Showing posts with label மோடி. Show all posts
Showing posts with label மோடி. Show all posts

20 April 2014

மாற்றம் நம் கையில் - 2014 ELECTION ...


மிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பிற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் யாருக்கு ஒட்டு என்கிற குழப்பம் குறிப்பாக முதன்முறை ஒட்டு போடப்போகிற இளைஞர்களுக்கு மட்டுமின்றி பரவலாக நிறைய பேருக்கு  இருக்கும் என்றே நினைக்கிறேன் . ஊடகங்களில் வெளிவரும் கருத்துக் கணிப்புகளும் தமிழக வாக்காளர்களிடையே உள்ள குழப்பத்தை ஊர்ஜிதம் செய்வது போலவே இருக்கின்றன ...

நகரம் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட அடுத்த பிரதமராக யார்  வர வேண்டும் என்கிற கேள்விக்கு நரேந்திர மோடி என்கிற பதிலையே பரவலாக காண முடிகிறது .  அதே சமயம் யாருக்கு ஒட்டு போடுவீர்கள் என்கிற கேள்விக்கு அ .தி.மு.க வே முன்னணி வகிக்கிறது . பொதுவாக தமிழக மக்கள்  மாநில கட்சிகளுக்கே வாக்களிக்க முன்னுரிமை தருவார்கள் என்பது வரலாறாக இருந்தாலும் கிட்டத்தட்ட எல்லா கருத்துக் கணிப்புகளிலும் பிரதமர் பதவிக்கு மோடியை யே மக்கள் முன்னிறுத்துவது அவர்களின் எண்ண  ஓட்டத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது . அதே சமயம் அந்த தெளிவு ஒட்டு போடும் விஷயத்தில் சிலருக்கு இல்லை என்பதும் புலனாகிறது ...

ஒரு நாள் தெரிந்த நண்பருடன் பேசும் போது காங்கிரஸ் , தி.மு.க இரண்டையும் கடுமையாக சாடினார் . மத்தியில் மோடி தான் பிரதமராக  வேண்டும் என்று உறுதியாக சொன்னார் . ஆனால் அ.தி.மு.க வுக்கே எனது ஒட்டு என்றும்  குழப்பினார் . பா.ஜ .க வுக்கு ஒட்டு போட்டு அது வீணாகி தி.மு.க வந்து விடுமோ என்கிற பயமே  அ.தி.மு.க  பக்கம் சாய காரணம் என்று விளக்கமும் தந்தார் . நான் இதே போல அ.தி.மு.க வுக்கான ஒட்டு வீணாகி அதன் மூலம் தி.மு.க வந்து விட்டால் அப்போது என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்ட பிறகு அவரிடம் கொஞ்சம் தெளிவு பிறந்தது . இந்த உரையாடல் ஒரு சோறு பதம் . நிச்சயம் அவர் அ.தி.மு.க வின் அனுதாபியாக இருந்து அதற்கு தான் எனது ஒட்டு என்று சொல்லியிருந்தால் குழப்பமே இல்லை . ஆனால் மோடி பிரதமராக வருவதற்கு அ.தி.மு.க வுக்கு ஒட்டு என்பது நான் ஏற்கனவே முகநூலில் சொன்னது போல தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்றது ...

பா.ஜ.க போட்டியிடாத தொகுதிகளில் அ.தி.மு.க வுக்கு வாக்களியுங்கள் என்று சோ தனது துக்ளக் தலையங்கத்தில் எழுதியதும் கொஞ்சம் குழப்பத்தில் இருப்பவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும் உக்தி . அதே போல பா.ஜ.க - அ.தி.மு.க இரண்டிற்கும் ரகசிய உடன்பாடு இருப்பது போல ஒரு வதந்தி தி.மு.க , காங்கிரஸ் போன்றவற்றால் பரப்பப்பட்டு வருவதும் , தேர்தலுக்கு பின் நிச்சயம் அ.தி.மு.க - பா.ஜ.க சேர்ந்து விடும் என்பது போன்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் . ஆனால் இது போன்ற ஹேஷ்யங்களின் அடிப்படையில் நிச்சயம் ஒட்டு  போட முடியாது . ஏற்கனவே 13 மாதங்களில் அ.தி.மு.க வால் வாஜ்பாய்  அரசு கவிழ்ந்ததையும் யாரும்  மறந்திருக்கவும்  முடியாது ...

இப்போது மற்றவர்களின் தூண்டுதலினாலோ என்னவோ முதலில் காவிரி பிரச்சனையை வைத்து முதல்வர் பா.ஜ.க வை சாட பிறகு மோடி அ.தி.மு.க வும் , தி.மு.க வும் தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு வழி செய்யாமல் மாறி மாறி பழி வாங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்று சாடினார் . ஜெ பா.ஜ .க வை திடீரென திட்டுவதற்கு சிறுபான்மையினர் ஒட்டு வங்கியோ , நிர்பந்தமோ மட்டும் காரணம் அல்ல . முதலில் நாற்பதும் நமதே என்கிற நினைப்பில் பா.ஜ க அணியை சாதாரணமாக எடுத்துக் கொண்டவருக்கு  நிறைய தொகுதிகளில் தி.மு.க வை விட பா.ஜ .க வே தனக்கு சவாலாக இருக்கும் என்கிற தகவல்கள்  வர ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட மாற்றமே இது.
என்ன நடந்தாலும் இந்த கட்சிக்கு தான் ஒட்டு போடுவேன் என்று சொல்லும் சொல்லும் தீவிர அனுதாபிகள் கூடுதலோ குறைவோ எல்லா  கட்சிகளுக்கும் உண்டு . ஆனால் அவர்கள் மட்டும் தேர்தல் முடிவுகளை தீர்மானித்து விட முடியாது .  சூழ்நிலைக்கேற்ப  தங்கள் முடிவுகளை எடுக்கும் நடுநிலையாளர்களும் அரசியல்  மாற்றத்துக்கு முக்கிய காரணிகளாக இருக்கிறார்கள்...

ஒரு பக்கம் மோடி பிரதமராக வர அ.தி.மு.க வுக்கு ஒட்டு போடுங்கள் என்று அவர்கள் ரகசிய பிரச்சாரம் செய்வதாக செய்திகள் கசிய , இன்னொரு பக்கம் 15 வருடங்களாக மாறி மாறி  மத்தியில் நடைபெற்ற ஆட்சியில் அங்கம் வகித்து விட்டு 10 வருடங்களாக நடந்த அவலங்களுக்கும் தனக்கும்   சம்பந்தம் இல்லாதது போல பால் விலை  ஏறிப் போச்சு , பவர் கட் ஆகிப் போச்சு என்று பிரச்சாரங்களிலும் , விளம்பரங்களிலும் அ.தி.மு.க  வை மட்டும் குறை கூறி கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாமல் தி.மு.க வினர் மக்களின் ஞாபக மறதியின் மேல் நம்பிக்கை வைத்து ஒட்டு கேட்க , மற்றொரு பக்கமோ கை கொடுக்க யாருமின்றி  திரும்ப திரும்ப மோடி மதவாதி என்று சொல்லிக்கொண்டே முஸ்லீம் மதத் தலைவர் புஹாரியிடம் ஆதரவை பெற்றுக் கொண்டு மக்களை முன்னேற்றுவதற்கு வகை செய்யாமல் போலி மதவாதத்தை மட்டுமே நம்பி காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும் இந்த தருணத்தில் மத்தியில் நிலையான , வலுவான அரசாங்கம் அமைவதற்கு மோடியின் தலைமையிலான பா.ஜ.க வை அரியணையில் ஏற்றுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் ...

இது இப்பொழுதிருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவேயொழிய நிரந்தரமான முடிவல்ல . ஒரு வேளை நாம் எதிர்பார்த்தது போல தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் செயல்படாத பட்சத்தில் அடுத்த தேர்தலில் அதனை ஜனநாயக ரீதியில் மாற்றுவதற்கான அதிகாரம் நம் கையில் இருக்கிறது . ஏனெனில் எப்பொழுதுமே மாற்றம் நம் கையில் ...

21 March 2014

பா.ஜ.க கூட்டணி -BJP- வெற்றிக்கான முதல்படி ...

 

2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் ? ! ... என்று கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு  நான் எழுதிய பதிவில் தமிழகத்தில் பா.ஜ.க தலைமையில் தே.மு.தி.க , ம.தி.மு.க மற்றும் பா.ம.க ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைப்பதற்கான சூழலையும் , அவசியத்தையும் உணர்த்தியிருந்தேன் . ஒரு வழியாக  ஏகப்பட்ட இழுபறிக்குப் பின் பாரம்பரிய திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தேசிய கட்சியின்

தலைமையில் அப்படியொரு கூட்டணி தமிழகத்தில் 50 வருடங்களுக்கு பிறகு அமைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதோடு  மட்டுமல்லாமல் நல்ல மாற்றத்திற்கு வடிகாலாகவும்  இருக்கும் என்றும் நம்புகிறேன் ... 

 

இப்படியொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணிக்கு வித்திட்டவர் எழுத்தாளர் தமிழருவி மணியன் என்பது குறிப்பிடத்தக்கது . எந்தவொரு குறைந்த பட்ச செயல்திட்டமும் இல்லாமல் வெறும் பதவி ஆசைக்காக ஐந்தாறு கட்சிகள் சேர்த்து அமைத்திருக்கும் கூட்டணி தானே என்று சிலர் சாடினாலும் அரசியல் ரீதியாக இந்த கூட்டணியை அவ்வளவு எளிதில் ஒதுக்கி விட முடியாது . இதுவரை அமைந்த அல்லது அமையப்போகிற எந்த கூட்டணிக் கட்சிகளுக்குள்ளும் கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும் . அதில் அதிகம் ஆராய்ந்தால் எந்தவொரு கூட்டணியும் அமைந்திருக்காது அல்லது அமையாது என்பதே நிதர்சனம்  ... 

 

அ.தி.மு.க விடம்  2 சீட்களுக்காக  கையேந்தி நின்ற கம்யூனிஸ்டுகளுக்கும் , கடைசி வரை அவர்களை என்னத்த கண்ணையா போல குழம்ப வைத்து கழட்டி விட்ட அ.தி.மு.க விற்கும் , பா.ஜ.க விற்கு கல்லெறிந்து பார்த்து விட்டு எதுவும் நடக்காது என்றவுடன் மதசார்பற்ற அணிகளுடனே எங்கள் கூட்டணி  என்று சொல்லி விட்டு முஸ்லீம் லீக் , மனிதநேய மக்கள் கட்சி போன்றவற்றுடன் கூட்டு சேர்ந்திருக்கும் தி.மு.க விற்கும் இந்த கூட்டணி பற்றி விமர்சனம் செய்ய எந்தவித தார்மீக உரிமையும் இல்லையென்பதே அரசியல் ஆர்வலர்களின் கருத்து ... 

 

அ.தி.மு.க வால் தாங்கள் கழுத்தறுக்கப்பட்ட கோபத்தை அங்கே காட்டாமல் பா.ஜ.க வை தோற்கடிப்பதே எங்கள் இலக்கு என்று அறைகூவல் விடுக்கும் கம்யூனிஸ்டுகளைப் பார்க்கும் போது காமெடி கலந்த வேதனையாய் இருக்கிறது . 2009 இல் காங்கிரசை வரவிடாமல் தடுத்ததில் இவர்கள் செய்த முயற்சி பலித்ததைப் போல இம்முறையும் நடக்கக்கடவது... 

 

முதலில் மோடி அலையே இல்லை என்று சொன்ன காங்கிரஸ்காரர்கள் பிறகு பா.ஜ.க அணியின் தொகுதிப் பங்கீட்டில் உள்ள சிக்கலை காட்டி  கேலி செய்கிறார்கள். பா.ஜ.க அணியிலாவது தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதில் தான் பிரச்சனை . அதாவது ஒரு தொகுதிக்கு நிறைய பேர் போட்டி போடுகிறார்கள் . ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு சுளையாக 39 தொகுதிகள் இருந்தும் நிற்பதற்கு யாரும் முன் வரவில்லை என்கிற பரிதாப நிலையிலும்

பா.ஜ.க வை எந்த முகத்தை வைத்துக் கொண்டு குற்றம் சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம் ...

 

இப்படி முதலில் பா.ஜ.க தலைமையில் கூட்டணி என்றவுடன் நிறைய பேர் ஏளனம் செய்தார்கள் , பின் இது முரண்பட்ட கூட்டணி என்று எதிர்த்தார்கள் , கடைசியில் கூட்டணி அமைந்து வெற்றியும் பெற்றவுடன் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புவோமாக . இந்த கூட்டணி அனைத்து  தொகுதிகளிலும் வெற்றி பெறுமென்று யாரும் சொல்லவில்லை . அதே நேரம் சுத்தமாக தோல்வியை தழுவவும் வாய்ப்பில்லை . கூட்டணி கட்சியிலுள்ளவர்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து  ஒற்றுமையாக பணியாற்றினால் குறைந்தது 8 - 12  தொகுதிகளில் வெற்றி பெறவும் , நிறைய தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கவும்  வாய்ப்புள்ளது.

உண்மையில் வெற்றி , தோல்விகளை தாண்டி தி.மு.க , அ.தி.மு.க இரண்டையும் தவிர்த்து தமிழகத்தில் இப்படியொரு கூட்டணி அமைந்ததே வெற்றிக்கான முதல்படி ...


10 January 2014

ஆம் ஆத்மியும் அறிவுஜீவிகளும் ...


மீடியாக்களுக்கு , குறிப்பாக  ஆங்கில சேனல்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு ஏதாவது ஒரு விஷயம் தீனி போட்டுக் கொண்டேயிருக்க  வேண்டும் . அப்பொழுது தான் அவர்கள் பிழைப்பு ஓடும் . 2ஜி , மோடி விவகாரம் , டெல்லி பெண் கற்பழிப்பு ( அந்த சம்பவத்தை ஒட்டி தமிழ் நாட்டில் ஒரு பள்ளி  சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட போது அதற்கு ஒரு சிறிய சலசலப்பைக்  கூட இவர்கள் காட்டவில்லை ) , ஐ.பி.எல் பெட்டிங் இப்படி பலவற்றை தொடர்ந்து இப்பொழுது அவர்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருப்பது சமீபத்தில் காங்கிரசின் ஆதரவோடு டில்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் ஆம் ஆத்மியும் , அதன் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும் ...

அர்விந்த் கெஜ்ரிவால் ஐ.ஐ.டி யில் படித்தவர் , அரசு வேலையை  உதறி விட்டு பொதுநலப் பணிக்காக  தன்னை அர்ப்பணித்தவர் , ஊழலை ஒழித்துக் கட்ட வேண்டுமென்கிற நோக்கத்தோடு அரசியலில் குதித்தவர் என பல சிறப்பம்சங்களையும் தாண்டி கட்சி ஆரம்பித்து ஒன்பது மாதங்களிலேயே டில்லியில் ஆட்சியை பிடித்தவர் என்கிற ஒரு காரணத்திற்காகவே இன்று இந்தியாவையே  தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் . சினிமா , அரசியல் பின்புலம் எதுவும் இல்லாமல் இது போன்ற ஒரு சாதனையை  அவர் செய்திருப்பது வியக்கத்தக்கது . முதல்வன் படத்தில் வருவது போல ஒரு சாமான்யன் நினைத்தாலும் இது போன்ற மாற்றங்களை கொண்டு  கொண்டு  வர முடியும் என்று நிரூபித்த விதத்தில் அவர் இந்திய எதிர்கால அரசியலுக்கு ஒரு நம்பிக்கை ...

இதையெல்லாம் சொல்லும் அதே நேரத்தில் அவரின் வெற்றியை தொடர்ந்து அர்விந்த் கெஜ்ரிவால் அடுத்த பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் என்றும் , அவரின் கட்சிக்கு இந்தியா முழுவதும் பெருத்த ஆதரவு இருப்பது போலவும் சில மீடியாக்களும் , அதிலுள்ள அறிவு ஜீவிகளும் Knee Jerk ரியாக்சன் கொடுப்பது அவர்களின் அரைவேக்காட்டுத்தனத்தையே காட்டுகிறது . முதலில் ஊழலுக்கு எதிராக கட்சியை ஆரம்பித்தவர் எப்பொழுது காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சியமைத்தாரோ அப்பொழுதே அர்விந்த் சந்தர்ப்பவாத அரசியல்வாதியாகி விட்டார் . அடுத்தது காஷ்மீர் பிரச்சனை பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் ஏனோதானோ என்று ஒரு கருத்தை பிரஷாந்த் பூஷன் சொல்லி வைக்க அதை தொடர்ந்து சில அமைப்பினர் உ.பி யில் உள்ள ஆம் ஆம்தி அலுவலுகத்தை சூறையாடினர் . அதனை தொடர்ந்து
 " காஷ்மீர் பிரச்சனை தீர எனது உயிர் தான் தேவை என்றால் அதை தரவும் நான் தயார் " என்று அர்விந்த் அதீத உணர்ச்சியோடு பேசியதிலிருந்து சாமான்ய முகத்திரையை அவிழ்த்து சாணக்கிய அரசியல் முகமூடியை போடத்  தொடங்கி விட்டார் ...

நல்ல ஒரு மாற்றத்தை கொண்டு வருவார்  என்ற நம்பிக்கையோடு வாக்களித்த டில்லி வாக்காளர்களுக்கு காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைத்ததன் மூலம் ஏமாற்றம் அளித்தவர் , முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் கூட  முடிவடையாத நிலையில் அவசரம் அவசரமாக தேசிய அரசியலுக்கு தாவுவது அவரின் நம்பகத்தன்மையை குலைத்து கிடைத்த சந்தர்ப்பத்தை  பயன்படுத்திக் கொள்ளும் பக்கா அரசியல்வாதியாகவே நம் கண் முன் காட்டுகிறது . ஏனெனில் டில்லி மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை ஒழுங்காக நிறைவேற்றவே அவருக்கு ஐந்து ஆண்டுகள் போதாது . அப்படியிருக்க தேசிய அரசியலில் அவர்கள் காட்டும் ஆர்வம் காங்கிரசுக்கும் , ஆம் ஆத்மிக்கும் ரகசிய உடன்பாடு இருக்கிறதோ என்கிற சந்தேகத்தை கிளப்புகிறது . அடுத்த  முறை ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட அழிந்திருக்கும் நிலையில் காங்கிரசுக்கு ஆம் ஆத்மியின் வளர்ச்சி பெரிய பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை . மாற்றாக மோடிக்கு ஆதரவாக விழும் ஓட்டுக்களை ஓரளவுக்கேனும் சிதைப்பதற்கு நிச்சயம் அர்விந்த் அனுகூலமாக இருப்பார் ...

அர்விந்த் படித்த புத்திசாலி , தனிப்பட்ட முறையிலும் தூய்மையானவர் எனவே அவர் பிரதமர்  ஆவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கலாம் . நிச்சயம் தவறில்லை தான் . ஆனால் முதலில் முதல்வராக அவர் தனது கடமையை திறம்பட செய்து தன்னை நிரூபிக்கட்டும் என்பதே  பலரது எண்ணம் .  மேலும் அர்விந்த் போலவே அதிகம் படித்தவரும் , தனிப்பட்ட முறையில் தூய்மையானவரும் ஆன மன்மோகன் சிங் இரண்டு முறை பிரதமராக இருந்து நமக்கெல்லாம் என்ன செய்தார் என்பது நாடறிந்த விஷயம். அதற்காக மன்மோகன் போல தான் அரவிந்தும் இருப்பார் என்று சொல்ல வரவில்லை . அதே நேரம் படிப்பும் , தனிப்பட்ட தூய்மையும் மட்டும் திறம்பட ஆட்சி செய்வதற்கு போதுமானதாக இருக்காது என்பதையே வலியுறுத்துகிறேன் ...

கட்சி ஆரம்பித்து ஒன்பது  மாதங்களே ஆகியிருந்தாலும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேலாக லோக்பால் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே , கிரண் பேடி  போன்றோருடன் இணைந்து அர்விந்த் நடத்திய போராட்டங்களே அவரை டில்லி மக்களிடையே பிரபலப்படுத்தியது . அன்னா , கிரண் இருவரும் அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி விட  அவர்களுக்கு கிடைத்த ஆதரவையும் சேர்த்து மொத்தமாக அர்விந்த் அறுவடை செய்தார் என்பதே நிதர்சனம் . அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியை அன்னா புறக்கணித்ததும் , அவருக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என்று அவர் கேள்வி எழுப்பியதும் பலவித சந்தேகங்களை கிளப்புகின்றன . மோடி போன்ற  வலிமையான ஒருவர்  இந்தியாவுக்கு பிரதமராவதை அமெரிக்கா விரும்பாததால் அங்கிருந்து அதிக பணம் மறைமுகமாக ஆம் ஆத்மிக்கு வருகிறது என்பது ஒரு சாரரின் கருத்து ...

நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தவுடன் காங்கிரசை  கலைத்து விட சொன்னார் காந்தி . அதே போல காந்தியவாதியான அன்னா ஹசாரே ஆம் ஆத்மி என்று கட்சியை ஆரம்பிக்க எதிர்ப்பு தெரிவித்தார் . இரண்டிற்கும் ஏதோ ஒற்றுமை இருப்பது போலவே படுகிறது . இவையெல்லாவற்றையும் விட லோக்பால் மசோதாவுக்காக அர்விந்த் , அன்னா வுடன் ஒரே குழுவில் இருந்து போராடிய கிரண் பேடி மத்தியில் நிலையான ஆட்சி  அமைவதற்கு மோடிக்கே எனது  ஒட்டு என்று தனது ஆதரவை தெரிவித்திருப்பது தனிப்பட்ட விருப்பு , வெறுப்புகளை தாண்டி அவர் நாட்டின் மேல் கொண்டிருக்கும் அக்கறையை காட்டுகிறது . இதே போன்றதொரு முடிவை அன்னா எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை . இதையெல்லாம் மீறி அர்விந்த் தான் அடுத்த பிரதமர் என்கிற அளவிற்கு அளந்து விடும் அறிவுஜீவிகளுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ளலாம்  . பவர் ஸ்டார்  ஹிட் கொடுத்து விட்டார் என்பதற்காக சூப்பர் ஸ்டாராக ஆகி விட முடியாது ...


28 December 2013

2014 - மோடி ஆர் நோபடி - MODI OR NOBODY ...


திர்பார்த்ததைப் போலவே 2014 தேர்தலில் அ.தி.மு.க தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்ததும்  , தி.மு.க காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியிருப்பதும் நடந்திருக்கிறது . வாஜ்பாயை பாராட்டிய கையோடு  பி.ஜே.பி கூட்டணிக்கு தாவுவார்  என்று எதிர்பார்த்த நிலையில் அதனுடன் கூட்டு இல்லை என்று கலைஞர் அறிவித்திருப்பது ஆச்சர்யமே . ஆனால் இன்னும் தேர்தலுக்கு குறைந்தது நான்கு மாதங்கள்  உள்ள நிலையில் இது தான் அவருடைய உறுதியான முடிவா என்பதையும் சொல்வதற்கில்லை...

ஏனெனில் முன்பொரு முறை மத சார்புடைய  (!) பி.ஜே.பி யுடன் கூட்டு  இல்லை என்று சொன்ன  கலைஞர்  அதனோடு கூட்டணி வைத்துக் கொண்ட பின் " நான்  இருக்கும் இடத்தில் தான் மதசார்புக்கு இடமில்லையே " என்று மழுப்பியதை யாரும் மறந்திருக்க முடியாது . பெரிய கட்சியான தி.மு.க கூட்டணியில் சேர்ந்திருந்தால்  பி.ஜே.பி க்கு அது வலு சேர்க்கும்  என்றாலும் ஊழலுக்கு எதிரான அதன் பிரச்சாரத்திற்கு   பெரிய சறுக்கலை ஏற்படுத்தியிருக்கும்  ...

கடைசியில் ஒரு வழியாக இரண்டு பிரதான கழகங்களும் காங்கிரசை  கை கழுவியிருக்கும் இந்த வேளையில் ம.தி.மு.க ., பா.ம.க போன்ற இதர கட்சிககளை  தன்னுடன் இணைத்துக் கொண்டு பி.ஜே.பி தேர்தலை சந்திப்பது தன்னை மேலும் வலுப்படுத்திக்கொள்ள அதற்கு பெரிய வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை . பி.ஜே.பி யை தீண்டத்தகாத கட்சி போல வர்ணித்து வந்த காங்கிரசிற்கு இன்று அதே நிலை ஏற்பட்டிருப்பதும்  எதிர்பார்த்ததே...

தி.மு.க வுடன் கூட்டணி வைப்பதை விட தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதே தே.மு.தி.க விற்கு வலிமை சேர்க்கும் . 2016 இல் நடக்கவிருக்கும் சட்டசமன்ற தேர்தலுக்கும் தன்  தலைமையில் கூட்டணியை தயார்படுத்திக் கொள்ள விஜயகாந்திக்கு இந்த கூட்டணி அருமையான சந்தர்ப்பம் . காங்கிரஸ் மேல் எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கும் இந்த நிலையில்  பி.ஜே.பி யுடன் சேர்வது அவரது சரிந்த செல்வாக்கை கொஞ்சமேனும் தூக்கி நிறுத்தும் என எதிர்பார்க்கலாம் ...

நடந்து முடிந்த ஐந்து சட்டமன்ற தேர்தல்களில் பி.ஜே.பி மூன்றில் ஜெயித்திருப்பதும் , பெரும்பான்மை கிடைக்காமல் போனாலும் 32 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக டில்லியில் உருவெடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது . மூன்று மாநிலங்களை கைப்பற்றியதை கணக்கில் கொள்ளாமல் டில்லியில் தோற்றதையே காரணமாக்கி மோடி அலையெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல சில மீடியாக்கள் விஷமமாக பிரச்சாரம் செய்து வருவது வேடிக்கையாக இருக்கிறது . டில்லியை பொறுத்த  வரை காங்கிரஷிற்கு எதிரான ஓட்டுக்கள் பி.ஜே.பி க்கு மட்டும் விழாமல் ஆம் ஆத்மி க்கும் சென்றதே பி.ஜ.பி யின் சறுக்கலுக்கு காரணம் . ஆனால் தேசிய அளவில் காங்கிரஷிற்கு வலுவான மாற்றாக பி.ஜே.பி மட்டுமே உள்ளது ...

அதே நேரத்தில் திரிமூணல் , எஸ்.பி , அ.தி.மு.க உள்ளிட்ட வலுவான பிராந்திய கட்சிகள் காங்கிரஷிற்கு எதிரான ஓட்டுக்கள்  பி.ஜே.பி க்கு மட்டும் போகாமல் பார்த்துக் கொள்ளும் . பிஹார் , ஓடிஸா இரண்டிலும் தனக்கிருந்த வலுவான கூட்டணியை பி.ஜே.பி  இழந்திருப்பதும் அதற்கு பெரிய சறுக்கல் . மோடி அலை இதையனைத்தும் சரிக்கட்டுவது கஷ்டமே . இருப்பினும் பி.ஜே.பி வலுவாக உள்ள  குஜராத் , மத்திய பிரதேஷம் , ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களையும் சேர்த்து 200 இடங்களுக்கு மேல் கிடைத்து விட்டால் அது ஆட்சியமைப்பது உறுதி . இதை மனதில் வைத்து அவர்கள் தேர்தல் வியூகம் அமைப்பார்கள் என்று நம்பலாம் ...

தங்களால் ஆட்சி அமைக்க முடியாதது கிட்டத்தட்ட உறுதியானதால் பி.ஜே.பி யை வர விடாமல் தடுப்பதே காங்கிரசின் முக்கிய குறிக்கோளாக இருக்கும் . பிராந்திய கட்சிகளின் களப்பில் அமையும் மூன்றாவது  அணிக்கு அது வெளியிலிருந்து ஆதரவு தரலாம் . இந்த கட்சிகளுக்குள் யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பது என்பது இமாலய சிக்கல் . அப்படியே ஒருவரை  ஒருமித்த ஆதரவுடன் தேர்ந்தெடுத்தாலும் அவர் எத்தனை நாட்கள் பிரதமாராக நீடிப்பார் என்பது கேள்விக்குறி . ஏற்கனவே இது போன்ற சிக்கலான சந்தர்ப்பங்களை இந்திய ஜனநாயகம் சந்தித்திருக்கிறது ...

பல விதமான பிரச்சனைகளையும் தாண்டி இன்று மக்கள் முன் நிற்கும் மிகப்பெரிய பிரச்னை விலைவாசி உயர்வு . அடுத்து பி.ஜே.பி ஆட்சியமைத்தாலே இதனை உடனடியாக சரிக்கட்ட முடியாது , அப்படியிருக்க யார் வழி நடத்தப் போகிற தலைவர் என்பது தெரியாமலேயே பல கட்சிகள் அணி சேர்ந்து ஆட்சியமைத்தால் ஏற்கனவே படு குழியில் இருக்கும் நமது பெருளாதாரம் அதள பாதாளத்திற்குள்  போவது உறுதி ...

இப்பொழுதிருக்கும் சூழ்நிலையில் குழப்பமில்லாத நிலையான ஆட்சியை மத்தியில் அமர்த்துவதே ஒவ்வொரு குடிமகனின் தலையாய ஜனநாயக கடமை . அதற்கு பி.ஜே.பி , காங்கிரஸ் , அ.தி.மு.க , தி.மு.க என்று கட்சிகளின் தனிப்பட்ட நிறை குறைகளையும் தாண்டி நாட்டை வழிநடத்துவதற்கு ஒரு  நல்ல தலைவன் தேவை . இன்று நம் கண் முன் தெரியும் ஒரே  தலைவன் மோடி . அவர் வந்து மட்டும் பெரிதாக என்ன செய்து விடப்போகிறார் என்று எதிர்மறையாக கேட்காமல் , ஒரு சாதாரண டீ வியாபாரியாக இருந்து இன்று ஒரு மாநிலத்திற்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலைமைச்சராகி அதை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கும் ஒருவர் ஏன் இந்திய நாட்டிற்க்கு பிரதமாராக வரக் கூடாது என்று ஒவ்வொருவரும் யோசிக்க ஆரம்பித்தால் ஒரு விடிவு பிறக்கும் ...

எது நடந்தாலும் காங்கிரஷிற்கு தான் ஓட்டுப் போடுவேன்  என்பவர்கள் போட்டு விட்டுப் போகட்டும் . ஆனால் காங்கிரஸ் ஆட்சியின் மேல் வெறுப்பிலிருப்பவர்கள் தங்கள் ஓட்டுக்களை பி.ஜே.பி க்கு போடுவது மட்டுமே சரியான தீர்வு .  ஏனெனில் டில்லி யில் மக்கள் எடுத்த குழப்பமான முடிவால் அவர்கள் எந்த கட்சியை தூக்கியெறிய நினைத்தார்களோ அதே கட்சியின் ஆதரவுடன் தான் இன்று ஆம் ஆத்மி யே அரசமைக்க முடிகிறது . அதே போல 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஷிற்கு எதிரான ஓட்டுக்கள் அனைத்தும் பி.ஜே.பி க்கு சென்றடையாத நிலையில் காங்கிரசின் ஆதரவுடன் மீண்டும் பல கட்சிகளின் கூட்டணியாட்சி அமையக் கூடிய பரிதாபமான நிலைக்கு நாளை மீண்டும் நாம் தள்ளப்படலாம் . அப்படி ஒரு நிலைமை வராமல் இருப்பதற்கு ஒரே தீர்வு மோடி ஆர் நோபடி ...


27 October 2013

2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் ? ! ...


டுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் யார்  யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள்  என்கிற சஸ்பென்ஸ் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே  இருந்தாலும் அதற்கான அரசியல் சூடு தமிழகத்தில் குறைவாகவே இருக்கிறது . 2014 தேர்தலுக்கு  இன்னும் தயாராகாமல் தமிழகம் தடுமாறுகிறதா ?! ...

மோடி மேஜிக் நாடெங்கும் வியாபித்திருந்தாலும் தமிழகத்தில் மோடி வித்தையெல்லாம் பலிக்காது என்றவர்களை கூட அவர் தலைமையில் நடந்த திருச்சி மாநாடு திரும்பிப்  பார்க்க வைத்திருக்கும் . எந்த ஒரு கட்சி ஆட்சியை பிடிப்பதற்கும் பண , அரசியல் பலங்களையும் தாண்டி தன்னலமற்ற தொண்டர்களின் பங்களிப்பும் , புத்துணர்ச்சியும் மிக மிக அவசியம் . அதனை மோடி பிரதம வேட்பாளாராக அறிவிக்கப்பட்ட பிறகு  பி.ஜே.பி யினரிடம்  கண் கூடாக காண முடிகிறது ...

தமிழகத்திலும் அதே புத்துணர்ச்சி எதிரொலித்தாலும் அவர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி  மோடியின் சென்னை வருகைக்கு பிறகும் உறுதி செய்யப்படாமல் போனது துரதிருஷ்டமே . இருப்பினும் அனைத்து கட்சிகளுக்குமிடையே  எந்த ஒரு உறுதியான பேச்சு வார்த்தையும் தொடங்கப்படாத நிலையில் எது  வேண்டுமானாலும் நடக்கலாம் . அரசியலில்  நிரந்தர நண்பனும் இல்லை , எதிரியும் இல்லை என்பார்கள்  . தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டுபவர்கள்  கூட அரசியல் அரங்கில் எதிர் எதிர் அணியில் மோதுவதும் , எதிர் அணியில் இருப்பவர்கள் தேர்தலை ஒட்டி கை கோர்ப்பதும் புதிதல்ல ...

இந்த சூழ்நிலையில் நிதியமைச்சருடன் ஒரே மேடையில் அ.தி.மு.க   மந்திரி அமர்ந்ததையும்  , பிரதமருக்கு தமிழக முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததையும் எதேச்சையாக  நடந்தது  என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது . இதையெல்லாம் பார்க்கும் போது கடைசி நிமிடத்தில் அ.தி.மு.க   கூட்டணி அமையாமல் போனாலும் அதற்காக பி.ஜே.பி  சோர்ந்து விட வேண்டிய அவசியமிருக்காது  . கடந்த  சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 2.5 சதவிகித வாக்குகளை பெற்றதோடு கணிசமனான  இடங்களில் மூன்றாவது இடத்திற்கு வந்ததும் , உள்ளாட்சி தேர்தலில் 13 நகராட்சிகளை  கைப்பற்றியதும் கட்சி இங்கே வளர்ந்து வருகிறது என்பதை நன்றாகவே காட்டுகிறது . தமிழகத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் மட்டும் பலம் வாய்ந்ததாக அறியப்பட்ட கட்சி மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு 15 தொகுதிகளுக்கு மேல் பலம்  பெற்றிருப்பதும்  குறிப்பிடத்தக்கது . பி.ஜே.பி யுடன் கூட்டணி வைக்காமல் போவது இரு பக்கமும் இழப்பு என்பதே நிதர்சனம் ...

அதே வேளை மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு  அதிக வாய்ப்புள்ள கட்சி என்பதால் இங்கே வலுவான கூட்டணி அமைவது பி.ஜே.பி க்கு மிகவும் அவசியமாகிறது .  2004 இல் எந்தவொரு காரணமுமில்லாமல் பி.ஜே.பி யை கழட்டி விட்டு விட்டு காங்கிரசுடன் கை கோர்த்த தி.மு.க விற்கு இந்த முறை அதையே மாற்றி செய்வதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன . தி.மு.க வை கூட்டணியில் சேர்ப்பது மூலம் நடுநிலையாளர்களின் ஓட்டுக்கள் சிதைவதற்கு வாய்ப்பிருந்தாலும் கிட்டத்தட்ட  அ.தி.மு.க விற்கு சமமாக வாக்கு வங்கியை வைத்திருக்கும் தி.மு.க வை பி.ஜே.பி யால் கழித்து  விட முடியாது . பத்து வருடங்களுக்கு முன்னாள் அ .தி.மு.க  ஆட்சியிலிருக்கும் போதே தி.மு.க தமிழகத்தில் நாற்பதையும் வென்றதை  மறுக்கவோ , மறைக்கவோ முடியாது . இங்கே  மாறி மாறி கழகங்களின் ஆட்சி தான்  நடந்து கொண்டிருக்கின்றன ...

இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக  இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட  தே.மு.தி.க இப்போது திணறிக் கொண்டிருக்கும் வேளையில் தன்னை நிலைநிறுத்த பி.ஜே.பி யுடனான கூட்டணி ஓர் வாய்ப்பாக அமையலாம் . இந்த முறையும் கடவுளுடனோ அல்லது  மக்களுடனோ மட்டும் கூட்டணி வைக்கும் நிலையில் விஜயகாந்த்  இல்லை . கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவிகித வாக்குகள் பெற்றும் ஒரு  தொகுதியை கூட வெல்ல முடியாமல் போனதை அவர்  மறந்திருக்க மாட்டார் . தற்போதைய சூழ்நிலையில்  அவருக்கு சரியான புகலிடம் பி. ஜே .பி  மட்டுமே  . கடந்த சட்டசபை தேர்தலில் அ .தி.மு.க கூட்டணிக்குள் அவர் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டதால் தி.மு .க விற்கு எதிரான அலை தே.மு.தி.க விற்கு கட்சி ஆரம்பித்து 8 வருடங்களுக்குள்ளாகவே பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கொடுத்தது . இந்த முறையும் காங்கிரஸிற்கு எதிரான அலையை அவர் சரியாக உபயோகப்படுத்திக் கொண்டால் சரிவிலிருந்து மீளலாம் ...

இந்த கூட்டணிக்குள் ம.தி.மு.க வும் இணைவது கூடுதல் பலம் சேர்க்கும் . கட்சி ரீதியாக ம.தி.மு.க பெரிய அளவில் வளர்ந்திருக்கா விட்டாலும் அதன்  தலைவர் வை.கோ விற்கு மக்களிடம் இன்னும் நல்ல பெயர் இருக்கிறது . இந்த கூட்டணியில் தொகுதிகளுக்காக அவர் தன்மானத்தை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் நம்பலாம் . பா .ம.க தலைவர் ராமதாஸ் திருமாவளவனை தவிர்த்து  ஜாதி கட்சிகளை இணைக்கும்  முயற்சியை  கை விட்டு விட்டு இந்த கூட்டணிக்குள் வருவது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும் . இது போன்ற ஒரு வலுவான மூன்றாவது கூட்டணி அமைவதில் சிக்கல் இருந்தாலும்  , அப்படி அமையும் கூட்டணி  தேசிய அளவில் மட்டும் இல்லாமல் அடுத்த  சட்டசபை தேர்தலில் இரண்டு பிரதான கழகங்களுக்கு மாற்றாகவும் தமிழகத்தில் அமையக் கூடும் . தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதில்  உள்ளது போன்ற இடியாப்ப சிக்கல் நிச்சயம்  இதில் இருக்காது எனவும் எதிர்பார்க்கலாம் ...

இப்படி அரசியல் கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் கூட்டு சேரலாம் . கடந்த வருகையின் போது மோடி தொண்டர்களிடையே  சொன்னது போல வரும் தேர்தல் அவர்களுக்கு பரிசோதனை முயற்சி அல்ல , நிச்சயம் மத்தியில்  மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய  அருமையான வாய்ப்பு . இதை அவர்கள் நழுவ விட மாட்டார்கள் . ஏனெனில் காங்கிரஸ்  மேல் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்  . மூன்றாவது அணிக்கு யார் தலைமை ஏற்பார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி . அதே சமயம் சிறந்த பிரதமராவதற்குரிய தகுதி மோடிக்கு இருப்பதும் , பத்து  கோடிக்கும் மேல் இளைஞர்கள் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடன் இருப்பதும் பி.ஜே.பி க்கு மேலும் பலம் சேர்க்கும் விஷயங்கள் ...

ஆனால்  நிலையான ஆட்சி அமைவதற்கும்  272 தொகுதிகள் பி.ஜே.பி கூட்டணிக்கு தேவை . தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான அலை இல்லாத போதும் நடப்பது நாடாளுமன்ற தேர்தல் என்பதை உணர்ந்து  கடந்த சட்டமன்ற தேர்தலில் தங்களின் நியாயமான கோபத்தை வாக்களிப்பில் காட்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் இந்த முறையும் அதே போல நாடாளுமன்ற தேர்தலில் செய்வார்களா ? அல்லது கூட்டணியையும் , சொந்த விருப்பு , வெறுப்புகளையும் பார்த்து தடுமாறுவர்களா ? பொறுத்திருந்து பார்க்கலாம் ...



27 September 2013

மோடி - MODI - மாற்றம் வருமா ? ...


டந்த மாதம் என்னுடைய பதிவில் மோடி முன்னிறுத்தப்படுவாரா ? ... என்கிற கேள்விக்கு எதிர்பார்த்தது போலவே அவரை பிரதம வேட்பாளராக பி.ஜே.பி அறிவித்ததன் மூலம் தக்க விடையளித்து பத்து நாட்கள் பத்து நாட்களுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் அவரது தலைமையில் நேற்று திருச்சியில் முதல் மாநாடு பெருந்திரளான மக்கள் கூட்டத்தின் மத்தியில் நடந்து முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது . முதலில் முரண்டு பிடித்த அத்வானி , சுஷ்மா இருவரும் இப்பொழுது ஒத்துப்போனது கட்சிக்குள் இருந்த சிறிய சலசலப்பையும் முடிவுக்கு கொண்டு வந்து விட்டது என்று சொல்லலாம் . மற்ற கட்சிகள் போல ஒரு குடும்பத்தை மட்டும் நம்பியிருந்தால் தலைமைப் பொறுப்புக்கு ஆளை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருந்திருக்காது .என்ன செய்வது பி.ஜே.பி யில் அப்படியொரு சூழல் இல்லாமல் ஜனநாயக முறைப்படி கட்சியை நடத்துவதால் உண்டானதே இந்த சிக்கல் . இப்படி பல சிக்கல்களை கடந்து மோடி பிரதமர் மகுடம் சூட்டுவாரா ? அலசுவோம் ...

கட்சிக்குள் ஒருமித்த கருத்து ஏற்ப்பட்டதன் மூலம் முதல் படியை கடந்திருக்கும் மோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் பல கட்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் இரண்டாவது படியை கடக்க வேண்டும் . இப்போதைக்கு அகாலி தள் மற்றும் சிவசேனா மட்டுமே 
நேரடியாக மோடியின் தலைமைக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன . ஹரியானாவில் சவுதாலா மற்றும் ஓடிஷாவில் பட்நாயக் இருவரையும் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியும் நடந்து கொண்டு தானிருக்கின்றன . தென் இந்தியாவை தவிர்த்து மற்ற இடங்களில் பி.ஜே.பி க்கு வலுவான கூட்டணி தானாகவே அமைந்து விடும் என்று ஓரளவு எதிர்பார்க்கலாம். இந்த சூழ்நிலையில் 180 - 200 இடங்களை தனித்து கைப்பற்றும் கட்சி மத்தியில் பிராந்திய கட்சிகளின் துணையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் சரத் பவார் சூசகமாக கருத்து தெரிவித்திருப்பது அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்று தெளிவாகவே காட்டுகிறது ...

தென் இந்தியாவியில் தனித்து ஆட்சியமைத்த கர்நாடகாவை பி.ஜே.பி இழந்ததும் , மற்ற தென் மாநிலங்களில் கட்சியை வளர்க்காததும் அதற்கு பெருத்த பின்னடைவு . எடியூரப்பா கட்சிக்குள்  மீண்டும் இணையாமல் தனித்திருந்த படியே நிபந்தனையற்ற ஆதரவு அளித்திருப்பது ஓட்டு வங்கியை அதிகப்படுத்துமா அல்லது மோடியின் இமேஜை பாதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . பி.ஜே.பி தெலுங்கானாவை ஆதரித்ததால் தள்ளியிருந்த சந்திர பாபு நாயுடு இப்பொழுது நெருங்கி வருவது போல் தெரிகிறது . ஜெகன் மோகன் காங்கிரசை வீழ்த்த பி.ஜே.பி பக்கம் சாயலாம் அல்லது சி.பி.ஐ வழக்கை சமாளிக்க கைக்குள் அடங்கலாம் . தமிழ்நாட்டில் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமையும் பட்சத்தில் 40 லும் வெற்றியை எதிர்பார்க்கலாம் . ஆனால் முதல்வருக்கும் பிரதமர் கனவு இருப்பதால் அது சாத்தியமாகாதது போலவே படுகிறது . சோ வின் முயற்சி பலித்தால் ஏதாவது நல்லது நடக்கலாம் . அப்படி இல்லாத பட்சத்தில் வை.கோ , விஜயகாந்த் , ராமதாஸ் 
போன்றோர் கூட்டணிக்குள் வரும் வாய்ப்பும் பிரகாசமாகவே இருக்கிறது . கேரளாவை பொறுத்த வரை முன்னை விட கட்சி கொஞ்சம் வளர்ந்திருப்பதும்  , மோடியின் தலைமையும் மட்டுமே அதற்கு ஆறுதல் ... 

டிசம்பரில் நடக்கும் ஐந்து மாநில தேர்தல்களில் டில்லி  உட்பட மூன்றில் பி.ஜே.பி ஜெயிக்கும் என்று கருத்து கணிப்பு வந்திருப்பது கட்சியினருக்கு தெம்பை கொடுத்திருக்கும் . தமிழ் நாட்டில் ஜூ .வி எடுத்த சர்வேயின் படி மோடி பிரதமராவதற்கு ஆதரவாக 52 சதவீதமும் , மன்மோகன் சிங்கிற்கு 6 சதவீதமும் கிடைத்திருப்பது மக்களின் மன ஓட்டத்தை பிரதிபளிக்கிறது . படித்த இளைஞர்களிடம் மட்டுமின்றி அனைத்து தரப்பிலும் மோடிக்கு ஆதரவும் , அவர் பிரதமாராக வர வேண்டும் என்ற வேட்கையும் இருப்பதை பல இடங்களில் கண்கூடாக காண முடிகிறது . அதே போல மைனாரிட்டிக்கு அவர் எதிரானவர் என்பது போல பரப்பப்படும் பொய் பிரச்சாரங்களை மக்கள் நிராகரிக்க தொடங்கி விட்டார்கள் ...

ஏனெனில் எத்தனையோ முறை காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் குறிப்பாக டில்லி யில் நடந்த சீக்கியர் இனப் படுகொலை மற்றும் அஸ்ஸாம் , குஜராத் மாநிலங்களில் நடந்த இனக்கலவரங்களை பற்றியும் , கலவரங்களுக்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது பற்றியும் அவர்கள் தெளிவாக மறந்திருக்கலாம் , ஆனால் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் . இந்த லட்சணத்தில் இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் திரும்ப திரும்ப கோத்ரா கலவரத்தைப் பற்றி பேசப் போகிறார்கள் என்பதே மக்கள் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி . கடந்த ஒன்பது வருடங்களாக அவதியிலிருக்கும் மக்கள் மோடி வந்தால் மாற்றம் வரும் என்று நம்புகிறார்கள் . ஆனால் அப்படி மாற்றத்தை எதிர்பார்க்கும் அனைவரும் மோடி வருவாரா ? மாட்டாரா என்று ஆராய்வதை விட்டு விட்டு சொந்த் விருப்பு வெறுப்புகளை பார்க்காமல்அவருக்காக ஒட்டு போடுவார்களேயானால் நிச்சயம் 
மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கலாம் ...



 

8 June 2013

மோடி முன்னிறுத்தப்படுவாரா ? ...


2014 நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி யின் பிரதம வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்படுவாரா  என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்று கோவாவில் அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்ககுகிறது . ஏற்கனவே  2014 தேர்தல் - மன்னராட்சியா ? மக்களாட்சியா ? என்கிற பதிவில் மோடி பிரதமராவதற்கான  வாய்ப்புகளை அலசிவிட்டோம்.

இன்றைய சூழ்நிலையில் கட்சியினரின் அலை மோடிக்கு சாதகமாக இருந்தாலும் பி.ஜே.பி யில் பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்த அத்வானி , ராஜ்நாத் சிங் , அருண் ஜெட்லி போன்ற மற்ற தலைவர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது . அதிலும் குறிப்பாக வாஜ்பாய் அரசில் துணை பிரதமாராகவும் , உடல்நிலை காரணமாக வாஜ்பாய் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி விட்ட நிலையில் கட்சியின் மூத்த தலைவராகவும் இருக்கும் அத்வானியின் பெயரும் பிரதமர் பதவிக்கு அடிபடுகிறது . இவர்கள்  இருவருக்கும் இடையே இருக்கும் சிறு இடைவெளியை மீடியாக்கள் ஊதி பெரிதுபடுத்தினாலும் அதை முற்றிலும் ஒதுக்கி விட முடியாது ...

உடல்நிலை சரியில்லாததால் அத்வானி இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் நாளை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . மோடி , அத்வானி இருவருக்கும் மிக நெருக்கமான உமா பாரதிக்கு தர்ம சங்கடத்தில் மாட்டிக்கொள்வோம் என்கிற பயத்திலேயே காய்ச்சல் வந்துவிட்டதாகவும் , அதனால் அவரும் கூட்ட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன . மற்ற கட்சிகள் போல இல்லாமல் உண்மையிலேயே ஜனநாயக ரீதியில் இயங்கும் பி.ஜே.பி யை  பொறுத்தவரை மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் சின் ஆதரவு இருந்தாலும் கட்சிக்குள் ஒருமித்த கருத்து ஏற்ப்பட்ட பிறகே அவரை பிரதம வேட்பாளராக அறிவிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை ...


சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் இடைத்தேர்தலில் 2 பாராளுமன்ற மற்றும் 4 சட்டமன்ற தொகுதிகளை காங்கிரசிடமிருந்து மோடி தலைமையிலான பி.ஜே.பி கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது . அதே போல பீகாரில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு மோடியை எதிர்த்து வரும் நிதிஷ் குமாரின் நிலைப்பாடில் மாற்றம் அவசியம் என்பதும் ஊர்ஜிதமாகிறது . மோடிக்கு இந்த அளவு செல்வாக்கு வளராமல் இருந்திருந்தால் வாஜ்பாய் பிரதமாரக இருந்த போது அவருக்கு பக்கபலமாக இருந்த அத்வானி யின் பெயர் பிரதமர் பதவிக்கு இப்பொழுது ஒருமனதாக அறிவிக்கப்பட்டிருக்கும் . அத்வானிக்கு இதில் மனஸ்தாபம் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை ...

கட்சியின் சீனியர் என்ற முறையிலும் , தகுதியின்  அடிப்படையிலும் மோடிக்கு அத்வானி சளைத்தவரில்லை என்ற போதிலும் இப்போழுதுள்ள சூழ்நிலையில் மோடி காலத்தின் கட்டாயம் . சுயநலமில்லாமல் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட அத்வானி இந்த உண்மையை புரிந்து கொண்டு மோடிக்கு வழிவிடுவார் என்று எதிர்பார்க்கலாம் . பொதுவாக அதிக திறமை வாய்ந்தவர்கள் ஒருமித்த முடிவை உடனடியாக எடுக்க முடியாது என்பார்கள் . ஒருவர் கட்டளையிட மற்றவர்கள் அடிபணியும் வழக்கத்திற்கு மாறாக அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பது ஆரோக்கியமான விஷயம் என்றாலும் எல்லா விதத்திலும் பிரதமர் பதிவிக்கு தகுதி வாய்ந்த மோடி முன்னிறுத்தப்படுவாரா என்கிற மக்களின் கேள்விக்கு தாமதிக்காமல் இந்த தேசிய செயற்குழு கூட்டம் முடிவதற்குள்ளாகவே பி.ஜே.பி அறிவிக்கும் என நாம் எதிர்பார்க்கலாம் ...


24 May 2013

2014 தேர்தல் - மன்னராட்சியா ? மக்களாட்சியா ? ...


ன்னும் ஒரு வருடத்திலோ அல்லது அதற்கு முன்னரோ 2014 ல் பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது . அனைத்து இந்தியர்களுக்கும் குறிப்பாக நடுத்தர , உயர் நடுத்தர வகுப்பினருக்கு இது மிக முக்கியமான தேர்தல் என்றே சொல்லலாம் . தற்போதைய நிலையில் விலைவாசி உயர்வு  , அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மை  , ஊழல் இவையனைத்தும் ஏழை , பணக்காரர்களை விட நடுத்தர வர்க்கத்தையே அதிகம் பாதிக்கின்றன .  ஏனெனில் ஏழைகள் இலவசத்தின் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்கள்  , பணக்காரர்கள் எதைப் பற்றியும் பெரிதாக கவலைப்படுவதில்லை .

2004 இல் இருந்து தொடர்ந்து பத்து வருடங்கள் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் காங்கிரஸின் மேல் மக்கள் அதிக அதிருப்தியோடு இருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை . 2009 இல் நாட்டின் ஸ்திரத்தன்மை போய் தொங்கு நாடாளுமன்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அதிருப்தி இருந்தும் அதையும் மீறி ஒட்டு போட்டு காங்கிரஸை மக்கள் ஆட்சி பீடத்தில் ஏற்றினார்கள் . இந்த முறையும் அதே போல ஒரு அசம்பாவிதம் நடந்து விடக்கூடாதென்பதில் அனைவரும் கவனமாக இருப்பார்கள் என நம்புவோமாக ! 2 ஜி , காமன்வெல்த் தொடங்கி நிலக்கரி , ரயில்வே என்று எல்லா துறைகளிலும் ஊழல் தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறது . அதோடில்லாமல் ஊழலை தடுக்க வேண்டிய அரசே சி.பி.ஐ யை கையில் போட்டுக் கொண்டு குற்றப்பத்திரிக்கைய மாற்றியமைத்ததையும்  அதற்காக உச்சநீதிமன்றத்தில் வாங்கிக் கட்டிக்  கொண்டதையும் இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டோம் . ஊழல் இந்தியாவில் பல வருடங்களாக புரையோடியிருந்தாலும் இந்த அளவிற்கு வெளிப்படையாக ஒரு அரசு செயல்படுவதாக உச்சநீதி மன்றமே  கண்டித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது ...

பொருளாதாரம் , ஊழல் இரண்டையும் தாண்டி கவலையளிக்கும் மற்றொரு விஷயம்  சீனா , பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளால் நாட்டிற்கு  ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் . ஏற்கனவே 1962 போரில் நம் நாட்டின் ஒரு பகுதியை கைப்பற்றி விட்ட சீனா இப்பொழுது நம் நாட்டிற்க்குள் 19 கி.மீ புகுந்து தங்களின் டெண்டை போட்டிருக்கிறார்கள் . ஒரு மாத போராட்டத்திற்கு பின் அவர்களை வெளியேற்றினாலும் அதற்கு பதிலாக நம் படை வீரர்களும் பின் வாங்கியிருப்பது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை கேள்விக்குறியாக்குகிறது  . தனக்கும் அஜ்மலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பகல் வேஷம் போட்ட பாகிஸ்தான் அப்சல் குரு தூக்குக்கு எதிராக கண்டனம் தெரிவித்து நம் உள்நாட்டு விவகாரங்களில் வெளிப்படையாகவே தலையிடுவதும் , சிறைக்குள் வைத்து நம் இந்திய  கைதி சர்பஜித் சிங்கை கொடூரமான முறையில் கொன்றிருப்பதும் நம் நாட்டின்மேல் அதற்கிருந்த கொஞ்ச நஞ்ச பயமும் போய் விட்டதென்பதை வெளிப்படையாகவே காட்டுகின்றன . இவை தவிர இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் அரசு நடந்து கொண்ட விதம் மாணவர்களை கூட ரோட்டிற்கு வரவைத்து விட்டது .  இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவை ஒட்டு போட வைப்பதற்கே பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியதாய் இருக்கிறது . இப்படி உள்நாட்டு விவகாரங்களில் மட்டுமல்லாமல் வெளி நாடுகளுடனும் ஒரு ஆரோக்கியமான உறவு இல்லாமல் அச்சத்துடனேயே நமது அரசாங்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது ...

இன்றைய சூழ்நிலையில் காங்கிரஸிற்கு எதிராக இருக்கும் ஒரே மாற்று பி.ஜே.பி மட்டுமே . தேர்தலை ஒட்டி உருவாகும் மூன்றாவது அணி என்றுமே மழையில்  முளைக்கும் காளான் தான் . இருப்பினும் தேசிய அளவில் காங்கிரஸிற்கு  எதிரான வாக்குகளை பி.ஜே,பி ஒட்டுமொத்தமாக திரட்ட தவறியது அந்தந்த மாநில கட்சிகளை தேசிய அளவில் அதிகமாக முக்கியத்துவம் அடைய வைத்திருப்பதையும் யாரும் மறுக்க முடியாது . அர்விந்த் கேஜ்ரால் , அன்னா ஹசாரே போன்றோரின் வருகை படித்த நடுத்தர மக்களிடையே பி.ஜே,பி யின் செல்வாக்கை சரித்திருப்பதும் உண்மை . உட்கட்சி பூசல் , மோடி யை பிரதமாராக அறிவிப்பதில் உள்ள சிக்கல் , கர்நாடகாவில் அடைந்த படு தோல்வி போன்றவைகளும் பி.ஜே.பி க்கு பெரும் பினடைவை ஏற்ப்படுத்தியிருக்கின்றன . இவை எல்லாவற்றையும் விட காங்கிரஸ் என்ன தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் மக்கள் பி.ஜே.பி சிறிய தவறு செய்தாலும் மன்னிக்க முடியாத மனப்பான்மையுடன் இருப்பதும் , ஊடகங்களிடையே தனது உறவை பி.ஜே.பி மேம்படுத்திக் கொள்ளாததும் அந்த கட்சிக்கு சறுக்கலாக இருக்கும் மற்ற அம்சங்கள் . இப்படி சில குறைபாடுகள் இருந்தாலும் காங்கிரசுடன்  ஒப்பிட்டுப் பார்க்கும் போது பி.ஜே.பி சிறந்த தேர்வாகவே படுகிறது . இத்தனை வருட சுதந்திர இந்தியாவில் காங்கிரஸு க்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு வேறெந்த கட்சிக்கும் கொடுக்கப்படவில்லை . எனவே பி.ஜே.பி க்கு மற்றொரு வாய்ப்பு கொடுப்பதில் தவறிருப்பதாக தெரியவில்லை ...

பி.ஜே.பி க்கு எதிராக முக்கியமாக வைக்கபடும் மதவாத குற்றச்சாட்டு ஒரு சந்தர்ப்பவாத குற்றச்சாட்டே . மதவாதம் என்று சொல்லப்படும் பி.ஜே.பி ஓட்டுக்காக எந்தவொரு மதத்துக்கும்  சலுகைகள் வழங்கி உதவிகள் செய்யவில்லை . ஓட்டுக்காக மைனாரிட்டிகளை  தேசிய நீரோட்டத்தில் கலக்க விடாமல் தனித்தே வைத்திருக்கும் பல கட்சிகளின் கூட்டு சதியே இந்த மதவாத பிரச்சாரம்  . உலக மக்கள் தொகையில்  மைனாரிட்டியாக இருக்கும் ஹிந்துக்களை சாதி ரீதியாக பிரித்து வைப்பதே இங்குள்ள அரசியல் கட்சிகளின் முக்கிய நோக்கம் . எங்கே அவர்கள் ஒன்றுபட்டு விடுவார்களோ என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த போலி மதவாத பிரச்சாரம் . ஒரு கட்சி  எந்தவொரு குறிப்பிட்ட மதத்தை ஆதரித்தாலோ அல்லது அதன் சார்பாக நடந்து கொண்டாலோ அதை மதவாத கட்சி என்று சொல்லலாம் . அந்த அடிப்படையில்  ஹிந்துக்கள் சார்பாக நடப்பதாக சொல்லப்படும் பி.ஜே.பி மதவாத கட்சி என்றால் மற்ற மதங்களை தலையில்  தூக்கிப் பிடிக்கும் மற்ற கட்சிகள் மட்டும் மிதவாத கட்சிகளா ? இதை யோசித்தாலே அரசியல் கட்சிகள் போடும் பகல் வேடம் தெளிவாகும் ...

பாபர் மசூதி இடிப்பும் , கோத்ரா கலவரமும் பி.ஜே.பி க்கு எதிராக வைக்கப்படும் கடுமையான குற்றச்சாட்டுகள். பாபர் மசூதி பிரச்சனைக்கு ஏற்கனவே உச்ச நீதி மன்றம் சுமூகமான தீர்ப்பை வழங்கிவிட்டது . கோத்ராவை பொறுத்தவரை எதி ர்கட்சிகள் எவ்வளவோ முயன்றும் மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை . சமீபத்தில் இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது . எந்தவொரு கட்சியின் வளர்ச்சிக்கு பின்னாலும் ஆராய்ந்து பார்த்தால் ஏதாவது குற்றச்சாட்டுகள் கண்டிப்பாக இருக்கும் என்பதே வரலாறு .  இதற்கு பி.ஜே.பி மட்டும் விதிவிலக்கல்ல . இந்த குற்றச்சாட்டுக்கள் மட்டுமே அந்த கட்சிக்கான ஓட்டுக்களை சிதைத்து விட முடியாது . ஏனெனில் தேசிய அளவில் மூன்று  விதமான ஒட்டு வங்கிகள் உள்ளன . அதில் முதலாவது மற்றும் முக்கியமானது ஏழைகள் ஒட்டு , இரண்டாவது மைனாரிட்டிகள் ஒட்டு , மூன்றாவது படித்த நடுத்தர வர்க்கத்தினர் ஒட்டு ...


அந்தந்த ஏரியாவில் வினியோகிக்கப்படும் பணமும் , இலவசங்களும் முதலாவது ஒட்டு வங்கியை கவனித்துக் கொள்கின்றன . மத்திய அரசு
 " உங்கள் பணம் உங்கள் கையில் " திட்டத்தை எல்லா மாநிலங்களுக்கும் வெற்றிகரமாக கொண்டு செல்வதில் முனைப்பாக இருப்பதற்கு காரணத்தை சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை . இரண்டாவதாக இருக்கும் மைனாரிட் ஓட்டை சிறிய விழுக்காடேனும் பி.ஜே.பி பக்கம் போக விடாமல் வைத்திருப்பதே மற்ற கட்சிகளின் முக்கியமன நோக்கமாக இருக்கிறது . ஹிந்துக்களை போல அல்லாமல் மைனாரிடிகள் ஒட்டு விஷயத்தில் ஒற்றுமையாக இருப்பது இந்த வகை ஒட்டு வங்கியை பலப்படுத்துகிறது . மூன்றாவதாக இருக்கும் நடுத்தர ஒட்டு வங்கி அந்தந்த சூழ்நிழைக்கு ஏற்றவாறு தங்களின் நிலையை வெளிப்படுத்திக் கொள்கிறது . காங்கிரசின் மேல்  இருந்த நம்பிக்கை நடுத்தர வர்க்கத்தினருக்கு  வெகுவாக சரிந்திருப்பது பி.ஜே.பி க்கு சாதமாக இருந்தாலும் முன்னமே சொன்ன மாதிரி அவை முழு மையாக பி.ஜ.பி க்கு சென்றடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . வரப்போகிற தேர்தலில் இந்த மூன்றாவது வாக்கு வங்கி முக்கிய பங்கு வகிக்கப் போவது உண்மை . முன் போல இல்லாமல் ஒட்டு போடும் வழக்கம் அதிகமாகி வருவதும்  அதற்கு மற்றொரு முக்கிய காரணம் ...

இரண்டாவது வகை ஒட்டு வங்கியில் தனக்கு ஏற்படும் இழப்பை பி.ஜே.பி இதில் சமன் செய்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன . அதே நேரம் இந்த வகை ஒட்டு மொத்தமாக பி.ஜே,பி பக்கம் சாயும் போது தான் பலன் அதிகமாக இருக்கும் . ஆனால் இந்த வகை மக்கள் சென்ற தேர்தலை போல நாம் ஓட்டுப் போட்டாலும் தனித்த மெஜாரிட்டியில் பி.ஜே.பி வராது என்றோ அல்லது மூன்றாவது அணி அதிக இடங்களை பெற்று கம்யூனிஸ்ட் தலைமையில் ஆட்சி வந்து விடும் என்றோ பயத்தில் திரும்பவும் காங்கிரஸ் பக்கமே சாய்ந்து விடுகிற அபாயமும் உள்ளது . இதை சரி கட்டுவதற்கு பி.ஜே.பி க்கு உள்ள ஒரே பிரம்மாஸ்திரம் நரேந்திர மோடி . சமீபத்தில் பிரபல எழுத்தாளர் சேட்டன் பகத் பேஸ் புக்கில் நடத்திய கருத்துக்கணிப்பில் 84 சவிகிதம் பேர் நரேந்திர மோடி பிரதமராக வர  விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்  . மூன்றாவது வகை ஒட்டு வங்கியில் அதிகம் இருப்பவர்கள் இவர்களே . இதே கருத்துக்கணிப்பில் ராகுல் காந்திக்கு 13 சதவீதம்  பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்திருப்பதும்  குறிப்பிடத்தக்கது . மோடியை  முன்னிருத்தினால் மைனாரிட்டிகள் புறக்கணிப்பார்கள் என்ற நினைப்பில் வரை தவிர்த்து அத்வானியையோ அல்லது வேறு யாரையோ பி.ஜே.பி யின் பிரதம வேட்பாளராக அறிவித்தாலும் அந்த ஓட்டு வங்கியில் பெரிய மாற்றம் ஏற்ப்பட்டுவிடப் போவதில்லை .  மாற்றாக மோடியை அறிவிப்பதன் மூலம் படித்த நடுத்தர மைனாரிட்டிகளிடையே ஒட்டு பெறுவதற்கு பி.ஜே.பி க்கு வாய்ப்பு உள்ளது . பாராளுமன்ற தேர்தல் கமிட்டியில் மோடி இடம் பெற்றிருப்பதும் , மோடிக்கு நெருக்கமான அமித் ஷா உத்திர பிரதேசத்திற்கு பொறுப்பேற்றிருப்பதும் அவர் பி.ஜே.பி யின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படுவ்தற்கான வாய்ப்பை ஊர்ஜிதம் செய்கின்றன ...

மோடிக்கு ஏற்பட்டிருக்கும் பாப்புலாரிட்டி  ஒரே நாளில் ஏற்பட்டதில்லை  எனபது கடந்த 12 ஆண்டு கால குஜராத் மாநில வளர்சியயை கூர்ந்து பார்த்தாலே புரிய வரும் . அவரின் மேல் மதசார்பு சாயத்தை எவ்வளவோ காங்கிரஸ் பூசிப்பார்த்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை . முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் அவருக்கு ஆதரவாக அதிக ஓட்டுக்கள்  விழுந்திருப்பது அவர்  மேல் மைனரட்டிகள்  வைத்திருக்கும் நம்பிக்கையை கா ட்டுகிறது . 2002 இல் நடந்த கலவரத்தை தாண்டி அவர்கள் முன்னேறி வந்திருப்பது தெரிகிறது . ஏனெனில் குஜராத் என்றுமே அமைதி பூங்காவாக  இருந்ததில்லை . 2002 க்கு முன்  அடிக்கடி அங்கே இந்து - முஸ்லிம் கலவரம் நடப்பது வாடிக்கை . ஆனால் 2002 கலவரத்திற்கு பின் கடந்த 11 ஆண்டுகளில் மத வேற்றுமைகளை  கடந்து அனைவரும் ஒற்றுமையாக  முன்னேறி வருகிறார்கள் என்பதே நடைமுறை உண்மை . குஜராத்தின் உண்மை நிலைமை அங்கிருப்பவ்ர்களுக்கே தெரியும் . இந்திரா காந்தி  படு கொலை செய்யப்பட பிறகு 1500 சீக்கியர்களுக்கு மேல் கொல்லப்பட்டார்கள் . ஆனால் இன்று காங்கிரஸ் தலைமையிலான அரசில் பிரதமராக இருப்பவர் மன்மோகன் சிங் என்பதே வரலாறு ...

ஏதோ மோடியே  முன்னிருந்து கலவரத்தை நடத்தியது போல போலியாக சித்தரிக்கிறார்கள் . அது சம்பந்தப்பட வழக்குகளிலிருந்து மோடி விடுவிக்கப்பட்டிருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் . மோடியை முன்னிருத்தினால்  கூட்டணியிலிருந்து விலகி விடுவோமென பீஹார் முதல்வர் நிதிஸ் குமார் சொல்லியிருக்கிறார் . அப்படி நடக்கும் பட்சத்தில் பீகாரில்  15 - 20 இடங்கள் பி.ஜே.பி க்கு கிடைக்காமல் போகலாம் .
ஆனால் இந்தியா முழவதும் வெற்றி வாய்ப்புள்ள இடங்களை ஆராய்ந்து பார்த்தால்  பீகாரின் இழப்பு பி.ஜே.பி க்கு பெரிதாக இருக்காது . எந்த கட்சியும் தனித்து பெரும்பான்மை அடையப் போவதிலலை . 160 -180 இடங்களை  தனித்து கைப்பற்றினாலே மற்ற கட்சிகள் தங்கள் ஆதரவை  வெளியிலி ருந்தோ உள்ளிருந்தோ கொடுத்து விடுவார்கள் என்பதே இன்றைய இந்திய அரசியலின் நிலை . தென் இந்தியாவில்  வளர்ச்சியடையாததும் , கர்நாடகாவில் இருந்த ஒரே ஆட்சியை ஊழலாலும்  , உட்கட்சி பூசலாலும் பறிகொடுத்ததும்  , உத்திர பிரதேசத்தில் சரிந்த செல்வாக்கும் பி.ஜே,பி க்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் . ஆனால் இன்று கர்நாடகாவில் பி.ஜே.பிக்கு நேர்ந்த  நிலை நாளை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கும்  ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை . ஊழல் மற்றும்  நிர்வாகத் திறன் இல்லாத அரசை  மக்கள் தூக்கி எறிவார்கள் என்பதே கர்நாடக மக்கள்  கற்றுத்தந்த பாடம் ...

காங்கிரஸை பொறுத்தவரை பி.ஜே.பி யை நோக்கி மற்ற கட்சிகள் செல்லாததும் , பி.ஜே.பி போலல்லாமல் தென்னிந்தியாவில் தமிழகம் தவிர்த்து மற்ற மூன்று மாநிலங்களிலும்  ஆட்சியமைத்திருப்பதும்  அதற்கு பெரிய பலம் .  அது மட்டுமல்லாமல் பண பலம் ,அரசியல் பலம் இரண்டும்  வேறெந்த கட்சிகளை விடவும் காங்கிரஸிற்கு அதிகமாகவே உள்ளன . கட்சிகளும் சரி , மக்களும்  சரி கடைசி நேரத்தில் மனது மாறி தங்களிடம் தான் வருவார்கள் என்கிற நம்பிக்கையும் காங்கிரஸிற்கு உண்டு . இரண்டு முறை பிரதமாராக இருந்து விட்டதால் இந்த முறை  மன்மோகனை தவிர்த்து ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக காங்கிரஸ்  அறிவிப்பதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது . விலைவாசி உயர்வு , தீவிரவாதம் , ஊழல்  , அயல்நாடுகளின் அச்சுறுத்தல் இப்படி பல காரணங்களால்  காங்கிரஸ் மேல் மக்களுக்கு வெறுப்பு இருந்தாலும் ராகுலின் வருகை அவற்றை மாற்றி புது உத்வேகத்தை கொடுக்கும் என்பது காங்கிரஸ்காரர்களின் நம்பிக்கை . உ.பி , குஜராத் மாநிலங்களில் அவர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது என்பது உண்மையாக இருந்தாலும் அவரை கழித்துக் கட்டி விட முடியாது . 2004 இல் சோனியாவின் வருகை காங்கிரஸை எட்டு வருடங்களுக்கு பிறகு ஆட்சி பீடத்தில் ஏற்றியதையும் யாரும் மறுக்க முடியாது ...

வரும் நவம்பரில் ராஜஸ்தான் , டில்லி , சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2014 பொது தேர்தலுக்கு வெள்ளோட்டமாக இருக்கும் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள் . பாராளுமன்ற தேர்தல் கமிட்டியில் மோடி இடம் பெற்றிருப்பதும் , மோடிக்கு நெருக்கமான அமித் ஷா உத்திர பிரதேசத்திற்கு பொறுப்பேற்றிருப்பதும் அவர் பி.ஜே.பி யின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படுவ்தற்கான வாய்ப்பை ஊர்ஜிதம் செய்கின்றன . காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை பி.ஜே.பி க்கு சாதகமான ஓட்டாக மாறினால் மட்டுமே அதன் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமையும் . அப்படி நடக்காமல் காங்கிரஸ் மற்றும் உதிரி கட்சிகள் அதிக இடங்களை பெரும் பட்சத்தில் மீண்டும் காங்கிரஸ் தலைமையில் அரசு அமைவதற்க்கான வாய்ப்பே உருவாகும் . சுதந்திரம் அடைந்ததில் இருந்து வாழையடி வாழையாக நேரு குடும்பத்தினரோ அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருவரோ தான் இந்தியாவை ஆண்டு வந்திருக்கிறார்கள் . எனவே 2014 தேர்தலில் ஜெயிக்கப் போவது காங்கிரஸா ? பி.ஜே,பி யா ? அல்லது மோடியா ? ராகுலா ? என்பதை விட பழமையில் ஊறிய மன்னாராட்சியா ? முன்னேற்றம் கொடுக்கும் மக்களாட்சியா ? என்பதே நம் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது ...


Related Posts Plugin for WordPress, Blogger...