Showing posts with label POLICE. Show all posts
Showing posts with label POLICE. Show all posts

23 February 2012

எ(ஏ)ன்கவுன்டர் ... !?


அடுத்தடுத்த மாதங்களில் பட்டப்பகலில் நடத்தப்பட்ட  வங்கி கொள்ளைகளின் அதிர்ச்சியில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் , இதோ இன்று அதிகாலையில் வேளச்சேரியில் ஒரு வீட்டில் வைத்து ஐந்து கொள்ளைக்காரர்களும் தமிழக காவல்துறையால் சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள் ...

ஐந்து பேரை ஒரே நேரத்தில் என்கவுன்டர் செய்தது தமிழகத்தில் இதுவே முதல் முறை ... சில மணி நேரங்கள் நடந்த போராட்டத்தில் இரண்டு காவல்துறையினரும் காயப்பட்டிருக்கிறார்கள் ... இவ்வளவு துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை கண்டுபிடித்த காவல்துறையினரை பாராட்டினாலும் அவர்களை உயிருடன் பிடிக்காமல் ஐந்து பேரையும் என்கவுன்டர் முறையில் கொலை செய்தது அதிர்ச்சியையும் , இது தற்செயலாக நடந்ததா ? அல்லது திட்ட்டமிட்டு நடத்தப்பட்டதா ? என்ற சந்தேகத்தையும் ஒருசேர கொடுக்கிறது...

துல்லியமாக துப்பறிந்து ஒரு மாதத்திற்குள் கொள்ளையர்களை கண்டுபிடித்தவர்கள் முனைப்புடன் செயல்பட்டிருந்தால் சிலரையாவது நிச்சயம் உயிருடன் பிடித்திருக்கலாம் ... வங்கி கொள்ளையர்களுக்கே இந்த கதி என்றால் தமிழக காவல்துறையினர் மும்பை இரயில் நிலையத்திலோ அல்லது பாராளுமன்றத்திலோ இருந்திருந்தால் தூக்கு தண்டனையை கூட நிறைவேற்ற முடியாமல் தீவிரவாதிகளுக்கே  வக்கீலை ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் மத்திய அரசாங்கத்திற்கு பல கோடிகளாவது மிச்சமாகியிருக்கும் !...

தீவிரவாதிகள் மட்டுமல்லாமல் பல லட்சம் கோடிகள் கொள்ளையடித்தவ்ர்களே இந்த நாட்டில் சுதந்திரமாக உலா வரும் போது நடந்திருக்கும் என்கவுன்டர் பெரிய உறுத்தலையே கொடுக்கிறது ... பெருங்குடி வங்கி கொள்ளைக்கு பிறகும் சிசிடிவி பொருத்தாமல் அலட்சியமாக இருந்ததன் விளைவே கீழ்கட்டளை வங்கி கொள்ளைக்கு மூல காரணம் ... சென்னை போன்ற பெரு நகரங்களிலேயே பல வங்கி கிளைகளில் சிசிடிவி வசதி இல்லாதது வேதனைக்குரிய விஷயம் ... என்கவுன்டர் அதிர்ச்சி அலைகளை கிளப்பியிருந்தாலும் , இது போன்ற துணிகர செயல்களில் ஈடுபட இனி யாருக்கும் துணிவு வராது ...

தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தான் குற்றங்கள் குறையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை , அதே நேரத்தில் கொள்ளைக்காரகள் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவோ அல்லது அடுத்த மாநிலத்தவராகவோ இருந்திருந்தால் இதே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமா ? உண்மையிலேயே இறந்தவர்கள் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தானா ? அவர்களாகவே இருந்தாலும் தற்காப்புக்காக முட்டிக்கு கீழே தான் சுட வேண்டும் , அப்படியிருக்க தலையில் குண்டடி பட்டு இறந்திருக்கிறார்களே போன்ற கேள்விகளை மனித உரிமை கழகம் முன் வைத்தால் காவல்துறை என்ன பதில் சொல்லப்போகிறது ?

பிகார் மாநிலத்தின் நிலைப்பாடு என்ன ? ஊடகங்கள் நடந்த சம்பவத்தை பாராட்டப்போகின்றனவா ? அல்லது கண்டிக்கப்போகின்றனவா ? இப்படி நிறைய கேள்விகள் எழுந்தாலும் , பால் , பேருந்து கட்டண விலையுயர்வு , மின் வெட்டு போன்ற பல அதிருப்திகளில் மக்கள் இருந்தாலும் , சட்டம் - ஒழுங்கில் ஒரு பிரச்சனை என்றால் அதை நிலைநாட்டுவதற்கு தயவு தாட்சண்யம் பார்க்காமல் அ.தி.மு.க ஆட்சி நடவடிக்கை எடுக்கும் என்பதை அம்மா மீண்டும் ஒரு முறை மக்களுக்கு நிரூபித்திருக்கிறார் ...
 
Related Posts Plugin for WordPress, Blogger...