14 September 2019

அவன் - அவள் - நிலா ( 4 ) ...


வானில் நிலவை மேகங்கள் மறைத்து விலகுவது போல அவனது மனதுக்குள் கடந்த கால நினைவுகள் வந்து வந்து போயின . அவளது  மாமாவுக்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் அவனல்ல . ஆனால் அவர்  சொன்னதன் உண்மை அன்று அவனை சுட்டது . இன்று எளிதாக சுந்தரியுடன் பேசிக்கொண்டு நிற்பது போல அந்த காலத்தில் முடியவில்லை . இது கூட அவள் புருஷன் மற்றும் அவன் குடும்பத்தார் இல்லாததால் சாத்தியமானது என்றே நினைத்தான் . கல்யாணம் வரை பெண்ணிற்கு அவள் வீட்டார் போடும் சட்டதிட்டம் , கல்யாணத்திற்கு பிறகு புருஷன் போடும் சட்டதிட்டம் . அதில் சில வரைவுகள் வேறுபடலாம் ஆனால் அடிப்படையில் அவளை அடிமைப்படுத்துவது மாறப்போவதில்லை . கல்யாணத்திற்கு பிறகு நடக்கும் எந்த ஒரு தன் வீட்டு விசேஷத்துக்கும் பெண் விட்டுக்கொடுக்காமல் போகத் துடிக்கிறாள் . நிறைய கணவன்மார்களுக்கு அவர்கள் மனைவி மிக அருமையாக சமைப்பாள்  என்பதே  அவள் வீட்டார் வரும் போது  தான் தெரிகிறது . திருமணத்துக்குப் பின் தன் வீட்டாருடனான தொடர்பு ஏதோ ஒரு வகையில் அவளுக்கு நிம்மதியை  தருகிறது . முதல் காதலன் என்பதையும் தாண்டி சொந்தக்காரனுமான அவனை பார்த்ததில் அவளுக்கு நிறையவே மகிழ்ச்சி ...

யோசித்துக் கொண்டிருக்கும் போதே கதவை  படாரென்று திறந்து அங்கே சிவா வந்து நின்றான் . " சாரி மாப்பிள்ளை கால் தடுக்கிருச்சு " . அவன் நல்ல போதையில் இருப்பது நன்றாகவே தெரிந்தது . போதையில் இருப்பவர்கள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வார்கள் . அதில் குழந்தைத்தனம் , குரூரத்தனம் எல்லாவற்றையும் பார்க்கலாம் . அடுத்த நாள் போதையில்  சொன்னேன் என்று சொல்லி மழுப்பிக் கொள்ளலாம் . போதையில் இருப்பவனுக்கு ஈக்குவலாக அடுத்தவனும் அடித்திருந்தால் பிரச்சனையில்லை . ஒருவன் மட்டும் சரக்கடித்து விட்டு அடுத்தவன் அடிக்கவில்லையென்றால்  மாட்டினவன் மாண்டான் . அந்த ஒரு நிலையில் சிவாவிடம் கார்த்திக்  மாட்டியது போலவே இருந்தது ... 

" நீயும் வந்திருக்கணும் மச்சி , ஒரிஜினல் சரக்கு , ஜிவ்வுன்னு ஏறுது " .
" பார்த்தாலே தெரியுது " . " அய்யயோ அடிச்சது தெரியுதா , மத்தவங்க பார்த்தா 
தப்பாயிடும் மச்சி " . சின்ன வயதில் தம்மடித்து விட்டு  வாடை வராமலிருக்க கொய்யா இலையெல்லாம் மென்று தின்னது அவனுக்கு நியாபகம் வந்தது . 
அதிலும் அப்பா கையை மோர்ந்து பார்த்து கண்டுபிடித்து வெளுத்து வாங்கியதும் அவனுக்கு மறக்கவில்லை .
" அடிச்சது தெரியுதா மச்சி " . இதோ சொன்னதை சொல்ல ஆரம்பித்து விட்டான் . " வாடையே வராது சொன்னான் ?! " . அவன் தானாக பேச ஆரம்பித்தான் . " அதெல்லாம் ஒன்னும் தெரியல விடு " . 
" அப்புறம் எப்போ மச்சி உன் படம் வரும் ? போன தடவையே ப்ரொடியூசர் கெடைச்சுட்டாரு சொன்ன ?! " .
அவன் கதை சொல்லி பிடித்துப்போன ஒரு பெரிய ஜவுளிக்கடை ஓனர் அட்வான்ஸ் கொடுத்து படத்தை ஆரம்பிக்க ரெடியாக தான் இருந்தார் . பூஜைக்கு கூட நல்ல நாள் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் . அந்த நேரம் பார்த்து மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வர இன்னும் மூன்று மாதம் கழித்து ஆரம்பிக்கலாம் என்று போனவர் இன்று வரை வரவில்லை . அரசாங்கம் நாட்டுக்காக எடுக்கும் நடவடிக்கை ஏதோ ஒரு தனிப்பட்டவனின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடுகிறது ...

" இல்ல மாப்பிள்ளை அவர் பேக் அடிச்சுட்டாரு . இப்போ வேற ஒரு கம்பெனி ல கதை சொல்லிருக்கேன் அனேகமா ஊருக்கு போனவுடனே ஆரம்பிச்சுடலாம்".
திருமணம் ஆகாதவனிடமும் , குழந்தை இல்லாதவர்களிடமும் எப்போ விசேஷம் என்று கேட்பது போலவே தான் நல்ல வாய்ப்புக்கு காத்திருக்கும் சினிமாக்காரனிடம் எப்போ அடுத்த ப்ராஜெக்ட் என்று கேட்பதும் . இதை தவிர்க்க முடியாது . சிவா ஒரு அக்கறையில்  கேட்கிறான் , நிறைய பேர் இன்னும் வெட்டியா தான் இருக்கியா என்பது போல கேட்பார்கள் . இதற்காகவே அவன் பல விசேஷங்களுக்கு போவதில்லை . இருட்டு அறையில் நிறைய நாள் தண்ணீர் சிகரெட்டோடு முடங்கி கிடந்திருக்கிறான் . வேலை இருக்கும் போது இரவு பகல் பாராமல் உழைப்பதும் வேலையில்லா நாட்களில் சும்மாவே ஒரே ரூமில் கிடப்பதும் சினிமாக்காரர்களுக்கே சாத்தியம் ...

" உன்ன பார்த்தா  எப்போ படம் ? என்ன பார்த்தா எப்போ கல்யாணம் ? இப்படி கேக்குறதே இங்க நெறைய பேருக்கு வேலையா போச்சு ! "
" நீ ஏண்டா இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்க ?"
" எனக்கு அதுல இன்ட்ரெஸ்ட் இல்லேன்னுல்லாம் பொய் சொல்லல மச்சி , பொண்ணு கிடைக்கல அதான் உண்மை " . அவன் சொல்லும் போதே கண்களில் ஒரு வேதனை தெரிந்தது . பொதுவாக கல்யாணம் ஆகாத முதிர்கண்ணன்கள் திருமண சடங்கை கேலி செய்தோ இல்லை மணப்பெண்ணை குறை சொல்லியோ  சுய இன்பம் அடைந்து கொள்வார்கள் . சிவா அப்படியல்ல . பெரிதாக படிக்கவில்லையென்றாலும் பிசினஸில் நன்றாக சம்பாதிக்கிறான் . உள்ளூரில் எல்லா பெட்டிக்கடைகளிலும் , சூப்பர் மார்க்கெட்டிலும் இவன் ப்ராண்ட் ஊறுகாய் , புளியோதரை பேஸ்ட் வகையறா இல்லாமல் இருக்காது . அவன் சமைத்தால் ஊரே மணக்கும் , அப்படியொரு கைப்பக்குவம் . பெரிதாக படிக்கவில்லை என்பது அவனுக்கு ஒரு குறையாகவே இருந்ததில்லை ஆனால் அதை பெரிய விஷயமாக்கி அவனை ரிஜெக்ட் செய்தவர்கள் ஏராளம் ...

ஒரு முறை ஒரு கல்யாணத்துக்கு போயிருந்த போது அவன் சண்முகம் அண்ணனை பார்க்க நேர்ந்தது . சண்முகம் அண்ணன் அவன்  வேலை பார்த்த இயக்குனரிடம் அஸோஸியேட் ஆக இருந்தவர் . பொண்டாட்டி போல கூடவே இருந்து புதிதாக சேரும் அஸிஸ்டண்ட்களை இயக்குனரிடம் நெருங்க விடாமல் பார்த்துக்கொள்வதே அவரின் முக்கிய வேலை . ஒரு படம் ஓடியதால் பிரபலமான இயக்குனருக்கும் இது போன்றதொரு அல்லக்கை தேவைப்பட்டது . கல்யாண மண்டபத்தில் இவனருகே உட்கார்ந்த போது வன்மத்தோடு பேசிக்கொண்டே போனார் .  
" இந்த பொண்ணு கண்ண பாரேன் அலைபாயுது , நிச்சயம் கல்யாணத்துக்கப்புறம் நிலையா இருக்காது " . 
" கல்யாணத்தப்பவே பொண்ணு இந்த ஆட்டம் போடுதே கல்யாணத்துக்கப்புறம் மாப்பிள்ளை சொல்றத மசுருல கேக்கும் "  .
" காசு பணத்த பார்த்து பொண்ண கட்டிக்கிட்டு அப்புறமா இங்க குடையுதே அங்க குடையுதேம்பானுங்க முட்டாப்பசங்க " . 
இப்படி ஒவ்வொரு கல்யாணத்துக்கும் ஒவ்வொரு மாதிரி பேசிக்கொண்டே இவர்களெல்லாம் கல்யாணமாலை நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பார்கள் ...

லேசாக தள்ளாடிய சிவா  சுவற்றில் சாய்ந்து கொண்டே பேசினான் . 
" இப்போ பொண்ணுங்களெல்லாம் நெறைய எதிர்பார்க்குறாங்க மச்சி , நல்ல சம்பளத்துல வேலை , பணம் , ஃபாரீன் ட்ரிப் இப்படி மட்டுமில்ல பையனோட அம்மா , அக்கா , தங்கை ன்னு யாரும் இருக்கக்கூடாதாம் , பொண்ணோட அப்பா , அம்மாவே  இத ஜாடை மாடையா கேக்குறாங்க " .
" நம்ம சாம்பு மாமாவுக்கு இல்லாத காண்டாக்ட்டா , அவரால முடியாதா ?"
" அவர் கூட்டிட்டு போன இடம் தான் அது  , அவரே கடுப்பாகி அப்போ என்ன கல்யாணம் பண்ணனும்னா வீட்ல இருக்கறவாளெல்லாம் கழுத்த நெறிச்சு கொன்னுடனுமா  ன்னு காட்டமா கேட்டுட்டு வந்துட்டார் " . 
சாம்பு மாமா எதையும் பட்பட் டென்று பேசக்கூடியவர் . சொந்த சாதிக்காரன் யாரும் அவரோடு அவ்வளவாக வைத்துக்கொள்ள மாட்டார்கள் . ஊரே அவரை கொண்டாடினாலும் " சாதிய கெடுக்க வந்த சத்ரு " என்றே அவரை பொரிந்து தள்ளுவார்கள் . ஆனால் இவர்கள் இருவருக்கும் அவரை ரொம்பவே பிடிக்கும் ...

அவருக்கு திருமணமான கதையே பெரிய கதை . அவர் சொந்தத்திலேயே ஒரு பெண்ணை காதலித்தார் . அந்த பெண்ணிற்கும் அவரை பிடித்திருந்தது. இருவரும் சரியான பொருத்தம் என்று பேசிக்கொள்வார்கள் . திடீரென ஒரு நாள் அப்பாவுடன் சண்டை போட்டுக் கொண்டவர் வீட்டை  விட்டு ஓடி விட்டார் . எங்கே போனாரென்று தெரியவில்லை . இந்த கவலையில் அவர் அம்மா மிகவும் நொடிந்து விடவே , ஆபத்பாந்தவனாக அவரிடமிருந்து ஒரு நாள் ஒரு கடிதம் வந்தது . அதில் அவர் மிலிட்டரியில் சேர்ந்து விட்டதாகவும் ஆறு மாதம் கழித்து ஊருக்கு  வருவதாகவும் தகவல் இருந்தது . இதை கேள்விப்பட்ட அந்த சொந்தக்கார பெண்ணிற்கும் இதுநாள் வரை இருந்த கோபம் மறைந்து அவரை பார்க்க வேண்டுமென்கிற ஆர்வம் வந்தது . அவரும் உயரத்துக்கேற்ற நல்ல உடல்வாகோடு வந்தார் . ஊரில் தெரிந்தவர்களுக்கெல்லாம் அவரால் முடிந்ததை வாங்கி வந்தார் தனக்கு பிடித்த பெண்ணிற்கு உட்பட . அதை ஆசையோடு அவளுக்கு கொடுக்கலாமென்று ஆத்தங்கரைக்கு வர சொன்னவர்க்கு அதிர்ச்சி காத்திருந்தது ...

காவேரி ஆறு அருமையாக ஓடிக்கொண்டிருந்தது . சாம்பு மாமா சைலண்டாக ஆற்றங்கரையில் உட்கார்ந்து மணலை நோண்டிக்கொண்டிருந்தார் . மணலால் அவர் கட்டிய அழகான  கோட்டை இடியப்போவது தெரியாமல் வெள்ளந்தியாக உட்கார்ந்திருந்தார் . எப்பொழுதும் பூனை போல வந்து கண்ணை பொத்துபவள் இன்று அப்படி செய்யாமல் நேராக வந்து நின்றாள் .
அவர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடியதால் வந்த கோபம் என்று நினைத்தார்.
" உனக்காக எத்தன நேரமா காத்துண்டு இருக்கேன் தெரியுமா ?" .
" என்ன ரெண்டு வருஷம் இருக்குமா ?" . இவர் ஓடிப்போய் ராணுவத்தில் சேர்ந்து திரும்ப வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதை சொல்கிறாள் என அவருக்கு புரிந்தது . " இன்னும் கோபம் தீரேலியா ?" .
" கவலைப்படாதீங்கோ நான் கோபப்பட்டு எங்கயும் ஓட மாட்டேன் " 
அவருக்கு சுருக்கென்றது . " என்ன பண்றது , என் அப்பன் கண்டபடி திட்டினான், ஒரு நிமஷம் அங்க இருக்க முடியாதுன்னு ஓடிட்டேன் " . 
" ஓடிப்போன அந்த ஒரு க்ஷணம் என்ன நெனைச்சுப் பார்த்தேளா ? "
" உன்ன மட்டுமா அம்மா , தங்கை , இந்த ஆத்தங்கரை  எதையும் நெனைக்கமா 
 தானே ஓடினேன் , அப்போ எதையும் யோசிக்க முடியல " .
அவர் தீர்க்கமாக பதில் சொன்னார் ...

" கோவத்துல ஆத்த விட்டு ஓடினவன் எப்பிடி உன்ன கடைசி வர காப்பாத்துவான் னு அப்பா கேக்குறார் " . அவள் வீட்டில் இந்த இரண்டு வருடத்தில் பேசி பேசி நிறையவே மனதை மாற்றியிருந்தார்கள் . அவர்களை சொல்லி குற்றமில்லை அந்த காலத்தில் கல்யாண வயதில் பெண்ணை வீட்டில் வைத்திருப்பது என்னமோ வெடிகுண்டை வைத்திருப்பது போல . 
" உங்க அப்பா தான் ஆத்தங்கரைக்கு போய் அந்த முட்டாப்பய  கிட்ட இந்த விஷயத்தை சொல்லிட்டு வான்னு அனுப்பிச்சாரோ ? " .
" இல்ல அவருக்கு தெரியாம நானா தான் வந்தேன் " . 
" என்ன பார்க்க வருவ , இந்த பரிசை கொடுக்கலாம்னு ஆசையா காத்திருந்தேன் , ஆனா நீ உன்ன ஏற்கனவே பொண்ணு பார்த்துட்டு போன விஷயத்த சொல்ல வந்திருக்கேன்னு நெனைக்கிறேன் " .
அவருக்கு அந்த விஷயம் தெரிய வந்ததில் ஒரு வியப்புமில்லை . ஊருக்குள் யார் நுழைந்தாலும் அவர்களிடம் சொல்லவேண்டியதை  சொல்ல நாலு பேர் மரத்தடியில் எப்பொழுதுமே காத்துக்கொண்டிருப்பார்கள் ...

" அப்போ எல்லாம் தெரிஞ்சு தான் நீங்களும் வந்திருக்கேளா ?" அவள் அழுகையுடன் கேட்டாள் . ஆண்களுக்கு ஒரு விஷயத்தில் ஆத்திரம் வருவது போல பெண்களுக்கு உடனே அழுகை வந்துவிடுகிறது . அது ஆயுதமா ? கேடயமா ? என்பது சம்பந்தப்பட்டவர்களை பொறுத்தது . 
" தெரியும் ஆனா உன் சம்மதத்தோட நடக்கறது தெரியாது " .
அவரின் சுருக்கு பேச்சு  அவளை மேலும் பாதித்தது . 
" ஆமாமா நான் தான் வந்து என்ன பொண்ணு பாருங்கோன்னு வாசல்ல நின்னுண்டு இருந்தேன் " அழுகையும் , ஆத்திரமுமாக அவள் பேச்சு வெடித்ததில்  அவருக்கும் ஆத்திரம் தலைக்கேறியது ,
" அப்புறம் ஏண்டி இங்க வந்த ? உங்க அப்பன் சொல்றவனையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான " அவர் கத்தியபடியே கையில் வைத்திருந்த பொருளை ஆற்றில் தூக்கியெறிந்தார் . அது அவளுக்கு அவளை தூக்கியெறிந்தது போலவே இருந்தது , இனிமேல் அங்கே நிற்பது நல்லதல்ல என்று நினைத்து அவள் வேகவேகமாக அழுகையுடன் நடக்க ஆரம்பித்தாள் .
" போடி போ உங்கப்பன் பார்த்த நொள்ளை மாப்பிள்ளையையே கட்டிண்டு அழு  " , சொல்லும் போதே அவளுக்கு கல்யாணம் நடக்கப்போகும் அதே தேதியில் நாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று மனதுக்குள்ளேயே கருவலானார் . சொந்தக்காக்காரன் , சாதிக்காரன்  ஒரு பயல கூப்பிடக்கூடாது என்று அப்பொழுதே முடிவு செய்தார் . அந்த போட்டி மனப்பான்மை அவர் அழகுக்கும் , அறிவுக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணுடன் முடிச்சு போட வைக்கப்போகிறது என்று பாவம் அவருக்கு அன்றே  தெரிந்திருக்கவில்லை ...

தொடரும் ...

முதல் மூன்று பகுதிகளை படிக்க கீழே சொடுக்கவும் ...

அவன் - அவள் - நிலா (1) ...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...