Showing posts with label POEM. Show all posts
Showing posts with label POEM. Show all posts

13 May 2013

மின்வெட்டு கவிதைகள் ...



மின்கட்டணம் உயர்ந்தும்
பணம் செலவாகவில்லை
மின்வெட்டுக்கு நன்றி ...!

இப்பொழுதெல்லாம்
உணவை பார்த்தவுடன்
காக்கைகள் கரைவதில்லை
காக்கைதொகை கூடிவிட்டதோ
மின்சாரம் கசியாததால் ...!

பக்கத்து வீட்டுக்காரியுடன்
இனி சண்டையில்லை
இருவரும் துணி உலர்த்த
மின்கம்பிகளையே
பயன்படுத்திக் கொள்கிறோம் ...!

பாட்டிகளை மீண்டும்
கதை சொல்ல வைத்த
மின்சார வாரியத்திற்கு நன்றி ...!

காதலியே
ஏன் அடிக்கடி
காணாமல் போய்  விடுகிறாய்
நீ
மின்வாரிய  ஊழியரின் பெண்ணோ ...?!



9 November 2012

ஓர் புன்னகை ...!





ஆணாய் பிறந்து
அழகாய் வளர்ந்து 
அன்பில் திளைத்து
அறிவை பெற்று 
சேட்டைகள் செய்து 
முதல் காதல் பெற்று 
பொருள் தேடி 
தினம் உழன்று
வாயைக் கட்டி
வயிற்றைக் கட்டி
வீட்டைக் கட்டி
விருப்பமான மனைவியுடன்
அதில் குடி புகுந்து
மனைவியின் முறைப்பையும்
பொருட்படுத்தாமல்
கிறுக்கல்களை வலைத்தளத்தில்
பதிவாய் பதித்து
அதற்கும் வரும்
பின்னூட்டங்களால்
பரவசம் அடைந்து
சுலப தவணைகளில்
வேண்டியதை பெற்று
சினிமாவை சிலாகித்து
சண்டைகள் போட்டு
சறுக்கி விழுந்து
மீண்டும் எழுந்து
பரிசுகள் குவித்து
பாராட்டில் நனைந்து
நித்தம் வாழ்க்கையில்
கிடைக்கும்
நிம்மதிகள் எல்லாம்
மகளே
கன்னக்குழி விழ 
நீ பூக்கும்
ஓர் புன்னகைக்கு
ஈடாகுமா ?!













2 September 2012

தமிழ் வலைப்பதிவர்கள் கவியரங்கம் - நட்பிற்கினியவளே ...!


ன்முறை இரண்டு பக்கமும் கூர்மையான ஆயுதம் என்றார் அறிஞர் அண்ணா ... என்னைப் பொறுத்த வரை கவியரங்கத்தில் கவிதை வாசிப்பதும் அது போலத்தான் ... கவிதை நன்றாக இருந்தால் பாராட்டு பெறலாம் இல்லையேல் கல்லடி தான் ... அதிலும் நமக்கு முன்பாக வாசித்தவர்களின் கவிதை சரியில்லை என்றால் நாம் வரும் போதே அரங்கத்தில் உள்ளவர்களின் கவனம் வேறு பக்கம் திரும்பி விடும் , அதே சமயம் அவர்கள் அருமையாக கவிதை வாசித்திருந்தால் நம் கவிதையும் அதற்கு ஈடு கொடுக்கும் படி இருக்க வேண்டும் , இல்லையேல் நாம் அம்பேல் ... ஏதோ ஒரு தைரியத்தில் நானும் எனது கவிதையை கவிதையை கவியரங்கத்தில் வாசிக்க முடிவு செய்தேன். ( எவ்வளவோ செஞ்சாச்சு இத செய்ய மாட்டோமா).
கேபிள் சங்கர் அவர்கள் வானமே வீழ்ந்தாலும் அவரது என்டர் கவிதையை படித்தே தீருவது என்று ஒற்றைக் காலில் நின்றதை பார்த்த போது எனக்கு மேலும் தைரியம் கூடியது ... மயிலன் கவிதைக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த போது எனக்கும் நம்பிக்கை பிறந்தது ...

எனக்கு அருகில் அமர்ந்திருந்தவர்களுடன் சேர்ந்து நானும் சில கவிதைகளை ஓட்டிக் கொண்டிருந்தேன் , பிறகு நானே கவிதை வாசிக்க போகிறேன் என்று தெரிந்த போது சுற்றியிருந்தவர்கள் சற்று அதிர்ச்சியுடன் என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு எஸ்கேப் ஆக பார்த்தார்கள் ... கவிதை சரியில்லை என்றால் குவாட்டர் வாங்கித் தருகிறேன் என்றெல்லாம் சொல்லி அவர்களை ஒரு வழியாக சமாதானப்படுத்தி வைத்தேன் ... கவிதை என்ற பெயரில் நான் கிறுக்க ஆரம்பித்தது பத்தாவது படிக்கும் போது தான் ... மதுரை கல்லூரியல் படிக்கும் போது திருச்சி ஆர்.ஈ.சி கல்லூரியில் கணையாழி ஆசிரியர் திரு.ஞானக்கூத்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கல்லூரிகளுக்கான கவிதைப் போட்டியில் " நட்பு " என்ற தலைப்பில் நான் வாசித்த எனது கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது ... அதன் பிறகு எந்த ஒரு மேடையிலும் கவிதை வாசிப்பதற்க்காக நான் ஏறியதில்லை ...

இது வரை எனது வலையில் பத்துக்கும் மேற்ப்பட்ட கவிதைகளை பதிவிட்டிருக்கிறேன் ...அவற்றுள்  " நட்பிற்கினியவளே  " , " உண்மையை சொல்கிறேன் " ,  அல்லது " தனிமை " இந்த மூன்றில் எதையாவது ஒன்றை வாசிக்கலாம் என முடிவு செய்து அருகிலிருந்த நண்பர் நண்டு @ நொரண்டுவிடம் ( அவர் தான் பாக்க எதையும் தாங்கும் இதயம் போல தெரிஞ்சாரு )எனது மொபைல் போனில் டவுன்லோட் செய்திருந்த கவிதைகளை காண்பித்தேன்... அவர் படித்து விட்டு முதல் கவிதையை தேர்ந்தேடுத்ததோடு மூன்றுமே நன்றாக இருக்கின்றன என்று பாராட்டினார் ( என்ன பெருந்தன்மை ! ) ...ஒருவழியாக எனது கவிதையை பெரிய பாதிப்பு எதுவும் இல்லாமல் ( யாருக்கு , யாருக்கோ ) வாசித்து முடித்தேன் ... கவியரங்கத்தின் போது சக பதிவர் சசிகலா அவர்களின் " தென்றலின் கனவு " என்கிற கவிதை தொகுப்பும்  பிரபல எழுத்தாளர் பி.கே.பி அவர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது ... மொபைல் போன் மூலம் கவிதை வாசித்ததை திரு.பி.கே.பி அவர்கள் தன் உரையின் போது நினைவு கூர்ந்தார்... இந்த கவிதையை தேர்ந்தெடுத்த ராஜசேகர் ( நண்டு @ நொரண்டு ) , படிக்க சொல்லி ஊக்கமளித்த கடம்பவன் ,  நான் கவிதை வாசிக்கும் போது  அதை படம் பிடித்து ட்விட்டருக்கும் அனுப்பி வைத்த சி.பி.செந்தில்குமார்  ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . இதோ உங்களுக்காக ( எதுக்கு இந்த பில்ட் அப் ! ) ...

                                                                        நட்பிற்கினியவளே ...!




வகுப்பறையில்
வேற்று கிரக வாசிகள் போல்
ஆண்களும் பெண்களும்
வெறுமையாய் அமர்ந்திருக்க
பார்வையிலேயே புரிந்து கொண்டு
கை குலுக்களில்
தொடங்கியது
நம் நட்பு....

நான்கே நாட்களில்
புரிந்து விட்டது
நட்பிற்கினியவள்
நீயென்று....

எவன் சொன்னது ?
பெண்ணின் மனது
பெண்ணிற்குத் தான்
தெரியுமென்று..
மௌனத்தில் நீயிருந்தும்
உன்
மனதைப் படிப்பதில்
சிறந்தவர்
எனைத் தவிர
வேறெவரும் உண்டா ?...

நம் நட்பு
உயிர் வாழ
நாம் சந்தித்த
சங்கடங்கள் பல
ஆனால்
நம் மனதில்
சஞ்சலங்கள் இருந்ததில்லை...


                                       
எனக்கு
இளையராஜா பிடிக்கும்
உனக்கு ஏ.ஆர்.ரஹ்மான்...
மதில் சுவரில் அமர்ந்து
மணிக்கணக்கில் 
சண்டைகள் போட்டிருக்கிறோம்...
என்
பிறந்த நாளில்
உன் பரிசாக
கைகளில் தவழ்ந்தது
இசைஞானியின் இசை பேழை...

சுயநலம் மறந்தும்
சுயத்தை இழக்கவில்லை...

வெட்கத்துடன்
திருமண அழைப்பிதழ்
கொடுத்த போது தான்
நீ
பெண் என்பதை
நான் உணர்ந்தேன்...

அதை
என் மூலம் கொடுத்து
ஊர் வாயை அடைத்தாய்...


என் காதலுக்கு
தூது போனவள்
நீ..
நம் நட்பை
கொச்சைப்படுத்திய காதலையே
தூக்கியெறிந்தவன்   நான்...

இன்று அவள்
எங்கே இருக்கிறாள்
தெரியவில்லை...

இத்தனை வருடங்கள்
ஆனாலும்
வாசம் மாறாமல்
வீசிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு...





21 August 2012

வலைச்சரத்தில் நான்...


திரு.சீனா அவர்களின் வேண்டுகோளை ஏற்று வலைச்சரத்திற்கு ஆகஸ்ட் 6 - 12 வரை நான் ஆசிரியர் பொறுப்பேற்று என்னால் முடிந்த வரை 21 பதிவர்களை அறிமுகம் செய்தேன் ... ஒரு மாதமாக தள்ளிப் போய்க் கொண்டேயிருந்த பொறுப்பினை ஒரு வழியாக நல்ல  படியாக முடித்ததில் எனக்கு மகிழ்ச்சி ...  அந்த ஒரு வாரத்தில் நான் பதிவு செய்த சில ஹைக்கூக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் ... இதில் எனது பழைய ஹைக்கூக்களும் அடக்கம் ... 

பெண்ணே ...!

ஆணாதிக்கம் பேசுகிறாய்

என்னை 
அடிமைப்படுத்திக்   கொண்டே ...

நீ சிரிக்கிறாய் 
பைத்தியக்காரனாவது 
நான் மட்டும் தான் ...

தொலைந்த என்னை தேடுகிறேன்
நீ கொடுத்த
உன் திருமண அழைப்பிதழில் ...

சுற்றுச்சூழல் 


மரங்கள் தலைப்பில் 
கவிதை வராமல் 
கசக்கி எறிந்தேன் காகிதத்தை ...

பகுத்தறிவு


கடவுளே இல்லை 
சொன்னவருக்கு 
சிலை வைத்தான் பகுத்தறிவுவாதி ...

ரசிகன் 


தியேட்டர் சண்டையில் 
வாயில் ரத்தம் வருத்தப்பட்டேன் 
விசிலடிக்க முடியாமல் போனதற்கு ....

எயிட்ஸ்


தீண்டாமை பெருங்குற்றம் 
தவறாக புரிந்து கொண்டார்கள் 
விளைவு எயிட்ஸ் ...





17 June 2012

வழிப்போக்கன் ...



மயிலிறகால் வருடிவிட்டு
முள்ளால் தைப்பது
போலிருந்தது
ஒரே நாளில்
நடந்து முடிந்த
நம் சந்திப்பு ...

உயிருக்கும் வரை
உறையப் போகும்
நினைவுகளுக்கு முன்னாள்
உன் பெயரொன்றும்
பெரிதில்லை ...

பார்வையிலேயே
புரிந்து போன பிறகு
பெயரெதற்கு ?

வெறுமையுடன் வந்து
அடி மனதில்
பத்திரப்படுத்திய
உன் புன்னகையுடன்
திரும்புகிறேன் ...

வாழ்க்கையை பொறுத்தவரை
நாம் அனைவருமே
வழிப்போக்கர்கள் தான் ...

வழிப்போக்கனின் வாழ்க்கையையும்
அர்த்தமாக்கிக் கொண்டிருக்கும்
இது போன்ற
கரையாத
கடந்த கால நிமிடங்கள் ...

அந்த நிமிடங்களின்
அனுபவ சுவைக்காக
நீடித்துக் கொண்டிருக்கும்
வழிப்போக்கனின் வாழ்க்கை ...


26 December 2011

ஹை ஹை ஹைக்கூ ...!




தேர்தல் 

ஐந்தாண்டுக்கு
ஒரு முறை ஆடும்
மங்காத்தா ...!

ஏழையின் கைகளில்
காந்தியை
காணும் நாள் ...!

ஐந்து வருட
அடிமை சாசனத்தில்
கைநாட்டு இடும் நாள் ...!

கள்ள காதல் 

அவளை பிடித்தது
அவளுக்கும் தான்
கணவனுக்கு மட்டும் ஏனோ ...!

வழி மேல்
விழி வைத்தேன் அவர்
வந்து விடுவாரோ என்று ...!

மரணம் 

நினைத்தாலும்
நிறுத்த முடியாத
நிகழ்வு ...!

நம் மேல்
வைத்த அன்பை
அடையாளம் காட்டும் உலகிற்கு ...!

துன்பத்திலிருந்து
விடுதலை பெற
தானாய் வந்த துருப்புசீட்டு ...!

குழந்தை 

நாம் காண முடியாத
நம் குழந்தை பருவத்தை
கண் முன் காட்டும் காணொளி ...!

முத்தம் 

காமமோ காதலோ
கடமையை செய்யும்
பரிமாற்றம் ...!

தற்கொலை 

கோழைகள்
எடுக்கும்
துணிவான முடிவு ...!
Related Posts Plugin for WordPress, Blogger...