Showing posts with label அன்னா ஹசாரே. Show all posts
Showing posts with label அன்னா ஹசாரே. Show all posts

4 August 2012

அன்னா - மற்றுமொரு மன்மோகன் ?! ...



ழலுக்கு எதிரான தனது உண்ணாவிரதத்தை பத்து நாட்களுடன் முடித்துக் கொண்ட அன்னாஹசாரே தான் தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்...
இதற்கு முன் அன்னா உண்ணாவிரதம் இருந்ததை  அன்னாவின் விரதமும்,மன்மோகனின் மௌனமும்  என்ற பெயரில் பதிவிட்டிருந்தேன் ... ஊழலுக்கு எதிராக , அதிலும் குறிப்பாக காங்கிரஸ் அரசின் உச்சக்கட்ட ஊழலை பார்த்து கொதிப்படைந்து போயிருக்கும் கோடானுகோடி இந்தியர்களுள் நானும் ஒருவன் ... 


என்ன தான் எதிர்க்கட்சிகளான பி.ஜே.பி யும் , கம்யூனிஷ்டும காங்கிரஸின் ஊழலை எதிர்த்தாலும் அதை அரசியலாகத்தான் மக்கள் பார்ப்பார்கள் , அதையே அரசியல் சாராத ஒரு தனி மனிதன் செய்யும் போது அனைவரிடமும் ஒருவித பரவசமும் , உத்வேகமும் தொற்றிக்கொள்ளும் ... ஒரு கிராமத்தையே முன் மாதிரியாக மாற்றிக் காட்டிய காந்தியவாதி அன்னா ஹசாரே முதன் முதலில் ஜன் லோக் பாலை வலியிறுத்தி உண்ணாவிரதம் இருந்த போது அனைவருக்கும் ஒரு உற்சாகம் பிறந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை ...  அன்னா ஹசாரேவின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மத்திய அரசு இரட்டடிப்பு செய்த போது மீண்டும் அன்னா களத்தில் குதித்த போதும் மக்களிடையே அதே வரவேற்பு இருந்து ... 


ஒரு பக்கம் அன்னாவிற்கு ஆதரவு பெருகிக் கொண்டே போனாலும் மறுபக்கம் அன்னாவின் ஊழலுக்கு எதிரான மசோதா நடைமுறைக்கு ஒத்துவராது என்றும் , அவர் ஒரு விளம்பர விரும்பி என்பதுமான விமர்சனங்களும் வளர்ந்து கொண்டே தானிருந்தன ... பழுத்த அரசியல் விமர்சகரும் , காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை தன் பத்திரிக்கையில் விமர்சித்து வருபவருமான சோ அவர்களே அன்னா அண்ட் குழுவினரை கோமாளிகளாகவே தொடர்ந்து சித்தரித்து வருகிறார் ... சோவுடைய நையாண்டிகளை நான் ரசிப்பவனாக இருந்தாலும் இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்தே கொண்டிருந்தேன் ... 


இருப்பினும் கொஞ்சம் நுணுக்கமாக ஜன்  லோக் பாலின் நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்த போதும் , அன்னாவை சுற்றியிருப்பவர்கள் அடிக்கும் கூத்துக்களை பார்க்கும் போதும் , முன்னுக்கு பின் முரணான சில கருத்துக்களை அவர்கள் கூறும் போதும் ஏதோ ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது ... அதனால் தானோ என்னவோ இந்த முறை அன்னா அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது எனக்கு பெரிதாக எந்த சலனமும் ஏற்ப்படவில்லை ... அது மட்டுமல்லாமல் இப்போது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட அன்னா அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் , ஆனால் தான் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்றும் அறிவித்திருப்பது மேலும் நெருடலையே கொடுக்கிறது .. 


அரசியலே சாக்கடை , அரசியல்வாதிகள் எல்லோருமே ஏமாற்றுக்காரர்கள் என்கிற ரீதியில் பேசிக்கொண்டிருந்த அன்னா குழுவினர் இப்போது தடாலடியாக அரசியலில் குதிக்கப்போவதாக அறிவித்திருப்பது அவர்கள் நம்பகத்தன்மையை கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது... சட்டத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வர நிச்சயம் அரசியல் ரீதியான ஆதரவு தேவை , அரசியல்வாதிகள் எல்லோரும் ஒத்துழைத்தால் தான் அந்த வகையான சட்டத்தை கொண்டு வர முடியும் ... ஊழலில்  ஊறிப்போன அரசியல்வாதிகள் அதற்கு எதிரான சட்டத்தை கொண்டு வந்து சொந்தக் காசிலேயே சூனியம் வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் , இதே சட்டத்தை வைத்து உயர் பதவியில் இருக்கும் ஊழல் செய்யாதவர்களை கூட ப்ளாக்மெயில் செய்யும் அபாயமும் இருக்கிறது ... 





ஆரம்பத்திலிருந்தே அன்னா குழுவினருக்குள்ளே கருத்து வேறுபாடு தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது , அதனால் தான் ஒரு நாள் மத்திய அரசை ஆதரித்தவர்கள் அடுத்த நாள் திட்டித் தீர்த்தார்கள் ... இப்போது இருக்கும் சூழ்நிலையில் அன்னா கட்சி ஆரம்பித்தாலும் ஆட்சியை பிடிப்பதென்பது நடக்காத காரியம் , அப்படியே பிடித்தாலும் இந்த மசோதாவை நடைமுறைப் படுத்த முடியுமா என்பது இமாலய கேள்வி ... தற்போதைய நிலையில் தனித்து ஆட்சி என்பது எட்டாக்கனியாகி விட்ட நிலையில் அன்னா யாருடன் கூட்டு சேர்வார் ? 


காங்கிரஸுடன் சேர முடியாது , பி.ஜே,பி யுடன் சேர்வதற்கு தனிப்பட்ட முறையில் அவருக்கு விருப்பமிருந்தாலும் யாராவது மதவாதி என்று சொல்லி விடுவார்களோ என்ற பயத்தால் அதையும் செய்ய முடியாது ... ஏற்கனவே ஊழலில்லாத மோடியின் ஆட்சியையும் , அவரையும் நியாமாக பாராட்டி விட்டு பின்னர் போலி மதவாதத்திற்கு பயந்து தன் கருத்துக்களை மாற்றியவர் அன்னா ... இந்த சம்பவத்தின் போதே அரசியலில் குதிப்பதற்கு  அவர் ஆர்வமாய் இருப்பது ஒரளவு புலனானது , ஏனெனில் அரசியல்வாதிகள் தான் ஓட்டுக்கு பயந்து போலி மதவாதம் பேசுகிறார்கள் என்றால் அரசியல் சாரா இயக்கத்திலிருக்கும் அன்னா பயந்திருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை ...


ஒவ்வொரு உண்ணாவிரதத்தின் போதும் தவறாமல் அவரை லைவாக ஆங்கில சேனல்கள் காட்டிய போது சில சமயங்களில் அவையெல்லாம் தமிழககத்தில் கடந்த ஆட்சியின் போது கலைஞர் டி.வி யில் ஒளிபரப்பான " முத்தமிழ்கலைஞர்  " அவர்களை நாயனாக வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றை நியாபகப்படுத்தின ... நிச்சயம் இதற்கு அன்னாவை குறை கூற முடியாது , ஆனாலும் இந்த சம்பவங்கள் அனைத்தும் அன்னாவையும் ஒரு விளம்பர பிரியரோ என்ற அச்சத்துடனே பார்க்க வைத்தன ... 




அரசியலில் ஈடுபடவும் , கட்சி ஆரம்பிக்கவும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது , அதில் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடுமில்லை , ஆனால் அன்னா அரசியலில் ஈடுபட்டு தான் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பதே எனது கேள்வி . எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆரம்பத்தை பார்த்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு தான் கட்சியை தொடங்கியிருப்பார்கள் , ஆனால் அது போக போக மக்களுக்கு பயன்பட்டதோ இல்லையோ அவர்களுடைய மாக்களுக்கும் , சுற்றியிருக்கும் கூட்டதிற்குமே பயன்பட்டிருக்கிறது ... 


அதே போல அன்னாவின் உண்ணாவிரதங்களும் அரசியல் ஸ்டண்டா ? தனிப்பட்ட முறையில் அன்னா நேர்மையாக இருந்தாலும் கட்சியிலிருப்பவர்கள் அனைவரையும் அதே போல கட்டுக்கோப்பாக வைக்க முடியுமா ? என்பது கேள்விகளெல்லாம் நம்மை குடைகின்றன ... ஏனெனில் நம்மூரில் மன்மோகன்சிங் என்று ஒரு நல்லவர் இருந்தார் ... ஒரு காலத்தில் சிறந்த பொருளாதார நிபுணராகவும் , நடுத்தர வர்க்கத்தினரின் நாயகனாவும் , அப்பழுக்கற்ற நேர்மையாளராகவும் பார்க்கப்பட்டவர் இன்றோ முதலாளிகளின் மீது கொண்ட விசுவாசத்திற்காகவும் , அவர் கடைபிடிக்கும் கூட்டணி தர்மத்திற்காகவும் , அவர் மீதே எழுந்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகவும் அதே நடுத்தர வர்க்கத்தினரால் எதிரி போல பார்க்கப்படுகிறார் ... அதைப் போல அரசியலில் குதிக்கப் போகும் அன்னாவும் மற்றுமொரு மன்மோகன் போல மாறிவிடக் கூடாது என்பதே மக்களின் ஆதங்கம் ... 

9 April 2011

அன்னாவின் உண்ணாவிரதம் வெற்றியா ?

             நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து நாட்டையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார் 72 வயது இளைஞர் அன்னா ஹசாரே ...ஒரு கிராமத்தையே முன் மாதிரியாக மாற்றி காட்டியதற்காக 1992  ம் ஆண்டு "பத்ம பூஷன்"   வாங்கிய சமூக தொண்டர் இந்த "அன்னா ஹசாரே "..
                  
             ஊழலுக்கு எதிராக "ஜன் லோக்" மசோதாவை கடுமையான சட்ட திருத்தங்களுடன் நிறைவேற்றக்கோரி அற வழியில் அவர் செய்த போராட்டத்திற்கு மத்திய அரசு இப்போது பணிந்திருக்கிறது...ஜூன் மாத பாராளுமன்ற கூட்டத்தொடரில் இதனை நிறைவேற்றுவதாக உறுதியும் அளித்திருக்கிறது ..
                .தனி மனிதனாக எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் அவர் தொடங்கிய போராட்டத்திற்கு நாடு முழவதும் கிடைத்த வரவேற்பு ஊழலுக்கு எதிராக மக்கள் விழித்தெழ தொடங்கி விட்டார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது ...
               "அண்ணா" வழியில் வந்ததாக சொல்லிக்கொள்ளும் அரசியில்வாதிகள் தமிழகத்தில் ஊழலுக்கு உரம் போட்டு வளர்த்துக் கொண்டிருக்க அங்கு நடந்த அன்னாவின் உண்ணாவிரதம் ஜனநாயகவாதிகளுக்கு  ஒரு உற்சாக டானிக் .... 
                                   
     2 ஜி அலைவரிசை ஊழல் மூலமாக உலகமே தமிழகத்தை கேவலமாக  பார்த்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நிச்சயம் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கான விதை இங்கிருந்து தான் முளைத்து இருக்க வேண்டும் ...ஆனால்  வாக்குக்கு பணம்  கொடுத்தால் கூட வாங்கிக்கொள்ளுங்கள் ஏன் என்றால் அது உங்கள் பணம் என்று மக்களைப் பார்த்து
கூறும் அளவிற்கு இங்கு ஊழல் பழகி விட்டது வேதனைக்குரிய விஷயம் ... 
        மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஒத்துக்கொண்டதாலேயே இதனை ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கான முடிவாக எடுத்துக்கொள்ளலாமா ? நிச்சயம் முடியாது ....ஏனென்றால் மகளிர் இட ஒதுக்கீடு பல முறை விவாதிக்கப்பட்ட 
போதும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது நாடறிந்த விஷயம் ...
           அரசியல்வாதிகளின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாது என்பது நிதர்சன உண்மை ..
  .     இந்த   மசோதாவை நிறைவேற்றுவதற்க்கான   திட்டக்குழுவில் "அன்னா", "பூஷன்" போன்றவர்கள் இடம் பெற்றிருந்தாலும்  மத்திய அரசின் அமைச்சர்கள் ஐந்து பேர் இடம் பெற்றிருக்கிறார்கள் ...இவர்களுக்கு எதிராக பெரிய அளவில் எந்த ஊழல் வழக்கும் இல்லா விட்டால் கூட இவர்கள் சார்ந்திருக்கும் கட்சி ஊழலையே மொத்த குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பதை உலகமே அறியும் ....
                               
          அதிலும்  2 ஜி  அலைவரிசை ஊழலில் அரசிற்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை  என்று கூசாமல் பொய் சொன்ன கபில் இந்த குழுவில் இடம் பெற்றிருக்கிறார் ...            லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைவராக தாமசை நியமித்ததற்கு முழு பொறுப்பையும்    நான் ஏற்றுக் கொள்கிறேன் ,கூட்டணி தர்மத்திற்காக வளைந்து கொடுக்க வேண்டி இருக்கிறது என்றும் ஒப்புக்கொண்டதன் மூலம் அப்பழுக்கற்றவர் என்று எல்லோரும் நினைத்து கொண்டிருந்த மன்மோகன் சிங்கின் நேர்மை
மண்ணைக்கவ்வியதையும் நாம் அறிவோம் ... 
          மசோதா நிறைவேற்றப்பட்டால் ஊழலுக்கு எதிராக பிரதமர் உட்பட உயர் பதவி வகிக்கும் எவரையும் கேள்வி கேட்கும் உரிமை குழுவிற்கு வந்து விடும்.  அது மட்டும் அல்லாமல் ஒரு வருடத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும்..ஊழல் செய்தது நிரூபணம் ஆனால் கொள்ளையடித்த பணம் முழுவதும் 
பறிக்கப்படும் என்பவை இதன் மற்ற சாரம்சங்கள் ...
              .
           ஆனாலும் எவ்வளவு பெரிய ஊழலாக இருந்ததாலும் அதற்கு எதிராக கொடுக்காப்படும் 
கடுங்காவல் தண்டனை மட்டும் போதுமானதா ? அந்த ஊழல் பணம் மூலம் தங்களை வளர்த்துக்கொண்ட மற்றவர்களுக்கு எந்த தண்டனையும் கிடையாதா ?
ஊழல் புரிபவரை அமைச்சராக்கிய கட்சிக்கு என்ன தண்டனை ? ஊழலுக்கு நேரடியாகவோ , மறைமுகமாகவோ , கூட்டணி தர்மத்திர்க்காகவோ ஒத்துழைப்பு கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கும் , தொழிலதிபர்களுக்கும் 
என்ன தண்டனை ?....இப்படி பல கேள்விகள் நம்முள் எழாமல் இல்லை ...
               அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சொன்னால் போதுமா ?..இலவசமாக கொடுக்கிறார்கள் 
என்பதற்காக எல்லாம் இருந்தும் அதை ஓடி ஓடி வாங்கியது குற்றம் இல்லையா ?....நம்முடைய காரியத்தை சாதித்துக்கொள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதும் , ஊழல் நடக்கிறது என்று தெரிந்தும் அதற்கு எதிராக
முறையிடாமல் ஒதுங்கிப்போவதும் குற்றம் இல்லையா ? இப்படி பல கேள்விகள் நம்முள் எழாமல் இல்லை ....
         முன்பே சொன்னது போல் இது ஊழலுக்கு எதிரான முடிவு அல்ல ...ஒரு ஆரம்பம் .."அக்னிக் குஞ்சொன்று கண்டேன் " - மகாகவியின் பாடலுக்கு ஏற்ப ஒரு தீப்பொறியின் ஆரம்பம் ....
          மசோதா நிறைவேற்றப்பட்டு , ஊழல் புரிபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டு, ஊழல் முற்றிலும் மலிந்து இன்னுமொரு "அன்னா" இதற்காக "உண்ணா" விரதம் இருக்கும் நிலை ஏற்படாமல் இருப்பதே
முழுமையான வெற்றி ...
                  
                  

        
                 
Related Posts Plugin for WordPress, Blogger...