27 October 2019

அவன் - அவள் - நிலா (9) ...


தான் கட்டிய கனவுக்கோட்டை தன் கண் முன்னாலேயே இடிந்து விழுவதென்பது புத்திர  சோகத்தை போலவே கொடுமையானது . அண்ணனும் , காதலனும்  அடித்துக்கொண்ட  தருணத்தில் சுந்தரி அந்த கொடுமையை அனுபவித்தாள் . எல்லாமே எதிர்பாராத நேரத்தில் நடந்து முடிந்தே விட்டது .
இதில் யார் பக்கமும் அவளால் நிற்க முடியவில்லை . அழுவதை தவிர அவளால் வேறொன்றும் செய்ய இயலவில்லை . கார்த்திக் அவளை நோக்கி வந்து " நான் கெளம்பட்டா ? " என்றான் . ஏதோ ஒன்றுமே நடக்காதது போல அவன் நின்று கொண்டிருப்பதை பார்த்த அவளுக்கு எரிச்சலாக வந்தது .
" அதான் எல்லாத்தையும் முடிச்சாச்சே அப்போ கிளம்ப வேண்டியது தானே ! "
அவள் அந்த எரிச்சலோடே அவனுக்கு பதில் தந்தாள் . அவன் மணியை  சைடாக பார்த்தான் , " இன்னும் முடியலையே அவன் உயிரோட தானே இருக்கான் " , அவன் சொன்னது அவளுக்கே கலக்கமாக இருந்தது .
" இப்போ என்ன அவனை கொலை பண்ணிட்டு நீ ஜெயிலுக்கு போவ , நான் லோலோன்னு அலையணுமா ?" . " உன்னை யாரு  அலைய சொன்னா ? "
அவள் அவனின் முகத்தை பார்த்து நேராக கேட்டாள் ,
" இப்போ என்ன சொல்ல வர்ற ? " ...

உண்மையில் கார்த்திக்கிற்கு என்ன சொல்வதென்றே  தெரியவில்லை . அவன் அவளுக்காக பொறுமையாக இருந்திருக்கலாம் தான் ஆனால் அவனால் யாருக்காகவும் தனது சுயமரியாதையை விட்டுக்கொடுக்க முடியவில்லை .
ஒருவன் தன்னை அறைந்த பின் இன்னொரு கன்னத்தை காட்ட அவன் ஒன்றும் ஏசு பிரான் அல்ல ஆனால் பதிலுக்கு ஒரு அறையோடு விடாமல் மணியை புரட்டி எடுத்து விட்டான் . அவள் கேட்ட போது அவனுக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது . " நான் ஒன்னும் சொல்ல வரல " என்று மொட்டையாக
பதில் சொன்னான் . " அங்க அவனை அடிக்கும் போது கொஞ்சமாவது என்ன நெனைச்சு பாத்தியா ? " . " ஏன் உன் அண்ணன நான் அடிச்சது மட்டும் வலிக்குதா ? அப்போ அவன் என்ன அடிச்சது ? " , அவனுக்கே உண்டான
ஆக்ரோஷத்துடன் கேட்டான் . " எப்பவுமே  இப்படி தப்பாவே புரிஞ்சுக்கோ ,
நான் சொல்ல வந்தது இப்படி சண்டை போட்டா நாம எப்படி ஒன்னு சேர்றது?"
அவனுக்கு அப்பொழுது தான் அது உறைத்தது . பிரச்சனை என்னவென்றால் போட்டி அல்லது சண்டை என்று வந்து விட்டால் அது வாயாலோ அல்லது கையாலோ அவனால் அங்கே விட்டுக்கொடுக்கவோ தோற்கவோ முடியாது .
இது போல சுந்தரியோடு பல முறை சண்டை போடும் போதும் எதையெதையோ சொல்லி அவள் வாயை அடைத்து விடுவான் ...

ஒரு வெற்றியை அடைய வேண்டுமானால் சில தியாகங்களை செய்ய வேண்டுமென விவேகானந்தர் சொல்லியிருக்கிறார் . ஆனால் புயலடிக்கும் போது நாணல் போல வளைந்து கொடுக்காமல் ஆலமரம் போல உறுதியாக இருப்பது வேரோடு சாய்த்து விடும் . பதிலுக்கு பதில் பேசினாலும் சுந்தரி கடைசியில் அவனுக்காக விட்டுக்கொடுத்து விடுவாள் அல்லது விட்டுக்கொடுக்க வைக்கப்படுவாள் . இது இருவருக்குமான தனிப்பட்ட சண்டையில் நடக்கும் ஆனால் இன்று அவள் அண்ணனோடு சண்டை போட்டிருக்கிறான் அதுவும் தெருவில் அனைவரும் பார்க்க அவனை அடித்து உதைத்து கட்டியுருண்டு வெறித்தனமாக சண்டையிட்டுருக்கிறான் . மணி தான் சண்டையை  முதலில் ஆரம்பித்தாலும் அதை மூர்க்கத்தனமாக மாற்றியதென்னமோ கார்த்திக் தான் . கார்த்திக்கிற்கு லேசாக பதட்டம் வந்தது.
பேசாமல் அவள் அண்ணனிடம் போய் மன்னிப்பு கேட்டுவிடலாமா என்று கூட யோசித்தான் . மனதார மன்னிப்பு கேட்க முடியாவிட்டாலும் சண்டையின் முடிவில் ஜெயித்ததென்னமோ அவன் தான் .அதனால் அவன் தான் முதலில் இறங்கி வரவேண்டும் . சுந்தரிக்காக கேட்டால் தான் இந்த பிரச்சனையை இப்போதைக்கு முடிவுக்கும்  கொண்டுவர முடியும் ...

" சுந்தரி நான் வேணா உன் அண்ணன்கிட்ட சாரி கேக்கவா ?" , அவன் அப்படி இறங்கி வந்து கேட்டதே அவளுக்கு ஆச்சர்யமாகவும் , சந்தோசமாகவும் இருந்தது ஆனால் அவன் கேட்பதால் நடந்தது எதுவும் மாறப்போவதில்லை என்பது அவளுக்கு தெளிவாக புரிந்தது . ஆனாலும் அது  அடிபட்ட உடனே செய்யப்படும் முதலுதவி போல உணர்ந்தாள் . அவளுக்கு லேசான பயமும் இருந்தது . மன்னிப்பு கேட்கும் போது மணி ஏதாவது பேசி வைக்க திரும்பவும் அவன்  முருங்கை மரம் ஏறிவிட்டால் என்ன செய்வதென்றும் யோசித்தாள் .
" சரி நீ இரு நான் போய் அண்ணா கிட்ட பேசுறேன் " அவள் அவனிடம் சொல்லி விட்டு சைக்கிள் ஸ்டாண்டில் உட்கார்ந்திருந்த மணியை நோக்கி போனாள் .
ஒரு சின்னப்பயல் தங்கைக்கு முன்னால் தன்னை அடித்துவிட்டான் என்பதை மணியால் ஜீரணிக்கவே  முடியவில்லை . ஏதோ ரெண்டு தட்டு தட்டினால் பயந்து விடுவான் என்று மணி தப்புக்கணக்கு போட்டுவிட்டதன் விளைவே இந்த அசிங்கம் . அந்த உண்மையை  மணியால்  ஒத்துக்கொள்ள முடியவில்லை . என்றாவது ஒருநாள் இதற்கு சரியாக பழி தீர்க்க வேண்டுமென்று மட்டும் அவன் மனம் கருவிக்கொண்டே இருந்தது ...

" அண்ணா எந்திரிண்ணா போலாம் " கூப்பிட்ட சுந்தரியை உட்கார்ந்த இடத்திலிருந்தே மேலெழுந்த வாரியாக பார்த்தான் மணி . " என்னம்மா சார சமாதானப்படுத்திட்டியா " அவன் கேட்டதிலே இருந்த நகலை அவள் புரிந்து கொண்டாள் . " அவரே உன் கிட்ட சாரி கேக்குறேன் சொன்னார் , நான் தான் பேசிட்டு வரேன்னு சொன்னேன் ". நம்மிடம் சண்டையிட்டவர் கொஞ்சம்
இறங்கி வரும் போது உடனே அதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் யாருக்கும் வருவதில்லை . சொல்லப்போனால் அது அவர்களுக்கிருக்கும் இறுமாப்பை இன்னும் ஏற்றி விடுகிறது . " ஆமாம் வயசு வித்தியாசம் பார்க்காம அவன் அடிப்பான் , அப்புறம் சாரி கேட்டவுடனே நான் ஒத்துக்கணுமா ?" . அவன் அப்படி பேசியது அவளுக்கு மேலும் ஒரு மாதிரி இருந்தது . " எதுக்குண்ணா  இப்போ நமக்குள்ள சண்டையை வளர்க்கணும் ?" .
அவனையும் சேர்த்து அவள் நமக்குள்ள என்று சொன்னது மணியை மேலும் உசுப்பேற்றியது . " என்ன நமக்குள்ள , ஏதோ ஒரு வகையில  சொந்தம்னா
அதுக்காக அவனும் நாமளும் ஒன்னா ?" . அவன் எங்கு வருகிறான் என்பது அவளுக்கு புரிந்தது , பணம் அது தான் இருவருக்கும் இடையில் இருக்கும் பெரிய இடைவெளி . மணி அப்படி நினைக்கலாம் ஆனால் சுந்தரியின் அப்பா கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் அதனால் பணம் அவருக்கு பெரிதில்லை . அவருக்கு முக்கியம் நல்ல குடும்பம் அதிலும் பையன் நன்கு  படித்திருக்க வேண்டும் ...

ஏற்கனவே நார்மலாக படித்து வேலைக்கு போவது போலில்லாமல் அவன் சினி ஃபீல்டில் நுழைவதே அவளுக்கு பெரிய தலைவலி , அந்த ஒரு விஷயத்துக்கே அவள் அப்பாவை , உறவினர்களை சமாளிக்க வேண்டும் . அண்ணன்களின் உதவியினால் அதை சமாளிக்கலாம் என்று நினைத்தவளுக்கு புது தலைவலியாய் இந்த சண்டை வந்து சேர்ந்தது . மணி அண்ணா சொன்னால் வீட்டில் உள்ளவர்கள் நிச்சயம் கேட்பார்கள் அல்லது குறைந்த பட்சம் பரிசீலிப்பார்கள் . பாசிட்டிவாக அவரை சொல்ல வைக்கலாமென்று நினைத்தவளுக்கு இன்று அவரே நெகட்டிவ்வாக மாறி விடுவாரோ என்கிற பயம் நெஞ்சை கவ்வியது . அந்த  நேரத்தில் என்ன நினைத்தாளோ தெரியவில்லை சற்றென்று அவன் காலில்  விழுந்து விட்டாள்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத மணி துள்ளியெழுந்து அவளை தூக்கினான் .
" என்னமா இப்படி பண்ற , இப்போ என்ன நான் அவனை மன்னிக்கனுமா ?"
பெண் அழுதால் பேயே இறங்கும் என்பார்கள் அவன் சாதாரண மனிதன் அதுவும் காலில் விழுந்தவள் தான் தூக்கி வளர்த்த தங்கை . அவன் மனம் உடனே இளகியது . அவளை தோளோடு கூட்டிக்கொண்டு கார்த்திக் பக்கம் போனான் ...

மணி காலில் அவள் விழுந்ததை பார்த்து செம்ம கோபத்தில் இருந்தவன் இருவரும் அவனை நோக்கி வருவதை பார்த்ததும் கொஞ்சம் சாந்தமானான்.
அண்ணன் காலில் தங்கை விழுவதில் தப்பில்லை ஆனாலும் அவன் சண்டைக்காக அதுவும் பொது இடத்தில் காலில் விழுந்ததை அவனால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை . இருந்தாலும் இப்பொழுது ஏதாவது சொன்னால் திரும்பவும் சண்டை வருமென்பதால் அவன் பொறுத்துக்கொண்டான் . அதைப்பற்றி கேட்க வேண்டாமென நினைத்தான் .
சுந்தரி அவனைப் பார்த்து மணியிடம் சாரி கேளு என செய்கை செய்தாள்  . அதை புரிந்து கொண்டவனாய் " சாரி ப்ரதர் " என்று கையை நீட்டினான் கார்த்திக் . பதிலுக்கு மணியும் கை நீட்டியதை பார்த்ததும் சுந்தரிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது . மணி அண்ணா உடனே சமாதானமாவானென அவள் நினைக்கவில்லை . கார்த்திக்கை அனுப்பாமல் தான் சென்று காலில் விழுந்தது நல்லதாக போய் விட்டது என்று அவள் நினைத்துக்கொண்டாள்...

மணி இருவரின் மேலும் பயங்கர கோபத்தில் இருந்தான் . சுந்தரி காலில்  விழுந்ததும் ஒரு தங்கை என்ற முறையில் அவள் மேல் அவனுக்கு இரக்கம் வந்தது . அவள் முன்னாலேயே தன்னை புரட்டியெடுத்த கார்த்திகை அவனால் மன்னிக்க முடியவில்லை . மணி நினைத்தால் கார்த்திக் ஊருக்கு போவதற்குள் நண்பர்களை திரட்டிக்கொண்டு வந்து அவனை பொளந்து எடுக்கலாம் . அப்புறம் சுந்தரிக்கு மணி மேல் இருக்கும் மரியாதை குறைந்து கார்த்திக் மேல் பச்சாதாபம் பெருகி விடும் . தேவையில்லாமல் அவர்கள் நெருக்கத்தை பெரிதுபடுத்த மணி விரும்பவில்லை . அவன் தனக்கு உடலால் தான் வலி கொடுத்தான் அது சில நாளில் மறைந்து விடும் . ஆனால் அவனுக்கு நாம்  கொடுக்கும் அடி மரண அடியாக இருக்க வேண்டும் . காலம்  முழுவதும் அவன் அதை நினைத்து கதற வேண்டும் . அதற்கு சுந்தரியை அவனுடன் பழக விட்டு சேர்வோம் என்கிற நம்பிக்கையை கொடுத்து பிரிக்க வேண்டும் . சுந்தரி என்ன தான் அவனை காதலித்தாலும் குடும்பத்தாரின் மேல் அவளுக்கு இருக்கும் பாசம் அலாதியானது . அதை வைத்து அவளை வழிக்கு கொண்டு வந்துவிடலாம் . இப்படி பலவாரியாக மணியின் மூளை சிந்தித்துக் கொண்டிருந்தது . இந்த வன்மம் எதுவும் தெரியாமல் கார்த்திக் பிரச்சனை சுமூகமாக முடிந்த சந்தோசத்தில் கடைக்காரரிடம் மூன்று பவண்டோ கேட்டுக்கொண்டிருந்தான் ...

தொடரும் ...










26 October 2019

கைதி - KAITHI - காவலன் ...


முதல் படத்திலேயே முத்திரை பதித்த இளம் இயக்குனர்கள் அடுத்த படங்களில் பெரிய ஹீரோக்களுடன் வேலை பார்க்கும் போது நிறைய காம்ப்ரமைஸ் செய்து கொண்டு தங்களது தனித்திறமையை இழந்து விடுவார்கள் . அப்படி மாஸ் ஹீரோவிடம் முழுவதுமாக சரண்டர் ஆகாமல் தங்களது தனித்துவத்துடன் வெற்றிப்பயணத்தை தொடரும் சில இயக்குனர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . ( அடுத்த படத்தில் விஜய்யுடன் இதே பயணத்தை தொடர முடியுமா என்பது சந்தேகமே! ) ...

பொது மக்களை காப்பாற்றும் காவலர்களை போதை மருந்து கடத்தல் கும்பலிடமிருந்து  ஒரு கைதி காப்பற்றுவதே கதை . பத்து வருட தண்டனைக்கு பிறகு தனது மகளை பார்க்க பரோலில் வெளியே வரும் டில்லி 
( கார்த்தி ) , பல நூறு கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை மடக்கியிருக்கும் பிஜாய் & கோ ( நரேன் ) வையும் , போலீஸ்காரர் நெப்போலியன் ( மரியான் ) உதவியுடன் கமிசனர்  ஆஃபீசில் அடைபட்டிருக்கும் மாணவர்களையும்  அடைக்கலராஜின் 
( ஹரிஷ் உத்தமன் ) மாஃபியா கேங்கிடமிருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதை முதல் பாதி த்ரில்லிங் திரைக்கதையாலும் , இரண்டாம் பாதி  ஹீரோயிச ஆக்ஸன்களாலும் விறுவிறுவென சொல்லி முடிக்கிறது படம் ...

சாக்லேட் பாய் கேரக்டரில் நடித்த தேவ் அட்டர் ஃப்ளாப்பான பிறகு ரஃப் & டஃ ப் பருத்திவீரன் ரூட்டுக்கு திரும்பியிருக்கும் கார்த்தி க்கு இந்த படம் கை கொடுத்திருக்கிறது . சிறிய  தாமதத்திற்கு பிறகு அறிமுகமானாலும் வந்ததிலிருந்து  கவனம் முழுவதையும் தன் மேல் திரும்ப வைக்கிறார் . 
ஐஜி வீட்டில் நடக்கும் அமளிதுமளியை கண்டுகொள்ளாமல் வாளி  பிரியாணியை முழுங்குவது , " பத்து வருஷம் உள்ள இருந்தேன்னு தெரியும் ஆனா என்ன பண்ணிட்டு உள்ள போனேன்னு தெரியாதுல்ல சார் " என்று நரேனை பார்த்து சொல்வது , ஒரே டேக்கில் தனது தனது ஃப்ளாஸ்பேக்கை சொல்லி முடிப்பது , தன் மகளை பார்த்தவுடன் மருகுவது என கார்த்தி பல நடிகர்கள் இருந்தாலும் படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் ...


முகமூடி க்கு பிறகு நரேனுக்கு நல்ல ரோல் . கையருந்த நிலையில் கைதியின் உதவியுடன் சக காவலர்களை காப்பாற்றும் போலீஸ் அதிகாரியாக 
பெர் ஃபெக்டராக இருக்கிறது அவர் நடிப்பு . ரமணா இத்தனை வருடங்கள்  அப்படியே இருப்பது ஆச்சர்யம் , கார்த்தியோடு ஒரு ஃபைட் வைத்து அவர் கதையை முடித்து விடுகிறார்கள் . ஐயா ஐயா என்று ஃபோனில் விறைப்பாக பேசும் மரியான் நடிப்பால் நிமிர வைக்கிறார் . சிறையில் இருக்கும் மெயின் வில்லன் ஹரிஷ் உத்தமனை கடைசி வரை கத்துவது தவிர எதுவும் செய்ய விடாமல் வீணடித்திருக்கிறார்கள் . போலீஸ் கருப்பாடாக வரும் டிப்ஸ் கடைசியில் முதுகில் குத்தப்பட்டு இறப்பது நல்ல முடிவு ...

படத்தில் ஹீரோயின் இல்லை , சாங்க்ஸ் இல்லை , தனி காமெடி டிராக் இல்லை , குறிப்பாக ஆக்ஸன் படத்தில் மாஸ் ஹீரோ பேசும் பன்ச் டயலாக் இல்லை இப்படி நிறைய இல்லைகள் இருந்தும் அதை தொல்லையில்லாத க்ரிப்பான திரைக்கதையால் கட்டிப்போடுகிறார் இயக்குனர் . முதல் 15 நிமிடங்களுக்குள் எல்லா மெயின் கேரக்டர்களையும் , படத்திற்கான 
ப்ளாட்டையும் அறிமுகம் செய்து ஹீரோவின் வருகைக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஆரம்பத்திலேயே அதகளத்துடன் ஆரம்பிக்கும் படம் இண்டெர்வெல் வரை ஒன் வேயில் டாப் கியரில் பறக்கிறது . சாவதற்கு முன் ஸ்டூடெண்ட்டுக்குள் நடக்கும் காதல் ஸ்வீட்  ஹைக்கூ . சாம் எஸ்ஸின் பின்னணி இசை , சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு , பிலோமின் ராஜின் எடிட்டிங் எல்லாமே படத்துக்கு பக்க பலம் . லாரி சேஸிங் ஸ்டண்ட் காட்சிகளை திறம்பட எடுத்திருக்கிறார்கள் . அதுவும் நெற்றியில் பட்டையை அடித்துக்கொண்டு எதிரிகளை அடித்து பட்டையை கிளப்பும் கார்த்தி தனி அழகு ...

ப்ளாஷ்பேக்கில் நேரத்தை வீணடிக்காவிட்டாலும் " நான் என்ன செஞ்சுட்டு உள்ள போனேன்னு தெரியுமா " என்று ஒரு பில்டப் கொடுத்ததால்  ஏற்படும் எதிர்பார்ப்பு கார்த்தி ஒரே டேக்கில் தன்  கதையை சொல்லி முடிக்கும் போது சப்பென்று ஆகி விடுகிறது . அத்தனை பெரிய கமிஷனர் ஆஃபீஸில் கத்தி அரிவாளுடன் தாக்க வரும் கும்பலை சமாளிக்க ஒரு துப்பாக்கி கூட இல்லாமலிருப்பது , ரூட்டை மாற்றிப் போனாலும் சரியாக அந்த இடத்துக்கு கும்பல் வந்துவிடுகிறதே என்பதை நரேன் யோசிக்காமலேயே இருப்பது , 
போலீஸ் உளவாளி சீன்கள் குருதிப்புனலை நியாபகப்படுத்துவது ,
கத்திக்குத்து , கல்லடி எல்லாம் வாங்கி குற்றுயிரும் , கொலையுயிருமாக இருக்கும் கார்த்தி மகளுக்கு வாங்கிய ஜிமிக்கியை ரமணா மிதித்தவுடன் பொங்கியெழுந்து பத்து நிமிடம் சண்டை போடுவதெல்லாம் தரமான படத்துக்கு வைக்கப்பட்ட  திருஷ்டிப்பொட்டு . பலகோடி பட்ஜெட் , பெரிய விளம்பரம் எல்லாம் செய்து கதையை நம்பாமல் வெறும் ஹீரோவின் மார்க்கெட்டை மட்டும் நம்பி எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில் நல்ல கதை , திரைக்கதையோடு மாஸ் ஹீரோவையும் இயக்குனர் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கும் விதத்தில் இந்த கைதி ரசிகர்களுக்கும் , தயாரிப்பாளருக்கும் ஒரு நல்ல காவலன் ...

ரேட்டிங் : 3.5 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 45 




13 October 2019

அவன் - அவள் - நிலா (8) ...


ரு ஆணால் என்றுமே ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடிவதேயில்லை. அந்த ஏமாற்றத்தை தருபவள்  பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவன் மேலும் மூர்க்கமாகிறான் . ஏமாற்றும் பெண் காதலியாக தான் இருக்க  வேண்டுமென்பதில்லை , சகோதரியாக , தோழியாக யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் . சுந்தரியை இன்னொரு பையனுடன் பார்த்த போது மணி யின் மனநிலை  அப்படி தான் இருந்தது . சே இவள் மேல் பெரியப்பா எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் இப்படி எவனுடனோ சிரித்துப் பேசிக்கொண்டிருக்காளே என்று ஏமாற்றத்தோடு கலந்த ஆத்திரம் வந்தது . ஆனால் அவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமே  என்று யோசிக்க ஆரம்பித்தவனுக்கு அது பிடிபடவில்லை . முக்கியமான லீக் மேட்ச் இருந்ததால் சுந்தரியின் அக்கா கல்யாணத்துக்கு முழுமையாக மணியால் இருக்க முடியவில்லை . அதனால் கார்த்திக்கின் முகம் அவனுக்கு நினைவில் வரவில்லை  . ஒரு வேளை கூட படித்தவனாக இருப்பானோ  , அவளுடைய எல்லா நண்பர்களும் ஒரு தடவையாவது வீட்டுக்கு வந்திருப்பார்களே ! ஆனால் அவனை வீட்டில் வைத்து பார்த்தது இல்லையே என்று பலவாறாக யோசிக்க ஆரம்பித்தவன் நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமல் சரி எவனாக இருந்தால் என்ன நேரடியாக கேட்டு விடுவோமென முடிவெடுத்து அவர்களை நோக்கி கிளம்பினான்  ...

கார்த்திக் சொன்னதற்கு ஏதோ பதில் சொல்லிவிட்டு திரும்பியவள் கண் முன்னே மணி அண்ணா நிற்பதை பார்த்து அதிர்ச்சியானாள் . நிச்சயம் அவன் இப்படி வந்து நிற்பான் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை . எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டும் , விக்கியாக இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் மணி அவள் அண்ணன்களிலேயே மூத்தவன் . அவளுக்கே அவனிடம் ஒரு மரியாதை கலந்த பயம் உண்டு . மணி எதையோ யூகித்துக் கொள்வதற்குள் சுந்தரி நிலைமையை சமாளிக்க முடிவெடுத்தாள் .
" அண்ணா இது யாரு தெரியல , நம்ம சொந்தக்காரா , ஜானகி மாமி புள்ள ",
மணிக்கு யார் ஜானகி மாமி என்பதே பிடிபடவில்லை .
" யாருன்னு தெரியலையே " .  " மறந்துட்டியா , நம்ம புவனா அக்கா கல்யாணத்துக்கு வந்திருந்தார் " . அவள் படபடப்புடன் சொல்ல ஆரம்பித்தாள் .
" யாரா இருந்தா என்ன , சார் வீட்டுக்குல்லாம் வர மாட்டாரா ? , வயசுப்பொண்ணோட இப்படி ரோட்ல நின்னு வழிஞ்சுக்கிட்டு இருக்காரு ! "
சுந்தரிக்கு லேசாக பயம் வந்தது ,சொந்தக்காரன் என்று தெரிந்தவுடன் மணி அண்ணா சுமூகமாகி விடுவான் என்று பார்த்தால் தேவையில்லாமல் அவனை சீண்டுவது போல பேசிக்கொண்டிருந்தான் . கார்த்திக்குக்கு கோபம் வந்தால் என்ன பண்ணுவான் என்று தெரியாது , மணி அண்ணாவுக்கும் சொந்த ஊரில் பழக்கம் அதிகம் . இவர்கள் இருவரும் அடித்துக்கொண்டால்  அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது அவள் தான் என்பது சுந்தரிக்கு நன்றாகவே புரிந்தது ...

" இல்லண்ணா  இங்க ஜஸ்ட் ஆக்சிடென்டலா பார்த்தோம் , கொஞ்ச நேரம் பேசிண்டு இருந்தோம் , இப்போ கெளம்பறார் " . கார்த்திக் எதையாவது சொல்லிவிடப்போகிறான் என்கிற பயத்தில் அவளே பேசிக்கொண்டிருந்தாள் .
அவளுடைய படபடப்பு , அவனுடைய நெருக்கம் இதையெல்லாம் பார்த்த மணிக்கு அது ஏதோ யதார்த்தமான சந்திப்பு போல தெரியவில்லை .
குட்டையை கிளறினால் தான் மீன் பிடிக்க முடியும் என அவன் நினைத்தான் .
" சார் என்ன கலெக்டர் உத்தியோகம் பாக்குறாரா ? வாய தொறந்து பேசவே மாட்டேங்கறாரு ?" பி.ஏ மாதிரி நீயே பேசிட்டு இருக்க ! " .
மணி திரும்பவும் நக்கலாக அவனை பார்த்துக்கொண்டே கேட்டான் .
வந்ததிலிருந்தே ஏதோ போலீஸ் குற்றவாளியை விசாரிப்பது போல மணி நடந்துகொண்ட விதத்தால் கடுப்பிலிருந்த கார்த்திக்கால் அதற்கு மேல் பேசாமல் இருக்க முடியவில்லை . பிரச்சனைகளை சும்மாவே தோளில்  போட்டுக்கொண்டு சுத்துபவனுக்கு  வான்ட்டடாக ஒருவன் வண்டியில் ஏறியது போலவே இருந்தது ...

:" ஏன் சாருக்கு சரியா காது கேக்காதா  ? நீ சொன்னப்புறமும் என் கிட்ட ரெண்டாவது  தடவ கேக்குறாரு ? " . அவன் பதிலால் மணி மேலும் கோபமானான் . " ஒரு அறை  விட்டேன்னா உனக்கு உண்மையிலேயே காது கேக்காம போயிடும் தம்பி " சட்டை கைகளை மடித்துவிட்டுக்கொண்டே மணி சொன்ன போது கார்த்திக் அவனை ஏற இறங்க  முழுமையாக பார்த்தான் . வயதில் என்ன தான் சின்னவனாக இருந்தாலும் முன்பின் தெரியாதவர்கள் வா போ என்று கூப்பிடுவது மதுரைக்காரர்களுக்கு பிடிப்பதில்லை . அந்த கடுப்போடு ஆறடிக்கு வாட்டசாட்டமாக இருந்தவனை கார்த்திக் நக்கலாக பார்த்தான் . மதுரையில் அவனை விட  அராத்து ஆட்களோடு சுற்றிக்கொண்டிருப்பவனுக்கு சிரிப்பு இன்னும் அதிகமானது .  தான் சொல்வதற்கு கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் சிரித்துக்  கொண்டிருந்தவனை  பார்த்து  மணிக்கு மண்டை சூடானது . நம்மள விட சின்னப்பயலுக்கு என்ன தெனாவெட்டு என்று நினைத்தான் . ஆனால் இளங்கன்று பயம் அறியாது என ஏனோ அவன் யோசிக்கவில்லை .
" தங்கச்சி இருக்காளேன்னு பார்க்குறேன் , இல்ல உன்ன " என்று மணி சொல்லி முடிப்பதற்குள்ளேயே அவன் " நானும் என் ஆளோட அண்ணன்னு தான் பார்க்குறேன் " என்றான் ..

சுந்தரி உடனே கார்த்திக்கிடம் " ப்ளீஸ் ஒன்னும் சொல்லாத " என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள்  . கல்லூரி படிப்பு முடிந்தவுடன் காதல் மேட்டரை அப்பாவிடம் சொல்லலாம் என்று நினைத்தவளுக்கு கார்த்திக் போட்டு உடைத்ததில் பக்கென்று ஆகி விட்டது . மேலும் கோபம் தலைக்கேறினால் கார்த்திக் யார் என்ன என்று பார்க்காமல் கை வைத்துவிடுவான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும் . ஏற்கனவே தியேட்டரில் ஒருமுறை தன்னிடம் வம்பு செய்தவனை கார்த்திக் புரட்டி எடுத்திருக்கிறான் . அதனால் அவனை சமாதானப்படுத்துவது  தான் சிறந்த வழி என்று அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள் . அவள் முகத்தை பார்த்த பிறகு கார்த்திக்கின் கோபம் கொஞ்சம் தணிந்தது . ஏற்கனவே அவன் என் ஆள் என்று சொன்ன கடுப்பில் இருந்த மணிக்கு  அவள் ஏதோ அவனை மட்டும் சமாதானப்படுத்துவதை பார்த்த போது என்னமோ பெரிய  பில்ட் அப் கொடுப்பது போல பட்டது . அது அவனது ஈகோவை டச் செய்யவே அவன் மேலும் உஷ்ணமானான் . கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை கொஞ்சம் விலக்கி விட்டு பளேரென அவன் கன்னத்தில் மணி ஒரு அறை விட்டான் . கிரிக்கெட்  பாலில் பௌலிங் போட்டு போட்டு காய்த்துப்போன அவன் கைகளால் வந்த இந்த பவுன்சரை கார்த்திக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை . காதுக்குள் கொயிங்க் என்றது . கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு அவன் பின் வாங்கினான் . மணி அவனை பார்த்து கொன்னுடுவேன் என்பது போல செய்கை செய்துகொண்டிருக்க சுந்தரிக்கு தலை சுற்றியது . அவள் நிச்சயம் இந்த கைகலப்பை எதிர்பார்க்கவில்லை . அவளுக்கு யார் பக்கமும் இருக்க முடியவில்லை அதே சமயம் அப்படியே விடவும் முடியாது அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்  ...

சின்ன வயதிலிருந்தே கார்த்திக்கிற்கு பொழுதுபோக்கே சண்டை போடுவது தான் . வைகை ஆற்றங்கரையில் ஒரு பக்கம்  பெரியவர்கள் கர்லா வைத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க இன்னொரு பக்கம்  சிறுவர்கள் மற்றும்  இளைஞர்கள் ஒவ்வொரு  ஆளாக சண்டையிட்டுக்கொள்வார்கள் . அவை பெரும்பாலும் பெரிய  அடிதடியாக இல்லாமல் ஆளை  பிடித்து கவிழ்த்து ஒருவர் மேல் ஒருவர் ஏறி உட்காரும் மல்யுத்த விளையாட்டாகவே இருக்கும் . அதில் ஒருமுறை அவன் ஒருவனை கவிழ்த்தி   வெற்றிக்களிப்பில் கத்த தோற்றவன் கோபத்தில் அவனை அடிக்க இன்னும் இரண்டு பேரை கூட்டிக்கொண்டு வந்து பெரிய சண்டையாகி விட்டது . " நீயெல்லாம் ஒரு ஊழப்பய என் சாதிக்காரன  அடிக்கிறியா " என்று வந்தவன் கார்த்திக் முஞ்சியிலேயே குத்து விட்டான்  . அதுவரை மல்யுத்த பாணியில் சண்டை போட்டுக்கொண்டிருந்தவனுக்கு இந்த பளீர் குத்து என்னமோ செய்தது . அதை சமாளிப்பதற்குள் மற்றொருவன் விலா  எலும்பில் உதைத்தான் . " யார் மேலடா  கை  வைக்குற தாயோளி " ஏற்கனவே அடி  வாங்கியவன் துணைக்கு ஆள் இருக்கும் சப்போர்ட்டில் எம்பி வந்து அவன் கழுத்தை பிடித்தான் . அவன் செய்த ஆகச்சிறந்த தவறு அது தான் . கழுத்தை சுற்றி பிடித்து தொங்கியவனை அப்படியே  அலேக்காக தூக்கி மற்றொருவன்  மேலே அடித்தான் கார்த்திக் . இருவரும் உடைந்து விழ அந்த இடைவெளியில்  தனியாக நின்றவனை எம்பி உதைத்தான் . அந்த பலமான அடியில்  அவனும் சுருண்டு விழுந்தான் ...

அதற்குள் அங்கே பெரியவர்கள் வந்து விட உடனே விலக்கி  விட்டார்கள் . சண்டையிட்டதில் ஒருவன்  வந்தவர் காதில் கம்ப்ளைய்ண்ட் செய்வது போல ஏதோ கிசுகிசுத்தான் . உடனே அவர் கார்த்திகை கூப்பிட்டு
" என்ன தம்பி படிக்குற வேலைய விட்டுட்டு சண்டியர்த்தனம் பண்றியா " என்று மிரட்டினார் . " இல்லேண்ணே நான் ஒன்னும் பண்ணல  அவன் தான் ஆளுங்கள கூட்டிகிட்டு வந்தான் என்ன அடிக்க " என்று சம்பந்தப்பட்ட பையனை பார்த்து கார்த்திக் கை  காட்டினான் .  அவன் " என்ன அடிச்சுட்டாண்ணே அதான் தோஸ்துகளை கூட்டிட்டு வந்தேன் " என்றான் .
அது வரை அவனுக்கு சப்போர்ட்டாக இருந்தவர் கடுப்பாகி
" ஏண்டா கல்யாணம் பண்ணா  முதல் இரவுக்கு தனியா போவியா இல்லேன்னா  நாலு பேர  துணைக்கு கூட்டிட்டு போவியா " என்று கேட்க அவனுடன் வந்தவர்கள் உட்பட அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டார்கள் .
பிறகு அவரே இருவரையும் கை  கொடுக்க வைத்து  சமாதானப்படுத்தி
 " இனி எங்கயாவது சண்டை  போடுறத பார்த்தேன் பிச்சுப்புடுவேன் "
என்று அவர்களை  மிரட்டி அனுப்பி வைத்தார் . கார்த்திகை  தனியாக கூட்டிக்கொண்டு போய் " அவிய்ங்கல்லாம் அடிதடின்னா எந்த லெவலுக்கு வேணா போவாய்ங்க , உன் சாதில  ஒரு பய வரமாட்டன் , படிக்குற வேலைய மட்டும் பாரு , திரும்ப அவனுகளே வம்புக்கு வந்தாலும் முறைச்சுக்கிட்டு தெரியாம  எண்ட  வந்து சொல்லு , நான் அங்க தான் இருப்பேன் " என்று அக்கரையை நோக்கி கை நீட்டினார் . அவன் நன்றி சொல்லி விட்டு நகர்ந்தான்.. ...

கார்த்திக் கிற்கு அந்த பழைய சம்பவம் கண் முன்னே வந்து போனது . இன்றும் அவன் மேல்  எந்த தப்புமில்லை . வாய் வார்த்தையாக பேசிக்கொண்டிருந்த போது முதலில் கை வைத்தவன் மணி  . என்ன தான் லவ்வருடைய அண்ணனாக இருந்தாலும் சொம்பை மாதிரி அவனிடமெல்லாம் அடி வாங்கிக்கொண்டிருக்க முடியாது . தீர்க்கமான முடிவுடன் ஒரு நிமிடம் அவனை முழுமையாக ஏற இறங்க பார்த்தான் . உயரமாக இருப்பவனிடம் நின்று கொண்டு சண்டை செய்வது வேலைக்காவாது  என்பதை உணர்ந்தான். மணி கை காலை நீட்டினால் இவனுக்கு தாறுமாறாக அடி  படும் . இன்னும் சிறிது பின் வாங்கினான் . கை விரல்களை ஒரு முறை நன்றாக சொடுக்கெடுத்துக்கொண்டான் . ஒரே அடியில் இவனை வீழ்த்த  வேண்டுமென்றால் நெஞ்சு சக்கரத்தில் அல்லது பொட்டில் அடிக்க வேண்டும் . மணியின் உயரத்துக்கு பொட்டில் அடிப்பது கொஞ்சம் கஷ்டம் . நெஞ்சில் அடிக்குப்போகும் போது அவன் லாவகமாக  தடுத்து இவனையே திரும்ப அடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது . சில வினாடிகள் அப்படியே நின்றவன் ஒரு முடிவோடு தலையை குனிந்து கொண்டு வேகமாக மிக வேகமாக மணியின் நெஞ்சில் மோதினான் . அதே நேரத்தில் அவன் கைகளை இறுக பிடித்துக்கொண்டு கால்களை சுழட்டி அவன் கால்களை தட்டி விட்டான் . இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த மணி அப்படியே மல்லாக்க  விழுந்தான் . ஒரு வினாடி கூட வீணடிக்காமல் அவன் மேல் பாய்ந்து வயிற்றில் கால் முட்டியால் மிதித்த கார்த்திக் அவன் தலை முடிகளை ஒரு கையில் பிடித்துக்கொண்டு இன்னொரு கையினால் ஓங்கி மூக்கில் ஒரு வலுவான குத்து விட்டான் . நிச்சயம் அந்த குத்தில் சில்லு மூக்கு உடைந்திருக்க வேண்டும் , ரத்தம் கொட்டியது ...

மணி வெறிகொண்டவன் போல கார்த்திக்கை பிடித்து தள்ளி விட்டான் . இரண்டு அடி  தள்ளிப் போய்  விழுந்தவன் சுதாரிப்பதற்குள் ஓடி வந்து கார்த்திக்கை எத்தினான் . இரண்டு மூன்று எத்துக்கு  பிறகு மணியின் கால்களை சரியாக பிடித்த கார்த்திக் அதை சுழட்ட தலை குப்புற விழுந்தான் மணி . மீண்டும் இருவரும் கட்டிப் புரண்டார்கள் . சுற்றி நின்றவர்கள் யாரும் சண்டையை விலக்கி விடாமல் வேடிக்கை பார்த்தார்கள் . கடைக்காரன் நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன நம்ம மேல விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்பது போல கடைக்கு வெளியில் அடுக்கி வைத்திருந்த சோடா பாட்டில்களை உள்ளே எடுத்து வைக்க ஆரம்பித்தான் . சுந்தரி அவர்களின் சண்டையை நிறுத்த  சொல்லி கத்திக்கொண்டிருந்தாள் . அவள்  இப்படி ஊரே வேடிக்கை பார்க்கும்  படி இருவர்  சண்டை போடுவதையெல்லாம் சினிமாவில்  தான் பார்த்திருக்கிறாள். அவளின் கத்தலையும் , கதறலையும் பொருட்படுத்தாமல் இருவரும் மாறி மாறி அடித்துக்கொள்வதிலேயே குறியாக இருந்தார்கள்  . மணி என்ன தான்  ஆள் வளர்ந்திருந்தாலும் கார்த்திக்கிற்கு இணையாக அவனால் சண்டையிட முடியவில்லை ...

சின்ன வயது சண்டையில் அந்த மதுரை பையன் செய்த அதே தவறை மணியும் செய்தான் . அவனை பின்பக்கமாக கழுத்தை வளைத்து பிடித்தான் . மணி வெயிட்டுக்கு அவனை அலேக்காக தூக்க முடியாது என்பதால் நன்றாக குனிந்த கார்த்திக் பின் முழு வேகத்ததோடு பின்னால் இருந்த சுவற்றில் மணியை முற்றிலுமாக சாய்த்தான் . அந்த பலத்த அடியில் மணிக்கு முதுகெலும்பு உடைந்தது போல வலித்தது . அவன் அப்படியே சுருண்டான் , பிறகும் வெறி அடங்காத கார்த்திக் கீழே இருந்த கல்லை எடுத்துக்கொண்டு மண்டையை உடைப்பதற்காக வெறியுடன் பாய்ந்தான் . அந்த ஒரு  நிமிடம் சுந்தரி நடுவில் வராவிட்டால் மணியின் மண்டை  உடைந்திருக்கும், கார்த்திக்கும் உள்ளே போயிருப்பான் . அவள் கையெடுத்து கும்பிட்டதை பார்த்ததும் அவன் கல்லை  கீழே போட்டு விட்டு பெட்டிக்கடைக்கு போய் சிகரெட்டை வாயினுள் வைத்துக்கொண்டு தீப்பெட்டியை தேடினான் . கடைக்காரர் எந்த தயக்கமும் இல்லாமல் உடனே தம்மை பற்ற வைத்தார் .
கூடி இருந்தவர்கள் எல்லாம் மணியை பிடித்து தூக்கி விட்டார்கள் , அவனுக்கு கோபம் குறையாமல் அவர்கள் கைகளை உதறி விட்டான் . கார்த்திக்கை வெறி கொண்டு பார்த்தவன் இனி எந்த ஜென்மத்திலும் அவன் நம் வீட்டு  மாப்பிள்ளையாக வரவே கூடாது என்று மனதுக்குள் சபதம் செய்தான் ...

தொடரும் ...

முதல் ஏழு பாகங்களை படிக்க கீழே சொடுக்கவும் ...

அவன் - அவள் - நிலா (1) ...

6 October 2019

அவன் - அவள் - நிலா (7) ...


சுந்தரியை பார்க்கப்போகிறோம் என்கிற பரவசத்தில் இருந்தவனுக்கு அவளை ஒருவன் வண்டியில் இறக்கி விடுவதை பார்த்ததும் பரவசம் போய் கொண்டு வந்து விட்டவன் மேல் பகையுணர்வு வந்தது . நிச்சயம் அவன் அவளின் சொந்தக்காரனாகவே இருக்க வேண்டும் . சித்தி பையன் , அத்தை பையன் என்று எவனோ ஒருவன் . ஆனால் ஆம்பளை பையன் . அது தான் நிறைய எரிச்சலை கொடுத்தது அவனுக்கு . சுந்தரியை அவனோடு பார்த்தேன் , இவனோடு பார்த்தேன் என்றெல்லாம் கேள்விப்படும் போது அவன் அவ்வளவாக கண்டு கொண்டதில்லை  ஆனால் இன்று நேரடியாக பார்க்கும் போது எரிந்தது . கடைசி இழுப்பை ஒரு இழு இழுத்து கடைக்கு பின்னால் போய் தூக்கியெறிந்து விட்டு வந்தான் . வந்தவுடன் அவள் நின்று கொண்டிருந்தாள் . மிக அருகே அவளை பாவாடை தாவணி சட்டையுடன் பார்த்த போது அவன் கோபம் வடியத்தொடங்கியது ..

" நான் எப்படி இருக்கேன் ?" பாவாடையை இரண்டு கைகளால் பிடித்துக்கொண்டு அவள் லேசாக ஆடிக்கொண்டே கேட்டாள் . உண்மையை சொல்லவேண்டுமென்றால் அவள் தேவதை போலிருந்தாள் . அவள் செய்யும் குழந்தைதனமான குணஷ்டைகள் அவனுக்கு கொஞ்சம் அசௌகரியமாக  பட்டாலும் " தேவதை மாதிரியிருக்க  என்று சொல்ல வாயெடுத்தான் , அதற்குள் அவள் " இதோ என்ன இறக்கி விட்டாரே மணி அண்ணா அவர் வாங்கிக்கொடுத்தது " , என்று சொன்னவுடனே இறங்கியிருந்த சாத்தான் திரும்ப மண்டைக்குள் ஏறிக்கொண்டது . " ஏன் உனக்கு எதுவுமே உன் அப்பன் வாங்கித்தர மாட்டானா?, எப்ப பாரு ஏதாவது ஒரு அண்ணன் ஏதாவது வாங்கி தந்துடறான்". அவன் சொன்னவுடனே அவளுக்கு லேசாக  அழுகை துளிர் விட்டது . " எனக்கு சொந்த அண்ணா இல்ல , பெரியப்பா பிள்ளை தான் என் அண்ணா , ஏன் அவன் வாங்கி தரக்கூடாதா ? " . " போன தடவை ஒரு வாட்ச் கட்டியிருந்தியே அது யாரு வாங்கிக்கொடுத்தா ? . " சுந்தர் அண்ணா வாங்கி தந்தா " . " அவன் யாரு ? " . " என் அத்தை பையன் " . " முறைப்பையன் அவன் எப்படி நொண்ணா ? ஓ அந்த அண்ணாவா ? " . அவன் சொன்னவுடன் அவளுக்கு அழுகையோடு கோபமும் பொத்துக்கொண்டு வந்தது . " தேவையில்லாம சந்தேகமா பேசாதீங்க " . நிச்சயம் அவனுக்கு அவள் மேல் ஒரு துளி கூட சந்தேகம் இல்லை , ஆனால் அவனை  தவிர அவளுக்கு யார் எதுவும் வாங்கித்தருவதோ , உரிமை கொண்டாடுவதோ சுத்தமாக பிடிக்கவில்லை . அதை அவளிடம் உட்கார்ந்து மெதுவாக பேசுவதற்கு அவனது ஈகோவோ , வயதோ , அனுபவின்மையோ ஏதோ ஒன்று தடுத்தது ...

" சே நான் உன்ன சந்தேகப்பட்டு அப்படி சொல்லல " அவனுக்கு அவளுக்கு எப்படி புரியவைப்பதென்று தெரியவில்லை . " ஒவ்வொரு தடவையும் இப்படி எதாவது சொல்லிட்டு அப்புறம்  அப்படி இல்லைன்னு சொல்ல வேண்டியது " .
அவள் இன்னும் கோபத்தோடு தான்  இருந்தாள்  . " சூச்சு என்ன நம்ப மாட்டியா?"  அவன் அவள் கண்களை விழுங்குவது போல பார்த்துக்கொண்டே கேட்டான். பெண்கள் தனிப்பட்ட முறையில் எவ்வளவு அறிவார்ந்த முறையில் சிந்தித்தாலும் இந்த காதல் வலையில்  விழுந்த பின் அவர்களுக்குள் சார்புத்தன்மை நுழைந்து விடுகிறது . அவள் வெட்கப்பட ஆரம்பித்தாள் . ரோட்டில் சண்டை கூட போட்டுவிடலாம் , ஆனால் ரொமான்ஸ்  செய்ய முடியாது , செய்தால் ஏதோ ஏலியன்களை பார்ப்பது போல வேடிக்கை பார்ப்பார்கள் . அதை உணர்ந்தவனாய் அவள் கைகளை பிடித்துக்கொண்டு எதிர்த்த மாதிரி இருந்த வழக்கமான ஃ பேமிலி ரெஸ்டாரண்டுக்கு நடக்கலானான் ...

அந்த ரெஸ்டாரண்ட் காதலர்களுக்காக கட்டப்பட்டது போலவே சிறு சிறு தடுப்புகளுடன் கூடிய அறைகளாக  இருந்தது . அதில் வாகாக இருந்த ஒன்றுக்குள் இருவரும் நுழைந்தார்கள் . ஒரே சோஃபாவில் இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டார்கள் . " இந்த ஜிமிக்கி கூட நல்லா இருக்கே " 
அவள் காதுகளில் ஆடிக்கொண்டிருந்த தோடுகளை பார்த்தவுடன் அவன் மனசு தள்ளாடியது . " இதுவா " என்று ஏதோ சொல்ல வந்தவள்  எதுக்குடா வம்பு என்பது போல வையை மூடிக்கொண்டாள் . அவள் எதுவும் பேசாதது இருவருக்குமே சவுகரியமாக  இருந்தது . கஃபே காஃபி டேவெல்லாம் வருவதற்கு முன்னாடியே  காதலர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஹோட்டல் போல அது .  சர்வர் ஆர்டர்  எடுக்கவே ஆடி அசைந்து மெதுவாக தான் வருவான். ஆர்டர் எடுத்த பிறகும் அவன் வந்து பரிமாறுவதற்கும்  நடுவிலே ஒரு ஸ்டோரி டிஸ்கஸனே முடித்து விடலாம் . அதனாலோ என்னவோ பசியில் இருந்தவன்  அவன் அவள் காதுகளை மெதுவாக கடிக்க ஆரம்பித்தான் . அவளுக்கு கண்கள் லேசாக சொருகியது . 
" ஏய் பேசலாமா சொல்லிட்டு வேலையை ஆரம்பிக்கிற பாத்தியா ?". ரொமான்ஸுக்குள் போனவுடன் தானாகவே வாங்க போங்க போய் வா போ வந்து விடுகிறது . அவனுக்கும் அது பிடித்திருந்தது ...

காதுகளில் ஆரம்பித்தவன் மெதுவாக கழுத்துக்கு வந்தான் . அதில் சிறிது  நேரம் முகம் புதைத்தவனுக்கு அப்படியே இருந்து விட மாட்டோமா என்று தோன்றியது . ஆனால் க்ஷண நேரம் தான் அவனால் அங்கே தாக்குப் பிடிக்க முடிந்தது . மீண்டும் கன்னம் வழியாக உதடுகளுக்கு போனான் . அவனுக்கு மட்டுமல்ல எல்லா காதலர்களுக்குமே ஃபேவரைட் இடம் உதடுகளாகத் தான் இருக்கும் . இதழ்களில் அவன் எழுத ஆரம்பித்த கதையில் அவள் மெய்மறந்தாள் . உதட்டு முத்தம் என்பது மனிதர்களுக்கே உள்ள சிறப்பம்சம், இனப்பெருக்கத்துக்காக மட்டும் உடலுறவு கொள்ளும் விலங்குகள் கூட சில சமயம்  காதல் வயப்படலாம் ஆனால் ஏனோ இந்த சிறப்பம்சம் அவைகளுக்கு வாய்க்கவில்லை . ஓராயிரம் வார்த்தைகள் சொல்ல வேண்டிய அர்த்தத்தை இந்த சிறு முத்தம் சொல்லி விடுகிறது . கமல்ஹாசனை திட்டிக்கொண்டே அவர் கொடுக்கும் லிப் டு லிப்பை ஓரக்கண்ணால் பார்க்கும் பெண்கள்  ஏராளம் . சிறிது நேரம் வெள்ளைக்காரியாக இருந்தவள் ஏதோ நியாபகம் வந்து அவனை தள்ளி விட்டு தமிழ்நாட்டுக்கு வந்தாள் ...

" ஏய் என்ன ஆச்சு ? " . " போதும் உங்க பேச்செல்லாம் , இப்படியே பேசிட்டு இருந்தா நான் கிளம்பறேன் " . " ஏய் பேசறதுக்காக தான் தயார் பண்ணிக்கிட்டு இருந்தேன் " அவளை பார்த்து கண்ணடித்துக் கொண்டே சொன்னான் . சின்ன சின்ன சில்மிஷங்கள்  , டயலாக்குகளால் அவளை கவர் செய்து விடுவதில் அவன் கண்ணன் . " வேற எதுவும் பேச இல்லையா ?" . " நெறைய இருக்கே " .
" உங்க வேலை விஷயம் என்ன ஆச்சு ? " . " ம் கிடைச்சாச்சு அடுத்த மாசம் சேரனும் " . அவன் சொன்னவுடன் அவளுக்கு சந்தோசம் முட்டியது . உடனே அவன் கன்னத்தில் ஒரு கிஸ் அடித்தாள் .
" என்ன கம்பெனி , எவ்ளோ சம்பளம் ?" . அவள் அவன் ஏதோ பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விட்டான் , உடனே அப்பாவிடம் சொல்ல  வேண்டுமென்கிற அளவுக்கு பிளான் போட ஆரம்பித்து விட்டாள் .
" என் காலேஜ் சீனியர் சரவணன் அண்ணனோட வீடியோ கடையில தான் " .
அவன் சொல்ல அவளுக்கு சப்பென்று ஆகி விட்டது .
" வீடியோ கடையிலயா " . ஆசையாசையாய் மேட்ச் பார்க்க உட்கார்ந்து முதல் பாலிலேயே சச்சின் அவுட் ஆனது போலிருந்தது அவளுக்கு ...

" வீடியோ கடை மட்டும் இல்ல , லோக்கல் கம்பெனிக்கெல்லாம்
ஆட் பண்றது , லோக்கல் கேபிளுக்கு ப்ரோக்ராம் பண்றது எல்லாமே  தான் " ,
அவன் பெருமையாக பேசிக்கொண்டு போனான் .
" இது என்ன வேலை " அவள் சோகத்தோடு கேட்டாள் .
" இது என்ன வேலைன்னா ? அப்போ ஆடிட்டரா இருக்கறது மட்டும் தான் வேலையா ?" , உடனே அவள்  அப்பாவை இழுக்க ஆரம்பித்தான் .
" நான் அப்படி சொல்லல , இந்த விக்கி அண்ணா மாதிரி ஏதாவது கம்பெனில "
" யாரு அவனா ? என்னிக்கு சிட் ஃபண்ட் காரன் கம்பி நீட்டுறானோ அன்னிக்கு இருக்கு அவனுக்கு வேட்டு " . அவன் வேலை பார்க்கும் பைனான்ஸ் கம்பெனியை அவன் கலாய்த்தான் . அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை . " எல்லாத்தையும் நெகட்டிவ்வா பார்க்காதீங்க " .
அவனுக்கு சற்றென்று கோபம் வந்தது , " வேலைன்னு சொன்னவுடனே முதல்ல சந்தோசப்பட்டுட்டு அப்புறம் என்ன வேலைன்னு தெரிஞ்சவுடனே நீ நெகட்டிவ்வாக மாறல ? " . " நான் நெகட்டிவ்வா ஒன்னும் சொல்லல , ஆனா யதார்த்தத்தை சொன்னேன் . விக்கி அண்ணாவுக்கு இப்போ கை நெறைய சம்பளம் , வைட் காலர் ஜாப் நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது ஆனா இன்னிக்கு எல்லோரும் நிமிர்ந்து பார்க்க மாதிரி இருக்கணும்" . " ஆமா அவனோட ஆறுக்கு ரெண்டு உயரத்துக்கு எல்லோரும் நிமிர்ந்து தான் பார்க்கணும் " அவன் இப்படி சொன்னதும் அவளுக்கு அந்த சூழல் மறந்து சிரிப்பு வந்தது . இது தான் அவன் ஸ்பெசாலிட்டி . கோபப்படுபவனாக இருந்தாலும் டைமிங்கில் எதையாவது சொல்லி அனைவரின் மூடையும் டக்கென்று ஸ்விங் செய்து விடுவான் ...

மனநிலை மாற ஆரம்பித்த அந்த நேரத்தில் சர்வர் ஆர்டர் எடுக்க வந்தான் .
" என்ன சார் சாப்புடுறீங்க " , எல்லா ஹோட்டல்களிலும் இதை சம்பிரதாயமாக கேட்டு விடுவார்கள் என்னமோ கேட்பதையெல்லாம் கொடுப்பது போல . அங்கே அந்த நேரத்தில் இருப்பதென்னமோ நான்கைந்து ஐட்டம் தான்
" எனக்கு எதுவும் வேண்டாம் " அவள் சொன்னாள் .
" ஏதாவது சாப்பிடணும் என் ட்ரீட் " . " முதல்ல நீங்க சொல்லுங்க " என்றாள் .
பசியிலிருந்த அவன் " ஒரு சாம்பார் வடை , மசால் தோசை , முடிக்கும் போது சூடா  ஸ்ட்ராங்கா ஒரு காஃபி " என்றான் . அவள் அதற்குள் யோசித்து முடித்தவளாய்  எனக்கு ஒரே ஒரு பனானா மில்க் ஷேக் மட்டும் போதும் " என்றாள் . ஒன்னு மட்டும் போதுமா , அது ஒண்ணே நம்ம  ஆர்டர் பண்ணதுக்கு மேல ரேட் இருக்கும் . இதை யோசித்தவன் சர்வர்  இருந்ததால் அதை சொல்லாமல் தண்ணீர் குடித்துக்கொண்டான் . இந்த ஹோட்டல்களில் ஆண்கள் ஆர்டர் கேட்பது இருக்கிறதோ இல்லையோ பெண்கள் கேட்பது நிச்சயம் இருக்கும் ...

ஆர்டர் செய்ததை எடுத்து வருவதற்கு அவன் இன்னும் அரை மணி நேரம் ஆக்குவான் அதற்குள் இன்னொரு மினி டிஃபனை முடித்து விடலாமா என்பது போல அவளை ஏக்கத்துடன் பார்த்தான் . அவனுடைய சில்மிஷ எண்ணம் புரிந்து கொண்டவளாய் " எப்போ அவர் கிட்ட ஜாயிண்ட் பண்ணனும் " , அவள் நேரடியாக விஷயத்துக்கு வந்தாள் . " அடுத்த மாசம் வந்து பார்க்க சொல்லியிருக்கார் " . அவளுக்கு சப்பென்று ஆனது .
" அப்போ அது கூட  கன்ஃபார்ம் இல்லையா ? " . " அப்படில்லாம் இல்ல , அவருக்கு என் டேலண்ட் பத்தி நல்லாவே தெரியும் . நெக்ஸ்ட் மன்ந்த் ஜாயிண்ட் பண்ணிடலாம் " . அவன் நம்பிக்கையாக சொன்னான் . அவன் நம்பிக்கையை கெடுக்க விரும்பாதவளாய் அவள் "ம்" மட்டும்  போட்டாள் .
" சம்பளம் எவ்வளோ ? " . " ஆமா மேனேஜர்  உத்தியோகம் அப்படியே சம்பளம் , பேட்டா ல்லாம் கொடுக்க , இது ட்ரைனிங் மாதிரி அவர் கூட இருந்தா டெக்னீக்கல்லா நெறைய கத்துக்கலாம் " . " கத்துக்கிட்டு ? " .
" கத்துக்கிட்டா ? , அவருக்கு சென்னைல  சினி ஃபீல்டுல நெறைய காண்டாக்ட்ஸ் இருக்கு , அத வச்சு அசிஸ்டன்ட் டைரக்டரா சேர்ந்துடலாம் " ...

சுஜாதா சினிமா உலகத்தை " கனவு தொழிற்சாலை " என்று சரியாக தான் சொன்னார் . அவள் சொல்லி தான் அவன் அந்த நாவலை படித்தான் . அவளுக்கு சினிமா மேல் நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் இது போல படித்ததன் மூலம் நிறைய தெரிந்து வைத்திருந்தாள் .
" இன்னும் மூணு வருஷம் தான் சுந்தரி அப்புறம் பாரு ஐயாவை " .
அதீத நம்பிக்கையோடு சொன்னான் .  விக்ரமன் படம் போல ஒரு பாட்டில் வாழ்க்கை மாறி விடாதா என்று அவள் யோசித்தாள் .
" என்ன யோசிக்குற சென்னையில எங்க வீடு வாங்கணும்னா ? " .
" இல்ல திருச்சில எங்க வாங்கணும்னு " . எதிர்காலத்தை பற்றிய பாசிட்டிவ் கற்பனை ஒரு சுகத்தை தருகிறது . தற்போதைய கவலைகளை மறக்க உதவுகிறது , புண் இருக்கும் இடத்தை லேசாக  சொரிந்து கொள்வதை போல .
" அதெல்லாம் நடக்குமா " என்பது போல அவள் ஏக்கமாக பார்த்தாள் . நிச்சயம் எல்லாம் நடக்கும் என்பது போல அவள் கைகளை இறுக்கப் பற்றிக்கொண்டான்  . அவன் தோள்களில் அவள் சாய்ந்து கொண்டாள் . அவளுக்கு லேசாக அழுகை வந்தது . அவன் சொல்வது போலெல்லாம் மூன்று வருடத்தில் சினிமாவில் செட்டில் ஆவதெல்லாம் ஆகிற கதையில்லை  என்பது அவளுக்கு உள்ளுணர்வு சொல்லியது . காலம் கடத்துவதற்காகவே யு.ஜி முடித்துவிட்டு பிஜி படிக்க வேண்டுமென்று ஏற்கனவே அப்பாவிடம் சொல்லி வைத்திருந்தாள் . படிப்பின் அவசியம் புரிந்த அவர் என்றுமே அதற்கு தடை சொன்னதில்லை ...

சர்வர் சூடாக சாம்பார் வடை , தோசையை எடுத்து வந்தான் .
" மேடம் உங்களுக்கு இப்போவே மில்க் க்ஷேக் கொடுக்கவா இல்ல காஃபியோடவா ?" , " காஃபியோடவே கொடுங்க " , அவள் சொன்னவுடன் சர்வர் இடத்தை காலி செய்தான் . பசியில் இருந்தவன் சாம்பார் வடையை ஸ்பூனால் எடுத்து சாப்பிட ஆரம்பித்தான் . அவளுக்கு ஒரு வாய் ஊட்டி விடுவான் என்று நினைத்தவள் வழக்கம் போல ஏமாந்தாள் . பர்தடே க்கு முதல் ஆளாக வாழ்த்து  சொல்வது , சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுப்பது , புது ட்ரெஸ்ஸில் பார்த்தால் கேட்காமலேயே பாராட்டுவது என இது போன்ற சின்ன சின்ன விஷயங்களில் பெண்களுக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன . பெண்கள் திருமணம் என்று வரும் போது ரியாலிட்டியை யோசிப்பவர்கள் காதலிக்கும் போது கனவுலகிலேயே இருக்கிறார்கள் .
அவனை பொறுத்தவரை பசியில் இருந்தது ப்ளஸ் அவள் எதுவும் வேண்டாமென்று சொல்லிவிட்டது இதையெல்லாம் வைத்து வேறெதுவும் யோசிக்காமல் சாப்பிட ஆரம்பித்து விட்டான் ...

" சாம்பார் வடை சூப்பரா இருக்கு , ஒரு வாய் சாப்புடுறியா " , அவளுக்கு வடையின் சுவையை விட அவன் கேட்டதால் சாப்பிட வேண்டும் போலிருந்தது ஆனாலும் அவன் முதலிலேயே கேட்டிருந்தால் அவள் உடனே தலையாட்டியிருப்பாள் இப்போது வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் .
அவன் ஓகே சொல்லிவிட்டு திரும்ப சாப்பிட ஆரம்பித்தான் . அது அவளுக்கு இன்னும் ஏமாற்றத்தையே கொடுத்தது . பெண்கள் தங்களின் முக்கியத்துவத்தை என்றுமே இழக்க விரும்புவதில்லை . ஆண்கள் செய்யும் எல்லா விஷயங்களிலும் தாங்கள் பிரதிபலிக்க வேண்டுமென நினைக்கிறார்கள் . அவள் எண்ண  ஓட்டத்தை அறியாதவனாய்  அவன் மசால் தோசையை சாப்பிட ஆரம்பித்தான் . அதை முடித்தவுடன் கை  அலம்ப போனான் . அவன் போனவுடன் சுற்றும் முற்றும் பார்த்தவள் கொஞ்சம் மீதமிருந்த மசால் தோசையை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள் . அப்பா சாப்பிட்ட பிறகு அவர் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் அதே தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த  சுந்தரியின் அம்மா இன்று குழந்தைகள் பெரிதாக வளர்ந்து விட்டதால் அதனை குறைத்துக் கொண்டாள் . சின்ன வயதிலிருந்து அதை பார்த்து வளர்ந்தவளுக்கு அவனை புருஷன் போல நினைத்து தட்டில் இருந்து எடுத்து சாப்பிட்டது தப்பாக தெரியவில்லை . ஒரு வழியாக காஃபி , மில்க் ஷேக் கை முடித்து வைத்து பில்லை கட்டி விட்டு அவன் கைகளை இறுக கோர்த்துக்கொண்டு அவள் வெளியே வந்தாள்  . அவளுக்கு நீண்ட நாட்கள் கழித்து அவனுடன் இத்தனை நேரம் இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது . ஃப்ரெண்ட் வீட்டுக்கு போகிறேன் என்று இறங்கியவள் இங்கே அவனுடன் ஜோடியாக வருவதை , வேலையை முடித்து விட்டு ஒரு காஃபி சாப்பிடலாம் என்று வந்த போது பார்த்த மணி அண்ணாவுக்கு மகிழ்ச்சியாக இல்லை ...

தொடரும் ...

முதல் ஆறு  பாகங்களை படிக்க கீழே சொடுக்கவும் ...

அவன் - அவள் - நிலா (1) ...







5 October 2019

அசுரன் - ASURAN - அழகன் ...


சுரன் பட விமர்சனத்துக்கு போவதற்கு முன்னாள் கற்பனைத்திறன் மங்கி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் நல்ல நாவல்களை படமாக எடுத்துக்கொண்டிருக்கும் இயக்குனர்  வெற்றிமாறனை பாராட்டியே ஆக வேண்டும் . அவர் இந்த முறை பூமணி எழுதிய வெக்கை யை அதன் வெப்பம் குறையாமல் அசுரனாக செல்லுலாய்டில் அழகாக பதிவு செய்திருக்கிறார் ...

மூன்று ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கும் சிவசாமி ( தனுஷ் ) அந்த நிலத்தை பிடுங்க நினைக்கும் வடக்கூரானால்  ( ஆடுகளம் நரேன் )  தன் மூத்த மகன் முருகனை இழக்கிறார் . பதிலுக்கு வடக்கூரானை இளைய மகன் சிதம்பரம் ( கென் கருணாஸ் ) காவு வாங்க வடக்கூரானின் குடும்பத்தினரிடமிருந்து  இளைய மகனை  சிவசாமி எப்படி காப்பாற்றுகிறாரர் என்பதை அசுர வேகத்தில் சொல்லி முடிப்பதே அசுரன் ...

இரண்டு பெரிய மகன்கள் , ஒரு சின்னப்பெண்ணின் அப்பாவாக தனுஷுக்கு தன் வயதுக்கு மீறிய கதாபாத்திரம் . ஆனால் அது எங்குமே தெரியாமல் தனது உடல் மொழியால் பார்த்துக்கொள்வதே தனுஷின் சாமர்த்தியம் . நடை , பேச்சு என்று எல்லாவற்றிலுமே நம் கண் முன் தெரிவது சிவசாமியே தவிர தனுஷ் அல்ல . மெதுவான நடை , அமைதியான பேச்சு இவற்றால் 40 க்கு மேற்பட்ட வயதாக தெரிந்தாலும் தனுஷ் சண்டை போடும் போது மட்டும் 20 ஆகி விடுகிறார் . நம்மை அதை கண்டுகொள்ள விடாமல் ஆக்சனுக்குள் கட்டிப்போட்ட பீட்டர் ஹெயினுக்கு வாழ்த்துக்கள்  . ஆடுகளத்துக்கு பிறகு அடுத்த ஒரு அவார்ட் தனுஷுக்கு காத்திருக்கிறது ...


மஞ்சு வாரியார் அந்த இருட்டு கிராமத்திலும் மின்னலாக ஜொலிக்கும் வைர மூக்குத்தி . சின்ன சின்ன முக பாவங்களில் அவர் காட்டுவது நேர்த்தியான நடிப்பு . ஆனால் அவர் உடல்வாகு , அழகு எல்லாமே ஒரு கல்யாண வயது பையனுக்கு அம்மாவாக நம்ப வைக்க மறுக்கிறது . மூத்த மகன் டீஜே சில காட்சிகளே வந்தாலும் தனுஷுக்கு ஈக்குவலாக ஹீரோயிசம் காட்டியிருப்பது சிறப்பு . அவர் கொல்லப்படும் காட்சியும் , பிணத்தை பார்த்து தனுஷ் - மஞ்சு வாரியார் கதறும் காட்சியும்  நீண்ட நாட்கள் கழித்து தமிழ் சினிமாவில் நெஞ்சை உறையவைத்த காட்சிகளில் ஒன்று . கென் கருணாஸுக்கு முதல் படமே அருமையான அறிமுகம் . இயக்குனரே சிதம்பரத்தின் குடும்பம் என்று அறிமுகம் செய்யுமளவுக்கு வெயிட்டான ரோலில் சிறப்பாக செய்திருக்கிறார் . மேலும் வளர வாழ்த்துக்கள் . பசுபதி , பிரகாஸ்ராஜ் படத்தில் இருக்கிறார்கள். அந்த கூட்டத்திலும் தேர்ந்த நடிப்பால் தனியாக தெரிகிறார்கள் ...

ஜி.வி.பிரகாஸ்  நடிப்பதை கூட விட்டு விட்டு  இது போன்ற படங்களுக்கு இசையமைக்க மீண்டு (ம்) வரலாம் . ஆடுகளம் , பரதேசி க்கு பிறகு தனது பின்னணி இசையால் தாண்டவம் ஆடியிருக்கிறார் . படத்தை எந்த விதத்திலும் ஓவர் டேக் செய்யாமல் அதே நேரம் நம்மை இழுத்தும் பிடிக்கிறது அவரது இசை .  வேல்ராஜின் கேமரா காடுகள் , மேடுகள் எல்லாவற்றிலும் பயணித்து படம் நெடுக சிவசாமியோடு சேர்த்தே நம்மை அழைத்து செல்கிறது . இசை , ஒளிப்பதிவு , எடிட்டிங் எல்லாமே  இயக்குனர் வெற்றிமாறனுக்கு வலுவாக கை  கொடுத்திருக்கின்றன ... 

தேங்கியிருக்கும் தண்ணீரில் அழகாக சிரிக்கும் நிலா மனிதனின்  கால் பட்டு சிதையும் முதல் ஷாட்டிலேயே சிவசாமியின் குடும்பம் படப்போகும் பாட்டை நமக்கு சிம்பாலிக்காக காட்டிவிடுக்கிறார் இயக்குனர்  . எதற்காகவும் நேரத்தை வீணாக்காமல் சிவசாமியின் பயணத்தோடு சேர்த்தே நமக்கு என்ன நடந்தது என்பதை விறுவிறு வென விளக்குகிறது திரைக்கதை . சாதாரணமாக ஆரம்பிக்கும் படம் இண்டெர்வெல் பிளாக்கில் சிவசாமியின் அசுர தாண்டவதோடு முடியும் போது இண்டெர்வெல் அதற்குள் வந்துவிட்டதா என்று நம்ப முடியவில்லை ... 

60 களில் செருப்பு கூட போட முடியாமல் அவமதிக்கப்படுவது , 80 களில் தன் நிலத்தில் ஒழுங்காக விவசாயம் செய்ய விடாமல் தடுக்கப்படுவது என காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் மேல் சாதீய , பொருளாதார ரீதியாக 
இன்று வரை விதைக்கப்படும் கொடுமைகளை உபதேசமாக இல்லாமல் காட்சிகளாக  மட்டும் காட்டியிருப்பது  இயக்குனரின் பலம் . சாதிய  பிரச்சனைகளுக்கு  எல்லாம் ஏதோ பிராமணர்கள்  மட்டும் தான் காரணம்  என்பது போல காட்டி ஒதுங்கிக்கொள்ளாமல்  இடைநிலை மற்றும் கீழ் நிலை சாதிகளுக்கிடையேயேயான சண்டைகளை , வனமங்களை நேர்த்தியாக , நேரடியாக காட்டியிருப்பது இயக்குனரின் நேர்மை  . வசனங்கள் , குறியீடுகள் மூலமாக சாதி வேறுபாடுகளை அடையாளப்படுத்துவது , ஒடுக்கப்பட்டவர்களுக்காக பாடுபடும் வக்கீல் சேஷாத்ரியை ( பிரகாஸ்ராஜ் ) சாதீய ரீதியாக காட்டமால் தோழராக காட்டியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் ...

இண்டெர்வெல்லுக்கு பிறகு வரும் ப்ளாஷ்பேக் ரசிக்க வைத்தாலும் பெரிய ஜெர்க்குக்கு அடுத்து பயங்கர எதிர்பார்ப்போடு வருவதால் லேசான ஏமாற்றத்தை தருகிறது  . தனுஷின் அக்கா பெண்ணாக வரும் அம்மு அபிராமி கொஞ்ச நேரமே வந்தாலும்  மனதில் நிற்கிறார் . சட்டை போட கூட வக்கில்லாதவரை தனுஷ் தன் முதலாளி ( வெங்கடேஷ் ) மில்லில்  வேலைக்கு சேர்த்து விடுவதும் அவர் கட  கடவென முதலாளி தனது சொந்தக்காரன் என்று சொல்லுமளவிற்கு வளர்ந்து விடுவதும் யதார்த்தமான  கதைக்களனில் செயற்கையாக பூசப்பட்ட சினிமா வண்ணங்கள் . ஹிந்தியில் ஆர்டிகள் 15 போலவெல்லாம் இங்கே சினிமா வருவதில்லையே என்கிற ஏக்கத்தை ( பரியேறும் பெருமாள் அதற்கு முன்னரே வந்த அருமையான படம்) தீர்த்து வைக்கிறது அசுரன் . நாவலின் சினிமாவாக்கம் என்பதால் ஆர்ட் ஃபிலிமாக எடுத்து குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே பிடிக்கும் படி செய்யாமல் மாஸாகவும் ,  க்ளாஸாகவும் வந்து நம்மை மிரட்டும் அசுரன் அனைவரையும் கவரும் அழகன் ...

ரேட்டிங் : 4 * / 5 * 

ஸ்கோர்  காரட் : 50  



Related Posts Plugin for WordPress, Blogger...