யுவனின் இசை , கிருஷ்ணாவின் முந்தைய இரண்டு படங்களும் தந்த எதிர்பார்ப்பு இரண்டுடனும் சேர்ந்து படத்தின் போஸ்டர்களும் படத்தை பார்க்க தூண்டின ... இப்படி கவனத்தை ஈர்க்க கூடிய சமாச்சாரங்கள் மட்டுமன்றி நம்மை கட்டிப்போட கூடிய கதைக்களம் இருந்தும் அதை புதுமுக இயக்குனர் சத்யசிவா முழுமையாக பயன்படுத்திக்கொள்ளாதது துரதிருஷ்டமே !
சேரா ( கிருஷ்ணா ) , சித்தப்பு ( தம்பி ராமையா ) , நண்டு ( கருணாஸ் ) மற்றும் ஒரு கூட்டாளி என நால்வரும் கொடைக்கானலில் மலை உச்சியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் பிணங்களை மேலே எடுத்து வரும் வேலையை தொழிலாக செய்கிறார்கள் ... அன்பு , பாசம் எதைபற்றியும் அலட்டிக்கொள்ளாத கிருஷ்ணாவின் மேல் தற்கொலை செய்து கொண்ட தன் தங்கையின் பிணத்தை எடுக்க உதவியதால் காதல் வயப்படுகிறார் கவிதா
( பிந்து மாதவி ) ... இவர்கள் காதல் , கல்யாணத்தில் முடிந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார் கள்ளகடத்தல் தொழில் செய்து வரும் அந்த ஊரின் பெரிய மனிதர் அய்யா ( ஜெயப்ரகாஷ் ) ... கடைசியில் கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்தாலும் யூகிக்க முடிந்த க்ளைமாக்ஸ் உடன் முடிகிறது படம் ...
அலிபாபா , கற்றது களவு படங்களை தொடர்ந்து மற்றுமொரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கிருஷ்ணா ... முந்தைய படங்களை விட நடிப்பில் மெருகேறியிருந்தாலும் இன்னும் அவர் போக வேண்டிய தூரம் நிறைய ... சடலங்களை பீசு என்று சொல்லி கூட்டாளிகளுடன் பேசும் போது யதார்த்தத்தையும் , க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் ஆக்ரோஷத்தையும் நடிப்பில் நன்றாகவே காட்டுகிறார் . ஆனால் இவர் உதட்டில் பூசப்பட்ட வெள்ளைச்சாயம் ஏனோ அந்த யதார்த்தத்தை காட்டவில்லை ...
ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு பிந்து மாதவி நல்ல தேர்வு ... காதல் ,சோகம் ,ஏக்கம் எல்லாமே அவர் கண்களில் சரளமாக வருகின்றன , அதைப்போலவே ஹீரோ எப்படிப்பட்ட பஞ்ச பரதேசியாக இருந்தாலும் எந்த காரணமும் இல்லாமல் அவன் மேல் ஹீரோயினுக்கு வரும் காதலும் இவருக்கும் வருகிறது...
தம்பி ராமையா , கருணாஸ் இருவரும் தங்கள் டைமிங் காமெடிகளால் படத்தை நன்றாக நகர்த்தி செல்கிறார்கள் ... முன்னவரின் பேச்சு கொஞ்சம் ஓவராக இருந்தாலும் படம் போகிற போக்கில் தெரியவில்லை , அதிலும் குறிப்பாக கோட் திருடிவிட்டு தம்பி ராமையா ஓடும் போது தியேட்டர் அதிர்கிறது ... ஜெயப்ரகாஷிற்கு வெள்ளை வேட்டி , சொட்டருடன் வந்து போவதை தவிர பெரிய வேலை ஒன்றுமில்லை ... நல்ல நடிகரான இவரை வழக்கமான வில்லனாக மாற்றி விடாமல் தவிர்ப்பது நலம் ...
யுவனின் இசையில் ஆம்பளைக்கும் பாடலும் , அவர் குரலில் பட்டமரம் பாடலும் கழுகாய் மனதை கொத்துகின்றன , ஆனால் பின்னணி இசையில் ஏதோ பழைய நெடி ... சத்யாவின் ஒளிப்பதிவு கொடைக்கானல் மலைப்பகுதிகளை கண்முன் கொண்டுவருகிறது ... படம் முழுவதும் தன் லைட்டிங் மூலம் நல்ல பீல் கொடுத்திருக்கிறார் ...
உட்கார்ந்த இடத்திலேயே பல லட்சங்களை சம்பாதிக்கும் இந்த காலத்தில் சில ஆயிரங்களுக்காக உயிரையே பணயம் வைத்து மலை உச்சியில் பயணம் செய்பவர்களை பற்றிய கதை , அவர்களின் நடைமுறை சிக்கல்களையும் , வாழ்க்கை முறையையும் சில காட்சிகளிலேயே விளக்கிய விதம் , விறுவிறுப்பாக செல்லும் முதல் பாதி , ஒளிப்பதிவு , பாடல்கள் , ஹீரோயின் நடிப்பு இவையெல்லாம் கழுகின் சிறப்பம்சங்கள் ,
முன்பே குறிப்பிட்டது போல நல்ல கதைகளம் இருந்தும் அதனை முழுவதும் பயன்படுத்தாமல் விட்டது , சுவாரசியமாக ஆரம்பிக்கும் படம் காதல் , வில்லன் என வழக்கமான ரூட்டில் பயணிப்பது , தங்கை செத்து சில நாட்கள் கூட முடியாத நிலையில் காதல் வயப்படும் ஹீரோயின் கதாபாத்திரம் , வில்லன் எதை கடத்துகிறார் என்பதை சரியாக விளக்காத திரைக்கதை , ஊரே பயப்படும் வில்லனை ஹீரோ சட்டையே செய்யாதது , வில்லனின் அடியாட்கள் போலீஸ்காரர்களை பணம் கொடுத்து சரி செய்ய முயற்சிக்காமல் உடனே கொலை செய்வது போல காட்டுவது , ஆங்காங்கே பருத்திவீரனின் பாதிப்புகள் இவையெல்லாம் கழுகின் பழுதுகள் ...
படம் பாதிப்பை ஏற்படுத்தினாலும் ஹீரோ - ஹீரோயின் காதல் , ஹீரோ - வில்லன் மோதல் ஆகிய இரண்டு முக்கியமான விஷயங்களிலும் போதுமான அழுத்தம் கொடுக்காததால் இயக்குனரால் அந்த பாதிப்பை நம் மேல் முழுவதுமாக தக்க வைக்க முடியாமல் போனதே கழுகின் குறை ...
ஸ்கோர் கார்ட் : 41



