30 May 2013

பிச்சைக்கார கிழவி - சிறுகதை ...


ன்றும் என்றும் போலவே வழக்கமாகத்தான் இருந்தது . குப்பைத் தொட்டிகள் இருந்தும் ரோட்டில் சிதைந்து கிடக்கும் குப்பைகள் , காரை பற்றி நினைத்து பார்க்காத காலத்தில் வீட்டை வாங்கி விட்டதால் உள்ளே  அடைபடாமல் சுதந்திரமாய் ரோட்டோரம் வரிசையில் நிற்கும் கார்கள் , ரியல் எஸ்டேட் பூதங்களிடமிருந்து தப்ப முடியாமல் தங்கள் சுயத்தை இழந்து இடிபட்டுக் கொண்டிருக்கும் வீடுகள் , குழந்தைகளும் , செல்லப்பிராணிகளும் ஒன்றாகவே வளரும் குடிசைகள் , சூதாட்டத்தில் சிக்கித் தவிக்கும்  ஐ.பி.எல் பற்றி டீக்கடைகளில் நடக்கும் விவாதங்கள் என்று நான் வாக்கிங் போகும் போது புதிதாய் ரோட்டோரத்தில் பார்த்த பிச்சைக்கார கிழவியை தவிர  மற்ற  விஷயங்கள்  அன்றும் என்றும் போலவே வழக்கமாகத்தான் இருந்தன  .

அந்த மூதாட்டிக்கு 70 வயதுக்கு மேலிருக்கலாம் . தினமும் அவள் அங்கிருந்து நான் பார்க்கவில்லையா அல்லது புதிதாய் வந்திருக்கிறாரா என்று தெரியவில்லை . ஒடிசலான தேகம் , ஒட்டிய கண்கள் , பக்கத்தில் தடி , பிச்சைக்காக நீட்டிய கைகள் என எல்லாமே அவள் வறுமையை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தன . பொதுவாகவே நான் பிச்சை போடுவதை ஊக்குவிப்பதில்லை . ஒரு கூட்டத்தையே சோம்பேறிகளாக்குவதோடு நாமும் ஏமாற்றப்படுகிறோம் என்கிற உள்ளுணர்வு எனக்கு உண்டு . இரயில் , பேருந்து பயணங்களில் இதை தவிர்ப்பதற்காகவே  அதிக நேரங்கள் புத்தகங்களில் மூழ்கி விடுவது என் வழக்கம் . ஆனால் எல்லா நேரங்களிலும் இப்படி நடந்து விடுவதில்லை . வயதானவர்கள் பிச்சை எடுப்பதை பார்க்கும் போது மட்டும் என் கொள்கை பிடிப்பு தளர்ந்து விடும் . வாழும் போதிருக்கும் கஷ்டம் சாவு வரை தொடர்வது கொடுமை . ப்ளாட் கலாசாரம் வந்த பிறகு யாரோ வயதானவர்களை பார்த்து குழந்தைகளுக்கு தாத்தா , பாட்டி என்று  சொல்லித் தருகிறோம் . உண்மையான தாத்தா , பாட்டிகள் ஒரே வீட்டில் நிரந்தரமாக தங்க முடியாமல் அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் .

நிச்சயம் இந்த கிழவிக்கும்  மகனோ , மகளோ இருந்து கவனிக்காமல் விரட்டி விட்டிருக்கலாம் . அவள் அங்கங்கே பிச்சையெடுத்து வயிற்றை கழுவிக்கொள்ளலாம் , ஆனால் உடம்புக்கு ஏதாவது வந்து விட்டால் எங்கே போவாள் என்று நினைத்த போது உள்ளுக்குள் ஏதோ செய்து அந்த முகம் தெரியாத மகன் , மகள் மேல் கோபம் வந்தது . வாழ்க்கை முழுவதும் படிப்பு , வேலை இந்த இரண்டை மட்டுமே பிறந்தற்கான நோக்கமாக கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் லோகத்தில் அவர்கள் மட்டும்  விதிவிலக்கா என்ன ? . எந்த ஒரு இடத்தில் முதலீடு செய்தாலும் அதற்க்கான லாபத்தை எதிர்பார்க்கிறோம் , ஆனால் லாபத்தை எதிர்பார்க்காமல் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு பெற்றோர்களின் பணம் செலவழிக்கப்படுகிறது . எந்தவித வாக்குறுதியும் இல்லாமல் தங்கள் வாழ்நாள் சம்பாத்தியத்தை இழந்து விட்டு தவிக்கும் லட்சோப லட்ச ஆத்மாக்களுள் இந்த கிழவியும் ஒருத்தியோ ?! . சிந்தனைகள் ஒருபக்கம் ஓட அவளுக்கு ஏதாவது கொடுக்கலாம் என்று பையை துழாவிய போது தான் அதில் ஒன்றுமில்லை என்று தெரிந்தது .

வாக்கிங் போகும் போது ஏதாவது வாங்க வேண்டுமாயிருந்தாழொலிய நான் பணம் எடுத்து வருவதில்லை என்ற ஞாபகம் வர கொஞ்சம் அலுத்துக்கொண்டேன் . நாளை மறக்காமல் பணம் எடுத்து வர வேண்டுமென்று அப்பொழுதே மனதில் குறித்துக் கொண்டேன் . அந்த கிழவி மீது ஒரு படி  மேலே பரிவு வர காரணம் இறந்து போன எனது பெரியம்மா . எனது பள்ளி காலங்களில் அம்மா வீட்டிலில்லாத போது எனக்கு சமைத்து போட்டவள் . என் அப்பா சாப்பிடும் போது ஏதோ தேர்வு  எழுதி விட்டு  முடிவுக்கு காத்திருக்கும் மாணவி போல கதவருகில் நின்று கொண்டு பயத்துடன் பார்க்கும் அந்த கண்கள் இன்றும் என் நினைவில் இருக்கிறது . நான் என்றுமே பெரியம்மாவை எனக்கு சாதம் போட அனுமதித்ததில்லை . அதற்கு காரணம் அந்த கருப்பு கைகள் . சமையலறையில் வேலை பார்த்து பார்த்து காய்த்துப் போன அந்த கைகளை பார்க்கவே எனக்கு சிறு வயதில் பயமாக  இருக்கும் . கொஞ்சம் பெரியவனான பிறகு " என்னடா நான் சாதம் போடலாமா" என்று பெரியம்மா குறும்பாக கேட்கும் போது அசடு வழிந்திருக்கிறேன் . பத்தாவதுக்கு  மேல் படிப்பதற்கு எனது அப்பா உதவி செய்தும் பெரியம்மா மகன் சரியாக படிக்காமல் ஊதாரியாக சுற்றியதால் எனது வீட்டிற்கு வரவே அவள்  பயந்து கொண்டிருந்த காலமது . ஒரு நாள் நேரே பார்க்கும் போது எனது அப்பா அதை பற்றி ஒரு வார்த்தை கூட பெரியம்மாவிடம் கேட்காதது எனக்கு   ஆச்சர்யமாக இருந்தது .

பெரியவன் ஆக ஆக நான் என் நண்பர்கள் வட்டத்துக்குள் ஐக்கியமாகி விட பெரியம்மா மகள் வீட்டை பகைத்துக் கொண்டு திருமணம் செய்து எங்கோ சென்று விட்டது , மகன் சரியாக படிக்காததால் ஆட்டோ ஒட்டிக் கொண்டிருப்பது இதையெல்லாம் என் அம்மா மூலம் அவ்வப்போது தெரிந்து கொண்டேன் . ஒரு நாள் என் நண்பன் வீட்டை விட்டு வெளியே வரும் போது தான் நீண்ட நாட்கள் கழித்து எனது பெரியம்மாவை பார்த்தேன் . தெருவோரம் அமர்ந்து கொண்டு வருவோர் போவோரிடம் அப்பளம் விற்றுக் கொண்டிருந்தாள் . நண்பன் கூட இருந்ததால் பேசலாமா வேண்டாமா என்ற யோசனையில் நானிருக்கும் போதே " ராசா " என்று ஆசையாக கூப்பிட்டாள் . சுற்றியிருப்பவர்கள் என்னை ஒரு மாதிரி பார்ப்பது போலவே எனக்கு அப்போது பட்டது . " உங்க அப்பாருக்கு அரிசி அப்பளம்னா உசுரு " என்று சொல்லி எனது கைகளில் நான்கைந்து அப்பளப் பொட்டலங்களை திணித்தாள். இதற்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமென்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே " காலேஜெல்லாம் நல்லா படிக்கிறியா , என் புள்ள மாதிரி ஆயிடாத " என்று சொல்லி கொஞ்சம் பணத்தை என் பாக்கெட்டில் வைக்கும் போது அவள் குரல் தழுதழுத்தது . நான் எவ்வளவோ வற்புறுத்தியும்  என்னிடமிருந்து பணத்தை அவள் வாங்கிக் கொள்ளவேயில்லை . என் அப்பா தான் பெரியம்மாவிற்கு நிறைய செய்திருக்கிறாரே என்றும் , சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு திரும்ப கொடுத்துக்கொள்ளலாம் என்றும் என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன் .

வீட்டிற்கு வந்து என் அம்மாவிடம் இதை சொல்லிய பிறகு ஒரு களேபரமே நடந்தது  . ஒரு கட்டத்துக்கு மேல் நான் கோபமாக " நம்மட்ட எவ்வளோ வாங்கித் தின்னிருப்பாங்க , ரொம்ப தான் கத்துறியே  " என்று சொன்னது தான் மிச்சம் .என் அம்மாவிடமிருந்து பெரிய அழுகை வந்தது . சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட்ட அம்மாவை  தாயும் , தந்தையுமாய் இருந்து பார்த்துக் கொண்ட பெரியம்மாவிற்கு என்ன செய்தும் நன்றிக் கடனை தீர்க்க முடியாது  என்பதை புரிந்து கொண்டேன் . நான் நின்று கொண்டிருக்கும் வீட்டை கட்டுவதற்காக வாங்கிய கடனையே இன்னும் என் அப்பா முழுமையாய் அடைக்கவில்லை என்பதையும் தெரிந்து கொண்ட பிறகு  எனக்கு லேசாய் தலை சுற்றியது  . கடைசி வரை என் பெரியம்மா யாரிடமும் கையேந்தாமல் தன் சொந்த உழைப்பிலேயே வாழ்ந்து போய் சேர்ந்து விட்டாலும் ஏனோ  எனக்கு இந்த மூதாட்டியை பார்க்கும் பொழுது பெரியம்மா ஞாபகம் வந்தது . நிச்சயம் நாளை வரும் போது ஏதாவது செய்ய வேண்டுமென்கிற நினைப்பில் வீடு திரும்பினேன் .

அடுத்த நாள் வந்த போது கிழவி அங்கே இல்லை . நாளை பார்க்கத்தானே போகிறோம் என்று திரும்பி விட்டேன் . அடுத்த நாளும் வந்தது . கிழவியும் இருந்தாள் . நான் அருகே சென்று என் பைக்குள் கையை விட்டேன் , அதில் ஒன்றுமேயில்லை . ஒரு நிமிடம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை , பை எதுவும் ஓட்டையா என்று மீண்டுமொருமுறை சரி பார்த்துக் கொண்டேன் . பிறது தான் தெரிந்தது நான் இன்று வேறு ட்ராக் சூட் போட்டிருக்கிறேன் என்று . ஒவ்வொரு முறையும் அருகில் வந்து விட்டு வெறும் கையை வீசிக்கொண்டு போகும் என்னை கிழவி எந்தவொரு சலனமுமில்லாமல் பார்த்தாள் . எனக்கு என்னமோ போலிருக்க விறுவிறுவென்று நடையை கட்டினேன் . இன்று வீட்டிலிருந்து கிளம்பும் போதே பேன்ட் , சட்டை போடிருக்கிறேனா எனபது  உட்பட எல்லாவற்றையுமே ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துக்கொண்டேன் . பர்சிலிருந்து எடுத்து வைத்துக்கொண்ட பணம் பேண்டுக்குள் பதுங்கியிருந்தது . எனது நடவடிக்கைகளை என் மனைவி வேறு மாதிரியாக பார்ப்பது போலவே தெரிந்தது . அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் எனது நடை பயணத்தை தொடங்கினேன் .

கிழவியிடம் பணத்தை கொடுத்த பிறகு அவள் முகம் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்த்துக் கொண்ட நடந்தேன் . அன்று போல் சலனமில்லாமல் இருக்குமா ? அல்லது பெரியமாவின் பார்வை  போல குறும்பாக இருக்குமா ? எப்படியிருந்தாலும் பணத்தை கையில் திணித்து விடுவது என்ற முடிவில் அவள் இடம் நோக்கி சென்றேன் . கூட்டம் கூட்டமாக வழி மறித்துக் கொண்டு பேசுவது தமிழர்களின் இயல்பா ? இல்லை இந்தியர்களின் இயல்பா ? என்று தெரியவில்லை . ரோட்டை மறித்துக் கொண்டு வெட்டிக்கதை பேச யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது ? நான்சென்ஸ் என மனதுக்குள் திட்டிக்கொண்டே அவர்களை கடந்து சென்ற எனக்கு ஏதோ உறுத்த கூட்டத்தை விளக்கிக் கொண்டு எட்டிப்பார்த்தேன் . அங்கே ரோட்டில் கண்கள் வெறித்திருக்க கிழவி மூர்ச்சையாகியிருந்தாள் . சலனமில்லாத அந்த பிச்சைக்கார கிழவியின் முகத்தின் வழியே என் பெரியம்மா என்னை பார்ப்பது போலவே இருந்தது ...



24 May 2013

2014 தேர்தல் - மன்னராட்சியா ? மக்களாட்சியா ? ...


ன்னும் ஒரு வருடத்திலோ அல்லது அதற்கு முன்னரோ 2014 ல் பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது . அனைத்து இந்தியர்களுக்கும் குறிப்பாக நடுத்தர , உயர் நடுத்தர வகுப்பினருக்கு இது மிக முக்கியமான தேர்தல் என்றே சொல்லலாம் . தற்போதைய நிலையில் விலைவாசி உயர்வு  , அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மை  , ஊழல் இவையனைத்தும் ஏழை , பணக்காரர்களை விட நடுத்தர வர்க்கத்தையே அதிகம் பாதிக்கின்றன .  ஏனெனில் ஏழைகள் இலவசத்தின் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்கள்  , பணக்காரர்கள் எதைப் பற்றியும் பெரிதாக கவலைப்படுவதில்லை .

2004 இல் இருந்து தொடர்ந்து பத்து வருடங்கள் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் காங்கிரஸின் மேல் மக்கள் அதிக அதிருப்தியோடு இருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை . 2009 இல் நாட்டின் ஸ்திரத்தன்மை போய் தொங்கு நாடாளுமன்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அதிருப்தி இருந்தும் அதையும் மீறி ஒட்டு போட்டு காங்கிரஸை மக்கள் ஆட்சி பீடத்தில் ஏற்றினார்கள் . இந்த முறையும் அதே போல ஒரு அசம்பாவிதம் நடந்து விடக்கூடாதென்பதில் அனைவரும் கவனமாக இருப்பார்கள் என நம்புவோமாக ! 2 ஜி , காமன்வெல்த் தொடங்கி நிலக்கரி , ரயில்வே என்று எல்லா துறைகளிலும் ஊழல் தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறது . அதோடில்லாமல் ஊழலை தடுக்க வேண்டிய அரசே சி.பி.ஐ யை கையில் போட்டுக் கொண்டு குற்றப்பத்திரிக்கைய மாற்றியமைத்ததையும்  அதற்காக உச்சநீதிமன்றத்தில் வாங்கிக் கட்டிக்  கொண்டதையும் இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டோம் . ஊழல் இந்தியாவில் பல வருடங்களாக புரையோடியிருந்தாலும் இந்த அளவிற்கு வெளிப்படையாக ஒரு அரசு செயல்படுவதாக உச்சநீதி மன்றமே  கண்டித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது ...

பொருளாதாரம் , ஊழல் இரண்டையும் தாண்டி கவலையளிக்கும் மற்றொரு விஷயம்  சீனா , பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளால் நாட்டிற்கு  ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் . ஏற்கனவே 1962 போரில் நம் நாட்டின் ஒரு பகுதியை கைப்பற்றி விட்ட சீனா இப்பொழுது நம் நாட்டிற்க்குள் 19 கி.மீ புகுந்து தங்களின் டெண்டை போட்டிருக்கிறார்கள் . ஒரு மாத போராட்டத்திற்கு பின் அவர்களை வெளியேற்றினாலும் அதற்கு பதிலாக நம் படை வீரர்களும் பின் வாங்கியிருப்பது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை கேள்விக்குறியாக்குகிறது  . தனக்கும் அஜ்மலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பகல் வேஷம் போட்ட பாகிஸ்தான் அப்சல் குரு தூக்குக்கு எதிராக கண்டனம் தெரிவித்து நம் உள்நாட்டு விவகாரங்களில் வெளிப்படையாகவே தலையிடுவதும் , சிறைக்குள் வைத்து நம் இந்திய  கைதி சர்பஜித் சிங்கை கொடூரமான முறையில் கொன்றிருப்பதும் நம் நாட்டின்மேல் அதற்கிருந்த கொஞ்ச நஞ்ச பயமும் போய் விட்டதென்பதை வெளிப்படையாகவே காட்டுகின்றன . இவை தவிர இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் அரசு நடந்து கொண்ட விதம் மாணவர்களை கூட ரோட்டிற்கு வரவைத்து விட்டது .  இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவை ஒட்டு போட வைப்பதற்கே பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியதாய் இருக்கிறது . இப்படி உள்நாட்டு விவகாரங்களில் மட்டுமல்லாமல் வெளி நாடுகளுடனும் ஒரு ஆரோக்கியமான உறவு இல்லாமல் அச்சத்துடனேயே நமது அரசாங்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது ...

இன்றைய சூழ்நிலையில் காங்கிரஸிற்கு எதிராக இருக்கும் ஒரே மாற்று பி.ஜே.பி மட்டுமே . தேர்தலை ஒட்டி உருவாகும் மூன்றாவது அணி என்றுமே மழையில்  முளைக்கும் காளான் தான் . இருப்பினும் தேசிய அளவில் காங்கிரஸிற்கு  எதிரான வாக்குகளை பி.ஜே,பி ஒட்டுமொத்தமாக திரட்ட தவறியது அந்தந்த மாநில கட்சிகளை தேசிய அளவில் அதிகமாக முக்கியத்துவம் அடைய வைத்திருப்பதையும் யாரும் மறுக்க முடியாது . அர்விந்த் கேஜ்ரால் , அன்னா ஹசாரே போன்றோரின் வருகை படித்த நடுத்தர மக்களிடையே பி.ஜே,பி யின் செல்வாக்கை சரித்திருப்பதும் உண்மை . உட்கட்சி பூசல் , மோடி யை பிரதமாராக அறிவிப்பதில் உள்ள சிக்கல் , கர்நாடகாவில் அடைந்த படு தோல்வி போன்றவைகளும் பி.ஜே.பி க்கு பெரும் பினடைவை ஏற்ப்படுத்தியிருக்கின்றன . இவை எல்லாவற்றையும் விட காங்கிரஸ் என்ன தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் மக்கள் பி.ஜே.பி சிறிய தவறு செய்தாலும் மன்னிக்க முடியாத மனப்பான்மையுடன் இருப்பதும் , ஊடகங்களிடையே தனது உறவை பி.ஜே.பி மேம்படுத்திக் கொள்ளாததும் அந்த கட்சிக்கு சறுக்கலாக இருக்கும் மற்ற அம்சங்கள் . இப்படி சில குறைபாடுகள் இருந்தாலும் காங்கிரசுடன்  ஒப்பிட்டுப் பார்க்கும் போது பி.ஜே.பி சிறந்த தேர்வாகவே படுகிறது . இத்தனை வருட சுதந்திர இந்தியாவில் காங்கிரஸு க்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு வேறெந்த கட்சிக்கும் கொடுக்கப்படவில்லை . எனவே பி.ஜே.பி க்கு மற்றொரு வாய்ப்பு கொடுப்பதில் தவறிருப்பதாக தெரியவில்லை ...

பி.ஜே.பி க்கு எதிராக முக்கியமாக வைக்கபடும் மதவாத குற்றச்சாட்டு ஒரு சந்தர்ப்பவாத குற்றச்சாட்டே . மதவாதம் என்று சொல்லப்படும் பி.ஜே.பி ஓட்டுக்காக எந்தவொரு மதத்துக்கும்  சலுகைகள் வழங்கி உதவிகள் செய்யவில்லை . ஓட்டுக்காக மைனாரிட்டிகளை  தேசிய நீரோட்டத்தில் கலக்க விடாமல் தனித்தே வைத்திருக்கும் பல கட்சிகளின் கூட்டு சதியே இந்த மதவாத பிரச்சாரம்  . உலக மக்கள் தொகையில்  மைனாரிட்டியாக இருக்கும் ஹிந்துக்களை சாதி ரீதியாக பிரித்து வைப்பதே இங்குள்ள அரசியல் கட்சிகளின் முக்கிய நோக்கம் . எங்கே அவர்கள் ஒன்றுபட்டு விடுவார்களோ என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த போலி மதவாத பிரச்சாரம் . ஒரு கட்சி  எந்தவொரு குறிப்பிட்ட மதத்தை ஆதரித்தாலோ அல்லது அதன் சார்பாக நடந்து கொண்டாலோ அதை மதவாத கட்சி என்று சொல்லலாம் . அந்த அடிப்படையில்  ஹிந்துக்கள் சார்பாக நடப்பதாக சொல்லப்படும் பி.ஜே.பி மதவாத கட்சி என்றால் மற்ற மதங்களை தலையில்  தூக்கிப் பிடிக்கும் மற்ற கட்சிகள் மட்டும் மிதவாத கட்சிகளா ? இதை யோசித்தாலே அரசியல் கட்சிகள் போடும் பகல் வேடம் தெளிவாகும் ...

பாபர் மசூதி இடிப்பும் , கோத்ரா கலவரமும் பி.ஜே.பி க்கு எதிராக வைக்கப்படும் கடுமையான குற்றச்சாட்டுகள். பாபர் மசூதி பிரச்சனைக்கு ஏற்கனவே உச்ச நீதி மன்றம் சுமூகமான தீர்ப்பை வழங்கிவிட்டது . கோத்ராவை பொறுத்தவரை எதி ர்கட்சிகள் எவ்வளவோ முயன்றும் மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை . சமீபத்தில் இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது . எந்தவொரு கட்சியின் வளர்ச்சிக்கு பின்னாலும் ஆராய்ந்து பார்த்தால் ஏதாவது குற்றச்சாட்டுகள் கண்டிப்பாக இருக்கும் என்பதே வரலாறு .  இதற்கு பி.ஜே.பி மட்டும் விதிவிலக்கல்ல . இந்த குற்றச்சாட்டுக்கள் மட்டுமே அந்த கட்சிக்கான ஓட்டுக்களை சிதைத்து விட முடியாது . ஏனெனில் தேசிய அளவில் மூன்று  விதமான ஒட்டு வங்கிகள் உள்ளன . அதில் முதலாவது மற்றும் முக்கியமானது ஏழைகள் ஒட்டு , இரண்டாவது மைனாரிட்டிகள் ஒட்டு , மூன்றாவது படித்த நடுத்தர வர்க்கத்தினர் ஒட்டு ...


அந்தந்த ஏரியாவில் வினியோகிக்கப்படும் பணமும் , இலவசங்களும் முதலாவது ஒட்டு வங்கியை கவனித்துக் கொள்கின்றன . மத்திய அரசு
 " உங்கள் பணம் உங்கள் கையில் " திட்டத்தை எல்லா மாநிலங்களுக்கும் வெற்றிகரமாக கொண்டு செல்வதில் முனைப்பாக இருப்பதற்கு காரணத்தை சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை . இரண்டாவதாக இருக்கும் மைனாரிட் ஓட்டை சிறிய விழுக்காடேனும் பி.ஜே.பி பக்கம் போக விடாமல் வைத்திருப்பதே மற்ற கட்சிகளின் முக்கியமன நோக்கமாக இருக்கிறது . ஹிந்துக்களை போல அல்லாமல் மைனாரிடிகள் ஒட்டு விஷயத்தில் ஒற்றுமையாக இருப்பது இந்த வகை ஒட்டு வங்கியை பலப்படுத்துகிறது . மூன்றாவதாக இருக்கும் நடுத்தர ஒட்டு வங்கி அந்தந்த சூழ்நிழைக்கு ஏற்றவாறு தங்களின் நிலையை வெளிப்படுத்திக் கொள்கிறது . காங்கிரசின் மேல்  இருந்த நம்பிக்கை நடுத்தர வர்க்கத்தினருக்கு  வெகுவாக சரிந்திருப்பது பி.ஜே.பி க்கு சாதமாக இருந்தாலும் முன்னமே சொன்ன மாதிரி அவை முழு மையாக பி.ஜ.பி க்கு சென்றடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . வரப்போகிற தேர்தலில் இந்த மூன்றாவது வாக்கு வங்கி முக்கிய பங்கு வகிக்கப் போவது உண்மை . முன் போல இல்லாமல் ஒட்டு போடும் வழக்கம் அதிகமாகி வருவதும்  அதற்கு மற்றொரு முக்கிய காரணம் ...

இரண்டாவது வகை ஒட்டு வங்கியில் தனக்கு ஏற்படும் இழப்பை பி.ஜே.பி இதில் சமன் செய்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன . அதே நேரம் இந்த வகை ஒட்டு மொத்தமாக பி.ஜே,பி பக்கம் சாயும் போது தான் பலன் அதிகமாக இருக்கும் . ஆனால் இந்த வகை மக்கள் சென்ற தேர்தலை போல நாம் ஓட்டுப் போட்டாலும் தனித்த மெஜாரிட்டியில் பி.ஜே.பி வராது என்றோ அல்லது மூன்றாவது அணி அதிக இடங்களை பெற்று கம்யூனிஸ்ட் தலைமையில் ஆட்சி வந்து விடும் என்றோ பயத்தில் திரும்பவும் காங்கிரஸ் பக்கமே சாய்ந்து விடுகிற அபாயமும் உள்ளது . இதை சரி கட்டுவதற்கு பி.ஜே.பி க்கு உள்ள ஒரே பிரம்மாஸ்திரம் நரேந்திர மோடி . சமீபத்தில் பிரபல எழுத்தாளர் சேட்டன் பகத் பேஸ் புக்கில் நடத்திய கருத்துக்கணிப்பில் 84 சவிகிதம் பேர் நரேந்திர மோடி பிரதமராக வர  விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்  . மூன்றாவது வகை ஒட்டு வங்கியில் அதிகம் இருப்பவர்கள் இவர்களே . இதே கருத்துக்கணிப்பில் ராகுல் காந்திக்கு 13 சதவீதம்  பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்திருப்பதும்  குறிப்பிடத்தக்கது . மோடியை  முன்னிருத்தினால் மைனாரிட்டிகள் புறக்கணிப்பார்கள் என்ற நினைப்பில் வரை தவிர்த்து அத்வானியையோ அல்லது வேறு யாரையோ பி.ஜே.பி யின் பிரதம வேட்பாளராக அறிவித்தாலும் அந்த ஓட்டு வங்கியில் பெரிய மாற்றம் ஏற்ப்பட்டுவிடப் போவதில்லை .  மாற்றாக மோடியை அறிவிப்பதன் மூலம் படித்த நடுத்தர மைனாரிட்டிகளிடையே ஒட்டு பெறுவதற்கு பி.ஜே.பி க்கு வாய்ப்பு உள்ளது . பாராளுமன்ற தேர்தல் கமிட்டியில் மோடி இடம் பெற்றிருப்பதும் , மோடிக்கு நெருக்கமான அமித் ஷா உத்திர பிரதேசத்திற்கு பொறுப்பேற்றிருப்பதும் அவர் பி.ஜே.பி யின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படுவ்தற்கான வாய்ப்பை ஊர்ஜிதம் செய்கின்றன ...

மோடிக்கு ஏற்பட்டிருக்கும் பாப்புலாரிட்டி  ஒரே நாளில் ஏற்பட்டதில்லை  எனபது கடந்த 12 ஆண்டு கால குஜராத் மாநில வளர்சியயை கூர்ந்து பார்த்தாலே புரிய வரும் . அவரின் மேல் மதசார்பு சாயத்தை எவ்வளவோ காங்கிரஸ் பூசிப்பார்த்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை . முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் அவருக்கு ஆதரவாக அதிக ஓட்டுக்கள்  விழுந்திருப்பது அவர்  மேல் மைனரட்டிகள்  வைத்திருக்கும் நம்பிக்கையை கா ட்டுகிறது . 2002 இல் நடந்த கலவரத்தை தாண்டி அவர்கள் முன்னேறி வந்திருப்பது தெரிகிறது . ஏனெனில் குஜராத் என்றுமே அமைதி பூங்காவாக  இருந்ததில்லை . 2002 க்கு முன்  அடிக்கடி அங்கே இந்து - முஸ்லிம் கலவரம் நடப்பது வாடிக்கை . ஆனால் 2002 கலவரத்திற்கு பின் கடந்த 11 ஆண்டுகளில் மத வேற்றுமைகளை  கடந்து அனைவரும் ஒற்றுமையாக  முன்னேறி வருகிறார்கள் என்பதே நடைமுறை உண்மை . குஜராத்தின் உண்மை நிலைமை அங்கிருப்பவ்ர்களுக்கே தெரியும் . இந்திரா காந்தி  படு கொலை செய்யப்பட பிறகு 1500 சீக்கியர்களுக்கு மேல் கொல்லப்பட்டார்கள் . ஆனால் இன்று காங்கிரஸ் தலைமையிலான அரசில் பிரதமராக இருப்பவர் மன்மோகன் சிங் என்பதே வரலாறு ...

ஏதோ மோடியே  முன்னிருந்து கலவரத்தை நடத்தியது போல போலியாக சித்தரிக்கிறார்கள் . அது சம்பந்தப்பட வழக்குகளிலிருந்து மோடி விடுவிக்கப்பட்டிருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் . மோடியை முன்னிருத்தினால்  கூட்டணியிலிருந்து விலகி விடுவோமென பீஹார் முதல்வர் நிதிஸ் குமார் சொல்லியிருக்கிறார் . அப்படி நடக்கும் பட்சத்தில் பீகாரில்  15 - 20 இடங்கள் பி.ஜே.பி க்கு கிடைக்காமல் போகலாம் .
ஆனால் இந்தியா முழவதும் வெற்றி வாய்ப்புள்ள இடங்களை ஆராய்ந்து பார்த்தால்  பீகாரின் இழப்பு பி.ஜே.பி க்கு பெரிதாக இருக்காது . எந்த கட்சியும் தனித்து பெரும்பான்மை அடையப் போவதிலலை . 160 -180 இடங்களை  தனித்து கைப்பற்றினாலே மற்ற கட்சிகள் தங்கள் ஆதரவை  வெளியிலி ருந்தோ உள்ளிருந்தோ கொடுத்து விடுவார்கள் என்பதே இன்றைய இந்திய அரசியலின் நிலை . தென் இந்தியாவில்  வளர்ச்சியடையாததும் , கர்நாடகாவில் இருந்த ஒரே ஆட்சியை ஊழலாலும்  , உட்கட்சி பூசலாலும் பறிகொடுத்ததும்  , உத்திர பிரதேசத்தில் சரிந்த செல்வாக்கும் பி.ஜே,பி க்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் . ஆனால் இன்று கர்நாடகாவில் பி.ஜே.பிக்கு நேர்ந்த  நிலை நாளை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கும்  ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை . ஊழல் மற்றும்  நிர்வாகத் திறன் இல்லாத அரசை  மக்கள் தூக்கி எறிவார்கள் என்பதே கர்நாடக மக்கள்  கற்றுத்தந்த பாடம் ...

காங்கிரஸை பொறுத்தவரை பி.ஜே.பி யை நோக்கி மற்ற கட்சிகள் செல்லாததும் , பி.ஜே.பி போலல்லாமல் தென்னிந்தியாவில் தமிழகம் தவிர்த்து மற்ற மூன்று மாநிலங்களிலும்  ஆட்சியமைத்திருப்பதும்  அதற்கு பெரிய பலம் .  அது மட்டுமல்லாமல் பண பலம் ,அரசியல் பலம் இரண்டும்  வேறெந்த கட்சிகளை விடவும் காங்கிரஸிற்கு அதிகமாகவே உள்ளன . கட்சிகளும் சரி , மக்களும்  சரி கடைசி நேரத்தில் மனது மாறி தங்களிடம் தான் வருவார்கள் என்கிற நம்பிக்கையும் காங்கிரஸிற்கு உண்டு . இரண்டு முறை பிரதமாராக இருந்து விட்டதால் இந்த முறை  மன்மோகனை தவிர்த்து ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக காங்கிரஸ்  அறிவிப்பதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது . விலைவாசி உயர்வு , தீவிரவாதம் , ஊழல்  , அயல்நாடுகளின் அச்சுறுத்தல் இப்படி பல காரணங்களால்  காங்கிரஸ் மேல் மக்களுக்கு வெறுப்பு இருந்தாலும் ராகுலின் வருகை அவற்றை மாற்றி புது உத்வேகத்தை கொடுக்கும் என்பது காங்கிரஸ்காரர்களின் நம்பிக்கை . உ.பி , குஜராத் மாநிலங்களில் அவர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது என்பது உண்மையாக இருந்தாலும் அவரை கழித்துக் கட்டி விட முடியாது . 2004 இல் சோனியாவின் வருகை காங்கிரஸை எட்டு வருடங்களுக்கு பிறகு ஆட்சி பீடத்தில் ஏற்றியதையும் யாரும் மறுக்க முடியாது ...

வரும் நவம்பரில் ராஜஸ்தான் , டில்லி , சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2014 பொது தேர்தலுக்கு வெள்ளோட்டமாக இருக்கும் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள் . பாராளுமன்ற தேர்தல் கமிட்டியில் மோடி இடம் பெற்றிருப்பதும் , மோடிக்கு நெருக்கமான அமித் ஷா உத்திர பிரதேசத்திற்கு பொறுப்பேற்றிருப்பதும் அவர் பி.ஜே.பி யின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படுவ்தற்கான வாய்ப்பை ஊர்ஜிதம் செய்கின்றன . காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை பி.ஜே.பி க்கு சாதகமான ஓட்டாக மாறினால் மட்டுமே அதன் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமையும் . அப்படி நடக்காமல் காங்கிரஸ் மற்றும் உதிரி கட்சிகள் அதிக இடங்களை பெரும் பட்சத்தில் மீண்டும் காங்கிரஸ் தலைமையில் அரசு அமைவதற்க்கான வாய்ப்பே உருவாகும் . சுதந்திரம் அடைந்ததில் இருந்து வாழையடி வாழையாக நேரு குடும்பத்தினரோ அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருவரோ தான் இந்தியாவை ஆண்டு வந்திருக்கிறார்கள் . எனவே 2014 தேர்தலில் ஜெயிக்கப் போவது காங்கிரஸா ? பி.ஜே,பி யா ? அல்லது மோடியா ? ராகுலா ? என்பதை விட பழமையில் ஊறிய மன்னாராட்சியா ? முன்னேற்றம் கொடுக்கும் மக்களாட்சியா ? என்பதே நம் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது ...


20 May 2013

நேரம் - NERAM - வீணாகாது ...




ஸ்மார்டான  பிஸ்தா பாடல் மூலம் படத்திற்கு வரவைத்தவர்கள் அதையும் தாண்டி நிறைய விஷயத்திற்கு நேரம் செலவழித்திருப்பது நன்றாகவே தெரிகிறது . பீட்சா  , சூது கவ்வும் அளவிற்கு படம் இல்லையென்றாலும் கார்த்திக் சுப்பராஜ் , நலன் குமரசாமி போன்ற குறும்பட இயக்குனர்கள் வரிசையில் தமிழுக்கு நல்ல புது வரவு அல்போன்ஸ் புத்திரன...

வேலையிலாத ஹீரோ வெற்றிக்கு ( நவின் )  ஒரே நேரத்தில் மூன்று பிரச்சனை . தங்கையின் திருமணத்திற்காக வட்டி ராஜாவிடம் ( சிம்ஹா ) வாங்கிய கடனை கொடுக்க வேண்டும் .  பெண்ணை கடத்தி விட்டதாக காதலி வேணி ( நஸ்ரியா ) யின் அப்பா ( தம்பி ராமையா ) கொடுத்த புகாருக்கு போலீசிடம் பதில் சொல்ல வேண்டும் . மீதி டவுரி பணத்தை  மாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டும் . இந்த மூன்றையும் சமாளித்தாரா என்பதே நேரம் . கதை என்கிற கடுகு சிறிசாக இருந்தாலும் சொன்ன விதத்தில் காரம் இருக்கிறது ...

நவீன் பக்கத்து வீட்டு பையன் போல பாந்தமாக இருக்கிறார் . ரொமான்ஸில் கொஞ்சம் வழுக்கினாலும் ஆக்சன் காட்சிகளில் அட போட வைக்கிறார் . நயன்தாரா சாயலில்  இருந்தாலும் அவரை விட இளமையாக இருக்கிறார்  நஸ்ரியா . நயன்தாரா , அமலா பால் வரிசையில் தூக்கத்தை தொலைக்க வைக்கப் போகும் மற்றுமாறு மலையாள பெண்குட்டி . அம்மணிக்கு அபிநயங்கள் அருமையாக வருகிறது . நவீன் - நஸ்ரியா ஜோடிப் பொருத்தம் இயல்பாக பொருந்தியிருப்பதும் , அவர்கள் காதலை சொன்ன விதமும் அருமை ...


சூது கவ்வுமை தொடர்ந்து சிம்ஹாவிற்கு நல்ல வேடம் . வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருந்தாலும் இன்னும் மெனக்கட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது . தம்பி ராமையா தன் வழக்கமான பாணியில் சிரிக்க வைக்கிறார் . ஜான் விஜயுடன் இவர் சேரும் போது படம் நேரம் சூடு  பிடிக்கிறது . சிறிது நேரமே வந்தாலும்  நாசர் ஆசம் என்று சொல்லி அசத்துகிறார் . திருட்டு கும்பல் , ஹீரோவின் நண்பன் , நண்பனின் மேனேஜர் , ஹீரோவின் மாப்பிள்ளை , நாசரின் தம்பி இப்படி நிறையே பேர் படத்தில் வெகு இயல்பாக வந்து போவது சிறப்பு ... 

எல்லாம் என் நேரம் " , " அவனுக்கு நேரம் நல்லா வொர்க் அவுட் ஆவுது " இப்படி நேரத்தை வைத்து நிறைய புலம்பல்களை பார்த்திருப்போம் . இதை ஒன் லைனாக கொண்டு தத்துவார்த்த படமாக இல்லாமல் ஒருவன் வாழ்வில் ஒரு நாளில் நடக்கும் நல்ல , கெட்ட நேரங்களை சுவாரசியமாக சொல்லியதற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள் ...

காதலியை பக்கத்தில் வைத்துக்கொண்டு வேறொரு பெண்ணை சைட்டடித்து மாட்டிக் கொள்ளும் ஹீரோ " மூஞ்சியா அது நல்லாவே இல்ல " என்று சமாளிக்க " நீ மூஞ்சியவா பாத்த " என்று காதலி பதிலடி கொடுப்பது , பெண்ணை கண்டுபிடிக்க சொல்லி பிரஷர் கொடுக்கும் தம்பி ராமையாவிடம்
" கமிசனர் ஆபீஸ்  போயி அப்ப்ளிகேசன் கொடுத்து என்ன விட பெரிய போஸ்டுக்கு வந்தப்பறம் ஆர்டர் போடுங்க கேக்குறேன் " என்று ஜான் விஜய் கலாய்ப்பது இப்படி படம் நெடுக நிறைய நல்ல நேரங்கள் நம்மை கட்டிப்போடுகின்றன . அதே நேரம் காமெடிகள் வெறும் வசன கோர்வைகளாக இல்லாமல் காட்சிகளுடன் இணைந்து ரசிக்க வைப்பது படத்தின் ப்ளஸ் ...


பாப்புலரான பிஸ்தா பாடல் மட்டுமல்லாமல் " காதல் " மெலடியிலும் , பின்னணி இசையிலும் பரவசப்படுத்துகிறார் ராஜேஷ் முருகேசன் . லோ பட்ஜெட் படம் என்றாலும் ஒளிப்பதிவு ஹை யாக இருக்கிறது . படம் ஆரம்பித்த சில நேரங்களில் பொறுமையாக செல்லும் படம் நம் நேரத்தை சோதிப்பது , கதை எங்கும் போகாமல் மந்தவெளியை மட்டும் சுற்றி  வந்து ஒருவித சலிப்பை தருவது , யதார்த்தமாக இருந்தாலும் ஹீரோவிற்கு ஏற்படும் பிரச்சனைகளில் பெரிய பரபரப்பு இல்லாதது போன்ற குறைகள் இருந்தாலும் எடுத்துக் கொண்ட கருவிற்காகவும் , அதை படமாக்கிய விதத்திற்காகவும் , பாத்திர தேர்விற்காகவும் படத்தை பார்க்கின்ற அனைவரின் நேரம் வீணாகாது ...

ஸ்கோர் கார்ட் : 42


13 May 2013

மின்வெட்டு கவிதைகள் ...



மின்கட்டணம் உயர்ந்தும்
பணம் செலவாகவில்லை
மின்வெட்டுக்கு நன்றி ...!

இப்பொழுதெல்லாம்
உணவை பார்த்தவுடன்
காக்கைகள் கரைவதில்லை
காக்கைதொகை கூடிவிட்டதோ
மின்சாரம் கசியாததால் ...!

பக்கத்து வீட்டுக்காரியுடன்
இனி சண்டையில்லை
இருவரும் துணி உலர்த்த
மின்கம்பிகளையே
பயன்படுத்திக் கொள்கிறோம் ...!

பாட்டிகளை மீண்டும்
கதை சொல்ல வைத்த
மின்சார வாரியத்திற்கு நன்றி ...!

காதலியே
ஏன் அடிக்கடி
காணாமல் போய்  விடுகிறாய்
நீ
மின்வாரிய  ஊழியரின் பெண்ணோ ...?!



1 May 2013

சூது கவ்வும் - SOODHU KAVVUM - வெல்லும் ...


ன்று ரிலீஸ்  மற்ற இரண்டு படங்களின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்திருந்த போதிலும் சூது கவ்வும் சென்றதற்கு காரணம் குறும்பட இயக்குனர் நலன் குமரசாமி - விஜய் சேதுபதி - தயாரிப்பாளர் சி.வி.குமார் இந்த மூவரின் கூட்டணியே . ஞானவேல்ராஜா படத்தை வெளியிட்டிருப்பது தேவையான பப்ளிசிட்டியை கொடுத்திருப்பதும் பெரிய ப்ளஸ் ...

வேலைக்கு போகும் சேகர் ( அசோக் ) , சேகரின் சம்பளத்தை நம்பி வாழும் கேசவன்  ( ரமேஷ் ) , வேலைக்கும் போவதையே வெறுக்கும்  பகலவன்
( சின்ஹா ) இந்த மூவருடனும்  அமெச்சூர் கிட் னாப்காரன் தாஸ்  ( விஜய் சேதுபதி ) என நால்வரும் நட்பாகிறார்கள் . நேர்மையான நிதி அமைச்சர் ஞான உதயத்தின் ( எம்.எஸ்.பாஸ்கர் ) மகன் அருமைபிரகாசத்தை ( கருணா ) கடத்தும் அசைன்மெண்ட் இவர்களுக்கு வருகிறது . அதில் வெற்றி பெற்றார்களா என்பதை வயிறு குலுங்க சொல்லியிருக்கிறார்கள் ...


ஒரு பெண்ணை ஒழுங்காக கடத்த தெரியாமல் அடி வாங்கும் முதல் சீனிலேயே தன் கேரக்டரை விளங்க வைத்து விடுகிறார் விஜய் சேதுபதி . பெரும்புள்ளிகளின் பிள்ளைகளை கடத்தாமல் பேங்க் மேனேஜர் பெண்ணை கடத்தி நாற்பைந்தாயிரம் வாங்கி அந்த பெண்ணிற்கே டிப்ஸ் கொடுக்கும் இடம் க்ளாஸ் . புதியவர்களுக்கு ஐந்து ரூல்ஸ் சொல்லி பாடம் எடுக்கும் இடம் புதுமை ...

நயன்தாராவுக்கு கோவில்  கட்டியதற்காக ஊர் மக்களிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டு சென்னைக்கு வந்து ஐக்கிய்மாகும் ஆரம்ப சீனில்  இருந்து ரொமான்ஸாக  நடிக்கத் தெரியாமல் ஆரூர்தாசிடம் அடி வாங்கும் கடைசி சீன் வரை சின்ன சின்ன வசனங்களாலும் , முக பாவங்களாலும் நம்மை அசத்தும் சின்ஹா ஒரு சர்ப்ரைஸ் பேக்கேஜ் . அலாரம் வைத்து சரக்கடிக்கும் ரமேஸ் , ஒரு வார்த்தை கூட பேசாமல் டெர்ரர் கொடுக்கும் போலீஸ் ரஞ்சித் , அப்பாவிடம் பணம் பறிக்க தன்னைத்தானே கடத்திக் கொள்ளும் கருணா , அமைச்சராக எம்.எஸ்.பாஸ்கர் என படத்தில் எல்லோருமே அசத்தியிருக்கிறார்கள் ...

சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை , தினேஷின் ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கு பக்க பலம் . " மாமா டவுசர் " , " காசு " பாடல்கள் இரண்டும் தாளம் போட வைக்கின்றன . பெரிய ஹீரோவோ , மிரட்டும் கதையோ இல்லாமல் ஒரு சாதாரண லைனை விறுவிறுப்பான திரைக்கதையால் உன்னிப்பாக கவனிக்க வைத்ததில் தன் முதல் படத்திலே தனி முத்திரை பதித்திருக்கிறார் இயக்குனர் நலன் குமரசாமி ...


சிகரட்டை விட்டுவிட்டேன் என்று சொல்லி விட்டு அப்பா பணம் தரவில்லை என்று சொன்னவுடன் சிகரெட் அடிப்பேன் என்று அம்மாவிடம்  சொல்லும் கருணா , எம்.எஸ்.பாஸ்கரிடம் அடிக்கு பயந்தது போல ரூமுக்கு சென்று விட்டு  டிபன் சாப்பிடும் அம்மா , கடத்திய பெண்ணின் அப்பாவை செல்போனில் டீப் பரீத் எடுக்க சொல்லும் விஜய் சேதுபதி , ஊரே அல்லோகலப்பட்டாலும் டாஸ்மாக்கை மூடி விடுவானே  என்று பதட்டப்படும் சின்ஹா  இப்படிப்பட்ட கேரக்டர்களை வைத்து நம் மனதை கவ்வுகிறார் இயக்குனர் ...

தேவையில்லாமல் விஜய் சேதுபதியுடன் வரும் ஹலுசினெஷன் பெண் கேரக்டர் , எக்ஸ்ட்ரா பில்ட் அப்புடன் வரும் போலீஸ் ரஞ்சித் , முதல் பாதியில்  காமெடியுடன் வேகமாக செல்லும் படத்தில் இரண்டாம் பாதிக்கு மேல் வரும்  சிறிய தொய்வு  இப்படி சில குறைபாடுகள் படத்தில் இருந்தாலும் இதை எதையுமே யோசிக்க விடாமல் நம்மை கட்டிப்போடும் திரைக்கதையால் ,  கார்த்தியை வைத்து எடுக்கும் மொக்கைப்படங்களுக்கு பிராயச்சித்தம் போல  ஞானவேல்ராஜா வெளியிட்டிருக்கும் இந்த சூது கவ்வும் வெல்லும் ...

ஸ்கோர் கார்ட் : 45


அசல் நாயகன் அஜித் ...


             
                                  
      மராவதியில் அறிமுகம் ஆகி ஆசைக்கு பிறகு இளம் பெண்கள் மனதில் ஆசை நாயகனாக உருமாறி காதல் கோட்டையில் தன் வெற்றிக் கொடியை  நட்டு , வாலிக்கு பிறகு தனக்கென தனி வழியை ஏற்படுத்திக் கொண்டு தமிழ் திரையுலகை அமர்க்களப்படுத்தி வருபவர்  அஜித் . இவரின் மங்காத்தா ஆட்டத்தை இன்னும் ரசிகர்கள் மறக்கவில்லை...
                                                        
       உழைப்பாளர் தின மன்று தன் பிறந்த நாள் காணும் அஜித் பற்றிய பதிவு பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறேன் .  ஏனெனில் அஜித் சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் தன் சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர் எனபதோடல்லாமல் திரை உலகிற்கு வந்து 20 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் 50 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்து தன் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்  ....

        சிவாஜி, கமல் , விக்ரம் என மிக சிறந்த நடிகர்கள் வரிசையில் அஜித்
இல்லையென்றாலும் எல்லா தரப்பிலும் இவருக்குள்ள ரசிகர்களால் இவர்
படங்களுக்கு கிடைக்கும் முதல் வாரத்திற்கான வசூலையும்,வரவேற்பையும் யாரும் மறுக்க முடியாது . அதனால் தான் தோல்வி படங்கள் அதிகம் கொடுத்திருந்தும் வர்த்தக ரீதியாக இவர் படங்களை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் விரும்புகிறார்கள் ...


         அஜித்தின் கடந்த பதினெட்டு   வருட கால வளர்ச்சியை உற்று நோக்கினால் அதில் நிறைய ஏற்றத்  தாழ்வுகள் இருப்பதை காணலாம் . 
முதல் படம் அமராவதி  தோல்விப் படம் . மூன்றாவது படமான ஆசை பெரிய வெற்றியை பெற்ற போதும் அதை தொடர்ந்து ஒரே வருடத்தில் உல்லாசம் , ராசி உட்பட ஐந்து தோல்வி படங்கள் . வேறு யாராவதாக இருந்திருந்தால் இவ்வளவு வருடம் நடித்திருப்பார்களா என்பது  சந்தேகமே ...
                                          
        ஆரம்ப காலங்களில் அஜித் பத்திரிக்கையாளர்களிடம் அதிகமாக கோபப்படுகிறார்  என்ற சர்ச்சையும் இருந்தது. இவர் எடுத்த சில முடிவுகளும் தவறாகவே இருந்தன..திரை உலகில் இவரை வழி  நடத்த  காட் பாதர்  யாரும் இல்லாததும் காரணமாக இருக்கலாம் . ஆனால் இன்றைய கால கட்டத்தில் சிம்பு , ஜெய் போன்ற சம கால நடிகர்களே இவரை  காட் பாதர் என்று சொல்வது தமிழ் சினிமா வரலாற்றில் அஜித்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வார்த்தைகள் ...

          சிவாஜி , ரஜினி , கமல் வரிசையில் அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட வேடங்களில் நடித்த பெருமையும் அஜித்திற்கு உண்டு . அதில் வாலி , வரலாறு , வில்லன் , பில்லா உட்பட பெரும்பாலான படங்கள் வெற்றிபடங்களே என்பதும் குறிப்பிடத்தக்கது . விஜயகாந்தை போல இவரும் நிறைய புது முக இயக்குனர்கள் படங்களில் நடித்திருக்கிறார் . அதில் சரண் , எஸ்.ஜே.சூர்யா , துரை போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் . ஆனால் அஜித் கே.எஸ். ரவிக்குமார், லிங்கு சாமி  தவிர பெரிய இயக்குனர்கள் யார் படத்திலும் நடிக்காதது ஒரு குறை ...


        ஏனெனில் பாலா , அமீர் , கெளதம் மேனன் போன்ற நல்ல இயக்குனர்கள் படங்களில் நடித்திருந்தால் தன் நடிப்பு திறமையை மேலும் வளர்த்துக்  கொள்வதற்கு பெரிய வாய்ப்பாக இருந்திருக்கும் ..மேலும் புது இயக்குனர்கள் பெரும்பாலும் இமேஜ் வட்டத்தை தாண்டி யோசிக்காததாலும் , அஜித்தும் வட்டத்தை தாண்டி வெளியே வராததாலும் நிறைய தோல்வி படங்களே மிஞ்சின . ரெட் , ஜனா  போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம் . இப்பொழுது தளபதி தன்  பாணியை மாற்றி வெற்றி பெற்று வரும் நிலையில் தல யும் அதை பின்பற்றுவார் என எதிர்பார்க்கலாம் ...

       தோல்விகளுக்கு பிறகு அஜித் முகவரிஜி , கிரீடம் போன்ற படங்களில் இமேஜ்  வட்டத்தை தாண்டி நடித்திருந்தது வரவேற்ப்பை பெற்றது. விஜய் , சூர்யா போன்ற நடிகர்களை போல அஜித்தால் நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் பிரகாசிக்க முடிவதில்லை , அவர் உடல் எடையை கவனிப்பதில்லை இப்படி எவ்வளவோ குறைகள் அவரை பற்றி சொன்னாலும் அவர் தான் எங்க " தல " என்கிறார்கள் ரசிகர்கள் ...                                                                
     

      தனக்கு சரியென பட்டதை சொல்லும் , செய்யும் தைரியம் அஜித்திற்கு உண்டு . விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் ,எந்த ஒரு சினிமா சம்பத்தப்பட்ட விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டேன்,பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன் ( பிற்காலத்தில் இதை தளர்த்தி கொண்டார் )   என்று அவர் சொன்ன வார்த்தைகளில் முடிந்த அளவு எந்த ஒரு சமாதானமும் செய்து கொள்ளாதது அவர் தனித்துவம் ...

       முதல்வர் உட்பட அனைவரும் அமர்ந்திருந்த  மேடையில் தன்னை வலுக்கட்டாயமாக வர சொன்னார்கள் என்று  அஜித் தைரியமாக சொன்னதும் , அதற்கு ரஜினி எழுந்து நின்று கை தட்டியதும் யாவரும் அறிந்த உண்மை . விஸ்வரூபம் பிரச்சனையின் போது கூட ஒரு குடிமகனாக குரல் கொடுத்தவர் அஜித் . அரசியல் லாபங்களுக்காக தன் ரசிகர் மன்றங்கள் உபயோகப்படுத்தப்படுவதை  உணர்ந்த அஜித் ரசிகர் மன்றங்களையே கலைக்க சொன்னதும் அவரின் தைரியத்திற்கு மற்றுமொரு சான்று ...

       புகழின் உச்சியில் இருந்த போதே சினிமா தவிர ரேசிங் போன்ற தனக்கு 
பிடித்த விசயங்களில் கலந்து கொள்ளும் துணிவும் இவருக்கு இருக்கிறது .             நடிப்பு திறமையால் பெரிதாக ஈர்க்காவிட்டாலும் தன் முயற்சி, உழைப்பு , துணிவு மற்றும் போலித்தனமில்லாத இயல்பு இவற்றின் மூலம் அசல்  நாயகனாகவே நம் கண் முன் தெரிகிறார்  அஜித் ...

- மீள்பதிவு


 
   

Related Posts Plugin for WordPress, Blogger...