Showing posts with label அனந்து. Show all posts
Showing posts with label அனந்து. Show all posts

25 August 2013

மழலை - எனது குறு குறும்படம் ...


லைஞர் டி.வி யில் ஒளிபரப்பாகும் நாளைய இயக்குனர் போல ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் விளம்பர உலகம் என்றொரு நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள் . இறுதி சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த குறும்படத்தின் இயக்குனருக்கு பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களை இயக்குவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்பதே இதன் சிறப்பம்சம் . இந்த போட்டிக்கான முதல் சுற்றில் எனது குறும்படம் நல்லதோர் வீணை தேர்ந்தெடுக்கப்படவே அடுத்த சுற்றுக்கான போட்டியாக மழைநீர் சேகரிப்பு என்கிற தலைப்பில் அதனை பற்றி விளக்கும் விதமாக இரண்டரை நிமிடங்களுக்கு மிகாமல் ஒரு குறும்படத்தை இயக்க சொல்லியிருந்தார்கள் ...

இது போன்ற நிபந்தனைக்குட்பட்ட போட்டிகளில் நமது சுதந்திரம் பாதிக்கப்படும் அசௌகரியம் இருந்தாலும் நமது திறமையை பரிசோதித்துப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருந்ததால் எனது டீமுடன் களத்தில் இறங்கிவிட்டேன் . முப்பது செகன்ட்களுக்குள் ஒரு விளம்பரம் எடுத்து விடலாம் , அதே போல ஐந்து நிமிடங்களுக்கு குறும்படம் எடுக்கலாம் . ஆனால் இதில் இரண்டரை நிமிடங்களுக்குள் படம் இருக்க வேண்டும் அதே நேரம் அந்த தலைப்பை பற்றிய முழு விளக்கமும் இடம்பெற வேண்டுமென்பதே எனக்கு விடப்பட்ட சவால் . ஒரு வழியாக படத்தை எடுத்து சேனலுக்கு கொடுத்தாகிவிட்டது ..

ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து தகவல் வர நீண்ட நாட்கள் ஆகவே சேனலை தொடர்பு கொண்ட போது தான் நிகழ்ச்சி தயாரிப்பாளர் விலகி விட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது  தெரிய வந்தது . பிறகு நீண்ட தாமதத்திற்கு பிறகு இப்பொழுது தான் யூ டியூபில் ஏற்ற முடிந்தது . இந்த குறு குறும்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய  அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . குறிப்பாக எனக்கு உறுதுணையாக இருந்த இயக்குனர் திரு.ஸ்ரீஹரி மற்றும் பட வேலைகள் இருந்தும் நான் கூப்பிட்டவுடனேயே நடிப்பதற்கு ஒப்புக்கொண்ட திரு.சங்கரநாராயணன் (துப்பாக்கி படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்தவர் ) அவர்களுக்கும் எனது மனமார்ந்த  நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் . குறு குறும்படத்தை கீழே பார்க்கவும் ...




26 April 2013

500000 ஹிட்ஸ் ...



அடுத்தடுத்த மாதங்களில் என் " நல்லதோர் வீணை " குறும்படம் 100000 ஹிட்ஸ்களையும் , என்  " வாங்க ப்ளாகலாம் " சைட் 500000 ஹிட்ஸ்களையும் கடந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது .  இது நடப்பதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் இந்நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . உங்களின் ஆதரவு என்றென்றும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் ...

அன்புடன் அனந்து ...






10 March 2013

நல்லதோர் வீணை குறும்படம் - 100000 ஹிட்ஸ் ...



நீண்டநாட்களாகவே குறும்படம் எடுக்க வேண்டுமென்ற எண்ணத்திலிருந்த நான் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான குறும்பட போட்டி என்ற அறிவிப்பை பார்த்தவுடன் மனதில் தோன்றிய கருவை என் நண்பன் சேஷனிடம் கூற அவனும் அருமையாக இருக்கிறது என்று சொல்லிவிடவே பெரிய திட்டமிடல் ஏதுமில்லாமல் திடீரென தொடங்கி இரண்டு நாட்களில் முடிக்கப்பட்டது " நல்லதோர் வீணை " குறும்படம் . இன்று இந்த ஒரு வருடத்தில் யூடியூப் பில் ஒரு லட்சம் ஹிட்ஸ்களை நல்லதோர் வீணை கடந்திருப்பதால் ஏற்பட்ட மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதோடு அதற்கு காரணமான அனைவருக்கும், குறும்படத்தை  ஒளிபரப்பிய ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றியையும் இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் ...


16 December 2012

கும்கி - கோவில் யானை ...


மிகவும் தாமதமாக தனது ஐந்தாவது படத்தில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தக்கவைத்துக் கொள்ள இயக்குனர் பிரபுசாலமன் எடுத்த முயற்சி கும்கி யை முடிக்க அவர் எடுத்துக்கொண்ட கால அவகாசத்திலிருந்து நன்றாக தெரிகிறது.கும்கி யை பொறுத்தவரை அவரின் முயற்சி திருவினையாக்கியதா என்று கேட்டால் இல்லையென்றே சொல்லலாம் ...

சிறு வயதிலிருந்தே மாணிக்கம் என்கிற யானையை ( கும்கி ) வைத்து பிழைப்பு நடத்தும் சொக்கன் (  விக்ரம்சிவாஜி ) தெரிந்தவருக்கு உதவி செய்வதற்காக தனது யானையை கும்கி ( காட்டு யானைகளை விரட்ட உதவும் பயிற்சி பெற்ற யானை ) என்று சொல்லி ஆதிக்காடுக்குள் நுழைகிறான் .  ஊர்த்தலைவர் மகள் அல்லி ( லக்ஷ்மிமேனன் ) மீதான காதல் தனது தாய் மாமா கொத்தல்லி ( தம்பிராமையா ) சொல்லையும் மீறி சொக்கனை அந்த காட்டிலேயே தங்க வைக்கிறது . சொக்கன் காதல் நிறைவேறியதா ? கொம்பன் என்கிற காட்டு யானையிடமிருந்து  ஊர் மக்களை காப்பாற்றினானா ? என்ற கேள்விகளுக்கு பதில் தான்  கும்கி ...

விக்ரம் சிவாஜிக்கு இந்த படம் நல்ல அறிமுகம் . முகத்தில் ஒரு விதமான கடுமை இருந்தாலும் யானைக்காக கெஞ்சும் இடத்திலும் , க்ளைமாக்ஸ் காட்சிகளிலும் தன குடும்பத்தின் பெயரை காப்பாற்றுகிறார் . காதல் காட்சிகளுக்கு விக்ரம் பெரிய அண்ணா கமல் ஹாசனிடம் க்ளாஸ் எடுத்துக்கொண்டால் கூடிய விரைவிலேயே தேறிவிடுவார் ... முதலில் புக் செய்ததால் லக்ஷ்மி மேனனை அறிமுகம் என்று போடுகிறார்கள் . யானையை கண்டு பயப்படும் போதும் , பிறகு அதன் மீது பாசம் காட்டும் போதும் தனது நடிப்புத்திறமையை நிரூபிக்கிறார் ...


கதையை விட இயக்குனர் தம்பி ராமையாவை நம்பியிருப்பது படத்தில் நன்றாகவே தெரிகிறது . " ஹெல்பர் அனிமல்" என்று இவர் உதவியாளரை அழைப்பதும் , வேலையை தக்க வைத்துக்கொள்ள செய்ய வேண்டிய சூட்சுமங்களை சொல்வதுமென முதல் பாதி முழுவதும் காமெடியுடன் இவரை வைத்தே படத்தை நகர்த்துகிறார்கள் . மனிதர்  யானை பற்றிய உண்மை தெரிந்தால் என்ன ஆகுமென பயந்து நடுங்க ஊர் மக்களோ இவரை பெரிய வீரர் என்று பில்ட் அப் செய்ய அதற்கேற்றாற்போல தம்பி ராமையா அண்டர்ப்ளே நடிப்பால் அசத்துகிறார் . இவருக்கு வில்லன் போல தேவையில்லாமல் பின்னணி இசை கொடுப்பதும் , சீரியசான படத்திற்கு காமெடியை பிரதானமாக நம்பியதும் மிகப்பெரிய குறை ...

ஊர்த்தலைவராக வருபவர் இயல்பான நடிப்பால் கவனிக்க வைக்கிறார் . ஜூனியர் பாலையா , மைனா வில் இன்ஸ்பெக்டராக நடித்தவர் போன்றோரும் படத்தில் இருக்கிறார்கள் . முதல் ப்ரேமிலிருந்து கடைசி வரை சுகுமாரின் ஒளிப்பதிவு கண்களிலேயே நிற்கிறது . சொல்லப்போனால் இவரின் ஒளிப்பதிவும் , லொக்கேஷனும் இல்லையென்றால் நிச்சயம் படத்தை  பார்த்திருக்க முடியாது . இமானின் இசை படத்திற்கு மற்றொரு பெரிய பலம் .
 " ஒன்னும் புரியல " ,  " அய்யய்யோ " பாடல்களும் அதை படமாக்கிய  விதமும் அருமை .பின்னணி இசை தான் கொஞ்சம் மைனா வை நினைவுபடுத்துகிறது...


தற்செயலாக ஊருக்கு வரும் ஹீரோ , ஊர்த்தலைவர் மகள் மேல் காதல்வயப்படுவது என்கிற வழக்கமான ஒன்லைன் தான் என்றாலும் அதில் யானையை புகுத்திய சாமர்த்தியம் , யானை - விக்ரம் இருவருக்குமிடையேயான பாசத்தை விளக்கும் காட்சிகள் , காட்டில் வாழ்ந்தாலும் தன் மகள்  மேல் சிறிதும் சந்தேகப்படாத அப்பா , அவரின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக காதலை துறக்கும் மகள் , ஜம்போ வந்தால் என்ன ஆகுமோ என்கிற பயத்தை தக்கவைக்கின்ற டெம்போ இப்படி இசை , ஒளிப்பதிவு தவிர படத்தில் ரசிக்கும்படியான மற்ற விஷயங்களும் இருக்கின்றன ...

ஒரு பெண்ணை பார்த்தவுடன் காமம் வருவது இயற்கை , ஆனால் பார்த்தமாத்திரத்தில் பசியில்லை , தூக்கமில்லை , இவள் தான் உயிர் என்றெல்லாம் காதல் கிறக்கத்தில் ஹீரோ அலைவது அதர பழசான பேத்தல் . யானை - விக்ரம் உறவில் ஏற்பட்ட தாக்கத்தில் ஒரு சிறு விழுக்காடு கூட விக்ரம் - லக்ஷ்மி காதலில் ஏற்படாதது படத்தின் பெரிய சறுக்கல் . காதல் சுவாரசியமாக இல்லாததால் பிரிவும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை .
எக்கச்சக்க பில்ட் அப் கொடுத்துவிட்டு கடைசியில் யானைகளுக்கிடையேயான க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் சி.ஜி சமாராக இருப்பது பெருத்த ஏமாற்றம் . படத்தின் கவராத காதலால் காட்டு யானைகளையே  விரட்டக்கூடிய கும்கி கட்டிப்போடப்பட்ட கோவில் யானையாகவே கண்களுக்கு தெரிகிறது . கும்கி - COULD HAVE BEEN BETTER ...

ஸ்கோர் கார்ட் : 42  


4 December 2012

நீர்ப்பறவை - நீர்த்த பறவை ...


முதல் படமான தென்மேற்குபருவக்காற்று வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் தர்க்க ரீதியாக விமர்சகர்களின் பாராட்டுகளையும் , சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான தேசிய விருதினையும் இயக்குனர் சீனுராமசாமிக்கு பெற்றுத்தந்தது , ஆனால் இரண்டாவது படமான நீர்ப்பறவை இரண்டையுமே தக்கவைத்துக்கொள்ளாமல் போனது துரதிருஷ்டமே ...

இறந்து போய் தன் வீட்டிலேயே புதைக்கப்பட்ட கணவனை பற்றிய  போலீஸ் விசாரணையில் ஒரு தாயின்  ( நந்திதா தாஸ்ப்ளாஸ்பேக்கில் 25 வருடங்கள் முன்னோக்கி படம் விரிகிறது . குடிக்கு அடிமையான அருளப்பன்சாமி (  விஷ்ணு ) ,  தேவாலயத்தில் வளரும் பெண் எஸ்தர்
( சுனைனா ) இருவருக்குமிடையேயான காதல் அவன் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதே கதை ...

அடுத்தவர்களை ஏமாற்றி காசு வாங்கியாவது குடிக்கும் கதாபாத்திரத்தில் விஷ்ணு பெரிதாக கவரவில்லை . எதற்கு அவர் குடிக்கு அடிமையானார் என விளக்கப்படாததும் , இத்தனை வருடங்களாய் திருந்தாதவர் ஒரு பெண் தலையில் கை வைத்து கடவுளிடம் வேண்டிக்கொண்டதும் திருந்த முற்படுவதும் அதரப்பழசாக இருப்பதால் மனதில் ஒட்டவில்லை ...


சுனைனாவை அப்படியே விட்டிருக்கலாம் ஏன் கருப்படித்தார்கள் என தெரியவில்லை . கவர்ந்திருக்க வேண்டிய இவரது கதாபாத்திரம் விஷ்ணுவுடனான ஏனோ தானோ காதலால் நம் கவனத்தை பெறவில்லை . கணவனை காணாமல் தேடும் இடத்தில மட்டும் மனசை லேசாக தொடுகிறார். இவருடைய வயதான கேரக்டருக்கு தேவையில்லாமல் நந்திதா தாஸை வீணடித்திருக்கிறார்கள் . விஷ்ணுவை ஒரு தலையாய் காதலிக்கும் பெண் சுனைனாவை விட அழகாக இருக்கிறார் ...

தாயாக நடித்திருக்கும் சரண்யா பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை . இன்றைய தமிழ் நடிகர்களுக்கு இருக்கும் யதார்த்த தாய் . மகன் குடிக்கு காசு கொடுப்பது இவர் கதாபாத்திரத்தின் மேல் மதிப்பை தருவதற்கு பதில் வெறுப்பை தருகிறது . படகு செய்யும் பாய் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி , தமிழ் வாத்தியார் ஜோசப் பாரதி ( குடிகார கதாபாத்திரத்துக்கு அந்த மகாகவி பெயரை வைக்க இயக்குனருக்கு  கூசவில்லையா ?! ) யாக தம்பிராமையா , நண்பனாக அட்டாக்பாண்டி , அப்பாவாக வருபவர் , பாதிரியார் வேஷத்தில் அழகம்பெருமாள் , மீனவராக அருள்தாஸ் என்று எல்லோரும் படத்திற்கு இயல்பாக பொருந்துகிறார்கள் .

பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு ராமேஸ்வர கடல் பின்னணியை கண்முன்  நிறுத்துகிறது . " ரத்தக்கண்ணீர் " பாடலில் வரும் விஷ்ணுவின் சில்அவுட் சிறந்த ஒளிப்பதிவிற்க்கு ஒரு சின்ன டீஸ்பூன் . " பர பர " பாடலில் மட்டும் ரகுனந்தனின் இசை தெரிகிறது . வைரமுத்துவின் பாடல் வரிகளில் " தேவன் மகளே , ஆசீர்வாதம் , ஜெபிக்கவா , சிலுவைக்காடு " என பிரசங்க நெடி...


கடல் பின்னணி , மீனவர்களை பற்றிய சில தகவல்கள் , குடிக்கு அடிமையான கிறிஸ்துவரை இந்து  டாக்டர் திருத்துவது , குடியிலிருந்து மீண்ட பிறகு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒரு முஸ்லீம் உதவுவது போன்ற காட்சிகளில் சொல்லாமல் சொல்லப்பட்ட தேசிய ஒருமைப்பாடு போன்ற சில விஷயங்கள் மட்டுமே படத்தில் கவனிக்க வைக்கின்றன .

25 வருடங்களுக்கு முன்னாள் நடந்தது என்று வாயால் சொல்கிறார்களே தவிர அதை காட்சிகளில் காட்டுவதற்கு சுத்தமாக மெனக்கெடவில்லை . உதாரணத்திற்கு  ஒரு சீனில் 1985 என பொறிக்கப்பட்ட மசூதி காட்டப்படுகிறது , ஆனால் அதை பார்க்கும் போதே தற்போதைய நிலையில் அப்படியே படம் பிடித்ததால் 25 வருடங்களுக்கு முந்தையது என்று நன்றாகவே  தெரிகிறது. மேலும்  உடை,அலங்காரம் போன்றவற்றிக்கு கூட பெரிதாய் அக்கறைப்பட்டதாக தெரியவில்லை .

அது மட்டுமல்லாமல் தீவிரவாதம் , மீனவர் படுகொலை போன்ற நடப்பு சமாச்சாரங்கள் பற்றிய வசனங்கள் 25 வருடங்களுக்கு முன்னாள் பேசப்படுவது யதார்த்தமாக இல்லை . ஜெயமோகன் கூட இருந்தும் வசனங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை . கடலோரக்கவிதைகள் , இயற்கை போன்று கடல் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்களில் காதல் சுனாமியை பார்த்த நமக்கு நீர்ப்பறவை ஒரு நீர்த்த பறவையாகவே கண்களுக்கு தெரிகிறது ...

ஸ்கோர் கார்ட் : 39 

7 October 2012

டி 20 - இறுதிப்போட்டி ...


செப் 18 இல் ஆரம்பித்த டி 20 உலககோப்பை கிரிக்கெட் தொடர்  இன்று நடைபெறும் இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டியோடு முடிவடைகிறது ... இலங்கை இறுதி வரை வரும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் மேற்கிந்திய தீவுகள் ஆஸ்திரேலியா வை மிக அபாரமாக ஜெயித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது டி 20 யில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது ...

இலங்கை அணிக்கு சொந்த மண்ணில் போட்டி நடப்பது சாதகமாக இருந்தாலும் , க்ரிஸ் கெயில் , பிராவோ , பொல்லார்ட் போன்ற ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய அதிரடி ஆட்டக்காரர்கள் மேற்கிந்திய தீவுகள் அணியில் இருப்பதால் எதுவும் நடக்கலாம் ... இன்றைய ஆட்டம் மலிங்கா , மென்டிஸ் உள்ளிட்ட இலங்கை பந்து வீச்சாளர்களுக்கும் , மேற்கிந்திய தீவுகளின் மட்டையாளர்களுக்கும் இடையேயான போட்டியாகவே இருக்கும்.

2009 இல் டி 20 கோப்பையை தவறவிட்ட இலங்கை அணியும் , டி 20 இறுதி போட்டிக்கு ஒரு முறை கூட தகுதி பெற்றிராத மேற்கிந்திய தீவுகள் அணியும் இந்த முறை உலக கோப்பைக்காக மிக கடுமையாக போராடும் என்பதில் ஐயமில்லை ... ஆடிய ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் போனது துரதிருஷ்டமே ... ஒப்பனர்களின் ஆட்டம் , தோனியின் சில முடிவுகள் , சேவாக் - தோனி பிரச்சனை , எதிரணிகளை மிரட்டாத வேகப்பந்து வீச்சு போன்றவையும் இந்தியாவின் வெளியேற்றத்திற்கு காரணமாய் அமைந்ததையும் நாம் மறுக்க முடியாது ... டி 20 யை பொறுத்தவரை இந்தியாவிற்கு ஒரே தீர்வு இள ரத்தங்களே ...

ஐ.பி.எல் போட்டிகளை நடத்தும் இந்தியா 2007 க்கு பிறகு நடந்த மூன்று டி 20 உலக கோப்பைகளிலும் ஒன்றில் கூட அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் போனது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம் ... தோனியை டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து தூக்க வேண்டுமென்கிற கோரிக்கையும் இப்போது வலுத்து வருகிறது ... தோனி  மட்டுமல்லாமல் ப்ளேச்சர் கோச்சாக நீடிப்பதும் தேவை தானா ? என்ற கேள்வியும் மேலோங்கி நிற்கிறது ...

நமது அணி வெற்றி பெறாத சோகத்தை ஓரங்கட்டி விட்டு இன்று இரண்டு தீவுகளுக்கிடையே நடக்கும் இறுதிப் போட்டியை பார்த்தோமானால் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற வேண்டுமென்பது என் விருப்பம் ... 75 களில் கிரிக்கெட் ஜாம்பவானாக இருந்த அணி பல வருடங்களாக  சறுக்கலில் இருந்து விட்டு  இப்போது தான் முன்னேறி வந்திருக்கிறது ... கிரீஸ் கெயில் தன்னம்பிக்கையோடு பேசுவதை பார்க்கும் போது அந்த அணி வெற்றி பெறும் என்பது போல தோன்றினாலும் நடப்பது டி 20 என்பதால் எதையும் உறுதியாக சொல்லிவிட முடியாது ... நீங்கள் எந்த அணி வெற்றி பெறும் என நினைக்கிறீர்கள் ? உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யவும் ...


4 October 2012

நல்லதோர் வீணை குறும்படம் - 50000 ஹிட்ஸ் ...


" நல்லதோர் வீணை " குறும்படத்தை யூ டியூபில் அப்லோட் செய்து ஐந்து மாதங்களுக்குள் ஐம்பதாயிரம் ஹிட்ஸ்களை கடந்திருப்பதை பார்க்கும் போது  சமூக அக்கறையுள்ள நல்ல குறும்படங்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்களின் ஆதரவு இருக்கும் என்பது புலனாகிறது ... இதே போன்ற தரமான படங்களையே கொடுக்க வேண்டுமென்கிற அக்கறையையும் , பொறுப்புணர்வையும் இந்த ஆதரவு அதிகரித்திருக்கிறது ...

இந்த நேரத்தில் எனக்கு இது வரை ஆதரவளித்து வரும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் , யூ டியூபில் குறும்படத்தை கண்டுகளித்ததோடு தங்கள் கருத்துக்களின் மூலம் உற்சாகம் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் , சமூக வலைத்தளங்கள்  மூலம் என்னை உற்சாகப்படுத்திய அன்பர்களுக்கும் , எனது குறும்படம் பற்றிய விமர்சனம் மற்றும் தகவல்களை வெளியிட்ட மூன்றாம்கோணம் ,  தமிழ் மீடியா , தினமணி.காம் போன்ற வலைப்பத்திரிக்கைகளுக்கும் , குறிப்பாக குறும்படத்தை ஒளிபரப்பு செய்த ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு , இந்த குறும்படத்தில் பணியாற்றிய  அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் ...

" நல்லதோர் வீணை " குறும்படத்தை கீழே பார்க்கவும் ...

30 September 2012

தாண்டவம் - தடுமாற்றம் ...


தெய்வதிருமகள் வெற்றிக்கு பிறகு விக்ரம் - இயக்குனர் விஜய் இருவரும் அதே டீமுடன் மீண்டும் தாண்டவத்தில் கை கோர்த்திருக்கிறார்கள் ... படம் வருவதற்கு முன்பே கதை என்னுது என்று உதவி இயக்குனர் பொன்னுசாமி எழுப்பிய குற்றச்சாட்டும் , அதை தொடர்ந்து அவருக்கு நியாயம் வழங்க முடியவில்லை என்று அமீர் உட்பட எட்டு பேர் பதவி விலகியதும் பரபரப்பை ஏற்படுத்தினாலும் , படத்தை பார்த்த பிறகு இதுக்காகவா இப்படி அடிச்சுக்கிட்டாங்க என்கிற நினைப்பு மட்டுமே மேலோங்கி நிற்கிறது ...

2011 இல் லண்டனில் ஒரு குண்டு வெடிப்பு , அதை தொடர்ந்து வரிசையாக சில கொலைகள் , கொலைகளை துப்பறியும் வீரகத்தி பிள்ளை ( நாசர் ) பார்வையிழந்த கெனி ( விக்ரம் ) தான் இதற்கு காரணமென்று கண்டுபிடிக்கிறார் ... பிறகு பார்வையிழந்தவர் கெனி இல்லை , அவர் எக்ஸ் ரா ஆபீசர் சிவா என்பதையும் , எதற்கு கொலைகள் செய்தார் என்பதையும் எந்த வித ஆக்ரோஷமும் இல்லாமல் நீ .. ள .. தாண்டவமாய் சொல்லியிருக்கிறார்கள் ... கொலாட்ரல் , டேர் டெவில் போன்ற படங்களை நினைவு படுத்தும் கதை தான் என்றாலும் விஜய்க்கு இது ஒன்றும் புதிதில்லை என்பதால் விட்டு விடுவோம் ...


கண் பார்வையிழந்த கெனி , ரா ஆபிசர் சிவா என்று இரண்டு தோற்றத்தில் வரும் விக்ரம் உடல் மொழியாலும்  , உடற்கட்டாலும் நம்மை கவர்கிறார் , ஆனால் முகம் மட்டும் வயதை காட்டிக் கொடுக்கிறது ... இரண்டு , மூன்று அடிகளில் எதிரிகளை இவர் வீழ்த்தும் சண்டைக்காட்சிகள் அருமை ... அனுஷ்கா எனக்கு பிடித்த நடிகை , ஆனாலும் இந்த படத்தில் ஹோண்டா ஆக்டிவாவில் வரும் ஆன்டி  போல தழுக் , முழுக் என்று இருக்கிறார் ... இவர் நடிப்பதற்கு ஒன்றும் பெரிதாய் பிரயத்தனப்படவில்லை... டூயட்  காட்சிகளில் இளமை ததும்பவில்லை , மற்றவை ( சரி விடுங்க ) ...


எமி பார்வையிழந்த கெனிக்கு உதவும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ... சமூக சேவை என்ற பெயரில் சர்ச்சில் இவருடன் சேர்ந்து போட்டோக்ராபர் செய்யும் லூட்டிகள் சிரிக்க வைக்கின்றன , மற்றபடி சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை ... கொலை நடக்கும் இடங்களில் தானாய் வந்து மாட்டிக்கொள்ளும் டாக்ஸி டிரைவர் வேடத்தில் சந்தானம் ... நகைச்சுவைக்கு நல்ல ஸ்கோப் இருந்தும் படத்தின் முடிவு முன்னமே தெரிந்து விட்டதோ என்னமோ மனிதர் டல்லாகவே இருக்கிறார் ...

துப்பறியும் இலங்கை தமிழர் வேடத்தில் வரும் நாசர் அந்த ஸ்லாங்கோடு ஒத்துப்போக முடிந்த வரை முயற்சித்திருக்கிறார் ... தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வை விக்ரமின் நண்பனாக இருந்து கொண்டே பணத்திற்காக வில்லனாக மாறுவதை போல காட்டியிருப்பது சலிப்பை தருவதை தவிர வேறொன்றும் செய்யவில்லை ... இவருக்கும் , விக்ரமிற்கும் இடையேயான க்ளைமேக்ஸ் சண்டைகாட்சி விறுவிறுப்பு ... விக்ரமின் அம்மாவாக சரண்யா , மாமாவாக எம்.எஸ்.,பாஸ்கர்  , சில சீன்களே வந்தாலும் " தப்பாச்சே " என்று சொல்லி சிரிக்க வைக்கும் தம்பி ராமையா , பாலாஜி , லக்ஷ்மிராய் போன்றோரும் படத்தில் இருக்கிறார்கள் ...

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம் ... விஜய் - ஜி.வி  கூட்டணி வழக்கம் போல கிளிக் ஆகியிருக்கிறது ... 25 வது படத்திற்காக ஜி.வி மெனக்கட்டிருப்பது " ஒரு பாதி கதவு " , " உயிரின் உயிரே " போன்ற மெலடிகளில் நன்றாகவே தெரிகிறது ...


பழி வாங்கும் கதை என்றாலும் வன்முறையையும் , வழக்கமான ஹீரோயிஷத்தையும் தவிர்த்திருப்பது , பாடல் காட்சிகளை படமாக்கிய விதம், மெதுவாக கொண்டு  சென்றாலும் முதல் பாதியில் முடிந்தவரை சஸ்பென்ஷை தக்க வைத்தது , விக்ரம் - அனுஷ்கா திருமண காட்சிகள் , கண் பார்வை இல்லாவிட்டாலும் ஒலி எழுப்பி அது ஏற்படுத்தும் எதிரலைகள் மூலம் ( எக்கோலொகேஷன் ) எதிரில் இருப்பவர்களை அடையாளம் காணும் முறையில் விக்ரம் பயிற்சி எடுப்பது போன்றவை தாண்டவத்தில் நம்மை லயிக்க வைக்கின்றன ...

முந்தைய படமான  தெய்வதிருமகள் - திருட்டு தேவதை  என்ற போதும்  திரைக்கதையாலும் , விக்ரம் - சாரா நடிப்பாலும் நம்மை ரசிக்க வைத்த விஜய் பெரிதும் கவராத கதை , மிக நீளமான திரைக்கதை , விக்ரம் நண்பனையே துரோகியாக இனம் கண்டு கொள்ளும் காட்சிகள் , அரைகுறையாய் கொடுக்கப்பட்ட த்ரில்லர் , ஆங்காங்கே மட்டும் மனதை தொடும் காதல் , ரசிக்க வைக்காத நகைச்சுவை  இவற்றால் தாண்டவத்தில் நிறையவே தடுமாறியிருப்பது நன்றாக தெரிகிறது...

ஸ்கோர் கார்ட் : 40  


1 September 2012

முகமூடி - மினியேச்சர் ...


ஞ்சாதே , யுத்தம் செய் போன்ற படங்களை உலக சினிமாப் படங்களின் பாதிப்புகளில் எடுத்தவர் , ஒரு உலக சினிமா படத்தை அப்படியே உல்டா செய்து நந்தலாலா வாக எடுத்தவர் இப்படி எவ்வளவோ சொன்னாலும் தன் படங்களை எதிர்பார்க்க வைக்கும் இயக்குனர்களுள் ஒருவர் மிஷ்கின்  ... இவர் சூப்பர் ஹீரோ கதையை வைத்து ஜீவா நடிப்பில் தந்திருக்கும் படம் முகமூடி ...

சென்னையில் வயதானவர்கள் வீட்டை தேடி தேடி கொள்ளையடிக்கிறது ஒரு கும்பல் ... அந்த கொள்ளை கும்பலை பிடிக்கும் பொறுப்பு அசிஸ்டன்ட் கமிஸனர் கெளரவிடம் ( நாசர் ) கொடுக்கப்படுகிறது ...  இதற்கிடையில் மாஸ்டர் சந்துருவிடம் ( செல்வா ) குங்க்பூவை கற்றுக்கொண்டு தண்டசோறாக ஊரை சுற்றிக் கொண்டிருக்கும் ஆனந்த் ( எ ) ப்ரூஸ்லீ ( ஜீவா ) ஏ.சி யின் பெண் ஆர்த்தியை ( பூஜா ஹெக்டே ) காதலிக்கிறார்... ஒரு சந்தர்ப்பத்தில் நரேன் தலைமையிலான கொள்ளைக் கும்பல் ஏ.சி யை கொல்லும் முயற்சியில் போலீசின் சந்தேகப் பிடியில் ஜீவா மாட்டிக் கொள்கிறார் ... காதலியை கவர்வதற்காக போட்ட முகமூடியுடன் ஜீவா கொள்ளைக் கூட்டத்தை எப்படி அழிக்கிறார் என்பதே கதை ...


படத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் நடிகர் ஜீவா ... இந்தப் படத்திலும் சண்டைக் காட்சிகளில் அவரது அர்ப்பணிப்பு நன்றாகவே தெரிகிறது , ஆனாலும் சிக்ஸ் பேக் வைக்க சொல்லி ஜீவாவை கஷ்டப்படுத்தாமல் அந்த வேலையை டெய்லரிடமே விட்டுவிட்டார் மிஷ்கின்... சூப்பர் மேன் போல பேண்டிற்கு  மேல் ஜட்டி போட்டும் நடிப்பிற்கு பெரிய ஸ்கோப் இல்லாததால் ஜீவா ஏனோ நம்மை கவரவில்லை ...

அழகிப் போட்டிகளில் ஜெயிப்பவர்கள் எல்லாம் தமிழ் சினிமாவிற்கு ஒத்து வர மாட்டார்கள் என்பதை ஒரு முறை மீண்டும் நிரூபித்திருக்கிறார் பூஜா ... பேக்கிலிருந்து ஸ்டெப் ஸ்டெப் பாக இவரை அறிமுகம் செய்து அட போங்கடா என்று சொல்ல வைக்கிறார்கள் ... கொடூரமான வில்லனாக அறிமுகமாகி
க்ளைமேசில் ஜீவாவை பார்த்து " பேட்மேன் , ஸ்பைடர் மேன் , சூப்பர் மேன் " என்றெல்லாம் சகிக்க முடியாத மேனரிஷத்தில் வசனம் பேசி பரிதாபமாக செத்துப் போகிறார் நரேன் ...ஆர்ப்பாட்டமாக இருந்திருக்க வேண்டிய இவருடைய கேரக்டர் அபத்தமாக மாறியது அந்தோ பரிதாபம் ...


செல்வாவை பார்த்து ஜீவா உட்பட  அனைவரும்  " மாஸ்டர் , மாஸ்டர் "  என்று உயிரை விடுகிறார்கள் , ஆனால் அவரோ குங்க்பூ மாஸ்டர் போலல்லாமல் முழுக்கை பனியனை போட்டுக்கொண்டு " என்ன  மூணு இட்லி ஒரு பொங்கல் பார்சலா " என்று கேட்கும் சரக்கு மாஸ்டர் போலத்தான் இருக்கிறார் ..நந்தலாலா படத்தில் ஒரு சீனில் லாரி ஒட்டி சென்ற நாசருக்கு இந்த படத்தில் கனமான கதாபாத்திரம் ... வழக்கம் போல நன்றாகவே செய்திருக்கிறார் ... கிரீஸ் கர்னார்ட் கதாபாத்திரம் படத்தில் உள்ள மற்ற ஓட்டைகளை போலவே பெரிய ஓட்டை ... மிஷ்கினின் மனதிற்கு ஏற்ப லோ ஆங்கிள்  , வைட் டாப் ஆங்கிளில் கேமராவை நகர்த்தியிருக்கிறார் சத்யா ... அவர் என்ன செய்வார் பாவம் ?! ...

" கத்தாழ " , " கன்னித்தீவு " அளவிற்கு இல்லாவிட்டாலும் " நாட்டுல " பாட்டில் நன்றாகவே மெலடி குத்து போட்டிருக்கிறார் இசையமைப்பாளர் கே ... " வாய மூடி " பாடலாலும் , " டார்க் நைட் " படத்தின் இசையை நியாபகப்படுத்தினாலும் பின்னணி இசையாலும் மனதில் பதிகிறார் கே ...

பேட்மேன் , சூப்பர் மேன் போல தமிழில் ஒரு படத்தை தர முயற்சித்ததற்காக இயக்குனர் மிஷ்கினை பாராட்டலாம் ... வழக்கமான தண்டசோறு ஹீரோவாக இருந்தாலும் குங்க்பூவை வைத்து பிணையப்பட்ட பின்னணி , மார்க்கெட் சண்டை உட்பட ரசிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள் , பிரமாதமான பின்னணி இசையுடன் ஜீவா முகமூடியாக மாறும் காட்சி , ஆங்காங்கே பளிச்சிடும் மிஷ்கின் டைப் ஷாட்கள் , இரண்டாவது பாதிக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் முதல் பாதி போன்றவற்றால் மனதை தொடுகிறார் மிஷ்கின் ...


பெரிய பில்ட் அப் கொடுத்துவிட்டு சப்பென்று நகரும் இரண்டாம் பாதி , பெரிதும் கவனிக்க வைக்காத செல்வா - நரேன் பிளாஷ்பேக் காட்சிகள் , ஆஸ்பத்திரி சண்டை , கூன் விழுந்த வேரக்டர் , மடியில் விழுந்து சாகும் நண்பன் , பாம்பு போல காலை சுற்றி சுற்றி வரும் லோ ஆங்கிள் ஷாட்கள் , வசனமே இல்லாமல் நெடு நேரம் நகரும் காட்சிகள் இப்படி படம் நெடுக வழக்கமான மிஷ்கினின் மேக்கிங் ஸ்டைல் இவையெல்லாம் நம் முகத்தை கொஞ்ச நேரம் நேரம் மூட வைக்கின்றன . கொள்ளை கும்பல் நடத்தும் குங்க்பூ ஸ்கூல் , கிரீஸ் கர்னார்ட் வைத்திருக்கும் ஆராய்ச்சி கூடம் , திடீரென ஜீவா தரிக்கும் சூப்பர் ஹீரோ வேடம் இவையெல்லாம் மிஷ்கின் எந்நேரமும் அணிந்திருக்கும் கருப்பு கண்ணாடி போல புரியாத புதிராகவே இருக்கின்றன ...

இரண்டரை மணி நேரத்திற்கு மேல் படத்தை வளர்க்காமல் தட்டி , ஒட்டி இரண்டாவது  பாதியை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருந்தால் முகமூடி தமிழ் சினிமா உலகத்திற்கு முக்கிய மூடியாக இருந்திருக்கும் , அதிலும் குழந்தைகளை கடத்தல் கும்பலிடம் இருந்து ஜீவா மீட்கும் விறுவிறுப்பாக இருந்திருக்க வேண்டிய க்ளைமேக்ஸ் காட்சி க்ரீஷ் கர்னார்ட் &  கோ வின் குளறுபடிகளால் மொக்கையாகி போனது ... பொருளாதார , வியாபார காரணங்களினால் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஒரு  பிரம்மாண்டத்தை கொடுக்க முடியாமல் போனாலும் , க்ரிப்பான ஸ்க்ரீன்ப்ளே மூலம் மிஷ்கின் முகமூடியை ஹாலிவுட் படங்களின் மினியேச்சர் மாதிரி இல்லாமலாவது தவிர்த்திருக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 40

25 August 2012

18 வயசு - பேதலிக்கும் திரைக்கதை ...


ரேணிகுண்டா  வெற்றியை தொடர்ந்து  மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் பன்னீர்செல்வம் - ஹீரோ ஜானி கூட்டணியில் வந்திருக்கும் படம் 18 வயசு ... படத்தை பார்த்த பிறகு இந்த படத்திற்கா இத்தனை வருடங்கள் எடுத்துக்கொண்டார்கள் என்று நினைத்து தலை சுற்றுகிறது ...

கார்த்திக் ( ஜானி ) சின்ன வயதிலிருந்தே அப்பா கோண்டு , அம்மா யுவராணியோ  அப்பாவை சட்டை செய்யாமல் வேறு ஒருவருடன் கள்ள தொடர்பிலிருக்கிறார் ... இது தெரிந்தவுடன் அப்பா தற்கொலை செய்து கொள்ள   அதை மிக அருகிலிருந்து பார்த்ததாலும் , அம்மாவின் அரவணைப்பில்லாத தனிமையாலும் விலங்குகளை கண்டவுடன் அதே போல மாறிவிடும் மன நிலை பாதிப்புக்குள்ளாகிறார் ஜானி ... ஹீரோயின் காயத்ரியை பார்த்தவுடன் இவருக்கு காதல் வந்து விடுகிறது ... முதலில் ஜானியுடன் பழகும் காயத்ரி இவர் குணம் தெரிந்து விலக , அதற்கிடையில் தன்   தாயையும் ,  தன் வீட்டிலேயே நிரந்தரமாக தங்க வந்திருக்கும் அம்மாவின் கள்ளக்காதலனையும் ஜானி கொன்று விட்டு காயத்ரியுடன் காட்டுக்குள் சென்றுவிடுகிறார் ... கடைசியில் தன்னை தேடும் இன்ஸ்பெக்டரிடம் இருந்து ஜானி தப்பித்தாரா ? காயத்ரியை கைபிடித்தாரா ? என்பதை பார்ப்பவர்களையும் மனநிலை பாதிப்புக்குள்ளாக்கி சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...

குணா , காதல்கொண்டேன் கதையுடன் " ANIMAL " என்ற  ஆங்கிலப்படத்தையும் கலந்து வடிகட்டி எடுத்த கதையே " 18 வயசு " ... கதையை சுட்டிருந்தாலும் திரைக்கதையில் டீட்டைளிங்கான ட்ரீட்மென்ட் கொடுத்திருந்தால் நிச்சயம் ஒரு நல்ல த்ரில்லராக படம் வந்திருக்கும் ...

கமல் குணாவில் " அபிராமி அபிராமி " என்றார் ரசிக்க முடிந்தது , விக்ரம் தெய்வத்திருமகளில் " நில்லா நிலா " என்றதையும் ரசிக்க முடிந்தது , ஆனால் இவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவிற்கு ஜானி இல்லையென்றாலும் அடிக்கடி இவர் " காட்டுக்கு போகணும்" என்று சொல்வதை சகிக்க கூட முடியவில்லை ... மற்றபடி தன்னுடைய லிமிட்டேசன் தெரிந்து ஜானி முடிந்தவரை கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார் ... " ரேணிகுண்டா " போன்று ஒரு கதைக்களம் அமையாமல் போனது அவரது துரதிருஷ்டமே ...


ஹீரோயின் காயத்ரி பக்கத்து வீட்டுப்பெண் போல பளிச்சென்று இருக்கிறார்... இரண்டு , மூன்று வெற்றிப் படங்களில் நடித்தால் நல்ல எதிர்காலம் இருக்கிறது ... ஜானியின் நண்பன் மனநலம் குன்றிய ஜாக்கியாக நடித்திருப்பவர் புதுமுகம் என்று நினைக்கிறேன் , சேட் பாஷையில் இவர்
" நண்பா , காதல் வாழ்க " என்று வசனம் பேசி தன் நடிப்பால் கவர்கிறார்...ஜானிக்கு எதுவும் வசனம் இல்லாததால் படம் முழுவதும்  இவரே பேசி ரசிக்கவும் வைக்கிறார் , அதே சமயம் பொறுமையையும் சோதிக்கிறார் ...

முதல் பாதியில் ஜானியை காதலிப்பதற்காக வரும் பெண்ணின் நடிப்பிற்கும் , " 150 ரூபாக்கு ரீ சார்ஜ் பண்ணிடுங்க " என்று அவர் பேசும் வசனத்திற்கும் தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ். சைக்கோ படம் எடுக்கிறேன் என்று ரசிகர்களுக்கு கொடுத்த காயத்திற்கு அந்த பெண் வரும் நாலு சீன்கள் நல்ல மருந்து ... இன்ஸ்பெக்டராக நடித்திருப்பவர் , மருத்துவராக நடித்திருக்கும் ரோகினி , ஜானியின் நண்பராக வருபவர் இவர்களெல்லாம் நல்ல தேர்வு ...

அம்மாஞ்சி போல இருக்கும் ஒருவரை யுவராணியின் கள்ளக்காதலனாக போட்டது படத்தின் பெரிய ஓட்டை , அதே போல ரோகினி யின் கணவனாக நடித்திருப்பவர் ரோகினி " கிருஷ்ணா ஏதாவது செய்ங்க " என்று உணர்ச்சிப்பூர்வமாக வசனம் பேசும் போது ஞே என்று பரிதாபமாக முழிக்கிறார் ... இவர்களை நடிக்க வைத்திருக்கலாம் அல்லது நடிக்க தெரிந்த யாருக்காவது இயக்குனர் இந்த வாய்ப்பை கொடுத்திருக்கலாம் ... சார்லஸ் - கணேஷ் இருவரின் இசையில் " உன்னை ஒன்று " உள்ளிட்ட மெலடி பாடல்களும் , பின்னை இசையும் அருமை ... ஒளிப்பதிவு  படத்தின் தேவைக்கேற்றபடி இருக்கிறது  ... எடிட்டிங் சீராக இல்லை ... உதாரணத்திற்கு ஒரு சீனில் கையில் அடிபட்டு பேண்டேஜுடன் வரும் இன்ஸ்பெக்டர் அடுத்த சீனில் சாதாரணமாக வருகிறார் , அதற்கடுத்த சீனில் திரும்பவும் பேண்டேஜுடன் வருகிறார் ...



தன்  முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் உள்ள படத்தை கொடுத்ததற்காக   இயக்குனரை நிச்சயம் பாராட்டலாம்... வன்முறை , ஆபாசம் இரண்டிற்கும் அதிக ஸ்கோப் கதையில் இருந்தும் அதை தொடாத தைரியம் , முதல் பாதியை கொண்டு சென்ற விதம், ஹீரோயினின் குடும்ப சூழலை நாசூக்காக சொன்ன பாங்கு இவைகளெல்லாம் 18 வயசை ரசிக்க வைக்கின்றன ...

தன் மனைவி ஒருவன் கையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதை பார்த்தவுடன் தன் ஒரே மகனின் எதிர்காலத்தை மறந்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொள்வது போல காட்டுவது , தந்தையின் மறைவுக்குப் பிறகு ஜானி தாயால் அடைந்த கொடுமைகளை விஷுவலாக  காட்டாமல் ஏதோ ஒரு வரியில் ஜானி சொல்வது , ஜானி ஏன் இது போன்ற மனநோய்க்கு ஆளானார் என்பதை டீட்டைளாக சொல்லாமல் செய்தி வாசிப்பது போல ரோகினி சில வரிகளில்  சொல்லிவிடுவது , ஜானியின் நிலைமையை நினைத்து பரிதாபம் வருவதற்கு பதில் நமக்கு சிரிப்பு வருவது போல அமைக்கப்பட்ட காட்சியமைப்புகள் ,

" திருநங்கைகளே சந்தோசமாக இருக்காங்க " என்று என்னமோ அவர்கள் சந்தோசமாக இருக்கக் கூடாது என்பது போல சொல்லிவிட்டு அவர்களின் சோகத்தை விளக்குவது போல ஒரு பாடலை கதைக்கு சம்பந்தமேயில்லாமல்  திணித்தது , விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும் " விடுங்கடா சாமி " என்கிற அளவிற்கு பொறுமையை சோதிக்கும் இரண்டாம் பாதி  திரைக்கதை இவைகளெல்லாம் 18 வயசை பேதலிக்க வைக்கின்றன ... படம் முடிந்து வரும் போது " ரேனிகுண்டா " வை எடுத்த பன்னீர்செல்வம் தான் இந்த படத்தையும் எடுத்தாரா ? என்ற சந்தேகம் லேசாக எட்டிப் பார்க்கிறது ...

ஸ்கோர் கார்ட் : 38  

4 August 2012

அன்னா - மற்றுமொரு மன்மோகன் ?! ...



ழலுக்கு எதிரான தனது உண்ணாவிரதத்தை பத்து நாட்களுடன் முடித்துக் கொண்ட அன்னாஹசாரே தான் தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்...
இதற்கு முன் அன்னா உண்ணாவிரதம் இருந்ததை  அன்னாவின் விரதமும்,மன்மோகனின் மௌனமும்  என்ற பெயரில் பதிவிட்டிருந்தேன் ... ஊழலுக்கு எதிராக , அதிலும் குறிப்பாக காங்கிரஸ் அரசின் உச்சக்கட்ட ஊழலை பார்த்து கொதிப்படைந்து போயிருக்கும் கோடானுகோடி இந்தியர்களுள் நானும் ஒருவன் ... 


என்ன தான் எதிர்க்கட்சிகளான பி.ஜே.பி யும் , கம்யூனிஷ்டும காங்கிரஸின் ஊழலை எதிர்த்தாலும் அதை அரசியலாகத்தான் மக்கள் பார்ப்பார்கள் , அதையே அரசியல் சாராத ஒரு தனி மனிதன் செய்யும் போது அனைவரிடமும் ஒருவித பரவசமும் , உத்வேகமும் தொற்றிக்கொள்ளும் ... ஒரு கிராமத்தையே முன் மாதிரியாக மாற்றிக் காட்டிய காந்தியவாதி அன்னா ஹசாரே முதன் முதலில் ஜன் லோக் பாலை வலியிறுத்தி உண்ணாவிரதம் இருந்த போது அனைவருக்கும் ஒரு உற்சாகம் பிறந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை ...  அன்னா ஹசாரேவின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மத்திய அரசு இரட்டடிப்பு செய்த போது மீண்டும் அன்னா களத்தில் குதித்த போதும் மக்களிடையே அதே வரவேற்பு இருந்து ... 


ஒரு பக்கம் அன்னாவிற்கு ஆதரவு பெருகிக் கொண்டே போனாலும் மறுபக்கம் அன்னாவின் ஊழலுக்கு எதிரான மசோதா நடைமுறைக்கு ஒத்துவராது என்றும் , அவர் ஒரு விளம்பர விரும்பி என்பதுமான விமர்சனங்களும் வளர்ந்து கொண்டே தானிருந்தன ... பழுத்த அரசியல் விமர்சகரும் , காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை தன் பத்திரிக்கையில் விமர்சித்து வருபவருமான சோ அவர்களே அன்னா அண்ட் குழுவினரை கோமாளிகளாகவே தொடர்ந்து சித்தரித்து வருகிறார் ... சோவுடைய நையாண்டிகளை நான் ரசிப்பவனாக இருந்தாலும் இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்தே கொண்டிருந்தேன் ... 


இருப்பினும் கொஞ்சம் நுணுக்கமாக ஜன்  லோக் பாலின் நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்த போதும் , அன்னாவை சுற்றியிருப்பவர்கள் அடிக்கும் கூத்துக்களை பார்க்கும் போதும் , முன்னுக்கு பின் முரணான சில கருத்துக்களை அவர்கள் கூறும் போதும் ஏதோ ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது ... அதனால் தானோ என்னவோ இந்த முறை அன்னா அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது எனக்கு பெரிதாக எந்த சலனமும் ஏற்ப்படவில்லை ... அது மட்டுமல்லாமல் இப்போது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட அன்னா அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் , ஆனால் தான் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்றும் அறிவித்திருப்பது மேலும் நெருடலையே கொடுக்கிறது .. 


அரசியலே சாக்கடை , அரசியல்வாதிகள் எல்லோருமே ஏமாற்றுக்காரர்கள் என்கிற ரீதியில் பேசிக்கொண்டிருந்த அன்னா குழுவினர் இப்போது தடாலடியாக அரசியலில் குதிக்கப்போவதாக அறிவித்திருப்பது அவர்கள் நம்பகத்தன்மையை கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது... சட்டத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வர நிச்சயம் அரசியல் ரீதியான ஆதரவு தேவை , அரசியல்வாதிகள் எல்லோரும் ஒத்துழைத்தால் தான் அந்த வகையான சட்டத்தை கொண்டு வர முடியும் ... ஊழலில்  ஊறிப்போன அரசியல்வாதிகள் அதற்கு எதிரான சட்டத்தை கொண்டு வந்து சொந்தக் காசிலேயே சூனியம் வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் , இதே சட்டத்தை வைத்து உயர் பதவியில் இருக்கும் ஊழல் செய்யாதவர்களை கூட ப்ளாக்மெயில் செய்யும் அபாயமும் இருக்கிறது ... 





ஆரம்பத்திலிருந்தே அன்னா குழுவினருக்குள்ளே கருத்து வேறுபாடு தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது , அதனால் தான் ஒரு நாள் மத்திய அரசை ஆதரித்தவர்கள் அடுத்த நாள் திட்டித் தீர்த்தார்கள் ... இப்போது இருக்கும் சூழ்நிலையில் அன்னா கட்சி ஆரம்பித்தாலும் ஆட்சியை பிடிப்பதென்பது நடக்காத காரியம் , அப்படியே பிடித்தாலும் இந்த மசோதாவை நடைமுறைப் படுத்த முடியுமா என்பது இமாலய கேள்வி ... தற்போதைய நிலையில் தனித்து ஆட்சி என்பது எட்டாக்கனியாகி விட்ட நிலையில் அன்னா யாருடன் கூட்டு சேர்வார் ? 


காங்கிரஸுடன் சேர முடியாது , பி.ஜே,பி யுடன் சேர்வதற்கு தனிப்பட்ட முறையில் அவருக்கு விருப்பமிருந்தாலும் யாராவது மதவாதி என்று சொல்லி விடுவார்களோ என்ற பயத்தால் அதையும் செய்ய முடியாது ... ஏற்கனவே ஊழலில்லாத மோடியின் ஆட்சியையும் , அவரையும் நியாமாக பாராட்டி விட்டு பின்னர் போலி மதவாதத்திற்கு பயந்து தன் கருத்துக்களை மாற்றியவர் அன்னா ... இந்த சம்பவத்தின் போதே அரசியலில் குதிப்பதற்கு  அவர் ஆர்வமாய் இருப்பது ஒரளவு புலனானது , ஏனெனில் அரசியல்வாதிகள் தான் ஓட்டுக்கு பயந்து போலி மதவாதம் பேசுகிறார்கள் என்றால் அரசியல் சாரா இயக்கத்திலிருக்கும் அன்னா பயந்திருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை ...


ஒவ்வொரு உண்ணாவிரதத்தின் போதும் தவறாமல் அவரை லைவாக ஆங்கில சேனல்கள் காட்டிய போது சில சமயங்களில் அவையெல்லாம் தமிழககத்தில் கடந்த ஆட்சியின் போது கலைஞர் டி.வி யில் ஒளிபரப்பான " முத்தமிழ்கலைஞர்  " அவர்களை நாயனாக வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றை நியாபகப்படுத்தின ... நிச்சயம் இதற்கு அன்னாவை குறை கூற முடியாது , ஆனாலும் இந்த சம்பவங்கள் அனைத்தும் அன்னாவையும் ஒரு விளம்பர பிரியரோ என்ற அச்சத்துடனே பார்க்க வைத்தன ... 




அரசியலில் ஈடுபடவும் , கட்சி ஆரம்பிக்கவும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது , அதில் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடுமில்லை , ஆனால் அன்னா அரசியலில் ஈடுபட்டு தான் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பதே எனது கேள்வி . எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆரம்பத்தை பார்த்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு தான் கட்சியை தொடங்கியிருப்பார்கள் , ஆனால் அது போக போக மக்களுக்கு பயன்பட்டதோ இல்லையோ அவர்களுடைய மாக்களுக்கும் , சுற்றியிருக்கும் கூட்டதிற்குமே பயன்பட்டிருக்கிறது ... 


அதே போல அன்னாவின் உண்ணாவிரதங்களும் அரசியல் ஸ்டண்டா ? தனிப்பட்ட முறையில் அன்னா நேர்மையாக இருந்தாலும் கட்சியிலிருப்பவர்கள் அனைவரையும் அதே போல கட்டுக்கோப்பாக வைக்க முடியுமா ? என்பது கேள்விகளெல்லாம் நம்மை குடைகின்றன ... ஏனெனில் நம்மூரில் மன்மோகன்சிங் என்று ஒரு நல்லவர் இருந்தார் ... ஒரு காலத்தில் சிறந்த பொருளாதார நிபுணராகவும் , நடுத்தர வர்க்கத்தினரின் நாயகனாவும் , அப்பழுக்கற்ற நேர்மையாளராகவும் பார்க்கப்பட்டவர் இன்றோ முதலாளிகளின் மீது கொண்ட விசுவாசத்திற்காகவும் , அவர் கடைபிடிக்கும் கூட்டணி தர்மத்திற்காகவும் , அவர் மீதே எழுந்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகவும் அதே நடுத்தர வர்க்கத்தினரால் எதிரி போல பார்க்கப்படுகிறார் ... அதைப் போல அரசியலில் குதிக்கப் போகும் அன்னாவும் மற்றுமொரு மன்மோகன் போல மாறிவிடக் கூடாது என்பதே மக்களின் ஆதங்கம் ... 

22 July 2012

மதுரை பயணம் ...



நான் கடைசியாக மதுரைக்கு சென்று இரண்டு வருடங்கள் இருக்கும் , அதுவும் எங்கள் குடும்பத்துக்கு இருந்த ஒரே தொடர்பான வீட்டை  விற்பதற்காக என் சகோதரர்களுடன் சென்றிருந்தேன் ... எங்கள் குடும்பம் முழுவதும் சென்னையிலேயே செட்டிலாகி பல வருடங்கள் ஆகி விட்டதால் வீட்டை கவனிக்க முடியவில்லை , அதிலும் குடியிருந்தவர்களும்  காலி செய்து கொண்டு போய் விடவே வீட்டை விற்க முடிவெடுத்தோம் ... என் நண்பனின் அண்ணனே வீட்டை வாங்குவதற்கு முனைப்பாக இருந்ததால் விற்பதில் சிரமம் இருக்கவில்லை ... 


சொந்த வீட்டின் மேல் எல்லோருக்கும் ஒரு எமோஷனல் கனக்ட் இருக்கும் , அதிலும் என் இரண்டு அண்ணன்களை விட எனக்கு அது கூடவே இருந்ததற்கு காரணம் , அவர்களை விட நான் அதிக வருடம் அந்த வீட்டில் வாழ்ந்ததே ... என்னுடைய  ஆறாம் வகுப்பிலிருந்து கல்லூரி படிப்பு முடியும் வரை நான் அந்த வீட்டில் தான் இருந்தேன் ... மூத்த அண்ணன் வேலை நிமித்தமாக டில்லியில் இருந்ததால் ஆரம்பத்திலிருந்தே எங்களுடன் தங்கியதில்லை , அவர் வாங்கிகொடுத்த டேப் ரெக்கார்டரில் தான் அப்போது ஏ.ஆர்.ரஹ்மான்  இசையில் பிரபலமான " ஓட்ட ஓட்ட கட்டிக்கோ " பாடல் ஓடிக்கொண்டேயிருக்கும் ... சவுண்டை குறைக்க சொல்லி சத்தம் போடும் எதிர் வீட்டு இருமல் தாத்தாவும் ஒரு நாள் இறந்து விடவே ( சத்தியமா நான் காரணமில்லை ) சத்தம் மேலும் அதிகமாகியது ... அடுத்த அண்ணனும் வேலை கிடைத்து வெளியூர் சென்று விட நான் தனிக் காட்டு ராஜாவானேன் ... 



பாசத்தையே வெளிக்காட்டிக் கொள்ளாத என் தந்தை என்னிடம் மட்டும் அதிக பாசத்துடனும் , அதை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்காட்டிக் கொண்டுமிருந்த காலமது. நான் அதை முழுவதும் உணர்ந்து கொண்ட போது என் தந்தை உயிருடன் இல்லை ... அவர் உயிருடன் இருந்த போது அவருடன் நிறைய சண்டையிட்டிருக்கிறேன் , எதிர்த்துப் பேசியிருக்கிறேன் , ஒரு நாள் என்னை அடிக்க வந்த கைகளை இறுகப் பிடித்திருக்கிறேன்...

ஜோசியர் கிரக கோளாறு என்றார் , குடும்ப நண்பர்கள் சிலர் இருவருக்கும் இடையேயான அதிக  வயது வித்தியாசம் ( 44 ) தான் கருத்து வேறுபாடுகளுக்கு  காரணம் என்றார்கள். என்ன காரணம் என்று எனக்கு அந்த வயதில் புரியவில்லை , ஆனால் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அதீத அன்பே சண்டைகளுக்கு காரணமென்று இப்போது புரிகிறது ... ஒருவர் மீது நாம் கொண்டிருக்கும் அன்பு அவர்கள் நம்முடன் இருக்கும் போது தெரிவதில்லை , பிரியும் போது தான் தெரிகிறது ... இது தந்தைக்கு மட்டுமல்ல  , நிறைய உறவுகளுக்கு பொருந்தும் ... 

இப்போது கடன் வசதியும் , தனி நபர் வருமானமும் அதிகமிருப்பதால் வீடு வாங்குவதென்பது எளிதாகிவிட்டது , அதனால் தான் ஐம்பத்தைந்து வயதில்  என் தந்தைக்கு சாத்தியமானது இந்த காலத்தில் இருபதைந்திலேயே முடிகிறது ... சிறுக சிறுக சேமித்து ஒரு இடத்தை வாங்கி நம் கண் பார்வையிலேயே தனி வீட்டை கட்டி  அதில்  குடிபுகுவதென்பது  ஒரு தனி சுகம் , இந்த காலத்தில் கிடைக்கும் துரித ப்ளாட்களில் அந்த சுகம் இருப்பதில்லை ... எங்கள் தந்தை சென்னைக்கு வந்து எங்களுடன் நிரந்தரமாக தங்காமல் மதுரையிலேயே இருந்ததற்கு அவர் சொந்தமாக கட்டிய வீடும்  முக்கிய காரணம் ... 


இந்த இரண்டு வருடங்களில் ஓரிரு முறை மதுரைக்கு செல்லும் வாய்ப்பு வந்தும் என்னால் போக முடியவில்லை , திடீரென்று ஒரு நாள் என் கல்லூரி கால நண்பன் கட்டிங் போன் செய்து அவன் ஜெர்மனிக்கு போய் வந்ததால் அவன் வேலை  பார்க்கும் அலுவலகம்  அவன் இந்தியாவுக்குள் எந்த ஊருக்கு சென்று மூன்று நாள் தங்கினாலும் அதற்க்கான செலவை ஏற்றுக்கொள்வதாக சொல்லி விட்டதாகவும் , அவன் மதுரையை தேர்ந்தெடுத்ததாகவும் சொன்னான் ... இதல்லவோ ஆபீஸ் என்ற  வயிற்றெரிச்சல்  ஒரு புறமும் , எந்த ஆபீஸ்லடா இந்த மாதிரியெல்லாம் அனுப்புறாங்க என்ற கேள்வி மறுபுறமும் எழ , " தானமாய் வரும் மாட்டை பல்லைப் பிடுங்கி பார்க்க கூடாது " என்ற சொல்லுக்கேற்ப நானும் மதுரை என்பதால்  சம்மதித்தேன் ... 

துரித பயணம் என்பதால் எஸ்.ஆர்.எம் பஸ்ஸில்  டிக்கெட் புக் செய்து கிளம்பினேன் ... பேருந்து பயணத்தின் போது  ஏ.சி  குறைவாக இருப்பதாக ஒருவர் முறையிட அதற்கு
 ஏ.சி  சரியாத்தான் இருக்கு , வேணுமின்னா கம்ப்ளைன்ட் பண்ணிக்குங்க "  என்று சொல்லி வாடிக்கையாளர்கள் சேவைக்கான இ மெயில்  முகவரியை எஸ்.ஆர்.எம் பணியாளர் காண்பித்தது அவர்கள் சர்வீசின் மேல் நான் வைத்திருந்த மதிப்பை வெகுவாக குறைத்தது ... ஒரு வழியாக மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலுக்கு   வந்து சேர்ந்தேன்...

கட்டிங் வரும் போது உற்சாகத்திற்கு குறைவிருந்தாலும் , உற்சாக பானங்களுக்கு குறைவிருக்காது ( அதன் காரணமாகவே அவன் இயற்பெயர் நாராயணன் என்பது மறந்தே போனது  ) ... வருவதற்கு முன்பே நேயர் விருப்பங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப அயிட்டங்களுடன் வந்து சேர்ந்தது அவன் தனி சிறப்பு ... கடைசியில் எது நடந்ததோ அது நல்லபடியாகவே நடந்தது ... கல்லூரியில் படிக்கும்  போது அவன் கட்டிங்கிற்க்கே  மரண போதையாகிவிடுவதால் நாராயனணிற்கு " கட்டிங் " என்ற திருநாமம் வந்து தங்கிவிட்டது .. அந்த காலத்திலே " கண்ணா " ஒயின்ஸில் கடன் வைத்து சரக்கடித்த பெருமை அவனுக்கு மட்டுமே உண்டு ... 

எங்கள் கல்லூரியில் ஓரளவு அழகான பெண்கள் எல்லோருமே ஏனோ எல்லீஸ் நகரிலேயே இருந்தார்கள் ( டி,வி,எஸ் நகர் பெண்கள் கோவிக்க வேண்டாம் ) , அந்த ஏரியாவில் கட்டிங் வசித்து வந்ததால் பசங்களின் நட்புக்கரம் அவன் பால் நீண்டுகொண்டேயிருந்தது , அவனும் " அந்த பொண்ணு தானே ஒன்னுமேயில்லை நேத்து கூட அவங்க வீட்டுல தான் இருந்தேன் , ஈசியா செட்டாயிரும் ,( இந்த இடத்தில
யாருக்கு , யாருக்கோ " என்ற வடிவேலுவின் வசனத்தை ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொள்ளவும் )  வாங்க பாஸ் மத்தத ஒரு கட்டிங் போட்டுக்கிட்டே பேசுவோம் "   என்று சொல்லிவிட்டு கண்ணா ஒயின்சுக்கு அவர்களை அழைத்து செல்வது அவன் வழக்கம் ... 

இன்றோ அதற்கெல்லாம் பிராயச்சித்தம் செய்வது போல பணத்தை தண்ணியாக மட்டும் அல்ல தண்ணியிலேயே செலவழித்துக் கொண்டிருக்கிறான் என்பது என் கருத்து ... அதிலும் ஊருக்கு நான் திரும்பும் போது " குறை எதுவும் இல்லையே மச்சான் " என்று ஏதோ மாப்பிள்ளை வீட்டுக்காரகளிடம் பெண்ணின் தகப்பன் கேட்பது போல அவன் கேட்ட போது கிரேன் வைக்காமலேயே ஒரு முறை உயரத்திற்கு போய் வந்தான் ...
 " நன்பேண்டா " என்று ஒரு குரல் அங்கு ஒலிப்பது போலவே இருந்தது ...

நான் எதிலுமே அதிக பற்றுள்ளவனாக இருப்பதில்லை , சரக்கு விஷயத்திலும் அப்படியே... கல்லூரி நண்பர்கள் பி.சி , சபரியுடன் என் பால்ய நண்பன் பட்டாபியும் கலந்து கொண்டதும் கலகலப்பு கூடியது ... சபரீஷ் பொங்கல் , குமார் மெஸ் சாப்பாடு , முனியாண்டி விலாஸ் புரோட்டா - சால்னா இவற்றுடன் சேர்த்து  இந்த சந்திப்பின் மூலம் ஏற்கனவே எனக்கும் என் பால்ய நண்பனுக்கும் இடையேயிருந்த சின்ன மனஸ்தாபமும் கரைந்து போனது பயணத்தினால் கிடைத்த கூடுதல் பலன் ...சில இடங்களுக்கு போக வேண்டுமென்று நினைத்திருந்தும் மீனாக்ஷி அம்மன் கோவில் , திருப்பரங்குன்றம் இரண்டிற்கு மட்டுமே அடுத்த நாள் காலை செல்ல முடிந்தது ... 


ரூம் ஜன்னல் வழியாக பின்புறம் பார்த்த போது தெரிந்தது மிகப்பெரிய வெட்டவெளி ... இன்று வெட்டவெளியாக இருக்கும் அந்த இடம் ஒரு காலத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டராக இருந்து , எத்தனையோ வெள்ளிவிழா படங்களை கண்ட தங்கம் தியேட்டர் என்பதை நினைக்கும் போதே நெஞ்சுக்குள் ஏதோ ஒரு வெறுமை ... என் அப்பாவுடன் சிவாஜி படம் பார்க்க தங்கம் தியேட்டருக்கு நான் பல தடவை சென்றிருக்கிறேன் , அப்படி செல்லும் போது நடந்த ஒரு சம்பவம் என் மனதில் பசுமரத்தாணி போல இன்றும் நினைவிருக்கிறது ... செயின் ஸ்மோக்கரான என் அப்பா இடைவேளையின் போது சிகரட் வாங்க , நானும் அதையே கேட்டேன் ... அவர் மறுக்க  நான் " நீ மட்டும் வாங்குற " என்று சொல்லி அடம் பிடிக்கவே அப்பொழுது அவரால் எனக்கு முன் புகை பிடிக்க முடியவில்லை , அன்று மட்டுமல்ல பிறகு என்றுமே சாகும் வரை எனக்கு முன்னாள் அவர் புகை பிடிக்காமலிருந்தது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது ...

பள்ளி நாட்களில் ஒரு பந்தாவிற்காக புகை பிடிக்க ஆரம்பித்த நான் கல்லூரி நாட்களில் அதற்கு அடிமையானேன் என்றே சொல்லலாம் ... பிறகு எவ்வளவு முயன்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாமல் போகவே அந்த முயற்சியை நிறுத்திவிட்டேன். சென்னையில் வேலைக்கு  சேர்ந்த பிறகு புகைக்கும் எனக்குமான நெருக்கம் இன்னும் அதிகமானது ... ஒரு நாள் திடீரென என் தந்தை இறந்த செய்தி கேள்விப்பட்டவுடன் நாங்கள் எல்லோரும் மதுரைக்கு விரைந்தோம் ... ஈம காரியங்கள் செய்வதற்காக சுடுகாட்டுக்கு போவதற்கு முன் சிகரெட் வாங்குவதற்காக என் நண்பனிடம் பணம் கொடுப்பதை என் அண்ணனுடைய சகலை பார்த்துவிட்டார் ... 

என்  தந்தையின் ஈம காரியங்கள் முடியும் வரை  பத்து நாட்களுக்கு சிகரெட் பிடிக்காமல் இருக்கலாமே என அவர் சொன்ன போது நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ... அவர் என் தந்தைக்காகவாவது இதை சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கலாமே என்று சொன்ன போது என்னால் தட்ட முடியவில்லை ... அந்த பதினைந்து நாட்களும் நான் சிகரெட் பிடிக்கவேயில்லை , அதற்கு அடுத்த நாள் என் நண்பன் என்னிடம் சிகரெட்டை நீட்டிய போது ஏதோ ஒரு விஷ ஜந்துவை பார்ப்பது போல தான் அதை நான் பார்த்தேன் ... புகை பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் கைவிட்டு இத்தோடு ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டன ... 


யார் யாரோ ஏன் என் அப்பாவே ஜாடையாக சொல்லியும் புகை பிடிக்கும் பழக்கத்தை விடாத நான் திடீரென மிகவும் நெருக்கமில்லாத ஒருவர் சொன்னவுடன் விட்டுவிட்டதை நினைத்தால் மற்றவர்களுக்கு ஆச்சரியம் ஆக இருக்கலாம் , ஆனால் எனக்கு என்னவோ அப்படி தோன்றாததற்கு காரணம்  என் அப்பா ... " டே மாப்பிளை எத்தன தடவ டா கூப்புடறது , இந்தா  சிகரட்ட பிடி " நான் அந்த பழக்கத்தை விட்டு விட்டது தெரியாத என் கல்லூரி நண்பன் என்னிடம் சிகரெட்டை நீட்டினான் ... அதை மறுத்துவிட்டு மீண்டும் என் பார்வை என்னையறியாமல் தங்கம் தியேட்டர் இருந்த வெட்டவெளியில் வெறித்து நின்றது ... 

14 July 2012

பில்லா 2 - டான் ஃபார் ஃபேன் ( DON FOR FAN )



முந்தைய படம் தோல்வியோ , வெற்றியோ எப்படியிருந்தாலும் அடுத்த படத்திற்கான ஒப்பனிங்கை அப்படியே தக்கவைத்துக் கொள்பவர் அஜித் , அப்படியிருக்க 2011 ன் ப்ளாக்பஸ்டர் மங்காத்தாவை தொடர்ந்து வந்திருக்கும் படம் , ஐந்து வருடங்களுக்கு முன்னாள் மெகா ஹிட்டடித்த பில்லா படத்தின் பார்ட் 2 , இந்தியாவின் முதல் ப்ரீக்யூவல்  படம் இப்படி சில  சிறப்பம்சங்களையும் தாண்டி இந்த வருடத்திற்கே ஒரு மிகப்பெரிய கமர்சியல் வெற்றிக்காக ரசிகர்கள் ஆவலுடன் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ரிலீசாகியிருக்கிறது பில்லா 2 ...  


ஒரு சாதாரண அகதியாக இருந்து கடத்தல் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் டானாக டேவிட் பில்லா உருமாறுவதே கதை ... கொலை சதியில் இருந்து பில்லா ( அஜித் ) தப்பிப்பதிலிருந்து ஆரம்பிக்கும் படம் பிளாஸ்பேக்கில் விரிகிறது ... அகதிகள் முகாமில் நண்பனுக்காக இன்ஸ்பெக்டரை அடிக்கும் பில்லா கொஞ்சம் பிரபலமடைகிறான் ... முதலில் வைர கடத்தலின் ஆரம்பித்து , பிறகு ஹெராயின் கடத்தல் மூலம்  அப்பாசியுடன் 
( பாண்டே ) அறிமுகமாகும் பில்லா பிறகு அவன் சம்மதமில்லாமலேயே டிமொட்டி
( வித்யுத் ) யுடன் ஆயுதக் கடத்தலில் இறங்குகிறான் ... அப்பாசியை கொன்று விட்டு டிமொட்டியையும் பகைத்துக்கொண்டதால் எதிரிகள் மூலம் முதல்வரைக் கொன்ற பலி பில்லாவின் மேல் விழுகிறது ... பலியிலிருந்து மீண்டு டிமொட்டியையும் கொன்று விட்டு கடத்தல் உலகின் முடி சூடா மன்னனாக பில்லா மாறுவதுடன் படம் முடிகிறது ... 




அஜித்திற்கு இது அல்டிமேட் ரோல் ... படத்தில் ஆதி முதல் அந்தம் வரை பிரேம் பை பிரேம் தல தாண்டவம் ஆடியிருக்கிறார் ... " எதிரியின் பயம் நம் பலம் " , " எனக்கு நண்பனாக இருக்கறதுக்கு தகுதி தேவையில்லை , ஆனா எதிரியா இருக்கிறதுக்கு தேவை " போன்ற சார்ப்பான வசங்களை அஜித் பேசும் போது தியேட்டர் அதிர்கிறது ... என்ன தான் மாஸ் ஹீரோ படமென்றாலும் படம் முழுவதும் அஜித் சகட்டுமேனிக்கு கையில் கிடைத்ததையெல்லாம் ( குண்டூசி உட்பட ) வைத்துக்கொண்டு எதிரிகளை ரத்த வெள்ளத்தில் வீழ்த்திக் கொண்டே போவது ஒரு லெவலுக்கு மேல் போரடிக்கிறது ... ப்ளாஷ்பேக் காட்சிகளுக்காகவாவது அஜித் கொஞ்சம் இளைத்திருக்கலாம்... 


இந்த படத்திற்கு ஹீரோயினே தேவையில்லை என்னும் போது இரண்டு ஹீரோயின்கள் தேவையா என்று தெரியவில்லை ... கடத்தல் கும்பலில் சமீராவாக நடித்திருக்கும் ப்ருணா அப்துல்லா டூ பீஸில் வளைய வந்தாலும் ஏனோ எந்த கிளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. அஜித்தின் அக்கா பெண் ஜாஸ்மினாக நடித்திருக்கும் பார்வதி ஓமனக்குட்டன் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் பரிதாபமாக செத்துப்போகிறார் ... பில்லா வில் நமீதா , நயன்தாராவை எல்லாம் பார்த்த கண்களுக்கு திருஷ்டி கழித்துவிட்டார்கள் ... 




வடநாட்டு இறக்குமதியாமான இரண்டு வில்லன்களும் வாட்டசாட்டமாக இருந்தும் , அஜித்திடம் அடி வாங்கி மரித்துப் போகிறார்கள் ... டிமொட்டியாக நடித்திருக்கும் வித்யுத்தின் அறிமுக காட்சி அற்புதம் ... அஜித்தின் நண்பனாக வருபவர் , கடத்தல்காரர் இளவரசு , அஜித்தின் மேல் காண்டோடு அலையும் சுந்தர்.கே.விஜயன் எல்லோரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள் ... 


படத்தின் பாடல்களை பற்றி இரு வேறு கருத்துக்கள் இருந்தாலும் யுவனின் பின்னணி இசை பிரமாதம் ... " மதுரை பொண்ணு " பாடல் முணுக்க வைக்கிறது ... நா.முத்துக்குமார் வரிகளில் " உனக்குள்ளே மிருகம் " பாடல் வரிகளும் , அதை படமாக்கிய விதமும் அருமை ...  சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன ... வன்முறைக்காக படத்திற்கு  சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தும் பெண்கள் , சிறுவர்கள் கூட்டம் நிறையவே இருக்கிறது ...படம் டெக்னிக்கலி செம சௌண்டாக இருக்கிறது ... ஒளிப்பதிவாளர் ராஜசேகரும் , எடிட்டர் சுரேஷ் அர்சும் அதற்கு முக்கிய காரணகர்த்தாக்கள் ... 




பில்லாவை போலவே பில்லா 2 வும் மேக்கிங்கில் படு ஸ்டைலாக இருக்கிறது ... அதற்காக இயக்குன்ர் சக்ரிக்கு ஒரு சபாஷ் போடலாம் .... ஜாபருடன் சேர்ந்து இவர் எழுதியுள்ள வசனங்களும் சார்ப் அண்ட் ஸ்வீட் ... ஒவ்வொரு காலகட்டத்திலும் பில்லாவின் முன்னேற்றத்தை சரியாக பதிவு செய்திருக்கிறார்கள் ... சட்ட சட்டென்று பில்லா எடுக்கும் முடிவுகள் மூலமும் திரைக்கதையில் வேகத்தை கூட்டியிருக்கிறார்கள் ...  


ஹீரோயின்களை போலவே மற்ற குறைகளும் படத்தில் உள்ளன ... முதல் பாதியில் நாயகனின்  பாதிப்பு நிறையவே இருக்கிறது ... இரண்டு மணி நேரத்திற்குள் பில்லாவின் வாழ்க்கையை காட்டி விட வேண்டுமென்ற முனைப்பால் திரைக்கதையில் வேகத்தை விட  அவசரமே அதிகம் தெரிகிறது ... முதல்வர் கொலையில் நடக்கும் சதி , ஓமனக்குட்டனை அஜித் காப்பாற்றும் காட்சி போன்ற ஒன்றிரண்டை தவிர மற்றவையெல்லாம் பெரிய ட்விஸ்ட் ஏதுமில்லாமல் ப்ளாட்டாக இருக்கிறது ... அஜித் ரசிகர்களுக்கு படம் ரொம்பவே பிடிக்கும் , மற்றவர்களுக்கு பில்லா , மங்காத்தாவுக்கு ஒரு மாற்று குறைவென்றாலும் பில்லா 2 டல்லடிக்காத டானாக வே இருப்பான் ... நிச்சயம் ரசிகர்களுக்கு பில்லா 2 - டான் பார் ஃபேன்  ( DON FOR FAN ) 

ஸ்கோர் கார்ட் : 43  







10 July 2012

நான் ஈ - நான் ஸ்டாப் பேன்ட்ஸீ ...



மதொங்கா , மஹதீரா போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் , கவனிக்க வைத்த ட்ரைலர் இந்த இரண்டிற்காக படத்திற்கு சென்றால் சரியாக பயன்படுத்தப்பட்ட க்ராபிக்ஸ் , மரகதமணியின் இசை , செந்தில்குமாரின் ஒளிப்பதிவு ,  சுதீப்பின் நடிப்பு இவைகளெல்லாம் படத்தின் பால் நம்மை மேலும் ர்க்கின்றன ...

நானி (நானி>எதிர் வீட்டிலிருக்கும் பிந்துவை ">( சமந்தா;) காதலிக்கிறார் ... வெளியில் சொல்லாத காதல் பிந்துவுக்கும் நானியின் மேல் இருக்கிறது ... இதற்கிடையில் சமந்தாவை அடைய நினைக்கும் கோடீஸ்வரர்சுதீப் அதற்கு இடைஞ்சலாக இருக்கும் நானியை கொன்று விடுகிறார் ... மறு பிறவியில் ஈயாக உருவெடுக்கும் நானி சுதீப்பை கொன்று பழி தீர்த்தாரா ? தன் காதலியை வில்லனிடமிருந்து காப்பாற்றினாரா? என்பதே மீதிக் கதை ... கதையென்னவோ பல வருடங்களாக பார்த்துப் பழகிப் போன பழி வாங்கும் கதை தானென்றாலும் , மூன்றே முக்கியமான கேரக்டர்களை மட்டும் வைத்துக் கொண்டு அதிலும் குறிப்பாக வெறும் யை கதையின் நாயகனான நானியாகவே நம்மை பார்க்க வைத்த விதத்தில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தான் ஒரு அனுபவசாலி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ...


வெப்பம் படத்தில் முழு நேர ஹீரோவாக வந்தாலும் பெரிதாக கவராத நானி இந்த படத்தில் அரை மணி நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் ... சமந்தா க்யூட்டாக இருக்கிறார் , அளவாக நடிக்கிறார் , ஆனாலும் பட ஆரம்பத்திலிருந்தே சோகமாக இருப்பது போலவே படுகிறது ..


சுதீப்பை இந்த படத்திற்கு வில்லன் என்று சொல்வதை விட ஆன்டி  ஹீரோ என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் ... கிராபிக்ஸ் என்ன தான் கலக்கலாக இருந்தாலும் இவர் மட்டும் நடிப்பில் சோடை போயிருந்தால் படம் சப்பென்று ஆகியிருக்கும் ... படத்தின் ஆரம்பத்தில் ஒரு ஆன்டியை கரக்ட் செய்வதில் ஆரம்பித்து உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் ஈயை விரட்டுவது , ஈக்கு பயந்து சவம் போல உடம்பெல்லாம் போர்த்திக் கொண்டு படுப்பது ,





ஏனோ தானோ என்று க்ராபிக்ஸ் செய்து எரிச்சலை கிளப்பாமல் அருமையாக க்ராபிக்ஸ் செய்து அட போட வைத்த மேக்ஷிமா குழிவினரே படத்திற்கு முதுகெழும்பு ...மரகதமணியின் பின்னணி இசையும் , செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் படத்தின் மற்ற முக்கிய பலங்கள் ... சந்தானம் மற்றும் கிரேஸியை  பற்றி சொல்வதற்கு படத்தில் பெரிதாக ஒன்றுமில்லை ...


சட்டென்று ஆரம்பித்து உணர்வதற்குள் முடிந்து போன நானி - சமந்தா காதல் , இது மாதிரி பேண்டசி படங்களுக்கு லாஜிக்  பார்க்க கூடாது என்றாலும் " ஐ வில் கில் யு " என்றெல்லாம் எழுதிக் காட்டி வில்லனை ஈ மிரட்டுவது உட்பட நம் ஆறாம் அறிவை அதிகமாய் நோண்டிப்  பார்க்கும் சில காட்சிகள் , சொத்துக்காக சுதீப் பார்ட்னரை கொல்லும் போது  வீசும் தெலுங்கு வாடை போன்ற சில குறைகள் படத்தில் இருந்தாலும் ,  
" கோஸ்ட் " படத்திலிருந்து கதையை தழுவியும் கூட அதில் ஈயை புகுத்தி அடுத்தடுத்து என்ன ஆகுமோ என்று நம்மை ஒன்ற வைத்த திரைக்கதை , யுனிவர்சல் தீம் உள்ள கதையை அருமையாக கையாண்ட விதம் , முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பு , பின்னணி இசை , ஒளிப்பதிவு , க்ராபிக்ஸ் மற்றும் போரடிக்காமல் நம்மை கொண்டு செல்லும் பொழுதுபோக்கு அம்சங்கள் இவைகளெல்லாம் " நான் ஈ " யை நான் ஸ்டாப் பேன்ட்ஸீயாக பறக்க வைக்கின்றன ...


ஸ்கோர் கார்ட் - 43 

1 July 2012

அரையாண்டு சினிமா ( 2012 ) - ஓர் அலசல் ...


திரைப்பட தயாரிப்பாளர்கள் - தொழிலாளர்கள் இடையேயான இழுபறியால் இந்த  வருடம் பெரிய பட்ஜெட் படங்கள் பெரிதாய் வராத நிலையில் சிறிய முதலீட்டு படங்கள் நிறையவே ரிலீஸ் ஆகியிருந்தாலும் , அவற்றுள் வழக்கு எண் 18/9 , ராட்டினம் தவிர மற்றவையெல்லாம் வெறும் எண்ணிக்கைக்கு மட்டுமே உதவியிருக்கின்றன ...

வேலாயுதத்தை தொடர்ந்து  நண்பன்   வணிக ரீதியான வெற்றியை கொடுத்ததோடு , வழக்கமான பாணியிலிருந்தும்  சற்று மாறி விஜய்க்கு தோள் கொடுத்திருக்கின்றான்   ...  வேட்டை யுடிவியிடம் பெரிய விலைக்கு விற்கப்பட்டாலும் , திரைக்கதையை பொறுத்தவரை வேகத்தடையாகி போனதால்  ரசிகர்களிடம் பெரிய வரவேற்ப்பை பெறவில்லை ...  


மெரினா  மூலம் பாண்டிராஜ் ஒரு தயாரிப்பாளராக ஜெயித்த போதும் இயக்குனராக அவரின்   மெரினா  அலைகள்  கால் தொடவில்லை ...  எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் - 2012  இல் இருந்த  தோனி அரவான் இரண்டுமே அதை பூர்த்தி செய்யாமல் போனதில் வருத்தமே , அதே போல நல்ல முயற்சியான  அம்புலி அரை  நிலவாய் போனதும் துரதிருஷ்டமே ... 

கழுகு பறந்த உயரம் குறைவாக இருந்தாலும் பாடல்கள் மற்றும் எடுக்கப்பட்ட விதத்தால் இயக்குனர் சத்ய சிவாவிற்கு நல்ல பெயரோடு சேர்த்து அடுத்த படத்தையும் வாங்கிக் கொடுத்திருக்கிறது ... குறும்படமாக நல்ல பெயரை பெற்ற காதலில் சொதப்புவது எப்படி படமாகவும் சொதப்பாமல் வசூலை பெற்று குறும்படம் எடுப்பவர்களுக்கிடையேயும் ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது ... 



வெறும் பாடல்களும் , பப்ளிசிட்டியும் மட்டுமே படம் ஓடுவதற்கு போதுமானதாகி விடாது என்பதை முப்பொழுதும் உன் கற்பனைகள் , 3 இரண்டுமே நிரூபித்திருக்கின்றன , அதிலும்  3 - ஐஸ்வர்யா தனுஷின் கொலவெறி  என்று சொல்லுமளவிற்கு ரசிகர்களை வெறுப்பேற்றி விட்டது ...  கர்ணன்  நூறு நாட்களுக்கும் மேல் ஓடி காலத்தால் அழியாமல் எல்லோர் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துவிட்டான் ...

ராஜேஷ் தனக்கு எது வருமோ அதை சரியாக செய்து   ஒரு கல் ஒரு கண்ணாடி  யை டபுள் ஓகே செய்துவிட்டார் . இவருடைய பாச்சா அடுத்தமுறை பலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . இதே பாணிக்கு பெயர் போன சுந்தர்.சி யின்  கலகலப்பு வெற்றி பெற்றதிலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை ... அர்பன் ரொமாண்டிக் ஸ்டோரியை ஸ்டைலாக சொன்ன விதத்தில்  லீலை ஏமாற்றவில்லை என்றே சொல்லலாம்... 


தரமான படங்களின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் தீராத பசியை தீர்த்து வைத்த வகையில்  வழக்கு எண் 18/9 - வளர்ச்சிக்கான பாதை ...  ராட்டினம் சுற்றலாம்  என்ற போதும் அழகி , விடிவி வரிசையில் ஒரு படம் என்றெல்லாம் சொல்லுமளவிற்கு பெரிதாக ஒன்றுமில்லை .  கிருஷ்ணவேணி பஞ்சாலை  நேர்த்தியாக நெய்யப்பட்டிருந்தால் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருப்பாள்.

பில்லாவின் ரிலீஸ் தேதியையே ஒத்திப் போடுமளவிற்கு ஓவர்
பில்ட் அப்புடன் வந்த சகுனி ரசிகர்களை சலிப்பூட்டியதை தவிர வேறோன்றும் உருப்படியாக செய்யவில்லை ... வருட முடிவிற்குள் வருமென்று எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களுள் கமலின் விஸ்வரூபம் , அஜித் நடிப்பில் பில்லா 2 , விஜய் நடிப்பில் துப்பாக்கி , சூர்யா நடிப்பில் மாற்றான் இவைகளெல்லாம் மிக முக்கியமானவை ... 



Related Posts Plugin for WordPress, Blogger...