Showing posts with label MAYAKKAM ENNA FILM REVIEW. Show all posts
Showing posts with label MAYAKKAM ENNA FILM REVIEW. Show all posts

26 November 2011

மயக்கம் என்ன - அரை மயக்கம் ...


   செல்வராகவனை நம்பி தனுஷ் தன்னை முழுதாக ஒப்படைத்திருக்கும் மூன்றாவது படம் " மயக்கம் என்ன " ... படம் பார்த்து முடித்த பிறகு தனுஷும் நம்மைப் போல நிச்சயம் ஏமாந்திருப்பார் என்று தான் சொல்ல வேண்டும் ... இடைவேளைக்கு பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் இயக்குனர் மயக்கத்தில் தத்தளித்ததே அதற்கு காரணம் ...

   பெற்றோர்கள் இல்லாததால் நண்பன் சுந்தரின் உதவியோடு வாழும் தனுஷிற்கு பெரிய வைல்ட் லைப் போட்டோகிராபராக ஆக வேண்டுமென்பதே லட்சியம் ... தான் மானசீக குருவாக நினைக்கும் மாதேஷிடம் உதவியாளராக சேர வேண்டுமென்பது உட்பட அவருடைய எல்லா முயற்சிகளும் தொடர்ந்து தோல்விகளையே சந்திக்கின்றன ...


   சுந்தர் காதலிப்பதாக சொல்லி அழைத்து வரும் ரிச்சாவுக்கும் , தனுஷுக்கும் மோதலில் ஆரம்பிக்கும் பழக்கம் வழக்கம் போல காதலில் முடிகிறது ... நண்பன் விட்டுக்கொடுத்த பின் ரிச்சாவை  மணக்கும் தனுஷ் தன் லட்சியத்தில் ஜெயித்தாரா என்பதே மீதி கதை ...

   புதுப்பேட்டை , ஆடுகளம் வரிசையில் தனுஷின் நடிப்பு பசிக்கு " மயக்கம் என்ன "  அருமையான தீனி ... மனிதன் கார்த்திக்காகவே வாழ்ந்திருக்கிறார் ...
" பிரியாணி எங்கடா வாங்கின கோழி ரொம்ப பழசா இருக்கு " என்று ரிச்சாவை கலாய்ப்பதும் , நண்பனுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதாக நினைத்து குற்ற உணர்ச்சியில் துடிப்பதும் , தன் திறமையை அடுத்தவன் திருடி விட்டான் என்று தெரிந்தவுடன் தவிப்பதும் , தன் ஆற்றாமையை மனைவியிடத்திலும் , மற்றவர்களிடத்திலும் கோபமாக காட்டுவதும் என படம் முழுவதும் நடிப்பு தாண்டவமாடுகிறார் தனுஷ் ...

 
     தனுஷுக்கு ஈடு கொடுக்கும் முக்கியமான யாமினி கேரக்டரில் ரிச்சா ... முதல் பாதியில் மலச்சிக்கல் வந்தவர் போல தன் முட்டை கண்களால் தனுஷை முறைத்துக் கொண்டே இருப்பவர் பின் பாதியில் தனுஷின் மனைவியான பிறகு நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி காட்டுவதோடு , ஆளும் தனுஷுக்கு அக்கா போல மெச்சூர்டாக இருக்கிறார் ...

   ரிச்சாவுக்கு மன அழுத்தத்தில் முழு நேர குடிகாரனாகிய கணவன் தரும் இம்சைகளையும் பொறுத்துக்கொண்டு அவனை முன்னுக்கு கொண்டு வரும் பாசிடிவ் மனைவி கேரக்டர் ... ஆனால் ஒருவனுடன் டேட் செய்ய ஒப்புக்கொண்டு விட்டு பின் அவன் நண்பனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டதால் பாராட்டப்பட வேண்டிய கேரக்டர் படுகுழியில் தள்ளப்படுகிறது. அதிலும் குறிப்பாக , சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கணவனின் நண்பன் ஒருவன் இவளை அடைய முயற்சிக்கும் போது அவனுக்கு ரிச்சா செய்யும் அட்வைசை ரசிப்பதற்கு பதிலாக தியேட்டரில் அனைவரும் கைகொட்டி சிரிக்கிறார்கள் ...

   மூன்றாவது முக்கிய பாத்திரம் தனுசின் நண்பனாக வரும் சுந்தர் ... முதல் காட்சியில் இவரை பார்க்கும் போதே அழகான காதலியை தனுஷ் கொத்திக்கொண்டு போய் விடுவார் என்று நமக்கு நன்றாகவே தெரிகிறது ... அவர் இயல்பாக நடித்திருந்தாலும் முகத்தில் சுத்தமாக பணக்கார கலையே இல்லை .. தனுஷை விட சுமாராக இருக்க வேண்டுமென்பதற்காகவே இவரை தேர்ந்தெடுத்திருப்பார்கள் போல ...


   தன் கேர்ள் பிரெண்டை தனுஷுக்கு கூட்டிக்கொடுக்கிறேன் என்று இவர் நேரடியாக சொல்லவில்லையே தவிர , மற்றபடி பாத்ரூம் கதவை திறந்து வைத்துக்கொண்டு குளிக்கும் ரிச்சாவை பார்த்துக்கொள்ள சொல்லி இவர் தனுஷிடம் பணிப்பது உட்பட எல்லா வேலைகளையும்  செய்கிறார் ...
" அவளுக்கு நீன்னா ஒ.கே டா " என்று இவர் தனுஷை பார்த்து சொல்லும்போதெல்லாம் " இவ்வளவு மொக்கையாவா ஒருத்தன் இருப்பான் " என பரிதாபப்பட வைக்கிறார் ...

   ராம்ஜியின் ஒளிப்பதிவும் , ஜி.வி யின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய தூண்கள் ... காட்டுக்குள் எடுக்கப்பட்டிருக்கும் எல்லா காட்சிகளுமே கண்களுக்கு குளிர்ச்சி ... " ஓட ஓட " , " காதல் என் காதல் " இந்த இரண்டு பாடல்களுமே படம் வருவதற்கு முன்பே செம ஹிட் ... " காதல் " பாட்டுக்கு செல்வா , தனுஷின் வரிகள் சிம்ப்லி சூப்பர் ... பழைய நெடி அடித்தாலும் பின்னணி இசையே படத்தின் பின்பாதியை  தூக்கி நிறுத்துகிறது ...

   மனதில் பட்டதை தைரியமாக எடுக்கும் சில இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர் ... கேரக்டர்களை மனதில் பதிய வைப்பதிலும் , விசுவலாக எதையும் சொல்வதிலும் வல்லவர் ... 7 ஜி யும் , புதுப்பேட்டையும் இதற்கு சிறந்த உதாரணங்கள் ... இருவர் காதலிப்பதற்கு முன் டேடிங் செய்வது, ஆண் , பெண் பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஒரே ரூமுக்குள் படுத்து உறங்குவது , நண்பர்களுக்கு அவர் தந்தையே சரக்கு ஊத்திக்கொடுப்பது என இந்த படத்திலும் இவருடைய போல்ட் அட்டெம்ப்ட் நிறைய ...

   தனுஷ் ,ரிச்சாவின் முதல் சந்திப்பு , " நீ என்ன கார்பரேசன் கக்கூஸ் ல தானே வேலை செய்யற " , " ஆமாமா உங்கப்பன் வேலை செய்யற எடத்துலதான் " ,
 " அப்படியா உங்கம்மா இதப்பத்தி சொல்லவே இல்ல " இப்படி தனுஷ் , ரிச்சா இருவரும் அடித்துக்கொள்ளும் காட்சி , தனுஷ் , ரிச்சா இருவரும் பாலத்தில் நடந்து கொண்டே பேசிக்கொள்ளும் காட்சி , " அவன் என் படத்தை ஆய்னுட்டான் " என அழுது கொண்டே சொல்லும் தனுஷை அணைத்து கொண்டே ரிச்சா காதலை வெளிப்படுத்தும் காட்சி என முதல் பாதி முழுவதும் செல்வராகவனின் டச்சிங் நிறைய ...


    செல்வராகவனுக்கு " செகண்ட் ஆப் சின்றோம் " என நினைக்கிறேன் ...
 " ஆயிரத்தில் ஒருவன் " போல இந்த படமும் இரண்டாம் பாதியில் எங்கெங்கோ தடுமாறி பிரயாணம் செய்கிறது ... இவ்வளவு பணக்கார நண்பர்களை வைத்துக்கொண்டு தனுஷ் தன்னை ஏமாற்றியவனுக்கு எதிராக எந்தவொரு சட்ட ரீதியான ஆக்சனையும் எடுக்காதது ஆச்சர்யமே ... விக்ரமன் படத்தில் ஹீரோ ஒரு பாடலில் பணக்காரன் ஆவது போல இந்த படத்தில் தனுஷ் பின்னணி இசையில் சர்வதேச விருதை பெறுகிறார் ... இடைவேளைக்கு பிறகு வசனங்களை குறைத்து விசுவலாக நகர்த்தியிருந்தாலும் அதை ஏதோ டாகுமெண்டரி அளவுக்கு ஜவ்வாக இழுத்திருக்க வேண்டாம் ...

   முதல் பாதியில் ரிச்சாக காட்டப்படும் ரிச்சா பின்பாதியில் மிடில் கிளாசாக மாறியது ஏனோ ?.. இவை தவிர தனுஷின் தங்கை , சுந்தரின் அப்பா என பொருந்தாத காஸ்டிங்க்ஸ் பெரிய குறை ... காதல் கொண்டேன் , 7 ஜி மயக்கத்தில் இருந்து செல்வராகவன் முழுதாக விடுபடாதது " மயக்கம் என்ன " வில் தெரிகிறது ... தனுஷ் , ரிச்சா நடிப்பு , ராம்ஜியின் ஒளிப்பதிவு , ஜி.வி. யின் இசை ," ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்" என்பதை உணர வைக்கும் கதை , இளமை துள்ளலான காட்சிகள் இப்படி நிறைய ப்ளஸ்கள் இருந்தும் தெளிவில்லாத திரைக்கதையும் , போரடிக்கும் பின்பாதியும் "மயக்கம் என்ன" வை அரை மயக்கத்திலே வைக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் - 40   
Related Posts Plugin for WordPress, Blogger...