10 November 2019

அவன் - அவள் - நிலா (10) ...


கார்த்திக் அவர்கள் இருவரும் சென்ற பிறகும் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான் . அவன் தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று யோசித்தான் . சின்ன வயதிலிருந்தே நிறைய பார்த்திருக்கிறான் , பள்ளிக்கூட நாட்களில் பெரிய சேட்டை செய்பவர்கள் எல்லாம் தப்பித்து விடுவார்கள் , அவன் மட்டும் ஏதாவது சிறிதாக செய்தால் கூட  மாட்டிக்கொண்டு விடுவான் . தியேட்டரில் , பஸ்ஸில் என அவனிடம் வெட்டியாக வம்பிழுப்பவர்கள் ஏராளம் . அவன் மனதிற்குள் ஏதோ நெருடல்  ஏற்பட்டால் அங்கே அடிதடி நடந்துவிடும் . பள்ளி நாட்களில் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது அவன் அடிதடிக்காக அப்பாவை கூட்டி வர சொல்வார்கள் . அவன் நன்றாக படித்ததாலும் . அவன் அப்பாவின் பழக்க வழக்கங்களால் பெரிய தண்டனை எதுவுமில்லாமல் தப்பி விடுவான் ...

இன்னொரு சிகரெட் பிடிப்பதற்கு அவனுக்கு சோம்பேறித்தனமாக இருந்தது , இருந்தும் ஒன்றை பற்ற வைத்தான் . பெட்டிக்கடைக்காரர் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார் , ஆனால் பயத்தால் எதுவும் கேட்கவில்லை . இப்பொழுது கிளம்பினால் தான் இரவுக்குள் மதுரைக்கு  போக முடியும் , இங்கே நடந்தது எதுவும் தெரியாமல் போனவுடனேயே நண்பர்கள் ட்ரீட் கேட்பார்கள் . கையில் வேறு காசு குறைவாக இருக்கிறது , சுரேஷ் வழக்கம் போல செலவு செய்து விட்டு வரவில் வைத்துக்கொள்வான் . சுரேஷ் பத்திர ஆஃபீஸில் வேலை செய்வதால் அவர்கள் செட்டிலேயே அதிக காசு வைத்திருப்பவன் . நெருங்கிய நண்பன் லட்சுமணனின் சொந்தக்காரன் . அவர்கள் ஏரியாவுக்கு வந்த புதிதில் யாரையும் கண்டுகொள்ளாமல் வேலைக்கு வருவது போவது என்று தானிருந்தான் . லட்சுமணன் அறிமுகம் செய்து வைத்தபோது கூட அவன் பேச்சில் நிறைய பணம் சம்பாதிக்கிறோம் என்கிற திமிர் இருந்தது . பெருமைக்கு எருமை ஓட்டுவது போல கூடுதலாகவே செலவு செய்தான் ...

பணம் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து விடாது என்பது சுரேஷுக்கு புரியும் நாள் வந்தது . அவனை போலவே அவன் தங்கையும் சிவப்பாக அழகாக இருந்தாள் . அதனால் அவள் கேட்காமலேயே சில பாடிகார்டுகள் பின் தொடர்ந்தார்கள் . ஏரியாவில் அவ்வளவாக புளங்காத சுரேஷுக்கு இது முதலில் தெரியவில்லை . ஆனால் எங்கே போனாலும் ஏரியாவுக்குள் கண் , காதுகளை வைத்துவிட்டுப் போகும் லட்சுமணனுக்கு இந்த தகவல் முதலில் வந்தது . கல்லூரி முடிந்தவுடனேயே  கார்த்திக் நேராக டாப்புக்கு வந்துவிடுவான் . அவனுக்காக காத்திருந்தது போலவே லட்சுமணன் இந்த விஷயத்தை சொன்னான் . ஒரு பெண் அழகாக இருந்தால் நாலு பேர் பின்னால் வரத்தான் செய்வார்கள் , இதில் அந்த பெண்ணுக்கே பெருமையாகவோ அல்லது உடன்பாடோ இருக்காம் . அதை தெரிந்து கொள்ளாமல் நேரடியாக நாம் விஷயத்தில் தலையிடுவது நல்லதல்ல என்று கார்த்திக் லட்சுணமனுக்கு சொன்னான் . அதில் நியாயம் இருப்பது போலவே அவனுக்கும் பட்டது . இந்த விஷயத்தை முதலில் சுரேஷிடம் சொல்லிவிடவேண்டுமென அவன் முடிவெடுத்தான் ...

சுரேஷ் முதலில் இந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம் காட்டாமலிருந்தாலும், தங்கை பின்னால் சுற்றுபவர்கள் புதூர் கம்மாய் தெருவை சேர்ந்தவர்கள் என்று கேளிவிப்பட்டதும் லேசாக பயம் வந்தது . அடிதடி , பிட்பாக்கெட் , திருட்டு என்று பேர் போன தெருவிலிருந்து சிலர் தனது தங்கையை பின் தொடர்வது அவனுக்கு நல்லதாக படவில்லை . எவ்வளவு செலவானாலும் இந்த பிரச்சனையை தீர்த்து விடவேண்டுமென அவன் யோசிக்க ஆரம்பித்தான் .
" மாப்பிள்ளை , பணம் தர்றேன் யாரையாவது செட் பண்ணி அவனுங்களை மிரட்டலாமா ? , என்று லட்சுமணனிடம் சுரேஷ் கேட்டான் .
" பாஸ் இது பணத்த வச்சு முடிக்கிற வேலை கெடையாது , பழக்கத்த வச்சு முடிக்கிற வேலை " கார்த்திக் சுரேஷிடம் தீர்க்கமாக சொன்னான் . பணம் இருக்கிறது , பழக்கம் எங்கே என்பது போல சுரேஷ் குழம்பிப் போய் பார்த்தான்.
" நீங்க ரெண்டு நாள் தங்கச்சியை  ஸ்கூல்ல விடுங்க , கூட்டிக்கிட்டு வாங்க , அப்படியே அவ கிட்ட பேச்சு கொடுத்து அந்த பசங்கள பத்தி ஏதாவது விஷயம் இருந்தா  தெரிஞ்சுக்குங்க " , கார்த்திக் அவன் மனதில் உதித்த ஐடியாவை சுரேஷிடம் சொன்னான் ...

வியாழன் , வெள்ளி இரண்டு நாட்களும் சுரேஷ் அவன் தங்கையை ஸ்கூலுக்கு கொண்டு போய் விடுவதென ஏற்பாடானது . நிறைய கேப் விட்டு கார்த்திக்கும் , லட்சுமணனும் அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களை பின் தொடர்ந்தார்கள் . அண்ணனுக்கு தெரியாமல் தங்கை எதுவும் அந்த பசங்களுக்கு ஜாடை காட்டுகிறாளா என அவர்கள் நோட்டம் விட்டார்கள் . அண்ணனுடன் சாதாரணமாக பேசிக்கொண்டே வந்தவள் அந்த பசங்களை பார்த்தவுடன் லேசாக மிரண்டாள் . அவர்கள் தன்னை பின் தொடர்வது அவளுக்கு பிடிக்காவிட்டாலும் அண்ணனிடம் சொல்லி அவனுக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று பயந்தாள் . அதனால் தான் அவனிடம் எதுவும் வாய் திறக்காமல் வைத்திருந்தாள் . இன்று அவனே கொண்டு போய்
விடுகிறேனென்று சொன்னது அவளுக்கு சந்தோசம் . சுரேஷை பார்த்து அவர்கள் கொஞ்சம் கூட பயந்தது போல தெரியவில்லை . மாறாக வேண்டுமென்றே சுரேஷின் வண்டியில் இடிப்பது போல வந்து சென்றார்கள் .
அதில் ஒருவன் மற்றொருவனிடம் " ஐயோ சார பார்த்தா ரொம்ப பயமா இருக்கு மச்சி " என்று சுரேஷை பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தான் .
சுரேஷுக்கு அவர்களை ரெண்டு அரை விடவேண்டுமென தோன்றியது , ஆனால் அதற்கு அவனிடம் தையிரியம் இல்லை ...

ஒரு வழியாக ஈவினிங்கும் அவளை டியூஷனில் இருந்து வீட்டுக்கு கொண்டு வந்து விட்டு விட்டு சுரேஷ் அவர்கள் டாப்புக்கு நேராக போனான் . கடைக்கார பையனிடம் ஒரு ஃபுல் பாட்டில் ரம் , சோடா, சைட் டிஸ் என எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்து விட்டு சோஃபாவில் வந்து அக்கடாவென உட்கார்ந்தான் . இதையெல்லாம் கண்டும் , காணாதது போல காரத்திக்கும் . லட்சுமணனும் சீட் ஆடிக்கொண்டிருந்தார்கள் . எப்போதும் கொஞ்சம் பாலிஷாக பேசும் சுரேஷிடமிருந்து சரக்குக்கு பின்னர் லோக்கலாக நிறைய பேச்சை கேட்கலாமென இருவரும் நினைத்துக்கொண்டார்கள் . சுரேஷ் சரக்கு கைக்கு வந்தவுடன் இவர்களிடம் வந்தான் . " பாஸ் ஆடுனது போதும் வாங்க ரவுண்டு போடலாம் " என்று கூப்பிட்டான் . " என்ன பாஸ் நாலு பேர் இருந்தாலே ஆஃப் தான் வாங்குவீங்க இன்னிக்கு ஃபுள் வாங்கியிருக்க்கீங்க " ,
என்று எதுவுமே தெரியாதது போல கார்த்திக் அப்பாவியாக கேட்டான் . மூன்று க்ளாஸிலும் சமமாக ரம்மை ஊற்ற ஆரம்பித்தான் சுரேஷ் ...

" இல்ல பாஸ் அவனுங்களை சும்மா வியக்கூடாது " . முதல் ரவுண்டிலேயே  அவனுக்கு வார்த்தை குழறியது . நேற்று அவளை ஸ்கூலில்  விட்டது , கூட்டி வந்தது எல்லாவற்றையும் அவர்களிடம் சொன்னான் . அவர்கள் சிப்
அடித்துவிட்டு சிப்ஸை கொறித்துக்கொண்டே  கேட்டார்கள் .
" பாஸ்  இவிய்ங்க   மேட்டர்ல  எடுத்தோம் , கவுத்தோம்னு லாம் பண்ண முடியாது அப்புறம் பிரச்சனை வேற மாதிரி போய்டும் " கார்த்திக் தனிப்பட்ட இருவரின் பிரச்சனை ஏரியா பிரச்னை ஆகிவிடக்கூடாதென்பதில் தெளிவாக இருந்தான் . அதிலும் தங்கை பெயர் இதில்  வந்துவிடக்கூடாதென்பதிலும் அவன் கவனம் இருந்தது . " அவனுங்கள என்ன பண்ணலாம் சொல்றீங்க ?"
" டைரெக்ட்டா தங்கச்சி மேட்டர் இல்லாம , அவனுங்கள பொளக்கலாம் , பொளக்குற பொளல்ல அவிய்ங்க  சில மாசம் வெளியவே வரமாட்டாய்ங்க , அப்புறமா நம்ம ஏரியா பக்கமே தலை வச்சு படுக்க மாட்டாய்ங்க " கார்த்திக் சொன்னான் . " அடிச்சா மட்டும் போதுமா வர மாட்டாய்ங்களா ? " , லட்சுமணன் கேட்ட போது அடி  மட்டும் போதாது என்று அவனுக்கு தோன்றியது ...

" உன் பாய்ண்ட் சரி தான் , அடியோடு விட்டா திரும்பவும் வர வாய்ப்பு இருக்கு", " பாஸ் அப்போ என்ன ஆளையே போட்டுட சொல்றீங்களா ?!"
சில ரவுண்டுகள் உள்ளே போய் வியர்த்து , விறுவிறுத்து சுரேஷ் கேட்டான் .
இருவருக்குமே வெறித்தனமாக சிரிப்பு வந்தது . " என்ன பாஸ் சினிமா ரேஞ்சுக்கு யோசிக்கிறீங்களோ ?" கார்த்திக் சிரித்துக்கொண்டே கேட்டான் .
" இல்ல , நீங்க அடிச்சா மட்டும் போதாதுன்னு சொல்லறீங்க , அதான் " .
" ஆமா , அடிச்சா மட்டும் போதாதுன்னா , அடியோடு விடாம , அவிய்ங்களுக்கு ஒரு பஞ்சாயத்து வச்சு நாம அங்க போக மாட்டோம் , அவிய்ங்க நம்ம ஏரியா பக்கம் வரக்கூடாதுன்னு பேசி முடிக்கணும் " . பஞ்சாயத்து என்றால் ஆலமரம் , சொம்பு என்றெல்லாம் சினிமா மாதிரி சுரேஷ் யோசிப்பானோ என்று நினைத்து இருவரும் மீண்டும் சிரித்தார்கள் . அவர்கள் தன்னை பற்றி தான் சிரிக்கிறார்கள் என்று தெரியாமல் சுரேஷும்  சேர்ந்து சிரித்தான் ...

 இன்னும் ஒரு வாரம் இருக்கும் மாதா கோவில் சப்பர் திருநாளில் நல்ல கூட்டம் இருக்கும் . அந்த கூட்டம் தான் அவர்களுக்கு தேவைப்பட்டது . ஏற்கனவே அந்த சர்ச்சுக்கு வந்து எங்கெங்கே போலீஸ் நிற்பார்கள் எந்த தெரு கூட்டம் குறைவாக இருக்கிறது என்பதையெல்லாம் நோட்டம் பார்த்து வைத்திருந்தார்கள் . சுரேஷ் வந்தால் அவர்களுக்கு அடையாளம்  தெரிந்து விடுமென்பதால் அவனை தவிர்த்தார்கள் . அவனை தவிர்த்து கார்த்திக் , லட்சுமணன் உட்பட ஐந்து பேர் , ஏற்கனவே புதூரிலேயே பெரிய ஆளின் தம்பி கார்த்திக்கின் பள்ளிக்கால நண்பன் என்பதால் அவனிடம் விஷயத்தை சொல்லி வைத்திருந்தான் . அவனும் தான் நேரடியாக தலையிட்டால் அண்ணன் திட்டுவார் என்பதால் அவர்களை அடித்து அண்ணன் இருக்கும் ஸ்பாட்டுக்கே அழைத்து வருமாறும் , அங்கே காத்திருப்பதாகவும் சொல்லி விட்டான் . அவர்களை துரத்திக்கொண்டு சுடுகாடு தாண்டி  அந்த ஸ்பாட்டுக்குள் கூட்டிப்போக வேண்டும் . பாபு , மொக்கை , மர்ரு இவர்கள் தான் இந்த திட்டத்துக்கு சரியாக இருப்பார்கள் என யூகித்தான் . நாளை அவர்களை சந்தித்து விஷயத்தை சொல்ல வேண்டும் . மதுரைக்கு செல்லும் பேருந்தில் ஜன்னலோரம் உட்கார்ந்து கொண்டு  பழைய அடிதடிகளை கார்த்திக் அசைபோட்டுக்கொண்டிருந்தான் ...

தொடரும் ...




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...