Vanga blogalam in Facebook

3 December 2011

போராளி - புதிய போர் பழைய களம் ...


                                               
     கடந்த சில வருடங்களில் நம்மை கவனிக்க வைத்த காம்பினேஷன்களுள் முக்கியமானது சசிகுமார் - சமுத்திரகனி இருவரின் கூட்டணி ... இந்த கூட்டணியின் நான்காவது படம் " போராளி " ...அழுத்தமான கதையம்சம் இல்லாததால் " நாடோடிகள் " போலவோ , காமெடியுடன் கூடிய வேகமான திரைக்கதையால் " ஈசன் " போலவோ அல்லாமல் புது மாதிரி நிற்கிறான்
" போராளி " ...

     ஒரு வீட்டிலிருந்து சசியும் , அல்லரி நரேஷும் தப்பிக்கும் முதல் காட்சியில் தொடங்கும் படம் , கஞ்சா கருப்பின் வீட்டில் இருவரும் தஞ்சம் அடைந்ததும் தங்கு தடையின்றி இடைவேளை வரை வேகமாக செல்கிறது ... பத்திரிக்கையில் இருவரின் படத்தையும் பார்த்து விட்டு ஒரு கும்பல் துரத்த , இவர்கள் ஓட சஸ்பென்சுடன் வருகிறது இடைவேளை ...

     காலனியில் வந்து தங்கிய கொஞ்ச நாட்களிலேயே எல்லோர் மனதிலும் ( குறிப்பாக ஒனர் மற்றும் அவர் பெண் ) நல்ல பெயர் எடுத்த சசியையும் , நரேஷையும் வந்த கும்பல் பைத்தியம் என்று சொல்ல ஏன் ? எதற்கு ? எப்படி ? என இப்படி சுருக்கமாக சொல்லாமல் இடைவேளைக்கு பின் கொஞ்சம் விர்ர்ரிவாக விளக்குகிறார்கள் ...

                 
    சிரிக்கும் போது வெகுளித்தனத்தையும் , முறைக்கும் போது ஆக்ரோஷத்தையும் நன்றாக காட்டும் சசிகுமாரிடம் மற்ற முக பாவங்கள் மிஸ்ஸிங் ... படம் ஆரம்பித்து சில நிமிடங்களுக்கு பேசாமலேயே இருந்து வாய் பேச முடியாதவரோ என சந்தேகிக்க வைப்பவர் பின் அப்துல் கலாமில் ஆரம்பித்து அடுக்கடுக்காக பேசி சிரிக்கவும் , சலிக்கவும் வைக்கிறார் ... சிலோன் புரோட்டா கேட்கும் சுவாதியிடம் " எனக்கு சிலோனே பிடிக்காது இதுல  புரோட்டா வேற " என்று சசி சொல்லும் போது தியேட்டரில் விசில் ...

                 
   " சுப்ரமணியபுரம் " படத்திற்கு பிறகு சுவாதியை ஏன் தமிழில் யாரும் யூஸ் செய்யவில்லை என்று ஆச்சர்யமாக இருக்கிறது ... கண்களாலேயே பேசுகிறார். குறிப்பாக சசி காதலை ஏற்றுக்கொள்ளும் இடத்தில் வெட்கம் , அழுகை , சந்தோசம் என எல்லா உணர்ச்சிகளையும் கண்களாலேயே காட்டும் காட்சியில் சுவாதியின் நடிப்பு சூப்பர் ...

    அல்லரி நரேஷ் தன் குறும்பு நடிப்பால் கவர்கிறார் ... " நாடோடிகள் " பரணியை நியாபகப்படுத்துவதும் , பேச்சில் தெலுகு வாடை அடிப்பதும் மைனஸ் ...  நிவேதாவின் அமுல் பேபி முகத்திற்கு சென்னை பாஷை பேசும்
தமிழ் செல்வி கேரக்டரை புகுத்தியது , அவர் அக்காவின் பிரச்சனையை போலவே செயற்கையாகவே ஒட்டாமல் இருக்கிறது ...
         
    இவர்களை தவிர கரடி வேஷம் போட்டு பிழைப்பு நடத்தும் கஞ்சா கருப்பு ( அமீரை போலவே இவரை சரியாக உபயோகப்படுத்தும் சமுத்திரகனியை பாராட்டலாம் ) , " சாந்தி , சாந்தி " என்று கத்தி சாந்தியை இழக்கும் படவா கோபி , " முடிவ நான் தான் எடுப்பேன் " என மனைவியிடம் சொல்லும் ஹவுஸ் ஒனர் கு.ஞானசம்பந்தம் , காலனியில் குடியிருக்கும் குடிகாரன் , சுவாதியின் தங்கை, " நாங்க அப்பவே இப்படி , இப்ப சொல்லவா வேணும் " என்று சவடால் பேசும் சூரி , சசியின் சித்தியாக வருபவர் இப்படி பலர் ஸ்கோர் செய்கிறார்கள்  ... குறிப்பாக பிளாஷ்பேக்கில் வரும் வசுந்தராவும் , அவர் அப்பாவாக வரும் கிழவரும் மனதில் பதிகிறார்கள் ...

                                   
    டாக்டராக வரும் ஜெயப்ரகாஷிற்கும் , நிவேதாவின் மாமாவாக வரும் நமோ நாராயனாவிற்கும் பெரிய ஸ்கோப் இல்லை .... சுந்தர்.சி.பாபுவின் பின்னணி இசை படத்திற்கு படம் மெருகேறி வருகிறது ... குறிப்பாக சேசிங் சீன்களில் இவரின் ஆர்.ஆர் அருமை ... சென்னையையும் , கிராமத்தையும் பிரித்து காட்டும் கதிரின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை ...
                           
    முதல் பாதியில் கதை எதை நோக்கி போகிறது என்ற குழப்பம் ஏற்பட்டாலும் , அதை அடக்கும் வேகமான திரைக்கதை , முதல் பாதியில் கஞ்சா கருப்பையும் , இரண்டாவது பாதியில் சூரியையும் சரியாக பயன்படுத்தியது , தன்னம்பிக்கை , மனித நேயம் இரண்டையும் கலந்து படைக்கப்பட்ட சசிகுமாரின் கேரக்டர் , சசி - சுவாதி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் ,

    " ஏதாவது ஒண்ணுன்னா வேடிக்கை மட்டும் பாப்பீங்க , உதவின்னு கூப்புட்டா ஓடிடுவீங்க " , " மூளை தான் அண்ணாச்சி மூலதனம் " , " சொந்தமா ஏதாவது பண்ணலாம்னு பாத்தா ஏண்டா இப்படிகெடுக்குறீங்க " , சுவாதி சசியிடம் சொல்லும் " அண்டா மாதிரி நினச்சு வேணா தூங்குங்க " போன்ற  நச் வசனங்கள் , சில நேரமே வந்தாலும் மனநிலை சரியில்லாதவர்கள் பற்றிய மிரட்டும் மருத்துவமனை காட்சிகள் , பாடல்களே இல்லாமல் பின்னணி இசை உதவியுடன் பின்பாதியை நகர்த்திய தைரியம் இவற்றிற்காக இயக்குனரை நிச்சயம் பாராட்டலாம் ....

                             
    முதல் காட்சியிலேயே தப்பியோடுவதை காட்டி விட்டு பிறகு எந்த க்ளூவும் இல்லாமல் வெறும் காமெடியாகவே முதல் பாதியை நகர்த்தியிருப்பது ,  நிவேதா அக்காவின் பிரச்னை , அது சம்பந்தப்பட்ட ஒட்டாத காட்சிகள் , போராளி என்று பெயர் வைத்ததால் சமூக அவலங்களை பற்றிய ஒரு அக்கறையான படமோ என நினைத்தால் , சொத்து தகராறு , சித்தி கொடுமை என வழக்கமான ட்ராக்கில் கதை பயணிப்பது ,

    சஸ்பென்ஸ் வைக்கிறேன் பேர்வழியென்று என்று கொஞ்சம் சுத்த விட்டிருப்பது , '" நாடோடிகள் " பாணியில் பஸ் பேக் ட்ராப்பில் தேவையில்லாமல் வரும் குத்து பாடலில் ஆரம்பித்து , புத்திசாலித்தனமாக யோசிக்கும் சசிகுமார் வித்தியாசமாக எதையும் செய்யாமல் ஒத்த ஆளாக ஒரு ஊரையே அடிக்கும் வழக்கமான கிளைமேக்ஸ் பைட்டுடன் படத்தை முடித்திருப்பது இவையெல்லாம் போராளியை போர்களத்தில்  வாகை சூட விடாமல் பின்னுக்கு இழுக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் : 41 

18 comments:

  1. இதுக்கு போயி போராளி என்று பெயர் வைத்து ....இது என்னவோ அம்மண படத்துக்கு " துறவு"ன்னு பேர் வச்ச மாதிரி இருக்கு

    ReplyDelete
  2. Anonymous said...
    இதுக்கு போயி போராளி என்று பெயர் வைத்து ....இது என்னவோ அம்மண படத்துக்கு " துறவு"ன்னு பேர் வச்ச மாதிரி இருக்கு.

    உண்மை ... பொருத்தமில்லாத தலைப்பு ...! ஆனால் நீங்கள் சொன்ன அம்மணத்திற்க்கும் , துறவுக்கும் பொருத்தம் இருக்கிறது ... முற்றும் துறந்து மனதை முழு நிர்வாணமாக்குவது தானே துறவு ...! நன்றி ...

    ReplyDelete
  3. first class movie . your vimarsanam bore

    ReplyDelete
  4. விகடன் விமர்சனம் போன்ற நடை...அருமை...
    இன்று என் வலைப்பூவில்... மனவாசம்

    ReplyDelete
  5. Anonymous said...
    first class movie . your vimarsanam bore...

    Oh! Thanks...

    ReplyDelete
  6. மயிலன் said...
    விகடன் விமர்சனம் போன்ற நடை...அருமை...
    இன்று என் வலைப்பூவில்... மனவாசம்

    நன்றி ...!

    ReplyDelete
  7. புத்திசாலித்தனமாக யோசிக்கும் சசிகுமார் வித்தியாசமாக எதையும் செய்யாமல் ஒத்த ஆளாக ஒரு ஊரையே அடிக்கும் வழக்கமான கிளைமேக்ஸ் பைட்டுடன் படத்தை முடித்திருப்பது/

    சுவாரஸ்யமான பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. அப்போ போராளி பேருக்குமட்டும்தானா.ஆவலாய் இருந்தேன் பார்க்க.நன்றி ஆனந்த் விமர்சனத்திற்கு !

    ReplyDelete
  9. இராஜராஜேஸ்வரி said...
    புத்திசாலித்தனமாக யோசிக்கும் சசிகுமார் வித்தியாசமாக எதையும் செய்யாமல் ஒத்த ஆளாக ஒரு ஊரையே அடிக்கும் வழக்கமான கிளைமேக்ஸ் பைட்டுடன் படத்தை முடித்திருப்பது/
    சுவாரஸ்யமான பகிர்வு. பாராட்டுக்கள்.

    நன்றி ...!

    ReplyDelete
  10. ஹேமா said...
    அப்போ போராளி பேருக்குமட்டும்தானா.ஆவலாய் இருந்தேன் பார்க்க.நன்றி ஆனந்த் விமர்சனத்திற்கு !

    போராளி போரடிக்க மாட்டான் , பார்க்கலாம் . நன்றி ...!

    ReplyDelete
  11. போராளி விமர்சனம் அருமை...நன்றி ...

    ReplyDelete
  12. திண்டுக்கல் தனபாலன் said...
    அருமை... அருமை... நல்ல விமர்சனம்...
    நம்ம தளத்தில்:
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"


    நன்றி ...!

    ReplyDelete
  13. ரெவெரி said...
    போராளி விமர்சனம் அருமை...நன்றி ...

    நன்றி ...!

    ReplyDelete
  14. நன்றாக சொல்லியிருந்தீர்கள். மசாலாவை கொஞ்சம் அதிகமாகவே கலந்திருந்தாலும் படம் சலிப்பில்லாமல் போகிறது.
    ஆனால் சுப்ரமணியபுரம்,நாடோடிகள் போன்ற எதார்த்த திரைக்கதை இதில் இல்லை

    ReplyDelete
  15. உண்மைதான் முதல் பாதி தூள் .. இரண்டாம் பதி கொஞ்சம் போர்.

    காமெடி காட்சிகளுக்காக படம் ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்

    ReplyDelete
  16. Tamilraja k said...
    நன்றாக சொல்லியிருந்தீர்கள். மசாலாவை கொஞ்சம் அதிகமாகவே கலந்திருந்தாலும் படம் சலிப்பில்லாமல் போகிறது.
    ஆனால் சுப்ரமணியபுரம்,நாடோடிகள் போன்ற எதார்த்த திரைக்கதை இதில் இல்லை...

    நன்றி ...!

    ReplyDelete
  17. "ராஜா" said...
    உண்மைதான் முதல் பாதி தூள் .. இரண்டாம் பதி கொஞ்சம் போர்.
    காமெடி காட்சிகளுக்காக படம் ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்

    நன்றி ...!

    ReplyDelete