27 January 2015

தொட்டால் தொடரும் - THOTTAL THODARUM - மைல்ட் டச் ...


டத்தை பார்த்து இரண்டு நாட்களாகி விட்டது . இருந்தாலும்  பிரபல பதிவர் என்பதையும் தாண்டி 2013 பதிவர் சந்திப்பின் பயனாக தனிப்பட்ட முறையிலும் நன்கு தெரிந்தவரான கேபிள் சங்கரின் படத்தை விமர்சிக்கலாமா ? வேண்டாமா என்பதில் சின்ன தயக்கம் . கடைசியில் தனது பட்டவர்த்தமான விமர்சனங்களின் மூலம் பல இயக்குனர்களின் படங்களை கிழித்துக் காயப் போட்டவரின் முதல் படத்தை விமர்சிக்காமால் விட்டு விட்டால் அது காலச்சொல் ஆகிவிடாதா ?! . இனி ...

ஒரு அமைச்சர் ( பிரமிட் நடராஜன் ) சாலை விபத்தில் இறப்பதிலிருந்து தொடங்குகிறது படம் . அது கொலையா ? விபத்தா ? என்று போலீஸ் விசாரணை செய்யும் த்ரில்லர்  ட்ராக் ஒரு புறம் . ஐ.டி கம்பெனி எச்.ஆர் சிவா
( தமன்குமார் ) , கால் சென்டர் சேல்ஸ் கேர்ள் மது ( அருந்ததி ) இருவரும் பார்த்துக் கொள்ளாமலேயே செல்போனில் லவ்விக்கொள்ளும் ரொமாண்டிக் ட்ராக் மறுபுறம் என இடைவேளை வரை செல்லும் படம் கொலைகளை விபத்து போல திட்டமிட்டு செய்யும் கொலைகார கும்பலிடம் வழிய சென்று மது மாட்டிக்கொண்டவுடன் நேர்கோட்டில் பயணிக்கிறது ...

ஐ,டி யில் வேலை செய்பவராக கனகச்சித பொருத்தம் தமன் . இவருக்கு சொந்த குரலா ? டப்பிங்கா என்று தெரியவில்லை . ஆனால் வாய்ஸ் கம்பீரம் . மற்றபடி பெரிதாக மெனக்கெடாமல் அளவாக நடித்திருக்கிறார் தமன்குமார் . இரண்டு படங்களில் ஏற்கனவே நடித்திருந்தாலும் இந்த படம் அருந்ததிக்கு நல்ல ப்ரேக் . இவரை சுற்றியே நடக்கும் கதையில் முடிந்த வரை ஸ்கோர் செய்கிறார் . முகம் கொஞ்சம் முத்தலாக இருப்பதாலோ என்னமோ சோகக் காட்சிகள் கை கொடுக்கும் அளவிற்கு இவருக்கு காதல் காட்சிகள் கை கொடுக்கவில்லை . இவருடைய கேரக்டர் ஸ்கெட்சில் இருக்கும் குழப்பத்தை தவிர்த்திருக்கலாம் ...


" அடுத்தடுத்து பஞ்ச் சொல்ல  நான் என்ன சந்தானமா ? " என்று கேட்டாலும்
" பொண்ணுங்க கார் மாதிரி , இருக்குறவனுக்கு செலவு , இல்லாதவனுக்கு கனவு " , " கடலை போடுறது கருவாடு மாதிரி , ஊரெல்லாம் நாறினாலும் போடுறவனுக்கு மட்டும் மணக்கும் " என்று படம் நெடுக பஞ்ச்களை அள்ளித் தெரிக்கிறார் பாலாஜி . முதலில் ரசிக்கும் படியாக இருந்தாலும் முதல் பாதி முழுவதையும் இவர் தோள்களில் சுமத்தியிருப்பது ஓவர் டோஸ் . கேபிளுடன் சேர்ந்து கார்க்கி எழுதியிருக்கும் வசனங்கள் க்யூட்டாக இருந்தாலும் சந்தானத்திடம் இருக்கும் டைமிங் பாலாஜிக்கு மிஸ் ஆவதால் நல்ல வசனங்கள் கூட ஜஸ்ட் லைக் தட் கடந்து விடுவது துரதிருஷ்டம் . " கேட்குறது பெர்சனல் லோன் , அதுக்கு ஏன் அபிசியலா பேசணும் " என்று பாலாஜி போனில் கலாய்ப்பதை உதாரணமாக சொல்லலாம் ...

பி.சி சிவனின் இசையில் " பாஸு  பாஸு " , " பெண்ணே பெண்ணே " பாடல்கள் ரம்யம் . சேசிங் சீன்களில் மட்டும் பின்னணி இசையை கவனிக்க வைக்கிறார் . ஈ.சி.ஆர் ரோடுகளில் ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்கின் டாப் ஆங்கிள் ஷாட் கவர்கிறது . எடிட்டிங்கில் சாய் அருண் தூங்கி விட்டாரா இல்லை இயக்குனர் தூங்கி விட்டாரா என்று தெரியவில்லை ...

தன் முதல் படத்திற்கு நாவல் போல இன்ட்ரெஷ்டிங்கான இந்த கதையை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குனருக்கு கை குலுக்கலாம் . அதே போல ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்டாக கொடுத்தமைக்கும் சபாஷ் . பேஷ் புக் , ட்விட்டர் காலத்தில் பார்க்காமலேயே போனில் காதல் செய்யும் காட்சிகளை முடிந்தவரை நம்பும்படியாகவே எடுத்திருக்கிறார் கேபிள் . காதல் ப்ளாட் பழசாக இருந்தாலும் காட்சிகளை ப்ரெஸ்ஸாக வைத்தமைக்கு பாராட்டுக்கள் ...


பாலாஜியின் ஓவர் டோஸ் வசனங்கள் , ஹீரோயினின் சித்தி எபிசோட் , தம்பி ஆக்ஸிடெண்டுக்கு பணம் தேவைப்படுவது என்று நிறைய பழைய நெடி அடித்தாலும் இன்டர்வெல் ப்ளாக்கில் சரியாக ட்விஸ்ட் வைக்கும் கேபிள் அதன் பிறகு அதை தக்க வைக்காமல் தடுமாறியிருக்கிறார் . அதிலும் வில்லனை கண்டுபிடிக்க போகும் இடத்தில் கட்டிங்கை பார்த்தவுடன் கை நடுங்கும் குடிமகனைப் போல ரூமை போட்டவுடன் ஜல்சா வுக்கு ரெடியாகும் ஹீரோயின் எல்லாம் " என்னம்மா இப்படீ பண்ணுறீங்கலேம்மா " ...

கொலையை விபத்து போல செய்யும் வின்சென்ட் ஹீரோயினை நேரடியாக துரத்துவது சொதப்பல் . அதிலும் க்ளைமேக்ஸில் காரை துரத்திக் கொண்டு அவர் பைக்கில் போவதெல்லாம் ஹை வே காமெடி . படத்தை முடித்திருப்பதிலும் அவசர கதி தெரிகிறது . இந்த படத்திற்கு ப்ளஸ் மைனஸ் இரண்டுமே கேபிள் தான் . அதிகம் பரிச்சியமில்லாதவர்கள் நடித்திருக்கும் படத்திற்கு பிரபல ப்ளாகரான கேபிளும் , அவருடைய கதையும் ப்ளஸ் . அதே  சமயம் அவருக்காக எதிர்பார்ப்புடன் வருபவர்களை ஏமாற்றும் வகையில் ஆவெரேஜாக படம் இருப்பது மைனஸ் . எந்த படமாக இருந்தாலும் அதன் நிறை குறையை நேர்த்தியாக அலசி ஆராய்ந்து  அழுத்தமான எழுத்துக்களால் கவரும் கேபிள் சங்கர் தனது முதல் படமான தொட்டால் தொடரும் மூலம் நம்மை மைல்டாகவே டச் செய்கிறார் . இருப்பினும் முதல் படத்தையே குடும்பத்துடன் பார்க்கும் படியான டீசண்ட் டச்சுடன் கொடுத்ததால் அவருடைய பணி தொடர வாழ்த்துக்கள் ...

ஸ்கோர் கார்ட் : 40 


15 January 2015

ஐ - AI - பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் ...


துவரை தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் யாகத் தான் இருக்கும் . யூ டியூபில் டீசர் ரிலீசான சில மணி நேரங்களிலேயே பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதை கண்டு களித்திருப்பது அதற்கு ஒரு சான்று . பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் , பிரமாத நடிகர் விக்ரம் இருவரும் அந்நியன் வெற்றிக்கு பிறகு பத்து ஆண்டுகள் கழித்து மிக பிரம்மாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுடன் சேர்ந்து கொடுத்திருக்கும் ஐ ரிலீசுக்கு முன்னரே பலரின் ஐ பாலை உருட்டியதென்னமோ உண்மை . ஆனால் இப்படி இத்தன பில்ட் அப்புடன் வந்திருக்கும் படம் அந்த எதிர்பார்ப்பை ஈடுகட்டியதா என்ற கேள்விக்கு நியாயமான பதில் சாரி ...

மிஸ்டர் மெட்ராஸ் ஏரிக்கரை லிங்கேசன் ( விக்ரம் ) பிரபல மாடலிங் தியா
( எமி )  மேல் பைத்தியமாக இருக்கிறார் . பைத்தியம் என்றால் அவர் ஆடில் நடித்த ப்ரா , பேண்டீஸ் வாங்குமளவுக்கு பைத்தியம் . ஒரு கட்டத்தில் தியாவுடன் ஜோடி சேர்ந்து மாடலிங் செய்யும் சந்தர்ப்பம் லிங்கேசனுக்கு வர அவர் பிரபல மாடல் லீ யாகி விடுகிறார் . ஆனால் அதுவே அவர் வாழ்க்கைக்கு வினையாகி விடுகிறது . அப்படி என்ன ஆனது  என்பதே 3.10 மணி நேர ஐ படம் ...

விக்ரம் நடிப்பில் மட்டுமல்ல மார்க்கெட்டிலும் சிவாஜி , கமல் வரிசையில் வந்திருக்க வேண்டியவர் . ஆனால் துரதிருஷ்டவசமாக  அவர் வழுக்கி விட அஜித் , விஜய் போன்ற அவரை விட இளம் நடிகர்கள் அந்த இடத்தை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு விட்டார்கள் . 48 வயதிலும் இந்த படத்துக்காக விக்ரம் எடுத்துக் கொண்ட சிரத்தையை இந்திய சினிமாவில் இதுவரை எந்த நடிகரும் எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று அடித்து சொல்லலாம் . 86 கிலோவிற்கு உடலை ஏற்றி 56 கிலோவிற்கு குறைப்பதெல்லாம் நிஜத்திலும் சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறார் . சென்னை பாஸை பேசும் பாடி பில்டர் லிங்கேசனாக , பிரபல மாடல் லீயாக , கூன் விழுந்த குரூபியாக என எல்லாமுமாக படத்தில் வியாபித்திருக்கும் விக்ரமின் நடிப்புக்கு ஒரு மாஸ்டர் பீஸ் . ஆனால் இந்த யானையின் நடிப்பு பசிக்கு ஈடு கொடுக்க முடியாமல் கதை சோளப்பொரியாகிப் போனது சொதப்பல் ...


இண்டர்நேஷனல் மாடலாக எமி எக்கச்சக்க பொருத்தம் . ஆனால் இவரிடம் உள்ள சதையளவுக்கு கூட படத்தில் கதையில்லையே என்பது தான் வருத்தம்.\
படம் 100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் இருந்தாலும் இவர் உடையில் மட்டும் தயாரிப்பாளர் காட்டியதென்னமோ சுணக்கம் . ( என்ன எழுத்து டி.ஆர் மாதிரி ஆயிருச்சு ! ) . லிங்கேசனிடம் காதலிப்பதாக பொய் சொல்லி விட்டு குற்ற உணர்ச்சியில் துடிக்கும் இடங்களில் எமி பொண்ணு நல்லாவே நட்சுக்குது !. இருவரின் பிஸிக் மட்டுமல்ல கெமிஸ்ட்ரியும் நல்லாவே இருக்கு ...

சந்தானம்  வழக்கம் போல சகட்டுமேனிக்கு எல்லோரையும் கலாய்த்து கிச்சுகிச்சு மூட்டுகிறார் .  கூட்டமாக வரும் வில்லன்களில் ராம்குமார் , திருநங்கையாக நடித்திருப்பவர் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள் .
" மெரசலாயிட்டேன் " , " என்னோடு நீ " பாடல்களில் மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் ஏ க்ளாஸ் ரஹ்மான் . பி.சி யின் ஒளிப்பதிவு உலகத்தரம் . அனல் அரசு வின் சண்டைக்காட்சிகள் குறிப்பாக ஜிம்முக்குள் நடக்கும் சண்டை நம்மை நகரவிடாமல் ஜாம் செய்கிறது . ஒரு பாடலுக்கும் யாரையும் தம்மடிக்க போக விடாமல் ஷங்கரின் க்ரியேடிவ் பிரம்மாண்டம் கட்டிப் போடுகிறது . குறிப்பாக " மெர்சல் " பாடலில் எமி செல்போன் , பைக் என்று ஒவ்வொன்றாக உருமாறுவதும் , " ஐலா " பாடல் முழுவதும் வரும் சின்ன சின்ன ஆட் கான்செப்டுகளும் ஷங்கர் டச் ...

ஆஸ் யூசுவல் லொக்கேஷன் , க்ராபிக்ஸ் இரண்டிலும் பின்னியெடுக்கிறார் இயக்குனர் . முதல் சீனிலேயே எமியை கடத்தி கதைக்குள் (!) போய் விடுவது சாமர்த்தியம் . கரென்ட் , ப்ளாஷ்பேக் என நகரும் ஐ படம் சைனாவுக்குள் நுழையும் வரை இன்ட்ரெஸ்டிங்காகவே செல்கிறது . திருநங்கையை இந்த அளவுக்கு ஒட்டியிருப்பது அய்யே ! . ஹீரோ எதற்கு இப்படி ஆனான் என்று முழுசாக தெரியவரும் போது  தான் ஐ ஹைலி டிஸப்பாய்ன்டிங்  ! . இந்தியனில் கமல் , அந்நியனில் விக்ரம் இருவரின் நடிப்பையும் தாண்டி ஷங்கரின்  கதை , அதை சொல்லும் விதம் இரண்டும் நம்மை வசீகரிக்கும் . ஆனால் இந்த படத்தில் அந்த ஷங்கர் மேஜிக் மிஸ்ஸிங் ...


ஷங்கர் வழக்கமான சமூக அக்கறை பாணி படங்களை விட்டுவிட்டு ரொமாண்டிக் த்ரில்லர் வகையறாவுக்கு வந்ததை பாராட்டலாம் . ஆனால் கொஞ்சம் வீக்கான கதைக்கு இன்னும் வீக்கான திரைக்கதை அவர் பழைய பாணிக்கு திரும்புவதே தேவலை என்று சொல்ல வைக்கிறது . டூ பீஸ் மாடல் எமி , கோ மாடல் ஜானுடன் அட்ஜஸ்ட் செய்யாததால் ஏற்படும் பிரச்சனை  , லீயுடனான பழைய காதலால் எமிக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று அம்மா புலம்புவது , அதிலும் சின்ன குழந்தை கூட கண்டுபிடித்து விடும் மேட்டரை ட்விஸ்ட் என்ற நினைப்பில் சொருகியிருப்பதையெல்லாம் பார்த்தால் ஷங்கர் & கோ வின் கற்பனை வறட்சி பிரம்மாண்டமாக தெரிகிறது ...

சுருக்கமாக சொன்னால் இன்டர்நெட் , மியூசிக் என எல்லா சிறப்பம்சங்களுடன் பார்ப்பதற்கு அழகாக  இருக்கும்  அல்ட்ரா  மாடல் செல்போன் " ஹலோ " என்று இரண்டு வார்த்தை பேசுவதற்குள் சார்ஜ் போனால் எப்படியிருக்குமோ கிட்டத்தட்ட அதுவே . இருப்பினும் பொங்கல் விடுமுறை , விக்ரமின் நடிப்பு , டெக்னிகல் ஆஸ்பெக்ட்ஸ் , படத்திற்கான ப்ரொமோ , எல்லாவற்றையும் விட மொக்கை என்று ஒதுக்கிவிட முடியாத படியான படம் இவையெல்லாம் ஐ யை காப்பாற்றக்கடவது . இந்த படத்தில் விக்ரம் பாடி பில்டராக வருகிறார் . அந்த பாணியில் சொல்வதானால் - பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் ...

ஸ்கோர் கார்ட் : 42 

( பி.கு : விக்ரம் என்னும் நடிப்பு ராட்ஸனுக்காகவே இந்த மார்க்


11 January 2015

பி.கே - PK - IS IT O.K ?! ...


பெரும்பாலும் ஹிந்திப் படங்களை பெரிதும் விரும்பி பார்க்காத  எனக்கு அமீர்கான் படங்களில் மேல் மட்டும் ஈர்ப்பு உண்டு . அவருடைய ஒவ்வொரு படத்திலும் நம்மை பாதிக்கும் வகையில் ஏதாவது ஒரு அழுத்தமான மேட்டர் இருக்கும் . அந்த வரிசையில் இப்பொழுது வந்திருக்கும் பி.கே வும் விதிவிலக்கல்ல . முதலில் வேற்று கிரக வாசியான அமீர்கான் இந்தியாவுக்கு வந்ததிலிருந்தே நம்மை கவனிக்க வைக்கும் படம் முடியும்  வரை நகர விடாமல் கட்டிப் போடுகிறது .  ஒவ்வொரு மதத்தை பற்றியும் , கடவுளைப் பற்றியும் , அதன் பெயரால் நடக்கும் பிரிவினை பற்றியும் அமீர்கான் குழந்தைத்தனமாக கேட்கும் ஒவொரு கேள்விகளும் சாட்டையடி . ஒரு கட்டத்துக்கு மேல் கடவுள் நம்மை படைத்தார் என்பதை விட நாம் தான் நமக்கு ஏற்றபடி டிசைன் டிசைனாக கடவுளை படைத்திருக்கிறோம் என்று கடவுள் மேல் அதிக நம்பிக்கை உள்ளவர்களையே யோசிக்க வைப்பதே படத்தின் வெற்றி . அனுக்ஷா வின் ஜெர்மனிய காதலும் , பிரிதலும் அழகான ஹைக்கூ . ஆனால் க்ளைமேக்ஷில் இருவரும் சேர்வதும் , எல்லோரும்  அழுவதும் நம்மூர் விகரமன் ஸ்டைல் வழக்கமான சினிமா .  மொத்தத்தில் பி.கே கருத்து முலாம் பூசப்பட்ட ஜாலியான ரசிக்கக்கூடிய படம் ...

ஆனாலும் இது ரங்க் தே பசந்தி , 3 இடியட்ஸ் அளவிற்கு என்னை பாதிக்காததற்கு இரண்டே காரணங்கள் . 1. இந்து மதத்தில் கடவுளின் பெயரால் காசு பார்க்கும் சாமியார்கள் , அவர்களின் பிடியில் கட்டுண்டு கிடக்கும் மக்கள் , கடவுள் , மதம் இரண்டையும் வைத்து நடக்கும் சண்டைகள் , அரசியல்  இப்படி ஏற்கனவே பார்த்து பழகிப் போன ப்ளாட் . 2. படத்தை பார்த்தவர்கள் ஆஹா , ஓஹோ என்கிறார்கள் , இன்னும் பி.கே பார்க்கவில்லையா என்று குசலம் விசாரிக்கிறார்கள் , அமீர்கானின் தையிரியத்தை பாராட்டுகிறார்கள் நிச்சயம்  பி.கே பாராட்டப்பட வேண்டிய படம் தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை . ஆனால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய அளவிற்கு இதில் வித்தியாசமாய் ஒன்றுமில்லை ..;

எல்லா மதங்களிலும் நல்ல நம்பிக்கைகளுக்கு ஈடாக மூட நம்பிக்கைகளும் இருக்கின்றன . மத நம்பிக்கைகளை வைத்து வியாபாரம்  நடத்தும் சாமியார்கள் , அரசியல்வாதிகள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள் . அத்தோடு கடவுளின் பெயரை சொல்லி குழந்தைகள் , பெண்கள் ஏன் தங்கள் மதத்தினரையே கூட கொல்லும் தீவிரவாதிகளும் இவ்வுலகில் இருக்கிறார்கள் . ஆனாலும் வழக்கம் போல பி.கே படம் இந்து மதத்தினரின் பல கடவுள் வழிபாடு , போலி சாமியார்களின் ஏமாற்று வேலைகள் இதைத்தான் அதிகம் அலசுகிறது . ஒன்றிரண்டு சீன்கள் ஊறுகாய் போல மற்ற மதத்தினரைப் பற்றி வருகிறது . இந்தியாவில் இந்து மதத்தை கிண்டல் செய்து எவ்வளவோ படங்களை பார்த்தாகி விட்டது . இந்தியாவில் 80 சதவிகிதத்துக்கும் மேல் இந்துக்கள் இருப்பதால் அந்த மதத்தின் நன்மை , தீமைகள் அனைவரும் அறிந்ததே . அப்படியிருக்க இதில்  வித்தியாசம் என்ன இருக்கிறது ? .  அதே நேரம் இந்து மதத்தை போல  மற்ற மதங்களிலும் உள்ள மூட நம்பிக்கைகள் ,   மூளைசலவை செய்து மதமாற்றம் செய்யப்படும் அப்பாவி மக்கள் , மதமாற்றத்துக்காக இந்தியாவில் கொட்டப்படும்  அந்நிய முதலீடு , அடுத்தடுத்த அந்நிய படையெடுப்புகளால் படிப்படியாக அழிக்கப்பட்ட நமது கலாசாரம் இவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்து அமீர்கான் & கோ டீடைல்டாக ஒரு படம் எடுத்திருந்தால் இன்னும் வித்தியாசமாக இருந்திருக்கும் . மேலும் கடவுள் மறுப்புக் கொள்கைகளுக்கும் , பகுத்தறிவுப் பிரச்சாரங்களுக்கும் பெயர் போன தமிழகத்தில் பி.கே பாணி படம் பழக்கப்பட்ட ஒன்று  .

குறிப்பாக சொன்னால் மணிவண்ணனை ஹீரோவாக வைத்து , வேலு பிரபாகரன் இயக்கத்தில் கடவுள் என்றொரு படம் தமிழில் வந்தது . நிறைய பேர் பார்த்திருக்க  மாட்டார்கள் , பார்த்தவர்களும் மறந்திருக்கலாம் . அந்த படத்தில் மணிவண்ணன் கடவுளாக நடித்திருப்பார் . பூமிக்கு வரும் அவர் தன்  பெயரால் நடக்கும் சாதி கலவரங்கள் , மூடநம்பிக்கைகள் இவற்றை பொறுக்க முடியாமல் அதற்கு எதிராக அவரே களத்தில்  இறங்குவார் . கடைசியில் கடவுளே மக்களால் கொல்லப்படுவது போல படம் முடியும் . இந்த படத்தில் இருந்து மணிவண்ணன் கடவுளாக வருவதை  எடுத்துவிட்டு , அமீர்கானை வேற்றுகிரக வாசியாக்கி புத்திசாலித்தனமான திரைக்கதையையும் , மார்கெட்டிங்கையும் இணைத்து விட்டால் பி.கே . இரண்டும் ஒரே ப்ளாட் என்பதற்காகத்தான் இந்த ஒப்பீடே தவிர  நிச்சயம் இரண்டு படங்களுக்கானதல்ல . அப்படி  செய்தால் அதை விட அபத்தம் வேறுதுவும் இருக்காது .  இருப்பினும் பி.கே வில் புதுசாக எதுவுமில்லை என்று புரிய வைப்பதற்காகத்தான் இந்த ஒப்பீடு ...

பி.கே ஜாலியாக குடும்பத்தோடு பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படம் தானே தவிர இதில் அமீர்கானின் தைரியத்தையோ , வித்தியாசமான சிந்தனையையோ பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை . இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கடவுளை மறுக்கும் நாத்திக கொள்கைகளுக்கு மூல நதியான சார்வாகம் , கம்யூனிஸ சித்தாந்தங்களுக்கு வேரான லோகாயுதம் போன்ற தத்துவங்கள் வேரூன்றி இருந்திருக்கின்றன . மேலும் தெருவுக்கு தெரு கடவுளாக ஆராதிக்கப்படும் ராமனையும் , கிருஷ்ணனையும் கிண்டல் செய்து பட்டிமன்றம் நடத்தும் தைரியமும் , அதை ரசித்து அதிலிருக்கும் உண்மைகளை சீர் தூக்கிப் பார்க்கும் பெருந்தன்மையும் காலங்காலமாக இந்துக்களுக்கு இருக்கிறது . எனவே இதில் அமீர்கான் & ராஜு இராணியின் தையிரியத்தை பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை ...

இதே அமீர்கான் அவர் மதத்திலேயே உள்ள மூட நம்பிக்கைகளை கிண்டல் , கேலி செய்து கேள்வி கேட்டு படம் எடுத்திருந்தால் அவர் தைரியத்துக்கு பெரிய சல்யூட் அடித்திருக்கலாம் .   ஏன் இந்த படத்திலேயே வரும்  குண்டு வெடிப்பு சம்பவத்தை வெறும் பாசிங் சீனாக காட்டாமல் அதற்கு  காரணமானவர்களைப்  பற்றிய  உண்மையான விவாதங்களை முன் வைத்திருந்தால் அமீர் & கோ வுக்கு கை குலுக்கியிருக்கலாம் . இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் சினிமா கேரியர் எஞ்சியிருக்கும் அமீர் கானால் அப்படியொரு ரிஸ்க் எடுக்க முடியுமா ? பிரான்சில் கார்ட்டூன் வரைந்ததற்கே அந்த கதி என்னும் போது படம் எடுத்தால் ? . புத்தகம் எழுதியதற்காக சொந்த நாட்டுக்கே திரும்ப முடியாமல் நாடோடிகளாக சுற்றிக் கொண்டிருக்கும் தஸ்லிமா நஸ்ரின் , சல்மான் ருஷ்டி இவர்கள் கதையெல்லாம் அமீர் கானுக்கு தெரியாதா என்ன ?உண்மையை உரக்க சொல்லும் தையிரியமான படத்தை அமீர்கான் என்றல்ல யார் வேண்டுமானாலும் எடுக்கட்டும் பார்க்கலாம் ! . மற்றபடி எல்லா சினிமாக் காரர்களின் ஈசி டார்கெட் யாரோ அவர்களை மட்டுமே இவர்களும் குறி வைத்திருக்கிறார்கள் . கொஞ்சம் வித்தியாசத்துக்கு மற்ற மதத்தினரைப் பற்றிய ஒன்றிரண்டு சீன்களை சேர்த்திருக்கிறார்கள் அவ்வளவே . இதை எழுதுவதால் எனது நோக்கம் எல்லா மதத்தினரையும் கிண்டல் செய்ய வேண்டுமென்பதல்ல . என்னுடைய வாதம் புதிதாய் நாம் அறியாத களம் எதுவும் படத்தில் இல்லை என்பது மட்டுமே ...

குறிப்பாக  மோடி ஆட்சியில் இப்படியொரு படம் எடுப்பதற்கு தையிரியம் வேண்டுமென்று ஒரு  பத்திரிக்கை எழுதியிருப்பதை படித்தால் சிரிப்பு தான் வருகிறது . அப்படி தையிரியத்தை பாராட்டுவதற்கு அமீர்கான் ஒன்றும் சாப்ளினும் அல்ல , மோடி ஒன்றும் ஹிட்லரும் அல்ல . எல்லோரும் செய்து கொண்டிருக்கும் பார்முலா படத்தை எடுத்து நாலு காசு பார்ப்போம் என்கிற வகையறா படம் தான் பி.கே வே தவிர மற்றபடி பெரிதாக எதுவுமில்லை . அப்படியே பாராட்டுவதாக இருந்தால் இந்த படத்தை எதிர்த்து தியேட்டர்களை அடித்து நொறுக்கி படத்துக்கு மேலும் பப்ளிசிட்டியை கூட்டிய சில இந்து அமைப்புகளை தவிர்த்து எவ்வளவு கழுவி கழுவி ஊத்தினாலும் அதை பற்றி கவலைப்படாமல் பெருந்தன்மையாக எல்லா படங்களையும் ரசித்து ஊக்குவிக்கும் சாமனிய இந்துக்களை பாராட்டி விழா எடுக்கலாம் . இதை படித்து விட்டு யாராவது  கருத்து சுதந்திரக் கொடியை தூக்கலாம் . சினிமா விமர்சகனாக் மட்டுமல்ல தனி  மனிதனாகவும் எப்பொழுதும்   நான் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானவன் அல்ல . நான் எதிர்ப்பது  செலெக்டிவ் கருத்து சதந்திரத்தையும் , கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் அரைத்த மாவையே அரைப்பதையும் தான் . மற்றபடி பி.கே லாஜிக்கை தவிர்த்து விட்டு பார்த்தால் ரசித்துப் பார்க்கக் கூடிய  ஜாலி படம் ...


1 January 2015

தமிழ் சினிமா 2014 - TAMIL CINEMA 2014 ...




டந்த வருடம் 200 க்கும் அதிகமான தமிழ்படங்கள் ரிலீசாகியிருந்தாலும் வழக்கம் போல பத்துக்கும்  சற்று அதிகமான படங்களே வெற்றி பெற்றிருப்பது ஏமாற்றம் . லிங்குசாமி , கே.எஸ்.ரவிக்குமார் போன்ற கமர்சியல் இயக்குனர்களின் படங்கள்  தோல்வியை தழுவியிருந்தாலும் வினோத் , ஆனந்த்ஷங்கர்  போன்ற புதுமுக இயக்குனர்களின் வெற்றி ஆறுதல். விஜய் மில்டன் , வேல்ராஜ் , ரவி.கே.சந்திரன் ஆகிய மூன்று பிரபல ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாக அவதாரம் எடுத்திருக்கிறார்கள். அதில் முதல் இருவரின் படங்கள் ஜெயித்திருப்பது நம்பிக்கை . பாலுமகேந்திரா , கே.பாலசந்தர்  , மணிவண்ணன் போன்ற சிறந்த இயக்குனர்களின்  மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரிய இழப்பு . மற்றபடி புதுமுகங்களை விட  அஜித் , விஜய் , சுந்தர்.சி , ஏ.ஆர்.முருகதாஸ் என்று பிரபலமானவர்களே  2014 இல் ஜெயித்திருக்கிறார்கள்  என்பது இப்போது ஏற்பட்டிருக்கும் வறட்சி . முதல் ஆறு மாத சினிமா அலசல்களை  பற்றி அறிய காண்க : அரையாண்டு தமிழ் சினிமா 2014 ...


இனி எனது பார்வையில் தமிழ் சினிமா 2014

கவர்ந்த படங்கள் ( ரிலீசான மாதங்களின் அடிப்படையில்  )

 1.தெகிடி
 2 கோலி சோடா
 3. குக்கூ
 4. யாமிருக்க பயமே
 5. முண்டாசுப்பட்டி
 6. சதுரங்க வேட்டை
 7. ஜிகர்தண்டா
 8. கதை திரைக்கதை வசனம் இயக்கம் 
 9. மெட்ராஸ்
10.பிசாசு 

டாப் டென் பாக்ஸ் ஆபீஸ்  ரிலீசான மாதங்களின் அடிப்படையில் )

1.  வீரம் 
2.  கோலி சோடா
3.  யாமிருக்க பயமே
4.  சதுரங்க வேட்டை
5.  வேலையில்லா பட்டதாரி
6.  ஜிகர்தண்டா
7.  அரிமா நம்பி  
8.  அரண்மனை
9.  சலீம்
10கத்தி 


ப்ளாக்பஸ்டர்  : வீரம் கத்தி 

டாப் டென் பாடல்கள்

1. கண்டாங்கி ( ஜில்லா  )
2. விண்மீன் ( தெகிடி  )
3. கூடமேல கூட ( ரம்மி )
4. ஆகாசத்த  ( குக்கூ )
5. காதல் கனவே  ( முண்டாசுபட்டி   )
6. அம்மா அம்மா  ( வி.ஐ.பி  )
7. என்தாரா என்தாரா ( திருமணம் என்னும் நிக்காஹ்  )
8. மணப்பெண் சத்தியம் ( கோச்சடையான்  )
9. பேசாதே ( திருடன் போலீஸ்  )
10.ஆத்தி இவள  ( கத்தி  )

கவர்ந்தவர்கள் 

 கவர்ந்த படம் - குக்கூ
 கவர்ந்த நடிகர் - அட்டகத்தி தினேஷ்  ( குக்கூ )
 கவர்ந்த நடிகை - ஆண்ட்ரியா  ( அரண்மனை  )
 கவர்ந்த குணச்சித்திர நடிகர் - சத்யராஜ் / ராதாரவி ( சிகரம் தொடு / பிசாசு )
 கவர்ந்த குணச்சித்திர நடிகை - சரண்யா ( வி.ஐ.பி  )
 கவர்ந்த காமெடி நடிகர் -  சந்தானம்  ( அரண்மனை )
 கவர்ந்த வில்லன் நடிகர் -  ப்ரிதிவிராஜ்  ( காவியத்தலைவன்  )
 கவர்ந்த இசையமைப்பாளர் - சந்தோஷ் நாராயன்   ( குக்கூ )
 கவர்ந்த பின்னணி இசையமைப்பாளர் -  ஆரோல் கோரெல்லி ( பிசாசு )
 கவர்ந்த ஆல்பம் - வி.ஐ.பி  ( அனிருத் )
 கவர்ந்த பாடல் - அம்மா அம்மா  ( வி.ஐ.பி  )
 கவர்ந்த பாடகி - எஸ்.ஜானகி ( அம்மா அம்மா )
 கவர்ந்த பாடகர் - அனிருத் ( உன் விழிகளில்  )
 கவர்ந்த பாடலாசிரியர் - யுகபாரதி  ( மனசுல சூரக்காத்து )
 கவர்ந்த வசனகர்த்தா - வினோத்   ( சதுரங்க வேட்டை )
 கவர்ந்த கதாசிரியர் - ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ( க.தி.வ.இ )
 கவர்ந்த திரைக்கதையாசிரியர் - கார்த்திக் சுப்பராஜ்  ( ஜிகர்தண்டா  )
 கவர்ந்த ஒளிப்பதிவாளர் -  ஆர்.டி.ராஜசேகர் ( அரிமா நம்பி )
 கவர்ந்த இயக்குனர் - வினோத்  ( சதுரங்க வேட்டை   )
 கவர்ந்த புதுமுகம் - மாளவிகா ( குக்கூ  )

வசூல் ராஜாக்கள் 

அஜித் ( வீரம்  )
விஜய்  ( கத்தி  )
தனுஷ்  ( வி.ஐ.பி  ) 
சுந்தர்.சி ( அரண்மனை ) 

ஏமாற்றங்கள்

அஞ்சான் 
லிங்கா 

அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...
  

29 December 2014

மீகாமன் - MEAGHAMANN - ஒன் மேன் ஆர்மி ..


மேக்கிங் ஸ்டைலில் தனது முதல் இரண்டு படங்களையுமே கவனிக்க வைத்தவர் மகிழ்திருமேனி . அவரது பெயரைப் போலவே இந்த படத்திலும் கவித்துவமான தமிழ்தலைப்புடன் மாஸ் ஹீரோ ஆர்யாவுடன் முதன் முறையாக கை கோர்த்திருக்கிறார் . படம்  வழக்கமான அண்டர் காப் ஸ்டோரி தான் என்றாலும் திரைக்கதை மூலம் ஏன் , எதற்கு , எப்படி என்று ஆடியன்சை யோசிக்க வைத்து படத்துடன் ஒன்ற வைக்கிறார் ...

அண்டர்க்ரவுண்ட் டான் ஜோதி யை பிடிப்பதற்காக நான்கு வருடங்கள் அந்த க்ரூப்பிலேயே இருக்கிறான் சிவா ( ஆர்யா ) . இந்த ஆப்பரேஷனில் ஈடுபட்டிருக்கும் மற்றொரு காப் நண்பன் ( ரமணா ) கொல்லப்பட , இவனும் பிடிபட , சிவா முயற்சியை கைவிட்டானா அல்லது அதிகமாக யாரும் பார்த்திராத ஜோதியை பிடித்தானா என்பதை இடைவேளை வரை விறு விறு , பின்னர் கொஞ்சம் வழ வழ ( உபயம் ஹீரோயின் ஹன்சிகா ) என்று இழுத்து முடித்திருக்கிறார்கள் ...

ஆர்யாவுக்கு அல்டிமேட் கேரக்டர் . மனுஷன் அலட்டிக் கொள்ளாமல் ஹீரோயிசம் செய்கிறார் . படம் முழுக்க உம்மென்று இருந்தாலும் ஹன்சிகாவை ஓட்டும்  காட்சிகளில் மட்டும் சிரித்து கொஞ்சம் சிரிக்கவும் வைக்கிறார் . ஹன்சிகா படத்திற்கு தேவையில்லாதது போல பட்டாலும் அவருடைய கேரெக்டர் ஸ்கெட்ச் ரசிக்கும் படியாகவே இருக்கிறது . குறிப்பாக இவர் தோழியுடன் சண்டை போட்டுக் கொள்ளும் சீன்கள் க்யூட் . ஆனாலும் இடைவேளைக்கு பிறகு நடு நடுவே வந்து பொறுமையை சோதிக்கிறார் . ஹீரோவின் நண்பனாக வரும் ரமணா சில சீன்கள் வந்தாலும் கவனிக்க வைக்கிறார் . இவர்களை  தவிர்த்து படத்தில் வில்லன் உட்பட காஸ்டிங் சறுக்கல் . தமனின் பின்னணி இசை தனியாக தெரிகிறது . " ஏனிங்கு  வந்தாய் " பாடல் காதல் தாலாட்டு . சதிஸ் குமாரின் ஒளிப்பதிவு துல்லியம் ...


முதலில் குழப்புவது போல இருந்தாலும் மெயின் ப்ளாட் தெரிந்தவுடன் நம்மை ஐக்கியமாக்கி விடுகிறது படம் . நிறைய கேரக்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும் கதை ஆர்யாவை சுற்றியே வருவது ஆறுதல் . இடைவேளைக்கு முன் வரும் ஆக்சன் சீன்கள் நிச்சயம் நீண்ட நாட்கள் பேசப்படும் . முதல் பாதியில் கிடைக்கும்  விறுவிறுப்பு , வன்முறை தூக்கலாக இருந்தாலும் உறுத்தாமல் எடுத்த விதம் , வாட் நெக்ஸ்ட் என்கிற விதத்தில் நம்மை ஒன்ற வைக்கும் திரைக்கதை , காதலுக்கு கொடுத்த ப்ராக்டிகல் டச் போன்றவற்றால் மீகாமன் மெச்சூர்டாக தெரிகிறான் ...

ஓரளவுக்கு ரியலிஷ்டிக்காக போகும் படத்தில் திருஷ்டிப் பொட்டு  போல க்ளைமேக்ஸ் சண்டை , ஆடு புலி ஆட்டத்தில் நம்மை கவராத வில்லன் , ஸ்பீட் பிரேக்கர் போல வரும் காதல் சீன்கள் போன்றவற்றால் கப்பல் தள்ளாடாமல் இருந்திருந்தால் மீகாமன் நிச்சயம் கேப்டனாக இருந்திருப்பான் . மற்றபடி மாலுமிகள்  இல்லாமல் தனியாக ஆடியிருக்கும் மீகாமன் - ஒன் மேன் ஆர்மி ..

ஸ்கோர் கார்ட் : 43 


3 December 2014

காவியத்தலைவன் - KAAVIYATHALAIVAN - கவனிக்க வைப்பான் ...


12 வருடங்களில் ஐந்தே படங்கள் மட்டுமே  ஒரு இயக்குனர் எடுத்திருக்கிறார் என்பதே ஒவ்வொரு படத்துக்கும் அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தையை சொல்லாமல் சொல்லும் . ஆனாலும் அந்த சிரத்தை மட்டுமே ஒரு படத்தை தூக்கி நிறுத்திவிடும் என்று சொல்வதற்கில்லை . இப்படி சில வரிகளில் வசந்தபாலன் இயக்கத்தில் வந்திருக்கும் காவியத்தலைவன் படத்தைப் பற்றி சொன்னாலும் சுதந்திரத்துக்கு முந்தைய கால கட்டத்தின் நாடக  உலக மாந்தர்களை நம் கண்முன் உலவவிட்ட முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும் ...

1930 களில் தமிழகத்தின் பிரபலமான நாடக குரு சங்கரதாச சாமிகளின்  (நாசர் ) பிரதான சிஷ்யர்கள் காளியப்பா பாகவதர் ( சித்தார்த் ) மற்றும் கோமதி நாயகம் பிள்ளை ( ப்ரித்விராஜ் ) இருவருக்குமிடையேயான வாழ்க்கைப் பயணத்தை விவரிப்பதே காவியத்தலைவன் ...

சித்தார்த்திற்கு இது அதிகப்படியான கதாபாத்திரம் தான் . ஆனாலும் தனது அலட்டிக் கொள்ளாத நடிப்பால் குறைகளை மறைக்கிறார் . காதலியின் சாவுக்கு பிறகு நாசருக்கு சாபம் விடும் இடத்தில் சிலிர்க்க வைக்கிறார் . குறும்பு சித்தார்த் கவர்ந்த அளவிற்கு தேசபக்தி பேசும் சீரியஸ் சித்தார்த் கவரவில்லை . இவரை ஒருதலையாக காதலிக்கும் வடிவாம்பாள் கதாபாத்திரத்தில் வரும் வேதிகாவின் நடிப்பு யதார்த்தம் ...

காளியப்பாவை காதலித்து பின் காலாவதியாகும் இளவரசி ரங்கம்மா
( அனிக்கா ) அட போங்கப்பா ரகம் . குரு வேஷத்தில் நாசர் நச் . தம்பி ராமையா அறிமுக பாடல் காட்சியில்  ஓவர் ஆக்டிங் செய்து  பயமுறுத்தினாலும் போகப் போக பழகி விடுகிறார் . ஆள் இல்லாவிட்டால் அதட்டுவதும் , ஆளைப் பார்த்தவுடன் பம்முவதுமாக மயக்கும் மேனரிஷத்தில் மன்சூர் அலிகான் ...


தன்னை விடுத்து சித்தார்த்தை குரு பாராட்டுமிடத்தில் ஆரம்பித்து கடைசியில் நீ இல்லேன்னா தான் எனக்கு நிம்மதி என்று  சித்தார்த்திடம் பொறுமும் க்ளைமேக்ஸ் சீன் வரை இந்த ப்ரித்வி பிள்ளைவாள் நடிப்பு ராஜ்ஜியம் நடத்துகிறார் . தான் எந்த விதத்தில் அவனை விட குறைந்து விட்டோம் என்று குருவிடம் காட்டும் ஆதங்கமாகட்டும் , காதல் விவகாரத்தில் காளியப்பாவின் இமேஜை காலி செய்து விட்டு ஒன்றுமே  தெரியாத அப்பாவியாய் நிற்பதிலாகட்டும் , வடிவு தனக்கில்லை  என்று தெரிந்தவுடன் காட்டும் ஏக்கத்திலாகட்டும் , கடைசியில் சித்தார்த்த் பற்றிய உண்மை தெரியவரும் போது வந்து மறையும் குற்ற உணர்ச்சியிலாகட்டும் மனதை கிறங்கடிக்கும் இந்த  மலையாளத்தான் தான் இந்த காவியத்தின் உண்மையான தலைவன் ...

" சண்டி குதிரை " , " சொல்லி விடு " பாடல்களில் கவரும் இசைப்புயல் பின்னணி இசையில் ( காலகட்டம் கொஞ்சம் நெருடினாலும் ) பின்னியெடுக்கிறார் . குறிப்பாக நாசருக்கு முன் ப்ரித்விராஜ் , சித்தார்த் இருவரும் நடித்துக் காட்டும் இடத்தில் வசனங்களை மீறி இவரது  இசையே ஆளுமை செய்கிறது  . 30 களில் நடக்கும் கதைக்காக ஜெயமோகன் பெரிதாக எதுவும் மெனக்கெடவில்லை என்கிற குறை இருந்தாலும் சித்தார்த் - ப்ரித்விராஜ் இடையேயான க்ளைமேக்ஸ் வசனங்கள் படத்திற்கு பலம் . ஆனாலும் செலம்பாதே போன்ற வசனங்கள் என்ன சாரே ?!...


பொன்வண்ணனின் நடிப்பைப் பார்த்து விட்டு பேசிக்கொள்ளும் ஒரு சீனிலேயே காளியப்பா , கோமதி என்கிற இரு கதாபாத்திரங்களின் அவுட்லைனை விளக்கி விடுகிறார் வசந்தபாலன் . அதே போல கோமதிக்கு காளியப்பா மேல் காண்டு வளர்வதற்கு இவர் வைத்திருக்கும் சீன்களிலும் அதே சாமர்த்தியம் தொடர்கிறது . ஆனால் ப்ரித்விராஜ் மேல் சித்தார்த் வைத்திருக்கும் மதிப்பு , மரியாதையை பெரிதாக காட்சிப்படுத்தாமல் வெறும் வசனங்களை மட்டும் வசந்தபாலன் நம்பியது துரதிருஷ்டம் . அதிலும் க்ளைமேக்ஸ் சீன் ஆடுகளத்தை நினைவு படுத்துகிறது ...

கதைக்களன் நாடக காலகட்டம் என்பதால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக தனி ட்ராக் எல்லாம் போகாமல் முக்கியமான கதாபாத்திரங்களை வைத்தே அதை முடிந்த அளவு சொல்லியிருப்பது டைரக்டர் டச் . அதே சமயம் இருவரின் ஈகோ பிரச்னை தான் கதை என்னும் போது எதற்கு பீரியட் படம் என்ற கேள்வியும் எழாமல் இல்லை . நாசரிடம் அடி வாங்கி விட்டு ப்ரித்விராஜின் மடியில் சித்தார்த் சாயும் இடத்தில் இந்த பிரச்சனைக்கு மூலகாரணமான ப்ரித்விராஜுக்கு ஒரு க்ளோஸ் அப் வைத்திருந்தால் அந்த சீன்  இன்னும் நிறைவாக இருந்திருக்கும் ...

சித்தார்த்துக்கு வரும் செலெக்டிவ் தேசபக்தி , எவ்வித அழுத்தமும் இல்லாத சித்தார்த் - இளவரசி காதல் , மனதை பெரிதும் கவராத சில மேடை நாடக பாடல் காட்சிகள் போன்றவையும் காவியத்தலைவனின்  காலை வாறுகின்றன . இது போன்ற குறைகளை கொஞ்சம் தவிர்த்து விட்டு பார்த்தால்  கொரியன் படங்களை சுடாமல் , மாடர்ன் மசாலாக்களில் இருந்தும்  மாறுபட்டு நம்மை அந்த காலகட்டத்திற்கு கொண்டு சென்ற வித்தத்தில் இந்த காவியத்தலைவன் நம்மை ஆளா விட்டாலும் கவனிக்க வைப்பான் ... 

ஸ்கோர் கார்ட் : 43

28 November 2014

மதுரை பசங்க - MADURA GUYS ...


சொந்த ஊர் மதுரைக்கு சென்று இரண்டு வருடங்களுக்கு மேலிருக்கும் . இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்லூரி நண்பன் பத்ரி வாட்ஸ் ஆப்பில் மதுரை கல்லூரி பி.காம் க்ளாஸ் மேட்ஸ் அனைவருக்காகவும் ஒரு க்ரூப்பை ஏற்படுத்தியிருந்தான் . அதில் வெட்டியாக அளவளாவிக் கொண்டிருந்த போது திடீரென ஒருநாள் அனைவரும் ஏன் மதுரையில்  மீட் செய்யக்  கூடாது என்று அவனே திரியை கிள்ளிப்போட அதுவே பற்றியெரிந்து நவம்பர் மாதம் மதுரையில் கெட் டுகெதர் என்று முடிவானது . நண்பர்கள் சிலருடன் ஏற்கனவே தொடர்பிலிருந்தாலும் பி.காம் முடித்து பதினைந்து வருடங்கள் கழித்து எங்கள் செட்டில் உள்ள அனைத்து நண்பர்களும் ஒரே இடத்தில் அதுவும் மதுரையில் மீட் செய்யப் போகிறோம் என்று நினைக்கும்போதே மனசு ஏனோ மலரும் நினைவுகளுக்குள் போனது  ...

மதுரை கல்லூரியை என்னால் மறக்கவே முடியாது.  மூன்று வருடங்கள் அங்கே படித்தேன் என்பதை விட நண்பர்களுடன் சேர்ந்து நிறைய லூட்டி அடித்தேன் என்பதே நிஜம். வேறு வேறு பள்ளிகளில்  படித்ததாலோ என்னவோ எனக்கு பள்ளி நாட்களில் பள்ளி நண்பர்களை விட ஏரியா நண்பர்களே அதிகம் . ஏரியா நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிதற ஆரம்பிக்கும் போது  தான் நான் கல்லூரியில் முதல் வருடம் காலடி எடுத்து வைத்தேன் . மதுரை கல்லூரி ரெகுலரில் கண்டிப்பாக சீட் கிடைக்கும் என்று தெரிந்தும் அப்பாவுக்கு தெரியாமல் அப்ளிக்கேஷனை கிழித்துப் போட்டதற்கு காரணம் ஈவினிங் காலேஜ் கோ - எட் என்பது மட்டுமே . அதோடு அண்ணன்கள் இருவரும் ரெகுலரில் படித்திருந்தாலும்  ஈவினிங் காலேஜில் படித்துக் கொண்டிருந்த என் அத்தை பெண் ( ரெண்டு வருடம் சீனியருங்க ) காலேஜ் பற்றி கொடுத்திருந்த பில்ட் அப் மனதை பட்டாம்பூச்சி போல பறக்க வைத்திருந்தது ...

ஆண்கள் பள்ளியிலேயே படித்ததாலோ என்னவோ சில சுமாரன பெண்கள் கூட சூப்பராகவே தெரிந்தார்கள் . ஆனால் அதற்கும் இருந்த போட்டி இருக்கிறதே அடடடடா !. முதல் பெஞ்சில்  உட்காருபவனெல்லாம் மூளைக்காரன் என்று நினைப்பார்கள் என்கிற நினைப்பில் அமர்ந்திருந்த என் நம்பிக்கை வீண் போகவில்லை . யார் செட் ஆவார்கள் என்கிற டவுட்டில் இருந்த என்னிடமே சிலர் டவுட் கேட்டார்கள் . முதல் பெஞ்சை விட கடைசி  பெஞ்சே கவனிக்க வைக்கும் என எனக்கு போகப் போக புரிந்தது . கடைசி பெஞ்சில் இருந்து மொக்கை கேள்வி கேட்டால் கூட கிளாசே திரும்பிப் பார்க்கும் . முதலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆர்வமாக பதில் சொன்ன வாத்தியார்கள் எங்களின்  உள்நோக்கம் புரிந்த பிறகு நாங்கள் இருக்குமிடம் வந்தே பதில் சொன்னார்கள்...

பிறகு அதுவும் குறைந்து எங்களின் கேள்விகளுக்கு வகுப்பறைக்கு வெளியே விடை தேடிக் கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்தார்கள் . அந்த டீலிங் ரொம்பவே பிடித்திருந்ததால் வெறும் அட்டன்டென்சில் சைன் செய்து விட்டு கேலரியில் எங்கள் வாழ்க்கைப் பாடத்தை படித்துக் கொண்டிருந்தோம் . ஆனாலும் கட்டடிக்கும் எங்கள் க்ரூப்பில் முக்கால் வாசி பேர் ஆங்கிலம் மற்றும் புள்ளியியல் வகுப்புகளுக்கு மட்டும் கடலோர கவிதைகள் சத்யராஜ் போல முகத்தை வைத்துக் கொண்டு ஆஜராகி விடுவோம் . அது  ஏனென்று சொல்லாமலேயே புரியும் என்று நினைக்கிறேன் . என்னைப் போலல்லாமல் கோ எட்டில் படித்திருந்த மாணவ மாணவிகளிடமுமே கூட ஒருவித இறுக்கம் இருந்தது . முதல் வருட முடிவில் அந்த இறுக்கம் தளர்ந்ததை நன்றாகவே உணர முடிந்தது ...

முதல் வருடம் நண்பன் சேஷனுக்கு அவன் ஆளை சைட் அடிக்க மாட்டேன் என்று செய்து கொடுத்திருந்த  சத்தியத்தை சாயங்கால காலேஜ் என்பதால் சில சமயங்களில் மீறியிருந்தாலும் படித்த மூன்று வருடங்களில் முடிந்தவரை காப்பாற்றினேன் என்றே சொல்லலாம். அவனுக்கு பெண்கள் மத்தியில் க்ரேஸ் இருந்தாலும் ( மச்சி இதுக்கெல்லாம் அழக் கூடாது சரியா ! ) ஏனோ ஒரே பெண்ணையே கடைசி வரை காதலித்தான் . எங்கள் செட்டை  தவிர்த்து கல்லூரிக்கு செல்ல வேண்டுமென்கிற ஆர்வத்தை அதிகம் கொடுத்தது கல்சுரல்ஸ் . அதற்கான தாகத்தை என்னுள் விதைத்து நண்பன் மைக் மது . பி.எஸ்.சி யில் படித்தாலும் எங்கள் பிகாம் செட்டுடனேயே அதிகம் சுற்றியவன் . ரஜினி , கமல் , ரகுவரன் என்று நிறைய குரல்களில் அசால்டாக மிமிக்ரி செய்து எல்லா போட்டிகளிலும் அப்லாசோடு சேர்த்து கப்சையும் அள்ளுபவன் . கெஸ்ட் ப்ளேயராக எங்கள் டீமில் கிரிக்கெட் ஆட வந்து எங்களையே கெஸ்ட்களாக மாற்றியவன் ,..

இரண்டாம் வருடத்திலிருந்து மதுரை மட்டுமல்லாமல் திருச்சி , பாண்டி , கோவை என எல்லா யுனிவர்சிட்டி லெவல் போட்டிகளிலும் பதக்கங்களோடு  சேர்த்து பணமும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டதால் நான் , சேஷன் , மது , தோசை ( மற்றொரு பி.எஸ்.சி நண்பன் ) அனைவரும் க்ளாசை மறந்து கல்சுரல் அறையிலேயே கதியென கிடப்போம் . இப்படி ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்த அந்த சின்ன  கேப்பில் நண்பன் ரம்மி ரெகுலர் காலேஜ்  பெண்ணை காதலித்து கல்யாணம் முடிக்கும் அளவிற்கு பெரிய ஆட்டமே  ஆடி முடித்திருந்தான் . வெளியில் முரட்டுத் தோற்றத்தில் இருந்தாலும் நட்புக்காக எதையும் செய்யக் கூடியவன் ரமேஷ் எ ரம்மி ...

எங்கள் கல்சுரல் செட் ஒரு கட்டத்திற்கு மேல் குறிப்பாக  ஃபாத்திமா காலேஜ் பெண்களின் நட்பு கிடைத்த பிறகு வேறொரு உலகத்தில் பிரயாணிக்கத் தொடங்கியிருந்தோம் . நான் , மது , தோசை மூவருக்கும் ஆல் இந்தியா கல்ச்சுரல் மீட்டிற்காக டிசம்பரில் சென்ற ஹைதராபாத் பயணம் இன்று வரை மறக்க முடியாத அனுபவமாக இருக்குமென்றே நம்புகிறேன் . ஏனெனில் அப்போது தான்  ஃபாத்திமா காலேஜ் பெண்களின் நட்பு கிடைத்தது . தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த பயணம் பெண்களைப் பற்றிய சரியான புரிதலைக் கொடுத்தது . காமம் மட்டும் சார்ந்த குறுகிய வட்டத்திலிருந்து விலகி பெரிய விசாலமான பார்வையை கொடுத்தது . இன்று அதில் ஒரு பெண்ணை தவிர வேறு யாருடனும் எனக்கு தொடர்பில்லா  விட்டாலும்  உலகில் எங்கோ ஒரு மூலையில் இதே போன்றதொறு நினைவில் அவர்கள் வாழ்ந்து  கொண்டிருப்பார்கள் என்றே நம்புகிறேன் ...

கோபுவை காரணம் காட்டி நான் , ரம்மி , சேஷன் மூவரும் காலேஜுக்கு எதிராக நடத்திய  ஸ்ட்ரைக் ( இந்த விஷயத்தில் ஜூனியர்கள் கொடுத்த ஒத்துழைப்பு அபாரம்  ) , கல்சுரலுக்கு போனோமா , காசு பாத்தாமோ என்று இல்லாமல் பாண்டியில் லோக்கல் ஆட்களுடன் நாங்கள் கூட்டிய பஞ்சாயத்து , அந்த பஞ்சாயத்துக்காக பயந்து ஊருக்கு வராமல் அடுத்த நாள் " இவர்கள் சந்தித்தால் " போட்டியில் நானும் சேஷனும் ஜெயித்தது , வேலியில்  போன ஓணானை வேட்டியில் விட்ட கதையாக லவ் லெட்டெர் எழுதிக் கொடுக்க வந்தவன் லவ்வரையே உஷார் செய்தது ( மச்சி குடும்பத்துக்குள்ள குழப்பம் வேணான்னு பேர் போடல ) , சிவகாசியில் எங்கள் கல்லூரி எல்லா கப்புகளையும் வென்றதோடு எனக்கு மேன் ஆ ஃப் தி சீரியஸ் கிடைத்தது , திருச்சி யில் கவிதைப் போட்டிக்கான முதல் பரிசை கணையாழி ஆசிரியர் ஞானக்கூத்தன் கைகளால் வாங்கியது , பத்ரி பிறந்தநாள் பார்ட்டிக்கு சரக்கடித்து விட்டு க்ளாசுக்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக வாந்தி எடுத்தது என்று எல்லாமே மறக்க முடியாத நினைவுகள் . இன்று வேலை , குடும்பம் என்று எல்லோரும் பிரிந்திருந்தாலும் கல்லூரியை பற்றிய நினைவுகள் எங்களை பாலமாக இன்னும் இணைத்துக் கொண்டு தானிருக்கிறது ...

இந்த பதிவை எங்கள் கெட் டுகதெருக்கு ப்ளான் போட்டுக் கொடுத்த பத்ரி , அதற்கு செயல் வடிவம் கொடுத்த துபாய் கார்த்தி , மாப்பிளை அழைப்புக்கு கூப்புடும் பொண்ணு வீட்டுக்காரன் போல முதல் நாளே மதுரையில் டேரா போட்டு நண்பர்களுக்கு தண்ணியாக  அல்லாமல் தண்ணிக்காக மட்டும் பணத்தை செலவு செய்த கட்டிங் ( என்ன பெயர் பொருத்தம் ) ,  150 ரூபாய் ப ஃபே வில்  ஒரே ஒரு இட்லி மட்டும் தின்ற சவூதி ஷேக் சபரி , தேவையில்லாத வாக்கு வாதங்களில் ஈடுபடாமல் காரியத்தில் மட்டும் கண்ணாயிருந்து ஆ ஃப் பாட்டிலை சைலெண்டாக காலி செய்த சேஷன் , சரக்கடிக்கா விட்டாலும் பில்லை பார்த்தாலே  போதையேறும் அளவிற்கு சைட் டிஸ்ஷை ஆர்டர் செய்யும் கோபால் , நட்பிற்காக நிறைய  வருடம் கழித்து தீர்த்தா ஸ்நானம் செய்து கொண்ட யோகி , நீங்க அடுத்து கோவாவுக்கு போவீங்களோ , குவைத்துக்கு போவீங்களோ  , யாரு ஸ்பான்சருன்னு முடிவு பண்ணிக்குங்க என்று கார்த்திக் , கட்டிங் இருவருக்கும் வயிற்றை  கழங்க வைத்த ரம்மி மற்றும் கெட் டுகதெருக்கு வந்திருந்த , வராத அனைத்து மதுரை கல்லூரி நண்பர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன் ...


24 October 2014

கத்தி - KATHTHI - ஷார்ப் ...


துப்பாக்கி வெற்றியை தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டுமொரு தீபாவளி ரிலீஸில் இணைந்திருக்கிறார்கள் விஜயும் , ஏஆர்.முருகதாசும் . கதைக்காக கத்தி மேலெல்லாம் நடக்காமல கல் தோன்றா மண் தோன்றா காலத்து டபுள் ஹீரோ ஆள்மாறாட்ட கத்திக்கு சோசியல்
மெஸேஜ் என்னும் சானை பிடித்து பளபளப்பாக்கியிருக்கிறார்கள் ...

கொல்கொத்தா ஜெயிலில் இருந்து தப்பிக்கும் கைதி கதிரேசன் (எ) கத்தி
( மேக்கப் போட்ட விஜய் ) , தன்னூத்து கிராமத்தை கார்ப்பரேட் குளிர்பான கம்பெனியின் நில ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்ற நினைக்கும் ஜீவானந்தம்
( மேகப்பில்லாமல் எண்ணை வழியும் முக விஜய் ) இந்த இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையில் இடம் மாறுகிறார்கள் . இட மாற்றத்தால் மனம் மாறும் கத்தி தன்னூத்து கிராமத்தை எம்.என்.சி முதலாளி ( நீல் நிதின் முகேஷ் ) யிடமிருந்து காப்பாற்றினானா என்பதை கொஞ்சம் நீட்டி முழக்கினாலும் ( ரெண்டேமுக்கா மணிநேரம் ) ஃப்ரெஸ்ஸான திரைக்கதையால் திறம்பட சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...

எத்தனை வேடம் போட்டாலும் கெட்டப்பில் ரிஸ்க் எடுக்கத் தயங்கும் விஜய்க்கு ஏற்றபடியான டபுள் ஹீரோ சப்ஜெக்ட் . டான்ஸ் , ஃபைட் என்று துள்ளி விளையாடியிருக்கும் கத்தி விஜய் எமோஷனல் சீன்களில் நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார் . போலீசுக்கே கைதியை பிடிக்க ஸ்கெட்ச் போட்டு கொடுப்பது , ரூபாயை சுண்டி விட்டு 50 அடியாட்களை அடிப்பது , ஏரியை அபகரித்து சென்னை மக்களை ரெண்டு நாட்கள் தண்ணியில்லாமல் தவிக்க விடுவது , ரமணா விஜயகாந்த் ஸ்டைலில் பிரஸ் மீட்டில் புள்ளி விவரங்களை அள்ளி தெளிப்பது என்று லாஜிக் பார்க்காமல் இருந்தால் இந்த விறு விறு விஜய்யின் மேஜிக்கை நன்றாகவே ரசிக்கலாம் . ஆனாலும் ஒரு விஜய் கண்ணை மட்டும் சிமிட்டி வித்தியாசம் காட்டியிருப்பது உலக சினிமாக்களிலேயே இது தான் முதல்முறை ...


மூணு  பாட்டுக்கு விஜய்யோடு சேர்ந்து அரைகுறை ஆடையில் ஆட ஆள் வேண்டும் . அந்த வேலைக்கு சமந்தா சரியாக பொருந்துகிறார் .( இதுக்கு எத்தன கோடியோ ! ) . அதெப்படியோ  தமிழ் சினிமாவில் ஹீரோ மட்டும் யாராக இருந்தாலும் பக்கா ப்ளான் போடும் புத்திசாலியாக இருக்கிறார்கள் . ஆனால் ஹீரோயின்கள் மட்டும் லூசு போலவே சித்தரிக்கப்படுகிறார்கள் . என்று தணியும் இந்த ஆணாதிக்க மோகம் ?! . ( ஹி ஹி கொளுத்திப் போட்டாச்சு ) . சோலோ காமெடியனாக வரும் சதீசுக்கு இந்த படம் செம ப்ரேக் . ஆல் தி பெஸ்ட் ப்ரோ . வில்லன் முகேஷ் பல்லை காட்டியெல்லாம் பயமுறுத்தாமல் கூலாக நடித்து ஸ்கோர் செய்கிறார் . இவருக்கு டப்பிங் பேசியவர் சூப்பர் தேர்வு ...

அனிருத்தின் பி.ஜி.எம் சான்சே இல்ல . சாதாரண சீன்களை கூட இவருடைய இசை பிரம்மாண்டமாக்குகிறது . அஜித் படங்கள் போல விஜய்க்கும் பின்னணி இசை பேசியிருக்கிறது . " செல்பி புள்ள " தாளம் போட வைத்தால் , யேசுதாஸ் குரலில் " யார் பெற்ற " பாடல் தழுதழுக்க வைக்கிறது . ,ஆனால் வழக்கமான விஜய்யின் மாஸ பாடல்கள் இதில் மிஸ்ஸிங் . படத்தில் சண்டைக்காட்சிகளும் பிரமாதம் ...


" ஐயாயிரம் கோடி கடன் வாங்கி திரும்ப கொடுக்காதவன் தற்கொலை பண்ணிக்கல , ஆனா அஞ்சாயிரம் வாங்கின விவசாயி வட்டி கட்ட முடியாம சாகுறான் " போன்ற வசனங்கள் படத்திற்கு பெரிய பலம் . விவசாயிகள் தற்கொலையைப் பற்றி எந்த அக்கறையும் காட்டாமல் டி.ஆர்.பி க்காக மட்டும் நியூஸ் தேடி அலையும் மீடியாக்களையும் இயக்குனரின் வசனங்கள் விட்டு வைக்கவில்லை . ஆனால் அதே சமயம் 2 ஜி உட்பட எவ்வளவோ  பெரிய ஊழல்களை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய நான்காம் தூண்களின்  செயல்களை மறந்து விட்டு அவற்றை வெறும் மூன்றாம் தரமாக மட்டும் சித்தரித்திருப்பதை தவிர்த்திருக்கலாம் . இன்று சிட்டியிலிருக்கும் முக்கால் வாசி பேர் கிராமத்திலிருந்து வந்து செட்டிலானவர்கள்  என்பதை தெளிவாக விட்டு  விட்டு நகரவாசிகளை வில்லன்கள் போலவும் , கிராமத்து வாசிகளை நல்லவர்கள்  போலவும் சித்தரிக்கிறது படம் ...

டபுள் ஹீரோ ஃபார்முலா கதை , பாண்டவர் பூமி உட்பட பல படங்களில் பார்த்த விவசாயிகள் பிரசசனை போன்ற குறைகளை , சொல்ல வந்த விஷயத்திற்காக இயக்குனர் எடுத்துக்கொண்ட மெனக்கெடல்கள் மறக்கடிக்கின்றன . சின்ன ஏ.வி என்று சொல்லிவிட்டு ஜீவானந்தத்தின் முழுக் கதையையும் காட்டுவது முதலில் நெளிய வைத்தாலும் ஆறு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி நெகிழ வைக்கிறது . மொத்தத்தில் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் வந்திருக்கும் இந்த கத்தி கொஞ்சம் பழசாக இருந்தாலும் சொன்ன விதத்தில் நல்ல ஷார்ப் ...

ஸ்கோர் கார்ட் : 42

( பின்குறிப்பு ) : அரசியல்வாதிகள் , காவல்துறையினர் , அரசு அதிகாரிகள் , மீடியாக்கள் , ஆசிரியர்கள் , கார்பரேட்கள் என்று எல்லோரையும்  தோலுரிக்கும் நம்மூர் சினிமாக்காரர்கள் ஏன் இதுவரை சினிமாவில் நடக்கும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் , வரி ஏய்ப்புகள் , அதிகார துஷ்பிரயோகங்கள்,
ஊழல்கள் , பிரபலங்களின் இருட்டு பக்கங்கள் போன்றவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களை தைரியமாக எடுக்க முன்வரவில்லை ? அப்படி எடுத்தால் நிச்சயம் அந்த படத்தை நல்ல சினிமா ரசிகர்களுக்கு சமர்ப்பணம் என்று போடலாம )


15 October 2014

தெருக்கூத்து - 5 ...


2002 கோத்ரா கலவரத்தை காரணம் காட்டி மோடிக்கு விசாவை மறுத்து வந்த அமெரிக்கா இப்பொழுது இந்தியாவின் பிரதமரான பிறகு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறது .  பிரதமர் சென்ற இடமெல்லாம் அவருக்கு கிடைத்த உற்சாகமான வரவேற்பை பார்த்து அமெரிக்காவே ஆடி விட்டது என்றே சொல்லலாம் . வெறும் சாராயத்துக்கும் , பிரியாணிக்கும் இங்கே கூடும் அரசியல் கூட்டம் போலல்லாமல் ஒரு உணர்ச்சிப் பூர்வமான சந்தோஷத்தை அமரிக்க வாழ் இந்தியர்களிடம் காண முடிந்தது . அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் போட்ட ஒப்பந்தங்கள் மூலம் சீனாவுக்கு  சின்ன செக் வைத்திருக்கிறார் மோடி . காஷ்மீர் விவாகரத்தில் தலையிட முடியாது என்று ஐ.நா சொன்னதன் மூலம் மீண்டுமொருமுறை மூக்குடை பட்டிருக்கிறது பாகிஸ்தான் . இங்கே துப்பாகியால் சுட்டு விட்டு அங்கே போய் ஒப்பாரி வைப்பார்களாம் . இது தான் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதோ ?! ...

பெரிய கட்சிகளெல்லாம் தனித்தனியாக நிற்பதன் மூலம் மகாராஷ்டிரா , ஹரியானா சட்டசபை தேர்தல்கள் நன்றாகவே சூடு பிடித்திருக்கின்றன . இடைத்தேர்தலில் கிடைத்த தோல்விகள் மூலம் மோடி யின் மேஜிக் அவ்வளவு தான் என்று மற்ற கட்சிகள் சொல்லி வரும் வேளையில்  இடைத்தேர்தலை போல அல்லாமல் இந்த முறை அதிக கூட்டங்களில் மோடி ஜி பேசி வருவது அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி . அதை நிரூபிப்பது போலவே தேர்தலுக்குப் பின் நடந்த சர்வேக்கள் எல்லாமே பா.ஜ.க தனிப் பெரும் கட்சியாக ஜெயித்து ஆட்சியைப் பிடிக்கும் என்று கணித்திருக்கின்றன . இது நடக்கும் பட்சத்தில் கூடுதலாக இரண்டு மாநிலங்களை பிடிப்பதுடன்  பா.ஜ.க  வுக்கு ராஜ்யசபாவில் அதிக எம்.பி க்கள் கிடைப்பதற்கும் ஏதுவாக அமையும் . சும்மா இருந்த சிங்கத்தை சீப்பால சீவி விட்டுட்டாங்களோ ?! ...

அடுத்தடுத்து அம்மா ப்ராண்ட் பொருட்களை மலிவு விலையில் அறிவித்துக் கொண்டிருந்தவர் மேலே யாரு கண்ணு பட்டதோ ? . 18 வருடமாக இழுத்துக் கொண்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ உட்பட நால்வரையும்  உள்ளே வைத்து விட்டார்கள் . கர்நாடகா கோர்ட்  பெயிலை  மறுத்து விட 17 ம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறார்கள் கழக கண்மணிகள் . தண்டனை அங்கேயும் உறுதி செய்யப்பட்டு  விட்டால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு முன்னாள் முதல்வரால் தேர்தலில் நிற்க முடியாது . அப்படி நடக்கும் பட்சத்தில் கட்சிக்குள் இப்போதிருக்கும்  கட்டுப்பாடு   குலைந்து கட்சியே சிதறும் அபாயம் உள்ளது . 2 ஜி வழக்கின் தீர்ப்பு வரும் போது  இதே போன்ற நிலைமை தி.மு.க வுக்கு ஏற்படாவிட்டாலும் ஏற்கனவே சரிவிலிருக்கும் கட்சி மேலும் சிதையும் . இந்த இரண்டு பிரதான கட்சிகளின் சரிவால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு இப்போதைக்கு யாருமில்லை .
ஆனால் சென்ற முறை தே.மு.தி.க , பா.ம.க , ம.தி.மு.க போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைத்த பா.ஜ.க சரியாக காய்களை நகர்த்தினால் அடுத்த சட்டசபை தேர்தலில் நடுநிலையாளர்களையும் , அ.தி.மு.க - பா.ஜ.க இரண்டுக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருப்பவர்களையும் தங்கள் வசம் எளிதாக இழுக்கலாம் . பா.ஜ.க பாச்சா இங்கே பலிக்குமா ?! ...

நிச்சயம் பா.ஜ.க வுக்கு ஒரு வலுவான தலை தமிழகத்தில் தேவை . அதற்காக அவர்கள் சூப்பர் ஸ்டாரை இழுப்பதாகவும் , அவரும் இதற்கு ஒரளவிற்கு சம்மதித்துவிட்டார் என்பது போலவும் செய்திகள் கசிகின்றன . யார் யாரோ அரசியலுக்கு வரும் போது தனக்கென்று ஒரு பெரிய கூட்டத்தை வைத்திருக்கும் ரஜினி வருவதில் எந்த தவறுமில்லை . ஆனா தலைவரு வராரோ இல்லையோ தன்னோட ஒவ்வொரு பட ரிலீசுக்கு முன்னாடியும் இந்த அரசியல் படத்த தவறாம ஓட விட்டுருறாரு . புலி வருமா ?!. மெட்ராஸ் , ஜீவா மாதிரி தரமான படங்கள் ஒரே நாளில் ரிலீசானதில் சந்தோசம் . ஆனால் எந்த லாஜிக்கும் இல்லாத ஆவரேஜ் படம் அரண்மனை தான் வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது . பேயே லாஜிக் இல்ல அப்புறம் எதுக்கு பேய்ப்படத்துக்கு லாஜிக்கு ன்றீங்களா ?! ....

திரிஷ்யம் படத்தை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் எடுக்கிறார்கள்  . மோகன்லால் ரோலில் நடிக்கும் உலக நாயகன் படத்திற்கு நிச்சயம் ஸ்டார் வால்யூவை கொடுத்தாலும் அந்த ஜார்ஜ் குட்டி என்கிற யதார்த்த நாயகனை சாகடித்து விடுவார் . கமல் பிரபு , ராஜ்கிரண் அல்லது வேறு யாரையாவது நடிக்க வைத்துவிட்டு படத் தயாரிப்பில் மட்டும் ஈடுபட்டிருக்கலாம் என்பது எனது அபிப்ராயம் . ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நிறைய பதக்கங்களை பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் ஒரு பெரிய ஓ போடுவோம் ...

மீண்டும் .கூடுவோம் ...




29 September 2014

ஒரு கைதும் சில கேள்விகளும் ...


ற்போது தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் சம்பவம் சொத்துக்குவிப்பு வழக்கில் நூறு கோடி அபராதத்துடன் நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை பெற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப்பது . எனக்குத் தெரிந்த சில தி.மு.க அனுதாபிகள் கூட தண்டனைக்காக வருத்தப்படுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வகையில் கிட்டத்தட்ட 18 வருடங்கள் வழக்கை தீர விசாரித்து கொஞ்சம் கடினமாக இருந்தாலும் நியாயமான முறையில் தீர்ப்பு வந்திருக்கிறது என்று புத்திக்கு தெரிந்தாலும் , 91 - 96 இல் முதல் முறை முதல்வராக இருந்த போது செய்த தவறுகளுக்கு இப்பொழுது மூன்றாவது முறை முதல்வராகி மக்கள் நலத் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதோடு கட்சியினர் செய்யும் கட்டப் பஞ்சாயத்துக்களை அறவே ஒழித்து நல்ல முறையில் ஆட்சி செய்து வரும் ஒரு நபருக்கு இப்படி தண்டனை கொடுத்து விட்டார்களே என்று படபடக்கும் மனசுக்கு தெரியவில்லை ...

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வின் அசுர வளர்ச்சிக்கு பிறகு அந்த கட்சியை எதிர்த்து அனைத்து கட்சிகளும்  ஒன்று சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த கைது அ.தி.மு.க வுக்கு பேரிடி . பா.ஜ.க வுக்கு திமுக வின் தூது , நீண்ட வருடங்கள் திமுக வை தீண்டாமலிருந்த வை.கோ கலைஞர் மேல் காட்டும் திடீர் பாசம் , பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வீட்டு விஷேசத்திற்கு கலைஞருக்கு விடப்பட்ட தனிப்பட்ட அழைப்பு , அ.தி.மு.க வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டுமென்று விஜயகாந்த் விடுத்திருக்கும் அறைகூவல் இவையெல்லாம் நடந்து வருகின்ற நேரத்தில் இந்த கைது அ.தி.மு.க வுக்கு பெரிய பின்னடைவு . தனிப்பட்ட வாக்கு வங்கியை மட்டும் வைத்துப் பார்க்கும் போது  தி.மு.க வுக்கும் , அ.தி.மு.க வுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை . ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு கட்சியை வீழ்த்துவதற்காக அடுத்த கட்சிக்கு போடப்படும் ஓட்டுக்களே வெற்றி , தோல்விக்கான வித்தியாசத்தை தீர்மானிக்கின்றன . அந்த வகையில் பார்த்தால் 2016 சட்டசபைத் தேர்தலுக்கு அ.தி.மு.க மக்களுடன் மட்டுமே கூட்டணி வைக்க வேண்டியிருக்கும் ...

எதிர்பார்த்தபடியே முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஓ .பி
( பன்னீர்செல்வம் ) கடந்த முறை போல இந்த முறை பவ்யமாக மட்டுமிருந்து ஓ .பி அடிக்க முடியாது . ஏனெனில் இந்த முறை அவர் கிட்டத்தட்ட 2 வருடங்கள்  ஆள வேண்டியதோடு மக்களின் நன் மதிப்பையும் பெற்று கட்சியையும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் .. ஹை கோர்ட்டுக்கு அப்பீல் செய்த போதிலும் தண்டனை குறைக்கப்படுவதற்கு குறைந்த வாய்ப்பே உள்ளன என்கிறார்கள் சட்ட நிபுணர்கள் . ஆனால் சீனியர் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி இவருக்கு ஆதரவாக வாதாடப் போவது தண்டனையை குறைக்கும என்றும் , பெயில் கிடைக்கும் என்றும்  எதிர்பார்க்கிறார்கள் அ.தி.மு.க வினர் . ஒரு வேளை ஜெ பெயிலில் தமிழ்நாட்டுக்கு வருவது கட்சிக்கு போனசாக இருந்தாலும் முதல்வர் பதவியில் அமர்வதோ , மீண்டும் போட்டியிடுவதோ அடுத்த பத்து ஆண்டுகளுக்கு முடியாது ...

இப்படி ஒரு இக்கட்டான நிலை வருமென்று அம்மாவே எதிர்பார்த்திருக்க மாட்டார் . இதற்கு முந்தைய 11 வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டது போல இதில் முடியாமல் போனதற்கு காரணம் வழக்கின் தன்மை . மற்ற வழக்குகளில் குற்றம் சாட்டியவர்கள் இவரது குற்றத்தை நிரூபிக்க வேண்டும் . ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ தனது ஆவணங்களை சரியாக காட்டி தன மேல் குற்றம் இல்லையென்று நிரூபிக்க வேண்டும் . இந்த விஷயத்தில் கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம் . மேலும் வழக்கை 18 வருடங்கள் இழுத்தடித்ததும் , நீதபதி டிகுன்ஹா நேர்மையானவர் என்பதும் கூடுதல் நெருக்கடியை கொடுத்திருக்கும் . எல்லாவற்றிற்கும் அறிக்கை விடும் கலைஞர் இந்த கைதை பற்றி ஒன்றுமே சொல்லாமல் மௌனம்  காப்பது அவரது அனுபவத்தைக் காட்டுகிறது . சுப்ரமணியசாமியால் போடப்பட்ட வழக்கிற்கு கலைஞரின் கொடும்பாவியை எரித்து என்ன ஆகப் போகிறது ?...

எனக்கு தெரிந்த ஒருவரின் மாமா ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே அரசியலில் பார்ட் டைமாக இருந்தார் . பிறகு வேலையை விட்டு விட்டு முழு நேர அரசியலில் இறங்கி இப்போது கவுன்சலராகி விட்டார். அவருக்கு அப்போதே 10 லட்சம் கடன் இருந்தது . ஆனால் இப்போதோ வீடு , கார் என்று கிட்டத்தட்ட 4 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக சொல்கிறார்கள்.
தப்பு செஞ்சவங்க யாரா இருந்தாலும் ஒரு நாள் இல்லை ஒரு நாள் நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்கிற நம்பிக்கையை இந்த தீர்ப்பு கொடுத்தாலும் , கவுன்சிலருக்கே இவ்வளவு சொத்து  என்றால் எம்.எல்.ஏ , எம்.பிககெல்லாம் ? . இது போல கணக்கில்லாமல் லஞ்சம் வாங்கிய எல்லா அரசியல்வாதிகளும் , அரசு அதிகாரிகளும் இதே போல தண்டிக்கப்படுவார்களா ?. அல்லது இதே போல விடாப்படியாக யாராவது கேசை நடத்துவார்களா ? . பிறகு ஏன் அம்மாவை மட்டும் தண்டிக்க வேண்டும்? போன்ற கேள்விகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே தானிருக்கின்றன ...


28 September 2014

மெட்ராஸ் - MADRAS - வசிக்கலாம் ...


முந்தைய படம் ஒடிவிட்டாலே அடுத்த படத்திற்கான பொறுப்பு இயக்குனருக்கும் , ஹீரோவுக்கும் கூடி விடுகிறது . அந்த வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் , ஹீரோ கார்த்தி இருவரும் மெட்ராஸ் படத்தில் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள் ...

வட சென்னை ஹவுசிங் போர்ட் ஏரியாவில் விளம்பர சுவரை கைப்பற்ற அடித்துக் கொள்ளும் இரண்டு அரசியல் கோஷ்டிகள் ,  ஒரு கோஷ்டியில் இருக்கும் அன்பு ( கலையரசன் ) , அவன் நண்பன் காளி ( கார்த்தி)
இருவரும் எதிர் கோஷ்டிக்கு கொடச்சலை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் . ஒரு கட்டத்தில் எதிர் கோஷ்டியின் தலைவன் கண்ணனின் மகன் இவர்களால் கொல்லப்பட அடுத்து என்ன நடக்கிறது என்பதை இண்டர்வெலுக்குப் பின் கொஞ்சம் தடுமாறினாலும் மாஸ் ஹீரோ கார்த்திக்காக எந்த காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல் க்ளாசாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ...

சென்னை ஸ்லாங் கொஞ்சம் இடித்தாலும் படித்த வடசென்னை வாலிபர் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாகவே இருக்கிறார் கார்த்தி . எதிர் கோஷ்டிகளுடன் மோதும் சண்டைகளோடு காதலியுடன் போடும் குட்டிச் சண்டைகளிலும் கவர்கிறார் . படித்து விட்டு வேலைக்கு போறவனுக்கு எதுக்கு சண்டை சச்சரவு என்று சுற்றியிருப்பவர்கள் தான் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்களே தவிர அதைப் பற்றி பார்ட்டி கொஞ்சம் கூட கவலைப்படாமல் தொகிறிக் கொண்டேயிருப்பது சறுக்கல் ...

தெலுங்கு வரவு கேத்தரின் பக்கத்து வீட்டுப் பெண் போல என்று வெறும் பேருக்கு சொல்வது போலல்லாமல் அயன் பண்ண சர்ட் போல அப்படியே இருக்கிறார் . இவரை பார்த்தவுடனே பிடிக்கவில்லை ஆனால் பார்க்க பார்க்க பிடிக்கிறது . அதிலும் கார்த்தியுடன் சண்டை போட்டுக்கொண்டே நீ தான் வேணும் என்று கொஞ்சுமிடத்தில் கூடுதல் அழகு . கார்த்தியின் நண்பனாக வரும் அன்பு , அவன் மனைவி மேரி இருவரும் படத்திற்கு பேக் போன்ஸ் . இவர்கள் இடையேயான காதல் முத்தக் காட்சிகள் கலீஜாக இல்லாமல் கேசுவலாக இருக்கின்றன . அன்புவின் மறைவுக்கு பிறகு படம் தடுமாறுவது நிஜம் . விஜி , பெருமாள்  , மாரி என்று வலம் வரும் அரை டஜன் கேரக்டர்களில் வாய்சில் புதுப்பேட்டை தனுஷை நியாபகப்படுத்தும் ஜானி லைக் அள்ளுகிறார் ...


படத்தின் மற்றொரு ஹீரோ பின்னணி இசையில் பின்னியெடுக்கும் சந்தோஷ் நாராயண் . மனுஷன் கானா வாகட்டும் , மெலடியாகட்டும் மிரட்டுகிறார் . இவர் தமிழ் இசையின் புது நம்பிக்கை . முரளியின் கேமரா ஹவுசிங் போர்ட் சந்து பொந்துகளுக்குள் புகுந்து விளையாடுகிறது . படத்தின் லைட்டிங் , பிரவீனின் எடிட்டிங் ரெண்டுமே சூப்பர் ...

அட்டக்கத்தி யில் தென்சென்னை புறநகர் வாசிகளை பதிய வைத்தது போலவே இதில் வடசென்னை வாசிகளை தனது நேர்த்தியான டீட்டைளிங்கில் மனதில் நங்கூரம் போட்டு உட்கார வைக்கிறார் ரஞ்சித் . படத்தோடு சேர்த்து சுவரையும் ஒரு கேரக்டர் போலவே உலவ விட்டிருப்பது நேர்த்தி . காதல் சீன்களை ஏதோ ஹீரோ சண்டை போட்டுவிட்டு வந்து வெறும் ரெஸ்ட் எடுப்பது மாதிரி தனி ட்ராக்காக வைக்காமல் படத்தோடு ஒன்றி வைத்திருப்பதை பாராட்டலாம் . அன்பு - காளி சம்பத்தப்பட்ட நட்புக்காட்சிகள் எல்லாமே நச் . சீன் இப்படித்தான் முடியும் என்று எதிர்பார்க்க விட்டு பிறகு எதிர்பார்க்காத நேரத்தில் வேறு மாதிரி முடித்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் ...

படத்தின் நீளம் , இரண்டாம் பாதியில் தடுமாறும் திரைக்கதை ,அரசியல் ஆதாயத்துக்காக காவு வாங்கப்படும் நண்பன் , அதற்காக ஆவேசப்படும் ஹீரோ என்ற நார்மல் ப்ளாட் போன்ற குறைகளையெல்லாம் தாண்டி படத்தின் கேரக்டர்களை பதிய வைத்த விதம் , படத்தை கொண்டு சென்ற பாங்கு இவற்றிக்காக சில இடங்களில் ஸ்லோவாக இருந்தாலும் ஸ்டெடியாக செல்லும் மெட்ராஸில் வசிக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 43 






24 September 2014

அரண்மனை - ARANMANAI - தங்கலாம் ...



பெரிதாக மண்டையை உடைத்துக் கொள்ளாமல் தனக்கு தெரிந்த கமர்சியல் பார்முலாவை மட்டும் வைத்து வரும் ரசிகனை திருப்திப்படுத்தி அனுப்புவதில்  வல்லவர் சுந்தர்.சி . ஹரர் லைனை கையில் எடுத்திருந்தாலும் வழக்கமான பேய் படத்துக்கு  தன்னுடையை காமெடி பெப்பை ஏற்றி அரண்மனை யை போரடிக்காமல் பார்க்க வைக்கிறார் இயக்குனர் ...

ரொம்ப நாட்கள் பூட்டிக் கிடக்கும் தங்கள் பூர்வீக அரண்மனையை விற்க முடிவெடுக்கிறார்கள் வாரிசுகள் . அரண்மனையில் தங்கும் சில நாட்களில் 3 வேலைக்காரர்கள் மர்மமான  முறையில் சாக அங்கு பேய் இருப்பது தெரிய வருகிறது . பேய்க்கு என்ன ப்ளாஷ்பேக் ? பேய் பீடித்திருக்கும் தன் தங்கையையும் , தன்  தங்கையிடமிருந்து மற்றவர்களையும் வக்கீல் சுந்தர்.சி எப்படி காப்பாற்றுகிறார் என்கிற இந்த சந்திரமுகி கதைக்கு சந்தானத்தை வைத்து கமர்ஸியல் சந்தானம் பூசியிருக்கிறார் சுந்தர்.சி ...

நடிகனாக அடக்கி வாசித்து படம் முழுவதும் நடிகர் பட்டாளத்தையே திறம்பட சமாளிததில் இயக்குனராக பாராட்டு பெறுகிறார் சுந்தர்.சி . ஹன்சிகா , ஆண்ட்ரியா , ராய் லக்ஷ்மி என மூன்று ஹீரோயின்களுக்கும் சம விகிதத்தில் ஸ்பேஸ் கொடுத்தது ,  சந்தானம் , சரளா , மனோபாலா என எல்லோரையும் சரியான முறையில் பயன்படுத்தியது என எல்லாவற்றிலுமே இயக்குனரின் அனுபவம் அசத்துகிறது ...


மூன்று பேரில் ராய் லக்ஷ்மி ராவாக இருந்து சுண்டி இழுத்தாலும் அடாவடி  ஆண்ட்ரியாவும் , அப்பாவி ஹன்சிகா வும் மனதை தொடுகிறார்கள் . க்ளோஸ் அப் காட்சிகளில் அதீத மேக் அப்புடன் வரும் ஆண்ட்ரியா பேயை விட பயமுறுத்துகிறார் . கொடுத்த காசுக்கு ராய் லக்ஷ்மி யை குனிந்து , நிமிர விட்டு நன்றாகவே வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் . நடிப்புக்காக இல்லாமல் நிஜமாகவே அம்மணி உடற்பயிற்சி செய்வது நல்லது . மூணு , நாலு டயர் ஏறியிருக்கிறது . வினய் , நிதின் சத்யா படத்தில் இருக்கிறார்கள் .
" பெட்ரோமாஸ் " பாடலுக்கான இசையில் பரத்வாஜும் , பின்னணி இசையில் கார்த்திக் ராஜாவும் கவர்கிறார்கள் . செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் , சி.ஜி வேலைகளும் படத்திற்கு பலம் ...

படம் ஆரம்பித்தவுடனேயே நேரத்தை கடத்தாமல் அரண்மனைக்குள் நம்மை திகிலுடன் அமர வைத்து விடுகிறார்கள் . நடுநடுவே காமெடி இருந்தும் இடைவேளை வரை திரைக்கதையும்  க்ரிப்பாகவே  செல்கிறது . " மூடு வரதுக்கு முருங்கைக்காய் சாப்பிடலாம் , இங்க ஒரு முருங்கைக்காயே மூடோட சுத்துதே " என்று மனோபாலாவை சந்தானம் சத்தாய்க்கும் வசனங்கள் நச் . இடைவேளைக்கு பிறகு தான் படம்  கோவில் திருட்டு , அந்த பழியை பெண்ணின் மேல் போட்டு அவளை கொல்வது போன்ற வழக்கமான ப்ளாஷ்பேக் , பேயை விரட்ட வரும் சாமியார் என மாமூல்  பயணத்தில் தடுமாறுகிறது  ...

சந்திரமுகியில் சந்திராஷ்டம் என்றால் இதில் சூரிய கிரகணம் , ரஜினிக்கு பதில் சுந்தர்.சி , பிரபு - ஜோதிகா இடத்தில் வினய் - ஆண்டிரியா , வடிவேலுவுக்கு பதில் சந்தானம் , நயன்தாராவுக்கு பதில் ராய் லக்ஷ்மி என்று பார்க்கும் போதே நமக்கு தோன்றும் ஒப்பீடுகள் படத்தை சந்திரமுகி - 2 வோ என்று நினைக்கத் தோன்றுகின்றன . வழக்கமான  பார்முலா படங்களில் உள்ள எல்லா குறைகளும் இதில் இருந்தாலும் அதையும் மீறி படத்தை ரசிக்கும் படியாக தந்த விதத்திற்காக புதுசாக எதையும் எதிர்பார்த்து அலட்டிக் கொள்ளாமல் ஒரு முறை இந்த அரண்மனை யில் தங்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41


13 September 2014

பர்மா - BURMA - பிட்ஸ் அண்ட் பீஸ் ...


சில லோ பட்ஜெட் படங்கள் ஏதோ ஒரு காரணத்தால் நம்மை கவனிக்க வைப்பதுண்டு . அந்த  வகையில் பர்மா படத்திற்காக இயக்குனர் தரணீதரன் எடுத்துக்கொண்ட கார் சீஸிங் ( கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தாதவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்வது ) என்கிற கதைக்களன் படத்தை பார்க்க வைத்தது . ஆனால் ஒரு படம் வெற்றி பெற வெறும் கதைக்களன் மட்டும் போதாது என்பதை நிரூபிக்கிறது பர்மா ...ஸி

கார் சீசிங் கிங் குணா ( சம்பத்ராஜ் ) விடம் வேலை செய்யும் பரமானந்தம் ( எ ) பர்மா ( மைக்கேல் ) உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாததால் குணா வை போலீசில் சிக்க வைத்து விட்டு அந்த இடத்திற்கு வருகிறான் . சேட்டுக்காக
( அதுல் குல்கர்னி ) சீஸ் செய்த கார்களில் ஒரு பி.எம்.டபிள்யூ மிஸ்ஸாக அதற்கு பதில் பர்மாவின் காதலியை ( ரேஷ்மி மேனன் ) சேட் பிடித்து வைத்துக் கொள்ள பர்மா காரை கொடுத்து காதலியை மீட்டானா என்கிற இந்த நீட்டான ஒன் லைனை வைத்துக் கொண்டு க்ரிப்பான திரைக்கதை அமைக்கத் தெரியாமல் தடுமாறியிருக்கிறார்கள் ...


கேரக்டருக்கு ஏற்ற தோற்றம்  இருந்தாலும் ஹீரோ மைக்கேல் கவரவில்லை . நிறைய இடங்களில் இவருடைய ரியாக்சன் மிஸ்ஸிங் . ஹீரோயின் ரேஷ்மி மேனன் ( கேரளத்திலிருந்து மற்றுமொரு புதுவரவு ) ஜம்மென்று இருக்கிறார் . ஹீரோவை கிஸ் அடிக்கும் போது ஹெராயின் போல போதை ஏற்றுகிறார் . சரியான வாய்ப்புகள் கிடைத்தால் ஒரு ரவுண்ட் வரலாம் . வா என்னைக் கடத்து என்பது போல கார் சீஸிங் செய்யும் இடத்திற்கெல்லாம் இவரும்  கூடவே அலைவது அபத்தம் . நல்ல திறமையிருந்தும் சரியான உயரத்தை தொடாதவர் சம்பத்ராஜ் . அவருக்கு இந்த படம் யானைப்பசிக்கு சோளப்பொறி . சேட் கேரக்டரில் அதுல் சரியான தேர்வு . யுவனின் ஒளிப்பதிவும் , சுதர்சன் எம்.குமாரின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் ...

நிறைய மெனக்கெடாமல் கார் சீஸிங் என்பதை கார் சீட்டிங் போல ஹீரோ வெறுமனே கள்ள சாவி போட்டு திறந்து கொண்டிருக்கிறார் . படத்திற்கு முக்கியமான உயிர்நாடியே இந்த விஷயம் தான் . அதில் இன்னும் சுவாரசியமாக டீட்டைலிங் செய்திருந்தால் படம் தேறியிருக்கும் . அதே போல பெண் தலைமையில் வரும் கடத்தல் குழுவும் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை . புது கதைக்களன் , ரசிக்க வைக்கும் வசனங்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பர்மா பிட்ஸ் அண்ட் பீஸ் களாக மட்டுமே கவர்கிறது ...

ஸ்கோர் கார்ட் : 39

11 September 2014

தெருக்கூத்து - 4 ...


மோடி 100 என்ற தலைப்பில் எக்கச்சக்க விவாதங்கள் , கட்டுரைகள் என கடந்த ஒரு வாரமாகவே எல்லா ஊடகங்களும்  அலசி ஆராய்ந்து காயப் போட்டு விட்டதால் நாம் பெரிதாக சொல்வதற்கேதுமில்லை . ஒரு ஷோவை பார்த்து விட்டு விமர்சனம் செய்வதற்கு இது சினிமா அல்ல . ஒரு புதிய அரசாங்கத்தை சரியாக கணித்து சொல்வதற்கு 100 நாட்கள் நிச்சயம் பத்தாது . ஆனாலும் அது எந்த டைரக்சனில் செல்கிறது என்பதை வைத்து அதன் எதிர்கால செயல்பாட்டை கணிக்கலாம் . அந்த வகையில் சார்க் , ப்ரிக் நாடுகளுடனான உறவு , அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டம் , ஜப்பானிலிருந்து 2 லட்சம் கோடி முதலீடு . பாசிட்டிவான  சென்செக்ஸ் குறியீடு போன்றவை இந்த அரசாங்கம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி பயணப்படுகிறது என்பதை உணர முடிகிறது . கார்ப்பரேட் நிறுவனங்கள் ஸ்டைலில் அரசாங்க நிறுவனங்களிலும் சில ஒழுங்கு முறைகளை கடைபிடிக்க சொல்லி அமைச்சர்கள் வலியுறுத்தி வருவதும் ஆரோக்கியமான விஷயம் ...

உள்ளாட்சி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒதுங்கிக் கொள்ள அ.தி.மு.க வுக்கு எதிராக பா.ஜ.க மட்டும் நிற்கும் சூழல் உருவானது . ஆனால் நிறைய இடங்களில் பா.ஜ.க வேட்பாளர்கள் விலகிக்கொள்ள அ.தி.மு.க அன்னபோஸ்டில் செலெக்ட் ஆகி விட்டார்கள் . ஆளுங்கட்சியின் மிரட்டல் தான் இதற்கு காரணம் என்று பா.ஜ.க குற்றம் சாட்ட , இரண்டு கட்சிகளின் கூட்டு சதி தான் இது என்று கம்யூனிஸ்ட் சொல்கிறது . எது எப்படியோ பா.ஜ.க நல்ல வாய்ப்பை இழந்து விட்டது . இதே போல 2016 இல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் . இல்லையேல் கட்சியின் கனவு அம்பேல் ! ...

ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்கிற பெயரில் கொண்டாடப்படுவதற்கு பயங்கர எதிர்ப்பு ஒரு பக்கம் இருக்க பெரிய  சம்பளம் இல்லாத காரணத்தால் தன்னார்வத்துடன் பணிபுரியும் ஆசிரியர்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக  படித்த செய்தி இது போன்ற கொண்டாட்டங்களையே கேள்விக்குறியாக்கி விடுகிறது . நவாப் செரீப் பிரதமருக்கு  மாம்பழங்களை பரிசாக அனுப்பியிருக்கிறார் . " ஏண்டா காஷ்மீர்ல எங்க ஆளுகள சுட்டுட்டு இங்க மாம்பழத்த கொடுத்தா அத திங்க நாங்க என்ன மாங்கா மடையனுங்களா , அவ் " என்று விஜயகாந்த் ஸ்டைலில் மோடி சொல்லியிருக்கலாமோ ?! ...

நேற்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் அர்னாப் தலைமையில் ஒரு விவாதம் . அதில் மீடியா வினரை கழுத்தை நெரித்து விடுவேன் , குழிக்குள் புதைத்து விடுவேன் என்றெல்லாம் மிரட்டிய தெலுங்கானா முதல்வரை ஹிட்லர் என்று வர்ணித்தர்கள் . அது சரி , ஆனால் யார் விவாதத்திற்கு வந்தாலும் பேச விடாமல் தானே மிரட்டல் தொனியில் பேசிக் கொண்டேயிருக்கும் அர்னாப் கோஸ்வாமி என்ன முசோலினியா ?! ...

ஒரு படம் ஹிட்டானால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவதும் தோற்றால் தூக்கிப் போட்டு மிதிப்பதும் பலரது வாடிக்கை . அந்த வகையில் சிறந்த அரசியல் பத்திரிக்கையான துக்ளக் ஒரு கட்டுரையில் அஞ்சான் படத்தை அறுவை சிகிச்சை செய்திருக்கிறது . அந்த கட்டுரையை எழுதியவர் ஆர்வக் கோளாறில் சதுரங்க வேட்டையை இயக்கியவர் லிங்குசாமி எனவும் ( லிங்குசாமி அந்த படத்தின் தயாரிப்பாளர் / விநியோகஸ்தர் )  , தமிழ் தாதா வை மையப்படுத்தி வந்த படம் மும்பை எக்ஸ்ப்ரெஸ்  (அந்த படம் சென்னை எக்ஸ்ப்ரெஸ் ) எனவும் குறிப்பிட்டிருந்தார். படத்தில் தான் லாஜிக் இல்லை அதை விமர்சிக்கும் கடிதத்திலுமா ?!. இப்படி சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாத பத்திரிக்கைகள் கூட படத்தை கழுவி கழுவி ஊற்ற குமுதம் மட்டும் நன்று என்று விமர்சனம் போட்டிருப்பது அடடா ஆச்சர்யக்குறி ! ...

இரண்டாவது பாதி திரைக்கதைக்காகவும் , வசனத்திற்காகவும் சலீம் படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது . பெரிய ஹீரோ இல்லாமலேயே  விறுவிறு திரைக்கதை பார்ப்பவர்களை கட்டிப் போட்டாலும் விஷால் , ஆர்யா யாராவது படத்தில் நடித்திருந்தால் பெரிய கல்லா கட்டியிருக்கும்  என்பது பரவலான கருத்து  . தொடர்ந்து இரண்டு வெற்றிகளை கொடுத்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துக்கள் . நாளை ரிலீசாகும் சிகரம் தொடு , வானவராயன் வல்லவராயன் , பர்மா ஆகிய மூன்று படங்களில் போஸ்டர்கள் பர்மா வை பார்க்க தூண்டுகிறது . கே டிவி யில் சுப்ரமணியபுரம் போட்டிருந்தார்கள் . என்ன படம் ! . ஒரு சாதாரண நடிகன் சசிகுமாருக்காக சிறந்த  இயக்குனர் சசிகுமாரை நாம் இழந்து விட்டோமோ ! ...

நொறுக்குத்தீனி :

கணவன் : நம்ம பையன நினைச்சா எனக்கு ரொம்ப கவலையா இருக்கு ..

மனைவி : ஏன் உங்கள விட ரொம்ப புத்திசாலியா இருக்கானேன்னா ! ...


மீண்டும் கூடுவோம் ...




5 September 2014

இரும்புகுதிரை - IRUMBUKUTHIRAI - நோ மைலேஜ் ...


ரதேசி க்கு பிறகு அதர்வா மேலிருந்த எதிர்பார்ப்பு , கேட்சியான டைட்டில் , ரேசிங் பற்றிய கதை , எல்லாவற்றுக்கும் மேல் பிரபல பதிவர் நர்சிமின் வசனம் என எல்லாமுமாக சேர்ந்து படத்தின் மேல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தன . ஆனால் இதையெல்லாம் இரும்புகுதிரை பூர்த்தி செய்ததா ?. பார்க்கலாம் ...

சி.ஏ படித்துக்கொண்டே பார்ட்டைமாக பீட்சா கடையில் வேலை பார்க்கும் ப்ரித்வி க்கு ( அதர்வா  முரளி ) வேகமாக பைக் ஒட்டுவதென்றாலே அலர்ஜி . ப்ரித்வி  பைக் ஒட்டி  பில்லியனில் உட்கார்ந்திருந்த அப்பா ஆக்சிடெண்டில் இறந்து போனதே அந்த அலர்ஜிக்கு காரணம் . கடைசியில் காதலிக்காக
( ப்ரியா ஆனந்த் ) பைக் ஓட்ட வேண்டிய கட்டாயம் வர அதுவே பெரிய பிரச்சனையில் போய் முடிகிறது . பிரச்சனைக்கு என்ன காரணம் ? அதிலிருந்து ப்ரித்வி மீண்டானா ? என்பதை குதிரை ரேஸ் வேகத்தில் சொல்லாமல் ஜானவாஷம் போல நீட்டி முழக்கியிருக்கிறார்கள் ...

அழுக்கான பரதேசிக்கு பிறகு அதர்வா விற்கு ஏற்ற நீட்டான கேரக்டர் . முந்தைய படத்தில் நிறைய நடித்துவிட்டதாலோ என்னவோ இதில் எதுவும் அலட்டிக்கொள்ளவில்லை . காதலியை பற்றி பேசும் போது வெட்கப்படும் இடத்தில் கவர்கிறார் . வெட்கமா அப்படின்னா என்று கேட்கும் அளவிற்கு இருக்கும் ப்ரியா ஆனந்தை பார்த்தவுடன் எல்லா ஹீரோக்களையும் போல அதர்வாவுக்கும்  லவ் வந்து விடுகிறது . ( என்னமோ தெரியல ப்ராக்டிகலா பசங்களுக்கு இந்த மாதிரி பொண்ணுங்கள பார்த்தா முதல்ல மூடு தான் வருது ) ...


ஜெகன் கொஞ்சம் கடிக்கிறார் . ராய் லக்ஷ்மி அங்கங்கே காட்டி நகம் கடிக்க வைக்கிறார் . ஜி.வி க்கு பேமன்ட் பாக்கியோ என்று எண்ணுமளவிற்கு தான் பாடல்கள் இருக்கின்றன . அதிலும் அதை நடுநடுவே சொருகியது அபத்தம் . குருதேவின் ஒளிப்பதிவு படத்திலேயே ரொம்ப பிரகாசம் . " கூட இல்லாத போது அவங்களையே நினைச்சு தேடுறது தான் லவ்" , " கோல் ல தோக்கறது தப்பில்ல , ஆனா கோலே இல்லாம இருக்கறது தான் தப்பு " போன்ற வசனங்களில் நர்சிம் தெரிகிறார் ...

மொக்கை எஸ்.எம்.எஸ் லாம் அனுப்பி ஸ்லோவா பார்க்கறவன் பொறுமையையெல்லாம் சோதிச்சு  கஷ்டப்பட்டு கரக்ட் பண்ண பொண்ண டுகாட்டி ல கூட்டிக்கிட்டு  முத முதல்ல ஈ.சி.ஆர் ல ரைட் போகும் போது  நாலஞ்சு பேரு சேர்ந்து அதர்வா வை அடிச்சுப் போட்டுட்டு பொண்ண டகால்டி பண்ணி தூக்கிட்டு போயிருறாங்க . அங்க வைக்குறோம் சார் இன்டர்வெல் ப்ளாக் என்று கதை சொல்லி இயக்குனர் ப்ரொட்யூசரை ஒ.கே செய்திருப்பார் என்று நினைக்கிறேன் . கதை சொன்ன வேகத்தில் பாதியையாவது திரைக்கதையில் காட்டியிருந்தால் கொஞ்சம் ஜெயித்திருக்கலாம் . இதே ப்ரியா ஆனந்தை கடத்தியது போல சமீபத்தில் வந்த அரிமா நம்பி அதிவேக திரைக்கதையால் ஜெயித்தது . இதில் அந்த மேஜிக்  டோட்டலி  மிஸ்ஸிங் ...

பெரிய பில்ட் அப் புடன் அறிமுகமாகும் டோனி யும் புஷ்ஷென்று போய்  விடுகிறார் .  தேவையில்லாமல் பாண்டிச்சேரி குத்துப் பாடல் வைத்திருந்தாலும் , பாண்டிச்சேரியில் நடக்கும் கதை என்பதால் குடிக்கிற சீனா வைக்காமல் விட்டதற்கு இயக்குனர் யுவராஜ் போசை பாராட்டலாம் . ஸ்லோவான முதல்பாதி , இண்டெர்வலில் கொடுக்கும் ட்விஸ்டை தக்க வைக்காமல் பின்னர் படு ஸ்லோவாக போகும் இரண்டாம் பாதி , வில்லனின் கோபத்திற்கு சொல்லப்படும் வலுவில்லாத காரணம் என எல்லாமே பார்க்க டீசண்டாக இருக்கும் இரும்புகுதிரைக்கு கொடுப்பதென்னமோ நோ மைலேஜ் ...

ஸ்கோர் கார்ட் : 38 









26 August 2014

தெருக்கூத்து - 3 ...


பா.ஜ.க வின் மாநில தலைவராக டாக்டர் தமிழிசை சௌந்தராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் . சீனியாரிட்டியை மட்டும் பார்க்காமல் சின்சியாரிட்டியை பார்த்து கட்சி இந்த பொறுப்பை கொடுத்திருக்கிறது . தொலைக்காட்சி விவாதங்கள் , இணையதளங்கள் மூலம் படித்த மக்களுக்கு நன்றாக பரிச்சியமாகியிருக்கும்  இவர் தன் உழைப்பால் கட்சி கிராமப்புறங்களிலும் நன்றாக வேரூன்ற பாடுபட வேண்டும் . ஏனெனில் படித்தவர்களில் பாதி பேர் ஓட்டுப் போட வருவதில்லை . வருபவர்களும் கட்சிப் பணியில் ஈடுபடப்போவதில்லை . அ.தி.மு.க , தி.மு.க இரண்டிற்கும் வலுவான மாற்றாக வரவேண்டுமென்றால் பா.ஜ.க பட்டி தொட்டிகளிலெல்லாம் வளர வேண்டியது அவசியம் . அந்தப் பணியை திறம்பட செய்ய அவருக்கு வாழ்த்துக்கள் .  அதே போல தேசிய செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் ஹெச்.ராஜா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ...

சுதந்திர  தின உரையின் போது  பிரதமர் மோடியின் பேச்சு வழக்கமான
சம்பிரதாய பேச்சாக   இல்லாமல் உணர்வுபூர்வமாகவும் , ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது . ஆனால் அந்த  உரையில் சொன்னதையெல்லாம் நிறைவேற்ற நிறைய கால அவகாசம் தேவை .அது வரை மக்கள் பொறுத்திருப்பார்களா ?.
ஒரு பக்கம் சமாதானம் பேசிக்கொண்டே மறுபக்கம் பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் தனது வாலை ஆட்டிக்கொண்டிருக்கிறது . இந்த அரசாவது அதை ஓட்ட நறுக்குவார்களா ? ...

சரக்கு விலையை ஏற்றி குடி மகன்களுக்கு தமிழக அரசு ஷாக் கொடுத்தால், படிப்படியாக பத்து வருடங்களில் மதுபானக் கடைகளை மூடப்போவதாக அறிவித்து கேரள அரசு குடி மகன்களின் தலையில் இடியையே இறக்கி விட்டது . என்ன இது சேர நாட்டுக்கு வந்த சோதனை ? . ஆடிப்பெருக்கு அன்று கூட காவிரியில் தண்ணி இல்லாமல் பம்பு செட்டு வைத்து ஆடிப்பெருக்கை கொண்டாடும் அவல நிலையில் இருந்த மக்களுக்கு மேட்டூர் , கபினி அணைகளிலிருந்து தண்ணீரை திறந்து விட்டு வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார்கள் . இதற்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் முதல்வருக்கு பாராட்டு விழாவும் நடத்தி விட்டார்கள் . கடமையை செய்ததற்கு ஒரு கடமைக்காக பாராட்டு விழாவா ? இல்லை மனமார்ந்த பாராட்டு விழாவா ?!...

தம்பித்துரைக்கு துணை சபாநாயகர் பதவி கொடுத்தது எதிர்பார்த்ததே . ஆனால் மைத்ரேயன் ராஜ்யசபா தலைமை பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டது சற்றும் எதிர்பார்க்காத அம்மா ட்விஸ்ட் . இந்த மாற்றங்கள் எதனாலே உருவாகுதோ ?. 23 வருடங்களாக எதிரிகளாக இருக்கும் லாலுவும் - நிதீஷும் பா.ஜ.க வின் வளர்ச்சியை தடுக்க வேண்டுமென்கிற ஒரே காரணத்துக்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் . அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்பார்கள் . அதற்காக இப்படியா ?! ...

இங்கிலாந்தில் படு  கேவலமாக  உதை  வாங்கிய பிறகு கொஞ்சமா புத்தி வந்து பி.சி.சி.ஐ கோச் ப்லெச்சர் மற்றும் அந்நிய உதவியாளர்களை ஓரங்கட்டி ரவி சாஸ்திரியை கொண்டு  வந்திருக்கிறது . பி.சி.சி.ஐ ரவி தான் தல என்று சொல்கிறது . ரவியோ தோனி தான் கேப்டன் என்கிறார் . கேப்டனோ பெருசு ப்லெச்சர் தான்   எங்க எல்லோருக்கும் பாஸ் என்கிறார் . கேட்கும் போதே தலை சுத்துதே .  இவிங்க என்னத்த ஒன்டே ல ஆடி என்னத்த ஜெயிச்சு ! அட போங்கப்பா ...

லெட்டர் பேட் அமைப்புகள் பிரபலாமவதற்கு பிரபலங்களின் படங்களை எதிர்ப்பதை வாட்டிக்கையாக கொண்டிருக்கின்றன . துப்பாக்கி , விஸ்வரூபம் வரிசையில் லேட்டஸ்டாக அவர்களால் கையில் எடுக்கப்பட்டிருக்கும் படம் கத்தி . ராஜபக்சேவின் மைத்துனர் முக்கிய பொறுப்பிலிருக்கும் லைக்கா நிறுவனம் படத்தை தயாரிப்பதே பிரச்சனைக்கு காரணம் . இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது ஆரோக்கியமானதல்ல . கத்தி தலைக்கு மேலேயே கத்தி . சமாளிக்குமா படக்குழு ?! ...

அஞ்சான் , க.தி.வ.இ இரண்டு படங்களில் அதீத எதிர்பார்ப்பின் காரணமாகவோ என்னவோ அஞ்சான் அமுங்கி விட , கதை விவாதத்தையே கதையாக்கி அதை சுவாரசியமான திரைக்கதையாக தந்ததால் பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார் பார்த்திபன் . வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டும் தான் சினிமா என்பது மாறி ரொம்ப நாட்களாகிவிட்டது . பொழுதை போக்க கையில் மொபைல் இருந்தால் போதாதா ? . அதை தவிர டி .வி , இணையதளம் என்று எவ்வளவோ இருக்கிறது. இதன் மூலம் தமிழுலக இயக்குனர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் ஏதாவது புதுசா யோசிங்க , இல்லேன்னா பழசாயிடுவீங்க ...

மீண்டும் கூடுவோம் ...





21 August 2014

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - KTVI - க்ளாப் ...


முதல் படம் புதிய பாதை க்கு பிறகு அதே போல பெரிய ஹிட் கொடுக்கா விட்டாலும்  தனது வித்தியாசமான அணுகுமுறையால் தன் ஒவ்வொரு படைப்பின் மேலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதில் வித்தகரான இராதாகிருஷ்ணன் பார்த்திபன்  க.தி.வ.இ மூலம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறார் ...

எது மாதிரியும் இல்லாத புது மாதிரி படம் எடுக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் டி.வி.டி க்களை சுடாமல் தன் டீமுடன் வீட்டிலியே உட்கார்ந்து டிஸ்கசன் செய்கிறார் இயக்குனர் தமிழ் ( சந்தோஷ் ) . தமிழுக்கு கதை கிடைத்ததா ? அவருடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை  விட்டுப் போகும் காதல் மனைவி ( அகிலா ) திரும்பி வந்தாளா என்பதை நிறைய சுவாரசியங்கள் , கொஞ்சம் கடி என்று தனது கலவையில் தந்திருக்கிறார் பார்த்தி ...

சந்தோஷ் - அகிலா இருவருமே கதைகேற்ற நல்ல தேர்வு . இருவர் முகத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் முதிர்ச்சி தெரிகிறது . நண்பர்கள் குழு வீட்டில் உட்கார்ந்து அடிக்கும் டிஸ்கஷன் கூத்தால் தனது ப்ரைவசி பாதிக்கப்படுவதை சொல்லி அழும் எக்ஸ்சென்ட்ரிக் அகிலா கதாபாத்திரம் யதார்த்தம் . இருவரின் காதல் , அன்னியோன்யம் , சண்டை எல்லாவற்றிலுமே இயக்குனர் பளிச்சிடுகிறார் . ..


தேவர் படங்களில் ஆரம்பித்து சின்னத்தம்பி , ஈ என்று சினிமா  செய்தி துணுக்குகளை அள்ளித் தெளிக்கும் அசிஸ்டன்ட் டைரக்டராக  தம்பி ராமையா . படம் முழுக்க சிரிக்க வைப்பவர் 58 வயதாகியும் தன் 28 வயதான பெண்ணிற்கு இன்னும் கல்யாணம் செய்து வைக்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் ததும்பும் தந்தை கேரக்டரில் அண்ணன் ராமையாவாக படத்தையே தூக்கி நிறுத்துகிறார் . எல்லா துறைகளிலும் எதிர்பார்த்த உயரத்தை அடைய முடியாத இது போன்ற என்சைக்லோபீடியாக்கள் நிச்சயம் இருப்பார்கள் . தம்பி ராமையா வை அடிக்கடி வாரும் உதவி இயக்குனர் சுருளி கவர்கிறார் . பவர் ஸ்டார் கெட்டப்பில் வந்து தப்பு தப்பு இங்கிலீசில் கதை சொல்லி படம் கிளைமேக்சில் முடிய வேண்டும் என்று திரும்ப திரும்ப சொல்லும் தயாரிப்பாளர் சிம்ப்ளி சூப்பர்ப் ...

" முதல் 20 நிமிடத்துக்குள் கதையை சொல்லி இடைவேளையில் ஷாக் ப்ரேக் கொடுத்து ப்ரீ க்ளைமேக்சில கொஞ்சம் நிப்பாட்டி கடைசியில படத்த முடிக்கணும்னு நாங்க ஒரு பார்மெட் வச்சிருப்போம் . அத நேத்து வந்த குறும்பட பசங்க தூக்கி எரியறதா " என்று தம்பி ராமையா வை புலம்ப விட்டு பல சீனியர் இயக்குனர்களின் ஆதங்கத்தை போட்டுடைப்பது இயக்குனரின் சாமர்த்தியம் . பேஸ் புக் , ட்விட்டரில் கமென்ட் போடுபவர்கள் மட்டுமல்லாமல் தண்ணி கேன் போடும் நபருக்கு கூட இருக்கும் சினிமா அறிவை அழகாக சொல்லியிருக்கிறார் பார்த்திபன் ...

பாலச்சந்தர் பட பாணியில் வரும் இரண்டாவது  ஹீரோயின் , நடுநடுவே வந்து பேசி கொஞ்சம் கடிக்கும் பார்த்திபன் , கதை விவாதத்தில் இருந்த சுவாரசியம் தமிழ் சொல்லும் உண்மைக் கதையில் இல்லாமல் போவது , கதை இல்லை என்று என்ன தான் டேக் லைன் போட்டிருந்தாலும் , திரைக்கதை , வசனம் இரண்டும் கவனிக்க  வைத்தாலும் நம்மை ஒன்ற வைக்கும் ஒன் லைன் எதுவும் இல்லாமல் வெறும் சீன்களின் கோர்வையாக படம் இருப்பது போன்றவை மைனஸ் . படம் எடுப்பதற்கு டிஸ்கசன் செய்வார்கள் , ஆனால் அந்த டிஸ்கசனையே ரசிக்கும் படியான படமாக கொடுத்து  25 வருடங்கள் கடந்தும் இன்றைய குறும்பட இயக்குனர்களுக்கு தான் எந்த விதத்திலும் சளைத்தவனில்லை என்று நிரூபிக்கும் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் வித்தியாசமான சிந்தனைக்கு ஒரு க்ளாப் ...

ஸ்கோர் கார்ட் : 43


9 August 2014

தெருக்கூத்து - 2 ...


.பி யில் வெறும் பத்து தொகுதிகளை  பெற்றிருந்த பா.ஜ.க வை கடந்த தேர்தலில் 70 க்கும் மேல் ஜெயிக்க வைத்து மோடியை பிரதமராக பதவியேற்க வைத்ததில் பெரும்பங்காற்றியவர் அமித் ஷா . ஒருவருக்கு ஒரு பதவி என்கிற கட்சியின் கொள்கை அடிப்படையில் ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராகி விட்டதால் கட்சித் தலைவர் பதவியை அமத் ஷாவிற்கு கொடுத்திருப்பது சரியான முடிவு . உ.பி யைப் போலவே மேற்கு வங்காளம் , ஓடிஸா , தமிழ்நாடு , ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கால் பதித்திருக்கும் பா.ஜ.க வை மேலும் வளர்க்க அவரின் தலைமை உதவும் ...

காந்தி குடும்பத்துக்கு நெருக்கமாயிருந்த நட்வர் சிங் தனது சுய சரிதையில் சோனியா பிரதமராகாததற்கு ராகுல் தான் காரணம் என்று சொல்லி குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் . ஏற்கனவே வரலாறு காணாத தோல்வியால் துவண்டிருக்கும் காங்கிரசுக்கு இது வெந்த புண்ணில் வேல் . தேர்தலில் சகோதரருக்காக காம்பேரிங் சாரி , பிரச்சாரம் செய்த பிரியங்கா முழு நேர அரசியலுக்கு வரப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் . அவருக்கு பார்ட் டைம் மட்டும் தான் புடிக்குமோ ? ...

ராணுவத்தில் அந்நிய முதலீட்டுக்கான உச்ச வரம்பை 49 சதவிகிதமாக உயர்த்துவதற்கான பில்லை நாடாளுமன்றத்தில் பாஸ் செய்திருக்கிறார்கள் . அதே போல இன்சூரன்ஸ் பில்லையும்  கூடிய விரைவில் பாஸ் செய்வார்கள் என்று நம்பலாம் . பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபடும் மைனர்கள் ( என்ன பொருத்தம் ) வயதை காரணம் காட்டி எஸ்கேப் ஆகி விடுவதால் வயது வரம்பை 18 இலிருந்து 16 ஆக குறைக்க வேண்டுமென்கிற மேனகா காந்தியின் ஆலோசனையை வரவேற்கலாம் . ஆனால் அரசியல் ரீதியாகவோ , சட்ட ரீதியாகவோ மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும்  இதை அணுகுவார்களா ? ....

அம்மாவின் லேட்டஸ்ட் அறிவிப்பு அம்மா அமுதம் அங்காடிகள் . எங்களிடம் சரக்குகள் மட்டுமல்ல  பலசரக்குகளும் கிடைக்கும் என்று அரசு இனி விளம்பரம் செய்யுமோ  ?. ஸ்டாலினை 2016 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் கல்யாணசுந்தரத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கூட தூக்கி விட்டார்கள் . அண்ணனின் ஆதரவாளர்களுக்குத் தான் இந்த கதி என்று பார்த்தால் தம்பியின் கைத்தடிகளுக்குமா ? . தலைவரின் பணியில் சொல்வதென்றால் கட்சி ஜனநாயக ரீதியில் தன் கடமையை செய்யும் ...

ஆஸ்திரேலியாவில் ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே கால் மாட்டிக் கொண்ட ஒருவரை எல்லோருமாக சேர்ந்து ரயிலை தள்ளி காப்பாற்றியதை பார்த்த போது மெய் சிலிர்த்தது . ஆனால்  நம்மூர்  அடையார் பாலத்தில் பைக் ஒட்டிக் கொண்டு வந்தவர் கீழே விழுந்து மூர்ச்சையாகி விட கூடவே பைக்கில் வந்த  பெண் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல்  பைக் பார்ட்டியின் பர்சையும் , செல்லையும் லவட்டிக் கொண்டு போன செய்தியை படித்த போது கண் வேர்த்தது . Who is that lady ? ...

பத்து வருடங்கள் கழித்து 94 குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய கும்பகோணம் தீ விபத்துக்கு காரணமாவர்களுக்கு  ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வந்திருக்கிறது . காலம் கடந்த நீதி  மறுக்கப்பட்ட நீதி என்பார்கள் . நம் நாட்டில் ஒரு வழக்கு முடிந்து தீர்ப்பு வருவதற்குள் அதில் சம்பந்தப்பட்டவர்கள் உயிரோடு இருப்பார்களா என்பதே சந்தேகம் . 2014 இல் முகலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்து பலர் பலியான வழக்கிலாவது உடனடி தீர்ப்பு வருவதற்கு ஆவண செய்ய வேண்டும்  . ஆனால் 3 வருடங்களுக்கு முன்பே நீதிமன்ற அறிவுரையின்  படி சி.எம்.டி.ஏ வில் உள்ள சில அதிகாரிகளின் மேல் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இது போன்ற விபத்துக்களை ஒரு வேளை  நடக்காமல் தடுத்திருக்கலாம் . இந்நேரத்துக்கு இந்த விபத்தைப் பற்றி நிறைய பேர் மறந்திருப்பார்கள் . பிறகு வேறொரு சம்பவம் , வேறொரு வழக்கு என்று வாழ்க்கை ஓடிக்கொண்டேயிருக்கும் . ஒரு கொலைக்கே தூக்கு தண்டனை கொடுக்கலாமெனும் போது சிலரின் மெத்தனத்தாலும் , ஊழலாலும் பல உயிர்களை பலியாக்கும்  இது போன்ற சம்பவங்களுக்கு காரணமானவர்களுக்கு அதிக பட்சமாக ஆயுள் தண்டனை தான் கொடுக்கப்படுகிறது . என்ன  கொடுமை சார் இது ? ...

சென்ற பதிவில் தோனி இங்கிலாந்து சீரியசை ஜெயித்தால் பேண்டை கழட்டி சுற்றுவாரோ என்று கேட்டது இங்கிலீஸ் காரெங்க காதுல விழுந்துருச்சோ என்னவோ ?. அடுத்து நடந்த சவுத்தாம்ப்டன் டெஸ்டுல வச்சு தோனியோட பேன்ட மட்டுமல்ல டீமோட பேண்டையே மொத்தமா உருவி சூ ... சரி விடுங்க.
சம்சாரம் அது மின்சாரம் படத்துல " வாழாவெட்டியா இருந்த பொண்ணு  புருஷன் வீட்டுக்கு வாழ போனத நினைச்சு சந்தோஷப்படுறதா இல்ல இந்த வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு கோவிச்சுக்குட்டு அப்பா வீட்டுக்கு போனத நினைச்சு வருத்தப்படுறதா " என்று விசு ஒரு வசனம் பேசுவார் . அதே மாதிரி " காம்ன்வெல்த்  கேம்ல இந்தியா 64 பதக்கங்களை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்ததை நினைத்து சந்தோசப்படுவதா ? இல்லை இந்தியா இங்கிலாந்திடம் அடிமையாக இருந்ததை நினைவுபடுத்தும் காமன்வெல்த் போட்டியை நினைத்து வருத்தப்படுவதா ? ...

சும்மா சேனலை மாற்றிக் கொண்டிருந்த போது சொல்லி வைத்தார்ப் போல  எல்லா சீரியல்களிலும் ஹீரோயின்களுக்கு கரு கலைந்து விடுகிறது. பாவம் இந்த பெண்களின் சோகத்தையெல்லாம் பார்க்கும் போது ரெம்ப பீலிங்கா இருக்கு . அதே சமயம்  ஜெயா டி.வி யில்  புதுப்பேட்டை போட்டிருந்தார்கள் . எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படங்களில் அதுவும் ஒன்று . தனுஷின் நடிப்பு , செல்வாவின் மேக்கிங் , யுவனின் இசை இதோடு சேர்ந்து பாலகுமாரனின் சார்ப்பான வசனங்கள் எல்லாமே படத்திற்கு ஹைலைட்ஸ் . சோனியா எபிசோட் , நிறைவை தராத க்ளைமாக்ஸ் என்று சில குறைகள் இருந்தாலும் ஒரு ரவுடியின் வாழ்க்கையை நியாயமாக நம்பும் படி பதிய வைத்ததில் புதுப்பேட்டை எப்பவுமே தங்க வேண்டிய இடம் . தனுஷ் - செல்வா - யுவன் கூட்டணி மீண்டும் வருமா ? ...


சரபம் , ஜிகர்தண்டா இரண்டு படங்களை பற்றியும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இருந்தும்  ஜிகர்தண்டா வை மட்டுமே பார்க்க முடிந்தது . முதல் பாதி சான்சே இல்ல . இரண்டாம் பாதி கொஞ்சம் தடுமாறினாலும் மொத்தத்தில் டேஸ்டாகவே இருக்கிறது .  சந்தோஷ் குமார் என்பவர் ஒரு சினிமா செய்தியுடன் ஒரு புகைப்படத்தை  எனக்கு மெயில் செய்திருந்தார் . புகைப்படத்தை பார்த்தவுடன் மிகவும்  ஆச்சர்யமாக இருந்தது . பாரதிராஜாவின் அச்சு அசல் ஜெராக்ஸாக  இருக்கும் அவருடைய தம்பி ஜெயராஜ் கத்துக்குட்டி எனும் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் . நடிகனாக வேண்டுமென்கிற ஆசையில் சென்னைக்கு வந்த அவருடைய அண்ணனின் தாகத்தை தம்பி  தீர்த்து வைக்க வாழ்த்துவோம் ...

மீண்டும் கூடுவோம் ...





Related Posts Plugin for WordPress, Blogger...