8 September 2019

அவன் - அவள் - நிலா ( 3 ) ...


வளுக்காக காத்திருக்கிறான் , முதல்முறையாக ஒரு பெண்ணிற்காக காத்திருக்கிறான் . அவன் மனம் பட்டம் விட்டுக்கொண்டே அதை பார்த்துக்கொண்டு  ஓடும் சிறுவனை போல ஓடியது  . ஸ்கூல் படிக்கும் போது ஜெனிஃபருக்காக ரகு காத்திருந்ததை போல ஒரு நாள் நானும் நிற்பேன்  என்று அவன் நினைத்துக்கூட பார்த்ததில்லை . சிறு வயதிலிருந்தே பெண்கள் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தாலும் தானாக போய் பேசுவதை ஒரு கவுரக்குறைச்சலாக நினைத்திருக்கிறான் . தானாக வந்து எல்லா பெண்களும் பேசுமளவிற்கு அவன் அழகனில்லை . ஆனால் அவன் கண்களில் ஒரு வசீகரம் இருந்தது.
கவித்துவமான அவன் பேச்சு பெண்களுக்கு பிடித்திருந்தது . எட்டாவது படிக்கும் போது  தெருவில் இருந்த சுதா அக்கா அவனை மிகவும் கவர்ந்திருந்தாள் . இருவரும் பஸ் ஸ்டாப் வரை பேசிக்கொண்டே போகும் போது கைகளை உரசி சில சமயங்கள் பிடித்துக் கொள்ளும் போது இனம் புரியாத சிலிர்ப்பை உணர்ந்திருக்கிறான் ...

இருவரும் சினிமா பற்றி  நிறைய பேசினார்கள் . கமல்ஹாசன் மேல் அவளுக்கு அப்படி ஒரு காதல்.  அவர் ஹீரோயின்களோடு நெருக்கமாக நடிப்பது பிடிக்காமல் அவனிடம்  புலம்பியிருக்கிறாள் . கமல் ஏன் டி.ஆர் போல பெண்களை தொடாமல்  நடிப்பதில்லை என்று அவளிடம் அவன் கேள்வி கேட்டிருக்கிறான் . அவள் உடனே அவ்வளவு நெருக்கமாகவெல்லாம் தொட மாட்டார்கள் அதெல்லாம் கேமரா டெக்னிக் என்றாள் . அவனால்  நம்ப முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை . அவனுக்கே  அது குழப்பமாக தான் இருந்தது . அப்போ தூக்கும் போதெல்லாம் கூட கேமரா டெக்னிக் தானா  என்று யோசித்திருக்கிறான் . ஒரு நாள் சுதா அக்காவை டேனியலுடன் மிக நெருக்கமாக மரத்தடியில் வைத்து  பார்த்த பிறகு தான் அது கேமரா டெக்னிக் இல்லை  சுதா அக்காவோட டெக்னிக் என்பது  அவனுக்கு புரிந்தது ...

பெண்களுக்கு படிப்பு , சினிமா தவிர பெரிய வெளியுலக அறிவில்லை என்கிற அவன் நினைப்பை சுந்தரி மாற்றினாள்  . காதல் ஒரு விசித்திரமான வஸ்து . ஆரம்ப காலங்களில் அது கொடுக்கும் போதை அலாதியானது . சுற்றியிருக்கும் எல்லாம் மறந்து அவள் முகம் மட்டுமே முழுவதுமாக தெரிந்தது . முந்தைய நாள் இரவு அவனால் எளிதாக தூங்க முடியவில்லை . அவன் புரண்டு புரண்டு படுத்ததை பார்த்து  சிவாவே பயந்து போய் அந்த பக்கம் படுத்துக்கொண்டான் . அந்த காதலால் தான் எதைஎதையோ யோசித்துக்கொண்டு அவனால் அரைமணி  நேரத்திற்கும் மேலாக நிற்க முடிந்தது . கதவருகே ஏதோ சத்தம் வரவே அவளுக்காக காத்திருப்பது போலில்லாமல் இருக்க கேசுவலாக காட்டிக்கொள்ள முயற்சித்தான் . அவளுக்கு பதிலாக பாரதி போல மீசை  வைத்த அவள் மாமா வருவார் என அவன் எதிர்பார்க்கவில்லை . அவர் நேராக அவன் அருகே வந்து ஒரு பெர்க்குலிஷை பற்ற வைத்தார் ...

" வருமா வருதான்னு தெரியாம ஒரே குழப்பமா இருக்குல்ல " .
அவர் எதை கேட்கிறார் என்று யோசித்துக்கொண்டே " புரியல அங்கிள் " . என்றான் . " இல்லப்பா வானம் மப்பும் மந்தாரமுமா மழை வருமா வராதான்னு இருக்குல்ல " . " வந்தா எல்லோருக்கும் நல்லது தான அங்கிள் " .
அவனிடம்  சட்டென்ற அந்த பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை .
" அது எங்க யாருக்காக  வருதுன்றத பொறுத்து தான் நல்லதா கெட்டதா எல்லாமே , எல்லோருக்கும் எல்லாம் அப்படி ஈஸியா கெடைச்சுடாதில்லையா " . அவரும் சூசகமாகவே பேசினார் .
அவன் புரிந்தும் புரியாதது போல பார்த்தான் .
" கீழ எல்லோரும் நலுங்குல பிஸியா இருக்கா , நீ இங்க என்னடாப்பா தனியா பண்ற ? " . " உங்கள மாதிரி தான் அங்கிள் சும்மா காத்து வாங்க வந்தேன் " .
" நான் தம்மடிக்க வந்தேன் , உனக்கும் அந்த பழக்கம்  இருக்கா ?". உதடு கருத்திருப்பதை வைத்து கேட்டிருப்பாரோ என்று அவனுக்கு தோன்றியது .
இல்லை என்பது போல வேகமாக தலையாட்டினான் ...

" பெட்டிக்கடைப்பக்கம் உன்ன அந்த ஒல்லி பையனோட பார்த்தேனே ?"
சிவாவை சொல்கிறார் என்று அவனுக்கு புரிந்தது .
" அது ஒண்ணுமில்லை அங்கிள் " சீக்கிரமா விஷயத்துக்கு வாய்யா என மனதுக்குள் நினைத்துக் கொண்டான் . அவனுக்கு அவரை பார்த்தால் பயமாகவெல்லாம் இல்லை ஆனால் கொஞ்சம் பதட்டமாக இருந்தது . சுந்தரி ஏன் வரவில்லை என ஒரே குழப்பமாக இருந்தது . அவள் சொல்லித்தான்  இந்த ஆள் வந்தாரா என்று தோன்றிய நினைப்பை உடனே அழித்தான் .
" என்ன படிக்கிறீங்க தம்பி ?" . " பி.காம் செகண்ட் இயர் அமரிக்கன் காலேஜ் ல "
அவர் அடுத்து எந்த காலேஜ் என்று கேட்பதற்குள் நாமே சொல்லிவிடலாமே  என்று சொல்லி  விட்டான் ...

" ஓ மதுரையா அதான் ரொம்ப துடிப்பா இருக்காப்ல " .
" அப்பா என்ன பண்றார் ?" . என்ன பொண்ணு தரப்போற மாதிரி அடுத்தடுத்து கேள்வி கேட்கிறார் என்று நினைத்துக்கொண்டான் .
" எம்.என்.ஆர் மண்டபத்துல மேனேஜரா இருக்கார் ".
" ஓ அது ஃபேமஸ்  மண்டபமாச்சே ஊர்ல இருக்குற பெரிய மனுஷன் பூரா அங்க தான் கல்யாணம் பண்ணுவான் " .
அவர் சொன்னது உண்மை தான் . அவனுடைய அப்பா நாலு காசு சம்பாதித்தாரோ இல்லையோ நாலு பெரிய ஆட்களின் தொடர்பு கிடைத்ததற்கு அந்த மண்டபம் முக்கிய காரணம் . அவரே தொடர்ந்தார் ,.
" சுந்தரியோட சித்திக்கு கூட அங்க தான் ஆச்சு , அவளுக்கும் காலேஜ் படிச்சு முடிச்சவுடனே அங்க தான் பண்ணனும்னு அவ அப்பா கூட சொல்லிண்டே இருக்கார் ". அவனுக்கு அவர் சுத்தி வளைத்து எங்கே வருகிறார் என்று நன்றாகவே புரிந்தது ...

இங்கே சாதி மட்டும் ஒரு பிரச்சனையில்லை அதை விட கொடியது பணம் . நாலு காசு சேர்ந்து விட்டால் யாரிடமும்  பழக யாரும்  சாதி பார்ப்பதில்லை . பல லட்சங்கள் கொடுத்து கல்யாணம் செய்து வைக்கும் இடத்தில் சுந்தரி வீட்டுக்காரர்கள் அந்த திருமண மண்டபத்தில் மேனேஜராக வேலை பார்க்கும் ஒரு மிடில் க்ளாஸ் மாதவனின் பையனாக அவன் . அவனுக்கு அந்த மலையளவு வித்தியாசம் நன்றாகவே உறைத்தது  . " உங்க அம்மா கூட நன்னா சமைப்பா ன்னு காண்டிராக்டர் கணபதி சொன்னான் " . இந்த ஆளுக்கு அவன் குடும்பத்தை பற்றி நன்றாக தெரிந்திருக்கிறது . கணபதியை தெரியுமென்றால் நிச்சயம் அவன்  அப்பா , அம்மா , தம்பி , ஓடிப்போன அக்கா எல்லோரையும் பற்றி தெரிந்திருக்கலாம் ...

அவன் குடும்பத்தை பற்றி சுந்தரியிடம் ஒரு நாள்  சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தான் . ஆனால் அவன் விஷயத்தில் எல்லாமே வேக வேகமாக நடக்கின்றன . கூடல் , ஊடல் , எதிர்ப்பு எல்லாமே அடுத்தடுத்து வருகின்றன .
" உன்ன தான் உன் அம்மா மலை போல நம்பிருக்கான்னு கணபதி சொன்னான்" ,  " இந்த காலத்துல இன்ஜினீரிங்க் படிச்சாலே வேலை கஷ்டப்பட்டு தான் கெடைக்குறது , நீ வேற பி.காம் ன்ற . டிஸ்டிங்க்ஷன் ல பாஸ் பண்ணி , சி.ஏ இன்டெராவது கிளியர் பண்ணா வாய்ப்பிருக்கு " . அவன் சி.ஏ ஹையர் கிளியர் பண்ணுவதர்க்கெல்லாம் ஒர்த் இல்லை என்பது போலவும் , ஏதோ இன்டெர்வியூ எடுக்க வந்தவர் போலவும்  பேசிக்கொண்டே போனார் ...

அவனுக்கு இந்த பிளஸ் 2 , காலேஜ் , வேலை என்கிற சிஸ்டத்தை உடைக்க வேண்டும் போல இருந்தது . அவன் சமூகம் எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுக்க தயங்குவது அல்லது எடுப்பவர்களையும் இளக்காரம் செய்வது அவனுக்கு எரிச்சலை தந்தது . வேலைக்கு சென்று விட்டால் போதும் இங்கே பலர் பிறவிப்பயன் அடைந்து விடுகிறார்கள் . அதற்கு மேல் எதையும் யோசிக்கும் நிலையில் இங்கு யாரும் இல்லை . அப்படியே எவனாவது யோசித்து ஏதாவது வித்தியாசமாக செய்து ஜெயித்து விட்டால் அதை அதிர்ஷ்டம் என்கிறார்கள் , தோற்றுவிட்டால் இவனுக்கு இதெல்லாம் தேவையா நாம தான் அப்போவே சொன்னோமே என்கிறார்கள் . அவனுக்கு படிப்பு மேல் என்றுமே அயர்ச்சி இருந்ததில்லை. எக்ஸாமுக்கு முதல் நாள் வரை நம்ம கூட தான் ஊர் சுத்துறான் ஆனா ஒரு அரியர்  கூட இல்லாம நல்ல மார்க்ல பாஸ் பண்ணிடுறான் என்று நண்பர்களே அவனிடம் கடிந்து கொள்வார்கள் .
அந்த நம்பிக்கையில் " கண்டிப்பா  நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணுவேன் " என்று அவரிடம் உறுதியாக சொன்னான் ...

" அது தான் தம்பி உனக்கும் நல்லது உன் குடும்பத்துக்கும் நல்லது " .
அவர் சொன்னதில் அக்கறையோடு சேர்ந்த எச்சரிக்கையும் இருந்தது . சுந்தரியின் அப்பா ஊரில் பெரிய ஆடிட்டர் . மளிகை கடைக்காரனிடம் இருந்து மினிஸ்டர் வரை கணக்கு வழக்கு அவர் கைவசம் இருந்தது . படிப்பு தவிர வேறொன்றுமே அவருக்கு தெரியாது . அது தான் உண்மையான வெற்றியாக இந்த சமூகத்தால் பார்க்கப்படுகிறது . " நான் நிச்சயமாக  ஒரு நாள் எல்லோருக்கும் தெரியும் படி பெரிய ஆளா வருவேன் " . அவன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான் . அவர் நேரடியாக சுந்தரி விஷயத்துக்கு வராததால் அவனாக அவள் டாபிக்கை எடுப்பது அவனுக்கு தயக்கமாக இருந்தது . அவருக்கு எந்த அளவு விஷயம் தெரியும் என்பது புரியாமல் நாமாக  வாய் விடுவது நல்லதுக்கில்லை என உள்ளுணர்வு சொல்லியது ...

லேசான மழை தூரவே " தம்பி பாத்துக்கோங்கோ , நான் வரேன் " என்று அவர் கிளம்பலானார் . அப்போது கூட " சுந்தரியை நன்னா பாத்துக்க சொல்றேளா மாமா " என்று அவரை கிண்டலடிப்பது போல தோன்றிய நினைப்பை அப்படியே  அடக்கிக்கொண்டான் . அவர் என்ன தான் நக்கலாக பேசியது போலிருந்தாலும் அதில் பொதிந்திருந்த உண்மை அந்த மழை நேரத்திலும் அவனுக்குள் எரிந்தது . அனைவரும் அவனை ஒரு நாள் அண்ணாந்து பார்க்க வேண்டுமென்கிற  வேட்கை இன்னும் அதிகமானது . சினிமாவில் பெரிய இயக்குனாராவதே அதற்கு சிறந்த வழி என்று அவன் நம்பினான் . எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் அது அவ்வளவு எளிதல்ல என்பது அவனுக்கு தெரியும் ஆனால் அது அவன் நினைத்ததை விட மிகவும்  கடுமையானது என அவனுக்கு அப்போது புரிந்திருக்க வாய்ப்பில்லை ...

தொடரும் .,,

அவன் - அவள் - நிலா முதல் இரண்டு பாகங்களை படிக்க இங்கே சொடுக்கவும்...


அவன் - அவள் - நிலா (1) ...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...