Showing posts with label அன்னா. Show all posts
Showing posts with label அன்னா. Show all posts

27 August 2011

அன்னாவின் விரதமும்,மன்மோகனின் மௌனமும்...

       
      இன்று  நாடாளுமன்ற இரு அவைகளிலும் அன்னாவின் மூன்று கோரிக்கைகளையும் ஏற்று தீர்மானம் நிறைவேற்ற ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டவுடன் நாடாளுமன்ற சிறப்பு விவாதம் முடிவுக்கு வந்தது.. இன்றோடு அண்ணாவும் தன் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார்...

       கீழ்மட்ட அரசு அதிகாரிகளையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருதல், அந்தந்த மாநிலங்களில் உள்ள லோகாயுக்தாவை நடைமுறைப்படுத்துதல்,மக்கள் சாசனம் போன்ற மூன்று கோரிக்கைகள் உட்பட ஜன் லோக்பால் மீதான சிறப்பு விவாதம் இன்று மக்களவையில் அனைத்து கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமாக நடைபெற்றது...

      கடைசியில் வாய்மொழி வாக்கெடுப்பின் மூலம் லோக்பால்   மசோதாவை நிலைக்குழுவிற்க்கு  அனுப்ப ஒருமனதாக ஏற்கப்பட்டது.. ஒருவழியாக 12  நாட்கள் எந்த சுயநலமுமில்லாமல் உண்ணாவிரதம் இருந்த அன்னாவிற்கு  வெற்றி கிடைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்..இது அவருக்கான வெற்றி மட்டுமல்ல ஊழழுக்கு எதிரான மக்களின் மனப்பான்மைக்கு கிடைத்த  வெற்றி..

      இதை முழுமையான வெற்றி என்று இப்போது சொல்ல முடியாவிட்டாலும் என்னென்னமோ செய்து இதை கலைத்து விட வேண்டும் என நினைத்த மத்திய அரசையே மடிய வைத்ததால் நிச்சயம் வெற்றிக்கான ஆரம்பம் என சொல்லலாம்..
                         
     இந்த 12 நாட்களில் காங்கிரஸ் செய்த கண்கட்டு வித்தைகள் தான் என்னென்ன?..சென்ற முறை அன்னா உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட  போதே நமக்கு  
அன்னாவின் உண்ணாவிரதம் வெற்றியா ?  என்ற சந்தேகம் எழாமல் இல்லை...              
      
     எதிர்பார்த்தது போலவே ஜூன் மாத கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றப் போவதாக அண்ணாவிடம் வாக்குறுதி அளித்த காங்கிரஸ் அதை வழக்கமான தேர்தல் வாக்குறுதி போல காற்றில் பறக்க விட்டது..
                   
     முதலில் உண்ணா விரதத்திற்கு அனுமதி மறுத்து அண்ணாவை கைது செய்து திகாரில் அடைத்த மத்திய அரசு நாடு முழுவதும்  கிளம்பிய எதிர்ப்பை பார்த்து பயந்து பின் மூன்று நாட்கள் , பத்து நாட்கள்    என பேரம் பேசி கடைசியில் 15  நாட்களுக்கு ஒப்புக்கொண்டது.. 

      இந்த முறை அன்னா இவ்வளவு பிடிவாதமாக இருப்பார் என்றோ,முன்பு இருந்ததை விட நாடெங்கும் மக்களின் குறிப்பாக இளைஞர்களில் ஆதரவு கிடைக்குமென்றோ மத்திய அரசு நிச்சயம் எதிர்பார்த்திருக்காது... அனாவசியமான விசயங்களுக்கு  முக்கியத்துவம் கொடுக்கும் மீடியா இந்த முறை முழு கவனத்தையும் அன்னா மேல் திருப்பியது அவர்களுக்கு மேலும் சங்கடத்தை உண்டாக்கியிருக்கும் ...

      2 ஜி அலைவரிசை , காமன்வெல்த் ,ஆதர்ஷ் குடியிருப்பு இப்படி எல்லாவற்றிலும் ஊழலை உரம் போட்டு வளர்த்த காங்கிரஸ் , இதெல்லாம் தெரிந்தும் தெரியாமல் , அறிந்தும் அறியாமல் மௌனம் காத்த மன்மோகன் சிங் , இவருக்கு  வாயாக செயல்படும் கபில்சிபில் , லோக்பாலுக்கு இப்போது அவசியம் என்ன ? தேர்தல் கமிசன் போல தனி அமைப்பை ஏற்படுத்தலாமே என்று அறிவு ஜீவி போல அவ்வப்போது பேசும் ராகுல் இவர்களெல்லாம் செய்த கூத்துக்களை மறக்க முடியுமா ?
                            
      எந்த ஊழல் பற்றி கேட்டாலும் எனக்கு தெரியும் , ஆனா தெரியாது என "என்னத்த" கண்ணையா போல விளக்கம் சொல்லும் பிரதமர் கடைசியாக நான் நேர்மையானவன் , இந்த 41 வருட அரசியல் வாழ்க்கையில் என்னையோ என் குடும்பத்தையோ யாரும் குறை கூற முடியாது என கொஞ்சம் வாய் திறந்தார்.. 

       இதிலிருந்து இவரோ,இவர் குடும்பமோ எந்த ஊழலிலும் நேரடியாக ஈடுபட்டதில்லை , ஆனால் மற்றவர்கள் இவருக்கு தெரிந்தே  ஏதாவது செய்தால் அதற்கு இவர் பொறுப்பல்ல என்று சொல்வது மட்டும் தெளிவாகிறது..என்ன ஒரு நேர்மை ? .

      ஒரு பக்கம் மன்மோகன் எந்த விசாரணைக்கும் தயார் என்பாராம், ஆனால் கபில்சிபில் பிரதமரை லோக்பால் வரையறைக்குள் கொண்டு வரக்கூடாது என வாதாடுவாராம்..அன்னா அணியுடன் எங்கே வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் பேச தயார் என்று பொதுக்கூட்டத்தில்   சொல்வார் பிரதமர்..ஆனால் அன்னா அணியினரிடம் 
அதனை தெரியப்படுத்துவதில் மட்டும் அவருக்கு ஏனோ அப்படியொரு    தயக்கம்...
         
                          
      இப்படி  லோக்பாலை கொண்டு வருவதை விட தட்டிக் கழிப்பதிலேயே மத்திய அரசின் கவனம் முழுவதும்   இருந்தது..இதையும் மீறி இந்த தீர்மானம் நிறைவேறியதற்கு பி.ஜே.பி,இடதுசாரிகள் உட்பட எதிர்கட்சிகள் கொடுத்த ஆதரவும் மிக முக்கிய காரணம்...  

     முதலில் அன்னா மீதே ஊழல் புகார் சொல்லிப் பார்த்த காங்கிரஸ் பின் அது எடுபடாமல் போகவே ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவாளர், மோடியை பாராட்டினார் என்று கூறி பின் மத சாயம் பூச பார்த்தது.. ஊழல் அற்ற முதல்வராய் இருப்பதோடு மட்டுமல்லாமல் குஜராத் மாநிலத்தையே முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கும் மோடியை அவர் பாராட்டியதில் என்ன தவறு ?..பாவம் எந்த ஒரு விசயமாக இருந்தாலும் போலி மத சார்பின்மையை புகுத்தும் காங்கிரஸ் இதை தவிர வேறெந்த யுக்தியை கையாள முடியும் ?
                  

   தனி மனிதனாக எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் அன்னா தொடங்கிய போராட்டத்திற்கு நாடு முழவதும் கிடைத்த வரவேற்பு ஊழலுக்கு எதிராக மக்கள் விழித்தெழ தொடங்கி விட்டார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது ...இனிமேல் "ஆம்  ஆத்மி" என்று சொல்லி யாராவது வந்தால் அவர்களுக்கு ஆப்பு தான்...

      2 ஜி அலைவரிசை ஊழல்  உலகையே உலுக்கிய நேரத்தில்  நிச்சயம் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கான விதை இங்கிருந்து தான் முளைத்து இருக்க வேண்டும் ...ஆனால் சென்ற முறையை போல அல்லாமல் இந்த முறை தமிழகத்தில் இதற்கு கிடைத்த வரவேற்பு அலாதியானது...

     முன்பே சொன்னது போல லோக்பால் மசோதாவை நிறைவேற்ற நிலைக்குழுவிற்கு  அனுப்பியதாலும் , அதன் மூலம் அன்னா தன் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டதாலும் மட்டுமே   இதை முழு வெற்றி என கொண்டாடி விட முடியாது..ஏனெனில் பாதி கிணறு மட்டுமே தாண்டியிருக்கிறோம்...

     லோக்பால் மூலம் ஊழலை கட்டுப்படுத்துவதோடு மட்டும் நின்று விடாமல் ஊழல் புரிபவர்களுக்கும் , அந்த கட்சிக்கும் தகுந்த தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் ..மேலும் வெளி நாடுகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரம் கோடி கருப்பு பணமும் முழுமையாக இங்கு கொண்டு    வரப்பட வேண்டும்
என்பதும்  பொது மக்களின் கோரிக்கை ..



9 April 2011

அன்னாவின் உண்ணாவிரதம் வெற்றியா ?

             நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து நாட்டையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார் 72 வயது இளைஞர் அன்னா ஹசாரே ...ஒரு கிராமத்தையே முன் மாதிரியாக மாற்றி காட்டியதற்காக 1992  ம் ஆண்டு "பத்ம பூஷன்"   வாங்கிய சமூக தொண்டர் இந்த "அன்னா ஹசாரே "..
                  
             ஊழலுக்கு எதிராக "ஜன் லோக்" மசோதாவை கடுமையான சட்ட திருத்தங்களுடன் நிறைவேற்றக்கோரி அற வழியில் அவர் செய்த போராட்டத்திற்கு மத்திய அரசு இப்போது பணிந்திருக்கிறது...ஜூன் மாத பாராளுமன்ற கூட்டத்தொடரில் இதனை நிறைவேற்றுவதாக உறுதியும் அளித்திருக்கிறது ..
                .தனி மனிதனாக எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் அவர் தொடங்கிய போராட்டத்திற்கு நாடு முழவதும் கிடைத்த வரவேற்பு ஊழலுக்கு எதிராக மக்கள் விழித்தெழ தொடங்கி விட்டார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது ...
               "அண்ணா" வழியில் வந்ததாக சொல்லிக்கொள்ளும் அரசியில்வாதிகள் தமிழகத்தில் ஊழலுக்கு உரம் போட்டு வளர்த்துக் கொண்டிருக்க அங்கு நடந்த அன்னாவின் உண்ணாவிரதம் ஜனநாயகவாதிகளுக்கு  ஒரு உற்சாக டானிக் .... 
                                   
     2 ஜி அலைவரிசை ஊழல் மூலமாக உலகமே தமிழகத்தை கேவலமாக  பார்த்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நிச்சயம் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கான விதை இங்கிருந்து தான் முளைத்து இருக்க வேண்டும் ...ஆனால்  வாக்குக்கு பணம்  கொடுத்தால் கூட வாங்கிக்கொள்ளுங்கள் ஏன் என்றால் அது உங்கள் பணம் என்று மக்களைப் பார்த்து
கூறும் அளவிற்கு இங்கு ஊழல் பழகி விட்டது வேதனைக்குரிய விஷயம் ... 
        மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஒத்துக்கொண்டதாலேயே இதனை ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கான முடிவாக எடுத்துக்கொள்ளலாமா ? நிச்சயம் முடியாது ....ஏனென்றால் மகளிர் இட ஒதுக்கீடு பல முறை விவாதிக்கப்பட்ட 
போதும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது நாடறிந்த விஷயம் ...
           அரசியல்வாதிகளின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாது என்பது நிதர்சன உண்மை ..
  .     இந்த   மசோதாவை நிறைவேற்றுவதற்க்கான   திட்டக்குழுவில் "அன்னா", "பூஷன்" போன்றவர்கள் இடம் பெற்றிருந்தாலும்  மத்திய அரசின் அமைச்சர்கள் ஐந்து பேர் இடம் பெற்றிருக்கிறார்கள் ...இவர்களுக்கு எதிராக பெரிய அளவில் எந்த ஊழல் வழக்கும் இல்லா விட்டால் கூட இவர்கள் சார்ந்திருக்கும் கட்சி ஊழலையே மொத்த குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பதை உலகமே அறியும் ....
                               
          அதிலும்  2 ஜி  அலைவரிசை ஊழலில் அரசிற்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை  என்று கூசாமல் பொய் சொன்ன கபில் இந்த குழுவில் இடம் பெற்றிருக்கிறார் ...            லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைவராக தாமசை நியமித்ததற்கு முழு பொறுப்பையும்    நான் ஏற்றுக் கொள்கிறேன் ,கூட்டணி தர்மத்திற்காக வளைந்து கொடுக்க வேண்டி இருக்கிறது என்றும் ஒப்புக்கொண்டதன் மூலம் அப்பழுக்கற்றவர் என்று எல்லோரும் நினைத்து கொண்டிருந்த மன்மோகன் சிங்கின் நேர்மை
மண்ணைக்கவ்வியதையும் நாம் அறிவோம் ... 
          மசோதா நிறைவேற்றப்பட்டால் ஊழலுக்கு எதிராக பிரதமர் உட்பட உயர் பதவி வகிக்கும் எவரையும் கேள்வி கேட்கும் உரிமை குழுவிற்கு வந்து விடும்.  அது மட்டும் அல்லாமல் ஒரு வருடத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும்..ஊழல் செய்தது நிரூபணம் ஆனால் கொள்ளையடித்த பணம் முழுவதும் 
பறிக்கப்படும் என்பவை இதன் மற்ற சாரம்சங்கள் ...
              .
           ஆனாலும் எவ்வளவு பெரிய ஊழலாக இருந்ததாலும் அதற்கு எதிராக கொடுக்காப்படும் 
கடுங்காவல் தண்டனை மட்டும் போதுமானதா ? அந்த ஊழல் பணம் மூலம் தங்களை வளர்த்துக்கொண்ட மற்றவர்களுக்கு எந்த தண்டனையும் கிடையாதா ?
ஊழல் புரிபவரை அமைச்சராக்கிய கட்சிக்கு என்ன தண்டனை ? ஊழலுக்கு நேரடியாகவோ , மறைமுகமாகவோ , கூட்டணி தர்மத்திர்க்காகவோ ஒத்துழைப்பு கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கும் , தொழிலதிபர்களுக்கும் 
என்ன தண்டனை ?....இப்படி பல கேள்விகள் நம்முள் எழாமல் இல்லை ...
               அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சொன்னால் போதுமா ?..இலவசமாக கொடுக்கிறார்கள் 
என்பதற்காக எல்லாம் இருந்தும் அதை ஓடி ஓடி வாங்கியது குற்றம் இல்லையா ?....நம்முடைய காரியத்தை சாதித்துக்கொள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதும் , ஊழல் நடக்கிறது என்று தெரிந்தும் அதற்கு எதிராக
முறையிடாமல் ஒதுங்கிப்போவதும் குற்றம் இல்லையா ? இப்படி பல கேள்விகள் நம்முள் எழாமல் இல்லை ....
         முன்பே சொன்னது போல் இது ஊழலுக்கு எதிரான முடிவு அல்ல ...ஒரு ஆரம்பம் .."அக்னிக் குஞ்சொன்று கண்டேன் " - மகாகவியின் பாடலுக்கு ஏற்ப ஒரு தீப்பொறியின் ஆரம்பம் ....
          மசோதா நிறைவேற்றப்பட்டு , ஊழல் புரிபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டு, ஊழல் முற்றிலும் மலிந்து இன்னுமொரு "அன்னா" இதற்காக "உண்ணா" விரதம் இருக்கும் நிலை ஏற்படாமல் இருப்பதே
முழுமையான வெற்றி ...
                  
                  

        
                 
Related Posts Plugin for WordPress, Blogger...