உள்ளத்தை அள்ளித்தா ,அருணாசலம் போன்ற வெற்றி படங்களை கொடுத்த சுந்தர்.சி நீண்டஇடைவெளிக்கு பிறகு தன் கலகலப்பான பாணியில் மசாலா கபேவில் களமிறங்கியிருக்கிறார் ...படம் அவருடைய வழக்கமான கலவை சாதம் தான் என்றாலும் சுவையாக தான் இருக்கிறது ...
தற்போது நொடிந்து போயிருக்கும் தன்;பரம்பரை ஹோட்டலான மசாலா கபேவை எப்படியாவது முன்னுக்கு கொண்டு வரவேண்டுமென்று துடிக்கிறார் விமல் ...
தன் குறுக்கு வழிகளால் விமலுக்கு உதவி செய்கிறார் அவருடைய ப்ரதர் சிவா ... மற்றொரு டிராக்கில் பத்து கோடி மதிப்புள்ள வைரத்தை செல்போனில் ஒளித்து வைத்து தன் மக்கு மச்சானிடம் பத்திரமாக(!) கொடுத்து அனுப்புகிறார் நகைவியாபாரி சுப்பு... செல்போன் சிவாவின் கைக்கு வர , மசாலா கபேவை முன்னுக்கு கொண்டு வந்தார்களா என்பதை நகைச்சுவை பட சொல்லியிருக்கிறார்கள் ...
படத்திற்கு ஹீரோவாக சிம்பிளான விமல் சரியான தேர்வு ... இடுப்பில் மிதி பட்டு முக்கால் வாசி படத்திற் மேல் இவர் நொண்டி நொண்டி நடப்பதை பார்க்கவே பாவமாக இருக்கிறது ... விமல் ஹோட்டலை முன்னேற்ற செய்யும் முயற்சிகளையும் , அவை நேர் மாறாக முடிவதையும் ஆரமபத்திலேயே மாண்டேஜ் சாங்கில் அழகாக சொல்லி விடுகிறார்கள். அதனால் தானோ என்னவோ தொடர்ந்து வரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் கொஞ்சம் போரடிக்கவே செய்கின்றன ...
முகத்தில் ரியாக்ஷனே இல்லாமல் நடித்தாலும் கைதட்டல் பெறுகிறார் சிவா...காதலிக்காக இவர் சூப்பர் மார்க்கட்டில் பொருட்களை களவாடும் இடம் கல கல ... முதல் பாதியின் சிரிப்பு சிவா பொறுப்பென்றால் இரண்டாம் பாதியை மூன்றாவது ஹீரோ சந்தானம் கையிலெடுத்துக் கொள்கிறார்.. அஞ்சலியின் முறைப்பையனாக இவர்செய்யும்காமெடி பழைய ப்ளாட் தான் என்றாலும் இவர் பாணியில் செய்து ரசிக்க வைக்கிறார் ...
விமலுக்கு ஜோடியாக அஞ்சலியும் ,சிவாவிற்கு ஜோடியாக ஓவியாவும் போட்டி போட்டு கொண்டு திறமையை காட்டியிருக்கிறார்கள் ... அதிலும் முன்னவரே ஜெயிக்கிறார் ...விஜய் எபனேசர் இசையில் படத்தில் " இவளுக இம்சை " தவிர மற்ற பாடல்கள் எல்லாமே இம்சையாக இருக்கின்றன...
போலிசாக வரும் ஜான் விஜய் , அவருக்கு பயந்து மாறு வேடத்தில் அலையும் இளவரசு , மண்டையில் அடிபட்டு சௌத்ரி , வால்டர் என்றெல்லாம் உலறும் போலீஸ்காரர் , எதை தூக்கி போட்டாலும் கொண்டு வந்து கொடுக்கும் நாய் , சுகர் மாத்திரை போட்டுக் கொள்ளும் அடியாள் இப்படி பல கதாபாத்திரங்களை வைத்து தனக்கு தெரிந்த திரைக்கதையை தெளிவாக செய்திருக்கிறார் சுந்தர் .சி ... சந்தானம் என்ட்ரிக்கு பிறகு படத்தை முடியும் வரை விறுவிறுவென கொண்டு செல்கிறார்கள் ...
கிரி படத்தில பேக்கரியை உயர்த்த வடிவேலு -அர்ஜுன் செய்யும் காமடியை மையக்கருவாக வைத்துக்கொண்டு மேட்டுக்குடி , நாம் இருவர் நமக்கு இருவர் பட சமாசாரங்களை திரைக்கதையில் புகுத்தியது , கவர்மென்ட் வேலை பார்க்கும் அஞ்சலி போகிற போக்கில் அதை கண்டு கொள்ளாமல் சொந்த வேலையாக அலைவது , பாடல்கள் , ஏற்கனவே பார்த்து பழகிப் போன காட்சிகள் இவையெல்லாம் புல் மீல்ஸ் ஆக இருந்திருக்க வேண்டிய மசாலா கபேவை மினி மீல்ஸ் ஆக மாற்றுகின்றன ...
ஸ்கோர் கார்ட் : 40


