Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

24 November 2015

காட்டுப்பசி - சிறுகதை ...


ன்னும் எத்தனை நாட்கள் இங்கேயே இருப்பது தெரியவில்லை . இந்த அத்துவானக் காட்டுக்குள் எப்போது வந்து மாட்டிக்கொண்டோம் என்பதே மறந்துவிடும் போலிருக்கிறது . சிறுவனாய் இருக்கும் போது அம்மா , அப்பா இருவரின் கைகளையும் பிடித்துக்கொண்டே நடந்தது நினைவுக்கு வருகிறது . அம்மாவுக்கு எப்போதும் சிரித்த முகம் . அப்பா அவ்வளவு கோவப்படும் போதும் அவளிடம் சின்னதாய் ஒரு புன்முறுவல் இருந்துகொண்டே இருப்பது ஆச்சர்யமாக இருக்கும் . நான் என்ன தப்பு செய்தாலும் அம்மா என்னை அப்பாவிடம் அடிவாங்க விட்டதேயில்லை . அந்த கோபமும் அம்மா மேல் அடியாக வந்திறங்கும் . இந்த இடத்திற்கு சுற்றுலா வருவதற்கு நான் தான் காரணமாக இருந்தேன் . எதிர்பாராத மழை வெள்ளத்தில் நான் அடித்துக்கொண்டு இங்கே வந்து சேர்ந்ததற்கும் சேர்த்து அம்மாவிற்கு நிறைய அடி விழுந்திருக்கும் .  இந்த காடும் , தனிமையும் பழகிவிட்டது . அப்பா என்னை மறந்திருப்பாரா ?  அவர்  ஒரு நாள் கூட என்னை பசியால்  வாட விட்டதில்லை . கோபப்பட்டாலும் எங்கும் கடன் கிடன் வாங்காமல் வீட்டிற்கு தேவையானதை செய்து கொண்டுதானிருந்தார் ...

ஒரு வேளை கூட சாப்பிடாமல் இருந்த நான் இங்கே எத்தனை நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறேன் . கிடைத்ததை தின்று , சின்ன விலங்குகளை கொன்று , பெரிய விலங்குகளிடம் இறையாகமால் தப்பித்து ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகவே கழிந்தது . பின் மெதுவாக இந்த காட்டு வாழ்க்கையும் பிடித்துவிட்டது  . பகலில் எங்கும் அமைதி , இரவில் பேரிரைச்சல் . அது இல்லையென்றால் இப்பொழுதெல்லாம் தூக்கம் வருவதேயில்லை . நிறைய இரவுகள் பசியோடு படுத்திருக்க வேண்டும் . எப்பொழுதாவது மனிதர்கள் தென்படும்போது தான்  உயிரே வரும் . அந்த சில நாட்கள் பசியில்லாமல் இருக்கலாம் . ஆனால் இந்த அத்துவானக் காட்டுக்குள் யாரும் அடிக்கடி வருவதில்லை . சில அரிய மூலிகைகளை எடுக்க , போட்டோ எடுக்க , இயற்கையை ரசிக்க , விலங்குகளை ஆராய்ச்சி செய்ய என்று ஏதாவது ஒரு காரணத்துக்காக அரசின் எச்சரிக்கையையும் மீறி சிலர் எப்போதாவது வருவார்கள் . அப்படி வரும் போது வயிற்றுக்கு ஏதாவது கிடைக்கும் . மற்றபடி மரணப்பசியுடன் காலம் தள்ள வேண்டியதுதான் ...

ஏதோ சத்தம் கேட்கிறது . தூரத்தில் யாரோ வரும் சத்தம் . காலடி ஓசைகள்  பெரிதாக கேட்கின்றன . டார்ச் லைட் வைத்துக்கொண்டு ஒருவன் நடந்து வர பின்னால் ஒரு பெண் நடந்து வருகிறாள் . வருபவள் அழகாக இருந்தாள் , அதோடு கைகைளில் ஏதோ பை . நிச்சயம் ரெண்டு நாட்களுக்கு தேவையான உணவாக இருக்கும் . இருக்கட்டும் நல்லது . மரத்திலிருந்து நான் மெல்ல இறங்குகிறேன். அவர்கள் என்னை கவனிக்கவில்லை . அவர்கள் ஏதோ மொழியில் பேசிக்கொள்கிறார்கள் . மனிதர்களை அடிக்கடி பார்க்காததால்  ஏதோ ஒரு பரபரப்பு , பயம் , அன்னியம் தொற்றிக்கொள்கிறது . இன்றும் அப்படி ஏதோ ஒரு உணர்வு  தள்ள ஒதுங்கி நின்றேன் . அதைப்போல சிலர் என்னைப்பார்தவுடன் அலறி விடுவதுண்டு . அதற்காகவே கூட நான் ஒதுங்கி நின்று கொள்வேன் . ..

அவர்கள் என்னமோ பேசிக்கொள்ள அவன் மட்டும் கழுத்தில் கேமராவை மாட்டிக்கொண்டு ஓடைப்பக்கம் செல்கிறான் . அனேகமாக பறவைகளை படம் பிடிக்கப்  போகிறான் . நேரம் ஆகிறது அவன் வரவில்லை . அவள்  கவலையாகிறாள் . அவன் போன திசையில் நடக்கலாமா என யோசித்து அவள் பின்வாங்குவது தெரிகிறது . இதுதான் சரியான சந்தர்ப்பம் . அவளுக்கு பின் மெதுவாக செல்கிறேன் . மிக அருகில் போனதும் அவள் முடியிலிருந்து ஏதோ இதுவரை முகர்ந்திரத வாசனை . அவள் தோள்களில் என் கையை வைக்கிறேன் . என்னைப் பார்த்ததும் ஒரு அலறலுடன் லேசாக மேலே சாய்கிறாள் .  நினைத்தபடியே அவள் பை என் கைக்குள் மாட்டுகிறது . அத்தோடு சேர்த்து எனது உணவையும்  தூக்கிக்கொண்டு நான் வேகமாக  எனது இடத்திற்கு போகிறேன் . எடையைப் பார்த்தால்  நிச்சயம் இவள் நான்கு  நாட்களுக்கு மேல் தாங்குவாள் . அவளை கீழே கிடத்தியவுடன் எனது முன்பற்கள் என்னை விட வேகமாக அவள் கழுத்தை நோக்கி போவது போலிருந்தது ...

12 August 2012

இன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...



ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்தில் அவுட்டு வந்து விடுவான் ... அவுட்டு வருவதால் என் வாழ்க்கை மாறப்போவதில்லை , ஆனால் அவன்  கொண்டு வரும் மூணு கோடி ரூபாய் என் வாழ்க்கையை மாற்றப் போகிறது ... அவன் வருவதற்குள் நீங்கள் என்னை பற்றி தெரிந்து கொள்வது அவசியம் ... 

வாழ்க்கைக்கு எது முக்கியம் ?  மன நிம்மதி , சந்தோசம் , சந்ததி , பதவி , புகழ் என்று எவ்வளவையோ அடுக்கிக்கொண்டே போகலாம் , ஆனால் இவையெல்லாம் பணத்திற்கு முன்னாள் பம்மாத்து என்பது என்னைப் போல வாழ்க்கையில் அடிபட்ட எவனுக்கும் நன்றாகவே தெரியும் ... ஆமாம் பணம் மட்டும் தான் எனது கடவுள் , கர்த்தா , குரு எல்லாமே ... பணம் இல்லாததால் தான் பெற்றோர்களால் என்னை நினைத்தது போல வளர்க்க முடியவில்லை ... அவர்களிடம் பணம் இல்லாததை பற்றி நான் குற்றம் சொல்லவில்லை , ஆனால் அதை அடைவதற்காக அவர்கள் எந்த முயற்சியையும் செய்யாமல் விலங்குகள் போல வாழ்ந்துகொண்டிருந்ததை தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை ... 

அதனால் தான் எனக்கு விவரம் தெரிந்த வயதுக்கு மேல் அவர்களோடு இருக்க முடியாமல் சென்னைக்கு ஓடி வந்துவிட்டேன் ... கெட்டும் பட்டணம் போ என்பார்கள் , நான் பெரியவர்கள் சொன்னதில் செய்தது  இதை மட்டும் தான் ... முதலில் ஏதேதோ வேலை செய்து வயிற்றை கழுவிக் கொண்டிருந்த  என் வாழ்க்கை  பால் சேட்டின் நட்பு கிடைத்த பிறகு தான் மாறத்தொடங்கியது ... என் போன்ற படிக்காதவர்கள் கூடிய விரைவில் பணம் பார்ப்பதென்பது நடக்காத காரியம் , எனவே என்னைப் பொறுத்தவரை எப்படி பணம் சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமில்லை , எப்படியோ சம்பாதிக்க வேண்டும் ... சேட் மூலமாக இரண்டு மூன்று பொருட்களை கை மாற்றி விட்ட போது நல்ல பணம் கிடைத்தது , கிடைத்த  பணத்தை நண்பர்களுடன் உடனே குடித்தழித்தேன்.

இங்கே நண்பர்கள் என்று யாரையும் சொல்ல முடியாது , கடத்தல் தொழிலில் எவனும் எப்பொழுது வேண்டுமானாலும் எதிரியாக மாறலாம் , இருந்தாலும் ஒன்றாக அமர்ந்து குடிக்கும் போது எல்லோரும் சந்தோசமாகவே இருப்போம் ... குடிக்கு எவ்வளவோ சைடிஷ் இருந்தாலும் எங்களுக்கு அவுட்டு தான் ஊறுகாய் ... அவனுக்கு அவுட்டு என்பது இயற்பெயரா அல்லது யாராவது வைத்த பெயரா என்றெல்லாம் தெரியாது , ஆனால் நாங்கள் அப்படித்தான் கூப்புடுவோம் ... ஆறடிக்கு வளர்ந்திருந்தாலும் அவுட்டு அறிவா கிலோ என்ன விலை என்று கேட்பான் , அதனால் தான் சில ரிஸ்கான வேலைகளை அவனிடம் தள்ளி விடுவோம் , எங்களைப் பொறுத்தவரை அவுட்டு ஒரு பலிகடா ... இங்கே பாவ , புண்ணியமெல்லாம் பார்த்தால் பிழைப்பு நடத்த முடியாது ... 

அவுட்டு தான் இப்படி ஆனால் அவன் மனைவி அழகி , பேரழகி ... ஒரு முறை நல்ல போதையில் பெண்களை பற்றிய பேச்சு வந்தது , நானும் சேட்டும் போதையில் இருக்கும் போது மட்டும் தான் பெண்களை பற்றி பேசுவோம் , அது என்னவோ அந்த வஸ்து உள்ளே போய் விட்டாலே காம வெறி தலைக்கு ஏறி விடுகிறது...சேட் வழக்கமாக கூட்டிச் செல்லும் பெண்ணிடம் போக வேண்டாமென்று நான் ஏற்கனவே முடிவு செய்திருந்தேன் , என்னமோ சலித்து விட்டது , ஆனால் சேட்டுக்கு மட்டும் அவள் நடிகை என்பதாலோ என்னமோ அலுக்கவே இல்லை ... இந்த முறை நான் பிடிவாதமாக மறுத்துவிட்டேன் , வேறு எங்காவது போகலாம் என்று முடிவு செய்த பின் சேட் என்னை ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்றான் ... நான் அவளை பார்த்தவுடன் அசந்துவிட்டேன் , அவள் அவ்வளவு அழகு ... ஆனால் அவள் அவுட்டுவின் மனைவி என்று தெரியவந்ததும்  கொஞ்சம் அதிர்ச்சி , சேட் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாத போதே அவன் அடிக்கடி இங்கே வருகிறான் என்று தெரிந்து கொண்டேன் ...

" ஒன்னும் யோசிக்காத  இதெல்லாம் அவுட்டுக்கு தெரியாது , சேட்டுக்கு அப்புறம் நீ தான்" அவள் எத்தனை பேரிடம் இப்படி சொல்லியிருப்பாள் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு எனக்கு அப்போது நேரமில்லாததால் நான் வந்த வேலையில் இறங்கினேன் ... எல்லாம் முடிந்த பிறகு சேட்டுடன் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அவுட்டு வந்தான் .. " எப்போ வந்தீங்க சார் , சொல்லியிருந்தா நானே உங்கள கூட்டியாந்திருப்பேனே"  அவன் சொன்ன போது என் கண்கள் அவனை நேரடியாக பார்க்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டது ... அங்கிருந்து இருவரும் திரும்பி வரும் வழியில் தான் சேட் என்னிடம் அந்த விஷயத்தை சொன்னான் ... 

இது வரை சின்ன சின்ன சரக்குகளை கை மாற்றி விட்டு சில லட்சங்களை பார்த்த எங்களுக்கு இது போட்டியில் கலந்து கொள்ளாமலேயே கைகளில் கிடைக்கப் போகும் மூணு கோடி ... இந்த முறை கடத்தப் போவது விலையுயர்ந்த போதை வஸ்து , மாட்டினால் தொலைந்தோம் , அவ்வளவு சீக்கிரம் வெளியே வர முடியாது ... ஆனாலும் இந்த வாய்ப்பை விட எங்களுக்கு மனதில்லை என்பதால் ரிஸ்க் எடுக்க முடிவெடுத்தோம் ... வழக்கம் போல அவுட்டுவை வைத்து பொருளை கை மாற்றிவிடலாம் , அவன் மாட்டினாலும்  எங்களுக்கு பிரச்சனையில்லை , அவன் உயிரே போனாலும் எங்களை காட்டிக் கொடுக்க மாட்டான் ... இருவரும் முடிவு செய்த பின் அவுட்டு வீட்டிற்கு திரும்பி சென்றோம் ... 

வழக்கம் போல சில ஆயிரங்களை கொடுத்து விஷயத்தை சாதித்துக் கொள்ளலாம் என்று நினைத்த எங்களுக்கு அவுட்டுவின் மனைவி பெரிய ஷாக் கொடுத்தாள்.. "உயிரை பணயம் வச்சு உங்களுக்காக வேல செய்யுராறு , அதான் இந்த தடவ வரதுல சரி  பங்கு கொடுத்தீங்கன்னா , சொந்த ஊருக்கே போயி செட்டிலாயிடலாம்னு இருக்கோம் " அவள் தீர்க்கமாய் சொன்னதிலிருந்தே அவுட்டு மாதிரியில்லை என்று தெளிவாக தெரிந்தது ... " நீ நினைக்கிற மாதிரியெல்லாம் பெருசா ஒண்ணுமில்ல, வேணுமின்னா எப்பவும் தரத விட ஜாஸ்தியா தரோம் "  சேட் சொன்னவுடன்  , அவள் கோணலாய் சிரித்தபடி" என்ன மூணு கோடியா " என்று கேட்ட போதே அவள் நிறைய விஷயம் தெரிந்தவள் என்பது எங்களுக்கு தெளிவாக புரிந்தது ... நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம் ... எங்கள் இருவருக்குள்ளும் ஒரே எண்ணம ஓடவே நாங்கள் அவள் சொன்னபடி பங்கை இரண்டுக்கு பதில் மூன்றாய் போட முடிவெடுத்தோம் ... இதில் எதிலுமே சம்பந்தம் இல்லாதது போல் அவுட்டு எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ... அவனுக்கு இந்த பணம் ரொம்ப அதிகம் தான் என்றாலும் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை ... 

" மூணு கோடி கைக்கு வந்ததும் முதல்ல அவுட்டையும் , அவளையும் போட்டுரனும் " நான் மனதில் நினைத்ததையே சேட்டும் சொன்னான் ... நான் ஆமாம் என்பது போல தலையாட்டினேன் , அந்த நொடி சேட்டையும் போட்டுவிட்டால் மூணு கோடியும் எனக்கே என்று என் மனம் நினைக்கும் போதே உடல் சிலிர்த்தது ... இதோ நினைத்தது படியே அவுட்டு வேலையை முடித்துக்கொண்டு பணத்தோடு வந்து கொண்டிருக்கிறான் என்று சேட் செல்போனில் சொன்ன போதே என் திட்டத்தை மனதிற்குள் நான் பட்டை தீட்டிக் கொண்டிருந்தேன் ... சந்தோசமோ , துக்கமோ சேட் சரக்கடிக்காமல் இருக்க மாட்டான் , நான் ஏற்கனவே திட்டமிட்டபடி சரக்குடன் விஷத்தை கலந்து கொடுத்துவிட்டால் சேட் மூர்ச்சையாகி விடுவான் , அவுட்டு சரக்கடிக்க மாட்டான் , எனவே அவன் வந்தவுடன் பணத்தை எடுத்துக் கொண்டு கைத்துப்பாக்கியை  வைத்தே அவன் கதையை  முடித்து விடலாம் ... 

எங்கள் திட்டப்படி சேட் அவள் மனைவியை இந்நேரம் முடித்திருப்பான் , நினைக்கும் போதே என் செல்போன் சினுங்கியது ...  " சொல்லு சேட் " அவன் விஷயத்தை சொன்னவுடன் என் காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது ... " சரி நான் அவ பாடிய வர வழில டிஷ்போஸ் பண்ணிடுறேன் , நீ நம்ம அயிட்டத்த வாங்கி வை " அவன் அயிட்டமும் அவனுக்காக நான் வாங்கிய அயிட்டமும் தயாராகவே இருந்தன ... 
" வா சேட் எல்லாம் ரெடியா இருக்கு " போனை வைத்துவிட்டு ஒரு முழு சிகரெட்டை முழுவதுமாய் புகைத்தேன் ... சேட் வந்தவுடன் கத்தியின்றி ரத்தமின்றி அவன் கதை முடிந்தது , வாயெல்லாம் நுரையுடன் ஒரு பக்கம்  கோணிக் கொண்டே அறைக்குள் செத்துக் கிடந்தவனை வெறித்துப் பார்த்தபடியே இரண்டு சிப் அடித்தேன் ... 

எனக்கு புது வாழ்க்கையை காட்டியவனின் வாழ்க்கையை முடித்துவிட்டேன் , லேசாக ஏதோ ஒரு உணர்வு என்னைத் தாக்க அதை தவிர்ப்பதற்காக டி.வி யை ஆன் செய்தேன் ... வெஸ்டர்ன் ஆல்பத்திலிருந்து சுட்ட பாடலுக்கு தமிழ் பட ஹீரோயின் இடுப்பை ஆட்டிக் கொண்டிருந்தாள் ... டி.வி சத்தத்தை மீறி கதவை தட்டும் சத்தம்  கேட்கும் போதே வந்தது அவுட்டு தான் என்று எனக்கு விளங்கியது ... " இருடா வரேன் " சேட் செத்துக் கிடந்த அறையை சாத்தி விட்டு கதவை நோக்கி நான் போவதற்கு முன் டேபிளின் மேல்    துப்பாக்கி  இருப்பதை ஒரு முறை உறுதி செய்து கொண்டேன் ... " வாடா ஏதாவது சாபுட்றையா " வேகமாக மண்டையை ஆட்டினான் .. அவனிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு சேட்டுக்காக வாங்கி வைத்திருந்த உணவு பொட்டலத்தை அவனிடம் கொடுத்தேன் ... 

சேட் தான் சாப்பிடமாலேயே போய் சேர்ந்து விட்டான் , இவனாவது சாபிடட்டுமே என்ற எண்ணத்தை விட அவன் சாப்பிட்டு முடிப்பதற்குள் பணத்தை எண்ணி முடித்து விடலாம் என்ற எண்ணமே எனக்கு மேலோங்கியிருந்தது ... பணத்தை பல தடவை மோர்ந்து பார்த்துக் கொண்டேன் , அதை அழகாக பைக்குள் அடுக்கி வைத்து விட்டு கைகளில் உறைகளை மாட்டிக் கொண்டேன் , அவன் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ... வாசல் கதவு தாழ்ப்பாள் சரியாக  போட்டிருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பார்த்து விட்டு திரும்பிய போது தான் கூர்மையான ஏதோ ஒன்று என் வயிற்றுக்குள் வேகமாக இறங்கியது ... 

கைகளில் கத்தியுடன் அவுட்டு நின்று கொண்டிருந்தான் , அவன் கழுத்தை நெறிக்க நான் நினைப்பதற்குள் மறு முறை முன்பை விட வேகமாக கத்தி என் வயிற்றுக்குள் இறங்கியது ... மயக்கத்தில் கண்கள்  சொருக அவன் மேல் விழுந்த என்னை தள்ளி  விட்டு விட்டு  அவுட்டு பணம் இருந்த அறையை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருந்தான் ... கண்கள் சொருகி செத்துக் கிடந்த சேட் ஒரு முறை என் நி...னை..வு...க்..கு  வ..ந்....தா ... 

8 June 2012

சுமைகள் ... - சிறுகதை



தினமும் ஜாக்கிங் போவது என் வழக்கம் . கைகளை வேகமாக வீசிக்கொண்டு நடக்கும் பெரியவர் , சீரியல் கதைகளை பேசிக்கொண்டு ஓட்டமும் , நடையுமாக போகும் குண்டு பெண்கள் , வானம் தலையில் விழுந்து விடுமோ என்ற பயத்தில் அண்ணாந்து பார்த்துக் கொண்டே ஓடும் நடுத்தர வயதுக்காரர் என விதவிதமான மனிதர்கள் , விதவிதமான முகங்கள் . உடல் ஆரோக்கியம் என்பதை விட காலையில் இளஞ்சூரியனின் வெப்பத்தை வாங்கிக்கொண்டு , சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே போவதென்பது ஒரு அனுபவம் . இதை எத்தனை பேர் அனுபவிக்கிறார்கள் என்று தெரியவில்லை . உடலை விட வேகமாக ஓடும் மன ஓட்டங்கள் , முன்னோக்கி ஓட பின்னோக்கி போகும் சிந்தனைகள் .

நம் எல்லோரையும் விட வாழ்க்கை மிக வேகமாக ஓடுகிறது . அதற்கு எந்த கவலையுமில்லை . பல கோடி ஆண்டுகளாய் அது எல்லோரையும் பார்த்துக்கொண்டே தானிருக்கிறது . நாம் பிறப்பதற்கு முன் என்னவாய் இருந்தோம் , இறப்பிற்கு பின் எங்கே போகிறோம் என்ற கேள்வியை அநேகமாய் எல்லோரும் ஒரு சமயமாவது நமக்கு நாமே கேட்டுக்கொண்டிருப்போம் . இது போன்ற கேள்விகள் கடவுளின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொண்டுதான் போகின்றன . தீராத ஆசை கொண்ட ஆன்மாவிற்கு அடுத்த பிறவி நிச்சயம் உண்டு என்கிறார்கள் . எல்லோருக்கும் அடுத்த பிறவி உண்டா ? சென்ற பிறவியில் நாம் யார் ? மனிதனாய் தான் பிறந்திருப்போமா ? மனிதப்பிறவி பெருமிதம் கொள்ளத்தக்கது தானா ? தெரியவில்லை . பதில் தெரியாத கேள்விகளை அசை போட்டுக்கொண்டே ஓடுவதிலும் ஒரு தனி சுகம் .கண்டதை சிந்திக்கவில்லை என்றால் மனிதனாய் பிறந்து என்ன பயன் ?

ஏதேதோ நினைப்பில் ஓடிக்கொண்டிருக்கும் போது தான் அந்த கூட்டத்தை பார்த்தேன் . சுகம் ,துக்கம் என எல்லாவற்றிற்கும் மனிதர்கள் கூடுகிறார்கள் , ஆனாலும் தனியாய் தான் நிற்கிறார்கள் . அடிபட்டுக் கிடக்கும் சக மனிதனை பார்க்கும் போதும் ஆபீசிற்கு டைம் ஆகிவிட்டதா என்று மணிக்கட்டை பார்க்கும் பரபரப்பான மனிதர்கள் தான் இங்கு அதிகம் . அங்கு கூடியிருந்த சிறு கூட்டம் மனிதனுக்கானது அல்ல . அது ஒரு பூனையை வேடிக்கை பார்க்க சேர்ந்த கூட்டம் .

" ஆக்கும் , தெனமும் திருட்டு பால் குட்சிக்கினுர்ந்தது , இன்னிக்கு நல்லா சொம்புவுள்ள தலைய விட்டு மாட்டிக்கிச்சு " , பால் வித்தியாசமின்றி கூட்டத்துடன் உரசிக்கொண்டே சொன்னாள் அந்த பெண் . " கரிக்கிட்டா சொன்னம்மே " சொல்லிக்கொண்டே அவன் திருட்டுத்தனமாய் ஏனோ கண்ணடித்தான் . " இத்தோட ஒரே ரோதன சார் , தெனமும் என் வூட்டு மீன புட்சிக்குனு போயிடும் , இன்னிக்கு நல்லா மாட்டிக்கிச்சு " மீன் போன துக்கத்தை விட பூனை மாட்டிக் கொண்டதில் அவளுக்கு சந்தோசம் போல இருந்தது . " இப்படியே வுட்டா செத்துரும் " கூட்டத்தை ஏக்கத்துடன் பார்த்தான் அந்த சிறுவன் .

சொம்பில் கையை வைத்து இழுக்க பூனை அதிகமாய் திமிறியது . தினமும் பாலும் , மீனும் தின்று அதன் உடல் கொஞ்சம் கனத்திருந்தது . " ஐயோ , நகத்தால கீறிட்டது சார் " சொல்லிக்கொண்டே அவர் கையை விட பொத்தென்று விழுந்தது அந்த பழுப்பு நிற பூனை . ஏதோ ஆர்டர் கொடுத்து செய்தது போல தன் தலையோடு ஒட்டிக்கொண்டு இருந்த சொம்பை பூனை முன்னுக்கும் பின்னுக்கும் பலமாக ஆட்டிக் கொண்டிருந்தது . " பூனை முடி கொட்டினா பாவம் " மனதின் ஓரமாய் வந்த நினைப்பை ஓரங்கட்டி விட்டு இடுப்போடு பூனையை அணைத்து தூக்கினேன் . பத்தடி தூரத்தில் தான் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது . அவர்கள் ஏதாவது சாதனத்தை வைத்து பூனையை காப்பாற்றிவிடுவார்கள் என்பது என் நம்பிக்கை .

பூனையின் சாவை விட இப்படியே விட்டுவிட்டால் சாவிற்கு முன் அது அடையப்போகும் வேதனையை நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது . பூனையின் தலையை ஆக்ரமித்துக் கொண்ட சொம்பை போல் மனதிற்குள் தான் எத்தனை சுமைகள் . படிக்காதவனுக்கு படிப்பு , படித்தவனுக்கு வேலை , வேலைக்கு போகிறவனுக்கு சம்பளம் , சம்பளக்காரனுக்கு அன்றாடம் ஆகும் செலவுகள் , பணம் நிறைய இருப்பவனுக்கோ அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமேயென்ற கவலை . ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை , அது தரும் சுமை . பாலிற்கு ஆசைப்பட்டு மாட்டிக்கொண்ட பூனை போல நாமும் எதிலோ மாட்டிக்கொண்டு அதை விலக்கி வைக்க முடியாமல் சுமைகளுடனே சுற்றிக்கொண்டிருக்கிறோம் .

" அழுத்தி பிடிங்க சார் , நான் டிரில்லிங் மிசின்ல கட் பண்ணிர்றேன் " . அழுத்தி பிடிக்க பிடிக்க பெற்றோர் மேல் நம்பிக்கை இல்லாத டீன் ஏஜ் பசங்களை போல அது மேலும் திமிறியது . இது வேலைக்காவாது என்பது போல கொஞ்சம் பேர் கலையத்தொடங்க பூனை பிழைக்குமா ? சாகுமா ? என சிலர் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தார்கள் . " அதோட விதி அவ்வளவு தான் சார் " எனக்கு ஒத்தாசையாக இருந்த நபர் தனக்கு நேரமாவதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார் . மரணம் பெரிய விமோசனம் என்கிறார்கள் , அது சாவை சந்திப்பவனுக்கு தான் . சாவை அருகிலிருந்து பார்ப்பவர்களுக்கு அல்ல .

" கொஞ்சம் பொறுமையா இருந்தா காபாத்திரலாம் " என் குரல் ஏனோ கம்மியது . " யாராவது ஆஸா ப்ளேட் இருந்தா கொடுங்க " எனக்கு நம்பிக்கை கொடுத்தது அந்த குரல் . அந்த ஆஸா ப்ளேட் கூட உடனே கிடைக்கவில்லை . ஏதோ யாசகம் கேட்பவனைப் போல பார்த்தார்கள் . " ரொம்ப நேரமா போராடீனுக்குற , அத்த பாக்கவும் பாவமா இருக்குது , இந்தா ப்ளேட பிடி " கடைசியில் தன் மீனை தின்று விட்டதாக வருத்தப்பட்ட பெண்ணே தள்ளியிருந்த அவள் வீட்டுக்கு சென்று ப்ளேட் கொண்டு வந்து கொடுத்த போது இவளை தப்பாக நினைத்து விட்டோமே என்று கொஞ்சம் வெக்கமாக இருந்தது . சூழ்நிலையே மனிதர்களை அடையாளம் காட்டுகிறது . அதுஅடையாளம் காட்டுவதற்குள் நாம் உணர்சிவசப்பட்டு முடிவுகள் எடுத்துவிடுகிறோம் .

மனதை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கும் காமம் போல மெதுவாய் அவர் சொம்பின் இடைவெளிக்குள் ஆஷா பிளேடை நுழைத்து நெம்பிக் கொண்டிருந்தார் . " கடைசியா ட்ரை பண்ணுவோம் , இதுக்கு மேல நெம்பினா கழுத்து அறுந்துரும் " அறுப்பவர் சொல்ல , அப்படியொரு அசம்பாவிதம் நடந்து விடக்கூடாதென கடவுளை வேண்டிக்கொண்டேன் . இப்படி சித்திரவதையில் சாவதை விட உடனே செத்து விடலாம் என்ற எண்ணமும் ஏனோ தலை காட்டியது . " இந்த தடவ கண்டிப்பா காப்பாத்திடலாம் " திடமாய் சொன்னேன் . அந்த நிமிடம் அந்த உயிரை காப்பாற்றி விட வேண்டுமென்பதே எனக்கு தலையாய குறிக்கோள் போல இருந்தது .

பூனையின் மனதில் இப்பொழுது என்ன ஓடிக்கொண்டிருக்கும் . சில பேர் அதன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று அதற்கு தெரியுமா? முகமே தெரியாத பின் வரும் சந்ததிக்கு பணம் சேர்த்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் வயிற்று பசிக்காக சொம்பிற்குள் தலையை விட்ட பூனைக்கு மட்டும் ஏனோ இந்த கதி . ஒரு வேலை அது கிளம்பும் போது மனிதன் குறுக்கே போயிருப்பானோ ?!. இது போன்றெல்லாம் நினைப்பதற்கு பூனைக்கு வாய்ப்பில்லை . பாவம் பூனைக்கு ஐந்தறிவு .

" சார் , கொஞ்சம் அழுத்திப் பிடிங்க , பாதி எடுத்தாச்சு " , மீதியையும் எடுப்பதற்காக அதன் மிருதுவான உடலின் மேல் என் கைகளை இறுக்கினேன். இருந்த கொஞ்சம் பேரும் பூனை பாய்வதற்கு ஏதுவாக வழியை விட்டு பின் பக்கமாக நின்று கொண்டார்கள் . பத்து , ஒன்பது , எட்டு ஒவ்வொன்றாக மனதிற்குள் எண்ணிக்கொண்டேன் . ஒன்று வரை எண்ணி முடிக்கும் முன்னே பல நாள் பசியில் இருந்தவன் உணவை பார்த்தவுடன் ஓடுவதைப் போல விருட்டென்று ஓடியது அந்த பூனை .

" எப்படியோ ஒரு வழியா காபாத்திட்டோம் " வேடிக்கை பார்த்த ஒருவர் மகிழ்ச்சியாக சொன்னார் . அங்கே எல்லோர் முகத்திலும் வெற்றிகரமாக ராக்கெட்டை பறக்க விட்ட விஞ்ஞானிகளை போல ஒரு பெருமிதம் . சுமை இறக்கிவிடப்பட்டவுடன் சிட்டாய் பறந்த பூனையின் திசையை பார்த்தபடியே அவரவர் மன சுமைகளுடன் ஒவ்வொருவராய் பிரிந்தோம் .

7 February 2012

விடியல் ... ( நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை )



" டைரக்டர் சார் , உள்ள வாங்க , கூப்புடறாங்க "

ஆபீஸ் பாய் அப்படி அழைத்தவுடன் வெங்கட்டிற்கு காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது ... இந்த ஒற்றை வார்த்தைக்காக பதிமூன்று வருடங்களை தொலைத்தது அவன் கண்களிலும் , முடிகள் இல்லாத முன் நெற்றியிலும் நன்றாகவே தெரிந்தது ... 

சினிமாவில் வருவது போல சென்னைக்கு வந்தவுடன் ஒரே பாடலில் பெரிய இயக்குனராகி விடுவோம் என்று வெங்கட்  கனவு காணவில்லை தான் , இருந்தாலும் கடந்து வந்த பாதை இவ்வளவு கடுமையாக இருக்கும் என்றும் கொஞ்சமும் நினைக்கவில்லை ... நிச்சயமில்லாத வாழ்க்கை , நிரந்தரமில்லாத வருமானம் , நிம்மதி தொலைந்த இரவுகள் என ஒவ்வொரு நாட்களுமே அவனுக்கு ஒரு யுகமாக கடந்தன ... 

கூட படித்த நண்பர்களெல்லாம் காதல் , கல்யாணம் என்று செட்டிலாகி விட ஒரு நாள் நாமும் இயக்குனராகி விடுவோம் என்ற நம்பிக்கை மட்டுமே அவனை  உந்து சக்தியாக இயக்கிக்கொண்டிருந்தது ... பட வேளைகளில் ஈடுபட்டிருக்கும் போது பொழுதுகள் இயந்திரத்தனமாக கழியும் ... முதலில் பயமுறுத்திய தனிமையும் போக போக மிகவும் பழகி விட்டது , ஆனால் எங்கோ எதிர்பாரா விதமாக சொந்தக்காரர்களையோ , பழைய நண்பர்களையோ சந்திக்க நேரும் போது தான் அவனுக்கு பெரும் சங்கடமாக இருக்கும் ... 

ஒன்று , அவனுடைய பயணத்தை புரிந்து கொள்ளாமல் மாத சம்பளத்தில் செட்டிலாகி விட்ட அவன் வயதை ஒத்த மற்றவர்களை ஒப்பிட்டு பேசி வெறுப்பேற்றுவார்கள் , இல்லை சினிமா பற்றி எல்லாம் தெரிந்தது போல அறிவுரை செய்து நேரத்தை வீணடிப்பார்கள் , இதனால் வெங்கட் யாரையும் சந்திப்பதையே தவிர்த்து வந்தான் ... அவர்கள் குறிப்பிடும் மாத சம்பளக்காரர்கள் மனதுக்குள் சினிமா ஆசையை முற்றிலும் புதைக்க முடியாமல் புலம்புவதை யாரரிவார்கள் ... 

ஊரில் விவசாயத்தை அப்பாவும் , தம்பியும் கவனித்து வந்ததால் அவர்களுக்கு பணம் அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லையென்றாலும் , அவர்களை தொந்தரவு செய்ய மனமில்லாததால் முடிந்த அளவு வாயை கட்டி , வயித்தை கட்டி வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருந்தான் வெங்கட் ...

இதோ கனவு நெனவாகி அவன் சொன்ன கதை தயாரிப்பாளருக்கு மிகவும் பிடித்து போய் , படத்திற்கான டிஸ்கசனில்  இருக்கும் போது தான் , தம்பியிடமிருந்து அப்பா உடல் நிலை மோசமாகிவிட்டதென சொல்லி அழைப்பு வந்தது ... இந்த விசயத்தை நேரடியாக சொல்லி விட்டு ஊருக்கு சென்று வரவே வெங்கட் வந்திருந்தான் ...

" வாங்க வெங்கட் உட்காருங்க ,  டிஸ்கசன்லாம் எப்படி போயிட்டு இருக்கு?"

" நல்லா போயிட்டு இருக்கு சார் "

 " கதைல கேன்சர் வந்து ஹீரோ சாகறதா க்ளைமாக்ஸ் வச்சீங்க பாருங்க , அது எல்லாரையும் ரொம்பவே பாதிச்சிருச்சு , அதுக்காகவே படம் நிச்சயம் ஜெயிக்கும் "

" ம் ம் சார் "

 " என்ன வெங்கட் உங்க முகமே வாடியிருக்கு , ஏதாவது பிரச்சனையா ? "

 " ஆமா சார் , அப்பாவுக்கு உடம்பு ரொம்ப சரியில்லைன்னு தம்பிட்ட இருந்து போன்  வந்துச்சு , அதான் ஊருக்கு  போகலாம்னு  "

" என்ன வெங்கட் யோசிக்கிறீங்க , உடனே போயிட்டு வாங்க , பணம் ஏதாவது வேணுமா ? "

" அதெல்லாம் வேணாம் , ரொம்ப நன்றி சார் , நான் வரேன் "

 " ஒ,கே, அவசரப்படாம பொறுமையா இருந்து பாத்துட்டு வாங்க "

அவரிடம் விடைபெற்று விட்டு வேகமாக வெளியேறினான் வெங்கட்...

தன் சினிமா ஆசையை சொன்னவுடனேயே கோபப்படாமல் , எதிர்காலத்தை பற்றி பேசி பயமுறுத்தாமல் அவன் ஆசைக்கேற்ப செய்யும் படி அனுப்பி வைத்த அப்பாவை நினைக்கும் போதே வெங்கட் கண்களில் கண்ணீர் சுரந்தது...காடு , மேடு என்று குடும்பத்துக்காகவே சுற்றி தன்னை மறந்த ஒரு ஜீவன் ... இத்தனை வயதாகியும் இன்று வரை உடன் பிறந்த தங்கைகளுக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவிகள் செய்து கொண்டிருக்கும் நல்ல மனிதர் ...

வீட்டுக்குள் நுழைந்தவுடன் அம்மாவின் அழுகையுடன்  கூடிய விசாரிப்புகளுக்கு பதில் சொல்லி விட்டு தம்பியை தனியாக தோட்டத்திற்கு அழைத்து சென்றான் வெங்கட் ...

" என்ன ஆச்சுடா ? போன தடவ வந்த போது கூட நல்லா தான இருந்தாரு "

" இல்லன்னே , முதல்ல கழுத்துல ஒரு கட்டி மாதிரி வந்துச்சு , அப்பாவும் அத பெரிசு படுத்தாம , ரொம்ப வலிக்கும் போது மட்டும் மாத்திர போட்டுக்குட்டு விட்டுட்டாரு "

" என்னடா இது ? நீயாவது டாக்டர்ட்ட கூட்டிக்கிட்டு போனியா ? "

" போனேன்னே , அவங்க ஏதேதோ சொல்றாங்க "

 " என்னடா சொல்றாங்க ? "

 " அப்பாவுக்கு கேன்சராம்னே , உடனே ஆஸ்பத்திரியில சேக்கணுமா , எனக்கு ரொம்ப பயமா இருக்குன்னே "

தம்பிக்கு முன்னாள் அழுதால் அவன் மேலும் உடைந்து  விடுவான் என்பதால் அவனை தன் தோள்களில் சாய்த்து ஆறுதல் சொன்னான் வெங்கட் ...

உள்ளூர் டாக்டரின் அறிவுரையின் படி பெரிய ஆஸ்பத்தரியில்  கேன்சருக்கு உண்டான தனி பிரிவில் அப்பாவை சேர்த்து விட்டு அங்கேயே தங்கினான் வெங்கட் ... விவசாயத்தை பாதியில் விடமுடியாததாலும் , மற்ற ஏற்பாடுகளை செய்யவும் அம்மாவும் , தம்பியும் கிராமத்திலேயே இருந்தார்கள் ...

கட்டுமஸ்தான் போன்ற அப்பாவின் உடல் வாகு நன்கு இளைத்திருந்தது  , கொஞ்சம் நிறம் கூட மாறியிருப்பது போல உணர்ந்தான் வெங்கட் ... ஆஸ்பத்திரியில் பலதரப்பட்ட மனிதர்களை கேன்சர் என்ற வியாதி ஆக்ரமித்திருந்தது ...வந்த சில நாட்களிலேயே நோயாளிகளும் , உறவினர்களும் வெங்கட்டிற்கு நன்றாக பரிச்சியமானார்கள்  , அப்படி தான் சுதாகரும் அவனுக்கு நன்றாக நட்பானார். அவரை முதலில் பார்த்த போது யாருக்கோ உதவி செய்ய வந்தவர் என்று தான் நினைத்திருந்தான் , பிறகு அவரும் ஒரு கேன்சர் நோயாளி என தெரிய வந்த போது அவனால் நம்ப முடியவில்லை , அந்த அளவுக்கு அவர் உற்சாகமாக இருந்தார் ...

தமிழ் சினிமா என்ற வட்டத்துக்குள்ளேயே இத்தனை காலம் கழித்தவனுக்கு அரசியல் , வணிகம் , இலக்கியம் , உலக சினிமா இதை பற்றியெல்லாம் அவர் தெளிவாக பேசும் போது மிகவும் சுவாரசியமாக இருந்தது ... அவரிடம் இருந்து வாங்கிய உலக மொழிபெயர்ப்பு நாவலை திரும்ப கொடுக்க போகும் போது அவர் அறையிலிருந்த அசாதாரண கூட்டம் அவனுக்கு ஏதோ அபாயத்தை உணர்த்தியது ...

சுதாகர் உயிருடன் இல்லை என்பதை அவனால் நம்ப முடியவில்லை , இரண்டு மணி நேரத்திற்கு முன் தன்னுடன் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தவர் இன்று உயிருடன் இல்லை என நினைக்கும் போது அவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது ...

சுதாகர் சொன்ன வார்த்தைகள் அவன் முன் நிழலாடின ,

" சார் , எல்லாரும் ஒரு நாள் சாக தான் போறாங்க , என்ன வியாதி வந்தா கொஞ்சம் அவஸ்தை அவ்வளவு தான் ... கொஞ்சம் முன் கூட்டியே நான் டெஸ்டெல்லாம் பண்ணி கண்டுபிடிச்சிருந்தா கட்டுப்படுத்தியிருக்கலாம் , ஆனா அதுக்காக நான் சோர்ந்து போகல   , என்னால முடிஞ்ச வரைக்கும்  கேன்சர் பத்தின விழிப்புணர்வ பரப்பிக்கிட்டு தான் வரேன் , நீங்களும் பாசிட்டிவாவே இருங்க , அப்பாவ ஜாக்கிரதையா பாத்துக்கிடுங்க " ..

அப்பாவின் நிலைமைக்காக டாக்டர்களையும் , கடவுளையும் சாடிக்கொண்டிருந்த வெங்கட்டிற்கு சுதாகரின் வார்த்தைகள் யதார்த்தத்தை உணர்த்தின ... அப்படிப்பட்டவர் இன்று உயிருடன் இல்லையென்பதும் நிதர்சனம் என நன்றாகவே உணர்ந்திருந்தான் வெங்கட் ...

அப்பாவுக்கு மிகவும் வயதாகிவிட்டதால் ஆபரேஷன் சாத்தியமில்லை என டாக்டர்கள் சொல்லவே , இனி வரும் நாட்களையும் அவருடனே கழிக்கலாமென ஊரிலேயே தங்கிவிட்ட வெங்கட் , சில மாதங்கள் கழித்து அப்பாவும் இறந்துவிடவே , அவரின் நினைவுகளுடனும் , அம்மாவின் ஆசீர்வாதத்துடனும்  சென்னைக்கு திரும்பினான் ...

" விசயத்தை கேள்விப்பட்டவுடனேயே ரொம்ப கஷ்டம் ஆயிருச்சு வெங்கட் , உடனே புறப்பட்டு வரணும்னு நினச்சேன் , ஆனா ஒரே வேல தப்பா எடுத்துக்காதீங்க "

 " பரவாயில்ல சார் , அதெல்லாம் ஒண்ணுமில்ல "

" எப்படி வெங்கட் வேலைய ஆரம்பிச்சுரலாமா  ? "

 " ஒ.கே சார் , ஆனா கதையில் ஒரு சின்ன சேஞ்சு ,  க்ளைமாக்ஸ்ல கேன்சர் வந்து ஹீரோ சாகல , எப்படியும் குணப்படுத்திடலாம்னு நம்பிக்கையோட ஹீரோயினும் அவன்  கூட சேர்ந்துடறாங்க "

" என்ன வெங்கட் , இதெல்லாம் செட்டாவாது  , நான் எத்தனை வருசமா சினிமாவுல இருக்கேன் , அவன் செத்தா தான்யா  சிம்பதி வரும் , படம் ஓடும் "

 " படம் ஒடனும்றதுக்காக  ஒரு நெகடிவ்வான விசயத்த நான் பரப்ப விரும்பல சார் "

" என்னைய்யா  பொழைக்க தெரியாத ஆளா இருக்க ! , சினிமா மட்டும் எடுக்கணும் , அனாவசிய சிந்தனையெல்லாம் கூடாது "

" சினிமாவுல இருக்கறவங்களுக்கும் சமூக பொறுப்புணர்வு இருக்கணும்னு  நம்பறவன்  சார் நான் "

" இப்ப முடிவா என்ன தான் சொல்றீங்க ? "

 " க்ளைமாக்ஸ்ல பாசிடிவ் என்ட் வைக்கிறேன் சார் "

" உங்கள ஒ.கே பண்ணதுக்கு காரணமே அந்த க்ளைமாக்ஸ் தான் அத மாத்தறதா இருந்தா எனக்கு நீங்களே வேணாம் "

" பரவாயில்ல சார், ஒரு நெகடிவ்வான விசயத்த சொல்லி என் வாழ்க்கைய நான் ஆரம்பிக்க விரும்பல , கதைய மாத்தி நிச்சயம் நான் டைரக்ட் பண்ணுவேன் "

 " அது அவ்வளவு சுலபமில்ல ,சினிமாவுல வாய்ப்பு கிடைக்கறது எவ்வளவு  கஷ்டம்னு உங்களுக்கு நல்லாவே தெரியும் , இந்த வாய்ப்புக்காக எவ்வளவு நடையா நடந்தீங்கன்னு மறந்துட்டீங்களா ? "

" நான் எதையுமே மறக்கல சார் , ரொம்ப நன்றி , வரேன் "

சொல்லி விட்டு எழுந்தவனை தயாரிப்பாளர் வேற்றுகிரகவாசியைப் பார்ப்பது போல பாத்தாலும் , அதைப் பற்றி கவலைப்படாமல் தன்னம்பிக்கையுடன் திரும்பி நடந்தான் வெங்கட் ... 

21 October 2011

வேர்கள் – சிறுகதை...

     
    மாலை சூரியன் மறைந்து , இரவின்  முழு நிலவு வர தாமதப்பட அதைக் கண்டிப்பது போல் கண் சிமிட்டி , சிமிட்டி எரிந்து கொண்டிருந்தது அந்த நடைபாதை மின்விளக்கு....நீளமான பெஞ்சின் ஓரத்தை காக்கா எச்சம் குத்தகைக்கு  எடுத்திருக்க ,பெஞ்ச் நடுவில் தூக்கமா , சிந்தனையா என 
பார்ப்பவர்கள் குழம்பும் படி கைகள் கட்டி அமர்ந்திருந்தார் சிவசங்கரன்....

   " என்ன ஓய் நல்ல தூக்கமா..? கேட்டவருக்கு சிவசங்கரனைப் போல அறுபத்தைந்து வயது இருக்கும், அவர் தினமும் வாக்கிங் போவார் என்பதை தொப்பையில்லாத உடல்வாகும் , முகத்தில் வழியும் வியர்வையும்  சொல்லாமல் சொல்லின....

   " அதெல்லாம் ஒன்னும் இல்ல நடராஜன் , இன்னிக்கு என்னமோ ரொம்ப நடக்க முடியல அதான் அப்படியே சித்த  நேரம் உட்கார்ந்தேன் "

   " அப்புறம் வேற என்ன சேதி "

   அவர்கள் பேச்சு சிறிது நேரம் கிரிக்கெட் , உள்ளாட்சி தேர்தல் ,  அன்னா ஹசாரே என்று நீண்டது ...

  " மத்தபடி வீட்டு சமாச்சாரம்லாம்  எப்படி ?..என்று ஆரம்பித்தார் நடராஜன்...

   " பெருசா ஒன்னும் இல்ல ,  மூத்த பையனுக்கு பிரமோசன் வந்து சம்பளம் ஒரு லட்சத்தை தாண்டியாச்சு...ரெண்டாவது பையனும் , மருமகளும் வேலைக்கு போறதுனால அங்கயும் ஒரு குறையும் இல்ல..என் பேரன் கிளாஸ் பஸ்ட் வந்திருக்கான் " சொல்லும் போதே அவர் முகத்தில் பெருமிதம் பொங்கியது ...

  " ரொம்ப சந்தோசம்..என் பையனும் ஸ்ரீபெரும்புதூர்ல மூணாவது வீடு வாங்கிட்டான்..நல்ல இன்வெஸ்ட்மென்ட் , ரெண்டு வருசத்துலேயே டபுள் ஆயிடும்னு சொல்றாங்களாம்"

  " ஆமாமா , அந்தக் காலம் மாதிரி இல்ல..இந்தக் காலத்து பசங்க சம்பாதிக்கறதுலையும் , சேக்கருதலையும்   ரொம்ப தெளிவா இருக்காங்க , அதிலயும் அவன் காலேஜ் படிக்கும் போது ஒரு தடவ ஆக்சிடென்ட் ஆகி ஆஸ்பத்திரில கெடந்தப்போ ,  மூஞ்சியெல்லாம் ரத்தத்தோட ஒரு நிமிஷம் கூட பாக்க முடியல , எவ்வளவோ கஷ்டப்பட்டு காப்பாத்துனோம் . இப்போ அவன் இருக்கற நிலமைய பாக்கறப்ப ரொம்ப பெருமையா இருக்கு "

   " நாம  தான் எவ்வளவோ கஷ்டப்பட்டாச்சு , பசங்க நல்லா இருக்கணும், என் செட்டில்மென்ட்  பணம் முழுசையும் பையன் மேற்படிப்புக்கு செலவு செஞ்சப்போ சொந்தக்காரங்க எல்லாம் " பொழைக்க தெரியாதவன் "னு என் காது படவே பேசினாங்க, இப்ப என்ன ஆச்சு பாத்தீங்களா , இவன் சம்பாதிக்கறத பாத்து எல்லாம் மூக்கு மேல விரல வைக்குறாங்க "

   " அது சரி தான்,  நல்லது , கெட்டது எது நடந்தாலும் சொந்தக்காரன் " நான் தான் அப்பவே சொன்னேன்லம்பான் " , என்று சிவசங்கரன் நாட்டு நடப்பை சொல்லி சிரித்தார்...

    தொடர்ந்து " நானும் என்ன பிரச்சனை வந்தாலும் பசங்களுக்கு ஒரு குறை வைக்கல , என் பொண்டாட்டி சொல்லியே கேட்கலையே, அவ நகையை வச்சு தான் பசங்க படிப்ப சமாளிச்சேன் , இதெல்லாம் பாக்க அவளுக்கு தான் குடுத்து வைக்கல , மகராசியா போய் சேந்துட்டா "... ,கொஞ்சம் கண்  கலங்கியபடியே வானத்தை நோக்கி பார்த்த சிவசங்கரனை ஆசுவாசப்படுத்துவது போல் தோள்களில் கை போட்டார் நடராஜன்....

   " விடுங்க , சிவசங்கரன் . சின்ன குழந்தை மாதிரி , பசங்க நல்லா இருக்கறத பாத்து அவங்க ஆன்மா நிச்சயம் சந்தோசப்படும் "...

   வாய் சமாதானம் சொன்னாலும் , மனைவியை இழந்த சோகத்தை அவர் கண்கள் காட்டிக்கொடுத்தன...சிறிது நேர வெற்றிடத்தை மிதமாக வீசிய காற்றும் , மர அசைவுகளும் நிவர்த்தி செய்தன..

   " டைம் எட்டு இருக்காது சிவசங்கரன் "

   " ம்..ம்..இருக்கும் , சாப்பிட போகணும், எல்லாரும் காத்திருப்பாங்க "...

   " சரி வாங்க போகலாம் "

    இருவரும் மெதுவாக " சரணாலயம் " என்ற  முதியோர்கள் மறு வாழ்வு மையத்தை நோக்கி நடந்தார்கள்....

12 October 2011

வெறி நாய் - சிறுகதை ...

                           

     அந்த இரயில்வே ஸ்டேஷனில்  எப்பொழுதும் அவ்வளவாக ஆள் நடமாட்டம் இருப்பதில்லை..சின்ன ஸ்டேஷன் என்பதால் போலீசுக்கும் அங்கு பெரிதாக வேலை இருக்காது..அவ்வப்போது கேட்கும் இரயில் ஓசையை தவிர , நிரந்தரமாய் கேட்பது அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் உடல்  இளைத்த கருப்பு நாயின் குரைப்பும் , அதை அடக்க  குருட்டு பிச்சைக்காரன் எழுப்பும்  தடிச்சத்தமும் ...

     இந்த நேரத்தில் , அதுவும் ஆள் அரவமற்ற இடத்தில் தலை நிறைய மல்லிகைப்பூவுடனும் , மாநிறத்தை சிவப்பாக மாற்றக்கூடிய முயற்சியில் தோல்வியடைந்த மேக்-அப் புடனும் முப்பது வயதுக்கு மிகாத தோற்றமுடைய அந்த பெண் ஏன் அமர்ந்திருக்கிறாள் என்று அவளை கடந்து செல்லும் வெகு சிலரை போல நீங்களும் புருவம் உயர்த்தலாம் ... அவள் கண்களை சற்று நேரம் உற்றுப்  பார்த்தால் அவள் யாருக்காகவோ ஆவலுடன் காத்திருப்பது  புரியும் ...

    அவள் முகத்தில் இப்போது பிரகாசம் ..  ."  ஏன் இத்தன லேட்டு ? எம்மா நேரமா காத்து கிடக்கிறது ! ? கொஞ்சம் பொய் கோபத்துடன் அவள் சிணுங்கினாள் ...

    " ஏன் கோவிக்கற   , வேலைய முடிச்சுப்புட்டு வர வேணாமா "

   " ஆமா கலெக்டர் வேல "

   " கலெக்டர் வேல இல்லன்னாலும் கவெர்மென்ட் வேலைல "

   " இத்த சொல்லியே ஆள மடக்கிப்புடு "

   " இந்தா மொதல்ல இந்த அல்வாவ சாப்புடு "

   " ஏய் ! கடசில அல்வா தான் கொடுக்கப்போறேன்னு சொல்லாம சொல்றியா ?

   " பிடிக்குமேனு வாங்கியாந்தா ரொம்ப தான் வார்றியே " சொல்லிக்கொண்டே திரும்ப முயன்றவனை அவள் கைகள் இறுக்கியணைத்தன  ... அவர்கள் செய்கையில் வெட்கப்பட்டு நிலா சிறிது நேரம் மேகத்திற்குள் மறைந்தது ..



   " எவ்வளவு நாள் தான் இப்படி சந்துலயும் , டேசன்லையும் மீட் பண்றது "

   " கொஞ்ச நாள் பொறுத்துக்க , நம்ம நண்பன் வீடு காலியாவுது " சொல்லிக்கொண்டே கண் சிமிட்டினான் ...

    " யாரு , வெளக்கமாத்துக்கு சட்ட போட்ட மாதிரி வெட வெடன்னு இருப்பானே அவனா ?.. அவனும் அவன் பார்வையும் ... சுத்தமா சரியில்ல "

   " ஆமா அவன் கூட என்ன குடும்பமா நடத்த போற , சாவிய கொடுத்துட்டு அவன் பாட்டுக்கு போவ போறான் "

   " அது சரி , ஏற்கனவே ஒருத்தன் கூட குடும்பம் நடத்தறதே கஷ்டமா இருக்கு , அதுல இது வேறவா ? "

   " ஊருக்கு போனார்னு சொன்னியே எப்ப வராரு ? "

   " ஆமா அவர் போய் ரெண்டு நாளாச்சு , என்ன பிரயோஜனம் ...ம்ம் ..ஒன்னத்தையும் காணோம் "

   " நான் என்ன பண்றது அவ கண்ல மன்ன தூவிட்டு வரதுக்குள்ள போதும்  போதும்னு  ஆயிருது , அவள போட்டுத்தள்ளுனாதான் நிம்மதி "  ,  பெருமூச்சு விட்டவனின் வாயை பொத்தினாள் அவள் ...

   அவன் ஒரு நிமிடம் அவளை உற்று பார்த்து விட்டு " என்ன தான் இருந்தாலும் நீயும் ஒரு பொம்பளதான்னு நிரூபிச்சுட்ட " என்று சொன்னான் ...

   " அதெல்லாம் ஒன்னும் இல்ல , நீ அவள போட்டுத்தள்ளிட்டு உள்ள போய்ட்டேன்னா அப்புறம் ஏன் கதி ? "

   " அத்தானே பாத்தேன் , நீயாவது அவ மேல இரக்கபடறதாவது "
வாய் பேசிக்கொண்டிருந்தாலும் கைகள் அவளிடம் எதையோ தேடிக் கொண்டிருந்தன ...

                 
   " உர்ர்ர் , உர்ர்ர் " அந்த சத்தம் இவர்களை ரொம்பவே தொந்தரவு செய்தது ...

   " மொதல்ல அந்த நாய துரத்து , கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடுதா ?...

அவள் சொன்னவுடன் ,  அவன் கையில் கிடைத்த எதையோ அதன் மேல் விட்டெறிய , அந்த கருப்பு நாய் அதற்கு பயந்தது போல பின்வாங்கி திரும்பவும் வந்து லொள் என்றது ...

     " சனியன் , இந்த நாய பாத்தாலே எனக்கு ஆவாது , வெறி நாய் மாதிரி இருக்கு ,சுத்தமா வெவஸ்தையே கெடையாது ,  துரத்து ! ... திரும்பவும் அவள் உசுப்பேற்ற அவன் கல்லை பொறுக்கிக்கொண்டு நாயை துரத்தி  ஓட ,  இந்த சத்தத்தில் எரிச்சலடைந்த குருட்டு பிச்சைக்காரன் ,

     " இந்த நாய்ங்களுக்கு வேற வேலையே இல்ல " என்று முனகியவாறு திரும்பிப்படுத்தான் ... 

7 September 2011

சந்திப்போம் பிரிவோம்...- சிறுகதை

   
    இரயில் பயணங்களின்  போதெல்லாம் பழைய நினைவுகள் தட தட என மனதுக்குள் ஓடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது...சுரேஷ் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல...ஆனாலும்  அவன் எப்போதும் அவள் நினைவிலிருந்தாலும்  இன்னும் சில  நிமிடங்களில் அவளை பார்க்க போகிறோம் என்று  நினைக்கவில்லை...

     அவள் பெயர் ரேவதி , பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் அழகு..  இருவரும் காதலித்தார்கள்...இவர்கள் காதல் கல்லூரி முழுவதும் பிரபலம்...இன்று  அவள் வேறொருவன் மனைவி...அவன் கனவுகளில் வந்தவள்  இன்றோ வெறும்  நினைவுகளாய்...

   கல்லூரி நாட்களில் எப்போதும் நன்பர்களுடனே இருப்பவன் கடந்த ஆறு வருடங்களாக தனியாளாகவே இருக்கிறான்..அதுவே அவனுக்கு பிடிக்கிறது...தனிமையை நிரப்ப சினிமாவும், புத்தகங்களும்...கூடவே சில உதவி இயக்குனர்களும், அவர்களுடன் சினிமா பற்றிய விவாதங்களும்...


    இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்தில் சென்னைக்கு வந்து இத்தனை வருடங்களில் தனிமை,  துக்கம், அவமானம் எல்லாம் அவனுக்கு பழகி விட்டது...ரேவதியின் பிரிவு கொடுக்காத துக்கமா ? இல்லை அவள்  குடும்பம் தராத அவமானமா?.."ரேவதி" அவனால் எந்த நிலையிலும் மறக்க முடியாத பெயர்...

    முதல் காதலையும், அதோடு முடிந்த காதலையும் யாரால் தான் மறக்க முடியும்..இரயில் தாமதமாக வரும் என அறிவுப்பும் வரவே நினைவுகளில் மூழ்கினான் சுரேஷ்...

     'என்ன சுரேஷ்,பயமா இருக்கா ? காலேஜ் முடிச்சு ரெண்டு    வருஷம் ஆச்சு..இன்னும் வீட்ல பேசலேனா எப்படி ?..ரேவதி கேட்டவுடன் ஏதோ சிந்தனையில் இருந்தவன் சட்டென்று நிமிர்ந்தான்...

    "இல்ல இல்ல கண்டிப்பா பேசணும்,ஆனா இப்ப தான் என் ப்ரோக்ராம்லாம் லோக்கல் சானல்ல வர ஆரம்பிச்சுருக்கு..இன்னும் ஒரு வருஷம் போச்சுன்னா கொஞ்சம் ஸ்டடி ஆயிடுவேன்"...

   "ம்ம்..அப்புறம்  என் புருசனோட உட்காந்து உன் ப்ரோக்ராம் பாப்பேன் பரவாயில்லையா ?...

   "என்ன ரேவதி இப்படி சொல்ற ?

   "வேற எப்படி சொல்வாங்களாம்..நானே வீட்ட இந்த ரெண்டு வருஷம் சமாளிக்கறுதுக்குள்ள போதும், போதும்னு ஆயிருச்சு...நான் உனக்கு
வேணும்னா  என் வீட்டுக்கு நாளைக்கு நாலு மணிக்கு வந்து அப்பாட்ட
பொண்ணு கேளு".. அவள் சொல்லிவிட்டு விறு விறு வென சென்று விட சென்ற தடத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் சுரேஷ் ...
                                
                
     காதல் இருவர் சம்பத்தப்பட்டது,  ஆனால் கல்யாணம் இரு  குடும்பம் சம்பத்தப்பட்டது எனவே  பல கேள்விகள் முளைக்கின்றன..அங்கும் முளைத்தது...

     "சார்,உங்க பொண்ண எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு, அவளுக்கும் தான், எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்கன்னா   நல்லா இருப்போம்"

     "என்னடா , ஏதோ பொண்ணோட   கூட படிச்சவன்னு ஒட்கார வைச்சு பேசினா என்னமோ உளர்ற"

    "இல்ல சார், உங்க பொண்ணு சொல்லி தான் வந்தேன் "

    "ஓஹோ , இது வேறவா" அவர் பொண்ணைப் பார்க்க அவள் தூணின் பின் மறைந்தாள்...

    "ஏம்ப்பா உங்களுக்கு காதல் வேணா விளையாட்டா இருக்கலாம், கல்யாணம் அப்படியில்ல' என்னோட மூத்த மாப்பிள அமெரிக்காவுல இருக்கார்..உனக்கு என்ன தகுதி இருக்கு என் பொண்ண கட்ட, நீ என்ன வேல பாக்குற , என்ன  சம்பளம் ? "

    "சார்,நான் லோக்கல் சானல்ல இப்ப தான் தனியா ப்ரோக்ராம் பண்ற அளவுக்கு வளந்துக்கிட்டு வரேன், பெரிய சம்பளம் இல்லேன்னாலும் மனசுக்கு பிடிச்ச வேல சீக்கிரம் முன்னுக்கு வந்துருவேன்"

    "இதெல்லாம் ஒரு வேலையா, மனசுக்கு புடிச்சுருந்தா அதையே கட்ட வேண்டியது தானே, எதுக்கு என் பொன்னு ?. இந்த வேலைல்லாம்  நிரந்தரம் இல்ல, ஒரு நாள் இழுத்து மூடிடுவான் ..என் ஆபீஸ்ல   கேட்டா  காறித் துப்புவா"   

    "உங்க ஆபீஸ்ல  கூட தான் அப்பப்போ  ஸ்ட்ரைக் வருது,அப்போ அத மூடிடுவாங்களா ?..தன் வேலையைக் குத்தவும் சுருக்கென கேட்டான் சுரேஷ்...

    "உன் வாயை மூடு, அபசகுனமா பேசாத,அது எத்தனை பேருக்கு சோறு போடுற கம்பெனி, அதப்போய் உன்னோட துக்கடா கம்பனியோட சேத்து பேசறதா..? முதல்ல வெளில போடா"..கோபத்தில் கத்தினார் அப்பா...

    "உங்க பொண்ணு இல்லாம நான் வெளியே போக மாட்டேன்"  திடமாக சொன்னான் சுரேஷ்...நிலைமையை இன்னும் விபரீதம் ஆக்குவது போல்
"அம்மா" என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்தாள் ரேவதியின் அம்மாள்..

   "சுரேஷ் , முதல்ல நீ போ இங்கிருந்து" , யார் சொல்லி வந்தானோ அவளே இப்படி சொல்ல ஒரு நிமிடம் அவன் ஆடிப் போனான்...

   "நான் தான் சொல்றேன்ல ,காதலும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் எனக்கு என் அம்மா தான் முக்கியம்"... 

    "டே , முதல்ல வாடா , அப்புறம் பாத்துக்கலாம்" அவன் நண்பன் கையை பிடித்து இழுத்து சென்றான்..அவனுடன் நடைபிணமாய் நடந்தான் சுரேஷ்...
                                      
    அதன் பிறகு எவ்வளவோ முயற்சி செய்தும் அவளை பார்க்கவோ,பேசவோ முடியவில்லை...அம்மாவின் உடல்நிலையோடு சேர்த்து உலக நடப்பும் , உத்தியோகத்தின் அவசியமும் சொந்தக்காரர்களால் அவளுக்கு ஓதப்பட்டது...அவளும் திருமணத்திற்கு சம்மதித்தாள்...ஏதோ ஊரில்  வைத்து திருமணம் செய்து விட்டதாக அவள் தோழி சொன்னவுடன் பூமிக்குள் போவது போல் இருந்தது அவனுக்கு...

    காலம் எதையும் மறக்கடிக்க செய்யும் மருந்து...சினிமாவும் ,சூழலும் அவனையும் ஓரளவு மாற்றின...இவ்வளவு நடந்தும் அவள் மேல் அவனுக்கு கோபம் இல்லை..இவன் நிலையை நினைத்தே நொந்து கொண்டான்..அதுவே காதல்...

   அவன் யாரை இனிமேல் பார்க்கவே மாட்டேன் என்று  நினைத்தானோ அவளை மீண்டும் பார்த்தான்...ஆம் ஒரு அம்மாவாக நான்கு வயது சிறுவனுடன்...அவள் சம்மதித்தால் அவளை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம்  என்று நினைப்பு தோன்ற அதை உடனே பொசுக்கி விட்டு ,

   "எப்படி இருக்கே ரேவதி" என்றான்...

   "ம்ம்.ரொம்ப  நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்க, என்ன  பண்ற ? உன் மனைவி எங்க ?  - எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள் ரேவதி ..

   "நான் உதவி இயக்குனரா இருந்து இப்போ தனியா படம் டைரக்ட் பண்ற முயற்சில இருக்கேன், இன்னும் கல்யாணம் பண்ணிக்கல" இந்த இடத்தில்   கொஞ்சம் கம்மியது அவன் குரல்..

   "என்னது பண்ணிக்கலையா ? ஆவலன்னு சொல்லு, என்னமோ பெரிய மாசம் பல லட்சம் சம்பாதிச்சு யாரும் பொண்ணு கொடுக்காத மாதிரி சொல்ற, இன்னும் ஒரு உருப்படியான வேல இல்லாம சினிமான்னு தான சுத்திக்கிட்டு இருக்க,  நல்ல வேலை நான் தப்பிச்சேன் "

   "என்ன ரேவதி, இப்படி பேசுற ? எப்படி எல்லாத்தையும் மறந்த , என்னால உன்ன சுத்தமா மறக்க முடியல..இன்னும் ஒரு வருசத்துல நான் எப்படியும் படம் பண்ணிருவேன் "...

   "இன்னும் எத்தன வருஷம்  தான் இப்படி சொல்ல போரையோ, அவருக்கு இந்த சினிமா, டிராமால்லாம் சுத்தமா பிடிக்காது, எல்லாம் வேஸ்ட் அப்படிம்பார் ,  சரி,சரி என்னையே பராக்கு பாத்துகிட்டு எங்கயாவது ட்ரைன்ல கியின்ல மோதிடாத , அந்த பாவம் என்ன சுத்தும்"

                  
    இனிமேல் தான் இவள் பாவம் செய்ய வேண்டுமா என்று கேட்பது போல அவளை ஒரு பார்வை பார்த்த சுரேஷ் , அங்கே வரும் இரயில் முன் சென்று குதித்து விடலாமா என்று கூட நினைத்தான்...

   "ச்சே,ச்சே, போயும் போயும் இவளுக்காக நான் சாகுறதா,இவளப் போய் காதலிச்சோமே ,இன்னும் ஒரு வருஷம் போகட்டும்டி அப்போ நான் யாருன்னு தெரியும்" என்று மனதுக்குள் நினைத்தவனாய் ,

   "உன்ன காதலிச்சது மட்டும் இல்ல இப்போ பார்த்ததையே கெட்ட கனவா நினைக்கறேன், என் மூஞ்சிலே முழிக்காத , குட் பை "  அங்கிருந்து விடு விடு வென நடந்தான் சுரேஷ்...

    "நீ நல்லா இருக்கணும் சுரேஷ் , பெரிய டைரக்ட்ராவனும் , என்  வாழ்க்கை தான் முடிஞ்சு போச்சு, எப்போ என் புருஷன் வெளி நாட்ல வேறொரு பொண்ண கல்யாணம் பண்ணான்னு தெரிஞ்சதோ அப்பவே பாதி செத்துட்டேன் , கேள்வி கேட்டதுக்கு "நீ என்ன பெரிய பத்தினியா ?..உன் மேட்டர்லாம் எனக்கும் தெரியும், பேசாம என்கூட இருக்கறுதுனா இரு இல்ல மூடிட்டு உன் அப்பன் வீட்டுக்கு போ"  என்று சொன்ன போது முழுசா செத்தேன்..

     உனக்கு பண்ண துரோகத்துக்கு  நல்லா அனுபவிச்சுட்டேன்..நீ நல்லவன் சுரேஷ், என் டிவேர்ஸ் விஷயம் தெரிஞ்சா என்ன விட மாட்ட , நான் உனக்கு வேணாம்...நீ ஜெயிச்சதுக்கப்புறம் நல்ல  பொண்ணா கிடைப்பா" 

    "அம்மா ஏம்மா அழுவுற யார் அந்த அங்கிள்" ,

    கேட்ட தன் மகனை  "இனிமேல் என் உலகமே  நீதானடா" என்பது போல் அழுகையுடன்  அள்ளி அணைத்தாள் ரேவதி...அங்கு அடுத்த இரயில் வருவதற்கான டிராக்குகளை மாற்றிக் கொண்டிருந்தார்கள்...

25 August 2011

மூட்டைபூச்சி - சிறுகதை

                   
        "கலைமகள்"  - எழுத்தாளர்கள் அமைப்பின் ஐந்தாவது  ஆண்டு விழா"  என்று நுழைவாயிலில் கட்டப்பட்டிருந்த பெரிய பேனரை பார்த்துக்கொண்டே அந்த ரிசார்ட்சுக்குள் நுழைந்தான் பரத்.. 

      ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இது போன்ற சந்திப்புகளால் புதிய எழுத்தாளர்களின் நட்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல்,இயற்கை எழில் மிகுந்த இடங்களில் நடப்பதால் , சென்னையின் இயந்திரத்தனத்திலிருந்து இரண்டு நாட்கள் விடுப்பு
கிடைக்கும்  என்பதாலும் ஒரு முறை கூட இந்த விழாவை தவறவிட்டதில்லை 

     அவன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போலவே இந்த முறை காடுகளுக்கு மத்தியில் அழகாக அமைந்திருந்தது அந்த ரிசார்ட்ஸ்..

     'சார்,என் பேர் பரத்"  என சொல்லி தனக்கென கொடுக்கப்பட்டிருந்த அடையாள அட்டையை காண்பிக்க , தொப்பைக்கு கீழே இறங்கி கொண்டிருந்த பேண்டை ஏற்றி பிடித்தபடியே சற்று  இறங்கியிருந்த மூக்கு கண்ணாடி வழியே பரத்தை மேல் நோக்கி பார்த்தார் ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த மேனேஜர்...
     "பிரயானம்லாம் எப்படி இருந்தது சார்"   தன் டைக்கு சற்றும் பொருத்தமே இல்லாத வெத்தலைப் பாக்கு வாயுடன் நலம் விசாரித்துக் கொண்டே ..இவன் பதிலை எதிர்பார்க்காமல் சாவியை தேடி மேஜை மீது வைத்தன அவர் கைகள்..சம்பிரதாயமான பதிலை சொல்லிவிட்டு சாவியோடு விரைந்தவனை அவர் குரல் தடுத்து நிறுத்தியது..
                              
    "சார், நேரே போய் லெப்டுல திரும்புங்கோ,அப்புறம் அது ரெண்டு பேர்  தங்குற ரூம்,உங்க கூட அனேகமா பிறைசூடன்னு ஒருத்தர் தங்கலாம்", சொல்லிவிட்டு அவர் தன் வேலையில்  மூழ்கினார் 

     அதை பெரிதும் சட்டை செய்து கொள்ளாமல் தன் ரூமை நோக்கி விரைந்த  பரத்..பையில் தடவி கையில் சிக்கிய ஒரு புத்தகத்துடன் கட்டிலில் சாய்ந்தான்.. படித்துக்கொண்டே கண்ணயர்ந்து விட்டவன் ரூமை யாரோ தட்டும் சத்தம் கேட்டு திறந்தான்..

     தடித்த உருவம்,கொஞ்சம் குள்ளமான உடல்வாகுடன் நின்று கொண்டிருந்தவரை பார்த்தவுடன் "சாப்பாடல்லாம்   எதுவும் வேணாம்பா" என சொல்ல நினைத்தவன் அதை உதறி விட்டு "சொல்லுங்க சார்" என்றான்...

     'சார்' நான் தான் பிறைசூடன்" என்றார் வந்தவர்..
     "வாங்க சார் உள்ள வாங்க சொல்லிக்கொண்டே அவருடைய இருக்கைகளைக் காட்டினான் பரத்..

    "நான், உங்களை இதுக்கு முந்தின விழாவுல பார்த்ததில்லையே இதான் முத தடவையா" இவன் வினவ ,  "ஆமாம் சார் , ஆனா இந்த ஊருக்கு பல தடவ வந்திருக்கேன், சொல்லிக்கொண்டே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் வந்தவர்..
                                         
     சிறிது நேர விசாரிப்புகளுக்கு பிறகு கதை,இலக்கியம்,சினிமா என அவர்களின் உரையாடல் நீண்டது..  பேசிக்கொண்டிருக்கும் போது தான் தன் உடலில் ஏதொ ஊர்வது போலவும்,அரிப்பது போலவும் உணர்ந்தவன் ..

    'என்னனே தெரியல சார், ஏதொ கடிக்கற மாதிரி இருக்கு ஆனா என்னனு தெரியல" அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே   "வேறொன்னுமில்லை சார் , அது மூட்டைபூச்சி" என்று அவர் சொல்ல ,

   "மூட்டைபூச்சியா" - அதிசயமாக  வாய் பிளந்தான்  அவன்...நகரத்தில் வளர்ந்து கொசு தொல்லையை அனுபவித்திருந்தவன் மூட்டைப்பூச்சி பற்றி அவ்வளவாக அறியாததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.   

  "என்ன சார்   இப்படி கேட்டுட்டீங்க இந்த ஊரிலேயே இதானே  விசேஷம் " ஏதொ சுற்றுலா தளத்தை விவரிப்பது போல சொல்ல ஆரம்பித்தவர்,

   "மூட்டைபூச்சி இருக்கே அது கண்ணுக்கே தெரியாம மெல்லிசா இருக்கும்,கடிச்சதுன்னா  தடிப்பு வரும், சுர்ருன்னு இருக்கும், உங்களுக்கு ஒன்னு தெரியுமா சார்  , மூட்டப்பூச்சிய கொன்னா அது ரத்தத்துல இருந்து நெறைய பூச்சி வரும் .அவ்வளோ சீக்கிரம் சாவாது , பெருகினே போகும்"  ..

     "இந்த பூச்சிய ராட்சசன்னு சொல்லுவாங்க" . கண்களை உருட்டிக் கொண்டே ஆர்வத்துடன் விவரித்தார் பிறைசூடன்..அவனவன் இங்க அவஸ்தை பட்டுட்ட்ருக்கான்  விவஸ்தையில்லாம என்னமோ விசேசம்னு சொல்றாரே, என்று மனதில் நினைத்துக்கொண்டே அவரை வித்தியாசமாக பார்த்தான் பரத்...

    "புரியிது சார் என்ன விசேசம்னு தானே பாக்கறீங்க, மயிலு, நாய், மாடுன்னு எவ்வளவோ சிலைய கோயில்ல பாத்திருப்பீங்க..ஆனா இந்த ஊரில மட்டும் தான் மூட்டைப்பூச்சிக்கு சிலையும் இருக்கு , ஒரு கதையும் இருக்கு"..
                               
    'தீய எண்ணங்களோடும் , தீரா ஆசைகளோடும் இறக்கரவுங்க பூச்சியாவும் பொறவு மனுசனாவும் மாறி மாறி அலையருதா இந்த பக்கத்துல ஒரு நம்பிக்கை...உங்களுக்கு சாமி, பூதம் இதுலெல்லாம் நம்பிக்கை உண்டா ?..
                                         
    "சாமி மேல உண்டு"  அவன் இழுக்க .."அப்போ பூதம் மேலயும் உண்டு"..இளித்தார் அவர்..."அதப் பத்தி பெருசா எந்த யோசனையும் இல்ல" சொல்லிக்கொண்டே உறங்குவதற்கு அவன் ஆயத்தமாக,

    "என்ன மூட்டைபூச்சி பத்தி பேசி ரொம்ப போரடிசுட்டேனோ" அவர் கேட்க, அவனுக்கு என்னவோ போல் இருந்தது "சே,சே அதெல்லாம் ஒண்ணுமில்ல சார், வந்த களைப்பு அவ்வளோ தான்'  - நாசூக்காக மறுத்தான்..

     எப்போது தூங்கினான் என்றே தெரியவில்லை , கண் முழித்து பார்த்த போது 
 கசகச வென்று இருந்தது.. முதலில் குளித்து விட்டு கிளம்ப வேண்டும் என நினைத்துக்கொண்டே பாத்ரூமிற்கு செல்லும் போது தான் கவனித்தான் அங்கு பிறைசூடன் இல்லை.. காபி, டீ சாப்பிட போயிருப்பார் என்று எண்ணிக்கொண்டே குளித்து ரெடியானான் ...

                                                    
      "என்ன சார் ரூம்லாம் சௌகரியமா இருந்ததா? தொப்பையின் மேல் படர்ந்திருந்த டையை தடவியபடியே கேட்டார் மேனேஜர்..

     "ஒ.கே சார்" என்று மட்டும்  சொல்லிவிட்டு வந்த வேலையை முடித்துக் கொண்டு அப்படியே கிளம்புவதற்கு ஆயத்தமானான்.. 

    "சார் , என்கூட தன்கிருந்தாரே பிறைசூடன் அவர பாத்தீங்களா? '

    "சார், நான் சொல்லவே மறந்திட்டேன் , அவர் இங்க வரலேன்னு அப்பவே ..போன் பண்ணி சொல்லிட்டார்'.

    "என்ன சார் சொல்றீங்க என்கூட ரூம்ல இருந்தாரே' பரத் குழப்பமாக சொல்ல , அவனை ஏற இறங்க பார்த்தவர் 

     "சார் நான் இங்கேயே தான் இருக்கேன் , அந்த வாட்ச் மேனும் இங்க தான் இருக்கான் எங்கள தாண்டி யாரும் போகவும் முடியாது,வரவும் முடியாது, நீங்க ஏதாவது கனவு கண்டீங்களோ" - எந்த சலனமுமில்லாமல் கேட்டார் ..

     "அப்போ நேத்து ராத்திரி என்கூட இருந்தது யாரு"   கொஞ்சம் பயத்துடன் யோசித்துக்கொண்டே   வேகம் வேகமாக விரைந்தவனின்   முதுகில்   மெதுவாக , மிக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது அந்த  மூட்டைபூச்சி ....


 

1 August 2011

யார் கடவுள் - சிறுகதை

                                                                                     
     மதிய உணவுக்குப்பின் முழிப்பும் இல்லாத ,தூக்கமும் இல்லாத ஒரு மந்தமான சூழலுக்குள் சிவா ஆட்பட்டுக்கொண்டிருக்கும் போது 'என்னமோ ஏதோ" என்ற கோ பாடலுடன் அவன் செல்போன் ஒலித்தது.. சலிப்புடன் எடுத்தவன் சுரேஷ் பெயரைப்பார்த்ததும் சந்தோசமானான்...

     "டே மச்சி எப்படிடா இருக்க" -
    "ரொம்ப சந்தோசமா இருக்கேண்டா..எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்குடா" 
  "ஹே கன்க்ராட்ஸ்...சுகப் பிரசவம் தானே! ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க.?" -
   "ரொம்ப நல்லா இருக்காங்கடா! நாலு வருஷம் கடவுள வேண்டினது வீணா போகல, இல்லேனா இத்தனை கஷ்டத்துக்கப்புறமும் சுகப்பிரசவமா ஆகியிருக்குமா" -

    "டே திருந்தவே மாடியாடா? கண்ணுக்கு தெரிஞ்சு கஷ்டப்பட்டு காப்பாத்தின டாக்டர்ஸ விட்டுட்டு கண்ணுக்கே தெரியாத கடவுள போய் பாராற்றியேடா! -     "டே அப்படில்லாம் சொல்லாதடா..நிச்சயம் நான் கும்புடுற சாமி தாண்டா இதுக்கு காரணம்..இல்லேனா இத்தனை நாளா  ஏன் இது நடக்கல.. உனக்கு நம்பிக்கை இல்லேனா அதுக்காக இப்படி சொல்றதா ?.....
                                          
   "சரிடா..கடவுள் இருக்கார்னா ஏன் டாக்டர்சா தேடி தேடி போய் டெஸ்ட் பண்றாங்க... கோவிலுக்கு போயிட்டு அப்படியே விட்டுற வேண்டியது தானே!....
  "அததுக்கு நேரம் வரும் போது கடவுளே பாத்து செய்வாரடா." -

 " ஆமா அவருக்கு ஒவ்வொன்னா பாத்து செய்யருது தான் வேல , போடா உலகத்திலேயே மனுஷன் கண்டுபிடிச்ச ரெண்டு மோசமான விஷயம் சொல்லு"

     சிவா இப்படி கேட்டவுடன் சட்டென்று சுரேஷ் " அணு ஆயுதமும்,மதமும்" என்றான்..ஆனால் அவன் சிவாவிடமிருந்து இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை....
                                                       
  "இல்லவே இல்ல " கடவுளும் , காசும் " நீ சொன்ன மத்ததெல்லாம் இத வெச்சு வந்ததுதான்...இப்ப கூட நீ கடைசியா பாத்த டாக்டர் தான் சரியான ட்ரீட்மென்ட் கொடுத்து இத நடத்திருக்காங்க புரிஞ்சுக்கோ" -

சிவா இப்படி சொல்லவே சுரேஷ் கொஞ்சம் குழம்பி போனான்.....

"சரி அதெல்லாம் விடு..குழந்தைக்கு என்ன பேர் வைக்கப் போற..நல்ல மாடர்ன் பேரா வைடா.."

 "அதாண்டா ஒண்ணுமே புரியல..என்ன பேர் வைக்கிறதுன்னு" -
                                                        
  "நான் ஒரு ஐடியா சொல்லட்டா , பேசாம உன் மனைவிக்கு பிரசவம் பாத்த லேடி டாக்டர் பேரே வைச்சுடு..என்னைக் கேட்டா உன் சந்தோசத்துக்கு அவங்க தான் காரணம்.."

   இது சரியான யோசனையாகப் படவே சுரேஷ் சரியென சொல்லி போனை கட் செய்தான்.....

   இனிப்புகள்,பழங்களுடன் டாக்டர் அறைக்குள் சென்றான் சுரேஷ்.....

 "டாக்டர் ரொம்ப தேங்க்ஸ்...எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல..."

"நீங்க ஒன்னும் சொல்ல வேணாம்..குழந்தைக்கு என்ன பேர் வைக்க போறீங்க"

"உங்க பேரை தான் டாக்டர் வைக்க போறேன்" -
  "என் பேரா ..ஏன்னு தெரிஞ்சுக்கலாமா ?"

"என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க..நீங்க கொடுத்த ட்ரீட்மென்ட் தான் குழந்தை பொறக்க காரணம் . .நீங்க எனக்கு கடவுள் மாதிரி."
                                                   
"அப்படியா ? யார் சொன்னா?..என் கைல எதுவும் இல்ல..எல்லாம் கடவுள் செயல்..நீங்க ஒரு பிரதோஷம் விடாம சிவன் கோவிலுக்கு போவீங்கன்னு உங்க மனைவி சொன்னாங்க...
அதனால சிவன் பேரையோ ,சக்தி பேரையோ வைங்க அதான் பொருத்தமாக இருக்கும்"..

நாங்கல்லாம் வெறும் மனுஷங்க எங்கள கடவுளாக்கிடாதீங்க"

     டாக்டரின் அறையை விட்டு சுரேஷ் புது நம்பிக்கையுடன் வெளியே வந்தான்...





Related Posts Plugin for WordPress, Blogger...