Showing posts with label POLITICS. Show all posts
Showing posts with label POLITICS. Show all posts

29 September 2014

ஒரு கைதும் சில கேள்விகளும் ...


ற்போது தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் சம்பவம் சொத்துக்குவிப்பு வழக்கில் நூறு கோடி அபராதத்துடன் நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை பெற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப்பது . எனக்குத் தெரிந்த சில தி.மு.க அனுதாபிகள் கூட தண்டனைக்காக வருத்தப்படுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வகையில் கிட்டத்தட்ட 18 வருடங்கள் வழக்கை தீர விசாரித்து கொஞ்சம் கடினமாக இருந்தாலும் நியாயமான முறையில் தீர்ப்பு வந்திருக்கிறது என்று புத்திக்கு தெரிந்தாலும் , 91 - 96 இல் முதல் முறை முதல்வராக இருந்த போது செய்த தவறுகளுக்கு இப்பொழுது மூன்றாவது முறை முதல்வராகி மக்கள் நலத் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதோடு கட்சியினர் செய்யும் கட்டப் பஞ்சாயத்துக்களை அறவே ஒழித்து நல்ல முறையில் ஆட்சி செய்து வரும் ஒரு நபருக்கு இப்படி தண்டனை கொடுத்து விட்டார்களே என்று படபடக்கும் மனசுக்கு தெரியவில்லை ...

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வின் அசுர வளர்ச்சிக்கு பிறகு அந்த கட்சியை எதிர்த்து அனைத்து கட்சிகளும்  ஒன்று சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த கைது அ.தி.மு.க வுக்கு பேரிடி . பா.ஜ.க வுக்கு திமுக வின் தூது , நீண்ட வருடங்கள் திமுக வை தீண்டாமலிருந்த வை.கோ கலைஞர் மேல் காட்டும் திடீர் பாசம் , பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வீட்டு விஷேசத்திற்கு கலைஞருக்கு விடப்பட்ட தனிப்பட்ட அழைப்பு , அ.தி.மு.க வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டுமென்று விஜயகாந்த் விடுத்திருக்கும் அறைகூவல் இவையெல்லாம் நடந்து வருகின்ற நேரத்தில் இந்த கைது அ.தி.மு.க வுக்கு பெரிய பின்னடைவு . தனிப்பட்ட வாக்கு வங்கியை மட்டும் வைத்துப் பார்க்கும் போது  தி.மு.க வுக்கும் , அ.தி.மு.க வுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை . ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு கட்சியை வீழ்த்துவதற்காக அடுத்த கட்சிக்கு போடப்படும் ஓட்டுக்களே வெற்றி , தோல்விக்கான வித்தியாசத்தை தீர்மானிக்கின்றன . அந்த வகையில் பார்த்தால் 2016 சட்டசபைத் தேர்தலுக்கு அ.தி.மு.க மக்களுடன் மட்டுமே கூட்டணி வைக்க வேண்டியிருக்கும் ...

எதிர்பார்த்தபடியே முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஓ .பி
( பன்னீர்செல்வம் ) கடந்த முறை போல இந்த முறை பவ்யமாக மட்டுமிருந்து ஓ .பி அடிக்க முடியாது . ஏனெனில் இந்த முறை அவர் கிட்டத்தட்ட 2 வருடங்கள்  ஆள வேண்டியதோடு மக்களின் நன் மதிப்பையும் பெற்று கட்சியையும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் .. ஹை கோர்ட்டுக்கு அப்பீல் செய்த போதிலும் தண்டனை குறைக்கப்படுவதற்கு குறைந்த வாய்ப்பே உள்ளன என்கிறார்கள் சட்ட நிபுணர்கள் . ஆனால் சீனியர் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி இவருக்கு ஆதரவாக வாதாடப் போவது தண்டனையை குறைக்கும என்றும் , பெயில் கிடைக்கும் என்றும்  எதிர்பார்க்கிறார்கள் அ.தி.மு.க வினர் . ஒரு வேளை ஜெ பெயிலில் தமிழ்நாட்டுக்கு வருவது கட்சிக்கு போனசாக இருந்தாலும் முதல்வர் பதவியில் அமர்வதோ , மீண்டும் போட்டியிடுவதோ அடுத்த பத்து ஆண்டுகளுக்கு முடியாது ...

இப்படி ஒரு இக்கட்டான நிலை வருமென்று அம்மாவே எதிர்பார்த்திருக்க மாட்டார் . இதற்கு முந்தைய 11 வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டது போல இதில் முடியாமல் போனதற்கு காரணம் வழக்கின் தன்மை . மற்ற வழக்குகளில் குற்றம் சாட்டியவர்கள் இவரது குற்றத்தை நிரூபிக்க வேண்டும் . ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ தனது ஆவணங்களை சரியாக காட்டி தன மேல் குற்றம் இல்லையென்று நிரூபிக்க வேண்டும் . இந்த விஷயத்தில் கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம் . மேலும் வழக்கை 18 வருடங்கள் இழுத்தடித்ததும் , நீதபதி டிகுன்ஹா நேர்மையானவர் என்பதும் கூடுதல் நெருக்கடியை கொடுத்திருக்கும் . எல்லாவற்றிற்கும் அறிக்கை விடும் கலைஞர் இந்த கைதை பற்றி ஒன்றுமே சொல்லாமல் மௌனம்  காப்பது அவரது அனுபவத்தைக் காட்டுகிறது . சுப்ரமணியசாமியால் போடப்பட்ட வழக்கிற்கு கலைஞரின் கொடும்பாவியை எரித்து என்ன ஆகப் போகிறது ?...

எனக்கு தெரிந்த ஒருவரின் மாமா ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே அரசியலில் பார்ட் டைமாக இருந்தார் . பிறகு வேலையை விட்டு விட்டு முழு நேர அரசியலில் இறங்கி இப்போது கவுன்சலராகி விட்டார். அவருக்கு அப்போதே 10 லட்சம் கடன் இருந்தது . ஆனால் இப்போதோ வீடு , கார் என்று கிட்டத்தட்ட 4 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக சொல்கிறார்கள்.
தப்பு செஞ்சவங்க யாரா இருந்தாலும் ஒரு நாள் இல்லை ஒரு நாள் நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்கிற நம்பிக்கையை இந்த தீர்ப்பு கொடுத்தாலும் , கவுன்சிலருக்கே இவ்வளவு சொத்து  என்றால் எம்.எல்.ஏ , எம்.பிககெல்லாம் ? . இது போல கணக்கில்லாமல் லஞ்சம் வாங்கிய எல்லா அரசியல்வாதிகளும் , அரசு அதிகாரிகளும் இதே போல தண்டிக்கப்படுவார்களா ?. அல்லது இதே போல விடாப்படியாக யாராவது கேசை நடத்துவார்களா ? . பிறகு ஏன் அம்மாவை மட்டும் தண்டிக்க வேண்டும்? போன்ற கேள்விகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே தானிருக்கின்றன ...


21 March 2014

பா.ஜ.க கூட்டணி -BJP- வெற்றிக்கான முதல்படி ...

 

2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் ? ! ... என்று கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு  நான் எழுதிய பதிவில் தமிழகத்தில் பா.ஜ.க தலைமையில் தே.மு.தி.க , ம.தி.மு.க மற்றும் பா.ம.க ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைப்பதற்கான சூழலையும் , அவசியத்தையும் உணர்த்தியிருந்தேன் . ஒரு வழியாக  ஏகப்பட்ட இழுபறிக்குப் பின் பாரம்பரிய திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தேசிய கட்சியின்

தலைமையில் அப்படியொரு கூட்டணி தமிழகத்தில் 50 வருடங்களுக்கு பிறகு அமைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதோடு  மட்டுமல்லாமல் நல்ல மாற்றத்திற்கு வடிகாலாகவும்  இருக்கும் என்றும் நம்புகிறேன் ... 

 

இப்படியொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணிக்கு வித்திட்டவர் எழுத்தாளர் தமிழருவி மணியன் என்பது குறிப்பிடத்தக்கது . எந்தவொரு குறைந்த பட்ச செயல்திட்டமும் இல்லாமல் வெறும் பதவி ஆசைக்காக ஐந்தாறு கட்சிகள் சேர்த்து அமைத்திருக்கும் கூட்டணி தானே என்று சிலர் சாடினாலும் அரசியல் ரீதியாக இந்த கூட்டணியை அவ்வளவு எளிதில் ஒதுக்கி விட முடியாது . இதுவரை அமைந்த அல்லது அமையப்போகிற எந்த கூட்டணிக் கட்சிகளுக்குள்ளும் கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும் . அதில் அதிகம் ஆராய்ந்தால் எந்தவொரு கூட்டணியும் அமைந்திருக்காது அல்லது அமையாது என்பதே நிதர்சனம்  ... 

 

அ.தி.மு.க விடம்  2 சீட்களுக்காக  கையேந்தி நின்ற கம்யூனிஸ்டுகளுக்கும் , கடைசி வரை அவர்களை என்னத்த கண்ணையா போல குழம்ப வைத்து கழட்டி விட்ட அ.தி.மு.க விற்கும் , பா.ஜ.க விற்கு கல்லெறிந்து பார்த்து விட்டு எதுவும் நடக்காது என்றவுடன் மதசார்பற்ற அணிகளுடனே எங்கள் கூட்டணி  என்று சொல்லி விட்டு முஸ்லீம் லீக் , மனிதநேய மக்கள் கட்சி போன்றவற்றுடன் கூட்டு சேர்ந்திருக்கும் தி.மு.க விற்கும் இந்த கூட்டணி பற்றி விமர்சனம் செய்ய எந்தவித தார்மீக உரிமையும் இல்லையென்பதே அரசியல் ஆர்வலர்களின் கருத்து ... 

 

அ.தி.மு.க வால் தாங்கள் கழுத்தறுக்கப்பட்ட கோபத்தை அங்கே காட்டாமல் பா.ஜ.க வை தோற்கடிப்பதே எங்கள் இலக்கு என்று அறைகூவல் விடுக்கும் கம்யூனிஸ்டுகளைப் பார்க்கும் போது காமெடி கலந்த வேதனையாய் இருக்கிறது . 2009 இல் காங்கிரசை வரவிடாமல் தடுத்ததில் இவர்கள் செய்த முயற்சி பலித்ததைப் போல இம்முறையும் நடக்கக்கடவது... 

 

முதலில் மோடி அலையே இல்லை என்று சொன்ன காங்கிரஸ்காரர்கள் பிறகு பா.ஜ.க அணியின் தொகுதிப் பங்கீட்டில் உள்ள சிக்கலை காட்டி  கேலி செய்கிறார்கள். பா.ஜ.க அணியிலாவது தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதில் தான் பிரச்சனை . அதாவது ஒரு தொகுதிக்கு நிறைய பேர் போட்டி போடுகிறார்கள் . ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு சுளையாக 39 தொகுதிகள் இருந்தும் நிற்பதற்கு யாரும் முன் வரவில்லை என்கிற பரிதாப நிலையிலும்

பா.ஜ.க வை எந்த முகத்தை வைத்துக் கொண்டு குற்றம் சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம் ...

 

இப்படி முதலில் பா.ஜ.க தலைமையில் கூட்டணி என்றவுடன் நிறைய பேர் ஏளனம் செய்தார்கள் , பின் இது முரண்பட்ட கூட்டணி என்று எதிர்த்தார்கள் , கடைசியில் கூட்டணி அமைந்து வெற்றியும் பெற்றவுடன் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புவோமாக . இந்த கூட்டணி அனைத்து  தொகுதிகளிலும் வெற்றி பெறுமென்று யாரும் சொல்லவில்லை . அதே நேரம் சுத்தமாக தோல்வியை தழுவவும் வாய்ப்பில்லை . கூட்டணி கட்சியிலுள்ளவர்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து  ஒற்றுமையாக பணியாற்றினால் குறைந்தது 8 - 12  தொகுதிகளில் வெற்றி பெறவும் , நிறைய தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கவும்  வாய்ப்புள்ளது.

உண்மையில் வெற்றி , தோல்விகளை தாண்டி தி.மு.க , அ.தி.மு.க இரண்டையும் தவிர்த்து தமிழகத்தில் இப்படியொரு கூட்டணி அமைந்ததே வெற்றிக்கான முதல்படி ...


24 May 2013

2014 தேர்தல் - மன்னராட்சியா ? மக்களாட்சியா ? ...


ன்னும் ஒரு வருடத்திலோ அல்லது அதற்கு முன்னரோ 2014 ல் பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது . அனைத்து இந்தியர்களுக்கும் குறிப்பாக நடுத்தர , உயர் நடுத்தர வகுப்பினருக்கு இது மிக முக்கியமான தேர்தல் என்றே சொல்லலாம் . தற்போதைய நிலையில் விலைவாசி உயர்வு  , அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மை  , ஊழல் இவையனைத்தும் ஏழை , பணக்காரர்களை விட நடுத்தர வர்க்கத்தையே அதிகம் பாதிக்கின்றன .  ஏனெனில் ஏழைகள் இலவசத்தின் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்கள்  , பணக்காரர்கள் எதைப் பற்றியும் பெரிதாக கவலைப்படுவதில்லை .

2004 இல் இருந்து தொடர்ந்து பத்து வருடங்கள் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் காங்கிரஸின் மேல் மக்கள் அதிக அதிருப்தியோடு இருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை . 2009 இல் நாட்டின் ஸ்திரத்தன்மை போய் தொங்கு நாடாளுமன்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அதிருப்தி இருந்தும் அதையும் மீறி ஒட்டு போட்டு காங்கிரஸை மக்கள் ஆட்சி பீடத்தில் ஏற்றினார்கள் . இந்த முறையும் அதே போல ஒரு அசம்பாவிதம் நடந்து விடக்கூடாதென்பதில் அனைவரும் கவனமாக இருப்பார்கள் என நம்புவோமாக ! 2 ஜி , காமன்வெல்த் தொடங்கி நிலக்கரி , ரயில்வே என்று எல்லா துறைகளிலும் ஊழல் தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறது . அதோடில்லாமல் ஊழலை தடுக்க வேண்டிய அரசே சி.பி.ஐ யை கையில் போட்டுக் கொண்டு குற்றப்பத்திரிக்கைய மாற்றியமைத்ததையும்  அதற்காக உச்சநீதிமன்றத்தில் வாங்கிக் கட்டிக்  கொண்டதையும் இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டோம் . ஊழல் இந்தியாவில் பல வருடங்களாக புரையோடியிருந்தாலும் இந்த அளவிற்கு வெளிப்படையாக ஒரு அரசு செயல்படுவதாக உச்சநீதி மன்றமே  கண்டித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது ...

பொருளாதாரம் , ஊழல் இரண்டையும் தாண்டி கவலையளிக்கும் மற்றொரு விஷயம்  சீனா , பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளால் நாட்டிற்கு  ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் . ஏற்கனவே 1962 போரில் நம் நாட்டின் ஒரு பகுதியை கைப்பற்றி விட்ட சீனா இப்பொழுது நம் நாட்டிற்க்குள் 19 கி.மீ புகுந்து தங்களின் டெண்டை போட்டிருக்கிறார்கள் . ஒரு மாத போராட்டத்திற்கு பின் அவர்களை வெளியேற்றினாலும் அதற்கு பதிலாக நம் படை வீரர்களும் பின் வாங்கியிருப்பது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை கேள்விக்குறியாக்குகிறது  . தனக்கும் அஜ்மலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பகல் வேஷம் போட்ட பாகிஸ்தான் அப்சல் குரு தூக்குக்கு எதிராக கண்டனம் தெரிவித்து நம் உள்நாட்டு விவகாரங்களில் வெளிப்படையாகவே தலையிடுவதும் , சிறைக்குள் வைத்து நம் இந்திய  கைதி சர்பஜித் சிங்கை கொடூரமான முறையில் கொன்றிருப்பதும் நம் நாட்டின்மேல் அதற்கிருந்த கொஞ்ச நஞ்ச பயமும் போய் விட்டதென்பதை வெளிப்படையாகவே காட்டுகின்றன . இவை தவிர இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் அரசு நடந்து கொண்ட விதம் மாணவர்களை கூட ரோட்டிற்கு வரவைத்து விட்டது .  இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவை ஒட்டு போட வைப்பதற்கே பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியதாய் இருக்கிறது . இப்படி உள்நாட்டு விவகாரங்களில் மட்டுமல்லாமல் வெளி நாடுகளுடனும் ஒரு ஆரோக்கியமான உறவு இல்லாமல் அச்சத்துடனேயே நமது அரசாங்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது ...

இன்றைய சூழ்நிலையில் காங்கிரஸிற்கு எதிராக இருக்கும் ஒரே மாற்று பி.ஜே.பி மட்டுமே . தேர்தலை ஒட்டி உருவாகும் மூன்றாவது அணி என்றுமே மழையில்  முளைக்கும் காளான் தான் . இருப்பினும் தேசிய அளவில் காங்கிரஸிற்கு  எதிரான வாக்குகளை பி.ஜே,பி ஒட்டுமொத்தமாக திரட்ட தவறியது அந்தந்த மாநில கட்சிகளை தேசிய அளவில் அதிகமாக முக்கியத்துவம் அடைய வைத்திருப்பதையும் யாரும் மறுக்க முடியாது . அர்விந்த் கேஜ்ரால் , அன்னா ஹசாரே போன்றோரின் வருகை படித்த நடுத்தர மக்களிடையே பி.ஜே,பி யின் செல்வாக்கை சரித்திருப்பதும் உண்மை . உட்கட்சி பூசல் , மோடி யை பிரதமாராக அறிவிப்பதில் உள்ள சிக்கல் , கர்நாடகாவில் அடைந்த படு தோல்வி போன்றவைகளும் பி.ஜே.பி க்கு பெரும் பினடைவை ஏற்ப்படுத்தியிருக்கின்றன . இவை எல்லாவற்றையும் விட காங்கிரஸ் என்ன தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் மக்கள் பி.ஜே.பி சிறிய தவறு செய்தாலும் மன்னிக்க முடியாத மனப்பான்மையுடன் இருப்பதும் , ஊடகங்களிடையே தனது உறவை பி.ஜே.பி மேம்படுத்திக் கொள்ளாததும் அந்த கட்சிக்கு சறுக்கலாக இருக்கும் மற்ற அம்சங்கள் . இப்படி சில குறைபாடுகள் இருந்தாலும் காங்கிரசுடன்  ஒப்பிட்டுப் பார்க்கும் போது பி.ஜே.பி சிறந்த தேர்வாகவே படுகிறது . இத்தனை வருட சுதந்திர இந்தியாவில் காங்கிரஸு க்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு வேறெந்த கட்சிக்கும் கொடுக்கப்படவில்லை . எனவே பி.ஜே.பி க்கு மற்றொரு வாய்ப்பு கொடுப்பதில் தவறிருப்பதாக தெரியவில்லை ...

பி.ஜே.பி க்கு எதிராக முக்கியமாக வைக்கபடும் மதவாத குற்றச்சாட்டு ஒரு சந்தர்ப்பவாத குற்றச்சாட்டே . மதவாதம் என்று சொல்லப்படும் பி.ஜே.பி ஓட்டுக்காக எந்தவொரு மதத்துக்கும்  சலுகைகள் வழங்கி உதவிகள் செய்யவில்லை . ஓட்டுக்காக மைனாரிட்டிகளை  தேசிய நீரோட்டத்தில் கலக்க விடாமல் தனித்தே வைத்திருக்கும் பல கட்சிகளின் கூட்டு சதியே இந்த மதவாத பிரச்சாரம்  . உலக மக்கள் தொகையில்  மைனாரிட்டியாக இருக்கும் ஹிந்துக்களை சாதி ரீதியாக பிரித்து வைப்பதே இங்குள்ள அரசியல் கட்சிகளின் முக்கிய நோக்கம் . எங்கே அவர்கள் ஒன்றுபட்டு விடுவார்களோ என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த போலி மதவாத பிரச்சாரம் . ஒரு கட்சி  எந்தவொரு குறிப்பிட்ட மதத்தை ஆதரித்தாலோ அல்லது அதன் சார்பாக நடந்து கொண்டாலோ அதை மதவாத கட்சி என்று சொல்லலாம் . அந்த அடிப்படையில்  ஹிந்துக்கள் சார்பாக நடப்பதாக சொல்லப்படும் பி.ஜே.பி மதவாத கட்சி என்றால் மற்ற மதங்களை தலையில்  தூக்கிப் பிடிக்கும் மற்ற கட்சிகள் மட்டும் மிதவாத கட்சிகளா ? இதை யோசித்தாலே அரசியல் கட்சிகள் போடும் பகல் வேடம் தெளிவாகும் ...

பாபர் மசூதி இடிப்பும் , கோத்ரா கலவரமும் பி.ஜே.பி க்கு எதிராக வைக்கப்படும் கடுமையான குற்றச்சாட்டுகள். பாபர் மசூதி பிரச்சனைக்கு ஏற்கனவே உச்ச நீதி மன்றம் சுமூகமான தீர்ப்பை வழங்கிவிட்டது . கோத்ராவை பொறுத்தவரை எதி ர்கட்சிகள் எவ்வளவோ முயன்றும் மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை . சமீபத்தில் இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது . எந்தவொரு கட்சியின் வளர்ச்சிக்கு பின்னாலும் ஆராய்ந்து பார்த்தால் ஏதாவது குற்றச்சாட்டுகள் கண்டிப்பாக இருக்கும் என்பதே வரலாறு .  இதற்கு பி.ஜே.பி மட்டும் விதிவிலக்கல்ல . இந்த குற்றச்சாட்டுக்கள் மட்டுமே அந்த கட்சிக்கான ஓட்டுக்களை சிதைத்து விட முடியாது . ஏனெனில் தேசிய அளவில் மூன்று  விதமான ஒட்டு வங்கிகள் உள்ளன . அதில் முதலாவது மற்றும் முக்கியமானது ஏழைகள் ஒட்டு , இரண்டாவது மைனாரிட்டிகள் ஒட்டு , மூன்றாவது படித்த நடுத்தர வர்க்கத்தினர் ஒட்டு ...


அந்தந்த ஏரியாவில் வினியோகிக்கப்படும் பணமும் , இலவசங்களும் முதலாவது ஒட்டு வங்கியை கவனித்துக் கொள்கின்றன . மத்திய அரசு
 " உங்கள் பணம் உங்கள் கையில் " திட்டத்தை எல்லா மாநிலங்களுக்கும் வெற்றிகரமாக கொண்டு செல்வதில் முனைப்பாக இருப்பதற்கு காரணத்தை சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை . இரண்டாவதாக இருக்கும் மைனாரிட் ஓட்டை சிறிய விழுக்காடேனும் பி.ஜே.பி பக்கம் போக விடாமல் வைத்திருப்பதே மற்ற கட்சிகளின் முக்கியமன நோக்கமாக இருக்கிறது . ஹிந்துக்களை போல அல்லாமல் மைனாரிடிகள் ஒட்டு விஷயத்தில் ஒற்றுமையாக இருப்பது இந்த வகை ஒட்டு வங்கியை பலப்படுத்துகிறது . மூன்றாவதாக இருக்கும் நடுத்தர ஒட்டு வங்கி அந்தந்த சூழ்நிழைக்கு ஏற்றவாறு தங்களின் நிலையை வெளிப்படுத்திக் கொள்கிறது . காங்கிரசின் மேல்  இருந்த நம்பிக்கை நடுத்தர வர்க்கத்தினருக்கு  வெகுவாக சரிந்திருப்பது பி.ஜே.பி க்கு சாதமாக இருந்தாலும் முன்னமே சொன்ன மாதிரி அவை முழு மையாக பி.ஜ.பி க்கு சென்றடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . வரப்போகிற தேர்தலில் இந்த மூன்றாவது வாக்கு வங்கி முக்கிய பங்கு வகிக்கப் போவது உண்மை . முன் போல இல்லாமல் ஒட்டு போடும் வழக்கம் அதிகமாகி வருவதும்  அதற்கு மற்றொரு முக்கிய காரணம் ...

இரண்டாவது வகை ஒட்டு வங்கியில் தனக்கு ஏற்படும் இழப்பை பி.ஜே.பி இதில் சமன் செய்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன . அதே நேரம் இந்த வகை ஒட்டு மொத்தமாக பி.ஜே,பி பக்கம் சாயும் போது தான் பலன் அதிகமாக இருக்கும் . ஆனால் இந்த வகை மக்கள் சென்ற தேர்தலை போல நாம் ஓட்டுப் போட்டாலும் தனித்த மெஜாரிட்டியில் பி.ஜே.பி வராது என்றோ அல்லது மூன்றாவது அணி அதிக இடங்களை பெற்று கம்யூனிஸ்ட் தலைமையில் ஆட்சி வந்து விடும் என்றோ பயத்தில் திரும்பவும் காங்கிரஸ் பக்கமே சாய்ந்து விடுகிற அபாயமும் உள்ளது . இதை சரி கட்டுவதற்கு பி.ஜே.பி க்கு உள்ள ஒரே பிரம்மாஸ்திரம் நரேந்திர மோடி . சமீபத்தில் பிரபல எழுத்தாளர் சேட்டன் பகத் பேஸ் புக்கில் நடத்திய கருத்துக்கணிப்பில் 84 சவிகிதம் பேர் நரேந்திர மோடி பிரதமராக வர  விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்  . மூன்றாவது வகை ஒட்டு வங்கியில் அதிகம் இருப்பவர்கள் இவர்களே . இதே கருத்துக்கணிப்பில் ராகுல் காந்திக்கு 13 சதவீதம்  பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்திருப்பதும்  குறிப்பிடத்தக்கது . மோடியை  முன்னிருத்தினால் மைனாரிட்டிகள் புறக்கணிப்பார்கள் என்ற நினைப்பில் வரை தவிர்த்து அத்வானியையோ அல்லது வேறு யாரையோ பி.ஜே.பி யின் பிரதம வேட்பாளராக அறிவித்தாலும் அந்த ஓட்டு வங்கியில் பெரிய மாற்றம் ஏற்ப்பட்டுவிடப் போவதில்லை .  மாற்றாக மோடியை அறிவிப்பதன் மூலம் படித்த நடுத்தர மைனாரிட்டிகளிடையே ஒட்டு பெறுவதற்கு பி.ஜே.பி க்கு வாய்ப்பு உள்ளது . பாராளுமன்ற தேர்தல் கமிட்டியில் மோடி இடம் பெற்றிருப்பதும் , மோடிக்கு நெருக்கமான அமித் ஷா உத்திர பிரதேசத்திற்கு பொறுப்பேற்றிருப்பதும் அவர் பி.ஜே.பி யின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படுவ்தற்கான வாய்ப்பை ஊர்ஜிதம் செய்கின்றன ...

மோடிக்கு ஏற்பட்டிருக்கும் பாப்புலாரிட்டி  ஒரே நாளில் ஏற்பட்டதில்லை  எனபது கடந்த 12 ஆண்டு கால குஜராத் மாநில வளர்சியயை கூர்ந்து பார்த்தாலே புரிய வரும் . அவரின் மேல் மதசார்பு சாயத்தை எவ்வளவோ காங்கிரஸ் பூசிப்பார்த்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை . முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் அவருக்கு ஆதரவாக அதிக ஓட்டுக்கள்  விழுந்திருப்பது அவர்  மேல் மைனரட்டிகள்  வைத்திருக்கும் நம்பிக்கையை கா ட்டுகிறது . 2002 இல் நடந்த கலவரத்தை தாண்டி அவர்கள் முன்னேறி வந்திருப்பது தெரிகிறது . ஏனெனில் குஜராத் என்றுமே அமைதி பூங்காவாக  இருந்ததில்லை . 2002 க்கு முன்  அடிக்கடி அங்கே இந்து - முஸ்லிம் கலவரம் நடப்பது வாடிக்கை . ஆனால் 2002 கலவரத்திற்கு பின் கடந்த 11 ஆண்டுகளில் மத வேற்றுமைகளை  கடந்து அனைவரும் ஒற்றுமையாக  முன்னேறி வருகிறார்கள் என்பதே நடைமுறை உண்மை . குஜராத்தின் உண்மை நிலைமை அங்கிருப்பவ்ர்களுக்கே தெரியும் . இந்திரா காந்தி  படு கொலை செய்யப்பட பிறகு 1500 சீக்கியர்களுக்கு மேல் கொல்லப்பட்டார்கள் . ஆனால் இன்று காங்கிரஸ் தலைமையிலான அரசில் பிரதமராக இருப்பவர் மன்மோகன் சிங் என்பதே வரலாறு ...

ஏதோ மோடியே  முன்னிருந்து கலவரத்தை நடத்தியது போல போலியாக சித்தரிக்கிறார்கள் . அது சம்பந்தப்பட வழக்குகளிலிருந்து மோடி விடுவிக்கப்பட்டிருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் . மோடியை முன்னிருத்தினால்  கூட்டணியிலிருந்து விலகி விடுவோமென பீஹார் முதல்வர் நிதிஸ் குமார் சொல்லியிருக்கிறார் . அப்படி நடக்கும் பட்சத்தில் பீகாரில்  15 - 20 இடங்கள் பி.ஜே.பி க்கு கிடைக்காமல் போகலாம் .
ஆனால் இந்தியா முழவதும் வெற்றி வாய்ப்புள்ள இடங்களை ஆராய்ந்து பார்த்தால்  பீகாரின் இழப்பு பி.ஜே.பி க்கு பெரிதாக இருக்காது . எந்த கட்சியும் தனித்து பெரும்பான்மை அடையப் போவதிலலை . 160 -180 இடங்களை  தனித்து கைப்பற்றினாலே மற்ற கட்சிகள் தங்கள் ஆதரவை  வெளியிலி ருந்தோ உள்ளிருந்தோ கொடுத்து விடுவார்கள் என்பதே இன்றைய இந்திய அரசியலின் நிலை . தென் இந்தியாவில்  வளர்ச்சியடையாததும் , கர்நாடகாவில் இருந்த ஒரே ஆட்சியை ஊழலாலும்  , உட்கட்சி பூசலாலும் பறிகொடுத்ததும்  , உத்திர பிரதேசத்தில் சரிந்த செல்வாக்கும் பி.ஜே,பி க்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் . ஆனால் இன்று கர்நாடகாவில் பி.ஜே.பிக்கு நேர்ந்த  நிலை நாளை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கும்  ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை . ஊழல் மற்றும்  நிர்வாகத் திறன் இல்லாத அரசை  மக்கள் தூக்கி எறிவார்கள் என்பதே கர்நாடக மக்கள்  கற்றுத்தந்த பாடம் ...

காங்கிரஸை பொறுத்தவரை பி.ஜே.பி யை நோக்கி மற்ற கட்சிகள் செல்லாததும் , பி.ஜே.பி போலல்லாமல் தென்னிந்தியாவில் தமிழகம் தவிர்த்து மற்ற மூன்று மாநிலங்களிலும்  ஆட்சியமைத்திருப்பதும்  அதற்கு பெரிய பலம் .  அது மட்டுமல்லாமல் பண பலம் ,அரசியல் பலம் இரண்டும்  வேறெந்த கட்சிகளை விடவும் காங்கிரஸிற்கு அதிகமாகவே உள்ளன . கட்சிகளும் சரி , மக்களும்  சரி கடைசி நேரத்தில் மனது மாறி தங்களிடம் தான் வருவார்கள் என்கிற நம்பிக்கையும் காங்கிரஸிற்கு உண்டு . இரண்டு முறை பிரதமாராக இருந்து விட்டதால் இந்த முறை  மன்மோகனை தவிர்த்து ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக காங்கிரஸ்  அறிவிப்பதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது . விலைவாசி உயர்வு , தீவிரவாதம் , ஊழல்  , அயல்நாடுகளின் அச்சுறுத்தல் இப்படி பல காரணங்களால்  காங்கிரஸ் மேல் மக்களுக்கு வெறுப்பு இருந்தாலும் ராகுலின் வருகை அவற்றை மாற்றி புது உத்வேகத்தை கொடுக்கும் என்பது காங்கிரஸ்காரர்களின் நம்பிக்கை . உ.பி , குஜராத் மாநிலங்களில் அவர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது என்பது உண்மையாக இருந்தாலும் அவரை கழித்துக் கட்டி விட முடியாது . 2004 இல் சோனியாவின் வருகை காங்கிரஸை எட்டு வருடங்களுக்கு பிறகு ஆட்சி பீடத்தில் ஏற்றியதையும் யாரும் மறுக்க முடியாது ...

வரும் நவம்பரில் ராஜஸ்தான் , டில்லி , சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2014 பொது தேர்தலுக்கு வெள்ளோட்டமாக இருக்கும் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள் . பாராளுமன்ற தேர்தல் கமிட்டியில் மோடி இடம் பெற்றிருப்பதும் , மோடிக்கு நெருக்கமான அமித் ஷா உத்திர பிரதேசத்திற்கு பொறுப்பேற்றிருப்பதும் அவர் பி.ஜே.பி யின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படுவ்தற்கான வாய்ப்பை ஊர்ஜிதம் செய்கின்றன . காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை பி.ஜே.பி க்கு சாதகமான ஓட்டாக மாறினால் மட்டுமே அதன் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமையும் . அப்படி நடக்காமல் காங்கிரஸ் மற்றும் உதிரி கட்சிகள் அதிக இடங்களை பெரும் பட்சத்தில் மீண்டும் காங்கிரஸ் தலைமையில் அரசு அமைவதற்க்கான வாய்ப்பே உருவாகும் . சுதந்திரம் அடைந்ததில் இருந்து வாழையடி வாழையாக நேரு குடும்பத்தினரோ அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருவரோ தான் இந்தியாவை ஆண்டு வந்திருக்கிறார்கள் . எனவே 2014 தேர்தலில் ஜெயிக்கப் போவது காங்கிரஸா ? பி.ஜே,பி யா ? அல்லது மோடியா ? ராகுலா ? என்பதை விட பழமையில் ஊறிய மன்னாராட்சியா ? முன்னேற்றம் கொடுக்கும் மக்களாட்சியா ? என்பதே நம் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது ...


19 March 2013

ஈழ விடுதலையும் , ஈன அரசியலும் ...



ராமாயண காலத்திலிருந்தே இலங்கைக்கும் போருக்கும் தூரமில்லை . இலங்கை அரசுக்கும் , விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான உச்சக்கட்ட போர் 2009 ஆம் ஆண்டு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது . போரின் போது அப்பாவி தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேரை இனப்படுகொலை செய்ததும் , இந்த நான்கு ஆண்டு காலத்தில் எஞ்சியிருக்கும் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு ஒப்புக்கொண்ட படி இலங்கை அரசு எந்தவொரு சீரமைப்பு நடவடிக்கைகளும் செய்யாததும் தமிழர்களை மட்டுமல்ல அமெரிக்கா , இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிதன் விளைவே  இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கழகம் மூலமாக ஒரு தீர்மானத்தை அமெரிக்காவே கொண்டு வருமளவிற்கு கொண்டு போய் விட்டிருக்கிறது .

2014 பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதாலோ என்னவோ இத்தனை வருடங்கள் காங்கிரஸ் அரசிடமிருந்து வெளியேறி விடுவேன் என்று பூச்சாண்டி காட்டிக்  கொண்டிருந்த கலைஞர் இன்று கடைசியாக இலங்கை அரசுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிக்காத காரணத்தினால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் . அதே சமயம் வழக்கம் போல மத்திய அரசுக்கு சில நாட்கள் கால அவகாசம் கொடுப்பதாக சொல்லி எந்த நேரமும் தன் முடிவு மாறக் கூடும் என்பதையும்  சொல்லாமல் சொல்லியிருக்கிறார் . காவிரி நதி நீர் ஆணைய தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வைத்து சரித்திரத்தில் முதல்வர் முக்கிய இடம் பிடித்து விட்டதால் தானும் எதையாவது செய்ய வேண்டுமென்கிற உத்வேகத்தில் கலைஞர் ஈழப் பிரச்சனையை கையில் எடுத்திருப்பதாக விஷயமறிந்தவர்கள்  சொல்கிறார்கள் . எது எப்படியோ இப்பொழுதாவது அந்த முடிவை எடுத்தாரே என்று பாராட்டினாலும் அதனால் மத்திய அரசிற்கு எந்த வித பாதிப்பும் ஏற்ப்படப் போவதில்லை . மேலும் கலைஞரின் அரசியல் உலகறிந்ததே , அவரை விமர்சிப்பது இந்த பதிவின் நோக்கமல்ல .

ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து இலங்கையில் நடந்ததை  சமுதாயக் கொலைகளாக  கருதி பொது விசாரணை நடத்த வேண்டுமென்றும் , பொது வாக்கெடுப்பு நடத்தி தனி ஈழம் அமைவதற்கு வழி வகுக்க வேண்டுமென்றும் அவர் வைத்துள்ள கோரிக்கைகள் நடைமுறையில் சாத்தியமா என்கிற கேள்வி  ஒருபுறம் இருந்தாலும் கீழ்கண்ட பல கேள்விகள்  நம் முன் எழுகின்றன .

போரே  குற்றம் எனும் பொழுது  ராஜபக்ஷே மட்டும் தான் போர்க்குற்றவாளியா ? பிற்காலத்தில் தன மகனையே கொல்வார்கள் என்று தெரியாமல் பிரபாகரனுக்கு உதவிகள் செய்து வளர்த்து விட்ட இந்திரா காந்தி குற்றவாளி இல்லையா ? அண்டை நாட்டு உள் விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்ற இந்திய அரசியல் மரபை மீறி இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பிய ராஜீவ் காந்தி குற்றவாளி இலையா ? அதற்காக  நம் நாட்டிற்குள் புகுந்து முன்னாள் பிரதமரும் ,  முக்கிய தலைவருமான ராஜீவ் காந்தியை கொன்று அதன் மூலம் அண்டை நாட்டுடன் தீராப் பகையை சம்பாதித்துக் கொண்ட விடுதலைப்புலிகள் குற்றவாளிகள் இல்லையா ? தனி ஈழம் அமைவதற்கான வாய்ப்பு வராத போது கூட தனி மாகாணமாக சுதந்திரத்துடன் வாழ்வதற்கு வந்த வாய்ப்பை  ஏற்காமல்  அது தன்  தலைமையின் கீழ் தான் வர வேண்டுமென்ற எண்ணத்தில் சக தமிழின தலைவர்களை கொன்று குவித்த பிரபாகரன் குற்றவாளி இல்லையா  ? ராஜீவ் காந்தி விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டதற்கு பழி வாங்கவே இந்த உதவிகள் செய்யப்பட்டன என்று பரவலாக பேசப்பட்டாலும் ஒரு உயிருக்கு  பதிலாக ஒரு லட்சத்திற்கும் மேலான தமிழ் உயிர்கள் பலியாவதற்கு காரணமாக அமைந்த  அரசியல்வாதிகள் குற்றவாளிகள்  இல்லையா ?  இலங்கைக்கு மறைமுக  உதவிகள் செய்யப்படுவது தெரிந்தும் கண்டன  அறிக்கைகைகள் மட்டும் வெளியிட்டு விட்டு பதவிக்காக மௌனம் காத்த கலைஞர் குற்றவாளி இல்லையா ? இப்படி அந்நியன் படத்தில் வரும் சுஜாதா வசனம் போல நிறைய பேர் மேல் நாம் குற்றம் சாட்டினாலும் அதில்  பலர் உயிருடன் இல்லை . உயிருடன் இருக்கும் மற்றவர்களும்  ஈழ மறு வாழ்விற்கு ஏதாவது செய்வார்கள் என்று இன்னமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் நாம் தான் குற்றவாளிகள் ஆகி விடுவோம் . இவை தவிர இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பிழைப்பு தேடி சென்ற தமிழர்களை அங்கிருந்த பூர்வக் குடி தமிழர்கள் சம உரிமையுடன் நடத்தவில்லை என்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது ...

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருவதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு ஏதாவது செய்யும் என்றோ , அப்படி செய்வதற்காகத் தான் நாங்கள் மத்திய அரசை நிர்பந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்றோ இங்கே யாராவது சொன்னால் அது போகாத ஊருக்கு வழி சொல்வது போலத்தானிருக்கும் . ஏற்கனவே இலங்கையே  தமிழர்களுக்கான மறு சீரமைப்பை செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்து பல கோடி ரூபாயை வாரி வழங்கிய மத்திய அரசு அதற்கான கணக்கையாவது கேட்டதா  என்று கூட தெரியவில்லை . இந்த லட்சணத்தில் மனமுவந்து  மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது செய்யும் என எதிர்பார்ப்பது மடத்தனம் . மத்திய  அரசின் மீதும் , அந்த அரசில் அங்கம் வகித்த கூட்டணி கட்சிகள்  மீதும் நம்பிக்கை இழந்ததால் தான் மாணவர்களும் , பொது மக்களும் களத்தில் குதித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் . இது ஆரோக்கியமாக தெரிந்தாலும் வன்முறைக்கு வழி வகுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...

இது போன்ற போராட்டங்கள் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவாக சர்வதேச அரங்கில் ஒரு முக்கியத்துவத்தை கொடுக்கும் என்ற போதிலும் இங்கே வரும் புத்த பிட்சுக்களை அடிப்பது அங்கே வாழும் எஞ்சிய தமிழர்களுக்கு மேலும் பிரச்சனைகள்  உருவாவதற்கு காரணமாக அமைந்து விடக் கூடும் என்பதோடு வன்முறை எதற்கும் தீர்வாகாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் . தனிப்பட்ட  முறையில் தீவிரவாதத்திற்கு எதிரான குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாடுடையவர்கள் கூட 2009 க்கு பிறகு விடுதலைப்புலிகள் முற்றிலும் ஒடுக்கப்பட்ட பிறகு அங்கே வாழும் எஞ்சிய தமிழர்கள்  சம உரிமையுடன் சுதந்திரமாக வாழ வேண்டுமென்றே விரும்புகிறார்கள் . அதையே தான் அங்கிருக்கும் தமிழர்களும் விரும்புவார்கள் என்றே நினைக்கிறேன் ...

விடுதலைப்புலிகள் மக்களுடன் இரண்டறக் கலந்திருந்ததால் தான் மக்களையும் தாக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளானோம் என்று சொன்ன இலங்கை அரசு போரின் போதும் , முடிந்த பிறகும் பாதுகாப்பு தருவதாக சொல்லி அப்பாவி மக்களை அழைத்து வந்து இனப் படுகொலைகள் செய்ததை ஆதரப்பூரவமாகச சேனல் 4 ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது . எனவே இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றத்தை சர்வதேச நாடுகளின் மேற்பார்வையில் பாரபட்சமின்றி விசாரித்து குறிப்பிட்ட கால வரையறைக்குள் அதற்கு காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டுமென்பதில் அனைத்து நாடுகளுக்கும் ஒருமித்த கருத்து வர வேண்டும் . இதற்கு உண்மையிலேயே தார்மீக அடிப்படையில் வலியுறுத்த வேண்டிய மத்திய அரசு திருடனுக்கு தேள் கொட்டியது போல காலம் தாழ்த்தி வருகிறது ...

கத்தியை  எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்பார்கள் .  இன்று பிரபாகரனின் இளம் வயது  மகன் கொலை செய்யப்பட்டதை அறிந்து நாம் ரத்தக் கண்ணீர் வடிப்பது போல் தானே அன்று விடுதலைப்புலிகள் குண்டு வைத்து பல சிங்கள சிறுவர்களை கொன்று குவித்த போது அவர்களும் வடித்திருப்பார்கள் . போருக்காக வலுக்கட்டாயமாக பல தமிழ் சிறுவர்களை இழுத்து சென்ற போது  அவர்களின் பெற்றோர்களும் வடித்திருப்பார்கள் .
" There is no rule in War & Love " என்பது இரண்டு தரப்பிற்கும் பொருந்துகிறது. இலங்கையில் உளநாட்டுப் போர் முடிவடைந்து பல வருடங்கள் கடந்து விட்ட இன்றைய சூழ்நிலையில் ராஜபக்ஷே போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்படுவதிலும் , தனி ஈழம் அமைவதிலும் சாத்தியக் கூறுகள் குறைவாக உள்ள போதிலும் சர்வதேச நாடுகளின் மேற்பார்வையின் கீழ் ஈழத் தமிழர்களின்  மறு வாழ்வு சீரமைப்பு பணிகள் விரைவாக நடந்து அவர்களை சுதந்திரமாகவும் , சம உரிமையுடனும் வாழ  வைப்பதற்கான சாத்தியம்  இருப்பதாகவே கருதுகிறேன் ...

பெரும்பாலான இந்திய அரசியல்வாதிளின் நடவடிக்கைகளை பொறுத்தவரை ஈழ பிரச்சனை என்பது அந்தந்த சந்தர்ப்பங்களில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் , அரசியல் நடத்துவதற்கும் உதவிகரமாக இருந்திருக்கிறதே ஒழிய உண்மையான தீர்வு காண்பதற்கான முயற்சியாக இல்லை . எனவே அனைவரும் உணர்ச்சிப் பூர்வமாக சிந்திக்காமல் உணர்வுப் பூர்வமாக சிந்தித்து ஈழத்தை வைத்து இன்னும் ஈன அரசியல் நடத்துபவர்களை அடையாளம் கண்டு புறந்தள்ளி தேசிய ஒருமைப்பாடு சீர்குலையாமல் அற வழியில் போராட வேண்டிய தருணமிது  ... 

4 August 2012

அன்னா - மற்றுமொரு மன்மோகன் ?! ...



ழலுக்கு எதிரான தனது உண்ணாவிரதத்தை பத்து நாட்களுடன் முடித்துக் கொண்ட அன்னாஹசாரே தான் தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்...
இதற்கு முன் அன்னா உண்ணாவிரதம் இருந்ததை  அன்னாவின் விரதமும்,மன்மோகனின் மௌனமும்  என்ற பெயரில் பதிவிட்டிருந்தேன் ... ஊழலுக்கு எதிராக , அதிலும் குறிப்பாக காங்கிரஸ் அரசின் உச்சக்கட்ட ஊழலை பார்த்து கொதிப்படைந்து போயிருக்கும் கோடானுகோடி இந்தியர்களுள் நானும் ஒருவன் ... 


என்ன தான் எதிர்க்கட்சிகளான பி.ஜே.பி யும் , கம்யூனிஷ்டும காங்கிரஸின் ஊழலை எதிர்த்தாலும் அதை அரசியலாகத்தான் மக்கள் பார்ப்பார்கள் , அதையே அரசியல் சாராத ஒரு தனி மனிதன் செய்யும் போது அனைவரிடமும் ஒருவித பரவசமும் , உத்வேகமும் தொற்றிக்கொள்ளும் ... ஒரு கிராமத்தையே முன் மாதிரியாக மாற்றிக் காட்டிய காந்தியவாதி அன்னா ஹசாரே முதன் முதலில் ஜன் லோக் பாலை வலியிறுத்தி உண்ணாவிரதம் இருந்த போது அனைவருக்கும் ஒரு உற்சாகம் பிறந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை ...  அன்னா ஹசாரேவின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மத்திய அரசு இரட்டடிப்பு செய்த போது மீண்டும் அன்னா களத்தில் குதித்த போதும் மக்களிடையே அதே வரவேற்பு இருந்து ... 


ஒரு பக்கம் அன்னாவிற்கு ஆதரவு பெருகிக் கொண்டே போனாலும் மறுபக்கம் அன்னாவின் ஊழலுக்கு எதிரான மசோதா நடைமுறைக்கு ஒத்துவராது என்றும் , அவர் ஒரு விளம்பர விரும்பி என்பதுமான விமர்சனங்களும் வளர்ந்து கொண்டே தானிருந்தன ... பழுத்த அரசியல் விமர்சகரும் , காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை தன் பத்திரிக்கையில் விமர்சித்து வருபவருமான சோ அவர்களே அன்னா அண்ட் குழுவினரை கோமாளிகளாகவே தொடர்ந்து சித்தரித்து வருகிறார் ... சோவுடைய நையாண்டிகளை நான் ரசிப்பவனாக இருந்தாலும் இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்தே கொண்டிருந்தேன் ... 


இருப்பினும் கொஞ்சம் நுணுக்கமாக ஜன்  லோக் பாலின் நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்த போதும் , அன்னாவை சுற்றியிருப்பவர்கள் அடிக்கும் கூத்துக்களை பார்க்கும் போதும் , முன்னுக்கு பின் முரணான சில கருத்துக்களை அவர்கள் கூறும் போதும் ஏதோ ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது ... அதனால் தானோ என்னவோ இந்த முறை அன்னா அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது எனக்கு பெரிதாக எந்த சலனமும் ஏற்ப்படவில்லை ... அது மட்டுமல்லாமல் இப்போது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட அன்னா அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் , ஆனால் தான் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்றும் அறிவித்திருப்பது மேலும் நெருடலையே கொடுக்கிறது .. 


அரசியலே சாக்கடை , அரசியல்வாதிகள் எல்லோருமே ஏமாற்றுக்காரர்கள் என்கிற ரீதியில் பேசிக்கொண்டிருந்த அன்னா குழுவினர் இப்போது தடாலடியாக அரசியலில் குதிக்கப்போவதாக அறிவித்திருப்பது அவர்கள் நம்பகத்தன்மையை கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது... சட்டத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வர நிச்சயம் அரசியல் ரீதியான ஆதரவு தேவை , அரசியல்வாதிகள் எல்லோரும் ஒத்துழைத்தால் தான் அந்த வகையான சட்டத்தை கொண்டு வர முடியும் ... ஊழலில்  ஊறிப்போன அரசியல்வாதிகள் அதற்கு எதிரான சட்டத்தை கொண்டு வந்து சொந்தக் காசிலேயே சூனியம் வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் , இதே சட்டத்தை வைத்து உயர் பதவியில் இருக்கும் ஊழல் செய்யாதவர்களை கூட ப்ளாக்மெயில் செய்யும் அபாயமும் இருக்கிறது ... 





ஆரம்பத்திலிருந்தே அன்னா குழுவினருக்குள்ளே கருத்து வேறுபாடு தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது , அதனால் தான் ஒரு நாள் மத்திய அரசை ஆதரித்தவர்கள் அடுத்த நாள் திட்டித் தீர்த்தார்கள் ... இப்போது இருக்கும் சூழ்நிலையில் அன்னா கட்சி ஆரம்பித்தாலும் ஆட்சியை பிடிப்பதென்பது நடக்காத காரியம் , அப்படியே பிடித்தாலும் இந்த மசோதாவை நடைமுறைப் படுத்த முடியுமா என்பது இமாலய கேள்வி ... தற்போதைய நிலையில் தனித்து ஆட்சி என்பது எட்டாக்கனியாகி விட்ட நிலையில் அன்னா யாருடன் கூட்டு சேர்வார் ? 


காங்கிரஸுடன் சேர முடியாது , பி.ஜே,பி யுடன் சேர்வதற்கு தனிப்பட்ட முறையில் அவருக்கு விருப்பமிருந்தாலும் யாராவது மதவாதி என்று சொல்லி விடுவார்களோ என்ற பயத்தால் அதையும் செய்ய முடியாது ... ஏற்கனவே ஊழலில்லாத மோடியின் ஆட்சியையும் , அவரையும் நியாமாக பாராட்டி விட்டு பின்னர் போலி மதவாதத்திற்கு பயந்து தன் கருத்துக்களை மாற்றியவர் அன்னா ... இந்த சம்பவத்தின் போதே அரசியலில் குதிப்பதற்கு  அவர் ஆர்வமாய் இருப்பது ஒரளவு புலனானது , ஏனெனில் அரசியல்வாதிகள் தான் ஓட்டுக்கு பயந்து போலி மதவாதம் பேசுகிறார்கள் என்றால் அரசியல் சாரா இயக்கத்திலிருக்கும் அன்னா பயந்திருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை ...


ஒவ்வொரு உண்ணாவிரதத்தின் போதும் தவறாமல் அவரை லைவாக ஆங்கில சேனல்கள் காட்டிய போது சில சமயங்களில் அவையெல்லாம் தமிழககத்தில் கடந்த ஆட்சியின் போது கலைஞர் டி.வி யில் ஒளிபரப்பான " முத்தமிழ்கலைஞர்  " அவர்களை நாயனாக வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றை நியாபகப்படுத்தின ... நிச்சயம் இதற்கு அன்னாவை குறை கூற முடியாது , ஆனாலும் இந்த சம்பவங்கள் அனைத்தும் அன்னாவையும் ஒரு விளம்பர பிரியரோ என்ற அச்சத்துடனே பார்க்க வைத்தன ... 




அரசியலில் ஈடுபடவும் , கட்சி ஆரம்பிக்கவும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது , அதில் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடுமில்லை , ஆனால் அன்னா அரசியலில் ஈடுபட்டு தான் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பதே எனது கேள்வி . எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆரம்பத்தை பார்த்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு தான் கட்சியை தொடங்கியிருப்பார்கள் , ஆனால் அது போக போக மக்களுக்கு பயன்பட்டதோ இல்லையோ அவர்களுடைய மாக்களுக்கும் , சுற்றியிருக்கும் கூட்டதிற்குமே பயன்பட்டிருக்கிறது ... 


அதே போல அன்னாவின் உண்ணாவிரதங்களும் அரசியல் ஸ்டண்டா ? தனிப்பட்ட முறையில் அன்னா நேர்மையாக இருந்தாலும் கட்சியிலிருப்பவர்கள் அனைவரையும் அதே போல கட்டுக்கோப்பாக வைக்க முடியுமா ? என்பது கேள்விகளெல்லாம் நம்மை குடைகின்றன ... ஏனெனில் நம்மூரில் மன்மோகன்சிங் என்று ஒரு நல்லவர் இருந்தார் ... ஒரு காலத்தில் சிறந்த பொருளாதார நிபுணராகவும் , நடுத்தர வர்க்கத்தினரின் நாயகனாவும் , அப்பழுக்கற்ற நேர்மையாளராகவும் பார்க்கப்பட்டவர் இன்றோ முதலாளிகளின் மீது கொண்ட விசுவாசத்திற்காகவும் , அவர் கடைபிடிக்கும் கூட்டணி தர்மத்திற்காகவும் , அவர் மீதே எழுந்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகவும் அதே நடுத்தர வர்க்கத்தினரால் எதிரி போல பார்க்கப்படுகிறார் ... அதைப் போல அரசியலில் குதிக்கப் போகும் அன்னாவும் மற்றுமொரு மன்மோகன் போல மாறிவிடக் கூடாது என்பதே மக்களின் ஆதங்கம் ... 

17 November 2011

கூட்டணி தர்மம் ...


            
    " ர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும் " என்றார்  பாரதி . " எது தர்மம் " என்பது பற்றி அர்த்தசாஸ்திரத்தில் தெளிவாக விளக்கினார் சாணக்கியன் , ஆனால் இதையெல்லாம் விட தர்மம் கிலோ எவ்வளவு என்று கேட்கும் அரசியல்வாதிகளால் இன்றைய காலகட்டத்தில் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட்டு வரும் தர்மம் " கூட்டணி தர்மம் " ...

    பொது ஜனம் எக்கேடு கெட்டுப்போனாலும் தங்கள் பதவி பறிபோய் விடக்கூடாதென்பதே இந்த தர்மத்தின் முக்கிய குறிக்கோள்..இது மட்டுமல்ல இன்னும் நிறைய கிளை குறிக்கோள்கள் , கொள்கைகள் ... இந்த கூட்டணி தர்மத்திற்காக கட்சி தலைவர்கள் என்னவெல்லாம்  செய்கிறார்கள் அல்லது செய்யலாம் என்பது பற்றிய சில குறிப்புகள் இதோ ...

    முதலில் தன் கூட்டணி கட்சியை சேர்ந்த அமைச்சர் ஊழல் செய்ய போகிறார் என்று திட்டவட்டமாக தெரிந்திருந்தாலும் பிரதமர் கடிதம் எழுவதை தவிர வேறொன்றையும் செய்து விடக்கூடாது , அதிலும் அந்த கடிதத்தில்  ஊழல் செய்யலாமா , கூடாதா என்பதையெல்லாம் தெளிவாக விளக்காமல் விட வேண்டும் ...

                                                         
     பதில் கடிதத்தில் அமைச்சர் இல்லையில்லை நான் என் கட்சிக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி ஊழல் தான் செய்வேன் என்று திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தாலும் அதை தடுப்பது போல நேரடியாக எந்தவொரு பதில் கடிதமும் போட்டு விடக்கூடாது , அதே சமயம் நீங்கள் செய்யப்போகும் ஊழல் நிச்சயம் நல்ல திட்டமே , இருப்பினும் பிற்காலத்தில் ஏதும் சிக்கல் வராமல் இருக்க மற்ற இலாக்கா அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து செய்யலாம் என்று வேண்டுமானால் அறிவுரை வழங்கலாம் ...

    இரண்டாவது , கூட்டாக எவ்வளவு கொள்ளையடித்தாலும் தனியாக யாரையும் மாட்டி விடக்கூடாது   , அப்படியே ஊழல் சில லட்சம் கோடிகளை தாண்டும் போது அது சம்பந்தமாக நடவடிக்கைகளே எடுக்காமல் ஏதாவது அறிக்கைகள்  விட்டும் பத்திரிக்கைகளும் , எதிர்க்கட்சிகளும் நிறைய அமளி துமளி செய்தால் கூட்டணி கட்சி தலைவருடன் அமர்ந்து பேசி அவர் கை காட்டும் நபரை சில நிபந்தனைகளுடன் மாட்டி விடலாம்...
                                       
    நிபந்தனைகளின் படி மாட்டிவிடப்படும் நபருக்கு சி.பி.ஐ ரெய்ட் வரப்போவதை  முன் கூட்டியே தெரிவித்து முடிந்தவரை சம்பந்தப்பட்ட ஆவணங்களை மறைக்குமாறு சொல்லிவிட வேண்டும் . அதையும் மீறி அவர் மாட்டும் போது சட்டம் தன்  கடமையை செய்யும் என்று அறிக்கை விடலாம்...

                         
    அடுத்ததாக , கைதானவரை வெளியில் விட சொல்லி கூட்டணி கட்சி தலைவர் நச்சரிக்கும் சமயத்தில் சட்டசபை தேர்தல் வந்தால் நிற்க வைப்பதற்கு வேட்பாளர்களே இல்லையென்றாலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொகுதிகளை காங்கிரஸ் கேட்கும் போது , எப்படியிருந்தாலும் தோறகத்தானே போகிறோம் என்ற உண்மை தெரிந்தும் ஏன் இவ்வளவு தொகுதிகள் கேட்கிறார்கள் என்றெல்லாம் எதிர் கேள்வி கேட்காமல் கூட்டணி கட்சி தலைவரும் விட்டுக்கொடுத்து விட வேண்டும் ...

     இலங்கை அரசு ஈழ தமிழர்களை அழிப்பதற்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்வது தெரிந்திருந்தும் அதை கண்டும் காணாமல் இருக்க வேண்டும் .அதையும் மீறி  மனம் வெதும்பினால் ஏர் கூலரில் காற்று வாங்கியபடியே சொந்தங்கள் புடை சூழ  கூட்டணி கட்சி தலைவர் குடும்ப தொலைக்காட்சியில் கொலு பொம்மை போல அரை நாள் லைவ் ஷோ காட்டலாம் .

    அதுவும் போதாதென்றால் தன் தமிழ் உணர்வை வெளிப்படுத்த பிரதமருக்கு தமிழிலேயே கடிதம் எழுதலாம் , பிரதமருக்கு தான் தமிழ் தெரியாதே என்று யாராவது தமிழ் பற்றே இல்லாமல் கேள்வி கேட்டால் , புரிந்தாலும் பிரயோஜனம் இல்லை என்று சாமர்த்தியமாக பதில் சொல்லலாம் .

                               
     ஈழ தமிழர்களுக்காக என் உயிரையே தருவேன் என கட்டுரை எழுதலாம் , யாராவது ஏன் இன்னும் உயிரை விடவில்லை என்று குசும்பாக கேட்டால் நான் போய் விட்டால் தமிழர்களை யார் காப்பற்றுவார்கள் என்று பதில் கேள்வி கேட்டு மடக்கி விடலாம் ...

     தன் கட்சியை சேர்ந்த தமிழர்களின் பதவிக்காகவும் , தமிழச்சியான தன் மகளின் ஜாமீனுக்காகவும் தான் நாம் டில்லி போகிறோம் என்பது கூட  தெரியாமல் ஏன் ஈழ தமிழர்கள் பிரச்சனைக்காக நீங்கள் டில்லி செல்லவில்லை என்று யாராவது கேட்டால் அப்படி கேட்பவர்கள் தமிழர்களே அல்ல , ஆரியர்கள் என்று பதில் சொல்லலாம் ...

     பெட்ரோல் விலையை குறைக்கா விட்டால் நான் ஆதரவை வாபஸ் பெற்று விடுவேன் என பிரதமர் நாட்டில் இல்லாத சமயம் பார்த்து சொல்லிவிட்டு , அவருடன் நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு தனக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு மம்தா அந்தர் பல்டியடித்ததை விடவா என்  தமிழ்பற்று மோசம் என்று கூட சொல்லி மழுப்பலாம் ...

    விலைவாசி உயர்வுக்கு மக்கள் அதிகமாக மீன் முட்டை என்று உணவை வெளுத்து வாங்குவது தான் காரணம் என்று பிரணாப் சொன்னதை மேற்கோள்காட்டி அன்னா வழியில் எல்லோரையும் உண்ணாவிரதம் இருக்க சொல்லலாம்... ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கு பிறகும் " தீவிரவாதம் மிகவும் கண்டிக்கத்தக்கது " என்று சொல்லும் பிரதமரை விட வேறு யாரால் தீவிரவாதத்தை வன்மையாக கண்டிக்கவோ , ஒடுக்கவோ முடியும் என்பதை மக்களுக்கு தெளிவாக விளக்கலாம் ...


                           
     மக்களின் அத்தியாவசிய தேவைகளான பெட்ரோல் , டீசல் , காய்கறி இவற்றின் விலைகளை ஏற்றி இந்திய பொருளாதாரத்தையே ஏற்றத்தில் வைத்திருக்கும் மத்திய அரசின் நல்லாட்சி கவிழ்ந்து விட கூடாது என்ற நல்லெண்ணத்தில் கூட்டணியில் தொடர்ந்தால் அது புரியாமல் மாநிலத்தில் ஆட்சி பறிபோய் ,  மகளும் ஜாமீனில் வர முடியாமல் இருக்கும் காரணத்தினால் தான் மத்திய அரசுடன் நீங்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பி சுயமரியாதையை சுரண்டி பார்க்கும்  போது உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்று சுயத்தை காட்டலாம் ...

     இப்படி பல கட்சிகள் தனித்தனியாக கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பதோடு , தீவிரவாதம் , ஊழல் , விலைவாசி உயர்வு , சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் இப்படி மத்திய அரசுக்கு எதிராக நிறைய  குற்றச்சாட்டுக்கள் இருந்தும் தங்கள் ஆதரவை மட்டும் வாபஸ் பெற்று விடக்கூடாது என்ற தர்மத்தையும் கூட்டாக கடைபிடிக்கின்றன ...

    இதற்கு கட்சிகளின் பதவி ஆசையோ , இந்த கூட்டணி தொடர்ந்தால் தான் சௌகரியமாக கொள்ளையடிக்க முடியும் என்ற நினைப்போ , தேர்தலை சந்திக்க பயமோ மட்டும் காரணம் அல்ல . சினிமாவில் ஹீரோ என்ன வேண்டுமானால் செய்யலாம் , ஆனால் ஹீரோயின் மட்டும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என அடிமட்ட ரசிகன் நினைப்பது போல காங்கரஸின் குறைகள் மக்களுக்கே பழகிப் போன பிறகு , பல கட்சிகளுக்கு மாற்று கட்சியை விட காங்கிரசுடன் கூட்டு சேர்வது வசதியாகி விட்டதும் மிக முக்கிய காரணம் ...
Related Posts Plugin for WordPress, Blogger...