1 September 2019

அவன் - அவள் - நிலா (2) ...


கார்த்திக் என்று அந்த பையன் சொன்னதும் அவன் பெரிதாக ஆச்சர்யப்படவில்லை ஆனால் ஆச்சர்யப்படாமலுமில்லை . இவனே முதலில் பெண் பிறந்தால் சுந்தரி என்று வைக்கலாமென யோசித்திருக்கிறான் . ஆனால் இத்தனை வருடங்கள் கொடுத்த அனுபவத்தில்  அவனுக்கு கல்யாணம் என்பது ஏதோ ஒரு சடங்காகவோ இல்லை தனி மனித சுதந்திரத்துக்கு விடப்படும் சவாலாகவோ தான் படுகிறது .  அது ஒரு சக்கர வியூகம் . நுழைந்த பின் வெளி வர முடியாத அல்லது வர விரும்பாத ஒரு வியூகம் .   குறிப்பாக பெண்கள் ஏன் அந்த வியூகத்துக்குள் விரும்பி விழுகிறார்கள் என அவன் பல முறை யோசித்திருக்கிறான் ...

ஒரு ஆண் திருமணத்திற்கு பின் அவனாகவே இருக்க முடிகிறது . நண்பர்களுடன் ஊர் சுற்றுவது , அரட்டை ,சினிமா , பார்ட்டி என பெரும்பாலும் அவன் எதையும் குடும்பத்துக்காக விட்டுக்கொடுப்பதில்லை . ஆனால் பெண் வேறொரு வீட்டுக்கு வந்து புது அவதாரம் எடுக்கிறாள் . ஏதோ தோழியோ , தோழனோ கூப்பிட்டால் அவளால் சட்டென்று போக முடிவதில்லை . பெரும்பாலான பெண்களுக்கு  திருமணத்துக்குப் பின்  கணவனே உலகம்  ஆனால் கணவன்மார்களுக்கு  அவர்கள் உலகத்தில் இந்த பெண்கள் . இதற்கு விதிவிலக்குகள் உண்டு . ஆனால் விதிவிலக்குகள் வாழ்க்கையாகி விடாது . அவள் பேசிய பேச்சு பல திருமணமான பெண்களின் குரலாகவே அவனுக்கு பட்டது ...

" சாப்பிட வரலியா ?" அவள் கேட்டவுடன் என்ன சொல்வதென்று ஒரு கணம் யோசித்தான் . " நீங்க சாப்புடுங்க , நாங்க சாப்ட்டு சாப்புடுறோம் " சிவா சொன்னது அவளுக்கு முதலில் புரியவில்லை . பிறகு புரிந்தவளாய் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் .
 " மச்சி நீ மட்டும் சரக்கடிக்குறியா ?" " டே ஆனா அன்னிலேருந்து இன்னி வரையும் ஃபிகர பார்த்தவுடனே என்ன கழட்டி விடுறதுல இருந்து மட்டும் நீ மாறலடா ! " . " டே " , " சரி, புரியுது முன்னாள் ஃபிகர் " .
கார்த்திக்  திரும்பவும் முறைத்துக்கொண்டிருக்கவே சிவா " சாரி மச்சி கோச்சுக்காத , நான் போயி எடுத்துட்டு வந்துடறேன் " , " என்னடா ஏற்கனவே ஏற்பாட்டோட தான் இருக்கியா ? " , " கல்யாணத்துக்கு மொய்  வைக்கிறோமோ இல்லையோ சரக்கு மேலயும் , சீட்டு மேலயும்  கை வைக்காம விடுறதில்லை " ,
சொல்லிவிட்டு யாருக்கும் தெரியாமலிருக்க வாட்டர் பாட்டில் , சோடா வுடன் பக்கார்டியை மிக்ஸ் செய்யும் வேலைக்கு அவன் கிளம்பினான் ...

சிவா  நாலு ரவுண்டு அடித்து விட்டு சீட்டாடி முடித்து விட்டு வர நேரமாகுமென்பதால் அவன் மொட்டை மாடிக்கு போனான்  .
சின்ன வயதிலிருந்தே மொட்டை மாடி அவனுக்கு  நெருக்கமாக இருந்தது . யாரும் இல்லாத போது கூட நிலாவை பார்த்துக்கொண்டே தனிமையில் நீண்ட நேரம் படுத்திருக்கிறான் . வான் வெளியையும் , நட்சத்திரங்களையும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலே நான் என்ற அகந்தை ஓடி விடும் .  இந்த பிரபஞ்சத்தில் பூமியே ஒரு சின்ன புள்ளி அதில் நாம் எம்மாத்திரம் என்கிற நினைப்பு வந்துவிடும் . அதனால் தான் நம் முன்னோர்கள் எல்லாம் வானில் நட்சத்திரங்களாய் ஜொலிக்கிறார்கள்  என்று சொல்கிறார்களோ என்னமோ! .
" என்ன ஸ்டார்செல்லாம் எண்ணி முடிச்சாச்சா ?" அவள் இங்கு வருவாள் என்று அவன் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை , ஆனால் இது போலொரு சம்பாஷனை நடக்க வேண்டுமென அவன் நினைத்திருக்கிறான் . நேற்று பெரிதாய் நினைப்பது இன்று  புள்ளி போலாகி  விடுகிறது . ஆனால் அது ஏன் அப்படியானது என்கிற கேள்வியை எல்லோரும் கேட்டுக்கொண்டே தானிருக்கிறோம் ...

" நீ தூங்க போல ? " , " இல்ல அவர் லேட் நைட் வந்தாலும் வருவார் , அப்போ ரூமை லாக் பண்ணிட்டு தூங்கிட்டேன்னா தொறக்கறது கஷ்டம் அதான் " .
" போன் போட்டு எப்போ வருவாரு கேளேன் ? " , இது உண்மையிலேயே அவள் தூங்க வேண்டுமே என்ற அக்கறையை விட எத்தனை நேரம் அவளோடு பேச முடியுமென்கிற ஆர்வத்தாலேயே கேட்கப்பட்டது போலிருந்தது .
" கேட்டாச்சு , வருவேன் , அவ்ளோ தான் பதில் " .
" ஓ " . சிறிது நேரம் அங்கே மவுனம் பேசியது . காற்று அவர்களுக்குள் புகுந்து மவுனத்தை கலைக்க முயற்சி செய்துகொண்டிருந்தது.
இதே போன்றதொரு இரவில் மொட்டைமாடியில் ஆரம்பித்த அவர்கள் காதல் வெவ்வேறு பரிமாணங்களை தாண்டி இன்று இந்த மொட்டை மாடியில் நிற்கிறது .
" என்ன பாக்கறதுக்காக நைட் ல மொட்டை மாடி ஏறி குதிச்சியே அதெல்லாம் நியாபகம் இருக்கா ?" அவள் நேரடியாக இதை கேட்டாள் .
" மறக்க முடியுமா ? உன் பாட்டியோட  கத்தலுக்கு பயந்து நான்  ஓடின ஓட்டத்த நாட்டுக்காக ஒடியிருந்தா  இந்நேரம் பதகத்தோட வந்திருப்பேன் ! " .
" ஆமாம் நிச்சயமா " அவள் சிரித்துக்கொண்டே ஆமோதித்தாள் ...

" கார்த்திக்  எங்க ? " , " என் கூட பேசிட்டு இருக்கார் " என அவள் சொல்லவே ,
" ஐயோ மொக்கை காமெடி சொல்றதுலயும் அப்படியே இருக்க " ,
 " வேற எதுல அப்படியே இருக்கேன் ? " .
அந்த நிமிடம் அவள் பழைய சுந்தரியாகவே கண் முன் நின்றாள் .
" எவ்வளவோ , பேசும் போது  முடிய சுருட்டறது , ஏதாவது கேக்கும் போது  குறுகுறு ன்னு பாக்குறது , தனியா இருக்கும் போது  கண்ணாடியை பாத்து பேசிக்குறது , நான் தனியா மொட்டை மாடில இருக்கும் பொது கரெக்ட்டா மோப்பம் பிடிச்சு வந்துர்றது ன்னு சொல்லிகிட்டே போலாம் " .
" இன்னும் உன்ன நினைச்சுக்கிட்டே இருக்கறது "  சொல்ல வந்தவள் ஏனோ நிறுத்திக்கொண்டாள் . "  அவன் அக்காவோட இருக்கான் , இரு தூங்கிட்டானா பார்த்துட்டு இல்லேன்னா பால் கொடுத்து வந்துடறேன் " .
அவளுக்கு அந்த இடைவெளி தேவைப்பட்டது. இல்லையேல் பழைய சுந்தரியாகவே மாறி விடுவாளோ என்கிற அச்சம் அவளுக்கு துளிர் விட்டது . பெண்களுக்கே உரிய ஒரு பயம் , ஏதோ நடந்து விடும் என்பதால் அந்த பயம் வருகிறதா இல்லை பயம் வருவதால் நடந்து விடுகிறதா ! ..

அவள் போன பிறகு அவன் பழைய சிந்தனைக்குள் மூழ்கினான் . வாழ்க்கை விசித்திரமானது . இவளுடன் பேசுவதற்காக எவ்வளவு பிரயத்தனப்பட்டிருக்கிறான் . மாப்பிள்ளை அழைப்பிற்கு அடுத்த நாள் அவள் வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் இருந்தாள் . இவனை பார்க்கும் போது மெனெக்கெட்டு  ஒரு குட்டிப்பெண்ணை பிடித்து வைத்துக்கொண்டு,
" என்ன படம் பார்த்த ? " கடமை கண்ணியம் கட்டுப்பாடு " பார்த்துருக்கியா ?
என்று இவனை சைடில் கலாய்த்துக்கொண்டிருந்தாள் . அவனுக்கு ஒரு விதமான தயக்கம் வந்தது . நேற்று மொட்டை மாடியில் சினிமா லட்சியத்தை சொன்னதால் கடுப்பாகி விட்டாளோ என்று  யோசித்தான் . பெண்கள் எப்பொழுதுமே அவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதையே விரும்புகிறார்கள் . இடையில் மற்றவர்கள் மட்டுமல்ல , வேலை , லட்சியம் எதுவுமே வரக்கூடாதென்பது அவர்கள் எதிர்பார்ப்பு . இவன் நார்மலாக இருக்கும் போது பார்ப்பது , பேச எத்தனித்தால் கண்டுக்காமல் போவது என அவனோடு அவள் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தாள் .
அவனுக்கு அந்த ஆட்டம் பொறுமையை சோதித்தது ...

 ஒரு வழியாக அவள் தனியாக தாண்டிப்போகும் கையை பிடித்துக் கேட்டான்
" என்ன உன் பிரச்சனை ?" . " ம் . பிளஸ் 2 பாஸ் பண்ணாதான் காலேஜ் போகமுடியும்னு சொல்றாங்க " , அவன் மேலும் கடுப்பானான் .
" ஹலோ நம்ம மேட்டர்ல கேட்டேன் ? " .
" நமக்குள்ள என்ன மேட்டர் , அப்படில்லாம் ஒண்ணுமில்லையே ! ".
அவள் சொன்னவுடன் அவன் கை லேசாக தளர்ந்தது .
" என்ன டைரக்டர் சார் , சின்ன ட்விஸ்டுக்கே ஷாக்காவுறீங்க ?! ' .
அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை .
" உங்களுக்கு தான் ஆல்ரெடி லவ்வ்ர் இருக்காளே , அப்புறம் ஏன் என் கைய பிடிக்கிறீங்க ?! . அவனுக்கு ஒன்றும் புரியவில்லை . இவள் என்ன உளறுகிறாள் என்று தோன்றியது . சிவா ஏதாவது ரீல் சுத்திவிட்டானா வேண்டும் யோசித்தான் . " நீ என்ன சொல்ற ? " . " நீங்க தானே நேத்து சொன்னீங்க , சினிமா தான் முக்கியம்னு அத தான் சொன்னேன் " .
அவனுக்கு லேசாக நிம்மதி பெருமூச்சு வந்தது ...

" நான் சொன்னேன் தான் ஆனா உன்ன பிடிக்கலேன்னு சொல்லலியே ?"
" நானும் சொல்லலியே ! " . இப்போ என்ன செய்யலாம் என்பது போல அவளை பார்த்தான் . " என் அப்பா , மாமா வுக்கெல்லாம் சினிமான்னா சுத்தமா பிடிக்காது " . " ஏன் படமே பார்க்க மாட்டாங்களா ?" .
" இல்ல இல்ல அவரும் சிவாஜி ரசிகர் தான் , ஆனா சினிமாவுல இருக்கரவாள சுத்தமா பிடிக்காது " . " ஓ சிவாஜியை பிடிக்கும் , ஆனா சிவாஜிக்காக வசனம் எழுதினவன , அவரை சினிமாவுல அழகா காட்டுறவன பிடிக்காது , என்ன ஒரு ஹைபோக்ரஸி | "  .
 " என்ன க்ரஸியோ தே ஆர் நாட் க்ரேஸி அபௌட் சினிமா ,
அதான் எனக்கு தெரியும் " . இது  நிச்சயம் ஒரு பெரிய விவாதத்துக்கான சின்ன தொடக்கப் புள்ளியாகவே பட்டது . ஆனால் இவளிடம் இங்கே வாதித்து ஒன்றும் ஆகப்போவதில்லை . அவள் வீட்டாரின் விருப்ப , வெறுப்புக்கு இவள் என்ன செய்வாள் ! ...

" சரி உனக்கு என் கூட பேச இன்ட்ரெஸ்ட் இருந்தா நாலு மணிக்கு மொட்டைமாடி ஸ்பாட்டுக்கு வா " அவன் நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.
" அப்போ நலுங்கு இருக்குமே , நான் அக்கா பக்கத்துல இருக்கணும் " .
" ஓகே அக்காவ கட்டிண்டே அழு " அவன் கொஞ்சம் கோபமாக சொன்னான்.
" நான் நாலு மணி தான் முடியாது சொன்னேன் " . இவன் கோவப்பட்டவுடன் அவள் முகம் அழப்போகும் குழந்தையை போல மாறியது . என்ன தான் பதிலுக்கு பதில் பேசும்  பெண்ணாக இருந்தாலும் மனதுக்கு பிடித்த ஆணின் கோபம் அவளை அசைத்துப்பார்த்தது . அவனுக்கு ஏதோ உறைக்கவே ,
" சாரி உன் கூட பேசணும்ன்ற ஆசையில கத்திட்டேன் " .
" பரவாயில்லை , நான் ஈவினிங் தோது பார்த்து வரேன் " , அவள் சொல்லிவிட்டு ஒரு காந்த பார்வையை வீசிவிட்டு நகர்ந்தாள் . அவன் இப்பொழுது கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தான் . அவனுடன் கூடப்பிறந்த கோபத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டான் .
கோபமாக இல்லாமல் காதலோடு அவள் கையை பிடித்துக்கொணடே பேச வேணுமென்று மனம் ஏங்கியது . இந்த பேச்சுக்கு நடுவில்
தூரத்தில் இருந்து இவர்களது உரையாடல்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த அவளது மாமாவை இருவரும் கவனித்திருக்கவில்லை ...

தொடரும் ...

முதல் பாகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்...

அவன் - அவள் - நிலா (1) ...








  

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...