இன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தன் மூன்றாவது தோல்வியை தொடர்ந்து பதிவு செய்திருக்கிறது ... வழக்கம் போல இந்த தோல்வியின் மூலமும் ஒரு போனஸ் புள்ளியை எதிரணிக்கு வாரி வழங்கிய இந்திய அணி , முத்தரப்பு தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை
பெரும்பாலும் இழந்து விட்டது ...
அதே நேரத்தில் இந்தியாவின் தேசிய விளையாட்டாக இருந்தாலும் கிரிக்கெட் என்னும் சுனாமியால் ஒரங்கட்டப்பட்டிருந்த ஹாக்கி இன்று பிரான்சுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய ஹாக்கி ஆடவர் அணி 8-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்று லண்டனில் நடைபெறவிறுக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றதன் மூலம் உயிர்த்தெழுந்திருக்கிறது...
வெற்றி , தோல்விகள் விளையாட்டில் சகஜம் என்றாலும் உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ சஹாராவுடன் நடந்த தகராறு , ஐ.பி.எல் குளறுபடிகள் , நியோ ஸ்போர்ட்ஸ் சேனலுடன் ஒப்பந்த முறிவு , வெளிநாடுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகள் , டி.ஆர்.பி ரேட்டிங்கில் பின்னடைவு , கடைசியாக தோனி - சேவாக் இடையேயான வெளிப்படையான ஈகோ சண்டை இவற்றால் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் , கேடபாரற்று கிடந்த ஹாக்கி அணி ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகளில் லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றதோடு இன்று இறுதி ஆட்டத்தில் 7 கோல்கள் வித்தியாசத்தில் பிரான்சை வென்று எழுச்சி அடைந்து வருவது ஒரு பெரிய மாற்றத்திற்கான அடிகோலாக அமைந்திருக்கிறது ...
ஒரு நாள் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் சிக்ஸ் , போர் என்று விளாசிக்கொண்டிருக்க இந்திய ஹாக்கி குழு விளையாட்டை மேம்படுத்த எவ்வித முயற்சியும் செய்யாமல் குளறுபடிகளில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தது ஹாக்கியை மேலும் , மேலும் பலவீனப்படுத்தியது.. தன்ராஜ் பிள்ளைக்கு பிறகு பெரிய வீர்கள் யாரும் இல்லாமல் ஹாக்கி தத்தளித்துக் கொண்டிருக்க கிரிக்கெட்டிலோ சச்சின் , கங்குலி , டிராவிட் , தோனி என நட்சத்திர வீர்களின் ஜொலிப்பில் ரசிகர்கள் தன்னை மறந்தார்கள்.
சினிமாவோ , விளையாட்டோ தோல்வி அடைவதை ரசிகன் விரும்புவதில்லை , எனவே ஹாக்கியின் தொடர் தோல்விகள் அந்த விளையாட்டை முற்றிலுமாக மறக்கடிக்க செய்தன ...
இப்படி ஜாம்பவானாக இருந்து வெற்றிகளையும் தாண்டி இந்திய விளையாட்டு துறைக்கே சவால் விடுமளவு விஸ்வரூப வளர்ச்சி பெற்ற பி.சி.சி.ஐ இன்று அடுத்தடுத்து சந்தித்து வரும் சறுக்கல்களை சமாளிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல அமைந்திருக்கிறது இன்றைய தோல்வி...
ஐ.பி.எல் லில் கிடைக்கும் கோடிக்கணக்கான பணமும் , புகழும் இளம் கிரிக்கெட் வீரர்களை டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு தேவையான பொறுமையையும் , திறமையையும் சிதைத்து வருவதே இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணம்..இது நன்கு தெரிந்திருந்தும் போட்டிகளின் மூலமும் , விளம்பரங்கள் மூலமும் குவியும் கோடிகள் அனைவரின் வாய்களையும் அடைத்துவிடுகின்றன ...
இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டிகளில் ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடியிருந்த மைதானங்கள் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளின் மேல் ரசிகர்களுக்கு இருந்த ஆர்வம் குறைந்து வருவதையே பறை சாற்றுகின்றன , இதற்கு கூட முக்கிய காரணம் ஐ.பி.எல் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தும் என்ன பயன் ? எல்லோரும் பணத்திற்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்க பூனைக்கு யார் மணி கட்டுவார்கள் என்பதை விட ஏன் மணி கட்ட வேண்டும் என்றே நினைக்கிறார்கள் ...
உலககோப்பை வெற்றியை தொடர்ந்து நடந்த ஒரு டாக் ஷோவில் கவாஸ்கரிடம் ஏன் எல்லோரும் கிரிக்கெட்டின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு வெற்றியை மட்டுமே ரசிகர்கள் விரும்புவார்கள் என்று புன்னகையுடன் பதில் சொன்னார்...இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றால் கவாஸ்கரின் கூற்று உண்மையாவதற்கும் , சச்சின் , தோனி என்று சொல்லி வரும் ரசிகர்களின் உதடுகள் சந்தீப் , மன்ப்ரீத் என்று சொல்வதற்குமுண்டான வாய்ப்புகள் மிக பிரகாசமாகவே உள்ளன ...



