12 வருடங்களில் ஐந்தே படங்கள் மட்டுமே ஒரு இயக்குனர் எடுத்திருக்கிறார் என்பதே ஒவ்வொரு படத்துக்கும் அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தையை சொல்லாமல் சொல்லும் . ஆனாலும் அந்த சிரத்தை மட்டுமே ஒரு படத்தை தூக்கி நிறுத்திவிடும் என்று சொல்வதற்கில்லை . இப்படி சில வரிகளில் வசந்தபாலன் இயக்கத்தில் வந்திருக்கும் காவியத்தலைவன் படத்தைப் பற்றி சொன்னாலும் சுதந்திரத்துக்கு முந்தைய கால கட்டத்தின் நாடக உலக மாந்தர்களை நம் கண்முன் உலவவிட்ட முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும் ...
1930 களில் தமிழகத்தின் பிரபலமான நாடக குரு சங்கரதாச சாமிகளின் (நாசர் ) பிரதான சிஷ்யர்கள் காளியப்பா பாகவதர் ( சித்தார்த் ) மற்றும் கோமதி நாயகம் பிள்ளை ( ப்ரித்விராஜ் ) இருவருக்குமிடையேயான வாழ்க்கைப் பயணத்தை விவரிப்பதே காவியத்தலைவன் ...
சித்தார்த்திற்கு இது அதிகப்படியான கதாபாத்திரம் தான் . ஆனாலும் தனது அலட்டிக் கொள்ளாத நடிப்பால் குறைகளை மறைக்கிறார் . காதலியின் சாவுக்கு பிறகு நாசருக்கு சாபம் விடும் இடத்தில் சிலிர்க்க வைக்கிறார் . குறும்பு சித்தார்த் கவர்ந்த அளவிற்கு தேசபக்தி பேசும் சீரியஸ் சித்தார்த் கவரவில்லை . இவரை ஒருதலையாக காதலிக்கும் வடிவாம்பாள் கதாபாத்திரத்தில் வரும் வேதிகாவின் நடிப்பு யதார்த்தம் ...
காளியப்பாவை காதலித்து பின் காலாவதியாகும் இளவரசி ரங்கம்மா
( அனிக்கா ) அட போங்கப்பா ரகம் . குரு வேஷத்தில் நாசர் நச் . தம்பி ராமையா அறிமுக பாடல் காட்சியில் ஓவர் ஆக்டிங் செய்து பயமுறுத்தினாலும் போகப் போக பழகி விடுகிறார் . ஆள் இல்லாவிட்டால் அதட்டுவதும் , ஆளைப் பார்த்தவுடன் பம்முவதுமாக மயக்கும் மேனரிஷத்தில் மன்சூர் அலிகான் ...
தன்னை விடுத்து சித்தார்த்தை குரு பாராட்டுமிடத்தில் ஆரம்பித்து கடைசியில் நீ இல்லேன்னா தான் எனக்கு நிம்மதி என்று சித்தார்த்திடம் பொறுமும் க்ளைமேக்ஸ் சீன் வரை இந்த ப்ரித்வி பிள்ளைவாள் நடிப்பு ராஜ்ஜியம் நடத்துகிறார் . தான் எந்த விதத்தில் அவனை விட குறைந்து விட்டோம் என்று குருவிடம் காட்டும் ஆதங்கமாகட்டும் , காதல் விவகாரத்தில் காளியப்பாவின் இமேஜை காலி செய்து விட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவியாய் நிற்பதிலாகட்டும் , வடிவு தனக்கில்லை என்று தெரிந்தவுடன் காட்டும் ஏக்கத்திலாகட்டும் , கடைசியில் சித்தார்த்த் பற்றிய உண்மை தெரியவரும் போது வந்து மறையும் குற்ற உணர்ச்சியிலாகட்டும் மனதை கிறங்கடிக்கும் இந்த மலையாளத்தான் தான் இந்த காவியத்தின் உண்மையான தலைவன் ...
" சண்டி குதிரை " , " சொல்லி விடு " பாடல்களில் கவரும் இசைப்புயல் பின்னணி இசையில் ( காலகட்டம் கொஞ்சம் நெருடினாலும் ) பின்னியெடுக்கிறார் . குறிப்பாக நாசருக்கு முன் ப்ரித்விராஜ் , சித்தார்த் இருவரும் நடித்துக் காட்டும் இடத்தில் வசனங்களை மீறி இவரது இசையே ஆளுமை செய்கிறது . 30 களில் நடக்கும் கதைக்காக ஜெயமோகன் பெரிதாக எதுவும் மெனக்கெடவில்லை என்கிற குறை இருந்தாலும் சித்தார்த் - ப்ரித்விராஜ் இடையேயான க்ளைமேக்ஸ் வசனங்கள் படத்திற்கு பலம் . ஆனாலும் செலம்பாதே போன்ற வசனங்கள் என்ன சாரே ?!...
பொன்வண்ணனின் நடிப்பைப் பார்த்து விட்டு பேசிக்கொள்ளும் ஒரு சீனிலேயே காளியப்பா , கோமதி என்கிற இரு கதாபாத்திரங்களின் அவுட்லைனை விளக்கி விடுகிறார் வசந்தபாலன் . அதே போல கோமதிக்கு காளியப்பா மேல் காண்டு வளர்வதற்கு இவர் வைத்திருக்கும் சீன்களிலும் அதே சாமர்த்தியம் தொடர்கிறது . ஆனால் ப்ரித்விராஜ் மேல் சித்தார்த் வைத்திருக்கும் மதிப்பு , மரியாதையை பெரிதாக காட்சிப்படுத்தாமல் வெறும் வசனங்களை மட்டும் வசந்தபாலன் நம்பியது துரதிருஷ்டம் . அதிலும் க்ளைமேக்ஸ் சீன் ஆடுகளத்தை நினைவு படுத்துகிறது ...
கதைக்களன் நாடக காலகட்டம் என்பதால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக தனி ட்ராக் எல்லாம் போகாமல் முக்கியமான கதாபாத்திரங்களை வைத்தே அதை முடிந்த அளவு சொல்லியிருப்பது டைரக்டர் டச் . அதே சமயம் இருவரின் ஈகோ பிரச்னை தான் கதை என்னும் போது எதற்கு பீரியட் படம் என்ற கேள்வியும் எழாமல் இல்லை . நாசரிடம் அடி வாங்கி விட்டு ப்ரித்விராஜின் மடியில் சித்தார்த் சாயும் இடத்தில் இந்த பிரச்சனைக்கு மூலகாரணமான ப்ரித்விராஜுக்கு ஒரு க்ளோஸ் அப் வைத்திருந்தால் அந்த சீன் இன்னும் நிறைவாக இருந்திருக்கும் ...
சித்தார்த்துக்கு வரும் செலெக்டிவ் தேசபக்தி , எவ்வித அழுத்தமும் இல்லாத சித்தார்த் - இளவரசி காதல் , மனதை பெரிதும் கவராத சில மேடை நாடக பாடல் காட்சிகள் போன்றவையும் காவியத்தலைவனின் காலை வாறுகின்றன . இது போன்ற குறைகளை கொஞ்சம் தவிர்த்து விட்டு பார்த்தால் கொரியன் படங்களை சுடாமல் , மாடர்ன் மசாலாக்களில் இருந்தும் மாறுபட்டு நம்மை அந்த காலகட்டத்திற்கு கொண்டு சென்ற வித்தத்தில் இந்த காவியத்தலைவன் நம்மை ஆளா விட்டாலும் கவனிக்க வைப்பான் ...
ஸ்கோர் கார்ட் : 43

.jpg)
