Showing posts with label கவியரங்கம். Show all posts
Showing posts with label கவியரங்கம். Show all posts

2 September 2012

தமிழ் வலைப்பதிவர்கள் கவியரங்கம் - நட்பிற்கினியவளே ...!


ன்முறை இரண்டு பக்கமும் கூர்மையான ஆயுதம் என்றார் அறிஞர் அண்ணா ... என்னைப் பொறுத்த வரை கவியரங்கத்தில் கவிதை வாசிப்பதும் அது போலத்தான் ... கவிதை நன்றாக இருந்தால் பாராட்டு பெறலாம் இல்லையேல் கல்லடி தான் ... அதிலும் நமக்கு முன்பாக வாசித்தவர்களின் கவிதை சரியில்லை என்றால் நாம் வரும் போதே அரங்கத்தில் உள்ளவர்களின் கவனம் வேறு பக்கம் திரும்பி விடும் , அதே சமயம் அவர்கள் அருமையாக கவிதை வாசித்திருந்தால் நம் கவிதையும் அதற்கு ஈடு கொடுக்கும் படி இருக்க வேண்டும் , இல்லையேல் நாம் அம்பேல் ... ஏதோ ஒரு தைரியத்தில் நானும் எனது கவிதையை கவிதையை கவியரங்கத்தில் வாசிக்க முடிவு செய்தேன். ( எவ்வளவோ செஞ்சாச்சு இத செய்ய மாட்டோமா).
கேபிள் சங்கர் அவர்கள் வானமே வீழ்ந்தாலும் அவரது என்டர் கவிதையை படித்தே தீருவது என்று ஒற்றைக் காலில் நின்றதை பார்த்த போது எனக்கு மேலும் தைரியம் கூடியது ... மயிலன் கவிதைக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த போது எனக்கும் நம்பிக்கை பிறந்தது ...

எனக்கு அருகில் அமர்ந்திருந்தவர்களுடன் சேர்ந்து நானும் சில கவிதைகளை ஓட்டிக் கொண்டிருந்தேன் , பிறகு நானே கவிதை வாசிக்க போகிறேன் என்று தெரிந்த போது சுற்றியிருந்தவர்கள் சற்று அதிர்ச்சியுடன் என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு எஸ்கேப் ஆக பார்த்தார்கள் ... கவிதை சரியில்லை என்றால் குவாட்டர் வாங்கித் தருகிறேன் என்றெல்லாம் சொல்லி அவர்களை ஒரு வழியாக சமாதானப்படுத்தி வைத்தேன் ... கவிதை என்ற பெயரில் நான் கிறுக்க ஆரம்பித்தது பத்தாவது படிக்கும் போது தான் ... மதுரை கல்லூரியல் படிக்கும் போது திருச்சி ஆர்.ஈ.சி கல்லூரியில் கணையாழி ஆசிரியர் திரு.ஞானக்கூத்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கல்லூரிகளுக்கான கவிதைப் போட்டியில் " நட்பு " என்ற தலைப்பில் நான் வாசித்த எனது கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது ... அதன் பிறகு எந்த ஒரு மேடையிலும் கவிதை வாசிப்பதற்க்காக நான் ஏறியதில்லை ...

இது வரை எனது வலையில் பத்துக்கும் மேற்ப்பட்ட கவிதைகளை பதிவிட்டிருக்கிறேன் ...அவற்றுள்  " நட்பிற்கினியவளே  " , " உண்மையை சொல்கிறேன் " ,  அல்லது " தனிமை " இந்த மூன்றில் எதையாவது ஒன்றை வாசிக்கலாம் என முடிவு செய்து அருகிலிருந்த நண்பர் நண்டு @ நொரண்டுவிடம் ( அவர் தான் பாக்க எதையும் தாங்கும் இதயம் போல தெரிஞ்சாரு )எனது மொபைல் போனில் டவுன்லோட் செய்திருந்த கவிதைகளை காண்பித்தேன்... அவர் படித்து விட்டு முதல் கவிதையை தேர்ந்தேடுத்ததோடு மூன்றுமே நன்றாக இருக்கின்றன என்று பாராட்டினார் ( என்ன பெருந்தன்மை ! ) ...ஒருவழியாக எனது கவிதையை பெரிய பாதிப்பு எதுவும் இல்லாமல் ( யாருக்கு , யாருக்கோ ) வாசித்து முடித்தேன் ... கவியரங்கத்தின் போது சக பதிவர் சசிகலா அவர்களின் " தென்றலின் கனவு " என்கிற கவிதை தொகுப்பும்  பிரபல எழுத்தாளர் பி.கே.பி அவர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது ... மொபைல் போன் மூலம் கவிதை வாசித்ததை திரு.பி.கே.பி அவர்கள் தன் உரையின் போது நினைவு கூர்ந்தார்... இந்த கவிதையை தேர்ந்தெடுத்த ராஜசேகர் ( நண்டு @ நொரண்டு ) , படிக்க சொல்லி ஊக்கமளித்த கடம்பவன் ,  நான் கவிதை வாசிக்கும் போது  அதை படம் பிடித்து ட்விட்டருக்கும் அனுப்பி வைத்த சி.பி.செந்தில்குமார்  ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . இதோ உங்களுக்காக ( எதுக்கு இந்த பில்ட் அப் ! ) ...

                                                                        நட்பிற்கினியவளே ...!




வகுப்பறையில்
வேற்று கிரக வாசிகள் போல்
ஆண்களும் பெண்களும்
வெறுமையாய் அமர்ந்திருக்க
பார்வையிலேயே புரிந்து கொண்டு
கை குலுக்களில்
தொடங்கியது
நம் நட்பு....

நான்கே நாட்களில்
புரிந்து விட்டது
நட்பிற்கினியவள்
நீயென்று....

எவன் சொன்னது ?
பெண்ணின் மனது
பெண்ணிற்குத் தான்
தெரியுமென்று..
மௌனத்தில் நீயிருந்தும்
உன்
மனதைப் படிப்பதில்
சிறந்தவர்
எனைத் தவிர
வேறெவரும் உண்டா ?...

நம் நட்பு
உயிர் வாழ
நாம் சந்தித்த
சங்கடங்கள் பல
ஆனால்
நம் மனதில்
சஞ்சலங்கள் இருந்ததில்லை...


                                       
எனக்கு
இளையராஜா பிடிக்கும்
உனக்கு ஏ.ஆர்.ரஹ்மான்...
மதில் சுவரில் அமர்ந்து
மணிக்கணக்கில் 
சண்டைகள் போட்டிருக்கிறோம்...
என்
பிறந்த நாளில்
உன் பரிசாக
கைகளில் தவழ்ந்தது
இசைஞானியின் இசை பேழை...

சுயநலம் மறந்தும்
சுயத்தை இழக்கவில்லை...

வெட்கத்துடன்
திருமண அழைப்பிதழ்
கொடுத்த போது தான்
நீ
பெண் என்பதை
நான் உணர்ந்தேன்...

அதை
என் மூலம் கொடுத்து
ஊர் வாயை அடைத்தாய்...


என் காதலுக்கு
தூது போனவள்
நீ..
நம் நட்பை
கொச்சைப்படுத்திய காதலையே
தூக்கியெறிந்தவன்   நான்...

இன்று அவள்
எங்கே இருக்கிறாள்
தெரியவில்லை...

இத்தனை வருடங்கள்
ஆனாலும்
வாசம் மாறாமல்
வீசிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு...





Related Posts Plugin for WordPress, Blogger...