கிட்டத்தட்ட வருடத்திற்கு 200 படங்கள் வரும் தமிழ் சினிமாவில் பத்து சதவிகித படங்கள் தான் வெற்றி பெறுகின்றன . அந்த பத்தில் பத்து சதவிகித படங்கள் தான் நம்மை பாதிக்கின்றன . அந்த வகையில் படம் பார்த்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் பாதிப்பு நீங்காத படம் விசாரணை . பொதுவாக போலீசாக வரும் ஹீரோ எவனாக இருந்தாலும் அடித்து துவைத்து லாக் அப்பில் தள்ளி வீர வசனம் பேசும் படங்களை பார்த்திருக்கிறோம் . அதிலும் மேலதிகாரிகளே ஹீரோ வந்தவுடன் எழுந்து நின்று வணக்கம் சொல்லும் கொடுமைகளும் உண்டு . அல்லது ரவுடியாக வரும் ஹீரோ போலீஸ் ஸ்டேஷனையே அடித்து நொறுக்குவதையும் , எல்லோரும் அவரை பார்ர்த்து பயந்து நடுங்குவதையும் பார்த்திருக்கிறோம் . இப்படி யதார்த்தத்திலிருந்து விலகி நிற்கும் படங்களையே பெரும்பாலும் பார்த்து சலித்துப் போன நமக்கு விசாரணை போலீஸ்காரர்களின் கறுப்புப் பக்கத்தையும் , அதிகாரம் பணமுள்ளவன் , இல்லாதவன் எவனையும் விட்டு வைப்பதில்லை என்பதையும் பொட்டிலடித்து சொல்கிறது . படம் பார்க்கும் நம்மை வெளி உலகை மறக்கடித்து அந்த கேரக்டர்களுக்குள் உலவ வைப்பதே இயக்குனரின் வெற்றி . அந்த வகையில் வெற்றிமாறன் மாபெரும் வெற்றிமாறன் ...
தன் சுயநலத்துக்காக மனிதர்கள் எந்த அளவு போகிறார்கள் என்பதை பதைபதைப்புடன் சொல்கிறது படம் . பொதுவாக அடுத்த தடவை ஒரு படத்தை பார்க்கும் போது நமக்கு நிறைய குறைகள் நமது கண்ணுக்கு தெரியும் . இந்த படத்தில் பசியோடு இத்தனை அடி வாங்கியும் குறையாத முருகதாசின் தொப்பை தவிர புதிதாக ( எனது விமர்சனத்தில் சொன்னதை தவிர ) பெரிய குறைகள் தென்படவில்லை . ஆனால் லீவு கூட எடுக்காமல் , பசி தாகம் பாராமல் உழைக்கும் போலீஷ்காரர்களும் இரூக்கும் வேளையில் ஒட்டுமொத்த போலீசின் மேல் ஒரு ,வெறுப்பு அல்லது பயம் அல்லது அருவருப்பு வரும் படியாக படம் இருக்கிறதே என்கிற ஆதங்கமும் வருகிறது . ஆனால் ஒரு இயக்குனராக படத்தின் மூலம் நமக்கு சொல்ல வேண்டியதை சரியாக சொல்லி விட்டார் வெற்றிமாறன் . பல ஊடகங்கள் படத்தை பாராட்டினாலும் இரண்டாவது அதிகபட்ச மார்க்காக 61 ஐ ( 16 வயதினிலே 62.5 ) வழங்கி படத்தை கவுரவித்திருக்கிறது ஆனந்த விகடன் . தனுஷ் + வெற்றிமாறன் தயாரிப்பில் கடந்த வருடம் வந்த காகாமுட்டை க்கு ஆவி 60 மார்க்குகள் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது . இப்போது மொபைல் வைத்திருக்கும் எல்லோரும் விமர்சகர்களாக மாறிவிட்ட நிலையிலும் ஆவி யில் என்ன மார்க் கொடுக்கிறார்கள் என்பதை ஆர்வமுடன் பார்க்கும் வாசகர்கள் எத்தனையோ பேர் இன்னும் இருக்கிறார்கள் . தூங்காவனத்திற்கு 42 , ரஜினிமுருகனுக்கு 43 என்று அவர்கள் கொடுக்கும் மார்க்குகள் நமக்கு சில சமயம் சிரிப்பை வரவைத்தாலும் பெரும்பாலும் அவர்கள் மார்க்குகள் சோடை போவதில்லை . ஆவி தொடர்ந்து படித்து வந்ததே நான் விமர்சனம் எழுவதற்கு ஒரு தூண்டுகோளாக இருந்தது என்றால் மிகையாகாது ...
விசாரணை விமர்சனத்திலும் ஆவிக்கே உள்ள நடையில் விரிவாக ( இவ்வளவு விரிவான விமர்சனம் நான் அதில் படித்ததில்லை ) தெளிவாக நிறைய நமக்கு படம் பார்க்கும் போது தோன்றாத கோணங்களில் இருந்தும் கூட விமர்சித்திருந்தார்கள் . ஆனால் கமல்ஹாசன் தனது சிறந்த சில படங்களில் கூட தேவையில்லாமல் சொந்த சித்தாந்தத்தை திணித்து பேரைக் கெடுத்துக்கொள்வது போல ஆனந்தவிகடன் செய்திருப்பது வேடிக்கை . அவர்கள் விமர்சனத்தில் வந்த சில வரிகள் இதோ :
# ``நம்மளைக் கொல்ல மாட்டாங்கடா'' என மற்ற நண்பர்கள் சொல்லும்போது, ``இல்லல்ல... கண்டிப்பா கொன்னுடுவாங்க’' என்கிறான் அப்சல். ஒரு முஸ்லிம் இளைஞனுக்கே உரிய உள்ளுணர்வு அது #. இந்த படத்தில் தினேஷ் உடன் வரும் மூவரில் அப்சல் என்ற முஸ்லீம் இளைஞனும் இருக்கிறான் . எல்லோரை விடவும் அவன் தான் சிறியவன் . மற்ற மூவரை பற்றிய தகவல்களை அடி தாங்க முடியாமல் போலீசில் மாட்டிவிட்டாலும் அவர்கள் கூட அவன் மேல் இரக்கப்படும் அளவிற்கு அப்பாவி . படத்தில் ஆவி சொன்னது போல் அவன் எங்கேயும் சொல்லவில்லை . குறிப்பாக சில இடங்களில் நம்மை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்கிற வகையில் தான் அவன் பேச்சு இருக்கிறது . மற்ற இருவரும் ஒரு வித குழப்பத்தில் இருக்க சமுத்திரக்கனியிடம் தையிரியமாக " எங்களை கொல்ல போறீங்களா சார் " என்று கேட்பவனும் அவனே . க்ளைமேக்சில் கூட நான் போய் கேட்கிறேன் என்று வேகமாக சென்று முதலில் உயிரை விடுபவனும் அவனே. படம் பார்த்தவர்களுக்கு நான் சொல்வது நன்றாக புரியும் . அப்படியிருக்க மீண்டும் # ``நம்மளைக் கொல்ல மாட்டாங்கடா'' என மற்ற நண்பர்கள் சொல்லும்போது, ``இல்லல்ல... கண்டிப்பா கொன்னுடுவாங்க’' என்கிறான் அப்சல். ஒரு முஸ்லிம் இளைஞனுக்கே உரிய உள்ளுணர்வு அது # என்கிற ஆவியின் விமர்சன வரிகள் இயக்குனரே யோசிக்காத ஏதோ புது கோணத்தை நமக்கு சொல்வது போல இருக்கிறது...
இதில் சொல்லப்பட்டது போல பார்த்தால் முஸ்லீம்கள் எல்லாம் ஒருவித பயத்தில் இங்கே ( தமிழகத்திலும் ) வாழ்ந்து கொண்டிருப்பது போல படுகிறது . எவ்வளவு விபரீதமான வார்த்தை விளையாடல் . போலீஸ் அடித்து துவைக்கும் போது எவனாக இருந்தாலும் பயப்படுவது சகஜம் தான் . இதில் எதற்கு தேவையில்லாத மதச்சாயம் ?! . ஊழல் செய்யும் கட்சிகள் எல்லாம் ஒன்று சேரும் போது பொத்தாம் பொதுவாக மதச்சார்பற்ற கூட்டணி என்கிற முகமூடியை போட்டுக்கொள்வது போல இருக்கிறது ஆவி யின் செயல் . அவர்களுக்கென்ன நெருக்கடியோ ?! . படத்தில் ரமேஷ் , சந்திரன் , முத்துவேல் என எல்லோருமே இந்துக்களாகவே இருக்கிறார்கள் அப்படியானால் வெற்றிமாறன் இந்துக்களுக்கு எதிரானவரா ? என்கிற கேள்வியை ஒருவர் எழுப்பினால் அது எந்த அளவிற்கு முட்டாள்தனமாக இருக்குமோ அதைப்போலத்தான் இருக்கிறது இவர்களின் விமர்சனம் . உலகம் முழுவதும் நடக்கும் குண்டு வெடிப்புகளைப் பார்த்தால் வீட்டை விட்டு வெளியே வரும் எந்த மதத்தை சேர்ந்தவனும் உயிர் பயத்தில் தான் வாழ வேண்டுமென்கிற சூழ்நிலையில் ஆனந்த விகடனின் விஷமத்தனமான விமர்சனம் வேதனையளிக்கிறது . அரசியல்வாதிகள் தான் தங்கள் பிழைப்புக்காக மதத்தை பயன்படுத்துகிறார்கள் என்றால் 100 வருடங்கள் கடந்து பத்திரிக்கை நடத்தும் ஆனந்த விகடனுக்கு அப்படி என்ன நிர்பந்தம் ?! . படத்திற்கு போடுகின்ற மார்க்குகளில் சில நேரங்கள் பிசகினாலும் அவர்களின் நேர்மையை சந்தேகிக்காத என்னைப் போன்ற வாசகர்களுக்கு சமுதாயத்தை பிளவுபடுத்துகிற இது போன்ற வார்த்தைகள் பேரிடி ...


