இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் அன்னாவின் மூன்று கோரிக்கைகளையும் ஏற்று தீர்மானம் நிறைவேற்ற ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டவுடன் நாடாளுமன்ற சிறப்பு விவாதம் முடிவுக்கு வந்தது.. இன்றோடு அண்ணாவும் தன் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார்...
கீழ்மட்ட அரசு அதிகாரிகளையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருதல், அந்தந்த மாநிலங்களில் உள்ள லோகாயுக்தாவை நடைமுறைப்படுத்துதல்,மக்கள் சாசனம் போன்ற மூன்று கோரிக்கைகள் உட்பட ஜன் லோக்பால் மீதான சிறப்பு விவாதம் இன்று மக்களவையில் அனைத்து கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமாக நடைபெற்றது...
கடைசியில் வாய்மொழி வாக்கெடுப்பின் மூலம் லோக்பால் மசோதாவை நிலைக்குழுவிற்க்கு அனுப்ப ஒருமனதாக ஏற்கப்பட்டது.. ஒருவழியாக 12 நாட்கள் எந்த சுயநலமுமில்லாமல் உண்ணாவிரதம் இருந்த அன்னாவிற்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்..இது அவருக்கான வெற்றி மட்டுமல்ல ஊழழுக்கு எதிரான மக்களின் மனப்பான்மைக்கு கிடைத்த வெற்றி..
இதை முழுமையான வெற்றி என்று இப்போது சொல்ல முடியாவிட்டாலும் என்னென்னமோ செய்து இதை கலைத்து விட வேண்டும் என நினைத்த மத்திய அரசையே மடிய வைத்ததால் நிச்சயம் வெற்றிக்கான ஆரம்பம் என சொல்லலாம்..
இந்த 12 நாட்களில் காங்கிரஸ் செய்த கண்கட்டு வித்தைகள் தான் என்னென்ன?..சென்ற முறை அன்னா உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட போதே நமக்கு
அன்னாவின் உண்ணாவிரதம் வெற்றியா ? என்ற சந்தேகம் எழாமல் இல்லை...
எதிர்பார்த்தது போலவே ஜூன் மாத கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றப் போவதாக அண்ணாவிடம் வாக்குறுதி அளித்த காங்கிரஸ் அதை வழக்கமான தேர்தல் வாக்குறுதி போல காற்றில் பறக்க விட்டது..
முதலில் உண்ணா விரதத்திற்கு அனுமதி மறுத்து அண்ணாவை கைது செய்து திகாரில் அடைத்த மத்திய அரசு நாடு முழுவதும் கிளம்பிய எதிர்ப்பை பார்த்து பயந்து பின் மூன்று நாட்கள் , பத்து நாட்கள் என பேரம் பேசி கடைசியில் 15 நாட்களுக்கு ஒப்புக்கொண்டது..
இந்த முறை அன்னா இவ்வளவு பிடிவாதமாக இருப்பார் என்றோ,முன்பு இருந்ததை விட நாடெங்கும் மக்களின் குறிப்பாக இளைஞர்களில் ஆதரவு கிடைக்குமென்றோ மத்திய அரசு நிச்சயம் எதிர்பார்த்திருக்காது... அனாவசியமான விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மீடியா இந்த முறை முழு கவனத்தையும் அன்னா மேல் திருப்பியது அவர்களுக்கு மேலும் சங்கடத்தை உண்டாக்கியிருக்கும் ...
2 ஜி அலைவரிசை , காமன்வெல்த் ,ஆதர்ஷ் குடியிருப்பு இப்படி எல்லாவற்றிலும் ஊழலை உரம் போட்டு வளர்த்த காங்கிரஸ் , இதெல்லாம் தெரிந்தும் தெரியாமல் , அறிந்தும் அறியாமல் மௌனம் காத்த மன்மோகன் சிங் , இவருக்கு வாயாக செயல்படும் கபில்சிபில் , லோக்பாலுக்கு இப்போது அவசியம் என்ன ? தேர்தல் கமிசன் போல தனி அமைப்பை ஏற்படுத்தலாமே என்று அறிவு ஜீவி போல அவ்வப்போது பேசும் ராகுல் இவர்களெல்லாம் செய்த கூத்துக்களை மறக்க முடியுமா ?
எந்த ஊழல் பற்றி கேட்டாலும் எனக்கு தெரியும் , ஆனா தெரியாது என "என்னத்த" கண்ணையா போல விளக்கம் சொல்லும் பிரதமர் கடைசியாக நான் நேர்மையானவன் , இந்த 41 வருட அரசியல் வாழ்க்கையில் என்னையோ என் குடும்பத்தையோ யாரும் குறை கூற முடியாது என கொஞ்சம் வாய் திறந்தார்..
இதிலிருந்து இவரோ,இவர் குடும்பமோ எந்த ஊழலிலும் நேரடியாக ஈடுபட்டதில்லை , ஆனால் மற்றவர்கள் இவருக்கு தெரிந்தே ஏதாவது செய்தால் அதற்கு இவர் பொறுப்பல்ல என்று சொல்வது மட்டும் தெளிவாகிறது..என்ன ஒரு நேர்மை ? .
ஒரு பக்கம் மன்மோகன் எந்த விசாரணைக்கும் தயார் என்பாராம், ஆனால் கபில்சிபில் பிரதமரை லோக்பால் வரையறைக்குள் கொண்டு வரக்கூடாது என வாதாடுவாராம்..அன்னா அணியுடன் எங்கே வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் பேச தயார் என்று பொதுக்கூட்டத்தில் சொல்வார் பிரதமர்..ஆனால் அன்னா அணியினரிடம்
அதனை தெரியப்படுத்துவதில் மட்டும் அவருக்கு ஏனோ அப்படியொரு தயக்கம்...
இப்படி லோக்பாலை கொண்டு வருவதை விட தட்டிக் கழிப்பதிலேயே மத்திய அரசின் கவனம் முழுவதும் இருந்தது..இதையும் மீறி இந்த தீர்மானம் நிறைவேறியதற்கு பி.ஜே.பி,இடதுசாரிகள் உட்பட எதிர்கட்சிகள் கொடுத்த ஆதரவும் மிக முக்கிய காரணம்...
முதலில் அன்னா மீதே ஊழல் புகார் சொல்லிப் பார்த்த காங்கிரஸ் பின் அது எடுபடாமல் போகவே ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவாளர், மோடியை பாராட்டினார் என்று கூறி பின் மத சாயம் பூச பார்த்தது.. ஊழல் அற்ற முதல்வராய் இருப்பதோடு மட்டுமல்லாமல் குஜராத் மாநிலத்தையே முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கும் மோடியை அவர் பாராட்டியதில் என்ன தவறு ?..பாவம் எந்த ஒரு விசயமாக இருந்தாலும் போலி மத சார்பின்மையை புகுத்தும் காங்கிரஸ் இதை தவிர வேறெந்த யுக்தியை கையாள முடியும் ?
தனி மனிதனாக எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் அன்னா தொடங்கிய போராட்டத்திற்கு நாடு முழவதும் கிடைத்த வரவேற்பு ஊழலுக்கு எதிராக மக்கள் விழித்தெழ தொடங்கி விட்டார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது ...இனிமேல் "ஆம் ஆத்மி" என்று சொல்லி யாராவது வந்தால் அவர்களுக்கு ஆப்பு தான்...
2 ஜி அலைவரிசை ஊழல் உலகையே உலுக்கிய நேரத்தில் நிச்சயம் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கான விதை இங்கிருந்து தான் முளைத்து இருக்க வேண்டும் ...ஆனால் சென்ற முறையை போல அல்லாமல் இந்த முறை தமிழகத்தில் இதற்கு கிடைத்த வரவேற்பு அலாதியானது...
முன்பே சொன்னது போல லோக்பால் மசோதாவை நிறைவேற்ற நிலைக்குழுவிற்கு அனுப்பியதாலும் , அதன் மூலம் அன்னா தன் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டதாலும் மட்டுமே இதை முழு வெற்றி என கொண்டாடி விட முடியாது..ஏனெனில் பாதி கிணறு மட்டுமே தாண்டியிருக்கிறோம்...
லோக்பால் மூலம் ஊழலை கட்டுப்படுத்துவதோடு மட்டும் நின்று விடாமல் ஊழல் புரிபவர்களுக்கும் , அந்த கட்சிக்கும் தகுந்த தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் ..மேலும் வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரம் கோடி கருப்பு பணமும் முழுமையாக இங்கு கொண்டு வரப்பட வேண்டும்
என்பதும் பொது மக்களின் கோரிக்கை ..
என்பதும் பொது மக்களின் கோரிக்கை ..