முதல் படத்திலேயே விருதையும் , வசூலையும் பெற்று அனைவரையும் கவனிக்க வைத்த இயக்குனர் பாண்டிராஜ் , தன் சொந்த தயாரிப்பான "மெரினா" வில் பல அறிமுக பசங்களோடு கை கோர்த்து களம் இறங்கியிருக்கிறார் ... பட்டுக்கோட்டையிலிருந்து தப்பி அமரர் ஊர்தியில் சென்னைக்கு வந்து சேரும் அம்பிகாபதி ( பக்கடா பாண்டி ) மெரினாவில் செட்டில் ஆகிறான் ... அங்கு அவனைப்போலவே பல சிறுவர்கள் சுண்டல் , சங்கு என பலவற்றை விற்று வயிற்றை கழுவிக்கொண்டிருக்கிறார்கள் ...
அவனுக்கு முதலில் கைலாசம் நண்பனாக , பிறகு மற்ற சிறுவர்களும் சண்டையை விடுத்து சமாதானமாகி அவனுடன் நண்பர்களாகிறார்கள் ... இவர்களை தவிர மெரினாவிலேயே வாழ்க்கை நடத்தும் பிச்சைக்கார தாத்தா , குதிரை ஓட்டுபவன் , பாட்டு பாடுபவர் , ஆங்கிலம் பேசும் பைத்தியக்காரன் , சிறுவர்களுக்கு ஆதரவு அளிக்கும் போஸ்ட் மேன் , மெரினாவிற்கு வரும் காதல் ஜோடிகளான நாதன் (சிவகார்த்திகேயன் ) - சொப்பன சுந்தரி ( ஓவியா ) இவர்களை சுற்றி கதை நகர்கிறது ...
படத்தின் ஹீரோ பக்கடா பாண்டி தான் ... மிரள மிரள சென்னையை பார்க்கும் போதும் , பிச்சைக்கார தாத்தாவிடம் உறவு கொண்டாடும் போதும் , நண்பனை இழந்து வாடும் போதும் நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறான் ... சின்ன பசங்களை வைத்து படமெடுப்பது பாண்டிராஜுக்கு கை வந்த கலையாகிவிட்டது போல , எல்லா சிறுவர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள் ...
பல கேரக்டர்கள் படத்தில் இருந்தாலும் மருமகள் தொல்லையால் வீட்டிலிருந்து வெளியே வந்து பிச்சைஎடுக்கும் தாத்தா மட்டுமே மனதில் நிற்கிறார் ... பைத்தியக்காரனாக வருபவர் ஆங்காங்கே டைமிங் டயலாக்குளால் சிரிக்க வைத்தாலும் அவர் கேரக்டரில் கொஞ்சம் செயற்கைத்தனமே மேலோங்கி நிற்கிறது ...
மெரினாவில் குடியிருக்காவிட்டாலும் படத்தை தொய்வில்லாமல் கொண்டு போவதற்கு அங்கு வரும் காதல் ஜோடிகளான சிவகார்த்திகேயனும் , ஓவியாவும் பெரிதும் உதவியிருக்கிறார்கள் ... இவர்களுடைய டைம் பாசிங் காதலை டைம் போவது தெரியாமல் சுவை பட சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...
அடுத்த வீட்டு பையன் போல சிவகார்த்திகேயன் இயல்பாக இருந்தாலும் இவர் பேசும் போது ஏதோ காம்பெயரிங் செய்வது போலவே இருக்கிறது ... களவானிக்கு பிறகு காணாமல் போன ஓவியா இதில் கவனிக்க வைக்கிறார். சிவகார்த்திகேயனின் நண்பனாக வருபவரும் நன்றாக நடித்திருக்கிறார் ...
பல நடிகர்களோடு சேர்த்து இசையமைப்பாளர் , எடிட்டர் , ஒளிப்பதிவாளர் என பலரை இப்படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ... " வாழ வைக்கும் சென்னை " பாடலும் " நண்பன் " பாடலும் முனு முணுக்க வைக்கின்றன ... பின்னணி இசை ஏற்கனவே கேட்டது போல இருக்கிறது ... தன் ஒளிப்பதிவால் மெரீனாவையே சுத்தமாக காட்டியிருக்கிறார் விஜய் .5 டி கேமராவில் படம்பிடித்த விதம் அருமை ...
மெரினாவை மட்டுமே வைத்துக்கொண்டு முழு படத்தையும் நகர்த்திய விதம் , நகைச்சுவை ததும்பும் வசனங்கள், சிறுவர்களுக்கு கல்வியின் அவசியத்தை உணர்த்தும் கதை , ஆதரவற்ற சிறுவர்களின் வாழ்க்கை முறையை கண்முன் நிறுத்திய பாங்கு , தாத்தா , போஸ்ட்மேன், குதிரைக்காரன் இவர்களுக்கும் , சிறுவர்களுக்கும் இடையேயான நட்பு , காதல் என்ற பெயரில் சமுத்திரத்தை அசுத்தம் செய்யும் ( கள்ள ) காதல் ஜோடிகள் பற்றி சொன்ன விதம் இவையெல்லாம் மெரினாவின் அழகை ரசிக்க வைக்கின்றன ...
சிறுவர்கள் பற்றிய பின்னணியை முழுவதும் சொல்லாமல் பிக்னிக் வந்தது போல கிரிக்கெட் , ஓட்டப்பந்தயம் , குதிரையேற்றம் என ஒவ்வொன்றாக காட்டிக்கொண்டிருப்பது , இவ்வளவு கேரக்டர்கள் இருந்தும் ஸ்லம் டாக் மில்லினியர் , சலாம் பாம்பே போல பெரிய அழுத்தத்தை ஏற்படுத்த தவறியது , என்ன தான் வெளியூரில் இருந்து வந்தவர்கள் சென்னையில் நிறைய பேர் இருந்தாலும் மதுரைக்கு மெரினா வந்து விட்டதா என நினைக்குமளவுக்கு எல்லோரும் ஓவராக மதுரை பாஷை பேசி நேட்டிவிட்டியை கெடுத்தது , ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் படம் சுழன்று கொண்டிருப்பது,
( உதாரணத்திற்கு ஒரு சீனில் ஹெல்ப் லைன் மூலம் ஸ்கூலில் சேர்ந்து படிக்கும் கிரைண்டர் எனும் சிறுவன் அடுத்த சீனில் சிறுவர்களுடன் பீச்சில் இருப்பது ) இவையெல்லாம் மெரினாவின் அழகை கெடுக்கின்றன ...
ஆதரவின்றி கடலோரம் வாழும் சிறார்களை பற்றிய பிரச்சனைகள் கடல் அளவு இருக்க அதை முழுவதும் இறங்கி அலசாமல் பள்ளி சுற்றுலா போல சிலவற்றை மட்டும் மேம்போக்காக சொல்லியிருப்பதால் கடற்கரை சென்றும் காலை நனைக்காமல் திரும்ப வந்தது போல ஒரு குறை ... இருப்பினும், சினிமாத்தனமான எந்த ஒரு காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல் இது போன்ற படத்தை எடுத்ததற்காக இயக்குனர் பாண்டிராஜை எவ்வளவு பாராட்டினாலும் தவறில்லை ...
ஸ்கோர் கார்ட் - 42


