Showing posts with label ajith. Show all posts
Showing posts with label ajith. Show all posts

1 March 2022

வலிமை வென்றதா ? Valaimai Tamil Movie Review


பொதுவாக மாஸ் ஹீரோ படம் என்றாலே எதிர்பார்ப்பு இருக்கும் அதுவே அந்த ஹீரோவின் படம் இரண்டு வருடங்களுக்குப் பின் அதுவும் ஹேட்ரிக் ஹிட் கொடுத்த இளம் இயக்குனரின் காம்போ வில் வந்தால் எதிர்பார்ப்பு எகிறாதா ?!  அஜித் - வினோத் காம்போ வில் அப்படி வந்திருக்கும் வலிமை வென்றதா? பார்க்கலாம் ... 

தங்கப்பதக்கத்திலிருந்து தற்போது வந்த ருத்ர தாண்டவம் வரை பார்த்துப் பழகிய நேர்மையான போலீஸ் அதிகாரி க்கும் எதிர்மறை வில்லனுக்கும் இடையே நடக்கும் மோதல் தான் வலிமை . அதில் நடுநடுவே மானே தேனே என்று காதல் காட்சிகளை வைக்காமல் அம்மா சென்டிமெண்டை கொட்டியிருக்கிறார் வினோத் ‌‌. அது என்னவோ ஹாலிவுட் படத்தையும் , பழைய தமிழ் படத்தையும் ரிமோட்டில் மாறி மாறி பார்த்த அனுபவத்தை கொடுப்பது தான் துரதிருஷ்டம் ...

அஜித் சட்டை யை கழட்டி வைத்து சண்டை போடவில்லை , பறக்க பறக்க பஞ்ச் டயலாக் பேசவில்லை ஆனால் பைக்கில் பறந்து பறந்து சட்டை போட்டு அதகளப்படுத்துகிறார் . வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் நடிப்பது ஆறுதல் என்றாலும் க்ளோஸ் அப் காட்சிகளில் வயது தெரிவதை தவிர்த்திருக்கலாம் . ஹீரோயின் இல்லை என்கிற குறையை ஹிமா குரேசி நீக்குகிறார் . தம்பி கேரக்டர் ட்விஸ்ட் என எதிர்பார்த்து வைத்திருந்தால் அது தான் வொர்ஸ்ட் . தெலுகு இறக்குமதி வில்லன் கார்த்திகேயன் கலக்கல் நடிப்பு ஆனால் அவர் பாத்திரப் படைப்பு அந்த அளவு கவரவில்லை ‌‌...

அஜித் , ஆக்சன் காட்சிகள் , இசை , ஒளிப்பதிவு எல்லாமே படத்திற்கு பலம் ஆனால் ஆக்சன் திரில்லர் படத்தை விறுவிறுப்பாக இரண்டு மணி நேரத்தில் முடிக்காமல் இரண்டாம் பாதியை இழுத்து அம்மா சென்டிமெண்டை கலந்தடித்தது பலவீனம் . சிலர் கழுவி ஊற்றும் அளவு படம் அவ்வளவு மோசமில்லை அதிரடி ஆக்சன்களுக்காக குடும்பத்துடன் ஒரு முறை பார்க்கலாம் . மொத்தத்தில் பைக் ரேஸர்சை மையமாக வைத்து வந்திருக்கும் இந்த வலிமை பைக் புதுசு இன்ஜின் பழசு ...

ஸ்கோர் கார்ட். : 41 

ரேட்டிங்க். : 2.5 * 

இந்த படத்தின் வீடியோ விமர்சனத்தை Vanga Blogalam YouTube Channel ல் காணவும் 🙏 ...

அனந்து ...

13 November 2015

அஜித் Vs விஜய் (4) - AJITH Vs VIJAY (4) - THE CONCLUSION ...


ந்த பதிவை படிப்பதற்கு முன்னால் இது  தொடர்பான முந்தைய மூன்று பதிவுகளையும் படித்து விட்டு வருவது நல்லது . அதே போல இந்த பதிவு அஜித் , விஜய் இருவரில் யார் சிறந்த நடிகர் என்பதற்கானது அல்ல . அந்த வகையில் பார்த்தால் இது விக்ரம் , சூர்யா ( இவர் நடிப்பு சமீபகாலமாக  ஒரே மாதிரியாக இருந்தாலும் ) , தனுஸ் ஆகியோருக்கான பதிவாக இருந்திருக்கும். ஆனால் இவர்கள் மூவரை விட இன்றைய தேதியில் அதிக அளவு ரசிகர் பட்டாளத்தையும் , பிசினசையும் வைத்திருப்பது இவ்விருவர் மட்டுமே . இந்த தெளிவோடு பதிவை தொடரவும் ...

இதை எழுதும் அதே நேரத்தில் தீபாவளி அன்று ரிலீசான வேதாளத்தின் முதல் நாள் கலெக்சன் தமிழ்நாட்டில் மட்டும் 15.5 கோடி என்பது நிறைய பேருக்கு செய்திகள் வாயிலாக தெரிந்திருக்கும் . இதன் நம்பகத்தன்மையை ஆராய்வது ஒரு புறம் இருக்கட்டும் . ஆனால் நிச்சயமாக பெரிய வித்தியாசம் இருக்காது . ஏனெனில் படம் தமிழகத்தில் மட்டும் 530 ஸ்க்ரீன்கள் ரிலீஸ் ஆகியிருக்கிறது. முதல் நாள் அதுவும் தீபாவளி என்பதால் சின்ன தியேட்டரிலேயே 4 ஷோக்களுக்கு குறைவாக இருக்காது . அதிலும் மாயாஜால்  போன்ற மல்டிப்ளெக்சுகளை கணக்கில் கொண்டால் குத்து மதிப்பாக 6 ஷோக்கள் வைத்துக்கொள்ளலாம் . இதை பெருக்கிப் பார்த்தல் மொத்தம் 3180 ஷோக்கள் வருகின்றன . தோராமயமாக ஒரு ஷோவை 500 பேர் பார்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் . இதன் படி மொத்தம் 1590000 பேர் படத்தை முதல் நாள் பார்த்திருக்கிறார்கள் . டிக்கெட் விலை முதல் நாள் பெரிய ஹீரோ படத்துக்கு 120 க்கு குறைவாக நிறைய தியேட்டர்களில் இருக்காது . இருந்தாலும் ரூ .100 என்று  எடுத்துக்கொண்டால் மொத்தம் 15.9 கோடிகள் வருகிறது . இந்த படத்திற்கு அரசின் வரிச்சலுகை உண்டு என்பதால் மொத்தத்தையும் அப்படியே கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் . ( என்ன ரமணா விஜயகாந்த் ரேஞ்சுக்கு போய்க்கிட்டுருக்கு ! ) ...

இதை சொல்வதற்கு காரணம் எந்த ஒரு பெரிய ஸ்டார் படம் வந்தாலும் , குறிப்பாக அஜித் , விஜய் படம் வந்தால் அவர்களின் ரசிகர்கள் நெட்டில் அடித்துக்கொள்வது இந்த வசூலை வைத்துதான் . என்னை அறிந்தால் முதல் நாள் வசூலை புலி  முறியடித்தது என்று விஜய் ரசிகர்கள் சொன்னால் இப்போது வேதாளம் , விஜய் நடித்த கத்தி படத்தின் முதல் நாள் வசூலை ( 12.5 கோடி ) முறியடித்து விட்டது என்று அஜித் ரசிகர்கள் சொல்கிறார்கள் . ஆனால் எந்த ஒரு படமும் முழுமையான் வெற்றி பெறுவதற்கு முதல் நாள் வசூல் மட்டும் போதாது . 20 - 20 மேட்சில் முதல் பத்து ஓவருக்கு 120 ரன்கள் எடுத்து ஆள் அவுட் போலத் தான் இதுவும் . இதற்கு தனிஒருவன் , பாபநாசம் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம் . ஒப்பனிங்  குறைவாக இருந்தாலும் மவுத் பப்ளிசிட்டி மூலம் இரண்டு படங்களும் 50 நாட்களை கடந்து ஓடி நல்ல வசூலை குவித்தன . ( எல்லாம் குடும்பத்தோட போய் நம்ம எழுதுற 120 ரூவா மொய் தான் ) ...


சரி மேட்டருக்கு வருவோம் . படத்துக்கு மிக்சட் ரெஸ்பான்ஸ் இருப்பதால் அஜித்தின் வேதாளம் 100 கோடி வசூலை தாண்டி இந்த வருடத்தின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஆக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . ஆனால் தல படம் லிங்கா , கத்தி படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்து விட்டது  என்பதே நிதர்சனம் . அதிலும் உலகநாயகனின் படத்தோடு ரிலீசாகி இந்த சாதனையை படைத்திருப்பது சத்தியமாக எதிர்பார்த்திராத ஒன்று . என்ன தான் வசூலை குவித்திருந்தாலும்  அஜித்துக்கு இருக்கும் மாஸுக்கு வேதாளம் படமாக சரியான தீனி அல்ல என்பதே என் கருத்து ...


மங்காத்தா படம் முடிந்து வரும் போது அஜித்துக்கு இருக்கும் ஒபெனிங்கை பார்த்து விட்டு ஒரு சினிமா நண்பரிடம் பேசினேன் . அவரோ ரொம்ப கேசுவலாக இதெல்லாம் கொஞ்ச நாள்ல காணாமல் போயிடும் என்றார் . அதோடு ஷங்கர் , ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் படங்கள்  வந்து விட்டால் அஜித்தை யாரும் சீண்ட மாட்டார்கள் என்றும் சொன்னார் . அவர் சொன்னதை ஈசியாக விட முடியாதற்கு காரணம் அவர் சினிமா வட்டாரத்தில் நல்ல தொடர்புள்ளவர் என்பதோடு கண்டிப்பாக விஜய் ரசிகர் இல்லை . ஆனால் அவர் சொன்னது போல் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று நான் ஆணித்தரமாக நம்பினேன் . அன்றிருந்த நம்பிக்கை பத்து வருடங்களுக்கு முன்னால் எனக்கு அஜித் மேல் இருந்ததில்லை . எங்கள் பேச்சிலர் ரூமுக்கு வரும் நண்பன் பக்கா அஜித் ரசிகன் . அதிலும் சிட்டிசன் படத்தின்  " நான் தனி ஆள் இல்ல " என்ற வசனத்தை அவன் அஜித் போலவே பேசுவான் . அஜித் மேல் எந்த ஈடுபாடும் இல்லாத நாங்களோ அவனை ஓட்டுகிற ஓட்டில் ரூம் பக்கம் வருவதையே நிறுத்திக்கொண்டான் . நாங்களும் " மாப்புள அத்திப்பட்டி மாதிரி அவனும் காணாம போயிட்டாண்டா " என்று சொல்லி சிரித்துக் கொள்வோம் ...

என் கல்லூரி காலங்களில் அஜித்தை விட விஜய்க்கு தான் கூடுதல் மாஸ் இருந்தது . அவரை போலவே ரிம்லெஸ் க்ளாஸ் , டிசர்ட் அதே ஸ்டைலுடன் நிறைய பேரை பார்க்க முடியும் . காதல் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்த விஜய் மேல் பெண்களுக்கும் நிறைய கிரேஸ் இருந்தது , நானோ ஒன்ஸ்மோர் படம் முடிந்தவுடன் ஒன்ஸ்மோர் பார்க்கலாமா என்று கேட்ட நண்பனை செவுட்டில் அறையலமா என்று கேட்பது போல பார்த்தேன் .  ஆனால் என்னைத் தவிர அங்கிருந்த எல்லோரும் படத்தை என்ஜாய் பண்ணி பார்த்தார்கள் . இதே நிலைமை தான் விஜய் நடிப்பில் வந்த துள்ளாத மனமும் துள்ளும் பார்த்த போதும் . இப்படி விஜய் , அஜித் இருவருமே தனிப்பட்ட முறையில் பெரிதாக கவர்ந்ததில்லை . அதே சமயம் வாலி படத்தை பார்த்த பிறகு இயக்குனராக வேண்டுமென்கிற வெறி அதிமாகி  எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக சேர்வதற்கு சென்னை வந்தது இன்றும் நினைவிருக்கிறது . அது தனிக்கதை ...

இப்படி ஈக்குவலாக போய்க்கொண்டிருந்த ட்ராக் சொல்லப்போனால் அஜித்தை விட அதிக வெற்றிகளின் காரணமாக விஜயின் க்ராஃப் மேலே இருந்த நேரத்தில் பில்லா வின் வெற்றி ரஜினியின் ரசிகர்கள் பலரை அஜித் பக்கம் ஈர்த்தது . கடந்த ஆட்சியில் முதலமைச்சர் கலைஞர் அமர்ந்திருந்த மேடையிலேயே தங்களை வலுக்கட்டாயமாக அழைத்து வருகிறார்கள் என்று அஜித் தைரியமாக சொன்னதும் ,  அதற்கு சூப்பர் ஸ்டார் எழுந்து நின்று கை தட்டியதும் பலரை புருவம் உயர்த்த செய்தது . இந்த சம்பவம் நடுநிலையாளர்கள் பலரை அஜித் பக்கம் கொண்டு போனது  . நிஜத்திலும் லார்ஜர் தென் லைஃப் ஹீரோ போல அஜித் பார்க்கப்பட்டார் . விஜய் போல பிறந்த நாளுக்கு நலத்திட்ட உதவிகள் பெரிதாக எதுவும் செய்யாத போதும் அஜித் மேல் உள்ள ஈர்ப்பு அடிமட்ட ரசிகர்களுக்கு குறையவில்லை ...


குடும்பத்தோடு பார்ப்பதற்கு விஜய் படங்கள் தான் மினிமம் கேரண்டி . அதில் பாட்டு , டான்ஸ் , காமெடி என்று சாமானியனை கவரும் அம்சங்கள் நிறையவே உண்டு . விஜய்யிடம் எப்போதும் ஒரு துறுதுறுப்பு இருந்து கொண்டே இருக்கும் . அஜித் தை விட மூன்று வயதே( 41 )  சின்னவராக இருந்தாலும்  பார்ப்பதற்கு இன்னும் சின்னப்பையன் போல இருப்பது விஜய்க்கு ப்ளஸ் . அதனால் தான் ஏகன் படத்தில் கல்லூரிக்கு போன அஜித்தை அவர் ரசிகர்களே கிண்டல் செய்த போதும் விஜயை காவலனில் யாரும் கிண்டல் செய்ததில்லை . பலரால் கிண்டல் செய்யப்பட்ட வேலாயுதம் , புலி போன்ற படங்கள் கூட 60 , 70 கோடிக்கு மேல் வசூலை குவித்திருக்கின்றன ...

கிட்டத்தட்ட இருவருமே சம பலத்தோடு இருப்பது போல பட்டாலும் விஜய்யின் 50 வது படமான சுறா சுருட்டி வாரிக்கொள்ள அஜித்தின் 50 வது படமான மங்காத்தா சக்கை போடு போட்டது . அஜித்துக்கு இந்த வெற்றி மற்றுமொரு திருப்புமுனை . விஜய் ரசிகர்கள் அஜித்தின் மிகப்பெரிய ஹிட்டான மங்காத்தா, ஆரம்பம் இரண்டுமே அர்ஜுன் மற்றும் ஆர்யா இருந்ததால் அஜித்தின் தனிப்பட்ட வெற்றி கிடையாது என்றும் சொல்கிறார்கள் . இது ஒரு சப்பை காரணம் போல் பட்டாலும் விஜய் சோலோ ஹீரோ வாக நடித்த துப்பாக்கி , கத்தி இரண்டுமே மிகப்பெரிய ஹிட் என்பதையும் மறுக்க முடியாது . கத்தி , துப்பாக்கி இரண்டுமே விஜய் எனும் ஹீரோவையும் தாண்டி  படமாகவும் நல்ல படங்கள் . வேதாளத்தை நிச்சயம் அந்த வரிசையில் சேர்க்க முடியாது . ஆனாலும் அந்த படங்களை தாண்டி வேதாளம் வசூலைக் குவித்ததைத்  தான் அஜித் தின் பலம் என்கிறார்கள் . அதாவது விஜய் ஒரு படம் ஹிட் கொடுக்க கதை , திரைக்கதை , இயக்கம் எல்லாமுமே கை கொடுக்க வேண்டியிருக்கிறது , அதாவது அவர் மெனெக்கெட வேண்டியிருக்கிறது . ஆனால் தல ஸ்க்ரீனில் நின்னாலே போதும் படம் ஹிட் என்கிற கருத்து பரவலாக நிலவுகிறது . இது ஆரோக்கியமான விஷயமாக இல்லாமல் போனாலும் ஒரு மாஸ் ஹீரோவுக்கு தேவையான ஸ்க்ரீன் ப்ரெசென்சில் அஜித் முன்னே நிற்கிறார் . அதனால் தான் சக ஹீரோக்களே தல தல என்று அஜித்தை கொண்டாடுகிறார்கள் ...

இரண்டு ஹீரோக்களையும் இவ்வளவு  நேரம் அலசினாலும் இறுதி முடிவை மக்கள் கையிலே விட்டு விடுகிறேன் . மக்கள் தீரப்பே மகேசன் தீர்ப்பு . இந்த பதிவுக்கு கீழ் யார் பெஸ்ட் என்கிற தலைப்பில் அஜித் , விஜய் இருவரின் பெயரும் இருக்கும் . நீங்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டுமோ அந்த புள்ளியை அழுத்தவும் . வருகிற 18 ஆம் தேதியோடு வாக்கெடுப்பு முடிவடையும் . இன்னும் ஐந்து நாட்களே இருகின்றன . யார் பெஸ்ட் ?...
தேர்ந்தெடுப்பதற்கு முன் கீழே உள்ள முந்தைய பதிவுகளையும் படிக்கவும் ...


அஜித் Vs விஜய் (1) - AJITH Vs VIJAY ...

அஜித் Vs விஜய் (2) - AJITH Vs VIJAY ...

அஜித் Vs விஜய் (3) - AJITH Vs VIJAY ...




11 November 2015

வேதாளம் - VEDHALAM - வியாபாரம் ...


வீரம் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சிறுத்தை சிவா வுடன் அஜித் சேர்ந்திருக்கும் மற்றுமொரு மாஸ் படம் வேதாளம் . நார்மலாகவே நல்ல ஒப்பனிங் கிடைக்கும் அஜித்துக்கு இது தீபாவளி ரிலீஸ் என்பதால் உலகநாயகன் படத்தையே ஓரங்கட்டும் அளவிற்கு மிகப் பெரிய ஒப்பனிங் கிடைத்திருக்கிறது . ஸ்டோரியை நம்பாமல் அஜித்தின் தெறி மாஷை மட்டும் நம்பி வந்திருக்கும் படம் நம்மை திருப்திப்படுத்துமா ? பார்க்கலாம் ...

கொல்கொத்தாவிற்கு தங்கை தமிழ் ( லக்ஷ்மிமேனன் ) உடன் வந்து செட்டில் ஆகும் கணேஷ் ( அஜித்குமார் ) தங்கை மேல் பயங்கர பாசத்தோடு படு பாந்தமாக காரோடு வாழ்க்கையையும் ஓட்டிக்கொண்டிருக்கிறார் . தங்கை செண்டிமெண்டுக்கு நடுநடு வே இண்டர்நேஷனல் தாதாவின்
( ராகுல்தேவ் ) தம்பிகளை கண்ணாமூச்சி ரே ரே என்று அன்பாக ஆட்டத்துக்கு அழைத்து போட்டுத்தள்ளுகிறார் . அமுல்பேபி போல இருப்பவர் ஏனிப்படி குழந்தைகளை பயமுறுத்தும் அளவிற்கு அட்ராசிட்டி செய்கிறார் என்பதை இண்டர்வெலில் பெரிய ஜெர்க் கொடுத்து பிறகு  ஸ்லோவாக சொல்லி முடிப்பதே வேதாளம் ...

அஜித்துக்கு ரசிகர் மன்றத்தை கலைத்தும் இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது கடவுள் வரம் . மனுஷன் நிச்சயம் அவரை நம்பி வரும் ரசிகர்களை ஏமாற்றவில்லை  . அமைதியாக  வரும் கனேசனாகவும் , ஆக்சன் அடாவடி  வேதாளமாகவும் பின்னி பெடலெடுக்கிறார் . அப்படியிப்படி தொங்கும் வேதாளத்தை தூக்கி நிறுத்துவது இவரே . அதேசமயம் சிரிக்கும் போது  ரசிக்க வைப்பவர் சில சீன்களில் சீரியசாக பேசும் போதும் நமக்கு சிரிப்பு வருவதை தவிர்த்திருக்கலாம் . இவரை சரியாக பயன்படுத்தியிருக்கும் இயக்குனர் கொஞ்சம் கதை , திரைக்கதைக்கும் மெனக்கட்டிருந்தால் படம் மரண மாஸாக இருந்திருக்கும் . வீரம் படத்தில் இருந்த க்ரிப் கூட இதில் ஏனோ மிஸ்ஸிங் ...


லக்ஷ்மிமேனன் ஹீரோயின் இல்லையே தவிர அதுக்கும் மேலான ரோல் . தங்கையாக அஜித்துடன் இவர் கெமிஸ்ட்ரி சிம்ப்ளி சூப்பர் . அஜித் அடிபட்டவுடன் நன்றாகவே துடிக்கிறார் . பொதுவாக மாஸ் ஹீரோ படங்களில் ஹீரோயின்கள் ரெண்டு டூயட்டாவது வருவார்கள் . அதில் ஒரு குத்தாட்டம் கண்டிப்பாக இருக்கும் . இந்த படத்தில் பாவம் ஸ்ருதிஹாசனுக்கு அந்த வாய்ப்பு  கூட இல்லை . சூரி வடிவேலுவை காப்பியடிப்படிதை நிறுத்தினால் தேவலை . சிரிக்க வைக்கிறேன் பேர்வழி என்று இவர் அடிக்கும் லூட்டிகளை விட ஐந்து நிமிடமே வந்தாலும் கலகலக்க வைக்கிறார் மொட்டை ராஜேந்திரன் . பெரிய பில்டப்புடன் அறிமுகமாகும் வில்லன் ஃபாரினிலுருந்து வந்து வழக்கம் போல ஹீரோவிடம் அடிபட்டு சாகிறார் . ஃப்ளாஷ்பேக் பெரிதாக கவராவிட்டாலும் தம்பிராமையாவின் நடிப்பு கச்சிதம் ...

அனிருத் இசையில் ஆலுமா டோலுமா ஆட வைத்தால் ரவிசங்கர் குரலில் உயிர் நதி உருக வைக்கிறது . மற்றபடி பி,ஜி நிறைய இடங்களில் வீரம் படத்தை நினைவுபடுத்துகிறது . அஜித் , விஜய் என்றல்ல எந்த ஒரு மசாலா படத்துக்கும் லாஜிக் பார்ப்பதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம் . அதையெல்லாம் பப்ஸ் சாப்பிட்டுவிட்டு கையை உதறுவது போல விட்டுவிட வேண்டும் . இந்த படத்தில் மாஸ் ஹீரோவை சரியாக பயன்படுத்திய சிவா சீன்களையும் இன்னும் மாஸாக அமைத்திருந்தால் படம் வேறொரு லெவெலில் இருந்திருக்கும் . குறிப்பாக இன்டர்வெல் ப்ளாக்கும் , அதை தொடர்ந்து வரும் ப்ளாஷ்பேக்கும்  பத்து  சவரன்  சங்கிலியை இரவில்  தொலைத்து விட்டு பகலில் சாவகாசமாக தேடுவது போல இருக்கிறது ...

வில்லன் கூடாரத்துக்குள் இருந்து தங்கையை அஜித் புத்திசாலித்தனமாக மீட்பது  , கடைசி வரை தன்னுடைய அதிரடி முகத்தை தங்கைக்கு காட்டாதது போன்றவை பாட்ஷா , ஏய் வகையறா  டெம்ப்ளேட் கதைக்குள்ளும் கவனிக்க வைக்கின்றன . ரஜினி , விஜய் என்று மாஸ் ஹீரோக்கள் தங்கச்சி பாசம் படம் பண்ணும் போது தலயும் பண்ணிட்டு போட்டுமே ! . கண்டைனரில் பெண்களை கடத்துவது , தம்பியை கொன்றவனை பிடிக்க வில்லன் ஏதோ ஒசாமா பின் லேடனை பிடிப்பது போல ஸீன் போடுவதெல்லாம் நம்மை தியேட்டரை விட்டு தெறிக்க வைக்கின்றன . முழுக்க முழுக்க அஜித் தை  நம்பி பழைய முருங்கை மரத்தில் வேதாளம் ஏறியிருந்தாலும் சேதாரம் குறைவாக இருப்பதால் வியாபாரத்தில் பிரச்சனை  இருக்காது ...

ஸ்கோர் கார்ட் : 41

ரேட்டிங் : 2.75 * / 5 * 

5 November 2015

அஜித் Vs விஜய் (3) - AJITH Vs VIJAY ...




விஜய் 

பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்பதால் சிறு வயதிலேயே அவருடைய படங்களில் தலை காட்டினார் விஜய் . 1992 இல் தந்தை இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமான நாளைய தீர்ப்பு சரியாக ஓடா விட்டாலும் ஆக்ரோஷமான இளைஞனாக நடித்து முதல் படத்திலேயே கவனிக்க வைத்தார் . பிறகு அப்பாவின் படத்தில் தொடர்ந்து நடித்தவருக்கு மூன்றாவது படமான ரசிகன் தனி ஹீரோவாக முதல் கமார்சியல் ஹிட் . தந்தையின் நிழலில் பயணத்தை தொடங்கியிருந்தாலும் தனக்கென்று தமிழ் சினிமாவில் தனியிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் இந்த இளைய தளபதி ...

அதன் பிறகு அஜித் உடன் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே உட்பட சொல்லிக்கொள்ளும் படியாக எந்த படமும் இல்லாத நேரத்தில் விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக , பாசில் இயக்கத்தில் , இசைஞானி இசையில் வந்த காதலுக்கு மரியாதை என அடுத்தடுத்து ஹிட்கள் பெண்களுக்கிடையே இவரை லவ்வபிள் பாயாக மாற்றியது. அதுவும் இவர் சொந்தக் குரலில் பாடிய பாடல்களும் ( இதை பாடிக்கொண்டிருப்பது உங்கள் விஜய் என்று மறக்காமல் போட்டுவிடுவார்கள் ) நடனமும் இளைஞர்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன. அம்மா ஷோபா பாடகி என்பதாலோ என்னமோ இவருடைய படங்களில் பாடல்களுக்கு என்றுமே விஜய் தனிக்கவனம் செலுத்துவார் . பிறகு லவ் டுடே , ஒன்ஸ் மோர் என்று தொடர் வெற்றிப்படங்கள் கொடுத்தவருக்கு மீண்டும்  நேருக்கு நேர் மூலம் அஜித்துடன் சேரும் வாய்ப்பு கிடைத்தும் அஜித் விலகிக் கொண்டதால் சூர்யா வின் அறிமுகம் ரசிகர்களுக்கு கிடைத்தது ...

ப்ரியமுடன் , துள்ளாத மனமும் துள்ளும் என்று வெற்றிகள் மூலம் தனது ரசிகர் பட்டாளத்தை பெருக்கிக் கொண்டதோடு தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்களின் செல்லப் பிள்ளையாக மாறிக் கொண்டிருந்த விஜய் மேல் யார் கண் பட்டதோ கே.எஸ்.ரவிகுமார் , பாசில் போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களான மின்சாரகண்ணா , கண்ணுக்குள் நிலவு இரண்டுமே தோல்வியை தழுவின . எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000 இல் வந்த குஷி மீண்டும் அவரை குஷிப்படுத்தியது . இப்படி அஜித் போல விஜய்க்கும் வெற்றி , தோல்விகள் மாறி மாறி வந்தாலும் 2001 - 2003 வரை ஷாஜஹான் , தமிழன் என தொடர் தோல்விகள் விஜயை வதைக்க ஆரம்பித்தன . தோல்விகளால் துவண்டிருந்தவரை மலை போல நிமிர்த்தியது புதுமுக இயக்குனர் ரமணா இயக்கத்தில் வெளிவந்த திருமலை . பக்கா மாஸ் ஹீரோவாக விஜயை ரசிகர்கள் மத்தியில் நிலைநிறுத்தியது இந்தப் படம் எனலாம்  . அதன் பிறகு கில்லி , போக்கிரி என நிறைய மெகா ஹிட்கள் வசூலை அள்ளிக் குவித்தன ...

விஜய் நடித்த கில்லி ,  போக்கிரி என ரீமேக் படங்கள் பெரிய ஹிட் அடித்தாலும் தெலுகு நடிகர் மகேஷ்பாபு வை பார்த்து அப்படியே உல்டா அடிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தன . அஜித் துக்கு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் சக்சஸ் என்றால் விஜயக்கோ அழகிய தமிழ் மகன் , வில்லு ஏன் லேட்டஸ்ட் புலி உட்பட மூன்றுமே ஃப்ளாப்புகள் . கதையை தவிர இரண்டு கேரக்டர்களுக்குமே எந்தவொரு வித்தியாசத்தையும் காட்ட விஜய் முற்படாததும் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது . பொதுவாக விஜய்க்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல ஈசியாக இருந்ததில்லை ...

விஜய்க்கு மிருக தோஷமோ என்னமோ குருவி , 50 வது படமான சுறா , பெரிய பில்ட் அப்புடன் வந்த புலி என எல்லாமே தோல்வி அடைந்ததோடு நெட்டிசன்களால் கழுவி , கழுவி ஊற்றப்பட்டன . இருப்பினும் ரஜினிக்கு பிறகு படத்தை எடுப்பவருக்கும் , வாங்குபவருக்கும் மினிமம் கேரண்டி யை கொடுக்கும் படியான ஸேஃப் பெட்டாகவே விஜய் படங்கள் அமைந்தன . குடும்பத்துடன் பார்க்கும் படியாக இவர் படங்கள் இருப்பதும்  , எம்.ஜி.ஆர் போல தன் மேல் நெகடிவ் ஸேட் விழாமல் ஒரு கிளீன் இமேஜை இவர் ஸ்க்ரீனில் மெய்ண்டைன் பண்ணுவதும் முக்கிய காரணமாக  இருக்கலாம் . அரசியல் ஆசையால்  இவர் படங்கள் சர்ச்சைக்கு உள்ளானாலும் தனது ஆக்சன் , டேன்ஸ் , காமெடி என்று காசு கொடுத்து தியேட்டருக்கு  வரும் பாமர ரசிகனை இவரது படங்கள் பெரும்பாலும் ஏமாற்றுவதில்லை எனலாம் ...

அறிமுகம்       :  நாளைய தீர்ப்பு 
முதல் ஹிட்  :   ரசிகன் 
ப்ரேகிங் பாயிண்ட் :  பூவே உனக்காக 
தளபதி  அவதாரம்         :  திருமலை 
அறிமுக இயக்குனர் :  எஸ்.ஏ.சந்திரசேகர் 
பேவரட் இயக்குனர்  :  அப்போது எஸ்.ஏ.சி , இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் 
100 க்ரோர் கிளப் :  துப்பாக்கி , கத்தி 
அடுத்த ரிலீஸ் : அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத படம் 

அடுத்த பதிவில் அஜித் Vs விஜய் யார் பெஸ்ட் ? ...

23 October 2015

அஜித் Vs விஜய் (2) - AJITH Vs VIJAY ...



அஜித் 

மராவதியில் அறிமுகம் ஆகி ஆசைக்கு பிறகு இளம் பெண்கள் மனதில் ஆசை நாயகனாக உருமாறி காதல் கோட்டையில் தன் வெற்றிக் கொடியை  நட்டு , வாலிக்கு பிறகு தனக்கென தனி வழியை ஏற்படுத்திக் கொண்டு தமிழ் திரையுலகை அமர்க்களப்படுத்தி வருபவர்  அஜித். இவரின் மங்காத்தா ஆட்டத்தை இன்னும் ரசிகர்கள் மறக்கவில்லை. இவரின் மேல் ரசிகர்களுக்கு இருக்கும் பேய்த்தனமான அன்பு தான் வேதாளம் என்று பேர் வைத்தாலும் டீசருக்கே யூ டியூபில் 48 லட்சம் ஹிட்ஸ்களும் , எல்லா படத்திற்கும் ஒபெனிங்கில் தல யாகவும்  இவரை வைத்திருக்கிறது ...


சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் வந்தவர் தன் சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்ததோடு  20 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் 50க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்து தன் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்  .  சிவாஜிகமல் , விக்ரம் என மிக சிறந்த நடிகர்கள் வரிசையில் அஜித் இல்லையென்றாலும் எல்லா தரப்பிலும் இவருக்குள்ள ரசிகர்களால் இவர் படங்களுக்கு கிடைக்கும் முதல் வாரத்திற்கான வசூலையும்,வரவேற்பையும் யாரும் மறுக்க முடியாது . அதனால் தான் தோல்வி படங்கள் அதிகம் கொடுத்திருந்தும் வர்த்தக ரீதியாக இவர் படங்களை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் விரும்புகிறார்கள் ...

22 ஆண்டு கால கலை வரலாற்றில் முதல் படம் அமராவதி  தோல்விப் படம் . மூன்றாவது படமான ஆசை பெரிய வெற்றியை பெற்ற போதும் அதை தொடர்ந்து ஒரே வருடத்தில் உல்லாசம் ராசி உட்பட ஐந்து தோல்வி படங்கள்.  வேறு யாராவதாக இருந்திருந்தால் இவ்வளவு வருடம் நடித்திருப்பார்களா என்பது  சந்தேகமே .   ஆரம்ப காலங்களில் அஜித் பத்திரிக்கையாளர்களிடம்   அதிகமாக கோபப்படுகிறார்  என்ற சர்ச்சையும் இருந்தது. இவர் எடுத்த சில முடிவுகளும் தவறாகவே இருந்தன..திரை உலகில் இவரை வழி  நடத்த  காட் பாதர்  யாரும் இல்லாததும் காரணமாக இருக்கலாம் . ஆனால் இன்றைய கால கட்டத்தில் சிம்பு , ஆர்யா  போன்ற சம கால நடிகர்களே இவரை  காட் பாதர் என்று சொல்வதும் , சமீபமாக வரும் எல்லா படத்திலும் ஏதோ ஒரு வகையில் இவரது பெயர் இடம்பெறுவதும்
( மிக சமீபத்திய உதாரணம் 10 எண்றதுக்குள்ள ) தமிழ் சினிமா வரலாற்றில் அஜித்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ...                   

சிவாஜி , ரஜினி , கமல் வரிசையில் அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட வேடங்களில் நடித்திருக்கும் அஜித் அதில் வாலி , வரலாறு , வில்லன் , பில்லா உட்பட பெரும்பாலான படங்களில் வெற்றி பெற்றிருக்கிறார் . விஜயகாந்தை போல இவரும் நிறைய புது முக இயக்குனர்கள் படங்களில் நடித்திருக்கிறார் . அதில் சரண் , எஸ்.ஜே.சூர்யா , துரை போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் . ரெட் , ஜனா , ஆழ்வார் போன்ற புதியவர்களின் படங்கள் காலை வாரினாலும் முகவரி , கிரீடம் போன்றவை அஜித்துக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தன . விஜய் , சூர்யா போன்ற நடிகர்களை போல அஜித்தால் நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் பிரகாசிக்க முடிவதில்லை , அவர் உடல் எடையை கவனிப்பதில்லை , ரொம்ப வருடங்களாக கெட்டப்பை மாத்தாமல் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலேயே இருக்கிறார்  இப்படி சில குறைகள் அவரை பற்றி சொன்னாலும் அவர் தான் எங்க " தல " என்கிறார்கள் ரசிகர்கள் ...  

முன்னாள் முதல்வர் அமர்ந்திருந்த மேடையிலேயே தனக்கு சரியென பட்டதை தைரியமாக சொன்னது  , விளம்பர படங்களில் நடிக்காதது  , தான் நடிக்கும் படங்கள் உட்பட எந்த சினிமா விழாக்களுக்கும் போகாதது என்று ஒரு கோடு  போட்டுக்கொண்டு அதற்குள் தனியாக இருப்பது போல பட்டாலும் அவர் ரசிகர் மன்றங்களை கலைக்க சொல்லியும் அவர் கிழித்த கோட்டை தாண்டாத ரசிகர்கள் கிடைத்தது அவரது வரம் . பீக்கில் இருக்கும் போதே டக்கென்று ரேசிங் கிளம்புவது , செட்டில் உள்ள அனைவருக்கும் சுவையாக பிரியாணி சமைத்து தருவது , சின்ன நடிகர் அப்புக்குட்டி யை நிற்க வைத்து விதவிதமாக போட்டோ எடுப்பது என்று தல செய்யும் நிறைய விஷயங்கள் அவரது தனித்துவம் . அதனால் தான்  நடிப்பு திறமையால் பெரிதாக ஈர்க்காவிட்டாலும் தன் முயற்சி, உழைப்பு , துணிவு மற்றும் போலித்தனமில்லாத இயல்பு இவற்றின் மூலம் அசல்  நாயகனாகவே நம் கண் முன் தெரிகிறார்  அஜித் ...


அறிமுகம்       :  அமராவதி  
முதல் ஹிட்  :  ஆசை 
ப்ரேகிங் பாயிண்ட் : வாலி 
தல அவதாரம்         : தினா 
அறிமுக இயக்குனர் : செல்வா 
பேவரட் இயக்குனர்  : சரண் ,  இப்போது சிறுத்தை சிவா 
100 க்ரோர் கிளப் : மங்காத்தா , ஆரம்பம் 
அடுத்த ரிலீஸ் : வேதாளம் 

அடுத்த பதிவில் விஜய்  ...



20 October 2015

அஜித் Vs விஜய் (1) - AJITH Vs VIJAY ...




சினிமாவில் பார்க்கும் ஹீரோக்களை படம் முடிந்தவுடன் மறந்துவிடாமல் மனதோடு வைத்து பூஜிக்கும் பழக்கம் இன்று நேற்று என்றல்ல பாகவதர் காலத்திலிருந்தே தமிழ் சினிமாவில் தொன்று தொட்டு நடந்து வருகிறது . எம்.கே.தியாகராஜ பாகவதர் - பி.யு.சின்னப்பா , எம்.ஜி.ஆர் - சிவாஜி , ரஜினி - கமல் இந்த வரிசையில் இன்று பாப்புலராக ரசிகர்களிடையே ஆராதிக்கப்படும் அதே சமயம் எதிர் குழுவினரால் கழுவி கழுவி ஊற்றப்படும் இரண்டு முன்னணி ஹீரோக்கள் அஜித் மற்றும் விஜய் . இவர்களுக்கு பிறகு தனுஷ் - சிம்பு என்றொரு அணி தோன்றினாலும் இன்றளவும் அஜித் - விஜய் இருவருமே கோலிவுட்டில் கோலோச்சி வருகிறார்கள் ...

ஏற்கனவே எதிரும் புதிருமாக இருக்கும் இவர்களின் ரசிகர்கள் ஆரம்ப காலங்களில் சிலேடையாக அடுத்த ஹீரோவை தங்கள் ஹீரோ தாக்கும் போது அந்த பக்க ரசிகர்கள் ஆத்திரப்படுவதை பார்த்து ஆரவாரம் செய்தார்கள் . உதாரணத்துக்கு தினா படத்துக்கு பின் தல என்று ரசிகர்களால் அஜித் அறியப்படுவது அனைவரும் அறிந்ததே . ஒரு படத்தில் ( புதிய கீதை என நினைக்கிறேன் ) விஜய் ' யாருடா உன் தல " என்று ஒரு அடியாளை பார்த்து கேட்டது அஜித் ரசிகர்களை சூடாக்கியது . அஜித் படங்களில் கூட இது போன்ற உதாரணங்களை சொல்லலாம் ., சமீபமாக என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்காவை பார்த்து " டாக்டரா நானா " என்று அஜித் தலையாட்டிய போதும் , சண்டைக்காட்சிக்கு முன்  அருன்விஜயை பார்த்து " என்னடா ஸ்பீச்சா கொடுக்கற " என்று கேட்ட போதும் அஜித் ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள் . விஜய்க்கு டாக்டர் பட்டம் கிடைத்திருப்பதும் , அவர் சில வருடங்களுக்கு முன்னாள் ஒரு கல்லூரியில் ஸ்பீச் கொடுத்ததும் அவர்களுக்கு தெரியாதா என்ன ?! . இப்படி அரசல் புரசலாக அவர்களுக்கிடையேயும் , நேரடியாக ரசிகர்களுக்கிடையேயும் இருந்த சண்டை சமீபத்தில் புலி ரிலீசுக்கு பிறகு இன்னும் அதிகமாகியிருக்கிறது...

புலி எதிர்பார்த்த அளவுக்கு போகாதது மட்டுமல்ல குருவி , சுறா வரிசையில் விஜய் ரசிகர்களே கிண்டல்  செய்யும் அளவுக்கு அமைந்துவிட்டது . படம் சரியாக ஓடவில்லை என்றவுடன் போஸ்டரில் விஜய் படத்தை சின்னதாக்கி ஒத்தக்கண்ணன் படத்தை பெரிதாக போடும் அளவுக்கு தியேட்டர்காரர்கள் இறங்கியும் , அது குழந்தைகளுக்கான படம் என்று பின்னர் கற்பூரம் அடித்து சத்தியம் செய்தும் குழந்தைகளே அதை நம்ப மறுத்துவிட்டார்கள் . அதோடு சேர்த்து ஒப்பனிங்  சீனில் வேதாளமாக வரும் அடியாளை விஜய் அடித்து நொறுக்குவார் என்று ரசிகர்கள் காத்திருக்க அவரோ அவன் காலை பிடித்துக் கொண்டு " நீங்க வேதாளம் , நாங்க பாதளம் " என்று டயலாக் பேசியது விஜய் படத்துக்கு வந்திருந்த அஜித் ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைத்தது. தலைப்பிடப்படாமல் இருந்த தல படத்துக்கு வேதாளம் என்று பெயர் வைத்தது கோ இன்சிடன்டா இல்லை புலியின் காட்சியமைப்புகளை தெரிந்து கொண்டு வைக்கப்பட்ட  ப்ளாண்ட்  இன்சிடண்டா என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம் . இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அஜித் ரசிகர்கள் ஆன்லைனில் புலி படத்தையும் , விஜயை யும் ஓவராக கலாய்க்க விஜய் ரசிகர்கள் கமிஷனர் ஆபீசுக்கு சென்று கம்ப்ளைன்ட் செய்யும் அளவுக்கு போய் விட்டது ...


எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்திலேயே ஒருவரது படம் ரிலீசானால் மற்றொருவரின் ரசிகருக்கு அடி உதை  என்பது எழுத்தப்படாத விதியாக இருந்தது . அதே கதை தான் ரஜினி - கமல் ரசிகர்களுக்கும் . ஆனால் நிலைமை கை மீறிப் போகும் போது  அவர்கள் தலையிட்டு ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினார்கள் . இன்றோ தல - தளபதி இருவரின் ரசிகர்களின் தலை மட்டுமே உருண்டு கொண்டிருக்கிறது . இப்படி இரண்டு தரப்பினரும் அடித்துக்கொள்ளும் அளவுக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்திருப்பதோடு ஒரு படத்தின் மூலம் கிட்டத்தட்ட  100 கோடி  க்கு பிசினசையும் கொடுக்கும் அஜித் - விஜய் இருவரைப் பற்றிய அலசல் அடுத்த பதிவில் ...




12 January 2014

வீரம் - VEERAM - வெல்லும் ...


தீனா தவிர்த்து பொங்கலுக்கு ரிலீசான அஜித்தின் அத்தனை படங்களும் அட்டர் ஃப்ளாப் . அதோடு கோட் சூட் , கூலிங் க்ளாஸ் , கையில் துப்பாக்கி என்று அல்டரா  மாடல் போல சுற்றிக் கொண்டிருந்தவரை வேட்டி சட்டை , விபூதி , அரிவாள் என்று கிராமத்து ஆளாக காட்டினால் எடுபடுமா ? இப்படி பல சந்தேகங்களுக்கு இந்த வெற்றியின் மூலம் அஜித்தை வைத்து தல பொங்கல் கொடுத்து பதில் சொல்லியிருக்கிறார்  இயக்குனர் சிறுத்தை சிவா ...

குடும்பம்  பிரிந்து விடுமோ  என்கிற பயத்தில்  4 தம்பிகளுடன் கட்டை பிரமச்சாரியாக வாழ்கிறார் விநாயகம் ( அஜித்குமார் ) . தம்பிகளோ கோப்பெரும்தேவி ( தமன்னா ) யை அண்ணனுக்கு கரெக்ட் செய்ய , காதலியின் அப்பா ( நாசர் ) சம்மதம் வாங்க அவளுடன் ஊருக்கு செல்லும் அஜித்  அந்த குடும்பத்திற்கு ஏற்படவிருக்கும் பெரிய அபாயத்தை அவர்களுக்கே தெரியாமல் தன்  வீரம் காட்டி முறியடிக்கிறார் ...


சால்ட் அண்ட் பெப்பர் லுக் கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்து விட்டாலும் பேச்சில் அமைதியையும் , சண்டையில் ஆக்ரோஷத்தையும் அழகாக காட்டி  வசீகரிக்கிறார் அஜித் . மாஸ் ஹீரோக்களில் ரஜினிக்கு அடுத்து " Larger than Life"  இமேஜை ஸ்க்ரீனில் படம் முழுவதும் கேரி செய்யும் தகுதி தனக்கிருப்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கிறார் . சண்டையில்லாமல் அறிமுகம் ஆகிறாரே என்று சந்தோசப்பட்டால் அதன் பிறகு பல பேரை  அடித்து கொன்றே அதை சிதைத்து விடுகிறார் . ஆனாலும் ரயில் சண்டையில் அவர் எடுத்திருக்கும் ரிஸ்க் அபாரம் . இது வரை ஒப்பனிங் கிங் என்று அறியப்பட்டவர் தொடர் வெற்றிகளின் மூலம் மாஸ் கலெக்சன் கிங்காகவும் மாறியதற்கு வாழ்த்துக்கள் ...

தமன்னா பாடல் காட்சிகளுக்கு மட்டும் வந்து ரசிகர்களை தம்மடிக்க அனுப்பாமல் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார் . நான்கு தம்பிகளுள் விதார்த் தேறுகிறார் . அடிதடி குடும்பத்தை பெயிலில் எடுக்கவே வீட்டோடு இருக்கும் வக்கீல் சந்தானம் கொடுக்கும் காதல் ஐடியாக்கள் கல கல . முதல் பாதி இவர் உபாயத்தில் வேகமாகவே போகிறது . வில்லன்கள் ராவத் , அதுல்  இருவரும் கவனிக்க வைக்கிறார்கள் . தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களில்  பழைய நெடி இருந்தாலும் அஜித் சண்டை  போடும் போது வீரம் பின்னணி பாடல் முறுக்கேற்றுகிறது ...


புதிதாய் எதுவும் இல்லாத கதை , அஜித் - தமன்னா இருவரின் காதலை வைத்தே இடைவேளை வரை ஒப்பேற்றியது , பாடல்கள் , அளவுக்கதிகமான சண்டைகள் போன்ற குறைகள் இருந்தாலும் சந்தானத்தின் காமெடி , அஜீத் தை
கச்சிதமாக பயன்படுத்தி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பொங்கல் விருந்து கொடுத்த விதத்தில் வீரம் வெல்லும் ...

ஸ்கோர் கார்ட் : 43



1 May 2013

அசல் நாயகன் அஜித் ...


             
                                  
      மராவதியில் அறிமுகம் ஆகி ஆசைக்கு பிறகு இளம் பெண்கள் மனதில் ஆசை நாயகனாக உருமாறி காதல் கோட்டையில் தன் வெற்றிக் கொடியை  நட்டு , வாலிக்கு பிறகு தனக்கென தனி வழியை ஏற்படுத்திக் கொண்டு தமிழ் திரையுலகை அமர்க்களப்படுத்தி வருபவர்  அஜித் . இவரின் மங்காத்தா ஆட்டத்தை இன்னும் ரசிகர்கள் மறக்கவில்லை...
                                                        
       உழைப்பாளர் தின மன்று தன் பிறந்த நாள் காணும் அஜித் பற்றிய பதிவு பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறேன் .  ஏனெனில் அஜித் சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் தன் சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர் எனபதோடல்லாமல் திரை உலகிற்கு வந்து 20 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் 50 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்து தன் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்  ....

        சிவாஜி, கமல் , விக்ரம் என மிக சிறந்த நடிகர்கள் வரிசையில் அஜித்
இல்லையென்றாலும் எல்லா தரப்பிலும் இவருக்குள்ள ரசிகர்களால் இவர்
படங்களுக்கு கிடைக்கும் முதல் வாரத்திற்கான வசூலையும்,வரவேற்பையும் யாரும் மறுக்க முடியாது . அதனால் தான் தோல்வி படங்கள் அதிகம் கொடுத்திருந்தும் வர்த்தக ரீதியாக இவர் படங்களை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் விரும்புகிறார்கள் ...


         அஜித்தின் கடந்த பதினெட்டு   வருட கால வளர்ச்சியை உற்று நோக்கினால் அதில் நிறைய ஏற்றத்  தாழ்வுகள் இருப்பதை காணலாம் . 
முதல் படம் அமராவதி  தோல்விப் படம் . மூன்றாவது படமான ஆசை பெரிய வெற்றியை பெற்ற போதும் அதை தொடர்ந்து ஒரே வருடத்தில் உல்லாசம் , ராசி உட்பட ஐந்து தோல்வி படங்கள் . வேறு யாராவதாக இருந்திருந்தால் இவ்வளவு வருடம் நடித்திருப்பார்களா என்பது  சந்தேகமே ...
                                          
        ஆரம்ப காலங்களில் அஜித் பத்திரிக்கையாளர்களிடம் அதிகமாக கோபப்படுகிறார்  என்ற சர்ச்சையும் இருந்தது. இவர் எடுத்த சில முடிவுகளும் தவறாகவே இருந்தன..திரை உலகில் இவரை வழி  நடத்த  காட் பாதர்  யாரும் இல்லாததும் காரணமாக இருக்கலாம் . ஆனால் இன்றைய கால கட்டத்தில் சிம்பு , ஜெய் போன்ற சம கால நடிகர்களே இவரை  காட் பாதர் என்று சொல்வது தமிழ் சினிமா வரலாற்றில் அஜித்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வார்த்தைகள் ...

          சிவாஜி , ரஜினி , கமல் வரிசையில் அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட வேடங்களில் நடித்த பெருமையும் அஜித்திற்கு உண்டு . அதில் வாலி , வரலாறு , வில்லன் , பில்லா உட்பட பெரும்பாலான படங்கள் வெற்றிபடங்களே என்பதும் குறிப்பிடத்தக்கது . விஜயகாந்தை போல இவரும் நிறைய புது முக இயக்குனர்கள் படங்களில் நடித்திருக்கிறார் . அதில் சரண் , எஸ்.ஜே.சூர்யா , துரை போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் . ஆனால் அஜித் கே.எஸ். ரவிக்குமார், லிங்கு சாமி  தவிர பெரிய இயக்குனர்கள் யார் படத்திலும் நடிக்காதது ஒரு குறை ...


        ஏனெனில் பாலா , அமீர் , கெளதம் மேனன் போன்ற நல்ல இயக்குனர்கள் படங்களில் நடித்திருந்தால் தன் நடிப்பு திறமையை மேலும் வளர்த்துக்  கொள்வதற்கு பெரிய வாய்ப்பாக இருந்திருக்கும் ..மேலும் புது இயக்குனர்கள் பெரும்பாலும் இமேஜ் வட்டத்தை தாண்டி யோசிக்காததாலும் , அஜித்தும் வட்டத்தை தாண்டி வெளியே வராததாலும் நிறைய தோல்வி படங்களே மிஞ்சின . ரெட் , ஜனா  போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம் . இப்பொழுது தளபதி தன்  பாணியை மாற்றி வெற்றி பெற்று வரும் நிலையில் தல யும் அதை பின்பற்றுவார் என எதிர்பார்க்கலாம் ...

       தோல்விகளுக்கு பிறகு அஜித் முகவரிஜி , கிரீடம் போன்ற படங்களில் இமேஜ்  வட்டத்தை தாண்டி நடித்திருந்தது வரவேற்ப்பை பெற்றது. விஜய் , சூர்யா போன்ற நடிகர்களை போல அஜித்தால் நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் பிரகாசிக்க முடிவதில்லை , அவர் உடல் எடையை கவனிப்பதில்லை இப்படி எவ்வளவோ குறைகள் அவரை பற்றி சொன்னாலும் அவர் தான் எங்க " தல " என்கிறார்கள் ரசிகர்கள் ...                                                                
     

      தனக்கு சரியென பட்டதை சொல்லும் , செய்யும் தைரியம் அஜித்திற்கு உண்டு . விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் ,எந்த ஒரு சினிமா சம்பத்தப்பட்ட விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டேன்,பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன் ( பிற்காலத்தில் இதை தளர்த்தி கொண்டார் )   என்று அவர் சொன்ன வார்த்தைகளில் முடிந்த அளவு எந்த ஒரு சமாதானமும் செய்து கொள்ளாதது அவர் தனித்துவம் ...

       முதல்வர் உட்பட அனைவரும் அமர்ந்திருந்த  மேடையில் தன்னை வலுக்கட்டாயமாக வர சொன்னார்கள் என்று  அஜித் தைரியமாக சொன்னதும் , அதற்கு ரஜினி எழுந்து நின்று கை தட்டியதும் யாவரும் அறிந்த உண்மை . விஸ்வரூபம் பிரச்சனையின் போது கூட ஒரு குடிமகனாக குரல் கொடுத்தவர் அஜித் . அரசியல் லாபங்களுக்காக தன் ரசிகர் மன்றங்கள் உபயோகப்படுத்தப்படுவதை  உணர்ந்த அஜித் ரசிகர் மன்றங்களையே கலைக்க சொன்னதும் அவரின் தைரியத்திற்கு மற்றுமொரு சான்று ...

       புகழின் உச்சியில் இருந்த போதே சினிமா தவிர ரேசிங் போன்ற தனக்கு 
பிடித்த விசயங்களில் கலந்து கொள்ளும் துணிவும் இவருக்கு இருக்கிறது .             நடிப்பு திறமையால் பெரிதாக ஈர்க்காவிட்டாலும் தன் முயற்சி, உழைப்பு , துணிவு மற்றும் போலித்தனமில்லாத இயல்பு இவற்றின் மூலம் அசல்  நாயகனாகவே நம் கண் முன் தெரிகிறார்  அஜித் ...

- மீள்பதிவு


 
   

14 July 2012

பில்லா 2 - டான் ஃபார் ஃபேன் ( DON FOR FAN )



முந்தைய படம் தோல்வியோ , வெற்றியோ எப்படியிருந்தாலும் அடுத்த படத்திற்கான ஒப்பனிங்கை அப்படியே தக்கவைத்துக் கொள்பவர் அஜித் , அப்படியிருக்க 2011 ன் ப்ளாக்பஸ்டர் மங்காத்தாவை தொடர்ந்து வந்திருக்கும் படம் , ஐந்து வருடங்களுக்கு முன்னாள் மெகா ஹிட்டடித்த பில்லா படத்தின் பார்ட் 2 , இந்தியாவின் முதல் ப்ரீக்யூவல்  படம் இப்படி சில  சிறப்பம்சங்களையும் தாண்டி இந்த வருடத்திற்கே ஒரு மிகப்பெரிய கமர்சியல் வெற்றிக்காக ரசிகர்கள் ஆவலுடன் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ரிலீசாகியிருக்கிறது பில்லா 2 ...  


ஒரு சாதாரண அகதியாக இருந்து கடத்தல் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் டானாக டேவிட் பில்லா உருமாறுவதே கதை ... கொலை சதியில் இருந்து பில்லா ( அஜித் ) தப்பிப்பதிலிருந்து ஆரம்பிக்கும் படம் பிளாஸ்பேக்கில் விரிகிறது ... அகதிகள் முகாமில் நண்பனுக்காக இன்ஸ்பெக்டரை அடிக்கும் பில்லா கொஞ்சம் பிரபலமடைகிறான் ... முதலில் வைர கடத்தலின் ஆரம்பித்து , பிறகு ஹெராயின் கடத்தல் மூலம்  அப்பாசியுடன் 
( பாண்டே ) அறிமுகமாகும் பில்லா பிறகு அவன் சம்மதமில்லாமலேயே டிமொட்டி
( வித்யுத் ) யுடன் ஆயுதக் கடத்தலில் இறங்குகிறான் ... அப்பாசியை கொன்று விட்டு டிமொட்டியையும் பகைத்துக்கொண்டதால் எதிரிகள் மூலம் முதல்வரைக் கொன்ற பலி பில்லாவின் மேல் விழுகிறது ... பலியிலிருந்து மீண்டு டிமொட்டியையும் கொன்று விட்டு கடத்தல் உலகின் முடி சூடா மன்னனாக பில்லா மாறுவதுடன் படம் முடிகிறது ... 




அஜித்திற்கு இது அல்டிமேட் ரோல் ... படத்தில் ஆதி முதல் அந்தம் வரை பிரேம் பை பிரேம் தல தாண்டவம் ஆடியிருக்கிறார் ... " எதிரியின் பயம் நம் பலம் " , " எனக்கு நண்பனாக இருக்கறதுக்கு தகுதி தேவையில்லை , ஆனா எதிரியா இருக்கிறதுக்கு தேவை " போன்ற சார்ப்பான வசங்களை அஜித் பேசும் போது தியேட்டர் அதிர்கிறது ... என்ன தான் மாஸ் ஹீரோ படமென்றாலும் படம் முழுவதும் அஜித் சகட்டுமேனிக்கு கையில் கிடைத்ததையெல்லாம் ( குண்டூசி உட்பட ) வைத்துக்கொண்டு எதிரிகளை ரத்த வெள்ளத்தில் வீழ்த்திக் கொண்டே போவது ஒரு லெவலுக்கு மேல் போரடிக்கிறது ... ப்ளாஷ்பேக் காட்சிகளுக்காகவாவது அஜித் கொஞ்சம் இளைத்திருக்கலாம்... 


இந்த படத்திற்கு ஹீரோயினே தேவையில்லை என்னும் போது இரண்டு ஹீரோயின்கள் தேவையா என்று தெரியவில்லை ... கடத்தல் கும்பலில் சமீராவாக நடித்திருக்கும் ப்ருணா அப்துல்லா டூ பீஸில் வளைய வந்தாலும் ஏனோ எந்த கிளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. அஜித்தின் அக்கா பெண் ஜாஸ்மினாக நடித்திருக்கும் பார்வதி ஓமனக்குட்டன் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் பரிதாபமாக செத்துப்போகிறார் ... பில்லா வில் நமீதா , நயன்தாராவை எல்லாம் பார்த்த கண்களுக்கு திருஷ்டி கழித்துவிட்டார்கள் ... 




வடநாட்டு இறக்குமதியாமான இரண்டு வில்லன்களும் வாட்டசாட்டமாக இருந்தும் , அஜித்திடம் அடி வாங்கி மரித்துப் போகிறார்கள் ... டிமொட்டியாக நடித்திருக்கும் வித்யுத்தின் அறிமுக காட்சி அற்புதம் ... அஜித்தின் நண்பனாக வருபவர் , கடத்தல்காரர் இளவரசு , அஜித்தின் மேல் காண்டோடு அலையும் சுந்தர்.கே.விஜயன் எல்லோரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள் ... 


படத்தின் பாடல்களை பற்றி இரு வேறு கருத்துக்கள் இருந்தாலும் யுவனின் பின்னணி இசை பிரமாதம் ... " மதுரை பொண்ணு " பாடல் முணுக்க வைக்கிறது ... நா.முத்துக்குமார் வரிகளில் " உனக்குள்ளே மிருகம் " பாடல் வரிகளும் , அதை படமாக்கிய விதமும் அருமை ...  சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன ... வன்முறைக்காக படத்திற்கு  சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தும் பெண்கள் , சிறுவர்கள் கூட்டம் நிறையவே இருக்கிறது ...படம் டெக்னிக்கலி செம சௌண்டாக இருக்கிறது ... ஒளிப்பதிவாளர் ராஜசேகரும் , எடிட்டர் சுரேஷ் அர்சும் அதற்கு முக்கிய காரணகர்த்தாக்கள் ... 




பில்லாவை போலவே பில்லா 2 வும் மேக்கிங்கில் படு ஸ்டைலாக இருக்கிறது ... அதற்காக இயக்குன்ர் சக்ரிக்கு ஒரு சபாஷ் போடலாம் .... ஜாபருடன் சேர்ந்து இவர் எழுதியுள்ள வசனங்களும் சார்ப் அண்ட் ஸ்வீட் ... ஒவ்வொரு காலகட்டத்திலும் பில்லாவின் முன்னேற்றத்தை சரியாக பதிவு செய்திருக்கிறார்கள் ... சட்ட சட்டென்று பில்லா எடுக்கும் முடிவுகள் மூலமும் திரைக்கதையில் வேகத்தை கூட்டியிருக்கிறார்கள் ...  


ஹீரோயின்களை போலவே மற்ற குறைகளும் படத்தில் உள்ளன ... முதல் பாதியில் நாயகனின்  பாதிப்பு நிறையவே இருக்கிறது ... இரண்டு மணி நேரத்திற்குள் பில்லாவின் வாழ்க்கையை காட்டி விட வேண்டுமென்ற முனைப்பால் திரைக்கதையில் வேகத்தை விட  அவசரமே அதிகம் தெரிகிறது ... முதல்வர் கொலையில் நடக்கும் சதி , ஓமனக்குட்டனை அஜித் காப்பாற்றும் காட்சி போன்ற ஒன்றிரண்டை தவிர மற்றவையெல்லாம் பெரிய ட்விஸ்ட் ஏதுமில்லாமல் ப்ளாட்டாக இருக்கிறது ... அஜித் ரசிகர்களுக்கு படம் ரொம்பவே பிடிக்கும் , மற்றவர்களுக்கு பில்லா , மங்காத்தாவுக்கு ஒரு மாற்று குறைவென்றாலும் பில்லா 2 டல்லடிக்காத டானாக வே இருப்பான் ... நிச்சயம் ரசிகர்களுக்கு பில்லா 2 - டான் பார் ஃபேன்  ( DON FOR FAN ) 

ஸ்கோர் கார்ட் : 43  







2 September 2011

மங்காத்தா - "தல" ஆட்டம்

       
    அஜித்தின் 50  வது படம் என்பதை குறிக்கும் விதத்தில் "தல" 50 என்ற லேபிளை தாங்கி வந்திருக்கும் படம் "மங்காத்தா"..அஜித்தின் ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் கவரும் விதத்தில் ஜனரஞ்சகமாக இருக்கிறது படம்....கிளௌட் நைனிடம் இருந்து கடைசி நேரத்தில் சன் பிச்சர்ஸ் படத்தை வாங்கியிருப்பது வியாபாரத்திற்கு உதவும்...

      கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய கதை என்பதால் படம் மும்பையில் நடக்கிறது..பெட்டிங் பணம் 500 கோடியை சூதாட்ட டான் செட்டியாரிடம் ( ஜெயப்ரகாஷ்) இருந்து கொள்ளையடிக்க நினைக்கும் நான்கு பேர்  ( வைபவ்,பிரேம்,கணேஷ்,பகத் ) , இவர்களுடன் இதே எண்ணத்துடன் ஐந்தாவதாக கூட்டு சேரும் சஸ்பென்ட் செய்யப்பட காவல்துறை அதிகாரி வினாயக் ( அஜித் )..இவர்   செட்டியாரின் மகள் சஞ்சனாவின்  (த்ரிஷா) காதலன்  கிரிக்கெட் சூதாட்டத்தை ஒழிப்பதற்காக நியமிக்கப்படும் சிறப்பு துணை ஆணையர் ப்ரித்வி ( அர்ஜுன் ) இவர்களுக்கிடையே நடக்கும் விறு விறு 
ஆட்டமே "மங்காத்தா"... 

     கதை சில ஆங்கில படங்களையும் , தமிழில் சரியாக ஓடாமல் போன "சிந்தனை செய்" படத்தையும் நினைவு படுத்தினாலும் , அஜித் - அர்ஜுன் நடிப்பு ,ஒன்ற செய்யும் திரைக்கதை ,"நச்" என்ற  கிளைமாக்ஸ் , நளினமான பிரசெண்டேசன்  இவற்றின் மூலம் மற்றதிலிருந்து மாறுபடுகிறது "மங்காத்தா"...
                      
     தன் 50 படத்தை வழக்கமான ஹீரோயிச படமாகவோ , சுற்றியிருப்பவர்கள் ஹீரோ புகழ் பாடும் தனியாவர்தனமாகவோ இல்லாமல் , எல்லா நடிகர்களுக்கும் சம வாய்ப்பு கொடுத்ததோடு மட்டுமல்லாமல் , "நெகடிவ்" கேரக்டர்  வினாயக்காகவும்  வருவதால் சற்று  "தல" தூக்கி நிற்கிறார் அஜித்

     அஜித்  40 வயது காரராக நரைத்த தலையுடன் வந்தாலும் அழகாக இருக்கிறார்..இவர் தோற்றத்தால் மற்றவர்கள் இவரை "அண்ணே" என்றோ "தல"   என்றோ அழைப்பது தனியாக தெரியவில்லை...பைக் சேசிங் சீனில் நம் கண் முன் நிற்பது   "அசல்" நாயகன் அஜித்..
                            
     த்ரிஷாவிற்கு பயந்து லக்ஷ்மி ராயை வீட்டை விட்டு அனுப்பும் இடத்திலும் , குடி போதையில் பேசிக்கொண்டே பிரேம்ஜியிடம் இருந்து உண்மையை கறக்கும் இடத்திலும் , குத்தாட்டத்திற்கு நடுவே "மப்பு ஏறினாலே இசைஞானி பாட்டு தான் " என சொல்லும் இடத்திலும் , அர்ஜுனின் மனைவியை கடத்தி வைத்துக் கொண்டு "ஆக்ஷன் கிங்" என்று அர்ஜுனை கிண்டல் செய்யும் இடத்திலும் என படம் முழுவதும் அசத்தியிருக்கிறார் அஜித்...

      நெகடிவ் கேரெக்டரில் "இமேஜ்" பார்க்காமல் நடித்திருந்தாலும் பணத்திற்காக த்ரிஷாவை காதலித்து கழட்டி விடுவது, எந்நேரமும் சிகரெட் , குடி,குட்டியென  இருப்பது , வைபைவிடம் " இவ இல்லேனா என்னடா பணம் இருந்தா ஆயிரம் பொண்டாட்டி " என கத்துவது , லக்ஷ்மி ராயை கொன்று விட்டு "தே.." என திட்டுவது இவையெல்லாம் கேரெக்டருக்கு பலம் சேர்த்தாலும் பெண்களிடையே அஜித்தின் "இமேஜ்" சறுக்குவதற்கும் வாய்ப்பாக  இருக்கலாம்..
                        
     அழகாய் இருக்கிறார் என்பதற்காக "பில்லா"வில் கூலிங் க்ளாசை அடிக்கடி கழட்ட விட்டதைப் போல் இதில் சும்மா , சும்மா சிகரெட் ஊத விட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம்..."பில்லா" வை தொடர்ந்து 'அசல்","மங்காத்தா" அடுத்து "பில்லா 2 " இப்படி எல்லா படங்களுமே அஜித்தை வெறும் ஹை கிளாஸ் டானாக மட்டும் காட்டிக் கொண்டிருக்குமோ என்ற பயமும் நமக்கு ஏற்படாமல் இல்லை...

     சண்டைக்காசிகளையும் தாண்டி குறைவான சீன்களில் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார் "ஆக்ஷன் கிங்" அர்ஜுன்..தன் மனைவி கடத்தப்பட்டது   தெரிந்ததும் இவர் காட்டும் முக பாவம் அனுபவம்..
 
                                 
     கொள்ளையடிக்க முயற்சி செய்யும் நான்கு பேரும் நன்றாக நடித்திருந்தாலும் கவனிக்க வைப்பவர்கள் வைபவும் , பிரேம்ஜியும்..."சரோஜா". "ஈசன்" இப்போது "மங்காத்தா" என நல்ல வாய்ப்புகள் வைபவுக்கு  வந்து கொண்டிருக்கின்றன.. ."என் அண்ணன் படங்கள் தவிர வேறு படங்களில் காமெடியாக நடிக்க மாட்டேன்' என்று பிரேம்ஜி சொன்னது ஏனென்று  இந்த படம் பார்த்த பிறகு புரிகிறது.. "என்ன வாழ்க்கைடா இது"  இப்படி சாகும் போது கூட சிம்பு பாணியில் பேசி சிரிக்க வைக்கிறார்..
                 
      ஜெய பிரகாஷ், சுப்பு , அரவிந்த் அனைவரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள் .. த்ரிஷா,அஞ்சலி,லக்ஷ்மி ராய் மூவரில் ராய் மட்டும்  தன்  திறமையை "காட்டி" நடிப்பதற்கு வந்த வாய்ப்பை நன்றாக ராய் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்...
பட முடிவில் டைட்டில் கார்டு போடும் போது  த்ரிஷாவின் பெயரை கடைசியில் போடுவது ஏனோ ?..
                      
       ஒளிப்பதிவும் , இசையும் அருமை..."உன் மேடை" கிறங்க வைத்தால் "மச்சி" பாடல் ஆட வைக்கிறது... சில இடங்களில் வார்த்தைகளை  மீறி வரும் பின்னணி இசையை தவிர்த்திருக்கலாம்..

      ."கோவா" வில் சறுக்கியதை "மங்காத்தா" வில் சரிகட்டி விட்டார் வெங்கட் பிரபு...இவருடைய வழக்கமான நடிகர்கள் கூட்டணியுடன் அஜித்,அர்ஜுன்  இவர்களையும் இணைத்து தெளிவான கதை பண்ணியிருப்பதை பாராட்டலாம்..குறிப்பாக நான்கு பேரையும் எப்படி கொல்லலாம் என்று அஜித் ரீவைண்ட் செய்து பார்க்கும் காட்சி வெங்கட்  "டச்"...
                                            
      அடுத்தடுத்து கேரெக்டர்களை அறிமுகப்படுத்துவதால் கொஞ்சம் தடுமாறும் முதல்  பாதி , காவல் துறை அதிகாரி "சுப்பு"  வின் தற்கொலை நாடகம் , 500 கோடி பெட்டிங் பணத்தை பலத்த பாதுகாப்பில்லாமல் எடுத்து செல்லும் லாஜிக் சொதப்பல் , ஜேம்ஸ் பாண்ட் படம் போல தொடர்ந்து வரும் துப்பாக்கி சண்டைகள் இப்படி சில குறைகள் இருந்தாலும் அடுத்து என்ன நடக்கும் என்று பார்வையாளர்களை ஒன்ற வைக்கும் விறுவிறு மங்காத்தா - "தல" ஆட்டம் ..

ஸ்கோர் கார்ட் : 43 
Related Posts Plugin for WordPress, Blogger...