12 February 2013

கமலுக்கு ஒரு கடிதம் ...




டியர் கமல் ,
                       உங்களின் பெயருக்கு முன்னால் பத்மஸ்ரீ , டாக்டர் என்றெல்லாம் போட்டு என்னை போன்ற சாதாரண ரசிகனுக்கும் உங்களுக்குமுள்ள இடைவெளியை மேலும் அதிகப்படுத்த விரும்பாத காரணத்தால் கமல் என்றே விளித்துள்ளேன் .  " தடைகளை வென்றே சரித்தம் படைப்பான் " என்று வைரமுத்து விஸ்வரூபம் படத்திற்கு எழுதிய பாடல் வரிகள் உங்கள் நிஜ வாழ்க்கையிலும் அப்படியே பொருந்தும் என்று நிச்சயம் நீங்கள் கூட எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் . நான்கு தேசிய விருதுகள்  , எண்ணிலடங்கா  பிலிம் பேர் விருதுகள் மற்றும் பல மாநில அரசுகளின்  விருதுகள் , 50 வருடங்களாக தமிழ் சினிமாவிற்காக தன்னையே  அர்ப்பணித்தவர் , ஒழுங்காக வருமான வரி செலுத்தும் நடிகர் , ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றிய முதல் நடிகர் போன்ற பெருமைகளை எல்லாம் தாண்டி ஒவ்வொரு படத்திற்கும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகிறீர்கள் என்கிற காரணத்துக்காகவே உங்களை அதிகம் மதிக்கிறேன் ...

இன்று விஸ்வரூபம் படத்திற்கு எதிரான தடையே பெரிய விளம்பரத்தை அள்ளிக் கொடுத்து ஓரளவு மட்டுமே வெற்றியடைந்திருக்க வேண்டிய படத்தை உலகளாவிய வெற்றிக்கு தள்ளியிருப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் . உங்கள் படம் தடை செய்யப்பட போதும்  , நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று நீங்கள் கதறிய போதும் துடித்த கோடானு கோடி பேர்களில் ஒருவனாக இருந்தாலும் இன்று  உணர்ச்சி கொந்தளிப்பு அடங்கி  பிரச்சனையின் சூடு தணிந்த பிறகு உங்கள் பக்கம் இருக்கும் தவறுகளையும்  சுட்டிக் காட்டுவது ஒரு ரசிகனாக மட்டுமல்லாமல் சமூகத்தில்  ஒருவனாக ஒவ்வொருவரது  கடமை என்றே நினைக்கிறேன்  . அதனால் தான் முன்பே யோசித்திருந்தாலும் தமிழகத்தில் படம் வெளிவந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன பிறகு இந்த கடிதத்தை எழுதுகிறேன் . " அடுத்த  நொடி ஒழித்து வைத்திருக்கும் ஆச்சர்யம் தான் வாழ்க்கை " என்று நீங்கள் அன்பே சிவம் படத்தில் சொன்னது போல உங்களின் விஸ்வரூப பயணம் ஆரம்பத்திலிருந்தே உங்களை ஆச்சர்யத்திற்க்கும்  , அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி வந்திருந்தாலும் " தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்ற வாக்கினை நீங்கள்  நினைவு கொள்வீர்கள் என நம்புகிறேன் . அந்த நம்பிக்கையில் சில கேள்விகளை  உங்கள் முன் வைக்கிறேன்...

தனியார் தொலைக்காட்சிகளையும் , கேபிள் டிவி  யையும் எதிர்த்து திரையுலகமே திரண்ட போது  அது காலத்தின் கட்டாயம் என்று நீங்கள் குரல் கொடுத்தீர்கள் , அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு . இப்பொழுதும் டி.டி.எச்  சில் படத்தை வெளியுடுவதன் மூலம் தயாரிப்பளர்களுக்கு புது வருவாய்க்கான வாசலை திறந்து வைத்திருக்கிறீர்கள் . இதுவும் விஞ்ஞான வளர்ச்சி தான் என்றாலும் இத்தனை நாட்கள் உங்களை தூக்கிப் பிடித்த விநியோகஸ்தர்களையும் , திரையரங்கு உரிமையாளர்களையும் தடாலடியாக தூக்கியடித்து விட்டு உடனடி முடிவு எடுத்ததும்  , ஒரு தயாரிப்பாளராக  உங்கள பொருளை விற்கும் முழு உரிமை உங்களுக்கு இருந்தாலும் இத்தனை காலம் உங்கள் வியாபாரத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களின் எண்ணங்களை கருத்தில் கொள்ளாமல் உங்களின் சுயலாபத்தில் மட்டுமே கவனமாய் இருந்ததும்  நியாயம் தானா ?  ...

உங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் தூரமில்லை என்றாலும் முழு படமும் சொன்ன தேதியில் ரிலீசாகாமல் தடை செய்யப்பட்டதற்கு  முழுக்காரணம் உங்களை தவிர யாரிருக்க முடியும் ? சென்சார் மூலம் தணிக்கை செய்யப்பட விஸ்வரூபம்  படத்தை இஸ்லாமிய அமைப்பினருக்கு போட்டுக் காட்டியதன் மூலம்  நீங்களே வரலாறு காணாத ஒரு வழக்கத்திற்கு முன்னுதாரணம் ஆகி விட்டர்கள் . இதுவே உங்களுக்கு கிடைத்த முதல் அடி . இதே போல தசாவதாரம் படத்தை இந்து அமைப்பினருக்கும் , உன்னைப் போல் ஒருவன் படத்தை இஸ்லாமிய அமைப்பினருக்கும் நீங்கள் போட்டுக் காட்டினீர்களா ? இல்லாத பொழுது இந்த தடவை மட்டும் ஏனிந்த  மாற்றம் ? படத்தை முன்கூட்டியே போட்டு காட்டுவதற்குறிய  கட்டாயத்திற்கு  நீங்கள் உள்ளானீர்கள் என்று வைத்துக் கொண்டாலும் படத்தை பார்த்து விட்டு  இஸ்லாமிய சகோதரர்கள் எனக்கு பிரியாணி தருவார்கள் , நான் என்றுமே இஸ்லாமிய அனுதாபி , படத்தை பார்க்கும்  ஒவ்வொரு முஸ்லிமும் பெருமைப்படுவார்கள் என்றெல்லாம்  அறிக்கைகள் விட்டு விட்டு படம் பார்க்கும் ஒவ்வொரு முஸ்லீமையும் தர்ம சங்கடத்திற்கு  உள்ளாகியுள்ளது தான் உங்களின் நேர்மையா ? . இந்த படத்தின்  ஹீரோவே ஒரு முஸ்லிம் தானே என்றெல்லாம் சாக்கு சொல்வது ஒருவனை  பலமாக தாக்கி விட்டு உன் இனத்தவர்களை வைத்து தானே உன்னை அடித்தேன் என்று சொல்வது போல இல்லையா ? ...

நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக  இருக்கலாம் . அது உங்களின் தனிப்பட்ட விருப்பம் ஆனால் பகுத்தறிவாளன் என்ற போர்வையில் பல  தடவை இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்யும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது ? அன்பே சிவம் படத்தில் சிவ பக்தனை வில்லனாகாவும் , உங்களை போன்ற  நாத்திகனை நல்லவனாகவும் சித்தரித்தீர்கள் .  மதம் , கடவுள் இரண்டுமே ஒருவனை நல்வழியில் கொண்டு செல்வதற்கான விஷயங்கள் . இதை பின்பற்றுபவர்கள் சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டு மொத்தமாக இரண்டையும் ஒதுக்குவது மடமை . ஒரு பேச்சுக்கே எடுத்துக் கொண்டாலும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் அனைவரும் நல்லவர்களா ?  தசாவதாரம் படத்தில் கற்பனை என்ற பெயரில்  சைவ , வைணவ சண்டையை நேரில் பார்த்தது போல திரித்துக் காட்டினீர்கள். இன்றும் சிதம்பரம் சிவன் கோவிலில் பெருமாளுக்கு சிலை இருக்கிறது . ஆனால் அதை அதை கடலில் தூக்கிப் போட்டதாக கதை விட்டீர்கள் . பெரும்பாலானோரால் வணங்கப்படும் பெருமாளை  கழிவறைக்குள் தூக்கிப் போனீர்கள் . மன் மதன் அம்பு படத்தில் நல்ல நேரம் பிறக்கும் போது சர்ச் பெல்லை ஒலிக்க விட்டும் , தீய வழியில் செல்ல முடிவெடுக்கும் போது  காவி ஜிப்பாவை தொட்டுக் காட்டுவதும் தான் உங்களின் உண்மையான மதசார்பின்மையா ?

விஸ்வரூபம் படத்தில் பிராமணப் பெண்ணை அறிவாளியாகவும் , அதே சமயம் ஒழுக்கமில்லாதவளாகவும் காட்டுகுறீர்கள் . இவையிரண்டும் என்ன அந்த சாதிக்கு மட்டும் சொந்தமானவைகளா ? படத்திற்கு சம்பந்தமில்லாமல் பாடலுக்கு நடுவில் பாப்பாத்தியம்மாளை சிக்கன் சாப்பிட சொல்கிறீர்கள் . இதிலென்ன என் வீட்டிலேயே நாங்கள் எல்லா எழவையும் சாப்பிடுவோமே என்று நீங்கள் சாக்கு சொல்லலாம் . உங்களின் அடுத்த படத்தில் வீட்டிற்குள் நடக்கும் எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்ட உங்களுக்கு தைரியம் இருக்கிறதா ? பிறப்பால் பிராமணரான நீங்கள் தமிழகத்தில் எங்கே தன்னை ஒதுக்கி விடுவார்களோ என்ற பயத்திலும் , சில பகுத்தறிவுவாதிகளை குஷிப்படுத்தவும் இது போன்ற காட்சிகளை திணித்து  கமல் - "நிஜ" நடிகன் என்பதை நிரூபிக்கிறீர்கள் . ரெட் ஓன் , லைவ் எடிட்டிங் , ஆரோ சவுண்ட் என்று உங்கள்  படங்களில் தொழில் நுட்ப புதுமைகளை புகுத்தும் நீங்கள் குறிப்பிட்ட சாதியை  மேலே பிடித்தும் , குறப்பிட்ட சாதி , மதங்களை கேலி செய்தும் உண்மையான பகுத்தறிவாளியாக இல்லாமல் பழமைவா( வியா ) தியாக இருக்கிறீர்களே ஏன் ? நான் ஒரு வியாபாரி என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் உங்களின் பகுத்தறிவாள பேச்சை பேட்டிகளோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் படங்களிலும் புகுத்துவது தான் வியாபாரத்தின் அழகா ? அல்லது தந்திரமா ? ...

உங்களுக்கு பிரச்சனை என்ற போது  பகுத்து ஆராய்ந்து கொண்டிருக்காமல் ஓடி  வந்தவர்கள் எல்லாம் உங்களை வியாபாரியாகவோ அலல்து பகுத்தறிவாளனாகவோ பார்க்காமல் நல்ல கலைஞனாக மட்டுமே பார்த்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் . உங்களுக்காக திரையுலகில் இருந்து முதலில் குரல் கொடுத்த உங்களின் நண்பர் ரஜினிகாந்த் ஒரு பழுத்த ஆன்மீகவாதி என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை . அவர் படங்களில் இது போல ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய காட்சிகளை சுட்டிக்காட்ட முடியுமா ? பாபா படத்தில் அவர் புகை பிடிப்பதற்கு எதிர்ப்பு வந்ததற்கு பிறகு இன்று வரை அவர் திரையில் அதை தவிர்த்து வருவதே  அவரின் பெருந்தன்மைக்கு ஒரு சான்று . ஆனால் நீங்களோ விஸ்வரூபம் 2 வெளிவரும் போது பிரச்சனை ஏற்பட்டால் நாட்டை விட்ட சென்று விடுவேன் என எமோஷனல் ப்ளாக்மெயில் செய்கிறீர்கள் . நான் உங்களின் ரசிகனாக இருந்தாலும் உண்மைகளை மறைக்க முடியுமா ?...

நான் நிச்சயம் இந்த கேள்விகளின் மூலம்  உங்களின் கடவுள் மறுப்பு கொள்கையோ, முற்போக்கு எண்ணங்களையோ மாற்றிக்கொள்ள சொல்லவில்லை , அது என் நோக்கமுமில்லை . ஆனால் உண்மையான பகுத்தறிவு  என்பது வெறும் கடவுளை மறுப்பதும் , கடவுள் நம்பிக்கையுள்ளவர்களை கேலி செய்வதும் மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள் . ஹிந்துக்களின் சகிப்புத்தன்மையை மட்டுமல்ல எந்த மதத்தினரின் சகிப்புத்தன்மையையும் சுரண்டிப்பார்த்துக் கொண்டிருப்பதை கொஞ்சம் நிறுத்துங்கள் . உங்களின் சொந்த கருத்துக்களை புகுத்தாமல் உங்களால் நல்ல சினிமா எடுக்க முடியாதா ? சாதி , மதங்களை தாண்டி எங்கேயும் எப்போதும் , வழக்கு எண் 18/9 போன்ற சமூக அக்கறையுள்ள படங்கள் வரவில்லையா ?  கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டுமென்று முழுமையாக நம்பும் அதே வேளையில் உங்களை போன்ற சிறந்த கலைஞனுக்கு சமூக அக்கறையும் வேண்டுமென்று தான் எல்லோரும் நினைக்கிறோம் ...

எனக்குஅரசியல் தெரியாது என்று சொல்லும் நீங்கள் " வால்மார்ட் அனுமார் வாலில் வாய்த்த தீ போல சிறு வணிகத்தை அழித்துவிடும் " என்று சொன்ன ஒரு மாதத்திலேயே அதற்கு காரணமான ஒருவரை மறைமுகமாக " வேட்டி கட்டிய தமிழன் தான் அடுத்த பிரதமர் ஆக வேண்டும் " என்று சொன்னதில் எந்த அரசியலும் இல்லை என்று நம்ப சொல்கிறீர்களா ? ஏற்கனவே பெண்களுக்கான 33 சதவிகித ஒதுக்கீடு ஏட்டளவில் மட்டுமே இருக்கும் போது உங்களின் பேச்சு பெண்ணுரிமைக்கு எதிரானதாக இருக்கிறது ...

இறந்து பல வருடங்கள் ஆன பிறகும் எம்.ஜி.ஆர் , சிவாஜி போன்றோரை நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கு காரணம் திரையிலும் அவர்கள் காட்டிய சமூக அக்கறையே என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது . சினிமாவில் சம்பாத்தித்ததை சினிமாவிலேயே போடும் தையிரியம் உள்ள கலைமகன் கமல் நீங்கள் நிச்சயம் வெறும் பணத்திற்காக மட்டும் படம் எடுக்க மாட்டீர்கள் என்பது உங்களின் உண்மையான ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே . அதே நேரம் படங்களின் வாயிலாக மற்றவரின் மனங்களை புண்படுத்தும் செயலை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் உண்மையில் நீங்கள் நாட்டை விட்டு செல்கிறீர்களோ இல்லையோ மக்கள் மனதை விட்டு சென்று விடுவீர்கள் என்ற ஆதங்கத்திலும் , இணையத்தில் உங்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நீங்கள் நன்றி சொன்னவர்கள் பட்டியலில் நானுமிருக்கிறேன்  என்கிற உரிமையிலும்  , ஒரு நாள் இல்லை ஒரு நாள் இதை படிக்கிறீர்களோ இல்லையோ உங்களின் அடுத்த முயற்சிகளில் " அனுபவமே  நல்ல ஆசான் " என்னும் சொல்லிற்க்கேற்ப  விஸ்வரூப அனுபவம் தந்த பாடங்களை உங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வீர்கள் என்கிற நம்பிக்கையுடனும் இந்த கடிதத்தை சமர்ப்பிக்கிறேன் ...

இப்படிக்கு ,
உங்கள் ரசிகர்களில் ஒருவன் ...

8 February 2013

விஸ்வரூபம் - VISHWAROOPAM - விவேகம்...


ண்மையில் விஸ்வரூபம்படம் தடை செய்யப்படாமல் இருந்திருந்தால் வழக்கமான கமல் படம் போலவே சென்டர்களில் நல்ல வரவேற்புடனும் மற்ற இடங்களில் ஆவரேஜாகவும் ஓடியிருக்கும் .ஆனால்  தமிழ்நாட்டின் தடை காரணமாக உலகம் முழுவதும் படம் வசூலை குவித்திருப்பதோடு இங்கேயும் மிகப்பெரிய ஒப்பனிங் கிடைத்திருக்கிறது . இதற்கு காரணமான அனைவருக்கும் கமல் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார் ...

தமிழ் முஸ்லிம் ஆப்கான் தீவிரவாத முஸ்லிம்களால் அமெரிக்காவிற்கு ஏற்படவிருந்த பேராபத்தை தவிர்க்கிறார் என்பதே படத்தின் கரு.அமெரிக்க வாழ் கதக் நடனக்கலைஞர் விஸ்வநாத்தை ( கமல்ஹாசன் ) அணுக்கதிர் ஆராய்ச்சியில் டாக்டரேட் பட்டம் பற்ற அவர் மனைவி நிருபமா ( பூஜா ) தன்னை போலவே கணவனுக்கும்  ஏதாவது கள்ளத்தொடர்பு இருக்கிறதா என்று வேவு பார்க்கிறார் . கிணறு வெட்ட பூதமாய் கமல் முஸ்லிம் என்பதும் அவர் ஆப்கான் தீவிரவாதிகளுக்கே பயிற்சி கொடுத்தவர் என்பதும் தெரிய வருகிறது . இதற்கான முடிச்சுகள் ஒவ்வொன்றையும் விலாவாரியாக விஸ்வரூபம் எடுத்து சொல்லியிருக்கிறார் கமல் ...


தயாரிப்பு , இயக்கம் என்று எந்த சுமைகளையும் காட்டிக்கொள்ளாமல் கமல் கதக் கலைஞராக பெண்ணியல் தன்மையோடு நடிப்பில் பிண்ணியெடுத்திருக்கிறார் . அழுது கொண்டே அடிவாங்கும் போதும் , ஆக்ரோஷமாய் அவர்களை பின்னியெடுக்கும் போதும் அட்டகாச ஆக்சன் கமல் . கதக் கலைஞராகவும் , தீவிரவாதியாகவும் நம்மை கவர்ந்த அளவிற்கு நார்மல் கமல் படத்தில் கவரவில்லை . " ஆ ... ஆ " என்று அழுவதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் இருந்தும் கமல் அடக்கியே வாசித்திருப்பது ஆறுதல் ... 

படத்தின் சர்ப்ரைஸ் பேக்கேஜ் பூஜா . அழகாக இருப்பதோடல்லாமல் திறந்த மனதுடன் போல்டாக நடித்திருக்கிறார் . பொதுவாக் கமல் படங்களில் காட்டப்படும் லூசு பிராமணப் பெண்ணாக இல்லாமல் கணவனுக்கு  துரோகம் ( மனசால மட்டும் தானாம் ) செய்யும் அறிவாளி அறிவியல் பெண்ணாக வருகிறார் பூஜா . சுய லாபத்திற்காக கல்யாணம் செய்து கொண்டு , அவருக்கு துரோகம் செய்யும் பிராமணப் பெண்ணாக ஹீரோயினை காட்டும் கமல் , அது போதாதென்று அவள் அசைவம் விரும்பி சாபிடுவதாகவும் சொல்கிறார் . கதைக்கு எந்த விதத்தில் இது தேவை என்பது கமலுக்கே வெளிச்சம் . பிறப்பால் பிராமணராக இருப்பதால் அவர்களை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்கிற அலட்சிய போக்கு கமலிடம் அதிகரித்து வருகிறது ... 

                    
ஆண்ட்ரியா படத்தில் இருக்கிறார் . பூஜாவுடன் இவர் பேசும் சில சீன்கள் க்யூட் . கமலுக்கு சரி சமமான ரோலில் ராகுல் போஸ் தமிழுக்கு நல்ல அறிமுகம் . கண் உருட்டலிலும் , தொண்டை கரகரப்பிலும் அவர் காட்டும் வில்லத்தனம் வசீகரம் . நாசர் , சேகர் கபூர் போன்றோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள் ... 

" உன்னை காணாமல் " , " விஸ்வரூபம் " போன்ற சிறப்பான பாடல்களோடு நின்று விடாமல் பின்னணி இசையிலும் பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள் சங்கர் - எசான் - லாய் . வைரமுத்துவின்  " யாரென்று தெரிகிறதா " பாடலின் வரிகள் படத்தையும் தாண்டி  கமலின் நடைமுறை சிக்கலகளுக்கும் அருமையாய் பொருந்துகிறது . அமெரிக்க தெருக்களிலும் , ஆப்கான் குகைகளுக்குள்ளும் சானு வர்கீசின் கேமரா புகுந்து விளையாடியிருக்கிறது . ஆப்கான் மலைகளை நம் கண் முன் கொண்டு வருகிறார் கலை இயக்குனர் லால்குடி இளையராஜா . இவற்றோடு சேர்த்து எடிட்டிங் , கிராபிக்ஸ் என்று எல்லா டெக்னிக்கல் விஷயங்களும் உலகத்தரம் . மொத்தத்தில் கமலுடன் சேர்த்து எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்கள் ... 

தீவிரவாதி படம் என்றவுடன் ஒண்டிக்கு ஒண்டி சண்டை , தேசப்பற்று வசனங்கள் என்றெல்லாம் வழியாமல் மிக நேர்த்தியாக தீவிரவாதிகள் பற்றிய டீட்டைளிங்கில் அசத்தியிருக்கிறார் இயக்குனர் கமல் . டாக்டருக்கு படிக்க ஆசைப்படும் மகனை போருக்கு தயார்படுத்தும் தந்தை , மனைவிக்கு வைத்தியம் பார்க்க வந்த டாக்டரையே முக்காடு போட  சொல்லும் மத வெறி பிடித்த கணவன்  , முதல் நாள் ஊஞ்சலில் சிறு பிள்ளை போல ஆடிவிட்டு மறு நாள் அமெரிக்க டாங்கியை அழிக்கும் தற்கொலை படை இளைஞன் , ஒருவனை தூக்கிலிட சொல்லி விட்டு புறாவுக்கு உணவு போடும் வில்லன் , மகன் தூக்கிலிடப்படுவதை பார்த்து கதறும் தாய் , கலவர பூமியிலும் ஒடியாடி விளையாடும்  சிறுவர்கள் என்று ஆப்கான் விவகாரங்கள் எல்லாமே களத்திலும் , எடுக்கப்பட்ட விதத்திலும் தமிழுக்கு முற்றிலும் புதிது ...


ஆப்கானை விட்டு கதை மறுபடியும் அமெரிக்காவிற்கு வந்த பிறகு கொஞ்சம் தடுமாறுகிறது . சீசியம் மூலம் வெடிகுண்டு தயாரிப்பது , அதை தயாரிப்பதன் மூலம் தங்களையே கொஞ்சம் கொஞ்சமாய் அழித்திக்கொள்ளும் ஜிகாதிகள் , புறாக்கள் மூலம் போலீசை திசை திருப்பி விட்டு வேறு இடத்தில் குண்டு வைப்பது போன்றவைகளும் புதிது தான் என்றாலும் அவற்றை சொன்ன விதத்தில் கமல் வேகம் காட்ட தவறிவிட்டார் . இடைவேளைக்கு பிறகு எல்லா சீன்களும் சப் டைட்டிலிலேயே ஓடுவதும் , கமல் கதை சொல்வதற்கு கையாண்ட விதமும் , படத்தை ரசிப்பதற்கு அறிவியல்  ஞானமும் வேண்டும் என்கிற அளவிற்கு விஸ்வரூபம் கொஞ்சம் குழப்பத்தை தருவதையும் மறுப்பதற்கில்லை ...

ஒரு போஸ்டரை மட்டும் காட்டி விட்டு  தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொள்ளும் கமல் , அமரிக்காவில் சர்வ சாதாரணமாக உலா வரும் ஆப்கான் தீவிரவாதிகள் இப்படி லாஜிக் குளறுபடிகளும் படத்தில் உண்டு ... கமல் ஹாலிவுட்டுக்குள் நுழைவதால் அமெரிக்க ஆதரவு படமெடுக்கிறார் என்று சொல்லப்பட்டாலும் ஒரு சீனில் அமரிக்கர்கள் பெண்கள்  , குழந்தைகளை தாக்க மாட்டார்கள் என்று உமர் சொன்ன அடுத்த செகண்ட் பெரிய குண்டு வீட்டை தாக்கி அனைவரும் பலியாவது கமலின் நடுநிலைக்கு சான்று ...

அதே நேரம் கதை நடப்பது ஆப்கானில் , ஆப்கான் தீவிரவாதிகள் தண்டனையை நிறைவேற்றும் போது குர்ரான் படிப்பது , ஜிஹாத் 
( புனிதப்போர் ) வெற்றியடைய தங்கள் உயிரையே பணயம் வைப்பது , அடிக்கடி காட்டப்படும் தொழுகைகள் , பிடிபட்ட அமெரிக்க பணயக்கைதியை கழுத்தை அறுத்து கொல்வது போன்றவற்றிற்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றன என்றோ , ஹீரோவே ஒரு முஸ்லிம் தானே என்றோ எவ்வளவு  காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒரு முஸ்லிம் இடத்திலிருந்து படத்தை பார்க்கும் போது நிச்சயம் சிறிதாவது உறுத்தத்தான் செய்யும் என்பது என் எண்ணம் . சர்ச்சைகளையெல்லாம் தாண்டி படத்தை எடுத்த விதத்திலும் , அதை மார்க்கெட் செய்த விதத்திலும் , விஸ்வரூபம் பார்ட் 2 விற்கு எதிர்பார்ப் பை ஏற்ப்படுத்திய  விதத்திலும் நிறையவே விவேகம் காட்டியிருக்கிறார் எழுதி , இயக்கி , தயாரித்திருக்கும் கமல்ஹாசன் ... 

ஸ்கோர் கார்ட் : 47 


2 February 2013

கடல் - கலங்கல் ...


வணிக ரீதியான வெற்றி  , தோல்விகளை தாண்டி இந்தியாவே உற்று நோக்கும் முக்கியமான இயக்குனர்களுள் ஒருவர் மணிரத்னம் . கடல் மூலம் தனக்கு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் கை கோர்த்திருக்கிறார் . ராவணனை தொடர்ந்து மூன்று வருட காத்திருப்பில் கடல் மேல் பலன் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம் ...

நல் வழியில் செலும் தேவ ஊழியர் சாம் ( அரவிந்த்சாமி )  தீய வழியில் நம்பிக்கை கொண்ட தேவ ஊழியர் பெர்மேன்சன் ( அர்ஜுன் ) இவர்களுக்கிடையேயான முன் விரோதம் ,  விபச்சார தாயின் மறைவிற்குப் அனாதையான தாமஸ் ( கவுதம் கார்த்திக் ) , மன வளர்ச்சி குன்றிய பியா
( துளசி ) இவர்களின் காதல் இரண்டிற்குமிடையே  பிண்ணப்பட்ட  கதை கடலில் தத்தளிக்கிறது ...

கவுதம் கார்த்திக் இளைமையான தோற்றத்தால் கதைக்கு பொருந்துகிறார் . ஆக்ரோஷம் வரும் அளவிற்கு காதல் வரவில்லை . நல்ல படம் கிடைத்தால் மேலே வருவார் என்று நம்பலாம் ...


துளசியும் , அவர் கதாபாத்திரமும் படத்திற்கு மிகப்பெரிய சறுக்கல் . கர்ர்த்திக் கேரக்டருக்கு சொல்லப்பட்ட டீடைலிங்க் இவருக்கு சுத்தமாக இல்லை . மன வளர்ச்சி குன்றியவர் என்பதை அறிமுகத்தின் போதே விவரித்திருந்தால் ஒரு வேலை கொஞ்சமாவது டேமேஜை தவிர்த்திருக்கலாம் . 15 வயது என்கிறார்கள் , க்ளோஸ் அப் காட்சிகளில் காத்திக்கின் அக்கா போல இருக்கிறார் . இவர் அப்பா என்று அர்ஜுனிடம் உருகும் போது " ப்பா " என்று ந.கொ .ப.கா காமெடி வசனம் நியாபகம் வருமளவிற்கு பார்ட்டி அவ்வளவு வீக். " அடியே " பாடலில் இவரின் இடுப்பைக்  காட்டி வேறு பயமுறுத்துகிறார்கள் ...

படத்தின் ஹீரோ என்று அரவிந்தசாமியை சொல்லலாம் . உடல் இளைத்து இளைஞனாக வரும் முதல் காட்சியிலிருந்து , நடுத்தர வயது பாதிரியாராக
" அன்பின் வாசலே " என்று பாடிக்கொண்டு போகும் க்ளைமாக்ஸ் வரை மனதில் நிற்கிறார் . ஊரே இவரை அடித்துத் துரத்தும் போது நடிப்பால் பரிதாபப்பட வைக்கிறார் ...



முன்னவர் போல இளமை தோற்றத்திலும் சரி , கதாபாத்திரத்திலும் சரி அர்ஜுன் நம்மை பெரிதாக கவரவில்லை . க்ளைமாக்ஸ் காட்சியில் அர்ஜுன் சைக்கோ போல நடந்து கொள்வது அபத்தத்தின் உச்சம் . குரு சோமசுந்தரம் ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . சிறு வயது தாமசாக வரும் பையன் , பொன்வண்ணன் போன்றோரும் கவனிக்க வைக்கிறார்கள் ...

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் " ஏலே கீச்சான் " , " நெஞ்சுக்குள்ளே  " என்று பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டாலும் கடல் பின்னணிக்கு ஏற்றபடி பாடல்கள் பொருந்தவில்லை . படம் பெரும்பாலும் அமைதியாகவே நகர்வதால் பின்னணி இசைக்கும் அவர் மெனக்கெடவில்லை. ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு ரணகளம் . படம் முடியும் போது  வரும் " அன்பின் வாசலே " பாடலில் வரும் லைட்டிங் சூப்பர் . கலை இயக்குனர் சசிதர் அடப்பா தன்  உழைப்பால் அடடா போட வைக்கிறார்...

பாதிரியார் என்றால் பாவ மன்னிப்பு வழங்குவார் , பிரச்சாரம் செய்வார் என்கிற ஸ்டீரியோ டைப்பாக இல்லாமல் அவர்களும் செய்யும் தவறுகள் , ஊர் மக்கள் அவர்களை நடத்தும்  விதம் , அவர்கள் படும் சங்கடங்கள் இவற்றையெல்லாம் துல்லியமாக விளக்கும் காட்சிகளில் எழுத்தாளர் ஜெயமோகன் மிளிர்கிறார். தேவ ஊழியம் செய்ய வந்துவிட்டு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் ப்ரதர் அர்ஜுன் , மழையை பொருட்படுத்தாமல் சிறுவனை வெளியே துரத்தி விட்டு அவள் அம்மாவுடன் சல்லாபம் செய்யப்போகும் பொன்வண்ணன் , அம்மா இறந்ததை புரிந்து கொள்ளாமல் அவள் மார்பின் மேல் தூங்கும் சிறுவன், இறந்தவளின் காலை சவப்பெட்டிக்குள் நுழைக்க முடியாமல் அதை வெட்டி எடுக்கும் ஒருவன் இப்படி சில மிரள வைக்கும்  முதல் இருபது நிமிட காட்சிகளால் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குனர் மணிரத்னம் ...


க்யூட்டான காதல் காட்சிகளுக்கு பெயர்  போன மணி சிறு சிறு கதாபாத்திரங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கூட கார்த்திக் - துளசி காதலுக்கு தராமல்  போனது பெருத்த ஏமாற்றம் . கதை வசனம் , திரைக்கதை என எல்லாவற்றிலும் அவர் ஜெயமோகனை மட்டுமே மலையளவு நம்பியதால் மணி டச்சிங் டோட்டலி மிஸ்ஸிங் . அடுத்த படங்களில் சுதாரித்துக் கொள்வார் என்று நம்பலாம் .ஹீரோ அரவிந்த்சாமி யின் வளர்ப்பு பையன் கார்த்திக் , வில்லன் அர்ஜுனனின்  மகள் துளசி இருவரின் காதல் என்கிற வழக்கமான பாணியில் பயணித்திருந்தால் கூட ரசித்திருக்கலாமோ என்னமோ ஆனால் கடல் திரைக்கதையில் அங்குமிங்கும் அலைபாய்ந்து நம்மை கலங்கடிக்கிறது ...

ஸ்கோர் கார்ட் : 39


29 January 2013

விஸ்வரூப கேள்வி - பதில் ...




எனது முந்தைய பதிவில்  விஸ்வரூபம் படத்திற்கு எதிராக எழுந்த ஆர்ப்பாட்டத்தையும் , அதை தொடர்ந்து விதிக்கப்பட்ட தடையையும் குறித்து எழுதியிருந்தேன் . அந்த பதிவில் நான் கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்ததை எதிர்த்து ஒருவர் பின்னூட்டம் இட்டிருந்தார் . அவர் கேட்டிருந்த கேள்விகளும்  , அதற்கான எனது பதில்களும் இதோ :

 Anonymous said...
!) ஒருவர் எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் அது அவருடைய 
 கருத்து சுதந்திரம் என்று வாதிடும் நியாயவான்களே டாம்999
 படத்தில் முல்லைபெரியாறு ஆணை உடைவதாக 
கற்ப்பனையாகத்தனே ஒருவன் சித்தரித்தான்.அது அவனுடைய
கருத்து சுதந்திரம் ஆனால் அதனை கண்டு கொந்தளித்தவர்களில் 
நானும் ஒருவன்.அப்போது எழுந்த தமிழனின் கோபம் 
இதுபோன்றுதான் கொச்சை படுத்தப்பட்டதா?

2) குஜராத் கலவரத்தில் நடந்த கொடுமைகளை மையபடுத்தி  
எடுக்கப்பட்ட பர்ஜானியா,பிராக் போன்ற படங்கள் சமூக 
ஒற்றுமையை சீர்குலைத்துவிடும் என்று தடைசெய்யபட்டதே 
அப்போது கருத்துசுதந்திரம் பற்றி பேச யாரும் 
முன்வரவில்லையே? 

3) கமல்ஹாசனின் மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் நல்லவர்களே 
இதே கமல் நாளை பகவகீதையை தீவிரவாத நூலாகவும்,கோவில்கள் 
ஆசிரமங்களை தீவிரவாதபயிற்சி முகாம்களாகவும்,ஹிந்துக்களை 
தீவிரவாதிகளாகவும் சித்தரித்து படம் எடுத்தால் அதனை கண்டித்து 
நிச்சயம் பெரும்பாலான ஹிந்து சகோதரர்கள் வீதிக்கு 
வருவார்கள்.அவர்களை கண்டித்து ஸ்டேடஸ் போட 
தைரியம் இருக்கிறதா?


4) நம்முடைய கண்களுக்கு வேண்டுமானால் இலங்கையில் 
நடந்தது இனப்படுகொலைகளாக தெரியலாம்.ஆனால் 
அந்நாட்டுமக்களின் பார்வையில் அது  ஒரு தீவிரவாதத்திற்கு 
எதிரான அரசின் சுதந்திரப்போர்.
அதில் உயிரிழந்த அந்நாட்டு ராணுவத்தினர் தியாகிகள்.
கமல்ஹாசன் ஒருவேளை சிங்கள படையின் தளபதியாக 
பொறுப்பேற்று ஈழப்புலிகளை வேட்டையாடி இலங்கையை 
ஆபத்திலிருந்து காப்பாற்றுவதுபோல் படமெடுத்தால் 
அதனை இருகரமேந்தி வரவேற்க நீங்கள் தயாரா?

5) சர்வதேச அரங்கில் இந்தியாவை தலைகுனியவைத்த 
2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் நடந்த சம்பங்கள் சினிமாவை மிஞ்சும் 
அளவிற்கு சுவாரஸ்யம் உள்ளவை.ஆனால் அதில் தொடர்புடைய 
அரசியல் தலைவர்களை மையபடுத்தி ஒரு படம் எடுக்க 
எந்த சினிமாகாரனிற்க்காவது தைரியம் உள்ளதா?

6) உசாமா இரட்டை கோபுரத்தை தகர்த்தார் என்று சொல்லி 
லட்சகணக்கான அப்பாவி மக்களின் மீது அமெரிக்கா வீசிய 
குண்டில் தன் குடும்பத்தை இழந்த அப்பாவி ஆப்கான் இளைஞன் 
அமெரிக்க ராணுவத்தை பழிக்குபழி வாங்குவதாக படம் எடுத்து 
அதில் அப்கான் இளைஞனாக நடிக்க கமல் மட்டுமல்ல எந்த 
கலைகூத்தாடிக்காவது தைரியம் இருக்கா?

7) வெறும் 20 பேர் மிரட்டலுக்கு அரசு பணிந்து படத்தை தடைசெய்வதா?
என்று சிறுபிள்ளைதனமாக ஒருவர் கேள்விகேட்க்கிறார்.சுமார் 
80 லட்சம் முஸ்லீம் மக்கள் வாழும் தமிழகத்தில் அவர்கள் நடத்தும் 
போராட்டம் என்பது இவருக்கு இவ்வளவு அற்பமாக தெரிகிறது.
முடிவுகளை எடுப்பதில் மிகவும் உறுதியானவர் முதல்வர் ஜே 
என்பது சிறுபிள்ளைக்குகூட தெரியும்.அப்படி பட்டவர் இந்த 
விஷயத்தில் இப்படி ஒரு தடை முடிவை எடுத்திருக்கும்போதே 
அதன் தாக்கம் என்ன என்பது இவருக்கு தெரியவில்லையா?

ஒருவரின் கலைசுதந்திரம் காக்கப்படவேண்டும் என்றுபேச 
ஒருவேளை மெய்ஞானம் தேவைப்படலாம். ஆனால் 
ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனஉணர்வுகளை 
புரிந்து கொள்ள கொஞ்சம் மனிதாபிமானம் போதும்....


பெயரில்லா அல்லது பெயர் சொல்ல விரும்பாத நண்பரே உங்கள் கேள்விகளிலும் ஒரு நியாயம் இருக்கிறது , அதற்கு நான் தருகின்ற பதில்களை நடுநிலையோடு கேட்பீர்கள் என்கிற நம்பிக்கையில் சொல்கிறேன்.

1. நீங்கள் குறிப்பிட்ட டேம் 999 போன்ற படங்கள் இந்தியாவில் உள்ள இரண்டு மாநிலங்களுக்கிடையே நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையையோ அல்லது நடந்து முடிந்த கலவரங்களை  மேலும் ஊதி  பெரிதாக்குவது  போலவோ நீதிமன்றத்திற்கு பட்டதால் தடையை நீக்கவில்லை , ஆனால் தமிழகத்தில் இந்து - முஸ்லிம் பிரச்னை நடந்து கொண்டிருக்கிறதா ? அல்லது இந்த படம் அதனை ஊக்குவிக்கறதா ? சொல்லப்போனால் இது போன்ற எதிர்ப்புகள் தான் பிரிவினையை தூண்ட காரணமாய் அமைந்துவிடுகின்றன . மேலும் டா வின்சி கோட் , ஒரே ஒரு கிராமத்திலே போன்ற படங்களை தடை செய்ய முடியாது என்று கோர்டே உத்தரவிட்டதோடு , ஒரு சிலரின் சொந்த விருப்பு , வெறுப்புக்காக சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தணிக்கை செய்யப்பட படத்தை திரையிட விடாமல் தடுக்க முடியாது என்றும் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறது ...

2. இதற்கும் மேற்சொன்ன பதிலே பொருந்தும் ...

3. இந்துக்கள் கமல் படங்களை எதிர்த்திருந்தால் அன்பே சிவம் , தசாவதாரம் என்று ஒரு படமும் வந்திருக்காது . கமல் பகுத்தறிவு என்ற போர்வையில் இந்துக்களை தான் தன்  படங்களின் வாயிலாகவும் , பேட்டிகள் மூலமாகவும் தாக்கி வந்திருக்கிறார் . இந்துக்களின் சகிப்புத்தன்மையும் , மனப்பக்குவமுமே அவரை காத்து வந்திருக்கிறது . நீங்கள் சொல்வது போல ஹிந்து தீவிரவாதி (!) எவனாவது பகவத் கீதையை படித்து விட்டு கொலை செய்வது போல ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் அதை இயக்குனர்களுக்கு கொடுக்கலாம் . படத்தில் தான் காட்டிய எல்லா காட்சிகளுக்கும் உரிய ஆதாரங்களை கமல் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார் ...

4.நீங்கள் பிரச்சனையை திசை திருப்ப பார்க்கிறீர்கள் . அப்படியே  ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும் இலங்கையில் புலிகளின் ஈழ போராட்டத்துக்கு அங்குள்ள முஸ்லிம்கள் முட்டுக்கட்டையாக இருந்ததும் , அதனால் அவர்களுக்குள்ளேயும் கொலைகள் நடந்தாகவும் தான் வரலாறு சொல்கிறது ...

5. இது நல்ல கேள்வி . அப்படி ஒரு படம் வந்தால் சந்தோசம் தான் . அதே போல அரசியல்வாதிகளும் , போலீஸ்காரர்களும்  படங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினாலும் ஒரு படம் வெளியே வர முடியாது . அவர்களை அநியாத்துக்கு வில்லன்களாக மட்டும் தான் காட்டி  வருகிறார்கள் .

6. முதலில் ஆப்கான் தீவிரவாதிகள் எந்த முஸ்லீமையும் கொன்றதில்லையா ? அப்போது அங்கே செத்தவர்கள் எல்லாம் எந்த மதத்தினர் ? தலிபானுக்கு எதிராக குரல் கொடுத்ததால் கொடூரமாக சுடப்பட்ட மலிமா எந்த மதம் ? அமெரிக்கா ஆப்கானை தனியாகவா அழித்தார்கள் , அதற்கு உதவி செய்த சவூதி அரேபியாவும் , பாகிஸ்தானும்  இஸ்லாமிய நாடுகள் இல்லையா ? ஆப்கான் தீவிரவாதிகள் பற்றிய படத்தை பார்த்து விட்டு இங்குள்ள முஸ்லீம்கள் ஏன்  கோபப்பட  வேண்டும் ? அப்பொழுது அந்த தீவிரவாதத்தை அவர்கள் ஆதரிக்கிறார்களா ? இரட்டை கோபுரத்தை தகர்த்து பல உயிர்களை கொன்ற போது ஏன் அதை எதிர்க்கவில்லை ? காஷ்மீரில் இருந்து சொந்த நாட்டு மக்கள், பண்டிட்டுகள், படுகொலை செய்யப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டபோது, இப்போது நடுநிலை, ஜனநாயக உரிமை, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை என்று பேசும் ஒருசில இஸ்லாமியர்களும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அரசியல்வாதிகளும் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இந்த கேள்விகளுக்கான பதில்களை யோசிக்க ஆரம்பித்தால் உண்மை புரியும் ...

7. மனதை தொட்டு சொல்லுங்கள் எல்லா முஸ்லீம்களும் படத்தை எதிர்க்கிறார்களா ? மனுஷ்யபுத்திரன் , ஜாவேத் அக்தர் உட்பட  பல பக்குவமுள்ள முஸ்லீம்கள் இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பேசி வருவது உங்கள் காதுகளில் விழ வில்லையா ? பொது மக்களில் எவ்வளவோ முஸ்லீம்கள்  இணைய தளம் மூலம் படத்தை தடை செய்யக் கோரி எழுந்த ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து தங்களின் அதிருப்தியையும்  , கமலுக்கான தங்களின் ஆதரவையும் தெரிவித்து வருவதை நீங்கள் பார்க்கவில்லையா ? நீங்கள் சொல்வது போல தற்போதைய முதல்வர் முடிவுகளை எடுப்பதில் துணிச்சலும் , உறுதியும் உடையவர் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை . இதே முதல்வர் 2004 ஆம் ஆண்டு அதே மன உறுதியுடனும் , துணிச்சலுடனும் கொண்டு வந்த மத மாற்ற தடை சட்டத்துக்கு பிறகு ஏன் அதரவு தெரிவிக்கவில்லை ? இந்தியாவில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் மற்ற மாநிலங்களில் கூட படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது இங்கே மட்டும் தடை எனும் போதே யோசிக்க வேண்டாமா ? ...

கடைசியாக , எதை வைத்து ஒடுக்கப்பட்ட சமூகம் என சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை . அமெரிக்காவில் ரிலீசான படத்திற்காக பொது மக்களின் இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் இங்கே சென்னையையே சில நாட்கள் ஸ்தம்பிக்க வைத்ததோடு , இந்தியாவே திரும்பிப்பார்க்கும் ஒரு கலைஞனின் 100 கோடி முதலீட்டு படத்தை அவன் பிறந்த தமிழ்நாட்டிலேயே ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கும் அளவிற்கு வல்லமை படைத்தவர்கள்  ஒடுக்கப்பட்ட சமூகத்தினரா ?! . ஒரு வேளை இந்தியாவில் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டிருந்தர்கள் எந்த கால கட்டத்தில் என்று தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும் ...

ஒரு படம் ஒரு சாராருக்கு பிடிக்கவில்லையென்றால் அதை பார்க்காமல் இருப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது ஆனால் அதை யாருமே பார்க்கக் கூடாது என்று தடுப்பதற்கு உரிமை இல்லை . என் முந்தைய பதிவில் சொன்னது போல ஒரு படத்தை பார்த்து விட்டு சகோதரர்களாக பழகி வரும்  இந்து - முஸ்லீம்கள் இடையே பிரிவினை வரும் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது . தேவையற்ற ஆர்ப்பாட்டங்கள் தான் அதற்கான வாய்ப்பை கொடுக்குமே தவிர கமல் எடுத்த படமல்ல ...

உண்மையிலேயே தொடர்ந்து ஒரு சமூகத்தை தவறுதலாக சித்தரிப்பது போல படங்கள் வந்தால் அதை தணிக்கை செய்வதில் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க சொல்லி மத்திய  அரசிடம் மனு கொடுக்கலாமே ஒழிய தணிக்கை செய்யப்பட்டு ரிலீசா வதற்கு முதல் நாள் தடுப்பது என்பது நியாயமானதாக தெரியவில்லை . இந்த தடையை பார்த்து விட்டு அடுத்து ஆதி பகவன் படத்தை போட்டுக்காட்ட வேண்டுமென இந்து அமைப்புகள் மனு கொடுத்துள்ளன . இப்படி ஒவ்வொரு அமைப்பினரும் மனு கொடுக்க ஆரம்பித்தால் யாரும் படம் எடுக்க முடியாது . எனவே தயவுசெய்து சினிமாவை சினிமாவாக பாருங்கள் ...


25 January 2013

விஸ்வரூபம் ...


ன்று இந்நேரம் விஸ்வரூபம் படத்திற்கான விமர்சனத்தை எழுதிக் கொண்டிருக்க வேண்டிய நான் படம் ரிலீசாகாமல் தடை செய்யப்பட்ட விவகாரத்தை பற்றி எழுதிக்கொண்டிருப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.  விஸ்வரூபம் என்று தன் படத்திற்கு கமல்ஹாசன் எந்த நேரத்தில் பெயர் வைத்தாரோ தெரியவில்லை படம் வெளிவருவதற்கு முன்னரே எக்கச்சக்க பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து ஆட ஆரம்பித்து விட்டன  .

படம் திரையரங்குகளில் வருவதற்கு முன்னரே டி.டி.எச் இல் திரையிட கமல் வகுத்த திட்டம் திரையரங்கு உரிமையாளர்களின் குறுக்கீடுகளால் தவுடுபொடியானது . ஜனவரி 11 வரவேண்டிய படம் ஒரு வழியாக பல சமரச முயற்சிகளுக்கு பிறகு ஜனவரி  25 இல் தியேட்டர்களிலும் , பிப்ரவரி 2 இல் டி.டி.எச் இலும் ரிலீஸ் என்று முடிவு செய்யப்பட்டு தியேட்டர்களில் ஒரு வாரத்திற்கான டிக்கட்டுகளும் புக் செய்யப்பட்டுவிட்டன.  இந்த நிலையில் பிரத்தியேகமாக தங்களுக்கு காட்டப்பட்ட படத்தின் ப்ரிவியு வை பார்த்து விட்டு அது இஸ்லாமியர்களையும் , இஸ்லாமிய மதத்தையும் தவறுதலாக சித்தரிக்கிறது என்று சொல்லி படத்தின் ரிலீசை தடை செய்யக்கோரி ஒரு அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் 15 நாட்களுக்கு படத்தின் ரிலீசி ற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டதும் , அதை எதிர்த்து கமல் கொடுத்த்த மனுவை விசாரித்த நீதிபதி 26 ஆம் தேதி படத்தை பார்த்து விட்டு 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக சொல்லியிருப்பதும் யாவரும் அறிந்ததே.

கமல் மட்டுமல்லாமல் அந்த படத்தை காண ஆவலாக காத்துக் கொண்டிருந்த கோடானு கோடி  தமிழர்களும்   இதற்கான தீர்ப்பை எந்த நேரமும் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் வேளையில் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு , சென்சார் செய்யப்பட்டு , வினியோகஸ்தர்களாலும் , தியேட்டர்காரர்களாலும்  பல கோடி செலவில் வாங்கப்பட்டு , படம் பார்க்க விரும்புகிறவர்களால் புக் செய்யப்பட்டு இன்று ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படத்தை  சட்டம் ஒழுங்கு குலையும் என்கிற ஒரு காரணத்தை சொல்லி அரசு தடை செய்திருப்பது கமலை மட்டுமல்ல நல்ல சினிமாவை நேசிக்கிற ஒவ்வொருவனையும் பெரிய வேதனைக்கு உள்ளாக்கியிறுக்கிறது .

இந்த நடவடிக்கை விஸ்வரூபம்   படத்தை தடை செய்யவேண்டுமென்று ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமே திரண்டு வந்தது போல ஒரு மாயையை ஏற்படுத்துகிறது . ஏனெனில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் மலேசியா விலேயே படம் ரிலஸ் ஆகியிருப்பதொடு அனைவரின் வரவேற்ப்பையும் பெற்றிருப்பதே உண்மை  . 28 ஆம் தேதி தீர்ப்பு கமலுக்கு சாதகமாக இருந்து படம் ரிலீசானாலும் இந்த 3 நாள் விடுமுறையில் கிடைத்த ஒப்பனிங் கிடைப்பது சந்தேகமே , அதோடு மட்டுமல்லாமல் படம் வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகி விட்டதால் திருட்டு வி.சி .டி வந்து வியாபாரத்தை கெடுக்கப் போவதும் உறுதி .

இதெல்லாம் தெரிந்தும் படம் தடை செய்யப்பட்டிருப்பதை பார்க்கும் போது அதற்குண்டான நியாயமான காரணத்தை ஆராய வேண்டியதும் நம் கடமை . படம் மிலாடி நபி அன்று ரிலீஸ் ஆக இருந்ததும் , அதற்கு அடுத்த நாள் குடியரசு தினம் என்பதால் காவல் துறையின் கவனமெல்லாம் அங்கிருக்கும் என்பதாலும் , பட ரிலீசிற்க்கு  பிறகு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் காவல் துறையால் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தாமல் முடியாமல் போவதற்கு நிறைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது . அது மட்டுமல்லாமல் இஸ்லாமிய அமைப்பினர் படத்தை பார்த்து விட்டு கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பதையும்  மறுக்க முடியாது .


கமலுக்கும் , சர்ச்சைக்கும் தூரமில்லை எனவே இது கூட ஒரு பப்ளிசிட்டி ஸ்டன்ட் என்றும் , கமல் புத்தக வெளியீட்டு விழாவில் ப.சிதம்பரத்தை அடுத்த பிரதமர் என்கிற அளவிற்கு பேசிவிட்டார் அதற்கு கிடைத்த பரிசு தான் இது எனவும் சிலர் கூறுகிறார்கள் . தன்  வளர்ச்சியில் இத்தனை  நாள் கூட இருந்த விநியோகஸ்தர்களையும் , தியேட்டர் உரிமையாளர்களையும் தன் சுய லாபத்துக்காக ஒரு நொடியில் கமல் மறந்து விட்டார் என்கிற குற்றச்சாட்டும் அவர் மேல் வலுவாக இருப்பதால் திரையுலகில் நிறைய பேர் இதை கண்டுகொள்ளவில்லை என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்  .

ரோஜா விற்கு பிறகு கடந்த இருபது ஆண்டு காலமாகவே இஸ்லாமியர்கள் படங்களில் வில்லன்களாக சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள் , அதனால் ஏற்பட்ட அதிருப்திகளின் வெளிப்பாடே இந்த எதிர்ப்புக்கு காரணம் என்பது ஒரு சாரரின் வாதம்  . இது போல எவ்வளவோ காரணங்களை அலசினாலும்    ஒரு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதை நிர்ணயம் செய்ய வேண்டிய   சென்சார் போர்டே படத்தை பார்த்து விட்டு  யு  ஏ சான்றிதழ் கொடுத்த பிறகு இது போன்ற  தடை தேவை தானா என்பது நம் கண் முன் நிற்கும் இமாலய கேள்வி .

படத்தை பார்க்காததால் அது எந்த வகையில் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவது போல அமைந்துள்ளது என்பதை பற்றி கருத்து கூற முடியாவிட்டாலும் கமல் அதை இஸ்லாமிய அமைப்பினருக்கு ரிலீசுக்கு முன்னரே போட்டுக்காட்டியதையும் , தடை செய்யக்கோரி சில அமைப்பினர்  மட்டுமே முனைப்பு காட்டி வருவதையும்  வைத்து பார்க்கும் போது படம் நிச்சயம் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக இருக்காது என்கிற நம்பிக்கை இருக்கிறது .

அதோடு மட்டுமல்லாமல் ஒரு சினிமாவை பார்த்து விட்டுத்தான் ஒருவன்  சமூகத்தின் மீதான பார்வையை வகுத்துக்கொள்கிறான் என்று சொல்ல முடியாது . பொழுதுபோக்கையும் மீறி சினிமாவை ரசிக்கலாம் , ஆராதிக்கலாம் அதற்காக அதில்  காட்டுவதெல்லாம் நிஜம் என்று யாரும் நினைக்க மாட்டார்கள் .  ஒவ்வொரு பட ரிலீசுக்கு முன்னரும் இப்படி திரையிட்டு ஒப்புதழ் பெற வேண்டுமென ஒவ்வொரு அமைப்பினரும் எதிர்பார்த்தால் யாருமே சினிமா எடுக்க முடியாது...
.
" இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் " என்கிற படம் அமெரிக்காவில் ரிலீசாகி உலகமெங்கும் பெரிய சர்ச்சையையும் , வன்முறையையும் ஏற்படுத்தியது . வன்முறை தவறென்றாலும் அதற்க்கெதிரான போராட்டங்கள் நியாயமானதே என்று படம் பார்த்தவர்கள் சொன்னார்கள் . ஆனால் படம் பற்றி சிறிதும் அறிந்திராதவர்கள் கூட  உலக அளவிலான எதிர்ப்புக்கு பிறகே படத்தை பார்த்திருக்கிறார்கள் . அதே  போல துப்பாக்கி படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது  சில சீன்களை நீக்க சொல்லி ஆர்ப்பாட்டம் நடந்தது . அதற்கு அடிபணிந்து சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டதோடு படத்தின் சில சீன்களையும் நீக்கினார்கள். இந்தியாவில் வேறங்கும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் மட்டும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது  நாமிருப்பது தமிழ்நாட்டில் தானா என்கிற  அச்சத்தை நிறைய பேருக்கு கொடுத்திருக்கிறது  ...

ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை சொல்லி படங்களை முடக்க நினைத்தால் இந்த துறையை நம்பியிறுக்கும் லட்சோப லட்ச மக்களின் எதிர்காலம் என்னவாவது என்கிற கவலையும் நம்மை தொத்திக் கொள்கிறது . எப்படி தனது ஆக்கங்கள் எந்தவொரு சாதியையோ , மதத்தையோ , இனத்தையோ , சமூகத்தையோ இழிவு படுத்தாமல் இருக்க வேண்டுமென்பது ஒவ்வொரு கலைஞனின் கடமையோ அதே போல சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டியதும் பொது மக்களின் கடமை . இதற்கான எல்லைகளை அவரவர்கள் மீறும் போது  பிரச்சனை வெடிக்கிறது ...


பணத்தால் மட்டுமல்லாமல் , மனதாலும்  பாதிக்கப்பட்டுள்ள கமல் தனது அறிக்கையில் " நான்  இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிரானவன் அல்ல , படத்தை பார்த்து விட்டு பாராட்டியவர்கள் பிறகு ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை , நான் ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபடும்
" இந்தியா ஹார்மோனி " என்கிற அமைப்பில் இருக்கிறேன் , இந்த படத்தை சுய லாபத்துக்காக சிலர் மட்டுமே எதிர்க்கிறார்கள் , எனவே இந்த படத்திற்கான தடையை நீக்க வேண்டும் " என்று மனமுறுக கேட்டுக் கொண்டுள்ளார் . இது வரை திரையுலகில்  யாரும் வாய் திறக்காத வேளையிலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கமலுக்கு ஆதரவுக்கரம்  நீட்டியுள்ளார் ...

இவரையும் , பிரகாஷ்ராஜையும்  தவிர கமல் தான் எங்களுக்கு முன்னோடி , குரு என்றெல்லாம் ஆஹோ , ஓஹோ வென்று புகழும் யாரும்  வாயே திறக்காதது ஆச்சர்யமே . எழுத்தாளர்களில் ஞானியும் , முஸ்லீமாக இருந்தாலும் மனுஷ்யபுத்திரனும்  இந்த தடையை வன்மையாக கண்டித்துள்ளார்கள்  .

சினிமாவில் கதைக்கேற்றவாறு காட்சிகளை அமைப்பது ஒவ்வொரு கலைஞனின் கடமை . அது ஒரு தரப்பினருக்கு அதிருப்தியாக இருக்கும் பட்சத்தில் அதை சமரசமாக பேசித் தீர்த்து சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க சொல்லலாமே தவிர இது போன்ற முழு தடையை கோருவது கருத்து  சுதந்திரத்துக்கு முற்றிலும் எதிரானது . எல்லா தரப்பையும் அலசி ஆராய்ந்த பிறகு தான் சென்சார் போர்ட் ஒ.கே சொல்கிறது அதையும் மீறி மாநில அளவில் படத்தை எதிர்ப்பதை விட்டு விட்டு சென்சார் போர்டுக்கு தங்களின் கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டியதே நியாயமான செயல் என்றும் பத்திரிக்கைகளும் , டி .வி மீடியாக்களும் சுட்டிக் காட்டுகின்றன ...

இது  ஏதோ கமல் மற்றும் அவர் ரசிகர்கள் சம்பந்தப்பட் பிரச்சனை  மட்டும் என்று நினைத்து ஒதுக்கி விட முடியாது . ஏனெனில் இந்த பிரச்சனை  நாளை குடியரசு தினத்தை கொண்டாடவிறுக்கும் ஒவ்வொரு குடிமகனின் கருத்து சுதந்திரத்துக்கும் விடப்பட்டிருக்கும் சவால் . கமல் போல சட்டத்தை மட்டுமே நம்பியிருக்கும் கோடானு கோடி இந்தியர்களும் இதற்கான தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள் . சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்பதற்காக படத்தை தடை செய்யும் தைரியமான முடிவை எடுத்த தமிழக அரசு அதே போல நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு படம் வெளியிடப்பட்டால்  இதே போன்றதொரு நடவடிக்கையை எடுத்து படத்தை காண வருபவர்களுக்கு  எவ்வித பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் நிறையவே இருக்கிறது . அந்த நம்பிக்கையுடன் கமலோடு சேர்த்து நாமும் காத்திருப்போம் ...


22 January 2013

என்று தணியும் திராவிட மோகம் ... ?!

இந்த முறை புத்தக கண்காட்சிக்கு போக முடியாத குறையை ஓரளவு தீர்த்துவைத்தது கீழ்கண்ட பதிவு . வெகு நாட்களாகவே நம் தமிழ்நாட்டில் மட்டும் தான் சுய லாபத்திற்காக ஆரிய - திராவிட வாதத்தை தேவையில்லாமல் தூக்கிப்பிடித்துக் கொண்டு தமிழர்களின் ஒற்றுமையையும் , வளர்ச்சியையும் குழைக்கிறார்கள் என்கிற மனத்தாங்கல் எனக்கு உண்டு . நம்மை சுற்றியிருக்கும் எந்த மாநிலமும் இதைப் போல பிதற்றிக்கொண்டு திரியாமல் ஒற்றுமையாக அவரவர்கள் மாநில  வளர்ச்சியை பார்த்துக்கொள்கிறார்கள் . திராவிடம்  என்பது தென் இந்தியாவில் இருக்கும் ஐந்து மாநிலங்களையும் குறிக்கிறது . இங்கே திராவிடம் பேசுகிற யாராலாவது கர்நாடகாவிலிருந்து தண்ணீரை கொண்டு வரவோ அல்லது  கேரளாவிடம் உள்ள முல்லை பெரியாறு பிரச்சனையை தீர்க்கவோ  முடிந்ததா ? முடியாத போது எதற்கு மக்களை முட்டாளாக்கும் இந்த வீண் வாதம் ? ஆங்கிலேயன் நம்மை விட்டு போனாலும்  அவன் விட்ட ஆரிய - திராவிட கதையை இன்றளவும் பரப்பி வரும் அடிமை புத்தியுள்ள பல அடித்தொடிகள் இதை படித்த பிறகாவது திருந்தட்டும் அல்லது மேற்கொண்டு இந்த புருடாவை பரப்பாமல் இருக்கட்டும் என்கிற நல்லெண்ணத்தில் இந்த பதிவினை பகிர்ந்து கொள்கிறேன் . பகிர்ந்து கொண்ட பத்மனுக்கு நன்றி ... 

புலாலும் ஆரியமும்


முகநூல் (பேஸ்புக்) இணையதளத்தில், மாட்டுப் பொங்கலுக்கு மாட்டைக் குளிப்பாட்டி வணங்கிவிட்டு, ஆட்டை வெட்டித் தின்னலாமா? என்று ஒரு நண்பர் கருணை உள்ளத்தோடு கேள்வி கேட்டிருந்தார். அதற்குப் பதில் அளித்துள்ள மற்றொரு நண்பர், இப்படியெல்லாம் ஆரியத்தனமாக கேள்வி எழுப்பலாமா? என்று அங்கலாய்த்திருந்தார். இந்தப் பதிலுரையில்  பொதிந்துள்ள சித்தாந்த, இனவாதக் குழப்பத்தைப் போக்கி, தெளிவுபடுத்தும் முகமாக, மயக்கம் அறுக்கும் மறுமொழியாக இந்தக் கட்டுரையைப் படைத்துள்ளேன்.

ஆங்கிலேயன் தன் வயிற்றுப்பிழைப்புக்காகச் சொன்ன ஆரிய – திராவிட வாதம் சுத்த அபத்தம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதை உண்மை என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். ஜீவ காருண்யம் என்பது ஆரியத்துக்கு மட்டுமே சொந்தமா? ஆரியர் என்பவர் பார்ப்பனர் மட்டும் தானா? க்ஷத்திரியர், வைசியர் எல்லாம் ஆரியர் கணக்கில் அடங்க மாட்டார்களா? ஆரியர் என்போர் வடநாட்டார் அனைவருமேவா? இல்லை, அதிலும் திராவிடச் சான்றிதழ் பெற்றவர் உள்ளனரா?

ஆரியர் கணக்கில், கொல்லாமையை வலியுறுத்திய வடநாட்டுப் புத்தரும், மகாவீரரும் இடம் பெறுகிறார்களா? இல்லையா? நமது திருவள்ளுவர்கூட, ‘கொல்லாமை’ மற்றும் ‘புலால் மறுத்தல்’ என இரண்டு அதிகாரங்களைப் படைத்து, இருபது குறள்களை எழுதியுள்ளாரே? அவையெல்லாம் ஆரியத்தின் குரலா?


“அறவினை யாதெனில் கொல்லாமை”, “நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை”, “தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் செயல்” எனக் கொல்லாமையிலும்,  “தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?”, “தினல்பொருட்டால் உண்ணாது உலகுஎனின் யாரும் விலைபொருட்டால் ஊன்தருவார் இல்”, “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர்செகுத்து உண்ணாமை நன்று”, “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்” என்று புலால் மறுப்பிலும் அய்யன் திருவள்ளுவர் வலியுறுத்தியிருப்பது அய்யர்களுக்கோ அன்றி அனைத்துத் தமிழர்களுக்கோ?

ஒருவேளை திருவள்ளுவர் வாக்கெல்லாம் ஆரிய மாயையில் அகப்பட்டதன் வெளிப்பாடா? அல்லது இன்றளவும் ஆராத, பொய்மான்கரடாய் ஆரியம்(!) வெறுக்கும் திராவிட ஆவேசப் புளுகுவாதத்தை மறுதலிக்கும் இலக்கிய ஆதாரங்களா?


சமணத்தைப் பின்பற்றும் நயினார் என்றழைக்கப்படும் தமிழ்ச் சாதியினர், வைதீகர்களைக் காட்டிலும் மிகத் தீவிரமாக புலால் மறுப்பை வலியுறுத்திக் கடைபிடிக்கிறார்களே? அவர்களும் ஆரியரோ? ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை வடிவான வள்ளலார் ஆரிய இனத்தவரோ? அவர்காட்டும் சமரச சன்மார்க்க நெறியிலும், அதற்கு முன்பிருந்தே சுத்த சைவ நெறியிலும், புலால் மறுக்கும் வைணவ நெறியிலும் வாழும் தமிழர் எல்லாம் ஆரியக் கலப்புற்றனரோ? அன்றி ஆரியக் கலகத்துக்கு ஆட்பட்டனரோ?


அதுசரி, யார் ஆரியர்? பல்லாயிரம் ஆண்டுகளாய் தமிழகத்தில் வாழ்ந்து, தமிழ் மொழியையே தாய்மொழியாய்க் கொண்டு, தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் தொண்டாற்றிவரும் பார்ப்பனர்கள், தமிழர் அல்லரோ? தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படிக்காத அறிவிலிகளின், பகுத்தறிவாளர் என்ற பிரகடனத்தைத் தமக்குத் தாமே சூட்டிக்கொண்டு பகுத்தறிவின் வாசம் இம்மியும் அறியாத கசடர்களின் கவைக்கு உதவாத பேச்சு அது.

குறிஞ்சிக்கோர் கபிலன் என்று புகழ்பெற்ற பண்டைக் கவிஞரும், மன்னன் பாரி வள்ளலின் மகள்களை மூவேந்தர் பகையையும் பொருட்படுத்தாமல் வளர்த்த மானுடப் பண்பாளருமான கபிலர், தன்னை “அந்தணன் புலவன்” என்றுதான் குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடுகிறார். அந்தக் குறிஞ்சிப் பாட்டே, ஆரிய மன்னன் பிருகதத்தனுக்கு தமிழ் உணர்த்துவதற்காக உரைக்கப்பட்டது என்று மொழியப்பட்டுள்ளது.

இதன்மூலம் அந்தணர் (பார்ப்பனர்) ஆகிய கபிலர், ஆரியர் அல்லர் என்பது அறியப்படுகிறது. அவ்வாறெனில், ஆரியர் யார்? ஆரிய மன்னர் கனக, விசயர்கள் என்று சிலப்பதிகாரத்திலும் பிற இலக்கியங்களிலும் சொல்லப்பட்டுள்ளனவே? எனில், வடநாட்டு மன்னர்களில் சிலர் ஆரிய என்று பட்டம் சூட்டிக்கொண்டார்கள். ஆரிய என்பதற்கு, சிறந்த, உயர்ந்த என்று பொருள் உரைக்கப்படுகிறது. அதனால்தான் புத்தர்கூட, தனது சங்கத்தை ஆரிய சங்கம் என்று அழைத்தார். (பிராமணத்துவம் என்பது அடையக் கூடிய தகுதியே அன்றி, பிறப்பின் அடிப்படையில் வருவது அல்ல என்பதையும் அவர் நன்கு விளக்கியிருக்கிறார், இது இக்கால பிராமணர்களுக்கு மட்டுமின்றி, பிராமண எதிர்ப்பாளர்களுக்கும் புரியவில்லை என்பது வேறு விஷயம்.)

ஆரிய என்பதற்கு உயர்ந்த, சிறந்த என்று பொருள் இருப்பதால்தான், சமணப் பெண் துறவிகளுக்கு ஆர்யை என்று பெயர். விவசாயத்திலும், கல்வியிலும், போர்களிலும் சிறந்து விளங்கிய வட இந்தியாவின் ஒரு பகுதி ஆர்ய  வர்த்தம் என்று அழைக்கப்பட்டது. அம்மன்னர்களில் ஒரு பிரிவினர் ஆரிய என்ற பட்டம் சூட்டிக்கொண்டனர். (இந்தியாவின் வடபகுதி மட்டுமல்ல, இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த தமிழ் மன்னர்களில் ஒரு பிரிவினரும் ஆர்ய மன்னர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்பது ஆய்வுக்குரிய கிளைச் செய்தி.)


ஆர்ய என்பது இனம் அல்ல, அது உயர்ந்த, சிறந்த என்ற பொருள்தரும் பதம் மாத்திரமே என்பதை மகாகவி பாரதியார் அறிந்திருந்ததால்தான், “ஆரிய நாட்டில் நாரியரும் நரசூரியரும் சொல்லும் வீரியமந்திரம் வந்தேமாதரம்” என்றும் “அச்சம் கொண்டவன் ஆரியன் அல்லன்” என்றும் அவரால் அடித்துச் சொல்ல முடிந்தது. (அவரையும், அழியும்நிலையில் இருந்த தமிழ் நூல் சுவடிகளைத் தேடிப்பிடித்துச் சேகரித்து முதன்முதலில் பதிப்பித்தவருமான உ.வே.சாமிநாத ஐயரையும் பிறப்பால் பிராமணர் என்பதால் ஆரியர் என்றே நினைக்கிறது, அழைக்கிறது, உதாசீனப்படுத்துகிறது ஓர் அறியாக் கூட்டம்.)

தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் ஆரியர்கள் அல்லர் என்பதற்கு, பழந்தமிழ் சங்க இலக்கியங்களில் ஓரிடத்தில்கூட அந்தச் சாதியினர் ஆரியர் என்று குறிப்பிடப் படவில்லை என்பதே சான்று. பார்ப்பனர், அந்தணர், மறையோர், வேதியர் என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள் ஏன் ஆரியர் என்று அழைக்கப்படவில்லை? சிலப்பதிகாரத்தில்கூட, கண்ணகி - கோவலன் திருமண நிகழ்வை, மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட தீவலம் வந்து மணம் புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளதே அன்றி, ஆரியர் கட்டிய “தீவழியில்” திருமணம் புரிந்ததாகக் குறிப்பிடப்படவில்லை.

கபிலர் மட்டுமின்றி, பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிப் பரவிய மாங்குடி மருதனார், நக்கீரர், பதுமனார், வடம வண்ணக்கண் பேரிச் சாத்தனார், வடம வண்ணக்கண் தாமோதரனார் (வடமர் என்பவர் தமிழ்ப் பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர்), மலைபடுகடாம் இயற்றிய பெருங் கௌசிகனார், கள்ளில் ஆத்திரையனார், கடம்பனூர் சாண்டில்யனார் (கௌசிகம், ஆத்ரேயம், சாண்டில்யம் என்பதெல்லாம் பிராமணர்களின் கோத்திரப் பெயர்கள் – கோத்திரம் என்பது இன்ன முனிவர் கால்வழியில், அதாவது பரம்பரையில், தோன்றியவர் என்பதைக் குறிக்கும் சொல்) உள்ளிட்ட பழந்தமிழ்ப் புலவர்களும் பார்ப்பனர்களே. தூய தமிழில் அகமும், புறமும் பாடிய இந்தப் புலவர்கள் எல்லாம் அந்தணர் என்பதால் அன்னியர் ஆகிடுவாரோ?


இதுபோல் சங்கப்பாடல் இயற்றிய புலவர் பெயரில் எல்லாம் ஆரிய என்ற முன்னொட்டு இல்லை. கபிலர், ஆரிய மன்னன் பிருகதத்தனுக்குத் தமிழ் உரைத்தார் என்பதை முன்னர் கண்டோம். தமிழ் கற்றுக்கொண்ட மற்றொரு  ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன் பாடல், எட்டுத்தொகை நூலான குறுந்தொகையில், 184-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. ஆக, அரசர்கள் மட்டுமே ஆரியர் என்று அழைக்கப்பட்டனர் என்பதும், அக்காலப் பார்ப்பனர்கள் ஆரியர் என்று அழைக்கப்படவில்லை என்பதும் இதன் மூலம் நிரூபணமாகிறது.

வேதவழியைப் பின்பற்றிய வேந்தர்கள் சங்க காலந்தொட்டே, அல்லது அதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் வாழ்ந்திருக்கின்றனர். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ராஜசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளி, மகாபாரதப் போரில் இருதரப்பாருக்கும் உண்டி கொடுத்த பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் ஆகியோரின் பெயர்களும், அவர்தம் பெருமை குறித்த பாடல்களும் இவற்றை நமக்கு விளக்குகின்றன.

மேலும் ஒரு விஷயம். தென்னாட்டுப் பார்ப்பனர்கள்தாம் புலால் உண்ணாதவர்கள். வடநாட்டுப் பார்ப்பனர்கள், குறிப்பாக வங்காள பிராமணர்கள் மீனையும், ஒரிய பிராமணர்கள் அனைத்துவித புலாலையும் உண்ணும் வழக்கமுடையோர். (அக்காலத்திலே, அனைத்துப் பிராமணர்களும் வேள்வித் தீயில் விலங்குகளைப் பலியிட்டு உண்டு மகிழ்ந்தவர்கள்தாம் என்றும், கொல்லாமை என்ற அறக்கோட்பாட்டின் செல்வாக்குக்கு ஆட்பட்டும், ஆன்மீக வளர்ச்சியின் விளைவாகவும் புலால் உணவுப் பழக்கத்தைத் துறந்தார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர்.)

பிராமணர்கள் என்றால் ஆரியர்கள் என்றும், தமிழர்கள் அல்லர் என்றும் கருதுவது அறியாமையே. தமிழ் இலக்கியங்களையும், கலாச்சார மாண்புகளையும், முறையாக அறியாததால் ஏற்பட்டுள்ள மதிமயக்கமே அது. அந்த மயக்கத்தில் இருந்து தமிழர்கள் விடுபட்டு சுய நினைவுக்கு, சுயம் பற்றிய நேர்மைப் புரிதலுக்குத் திரும்பவிடாமல் சில சில்லறை அமைப்புகளும், சில்லறை மனிதர்களும் பாடுபட்டு, பாடுபடுத்தி வருகின்றன(ர்).

ஆகையினால் புலால் மறுப்பு என்பது ஆன்மீக ரீதியிலும், ஜீவகாருண்யம் மற்றும் இயற்கை நேசம் ஆகியவற்றின் அடிப்படையிலும் கடைபிடிக்கப்படும் கொள்கையே அன்றி வேறொன்றுமல்ல. இதற்கு இனவாதமும், மொழிவாதமும் அவசியமில்லை.


முடிவாக ஒரு விஷயம்: எளியதை வலியது கொல்லும் என்பது காட்டு நியதி, எளியதை வலியது காக்கும் என்பதே நாட்டு நியதி, நல்லோர் நியதி. இயற்கை, மனிதர்களுக்காக இதரபிற  உயிரினங்களை உருவாக்கவில்லை,  இயற்கையின் தன்மையான பல்லுயிர்ப் பெருக்கத்தில் மனிதனும் ஓர் அங்கம் என்பதே உண்மை. இதுவரையான பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த நிலையில் உள்ள ஓர் அங்கம், அவ்வளவே. அந்த வகையில் மனிதனுக்குப் பிற உயிரினங்கள் மீது உள்ள உரிமையைவிட, அவற்றுக்குச் செய்ய வேண்டிய கடமையே அதிகம்.

-    பத்மன்


Related Posts Plugin for WordPress, Blogger...