அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்கிற சஸ்பென்ஸ் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே இருந்தாலும் அதற்கான அரசியல் சூடு தமிழகத்தில் குறைவாகவே இருக்கிறது . 2014 தேர்தலுக்கு இன்னும் தயாராகாமல் தமிழகம் தடுமாறுகிறதா ?! ...
மோடி மேஜிக் நாடெங்கும் வியாபித்திருந்தாலும் தமிழகத்தில் மோடி வித்தையெல்லாம் பலிக்காது என்றவர்களை கூட அவர் தலைமையில் நடந்த திருச்சி மாநாடு திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் . எந்த ஒரு கட்சி ஆட்சியை பிடிப்பதற்கும் பண , அரசியல் பலங்களையும் தாண்டி தன்னலமற்ற தொண்டர்களின் பங்களிப்பும் , புத்துணர்ச்சியும் மிக மிக அவசியம் . அதனை மோடி பிரதம வேட்பாளாராக அறிவிக்கப்பட்ட பிறகு பி.ஜே.பி யினரிடம் கண் கூடாக காண முடிகிறது ...
தமிழகத்திலும் அதே புத்துணர்ச்சி எதிரொலித்தாலும் அவர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி மோடியின் சென்னை வருகைக்கு பிறகும் உறுதி செய்யப்படாமல் போனது துரதிருஷ்டமே . இருப்பினும் அனைத்து கட்சிகளுக்குமிடையே எந்த ஒரு உறுதியான பேச்சு வார்த்தையும் தொடங்கப்படாத நிலையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் . அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை , எதிரியும் இல்லை என்பார்கள் . தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டுபவர்கள் கூட அரசியல் அரங்கில் எதிர் எதிர் அணியில் மோதுவதும் , எதிர் அணியில் இருப்பவர்கள் தேர்தலை ஒட்டி கை கோர்ப்பதும் புதிதல்ல ...
இந்த சூழ்நிலையில் நிதியமைச்சருடன் ஒரே மேடையில் அ.தி.மு.க மந்திரி அமர்ந்ததையும் , பிரதமருக்கு தமிழக முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததையும் எதேச்சையாக நடந்தது என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது . இதையெல்லாம் பார்க்கும் போது கடைசி நிமிடத்தில் அ.தி.மு.க கூட்டணி அமையாமல் போனாலும் அதற்காக பி.ஜே.பி சோர்ந்து விட வேண்டிய அவசியமிருக்காது . கடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 2.5 சதவிகித வாக்குகளை பெற்றதோடு கணிசமனான இடங்களில் மூன்றாவது இடத்திற்கு வந்ததும் , உள்ளாட்சி தேர்தலில் 13 நகராட்சிகளை கைப்பற்றியதும் கட்சி இங்கே வளர்ந்து வருகிறது என்பதை நன்றாகவே காட்டுகிறது . தமிழகத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் மட்டும் பலம் வாய்ந்ததாக அறியப்பட்ட கட்சி மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு 15 தொகுதிகளுக்கு மேல் பலம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது . பி.ஜே.பி யுடன் கூட்டணி வைக்காமல் போவது இரு பக்கமும் இழப்பு என்பதே நிதர்சனம் ...
அதே வேளை மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கட்சி என்பதால் இங்கே வலுவான கூட்டணி அமைவது பி.ஜே.பி க்கு மிகவும் அவசியமாகிறது . 2004 இல் எந்தவொரு காரணமுமில்லாமல் பி.ஜே.பி யை கழட்டி விட்டு விட்டு காங்கிரசுடன் கை கோர்த்த தி.மு.க விற்கு இந்த முறை அதையே மாற்றி செய்வதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன . தி.மு.க வை கூட்டணியில் சேர்ப்பது மூலம் நடுநிலையாளர்களின் ஓட்டுக்கள் சிதைவதற்கு வாய்ப்பிருந்தாலும் கிட்டத்தட்ட அ.தி.மு.க விற்கு சமமாக வாக்கு வங்கியை வைத்திருக்கும் தி.மு.க வை பி.ஜே.பி யால் கழித்து விட முடியாது . பத்து வருடங்களுக்கு முன்னாள் அ .தி.மு.க ஆட்சியிலிருக்கும் போதே தி.மு.க தமிழகத்தில் நாற்பதையும் வென்றதை மறுக்கவோ , மறைக்கவோ முடியாது . இங்கே மாறி மாறி கழகங்களின் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கின்றன ...
இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.க இப்போது திணறிக் கொண்டிருக்கும் வேளையில் தன்னை நிலைநிறுத்த பி.ஜே.பி யுடனான கூட்டணி ஓர் வாய்ப்பாக அமையலாம் . இந்த முறையும் கடவுளுடனோ அல்லது மக்களுடனோ மட்டும் கூட்டணி வைக்கும் நிலையில் விஜயகாந்த் இல்லை . கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவிகித வாக்குகள் பெற்றும் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியாமல் போனதை அவர் மறந்திருக்க மாட்டார் . தற்போதைய சூழ்நிலையில் அவருக்கு சரியான புகலிடம் பி. ஜே .பி மட்டுமே . கடந்த சட்டசபை தேர்தலில் அ .தி.மு.க கூட்டணிக்குள் அவர் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டதால் தி.மு .க விற்கு எதிரான அலை தே.மு.தி.க விற்கு கட்சி ஆரம்பித்து 8 வருடங்களுக்குள்ளாகவே பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கொடுத்தது . இந்த முறையும் காங்கிரஸிற்கு எதிரான அலையை அவர் சரியாக உபயோகப்படுத்திக் கொண்டால் சரிவிலிருந்து மீளலாம் ...
இந்த கூட்டணிக்குள் ம.தி.மு.க வும் இணைவது கூடுதல் பலம் சேர்க்கும் . கட்சி ரீதியாக ம.தி.மு.க பெரிய அளவில் வளர்ந்திருக்கா விட்டாலும் அதன் தலைவர் வை.கோ விற்கு மக்களிடம் இன்னும் நல்ல பெயர் இருக்கிறது . இந்த கூட்டணியில் தொகுதிகளுக்காக அவர் தன்மானத்தை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் நம்பலாம் . பா .ம.க தலைவர் ராமதாஸ் திருமாவளவனை தவிர்த்து ஜாதி கட்சிகளை இணைக்கும் முயற்சியை கை விட்டு விட்டு இந்த கூட்டணிக்குள் வருவது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும் . இது போன்ற ஒரு வலுவான மூன்றாவது கூட்டணி அமைவதில் சிக்கல் இருந்தாலும் , அப்படி அமையும் கூட்டணி தேசிய அளவில் மட்டும் இல்லாமல் அடுத்த சட்டசபை தேர்தலில் இரண்டு பிரதான கழகங்களுக்கு மாற்றாகவும் தமிழகத்தில் அமையக் கூடும் . தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதில் உள்ளது போன்ற இடியாப்ப சிக்கல் நிச்சயம் இதில் இருக்காது எனவும் எதிர்பார்க்கலாம் ...
இப்படி அரசியல் கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் கூட்டு சேரலாம் . கடந்த வருகையின் போது மோடி தொண்டர்களிடையே சொன்னது போல வரும் தேர்தல் அவர்களுக்கு பரிசோதனை முயற்சி அல்ல , நிச்சயம் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அருமையான வாய்ப்பு . இதை அவர்கள் நழுவ விட மாட்டார்கள் . ஏனெனில் காங்கிரஸ் மேல் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள் . மூன்றாவது அணிக்கு யார் தலைமை ஏற்பார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி . அதே சமயம் சிறந்த பிரதமராவதற்குரிய தகுதி மோடிக்கு இருப்பதும் , பத்து கோடிக்கும் மேல் இளைஞர்கள் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடன் இருப்பதும் பி.ஜே.பி க்கு மேலும் பலம் சேர்க்கும் விஷயங்கள் ...
ஆனால் நிலையான ஆட்சி அமைவதற்கும் 272 தொகுதிகள் பி.ஜே.பி கூட்டணிக்கு தேவை . தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான அலை இல்லாத போதும் நடப்பது நாடாளுமன்ற தேர்தல் என்பதை உணர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் தங்களின் நியாயமான கோபத்தை வாக்களிப்பில் காட்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் இந்த முறையும் அதே போல நாடாளுமன்ற தேர்தலில் செய்வார்களா ? அல்லது கூட்டணியையும் , சொந்த விருப்பு , வெறுப்புகளையும் பார்த்து தடுமாறுவர்களா ? பொறுத்திருந்து பார்க்கலாம் ...