Showing posts with label STORY. Show all posts
Showing posts with label STORY. Show all posts

12 August 2012

இன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...



ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்தில் அவுட்டு வந்து விடுவான் ... அவுட்டு வருவதால் என் வாழ்க்கை மாறப்போவதில்லை , ஆனால் அவன்  கொண்டு வரும் மூணு கோடி ரூபாய் என் வாழ்க்கையை மாற்றப் போகிறது ... அவன் வருவதற்குள் நீங்கள் என்னை பற்றி தெரிந்து கொள்வது அவசியம் ... 

வாழ்க்கைக்கு எது முக்கியம் ?  மன நிம்மதி , சந்தோசம் , சந்ததி , பதவி , புகழ் என்று எவ்வளவையோ அடுக்கிக்கொண்டே போகலாம் , ஆனால் இவையெல்லாம் பணத்திற்கு முன்னாள் பம்மாத்து என்பது என்னைப் போல வாழ்க்கையில் அடிபட்ட எவனுக்கும் நன்றாகவே தெரியும் ... ஆமாம் பணம் மட்டும் தான் எனது கடவுள் , கர்த்தா , குரு எல்லாமே ... பணம் இல்லாததால் தான் பெற்றோர்களால் என்னை நினைத்தது போல வளர்க்க முடியவில்லை ... அவர்களிடம் பணம் இல்லாததை பற்றி நான் குற்றம் சொல்லவில்லை , ஆனால் அதை அடைவதற்காக அவர்கள் எந்த முயற்சியையும் செய்யாமல் விலங்குகள் போல வாழ்ந்துகொண்டிருந்ததை தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை ... 

அதனால் தான் எனக்கு விவரம் தெரிந்த வயதுக்கு மேல் அவர்களோடு இருக்க முடியாமல் சென்னைக்கு ஓடி வந்துவிட்டேன் ... கெட்டும் பட்டணம் போ என்பார்கள் , நான் பெரியவர்கள் சொன்னதில் செய்தது  இதை மட்டும் தான் ... முதலில் ஏதேதோ வேலை செய்து வயிற்றை கழுவிக் கொண்டிருந்த  என் வாழ்க்கை  பால் சேட்டின் நட்பு கிடைத்த பிறகு தான் மாறத்தொடங்கியது ... என் போன்ற படிக்காதவர்கள் கூடிய விரைவில் பணம் பார்ப்பதென்பது நடக்காத காரியம் , எனவே என்னைப் பொறுத்தவரை எப்படி பணம் சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமில்லை , எப்படியோ சம்பாதிக்க வேண்டும் ... சேட் மூலமாக இரண்டு மூன்று பொருட்களை கை மாற்றி விட்ட போது நல்ல பணம் கிடைத்தது , கிடைத்த  பணத்தை நண்பர்களுடன் உடனே குடித்தழித்தேன்.

இங்கே நண்பர்கள் என்று யாரையும் சொல்ல முடியாது , கடத்தல் தொழிலில் எவனும் எப்பொழுது வேண்டுமானாலும் எதிரியாக மாறலாம் , இருந்தாலும் ஒன்றாக அமர்ந்து குடிக்கும் போது எல்லோரும் சந்தோசமாகவே இருப்போம் ... குடிக்கு எவ்வளவோ சைடிஷ் இருந்தாலும் எங்களுக்கு அவுட்டு தான் ஊறுகாய் ... அவனுக்கு அவுட்டு என்பது இயற்பெயரா அல்லது யாராவது வைத்த பெயரா என்றெல்லாம் தெரியாது , ஆனால் நாங்கள் அப்படித்தான் கூப்புடுவோம் ... ஆறடிக்கு வளர்ந்திருந்தாலும் அவுட்டு அறிவா கிலோ என்ன விலை என்று கேட்பான் , அதனால் தான் சில ரிஸ்கான வேலைகளை அவனிடம் தள்ளி விடுவோம் , எங்களைப் பொறுத்தவரை அவுட்டு ஒரு பலிகடா ... இங்கே பாவ , புண்ணியமெல்லாம் பார்த்தால் பிழைப்பு நடத்த முடியாது ... 

அவுட்டு தான் இப்படி ஆனால் அவன் மனைவி அழகி , பேரழகி ... ஒரு முறை நல்ல போதையில் பெண்களை பற்றிய பேச்சு வந்தது , நானும் சேட்டும் போதையில் இருக்கும் போது மட்டும் தான் பெண்களை பற்றி பேசுவோம் , அது என்னவோ அந்த வஸ்து உள்ளே போய் விட்டாலே காம வெறி தலைக்கு ஏறி விடுகிறது...சேட் வழக்கமாக கூட்டிச் செல்லும் பெண்ணிடம் போக வேண்டாமென்று நான் ஏற்கனவே முடிவு செய்திருந்தேன் , என்னமோ சலித்து விட்டது , ஆனால் சேட்டுக்கு மட்டும் அவள் நடிகை என்பதாலோ என்னமோ அலுக்கவே இல்லை ... இந்த முறை நான் பிடிவாதமாக மறுத்துவிட்டேன் , வேறு எங்காவது போகலாம் என்று முடிவு செய்த பின் சேட் என்னை ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்றான் ... நான் அவளை பார்த்தவுடன் அசந்துவிட்டேன் , அவள் அவ்வளவு அழகு ... ஆனால் அவள் அவுட்டுவின் மனைவி என்று தெரியவந்ததும்  கொஞ்சம் அதிர்ச்சி , சேட் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாத போதே அவன் அடிக்கடி இங்கே வருகிறான் என்று தெரிந்து கொண்டேன் ...

" ஒன்னும் யோசிக்காத  இதெல்லாம் அவுட்டுக்கு தெரியாது , சேட்டுக்கு அப்புறம் நீ தான்" அவள் எத்தனை பேரிடம் இப்படி சொல்லியிருப்பாள் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு எனக்கு அப்போது நேரமில்லாததால் நான் வந்த வேலையில் இறங்கினேன் ... எல்லாம் முடிந்த பிறகு சேட்டுடன் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அவுட்டு வந்தான் .. " எப்போ வந்தீங்க சார் , சொல்லியிருந்தா நானே உங்கள கூட்டியாந்திருப்பேனே"  அவன் சொன்ன போது என் கண்கள் அவனை நேரடியாக பார்க்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டது ... அங்கிருந்து இருவரும் திரும்பி வரும் வழியில் தான் சேட் என்னிடம் அந்த விஷயத்தை சொன்னான் ... 

இது வரை சின்ன சின்ன சரக்குகளை கை மாற்றி விட்டு சில லட்சங்களை பார்த்த எங்களுக்கு இது போட்டியில் கலந்து கொள்ளாமலேயே கைகளில் கிடைக்கப் போகும் மூணு கோடி ... இந்த முறை கடத்தப் போவது விலையுயர்ந்த போதை வஸ்து , மாட்டினால் தொலைந்தோம் , அவ்வளவு சீக்கிரம் வெளியே வர முடியாது ... ஆனாலும் இந்த வாய்ப்பை விட எங்களுக்கு மனதில்லை என்பதால் ரிஸ்க் எடுக்க முடிவெடுத்தோம் ... வழக்கம் போல அவுட்டுவை வைத்து பொருளை கை மாற்றிவிடலாம் , அவன் மாட்டினாலும்  எங்களுக்கு பிரச்சனையில்லை , அவன் உயிரே போனாலும் எங்களை காட்டிக் கொடுக்க மாட்டான் ... இருவரும் முடிவு செய்த பின் அவுட்டு வீட்டிற்கு திரும்பி சென்றோம் ... 

வழக்கம் போல சில ஆயிரங்களை கொடுத்து விஷயத்தை சாதித்துக் கொள்ளலாம் என்று நினைத்த எங்களுக்கு அவுட்டுவின் மனைவி பெரிய ஷாக் கொடுத்தாள்.. "உயிரை பணயம் வச்சு உங்களுக்காக வேல செய்யுராறு , அதான் இந்த தடவ வரதுல சரி  பங்கு கொடுத்தீங்கன்னா , சொந்த ஊருக்கே போயி செட்டிலாயிடலாம்னு இருக்கோம் " அவள் தீர்க்கமாய் சொன்னதிலிருந்தே அவுட்டு மாதிரியில்லை என்று தெளிவாக தெரிந்தது ... " நீ நினைக்கிற மாதிரியெல்லாம் பெருசா ஒண்ணுமில்ல, வேணுமின்னா எப்பவும் தரத விட ஜாஸ்தியா தரோம் "  சேட் சொன்னவுடன்  , அவள் கோணலாய் சிரித்தபடி" என்ன மூணு கோடியா " என்று கேட்ட போதே அவள் நிறைய விஷயம் தெரிந்தவள் என்பது எங்களுக்கு தெளிவாக புரிந்தது ... நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம் ... எங்கள் இருவருக்குள்ளும் ஒரே எண்ணம ஓடவே நாங்கள் அவள் சொன்னபடி பங்கை இரண்டுக்கு பதில் மூன்றாய் போட முடிவெடுத்தோம் ... இதில் எதிலுமே சம்பந்தம் இல்லாதது போல் அவுட்டு எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ... அவனுக்கு இந்த பணம் ரொம்ப அதிகம் தான் என்றாலும் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை ... 

" மூணு கோடி கைக்கு வந்ததும் முதல்ல அவுட்டையும் , அவளையும் போட்டுரனும் " நான் மனதில் நினைத்ததையே சேட்டும் சொன்னான் ... நான் ஆமாம் என்பது போல தலையாட்டினேன் , அந்த நொடி சேட்டையும் போட்டுவிட்டால் மூணு கோடியும் எனக்கே என்று என் மனம் நினைக்கும் போதே உடல் சிலிர்த்தது ... இதோ நினைத்தது படியே அவுட்டு வேலையை முடித்துக்கொண்டு பணத்தோடு வந்து கொண்டிருக்கிறான் என்று சேட் செல்போனில் சொன்ன போதே என் திட்டத்தை மனதிற்குள் நான் பட்டை தீட்டிக் கொண்டிருந்தேன் ... சந்தோசமோ , துக்கமோ சேட் சரக்கடிக்காமல் இருக்க மாட்டான் , நான் ஏற்கனவே திட்டமிட்டபடி சரக்குடன் விஷத்தை கலந்து கொடுத்துவிட்டால் சேட் மூர்ச்சையாகி விடுவான் , அவுட்டு சரக்கடிக்க மாட்டான் , எனவே அவன் வந்தவுடன் பணத்தை எடுத்துக் கொண்டு கைத்துப்பாக்கியை  வைத்தே அவன் கதையை  முடித்து விடலாம் ... 

எங்கள் திட்டப்படி சேட் அவள் மனைவியை இந்நேரம் முடித்திருப்பான் , நினைக்கும் போதே என் செல்போன் சினுங்கியது ...  " சொல்லு சேட் " அவன் விஷயத்தை சொன்னவுடன் என் காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது ... " சரி நான் அவ பாடிய வர வழில டிஷ்போஸ் பண்ணிடுறேன் , நீ நம்ம அயிட்டத்த வாங்கி வை " அவன் அயிட்டமும் அவனுக்காக நான் வாங்கிய அயிட்டமும் தயாராகவே இருந்தன ... 
" வா சேட் எல்லாம் ரெடியா இருக்கு " போனை வைத்துவிட்டு ஒரு முழு சிகரெட்டை முழுவதுமாய் புகைத்தேன் ... சேட் வந்தவுடன் கத்தியின்றி ரத்தமின்றி அவன் கதை முடிந்தது , வாயெல்லாம் நுரையுடன் ஒரு பக்கம்  கோணிக் கொண்டே அறைக்குள் செத்துக் கிடந்தவனை வெறித்துப் பார்த்தபடியே இரண்டு சிப் அடித்தேன் ... 

எனக்கு புது வாழ்க்கையை காட்டியவனின் வாழ்க்கையை முடித்துவிட்டேன் , லேசாக ஏதோ ஒரு உணர்வு என்னைத் தாக்க அதை தவிர்ப்பதற்காக டி.வி யை ஆன் செய்தேன் ... வெஸ்டர்ன் ஆல்பத்திலிருந்து சுட்ட பாடலுக்கு தமிழ் பட ஹீரோயின் இடுப்பை ஆட்டிக் கொண்டிருந்தாள் ... டி.வி சத்தத்தை மீறி கதவை தட்டும் சத்தம்  கேட்கும் போதே வந்தது அவுட்டு தான் என்று எனக்கு விளங்கியது ... " இருடா வரேன் " சேட் செத்துக் கிடந்த அறையை சாத்தி விட்டு கதவை நோக்கி நான் போவதற்கு முன் டேபிளின் மேல்    துப்பாக்கி  இருப்பதை ஒரு முறை உறுதி செய்து கொண்டேன் ... " வாடா ஏதாவது சாபுட்றையா " வேகமாக மண்டையை ஆட்டினான் .. அவனிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு சேட்டுக்காக வாங்கி வைத்திருந்த உணவு பொட்டலத்தை அவனிடம் கொடுத்தேன் ... 

சேட் தான் சாப்பிடமாலேயே போய் சேர்ந்து விட்டான் , இவனாவது சாபிடட்டுமே என்ற எண்ணத்தை விட அவன் சாப்பிட்டு முடிப்பதற்குள் பணத்தை எண்ணி முடித்து விடலாம் என்ற எண்ணமே எனக்கு மேலோங்கியிருந்தது ... பணத்தை பல தடவை மோர்ந்து பார்த்துக் கொண்டேன் , அதை அழகாக பைக்குள் அடுக்கி வைத்து விட்டு கைகளில் உறைகளை மாட்டிக் கொண்டேன் , அவன் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ... வாசல் கதவு தாழ்ப்பாள் சரியாக  போட்டிருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பார்த்து விட்டு திரும்பிய போது தான் கூர்மையான ஏதோ ஒன்று என் வயிற்றுக்குள் வேகமாக இறங்கியது ... 

கைகளில் கத்தியுடன் அவுட்டு நின்று கொண்டிருந்தான் , அவன் கழுத்தை நெறிக்க நான் நினைப்பதற்குள் மறு முறை முன்பை விட வேகமாக கத்தி என் வயிற்றுக்குள் இறங்கியது ... மயக்கத்தில் கண்கள்  சொருக அவன் மேல் விழுந்த என்னை தள்ளி  விட்டு விட்டு  அவுட்டு பணம் இருந்த அறையை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருந்தான் ... கண்கள் சொருகி செத்துக் கிடந்த சேட் ஒரு முறை என் நி...னை..வு...க்..கு  வ..ந்....தா ... 

8 June 2012

சுமைகள் ... - சிறுகதை



தினமும் ஜாக்கிங் போவது என் வழக்கம் . கைகளை வேகமாக வீசிக்கொண்டு நடக்கும் பெரியவர் , சீரியல் கதைகளை பேசிக்கொண்டு ஓட்டமும் , நடையுமாக போகும் குண்டு பெண்கள் , வானம் தலையில் விழுந்து விடுமோ என்ற பயத்தில் அண்ணாந்து பார்த்துக் கொண்டே ஓடும் நடுத்தர வயதுக்காரர் என விதவிதமான மனிதர்கள் , விதவிதமான முகங்கள் . உடல் ஆரோக்கியம் என்பதை விட காலையில் இளஞ்சூரியனின் வெப்பத்தை வாங்கிக்கொண்டு , சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே போவதென்பது ஒரு அனுபவம் . இதை எத்தனை பேர் அனுபவிக்கிறார்கள் என்று தெரியவில்லை . உடலை விட வேகமாக ஓடும் மன ஓட்டங்கள் , முன்னோக்கி ஓட பின்னோக்கி போகும் சிந்தனைகள் .

நம் எல்லோரையும் விட வாழ்க்கை மிக வேகமாக ஓடுகிறது . அதற்கு எந்த கவலையுமில்லை . பல கோடி ஆண்டுகளாய் அது எல்லோரையும் பார்த்துக்கொண்டே தானிருக்கிறது . நாம் பிறப்பதற்கு முன் என்னவாய் இருந்தோம் , இறப்பிற்கு பின் எங்கே போகிறோம் என்ற கேள்வியை அநேகமாய் எல்லோரும் ஒரு சமயமாவது நமக்கு நாமே கேட்டுக்கொண்டிருப்போம் . இது போன்ற கேள்விகள் கடவுளின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொண்டுதான் போகின்றன . தீராத ஆசை கொண்ட ஆன்மாவிற்கு அடுத்த பிறவி நிச்சயம் உண்டு என்கிறார்கள் . எல்லோருக்கும் அடுத்த பிறவி உண்டா ? சென்ற பிறவியில் நாம் யார் ? மனிதனாய் தான் பிறந்திருப்போமா ? மனிதப்பிறவி பெருமிதம் கொள்ளத்தக்கது தானா ? தெரியவில்லை . பதில் தெரியாத கேள்விகளை அசை போட்டுக்கொண்டே ஓடுவதிலும் ஒரு தனி சுகம் .கண்டதை சிந்திக்கவில்லை என்றால் மனிதனாய் பிறந்து என்ன பயன் ?

ஏதேதோ நினைப்பில் ஓடிக்கொண்டிருக்கும் போது தான் அந்த கூட்டத்தை பார்த்தேன் . சுகம் ,துக்கம் என எல்லாவற்றிற்கும் மனிதர்கள் கூடுகிறார்கள் , ஆனாலும் தனியாய் தான் நிற்கிறார்கள் . அடிபட்டுக் கிடக்கும் சக மனிதனை பார்க்கும் போதும் ஆபீசிற்கு டைம் ஆகிவிட்டதா என்று மணிக்கட்டை பார்க்கும் பரபரப்பான மனிதர்கள் தான் இங்கு அதிகம் . அங்கு கூடியிருந்த சிறு கூட்டம் மனிதனுக்கானது அல்ல . அது ஒரு பூனையை வேடிக்கை பார்க்க சேர்ந்த கூட்டம் .

" ஆக்கும் , தெனமும் திருட்டு பால் குட்சிக்கினுர்ந்தது , இன்னிக்கு நல்லா சொம்புவுள்ள தலைய விட்டு மாட்டிக்கிச்சு " , பால் வித்தியாசமின்றி கூட்டத்துடன் உரசிக்கொண்டே சொன்னாள் அந்த பெண் . " கரிக்கிட்டா சொன்னம்மே " சொல்லிக்கொண்டே அவன் திருட்டுத்தனமாய் ஏனோ கண்ணடித்தான் . " இத்தோட ஒரே ரோதன சார் , தெனமும் என் வூட்டு மீன புட்சிக்குனு போயிடும் , இன்னிக்கு நல்லா மாட்டிக்கிச்சு " மீன் போன துக்கத்தை விட பூனை மாட்டிக் கொண்டதில் அவளுக்கு சந்தோசம் போல இருந்தது . " இப்படியே வுட்டா செத்துரும் " கூட்டத்தை ஏக்கத்துடன் பார்த்தான் அந்த சிறுவன் .

சொம்பில் கையை வைத்து இழுக்க பூனை அதிகமாய் திமிறியது . தினமும் பாலும் , மீனும் தின்று அதன் உடல் கொஞ்சம் கனத்திருந்தது . " ஐயோ , நகத்தால கீறிட்டது சார் " சொல்லிக்கொண்டே அவர் கையை விட பொத்தென்று விழுந்தது அந்த பழுப்பு நிற பூனை . ஏதோ ஆர்டர் கொடுத்து செய்தது போல தன் தலையோடு ஒட்டிக்கொண்டு இருந்த சொம்பை பூனை முன்னுக்கும் பின்னுக்கும் பலமாக ஆட்டிக் கொண்டிருந்தது . " பூனை முடி கொட்டினா பாவம் " மனதின் ஓரமாய் வந்த நினைப்பை ஓரங்கட்டி விட்டு இடுப்போடு பூனையை அணைத்து தூக்கினேன் . பத்தடி தூரத்தில் தான் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது . அவர்கள் ஏதாவது சாதனத்தை வைத்து பூனையை காப்பாற்றிவிடுவார்கள் என்பது என் நம்பிக்கை .

பூனையின் சாவை விட இப்படியே விட்டுவிட்டால் சாவிற்கு முன் அது அடையப்போகும் வேதனையை நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது . பூனையின் தலையை ஆக்ரமித்துக் கொண்ட சொம்பை போல் மனதிற்குள் தான் எத்தனை சுமைகள் . படிக்காதவனுக்கு படிப்பு , படித்தவனுக்கு வேலை , வேலைக்கு போகிறவனுக்கு சம்பளம் , சம்பளக்காரனுக்கு அன்றாடம் ஆகும் செலவுகள் , பணம் நிறைய இருப்பவனுக்கோ அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமேயென்ற கவலை . ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை , அது தரும் சுமை . பாலிற்கு ஆசைப்பட்டு மாட்டிக்கொண்ட பூனை போல நாமும் எதிலோ மாட்டிக்கொண்டு அதை விலக்கி வைக்க முடியாமல் சுமைகளுடனே சுற்றிக்கொண்டிருக்கிறோம் .

" அழுத்தி பிடிங்க சார் , நான் டிரில்லிங் மிசின்ல கட் பண்ணிர்றேன் " . அழுத்தி பிடிக்க பிடிக்க பெற்றோர் மேல் நம்பிக்கை இல்லாத டீன் ஏஜ் பசங்களை போல அது மேலும் திமிறியது . இது வேலைக்காவாது என்பது போல கொஞ்சம் பேர் கலையத்தொடங்க பூனை பிழைக்குமா ? சாகுமா ? என சிலர் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தார்கள் . " அதோட விதி அவ்வளவு தான் சார் " எனக்கு ஒத்தாசையாக இருந்த நபர் தனக்கு நேரமாவதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார் . மரணம் பெரிய விமோசனம் என்கிறார்கள் , அது சாவை சந்திப்பவனுக்கு தான் . சாவை அருகிலிருந்து பார்ப்பவர்களுக்கு அல்ல .

" கொஞ்சம் பொறுமையா இருந்தா காபாத்திரலாம் " என் குரல் ஏனோ கம்மியது . " யாராவது ஆஸா ப்ளேட் இருந்தா கொடுங்க " எனக்கு நம்பிக்கை கொடுத்தது அந்த குரல் . அந்த ஆஸா ப்ளேட் கூட உடனே கிடைக்கவில்லை . ஏதோ யாசகம் கேட்பவனைப் போல பார்த்தார்கள் . " ரொம்ப நேரமா போராடீனுக்குற , அத்த பாக்கவும் பாவமா இருக்குது , இந்தா ப்ளேட பிடி " கடைசியில் தன் மீனை தின்று விட்டதாக வருத்தப்பட்ட பெண்ணே தள்ளியிருந்த அவள் வீட்டுக்கு சென்று ப்ளேட் கொண்டு வந்து கொடுத்த போது இவளை தப்பாக நினைத்து விட்டோமே என்று கொஞ்சம் வெக்கமாக இருந்தது . சூழ்நிலையே மனிதர்களை அடையாளம் காட்டுகிறது . அதுஅடையாளம் காட்டுவதற்குள் நாம் உணர்சிவசப்பட்டு முடிவுகள் எடுத்துவிடுகிறோம் .

மனதை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கும் காமம் போல மெதுவாய் அவர் சொம்பின் இடைவெளிக்குள் ஆஷா பிளேடை நுழைத்து நெம்பிக் கொண்டிருந்தார் . " கடைசியா ட்ரை பண்ணுவோம் , இதுக்கு மேல நெம்பினா கழுத்து அறுந்துரும் " அறுப்பவர் சொல்ல , அப்படியொரு அசம்பாவிதம் நடந்து விடக்கூடாதென கடவுளை வேண்டிக்கொண்டேன் . இப்படி சித்திரவதையில் சாவதை விட உடனே செத்து விடலாம் என்ற எண்ணமும் ஏனோ தலை காட்டியது . " இந்த தடவ கண்டிப்பா காப்பாத்திடலாம் " திடமாய் சொன்னேன் . அந்த நிமிடம் அந்த உயிரை காப்பாற்றி விட வேண்டுமென்பதே எனக்கு தலையாய குறிக்கோள் போல இருந்தது .

பூனையின் மனதில் இப்பொழுது என்ன ஓடிக்கொண்டிருக்கும் . சில பேர் அதன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று அதற்கு தெரியுமா? முகமே தெரியாத பின் வரும் சந்ததிக்கு பணம் சேர்த்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் வயிற்று பசிக்காக சொம்பிற்குள் தலையை விட்ட பூனைக்கு மட்டும் ஏனோ இந்த கதி . ஒரு வேலை அது கிளம்பும் போது மனிதன் குறுக்கே போயிருப்பானோ ?!. இது போன்றெல்லாம் நினைப்பதற்கு பூனைக்கு வாய்ப்பில்லை . பாவம் பூனைக்கு ஐந்தறிவு .

" சார் , கொஞ்சம் அழுத்திப் பிடிங்க , பாதி எடுத்தாச்சு " , மீதியையும் எடுப்பதற்காக அதன் மிருதுவான உடலின் மேல் என் கைகளை இறுக்கினேன். இருந்த கொஞ்சம் பேரும் பூனை பாய்வதற்கு ஏதுவாக வழியை விட்டு பின் பக்கமாக நின்று கொண்டார்கள் . பத்து , ஒன்பது , எட்டு ஒவ்வொன்றாக மனதிற்குள் எண்ணிக்கொண்டேன் . ஒன்று வரை எண்ணி முடிக்கும் முன்னே பல நாள் பசியில் இருந்தவன் உணவை பார்த்தவுடன் ஓடுவதைப் போல விருட்டென்று ஓடியது அந்த பூனை .

" எப்படியோ ஒரு வழியா காபாத்திட்டோம் " வேடிக்கை பார்த்த ஒருவர் மகிழ்ச்சியாக சொன்னார் . அங்கே எல்லோர் முகத்திலும் வெற்றிகரமாக ராக்கெட்டை பறக்க விட்ட விஞ்ஞானிகளை போல ஒரு பெருமிதம் . சுமை இறக்கிவிடப்பட்டவுடன் சிட்டாய் பறந்த பூனையின் திசையை பார்த்தபடியே அவரவர் மன சுமைகளுடன் ஒவ்வொருவராய் பிரிந்தோம் .

Related Posts Plugin for WordPress, Blogger...