காண்பிக்க , தொப்பைக்கு கீழே இறங்கி கொண்டிருந்த பேண்டை ஏற்றி பிடித்தபடியே சற்று  இறங்கியிருந்த மூக்கு கண்ணாடி வழியே பரத்தை மேல் நோக்கி பார்த்தார் ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த மேனேஜர்...
     "பிரயானம்லாம் எப்படி இருந்தது சார்"   தன் டைக்கு சற்றும் பொருத்தமே இல்லாத வெத்தலைப் பாக்கு வாயுடன் நலம் விசாரித்துக் கொண்டே ..இவன் பதிலை எதிர்பார்க்காமல் சாவியை தேடி மேஜை மீது வைத்தன அவர் கைகள்..சம்பிரதாயமான பதிலை சொல்லிவிட்டு சாவியோடு விரைந்தவனை அவர் குரல் தடுத்து நிறுத்தியது..
                              
    "சார், நேரே போய் லெப்டுல திரும்புங்கோ,அப்புறம் அது ரெண்டு பேர்  தங்குற ரூம்,உங்க கூட அனேகமா பிறைசூடன்னு ஒருத்தர் தங்கலாம்", சொல்லிவிட்டு அவர் தன் வேலையில்  மூழ்கினார் 

     அதை பெரிதும் சட்டை செய்து கொள்ளாமல் தன் ரூமை நோக்கி விரைந்த  பரத்..பையில் தடவி கையில் சிக்கிய ஒரு புத்தகத்துடன் கட்டிலில் சாய்ந்தான்.. படித்துக்கொண்டே கண்ணயர்ந்து விட்டவன் ரூமை யாரோ தட்டும் சத்தம் கேட்டு திறந்தான்..

     தடித்த உருவம்,கொஞ்சம் குள்ளமான உடல்வாகுடன் நின்று கொண்டிருந்தவரை பார்த்தவுடன் "சாப்பாடல்லாம்   எதுவும் வேணாம்பா" என சொல்ல நினைத்தவன் அதை உதறி விட்டு "சொல்லுங்க சார்" என்றான்...

     'சார்' நான் தான் பிறைசூடன்" என்றார் வந்தவர்..
     "வாங்க சார் உள்ள வாங்க சொல்லிக்கொண்டே அவருடைய இருக்கைகளைக் காட்டினான் பரத்..

    "நான், உங்களை இதுக்கு முந்தின விழாவுல பார்த்ததில்லையே இதான் முத தடவையா" இவன் வினவ ,  "ஆமாம் சார் , ஆனா இந்த ஊருக்கு பல தடவ வந்திருக்கேன், சொல்லிக்கொண்டே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் வந்தவர்..
                                         
     சிறிது நேர விசாரிப்புகளுக்கு பிறகு கதை,இலக்கியம்,சினிமா என அவர்களின் உரையாடல் நீண்டது..  பேசிக்கொண்டிருக்கும் போது தான் தன் உடலில் ஏதொ ஊர்வது போலவும்,அரிப்பது போலவும் உணர்ந்தவன் ..

    'என்னனே தெரியல சார், ஏதொ கடிக்கற மாதிரி இருக்கு ஆனா என்னனு தெரியல" அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே   "வேறொன்னுமில்லை சார் , அது மூட்டைபூச்சி" என்று அவர் சொல்ல ,

   "மூட்டைபூச்சியா" - அதிசயமாக  வாய் பிளந்தான்  அவன்...நகரத்தில் வளர்ந்து கொசு தொல்லையை அனுபவித்திருந்தவன் மூட்டைப்பூச்சி பற்றி அவ்வளவாக அறியாததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.   

  "என்ன சார்   இப்படி கேட்டுட்டீங்க இந்த ஊரிலேயே இதானே  விசேஷம் " ஏதொ சுற்றுலா தளத்தை விவரிப்பது போல சொல்ல ஆரம்பித்தவர்,

   "மூட்டைபூச்சி இருக்கே அது கண்ணுக்கே தெரியாம மெல்லிசா இருக்கும்,கடிச்சதுன்னா  தடிப்பு வரும், சுர்ருன்னு இருக்கும், உங்களுக்கு ஒன்னு தெரியுமா சார்  , மூட்டப்பூச்சிய கொன்னா அது ரத்தத்துல இருந்து நெறைய பூச்சி வரும் .அவ்வளோ சீக்கிரம் சாவாது , பெருகினே போகும்"  ..

     "இந்த பூச்சிய ராட்சசன்னு சொல்லுவாங்க" . கண்களை உருட்டிக் கொண்டே ஆர்வத்துடன் விவரித்தார் பிறைசூடன்..அவனவன் இங்க அவஸ்தை பட்டுட்ட்ருக்கான்  விவஸ்தையில்லாம என்னமோ விசேசம்னு சொல்றாரே, என்று மனதில் நினைத்துக்கொண்டே அவரை வித்தியாசமாக பார்த்தான் பரத்...

    "புரியிது சார் என்ன விசேசம்னு தானே பாக்கறீங்க, மயிலு, நாய், மாடுன்னு எவ்வளவோ சிலைய கோயில்ல பாத்திருப்பீங்க..ஆனா இந்த ஊரில மட்டும் தான் மூட்டைப்பூச்சிக்கு சிலையும் இருக்கு , ஒரு கதையும் இருக்கு"..
                               
    'தீய எண்ணங்களோடும் , தீரா ஆசைகளோடும் இறக்கரவுங்க பூச்சியாவும் பொறவு மனுசனாவும் மாறி மாறி அலையருதா இந்த பக்கத்துல ஒரு நம்பிக்கை...உங்களுக்கு சாமி, பூதம் இதுலெல்லாம் நம்பிக்கை உண்டா ?..
                                         
    "சாமி மேல உண்டு"  அவன் இழுக்க .."அப்போ பூதம் மேலயும் உண்டு"..இளித்தார் அவர்..."அதப் பத்தி பெருசா எந்த யோசனையும் இல்ல" சொல்லிக்கொண்டே உறங்குவதற்கு அவன் ஆயத்தமாக,

    "என்ன மூட்டைபூச்சி பத்தி பேசி ரொம்ப போரடிசுட்டேனோ" அவர் கேட்க, அவனுக்கு என்னவோ போல் இருந்தது "சே,சே அதெல்லாம் ஒண்ணுமில்ல சார், வந்த களைப்பு அவ்வளோ தான்'  - நாசூக்காக மறுத்தான்..

     எப்போது தூங்கினான் என்றே தெரியவில்லை , கண் முழித்து பார்த்த போது 
 கசகச வென்று இருந்தது.. முதலில் குளித்து விட்டு கிளம்ப வேண்டும் என நினைத்துக்கொண்டே பாத்ரூமிற்கு செல்லும் போது தான் கவனித்தான் அங்கு பிறைசூடன் இல்லை.. காபி, டீ சாப்பிட போயிருப்பார் என்று எண்ணிக்கொண்டே குளித்து ரெடியானான் ...

                                                    
      "என்ன சார் ரூம்லாம் சௌகரியமா இருந்ததா? தொப்பையின் மேல் படர்ந்திருந்த டையை தடவியபடியே கேட்டார் மேனேஜர்..

     "ஒ.கே சார்" என்று மட்டும்  சொல்லிவிட்டு வந்த வேலையை முடித்துக் கொண்டு அப்படியே கிளம்புவதற்கு ஆயத்தமானான்.. 

    "சார் , என்கூட தன்கிருந்தாரே பிறைசூடன் அவர பாத்தீங்களா? '

    "சார், நான் சொல்லவே மறந்திட்டேன் , அவர் இங்க வரலேன்னு அப்பவே ..போன் பண்ணி சொல்லிட்டார்'.

    "என்ன சார் சொல்றீங்க என்கூட ரூம்ல இருந்தாரே' பரத் குழப்பமாக சொல்ல , அவனை ஏற இறங்க பார்த்தவர் 

     "சார் நான் இங்கேயே தான் இருக்கேன் , அந்த வாட்ச் மேனும் இங்க தான் இருக்கான் எங்கள தாண்டி யாரும் போகவும் முடியாது,வரவும் முடியாது, நீங்க ஏதாவது கனவு கண்டீங்களோ" - எந்த சலனமுமில்லாமல் கேட்டார் ..

     "அப்போ நேத்து ராத்திரி என்கூட இருந்தது யாரு"   கொஞ்சம் பயத்துடன் யோசித்துக்கொண்டே   வேகம் வேகமாக விரைந்தவனின்   முதுகில்   மெதுவாக , மிக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது அந்த  மூட்டைபூச்சி ....


 

8 comments:

  1. தூள்...

    ReplyDelete
  2. அம்மாடியோவ்.....இதென்ன கலாட்டா....??? மூட்ட பூச்சிய வச்சு மூச்ச நிப்பாட்ட வைக்கிற டெர்ரர் கத .

    ReplyDelete
  3. arumai ananthu

    ReplyDelete
  4. ரெவெரி said...
    தூள்...

    பாராட்டுக்களுக்கு நன்றி...

    கடம்பவன குயில் said...

    அம்மாடியோவ்.....இதென்ன கலாட்டா....??? மூட்ட பூச்சிய வச்சு மூச்ச நிப்பாட்ட வைக்கிற டெர்ரர் கத .

    பாராட்டுக்களுக்கு நன்றி...

    Anonymous said...
    arumai ananthu

    பாராட்டுக்களுக்கு நன்றி...

    ReplyDelete
  5. அப்பாவி தங்கமணி said...
    Super twist.. well made story...

    Thanks...

    ReplyDelete
  6. அருமை நண்பா - madhan

    ReplyDelete
  7. Anonymous said...
    அருமை நண்பா - madhan

    நன்றி நண்பா ...

    ReplyDelete