25 December 2019

அவன் - அவன் - நிலா ( 14 ) ...


கார்த்திக் சுந்தரியை பற்றிய யோசனையில் இருந்ததால் இரண்டு தம்மோடு நிறுத்திக்கொண்டான் இல்லையேல் அந்த அரைமணி நேர நடையில் குறைந்தது நான்காவது கரைந்திருக்கும் . அவன் மனதை புரிந்து கொண்டு அவள் புகை பிடிப்பதை முழுவதுமாக நிறுத்த சொல்லாமல் குறைத்துக்கொள்ள சொன்னது அவனுக்கு பிடித்திருந்தது . அது போல செய்ய ஆரம்பித்தது அவனுக்கு பலனளித்தது .  காதலையும் அது போலவே  தடாலடியாக நிறுத்தினால் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது . மூளைக்குள் உட்கார்ந்து யாரோ சம்மட்டியால் அடிப்பது போல ஒரு வேதனையை கொடுக்கிறது . சில சமயம் சண்டை முற்றிப்போய் சுந்தரியிடம் " சரி தான் போடி , நீயில்லேன்னா எனக்கு வேற ஆள் இல்லையா " என்று கத்திக்கொண்டு வந்திருக்கிறான் . ஆனால் உண்மையிலேயே அவனுக்கு அவளை விட்டால் வேறு யாரும் இல்லை என்பது அந்த பிரிவில் தான் புரிந்தது . மனதை மாற்ற அப்படியே வேறு யாருடன் பழகினாலும் அவர்கள் உடலில் அவள் முகமே பொதிந்து நின்றது . இப்போது அவள் எப்படி பேசியிருப்பாள் , சிரித்திருப்பாள் என்று அவள் பிம்பமே அவனை ஆக்கிரமித்தது .  நார்மலாக அவன் மனதை ஓரளவு ஆக்ரமித்திருந்தவள் பிரிவின் போது மொத்தமாக ஆட்சி செய்தாள் என்றே சொல்லலாம் ...

மெயின் ரோட்டுக்கு வந்தவுடன் டாப்பை ஒரு பார்வை பார்த்தவனுக்கு அங்கே யாரும் இல்லாதது ஆச்சர்யமாக இருந்தது . என்ன நாம ஊர்ல இல்லாத நேரமா பார்த்து எல்லா பசங்களும் திருந்திட்டாய்ங்களா ? என்று யோசித்துக்கொண்டே தெருவுக்குள் இறங்கினான் . இந்த நிசப்தம் அவனுக்கு எதையோ உணர்த்தியது . அந்த தெருவை இப்படியெல்லாம் அமைதியாக இருந்து அவன் பார்த்ததேயில்லை . என்ன நடந்திருக்கும் என்பதை சிலோன் ரேடியோவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என யூகித்தான் . நாட்டு  நடப்புகளை உண்மையான சிலோன் ரேடியோ சொல்லும் என்றால் அவன் தெருக்கோடியில் மளிகை கடை வைத்திருந்த இலங்கை அகதி ஏரியா செய்திகளை அப்படியே புட்டு புட்டு வைப்பார் . கார்த்திக் நேராக அவர் கடைக்கு சென்றான் . 45 வயதில் முன் தலை முழுவதும் சொட்டை விழுந்தாலும் ஆள் பார்க்க கம்பீரமாக இருப்பார் . உண்மையிலேயே ஆள் செய்தி வாசிக்கப் போகலாமென சொல்லும் அளவிற்கு நல்ல குரல்வளம் ...

கடையில் தக்காளி வாங்கிக்கொண்டிருந்த பெண் போகும் வரை அமைதியாக இருந்த கார்த்திக் " என்னண்ணே  ஆச்சு ? பசங்க ஒருத்தனையும் காணோம் " என்று கேட்டான் .  இவனுக்கு பதில் சொல்வதற்காகவே அந்த கடையில்  காத்திருந்தவர் போல " என்ன தம்பி உனக்கு விஷயமே தெரியாதா ? ரமேஷோட அண்ணனை யாரோ வெட்டிட்டாங்களாம் , ஆள் குத்துயிரும் கொலையுயிருமா ஜி.ஹெச் ல கெடக்காரு , பயலுகல்லாம் அங்க தான் போயிருக்காங்க " , அவர் சொன்ன மாத்திரத்திலேயே அவனுக்கு தொண்டை அடைத்தது . சில மாதங்களுக்கு முன்னாள் தான் அவரது கம்பீரத்தை அருகில் இருந்து பார்த்தான் . கத்தியை எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்பார்கள் , ஆனால் அவன் இவ்வளவு சீக்கிரம் அது நடக்கும் என எதிர்பார்த்திருக்கவில்லை . ரமேஷ்  பற்றி யோசிக்கவே அவனுக்கு அச்சமாக இருந்தது . அண்ணன் சில வருடங்களில் அரசியலில் மிகப்பெரிய ஆளாக வந்துவிடுவார் அதன் பிறகு நம் ராஜ்ஜியம் தான் என்று கனவு கண்டு கொண்டிருந்தான் ...

ஒரு முறை ரமேஷ் வீட்டு  மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த போது திடீரென உதயமான அண்ணன் மிக குஷியில் இருந்தார் . அவர் நடையிலேயே சரக்கடித்திருக்கிறார் என்பது தெரிந்தது .
" என்ன தம்பி ரமேஷுக்கு படிப்பு சொல்லித்தருவன்னு  பார்த்தா சினிமாக்கதை பேசிக்கிட்டு இருக்க ?! " அவர் கேட்பதிலேயே அவனை சும்மா காலை வாருகிறார் என்பது புரிந்தது . " அண்ணே அவன் பெரிய டைரக்டரா வரப்போறான்னே , கதையை கேட்டா மிரண்டுருவ " . ரமேஷ் உடனே புகுந்து அண்ணனுக்கு சீரியசாக விளக்கிக்கொண்டிருந்தான் . " அப்படியென்னடா மிரட்டுற  மாதிரி கதை , பேய்க்கதையா ?" அவர் சிரித்துக்கொண்டே கேட்டார் .
" இல்லேண்ணே , ஒரு சாதாரணமான ஆள் ஒரு பிரச்சனையால் ரவுடியாகி அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மேல வந்து கடைசியா ஸ்டேட்டோட சி.எம் ஆகுற கதை " . கார்த்திக் சொன்னவுடனே அவனை கொஞ்ச நேரம் பார்த்தவர் ,
" தம்பி அதெல்லாம் சினிமாவுல தான் நடக்கும் , நிஜத்துல கொஞ்சம் மேல வரதுக்குள்ள  குத்திப்போட்டு போய்டுவானுங்க " என்றார் . அவர் சொன்ன யதார்த்தத்தை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை ...

" அண்ணே சும்மா உளராத " என்று ரமேஷ் அவரிடம் கோபப்பட்டான் .
" நெருப்புன்னா சுடுமாடா , ஆனா தம்பி சொல்ற மாதிரி நடக்குறதெல்லாம் நூத்துல ஒன்னு , ரொம்ப சிலர் தான் அமைச்சரால்லாம் கூட ஆகியிருக்காங்க".  " நாம இங்க சொல்றது எதுவுமே எங்கோ ஒரு இடத்துல நடந்தது தான் , இல்ல நடக்கப்போறது தான் " .
கார்த்திக் தீர்க்கமாக சொன்னதை அவர் ஆச்சர்யமாக பார்த்தார் .
" நல்லா பேசுறாண்டா " என்று தம்பியிடம் அவனுக்காக சர்டிஃபிகேட் கொடுத்தார் . " சரி அப்படி என்னதான் கத வச்சுருக்க சொல்லு கேட்போம் " என்று சொல்லிக்கொண்டே மாணிட்ச்சந்தை பிரித்து வாயில் போட்டுக்கொண்டார் . அவன் கதையை சுருக்கமாகவும் , முக்கியமான சீன்களை மட்டும் விலாவாரியாவாகவும் விவரித்தான் . " டே என்னடா , நம்ம சுடுகாட்டு மேட்டர் , பஸ் சண்டைல்லாம் வச்சுருக்க " . " ஆமாண்ணே சினிமாவோ , நாவலோ நடந்ததோட தொகுப்பு தானே ,  மானே , தேனே போடுற மாதிரி நம்ம கற்பனைய சேத்துக்கணும் " .  இதுவரை நண்பர்களிடம் மட்டும் சொல்லிக்கொண்டிருந்த கதையை இப்போது தான் அண்ணாந்து பார்க்கும் ஒருவரிடம் அதுவும் இந்த கதைக்கான சீன்களை யாரை உற்று நோக்கி எடுத்துக்கொண்டானோ அவரிடமே சொல்வது அவனுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது ...

" அதென்னமோ தெரில ஆனா நேர்ல பார்த்ததை விட நீ சொல்றது சுவாரசியமா இருக்கு , அதுவும் இண்டெர்வெல் பிளாக் சூப்பர் " , அவன் ஆடியன்ஸிடம் எதை எதிர்பார்த்தானோ அதை சரியாக சொன்னார் . அவன் வைத்த சீன்களின் ஒரிஜினல் சம்பவங்கள் தெரிந்த அவருக்கே இது பிடிக்கும் போது புதுசாக பார்ப்பவர்களுக்கு அதிகம் பிடிக்கும் என்று அவன் யூகித்தான்.
" இத படமா எடுக்க என்ன ஒரு அஞ்சு லட்சம் ஆகுமா ?" அவர் அப்பாவியாக கேட்க அவன் சிரித்துக்கொண்டே " இல்லேண்ணே மினிமம் அம்பது லட்சம் ஆகும் , அதுவும் பெரிய ஹீரோவா போடாம இருந்தா " . அவன் சொன்னதைக் கேட்டு அவர் வாயடைத்துப்போனார் . " என்னப்பா சொல்ற பெரிய ஹீரோ இல்லாமயே அவ்ளோ ஆகுமா ?" . " ஆமாண்ணே புதுசா சங்கர் னு ஒரு டைரக்டர் வந்து சினிமாவோட டைமென்ஷனையே மாத்திட்டார் " .
" ஒரு பாட்டுக்கே நூறு மும்பைக்காரிகளை ஆட விடுவாரே அவர் தானே ?,
ஆனா அவர் படமெல்லாம் செம்மப்பா , இந்தியன நானே நாலு தடவ பாத்துட்டேன் " . சினிமாவுக்கு  சாமான்யனிலிருந்து ராஜா வரை யாரையும் கட்டிப்போடும்  மகிமை இருக்கிறது என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
யாரிடமும் அவ்வளவாக பேசிக்கொள்ளாதவர் சினிமாவை பற்றி அவனிடம் அளவளாவிக்கொண்டிருந்தார் ...

" அம்பது லட்சம் என்ன , அஞ்சு கோடி கொடுக்குற ஆளுங்கள கூட நமக்கு தெரியும் " . அவர் சொன்ன போது அவனுக்கே கேட்க ஆசையாக  இருந்தது .
" என்ன தம்பி சும்மா புருடா விடுறேன்னு பாக்குறியா " , அவர் கேட்டவுடன்
" சே , சே இல்லேண்ணே ஆச்சர்யமா பார்த்தேன் " . அவர் மெதுவாக சென்று அங்கே இருக்கும் வாஷ்பேஷனில் எச்சில் துப்பி விட்டு வந்தார் .
" சீரியஸா சொல்றேன் கேட்டுக்க , நம்ம பரமு அண்ணன் கிட்ட இல்லாத பணம் இல்ல , என்ன போன எலக்சன்ல நெறைய பணத்தை விட்டுட்டாரு , ஜெயிச்சிருந்தா கதை வேற " . அவர் பரமு அண்ணனுக்கு எவ்வளவு க்ளோஸ் என்பது ஊருக்கே தெரியும் . " ஒன்னும் பிரச்சனை இல்ல , இன்னும் ஆறு மாசத்துல விட்டத எடுத்துருவாப்புல , நான் உன்ன அங்க கூட்டிட்டு போறேன்".
அவன் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்து அவர் பேசியது அவனுக்கு பெருமையாக இருந்தது . " இப்போ நீ சொன்னதெல்லாம் அப்படியே படமா எடுத்துடுவியா " அவர் கேட்கும் போது பயமும் கூட வந்தது  .
" இல்லேண்ணே நான் முதல்ல  அசிஸ்டன்டா ஒர்க் பண்ணனும் , அதுக்கப்புறமா தைரியமா எடுக்கலாம் " . " ஏன்பா இந்த நாயகன் படம் எடுத்தாரே அவர் பேரென்ன ?" , ரமேஷ் உடனே " மணிரத்னம் " என்று சொல்லி தனக்கும் சினிமா தெரியும் என்பது போல பார்த்தான் . " ம் , அவர்லாம் யார்ட்டயும் ஒர்க் பண்ணலன்னு சொல்றாங்க ?! " . 
" உண்மை தாண்ணே  , ஆனா அவர் ஃபாரீன்ல போய்  கோர்ஸ் படிச்சாரு ப்ளஸ் அவருக்கு ஃபேமிலி பேக்கப் நல்லா இருந்தது ,
அதோட அவர் செம்ம டேலெண்டெட்  " என்று அவனுக்கு தெரிந்ததை வரிசையாக  சொன்னான் ....

" இருக்கலாம் , ஆனா அவர் மேல நம்பிக்கை வச்சு பணம் போட்டாங்கள்ள அதான் மேட்டர் " . ஆமாம் அவர் சொல்வது உண்மை தான் , இங்கே திறமை இருப்பவர்கள் அனைவருக்கும்  வாய்ப்பு கிடைப்பதில்லை , வாய்ப்பு கிடைத்த அனைவரும் வெற்றி பெறுவதில்லை , வெற்றி பெற்ற  அனைவரும் அதை தக்க வைத்துக்கொள்வதில்லை . சினிமா என்றுமே ஒரு மாய உலகம் .
" தம்பி நீ கதையை ரெடி பண்ணிக்கோ , அப்படியே யார்ட்டயாவது ஒர்க் பண்ணிக்கோ , உன்ன அவர்கிட்ட போய் உக்கார வைக்க வேண்டியது என் பொறுப்பு " அவர் பேச்சு அவனுக்கு உற்சாக டானிக் போல இருந்தது .
கதையை மேலும்  மெருகேற்ற வேண்டுமென நினைத்துக்கொண்டான் . லைப்ரரிக்கு போய் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் . ஒரு நெடு பயணம் போக வேண்டும் , அப்பொழுத் தான் நிறைய புது மனிதர்களை , சம்பவங்களை பார்க்க முடியும் . " சரி தம்பி , நீ சினிமா கதையை ரெடி பண்றதோட சேர்த்து இவனையும் பாஸ் பண்ண வச்சுடு " . என்று ரமேஷை பார்த்து கை  நீட்டி சொல்லிக்கொண்டே அவர் மொட்டை மாடியில் அவருக்கென பிரத்யேகமாக இருக்கும் ரூமுக்கு போனார் ...

சமீபத்தில் ரமேஷை பார்த்த போது  கூட அவன் அண்ணன் கார்திக்கையும் , அவன் கதையை பற்றியும் விசாரித்ததாக சொன்னான் . அதுவும் அவர் யாரைப்பற்றியும் அவ்வளவு மெனெக்கெட்டு விசாரித்ததில்லை , கடந்த முறை பரமு அண்ணன் வந்த போது கூட அவன் மேட்டரை காதில் போட்டு வைத்திருப்பதாகவும் சொன்னது அடுத்த ஒரு வருடத்துக்குள் ஆட் ஏஜென்சி அனுபவத்தை வைத்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட வேண்டுமென திட்டமிட்டிருந்தான் .  ஆனால் எல்லாமே ஒரு நொடியில் தகர்ந்து விடுகிறது .
அவர் தீர்க்கதரிசனமாக அன்றே  சொன்னது அவன்  நினைவுக்கு வந்தது .
சில நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்திருந்தவன் வீட்டுக்கு போய் யமஹா சாவியை எடுத்துக்கொண்டு கிளம்ப ரெடியானான் . " வந்ததும் வராததுமா எங்கடா போற " என்று கேட்க எத்தனித்த அம்மா அவன் கத்தலுக்கு  பயந்து பேசாமல் இருந்தாள்  . " என்னடி பேசாம நின்னுட்ட , துரை எங்க போகப்போறாரு , முக்குல தோஸ்துங்க கூட நின்னு தம்மை ஊத்தப்போறாரு "
அவன் அப்பா குரல் கேட்டதும் அவரை பார்த்து ஒரு முறை முறைத்து விட்டு அந்த கோபத்தை வண்டியின் கிக் ஸ்டார்ட்டில் காண்பித்தான் ...

மெயின் ரோட்டுக்கு வந்த போதே கும்பல் கும்பலாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள் . இவனை பார்த்து கூட சிலர் முணுமுணுப்பது போலவே அவனுக்கு இருந்தது . வண்டியை ஒரு பெட்டிக்கடையில் ஓரங்கட்டி ஹாஃப் பாக்கெட் கோல்ட் பிளேக் ஃபில்டர் வாங்கிக்கொண்டான் . அதில் ஒன்றை எடுத்து  பற்ற வைப்பதற்குள்ளே  மொக்கை அவனை நோக்கி வேகமாக வருவது தெரிந்தது . கார்த்திக்கிடம் நெருப்பை வாங்கி ஒரு சிசர்ஸை பற்ற வைத்த மொக்கை " மாப்பிள உன்ன பாக்க தான் வேகமா வந்துக்கிட்டு இருக்கேன் " என்றான் . அண்ணன் குத்துப்பட்டதாய் சொல்ல தான் வந்திருக்கான் என்பது புரிந்தது . " ம் சிலோன் அண்ணன்  சொன்னாரு , ஜி.ஹெச் சுக்கு தான் கெளம்பிக்கிட்டு இருக்கேன் " . கார்த்திக் சொன்னதை கேட்டு வெறுமையாக பார்த்த மொக்கை " இல்ல மாப்பிள்ளை ஜிஹெச் போகத் தேவையில்லை " என்றான் . " என்னடா ஆச்சு  ?"
" இல்ல  மாப்பிள்ளை டாக்டர்ஸாலயும் காப்பாத்த முடில , அவ்வளோ வெட்டு உடம்பு ஃபுல்லா , அண்ணன் செத்துட்டாரு " . அவன் சொன்னதை கேட்டவுடன் கார்த்திக்கின் வாயிலிருந்த சிகெரெட் தவறி கீழே விழுந்தது .
" நாம அவர் வீட்டுக்கே போய்டலாம் , பாடிய கொண்டு வந்துடுவாங்க"
அவனை போன்றவர்களுக்கு ஒரு ஆளுமையாக இருந்த ஒரு மனிதன் இறந்த சில நிமிடங்களிலேயே அஃறிணையாக மாறியது அவனுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது . அடுத்தடுத்து விதி விகாரமாக தனது கோரைப்பற்களை அவனுக்காக காட்ட காத்துக்கொண்டிருந்தது ...

தொடரும் ...









14 December 2019

அவன் - அவள் - நிலா (13) ...


மாட்டுத்தாவணிக்கு இரவு ஏழரை மணி போல வந்து சேர்ந்தான் கார்த்திக். சுரேஷ் தங்கைக்காக செய்த அடிதடிக்கு பிறகு அவன் வேறெந்த வம்பு தும்புக்கும் போகவில்லை . அதன் பிறகு சுந்தரியின் அண்ணனோடு திருச்சியில் நடந்த சண்டை  தான் . எல்லாமே எதிர்பாராத நேரத்தில் நடந்து முடிந்து விட்டது . கோபம் தலைக்கேறினால் அவனால் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை . பள்ளிக்காலத்திலேயே அவனை ஏற்றி விட்டு தங்களின் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்பவர்கள் உண்டு . அதெல்லாம் அவனுக்கு போகப்போக தான்  புரிய ஆரம்பித்தது . யார் யாருக்காகவோ சண்டை போட்டவன் தனக்கென்று வரும் போது சும்மா இருக்க முடியவில்லை . சுந்தரியின் முகத்துக்காகவாவது  பொறுத்திருக்கலாம் . அது கூட முடியாமல் போனது அவனுக்கு வருத்தம் தான் . அவனுடைய ஆக்சன் பிரதாபங்களை சுந்தரியிடம் சொல்லும் போது அவள் மர்ரு தங்கை போல ஆவலோடு வாய் பிளந்து கொண்டு  கேட்பதில்லை . தங்கை  கேட்கிறாள் என்பதற்காகவே மர்ரு ரெண்டு மூணு பிட்டை  எக்ஸ்டராவாக எடுத்து விடுவான் . உடனே அவள் " அப்படியான்னா அவன் பாஞ்சு பாஞ்சா அடிச்சானா  ?" என்று கார்த்திக்கிடம் அப்பாவியாக கேட்பாள் . அவனுக்காக கார்த்திக்கும் ஆமாம் போட்டு வைப்பான் ...

அதே சண்டையை சுந்தரியிடம் சொன்ன போது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்து  விட்டு " என்ன உனக்கு பெரிய ஹீரோன்னு நினைப்பா?" என்று சர்வ சாதாரணமாக கேட்டு அந்த பிம்பத்தை உடைத்தெறிவாள்.  " நம்ம வாழ்க்கை என்ன ரெண்டரை மணி நேர சினிமான்னு நினைச்சியா ?அதுல போலீஸ் கடைசியில தான் வருவாங்க , ஆனா நிஜத்துல முதல்லயே வந்து தூக்கிட்டு போய்டுவாங்க ! . அவனுக்கு புரியும் பாஷையில் பேசினாள். அவனுக்கு முதலில் கோபம் தான் வந்தது .
" அதுக்காக என்ன பயந்து பயந்து பொட்டை மாதிரி வாழ சொல்றியா ? " .  
" ஓ அப்போ நீ வாழற வாழ்க்கைக்கு பெரியார் பஸ் ஸ்டாண்ட்ல சிலை வப்பாங்களா ? ".  " உன்ன உங்கப்பன் ஆடிட்டராக்குறதுக்கு பதிலா வக்கீலாக்கலாம் , வாய் வத்தலகுண்டு வரைக்கும் நீளுது ! " .  அவனிடம் உள்ள பிரச்சனை அது தான் . அவள் தன்னுடைய நல்லதுக்காக தான்  சொல்கிறாள் என்பதை முழுதாக புரிந்து கொள்ளாமல் அவள் பதிலுக்கு பதில் பேசுகிற விதத்தில் கடுப்பாகி அந்த ஆர்க்யூமென்ட்டில் வின் பண்ண வேண்டுமென்கிற வெறியில் கத்துவான் ...

ஒரு கட்டத்துக்கு மேல் அவனோடு போராட முடியாமல் அவளுக்கு அழுகை வந்து விடும் . இவன் ஏன் இப்படியிருக்கிறான் என்று ஆத்திரம் வரும் . எக்கேடு கெட்டோ போகிறான் நாம் ஏன் நம் தரத்தை இறக்கிக்கொள்ள வேண்டும் என்கிற நினைப்பு வரும் . சத்தியமாக இரண்டு பேர் எண்ணங்களுக்கும்  செட்டே ஆகாது என்றே தோன்றும் . அந்த நிமிடம் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு விட்டு " சரிதான் போடா " என்று கத்தி விட்டு போய்விடலாம் போல இருக்கும். ஆனால் அவை எதையும் செய்ய விடாமல் ஏதோ ஒன்று தடுக்கும் . அதற்கு பெயர் தான் காதலா ?!.  " ஓகே உன் இஷ்டத்துக்கு நீ இரு , என்ன வேணா பண்ணு , நான் யாரு இதெல்லாம் கேக்க ? ஆஃப்டர்ஆல் பொண்ணு தானே? 
நான் சொல்லி கேட்டுட்டா உங்க கீரிடம் இறங்கிடுமே ! " . அவள் அழுகையோடு பேசி விட்டு அங்கிருந்து கிளம்புவாள் . அவனுக்கு அவள் போகிறாள் என்றவுடனே தான் புத்தி வரும் . " இல்லடி சாரி , ஏதோ ஒரு இதுல பேசிட்டேன் , நீ பதிலுக்கு பதில் பேசினியா அதான் டென்சன் ஆயிட்டேன்". 
" அப்போ நான் எதுவுமே பேசக்கூடாது , நீ சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டனும் " ...

அவன் அப்படியெல்லாம் நினைக்கிற ஆள் இல்லை ஆனாலும் அவன் ஆழ் மனதுக்குள் ஆணை விட பெண் மட்டம் அல்லது ஆணுக்கு பெண் அடங்கி தானிருக்க வேண்டும் என்கிற எண்ணம் படிந்திருக்கிறது . அது அவன் அப்பாவை பார்த்தோ அல்லது மற்ற ஆண்களின் அடக்கு முறையை பார்த்தோ அவனுக்குள் வேரூன்றியிருக்கலாம் . எதிரில் இருக்கும் பெண்ணிற்கு இதையெல்லாம் உற்று நோக்க முடியாது . அவள் யார் தனக்கு நெருக்கம் என்று நினைக்கிறாளோ அவனே அப்படி பேசுவது இதயத்தை நொறுக்குகிறது . ஆனால் அது தான் நிதர்சனம் . யாரை நாம் அதிகம் நேசிக்கிறோமோ அவர்களால் மட்டுமே நம்மை அதிகமாக காயப்படுத்த முடியும் . அவன் கைகளை பிடித்துக்கொண்டு " ப்ளீஸ் மன்னிச்சுடு " என்று . கெஞ்சலானான் . அது தான் அவனின் வினோத குணம் . என்ன தான் கோபம் இருந்தாலும் அவள் அழ ஆரம்பித்தால்  அவனால் தாங்க முடியாது . பெண் அழுதால் பேயும் இறங்கும் என்பார்கள் அவன் மனிதன் தானே ! ...

" இந்தோ  பாரு நான் சும்மா ஜாலியா சுத்திட்டு போக உன்ன லவ் பண்ணல , 
நாம நல்லா இருக்கணும்னா கண்டிப்பா கேள்வி கேப்பேன் " .
அவன் " ம் " என்றான் . " ஏற்கனவே உன் சினிமா ஆசைய வீட்ல ஏத்துப்பாங்களான்னு தெரியல  , இதுல இந்த அடிதடி வேறென்னா எந்த வீட்ல ஒத்துப்பாங்க ? " . அவன் அமைதியானவுடன் அவள் சொல்வது புரிய  ஆரம்பிக்கும் . அவன் முடியை கோதிக்கொண்டே அவள் சொல்லும் போது தாய் மடிக்கு ஏங்கும் குழந்தை போலானான் . எப்பொழுதுமே இதே போல அவன் தான்  சொல்வதைக் கேட்டால் என்ன என்று அவளுக்கு தோன்றும் . 
பதிலுக்கு பதில் சண்டை போடாமல் பொறுமையாக அவனுக்கு இப்படி எடுத்து சொன்னால் என்ன என்று அவனுக்கு தோன்றும் . நாம் மற்றவர்களின் 
செய்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதை விட நாம் விரும்பும்படி அவர்கள் நடக்க வேண்டுமென்றே விரும்புகிறோம் .  எல்லாம் நாம் நினைத்தபடியே நடந்து விட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் ஏது ? இரண்டரை மணி நேர படத்திலேயே காதல் , செண்டிமெண்ட்,  ஆக்சன் , ட்விஸ்ட் என பலவற்றை எதிர்பார்க்கும் போது குறைந்தபட்சம் 60 வருட வாழ்க்கை அது அப்படியே ஒரே நேர்கோட்டில் போகுமா என்ன ?!.

மனிதனின் வினோத உணர்வுகளில் முக்கியமானது காதல் . சுஜாதா சொன்னது போல எல்லாமே இருபாலரின் உடல்நிலையில் ஏற்படும் வேதியல் கோளாறுகள் மட்டும் தான் என்று அதை ஒதுக்கி விட முடியுமா ? நிச்சயம் முடியாது . காதலில் நிச்சயம் காமம் இருக்கும் ஆனால் காமத்துக்குள் காதல் இருக்காது . அவனுக்கு தெரிந்த ஒரு பிடிசி டிரைவர் அண்ணன் ஊர் ஊராக சுற்றுவார் . அவனுடைய டீன் ஏஜ் வயதில் அவரின் ஜகதலப்பிரதாபங்களை நிறைய கேட்டிருக்கிறான் . அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை . ஏன் என்று கேட்டால் " காஃபி குடிக்க ஏண்டா வீட்லயே மாட்ட வாங்கி கட்டணும் ? 
தேவைப்படும் போது  வாங்கி குடிக்க  வேண்டியது தான " என்று சூசகமாக சொல்லி விட்டு சிரிப்பார் . தனிக்கட்டையாக இருப்பதாரீலும் , சொத்து இருப்பதாலும் அவரிடம் காசுக்கு பஞ்சமில்லை . ஃபாரீன் சரக்கு ஒரு பாட்டில் எப்பொழுதுமே அவர் வீட்டில் இருக்கும் . பணத்தில் மட்டுமல்ல  ஆள் பார்க்கவும் எம்ஜிஆர் போன்ற சிகப்பு உடல்வாகுடன் இருப்பார் . எப்பொழுதுமே அவர் மேல் ஒரு வித சென்ட் வாசனை இருந்து கொண்டே இருக்கும் ...

" ஏண்ணே  அதுக்கு காசு கொடுத்து போறீங்களே ,போரடிக்காதா ? இல்ல ஒரு  மாதிரி இருக்காதா ? . அவனிடம் எப்பொழுதமே அவர் வயது வித்தியாசம் பார்க்காமல் பழகுவதால் நேரடியாகவே கேட்டு விடுவான் . 
" நீ காலையில டிஃபன் சாப்ட்டியா ? " . " சாப்ட்டேனே பொங்கல் கொஸ்து".
" அது ஹெவியா இருக்குமே அப்போ மத்தியானம் சாப்பிட மாட்டியா ?" .
" போங்கண்ணே இப்போ போய் ரெண்டு மேட்ச் ஆடி முடிச்சாலே பசி ஆரம்பிச்சுடும் " . அவர் பிளாக் சிகரட்டை எடுத்து பற்ற வைத்துக்கொண்டே பேச ஆரம்பித்தார் . " அதே மாதிரி தான் தம்பி இந்த உடம்புக்கும்  அடிக்கடி பசிக்கும் . பொங்கல் , இட்லி , தோசை , சோறுன்னு மாறி  மாறி  சாப்பிடுற மாதிரி உடம்புக்கும் அத்தினி ,  சித்தினின்னு எல்லாமே  விதவிதமா தேவை ".
அவர் சொல்லும்போதே அவனுக்கு போதையாக இருந்தது . ஆனால் என்ன தான் இருந்தாலும்  அதுக்கு காசு கொடுப்பதில் அவனுக்கு உடன்பாடே இல்லை . அது ஏதோ கடமைக்கு செயற்கையாக நடப்பது போலவே அவனுக்கு பட்டது . அவன் அதையும் கேட்டவுடன் அவர் சிரித்தார் .
" பரவாயில்லையே யார்ட்டயும் போலேன்னாலும் அனுபவஸ்தன் மாதிரியே பேசுற , ஒரு வேளை அண்ணனுக்கு தெரியாம ஏதாவது தப்பு தாண்டா பண்ணிட்டியா ?! : . "என்னன்னே அதெல்லாம் ஒன்னும் இல்ல , என் மனசுக்கு பட்டுச்சு " . " நீ சொல்றது உண்மை தான் , எனக்கும் அந்த மாத்ரி எனக்கே எனக்குன்னு பிரத்தேயகமா ஒருத்தி இருந்தா " . சொல்லும் போதே அவர் கண்கள் லேசாக கலங்கின ...

அவர் எத்தனையோ பெண்களுடன் உல்லாசமாக இருந்திருந்தாலும் அவருக்கென வாழ்ந்த ஒரு பெண்ணை பற்றி பேசும் பொழுது மட்டும் ஒரு வித்தியாசம் தெரிகிறது . அதற்கு பெயர் தான் காதலா ? இது இது தான்  காதல் என்று யாராலும் ஒரு கூண்டுக்குள் அடைக்க முடியாததன் பெயர் தான் காதலா ?!.சுந்தரியுடன் எவ்வளவோ முறை சண்டை போட்டிருக்கிறான்  அந்த கருமம்  பிடித்த காதலே  வேண்டாமென்று நினைத்திருக்கிறான்.
அவளை மறந்து விட  வேண்டுமென்று நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பான் ஆனால் போதையேறியதும் நேராக திருச்சிக்கே போய்  அவளை பார்க்க வேண்டும் போல இருக்கும் . அவளிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தோன்றும் .  நண்பர்கள் அவனை டைவர்ட்  செய்ய எவ்வளவோ முயற்சி செய்து தோற்றுப்போவார்கள் . சாதாரணமாக இருக்கும் நேரத்தை  விட அதை விட்டு விலக வேண்டுமென்று நினைக்கும் போது  தான் காதல் உக்கிரமடைகிறது . என்ன எழவுடா இது ? என அவன் பலமுறை யோசித்ததுண்டு ...

சுரேஷ் மாதிரி , பாபு அண்ணன் மாதிரி பெண்களை வெறும் உடல்களாக மட்டும் நினைக்கும் போது சண்டை சச்சரவுகள் வருவதில்லை . அது முடிந்தவுடன் அவளை பற்றிய நினைப்பு இருப்பதில்லை . அவள் பேசுவதெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொண்டு குழம்ப தேவையில்லை . அவளோடு சண்டை போட்டுக்கொண்டு  பேசாத தருணங்களிலெல்லாம் ஏதோ இதய நோயாளி மாதிரி துடிக்க தேவையில்லை . பாக்காத நேரங்களிலெல்லாம் ஏதோ திருவிழாவில் காணாமல் போன சிறுவன் போல கதறிக்கொண்டிருக்க வேண்டியதில்லை . ஆனால் இத்தனை  இல்லைகளிலும் சுந்தரியை விட்டு பிரிய வேண்டுமென்கிற எண்ணம் மட்டும் அவனுக்கு இல்லவேயில்லை ...

மினி பஸ்சுக்காக சிறிது நேரம் காத்திருந்தவன் பிறகு ஒரு  சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு நடக்கலானான் . இந்த சிகெரட் , அப்புறம் சுந்தரி இரண்டையுமே மட்டும் அவனால் விடவே முடியாது என்று நினைத்துக்கொண்டான் . தன் காதலியை உடலுக்கு தீங்கு தரும் சிகரெட்டோடு ஒப்பிடுகிறோமே என அவனுக்கு யோசனை வந்தது. நல்லதோ தீங்கோ இரண்டையும் விட்டு அவனால் இருக்க முடியாது என்பதே நிதர்சனம். சிகரெட்டை  விட சொல்லி சுந்தரியே கேட்டிருக்கிறாள் . ஆனால் நல்ல வேளை நானா ? சிகரெட்டா என்று அவள் முரண்டு பிடிக்கவில்லை . அப்படி கேட்டிருந்தால் என்ன செய்திருப்பான் என்று அவனுக்கு நினைத்துப் பார்க்கவே முடியவில்லை . அவள் அப்படித்தான் நிறைய விஷயங்களில் நாசூக்காக நடந்து கொள்வாள் . அவனே முடிவெடுக்கும்படியாக ஒரு ஸ்பேஷ் கொடுப்பாள் . அதனால் அவள் குறைத்துக்கொள்ளும் படி சொன்ன பிறகு அதை கடமையாக செய்ய ஆரம்பித்தான் . ஆனால் இவையிரண்டையும்  விடவே முடியாது என்று நினைத்தானோ அதை விட்டு விட்டு ஒரு நாள் தனிமையில் நிற்கப்போகிறான் என்பது அப்போதைக்கு அவனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை ...

தொடரும் ...




7 December 2019

அவன் - அவள் - நிலா ( 12 ) ...


வன் எதிர்பார்த்ததை விட எளிதாகவே  அந்த சம்பவம் நடந்து முடிந்தது . அவனுக்கு பயந்து ஓடியவர்கள் நிச்சயம் அங்கே ஒரு கும்பல் அதுவும் அந்த ஏரியாவே அலறும் ஒரு தாதாவின் கும்பல் இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை . அது என்னமோ புலிக்கு பயந்து ஏரிக்குள் விழுந்து முதலையிடம் மாட்டிய கதை போலாகிவிட்டது  . இதெல்லாம் முன்னமே தெரிந்திருந்த கார்த்திக் சாவகாசமாக ஒரு சிகரட்டை பற்ற வைத்துக்கொண்டே அவர்களிடம் வந்தான் . எம்பிக்கொண்டு அடிக்கப்போன மர்ருவை கார்த்திக் தடுத்தான் . அந்த இடத்தில் அவர்களை அவன் ஆட்கள் அடிப்பது சரியில்லை  அது அவன் நண்பனின் அண்ணனுக்கு செய்யும் மரியாதைக்குறைவாகி விடும் . அமைதியாக இருக்க சொல்லி தனது ஆட்களுக்கு சைகை செய்தான் . சிறிது நேரத்தில் அங்கே ஒரு சலசலப்பு உருவானது . இருட்டிலிருந்து ஒரு ஒளிக்கீற்று போல அவன் நண்பனின் அண்ணன் வந்தார் ...

அவரை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறான் . முதன் முதலில் காலேஜில் கூடப்படிக்கும் பெண்ணை கிண்டல் செய்த பஸ் கண்டக்டரை தனி ஆளாக அடித்து ஓட விட்டதில் அவர் பெயர் கல்லூரி வளாகம் எங்கும் பரவியது . அதன் பின் கண்டக்டரோடு வந்த ஆட்களை கல்லூரி மாணவர்களோடு சேர்ந்து அடித்துத் துவைத்ததில் அந்த ஏரியா முழுவதும் பெயர் பிரபலமானது . அதற்கு மேல் கல்லூரி படிப்பிலெல்லாம் நாட்டம் இல்லாமல் முழு நேர அடிதடி ஆளாக அவர் மாறினார் . பிறகு எம்.எல்.ஏ வுக்காக ஒரு செய்கை செய்ததில் இருந்து காவல்துறை அவரை கண்டுகொள்ளாமல் தள்ளியே இருந்தார்கள் . அதை  பயன்படுத்தி எதிரிகளை காலி செய்து தென் மதுரை முழுவதும் பெரிய தாதாவானார் . அவரை நேரடியாக தெரியாதவர்கள் கூட அவர் பெயரை பயன்படுத்தி தங்களை பிரபலப்படுத்திக் கொண்டார்கள் . ரமேஷ் மட்டும் தான் இருப்பானென்று அவன் நினைத்திருந்தான் அண்ணன் இருப்பாரென நினைக்கவில்லை அப்படியே இருந்தாலும் இந்த சப்பை மேட்டருக்கெல்லாம் அவர் வரமாட்டாரென எண்ணியிருந்தான் ...

அவரின் அடிதடி பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருந்து  அவர் ஆறடிக்கு மேல் ஆஜானுபாகுவாக இருப்பாரென கற்பனை செய்து வைத்தவனுக்கு அவனை விட உயரம் குறைவாக ஒரு ஐந்தடி மட்டுமே இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. ஓடி வந்தவர்களின் கேங்க் லீடர் மட்டும் அவரை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால்  பயத்தில்  வெலவெலத்து போய் விட்டான் . விஷயம்  தெரியாத மற்றொருவன் தேவையில்லாமல் துள்ள இடி  இறங்குவது போல ஒரு அறை அவன் கன்னத்தில் விழுந்ததில் சுருண்டு தள்ளிப்போய் விழுந்தான் . அவரை கண்டு ஏன் எல்லோரும் பயப்படுகிறார்கள் என்று அவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது . அந்த அடியின் வீரியத்தை  அருகிலிருந்த அவனாலேயே உணர முடிந்தது .  விழுந்தவன் சுதாரித்து எழ சிறிது நேரம்  பிடித்தது . அவர் கார்த்திக்கையும் , எதிர் ஆளையும்  பார்த்து சைகையில் கூப்பிட்டார் . இருவரையும் பார்த்து கொன்று விடுவேன் என்பது போல எச்சரிக்கை செய்து விட்டு எந்த ஏரியா என்று கேட்க இருவரும் சொன்னார்கள் . " இனிமே ஒருத்தன் ஏரியாக்குள்ள ஒருத்தன் போவக்கூடாது , மீறி பார்த்தேன் கொன்னு போட்ருவேன் , போங்கடா " என்று கத்த கார்த்திக் லேசாக கடுப்பானான்  . உடனே அதை புரிந்து கொண்டவனாய் ரமேஷ் அவனை பார்த்து  கண் ஜாடை செய்ய அவனுக்கு ஓரளவு விஷயம் புரிந்தது ...

அந்த அடிக்கு பிறகு விழுந்தவனை கூட்டிக்கொண்டு அவர்கள்  சடுதியில் இடத்தை காலி செய்தார்கள் . அதன் பிறகு கார்த்திக் , ரமேஷ் இருவரின் தோள்களிலும் கை போட்டுக்கொண்ட அண்ணன் " ரமேஷ் ஒழுங்கா படிக்க மாட்டேன்றான் , நீ தான் பாத்துக்கணும் . நீயும் இதோட எல்லாத்தையும் விட்டுட்டு படிக்குற வேலைய மட்டும் பாரு " அவர் சொல்லும் போதே ரமேஷ் அவனை பற்றி நிறைய அண்ணனிடம் சொல்லியிருக்கிறான் என்பது கார்த்திக்கிற்கு புரிந்தது . " சரிண்ணே , நான் பாத்துக்கறேன் , நீங்க ஃப்ரீயா விடுங்க " என்றான் .  அதன் பிறகு அங்கிருந்து மெயின் ரோடு வரை வந்த ரமேஷை சரக்கடிக்க கூப்பிட அவன் அண்ணனுக்கு பயந்து ஆளை விடு என்று எஸ்கேப் ஆகிவிட்டான் . சுரேஷ் சமீப காலமாக அவர்கள் டாப் அடிக்கும்  இட்லிக்கடையில் பரபரப்பாக வெயிட் செய்து கொண்டிருப்பான் . லோக்கல் ஆள் அப்படியே கெளம்பி விட கார்த்திக் யமஹா 100 ஐ ஸ்டார்ட் செய்ய மற்ற இருவரும் ஸ்ப்ளெண்டரில் கிளம்ப 100 கிமி வேகத்தில் ஏரியாவை நோக்கி பறந்தார்கள் ...

நேரம் கடந்திருந்ததால் இட்லிக்கடை மூடியிருந்தது ஆனால் அதனோடு சேர்ந்திருந்த பெட்டிக்கடையும் சாத்தியிருந்தது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது . செகண்ட் ஷோ முடிந்து ஆட்கள் வந்த பிறகு தானே மூடுவார்கள்!. மற்றவர்கள் சிகரெட் அண்ட் சரக்குக்கு தேவையான சைடிஷ்கள் வாங்க புறப்பட கார்த்திக் சுந்தரியை பற்றி யோசித்து கொண்டே பின் பக்கம் நடக்கலானான் . அவள் அவனது வாழ்க்கைக்குள் வந்த பிறகு தான்  அவனுக்கு எதிர்காலத்தை பற்றிய எச்சரிக்கை உணர்வு அதிகமானது . அவள் படிப்பை பற்றி நிறைய பேசுவாள் . அவன் அவள் கை  விரல்களை இறுக்கிகொண்டே கழுத்துப்பக்கம் எதையோ தேடிக்கொண்டிருப்பான் . ஆனால் கருப்பைக்குள் இருந்த அபிமன்யு தாய் சொன்னதையெல்லாம் கேட்டது போல அவள் சொன்னதெல்லாம் அவன் மூளைக்குள் நன்றாகவே ஏறியிருந்தது . அவளால் சினிமாவை பற்றிய அவனது எண்ணத்தை மாற்ற முடியவில்லையே தவிர வாழ்க்கைக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் அதுவும் குறைந்தது டிகிரியாவது வேண்டுமென்பதை நன்றாகவே உணர்த்தியிருந்தாள் . அதனால் அவன் தேவையில்லாத அடிதடி , பஞ்சாயத்துக்களிலெல்லாம் தலையிடமாலேயே இருந்தான் . இது சுரேஷின் தங்கை விஷயம் என்பதால் அவனால் தவிர்க்க முடியவில்லை ...

பின்னால் நடந்து கொண்டிருந்தவனுக்கு காலில்  ஏதோ தட்டுப்பட குனிந்து பார்த்தால் அங்கே ஹாஃப் பாட்டில் சிறிது சரக்கோடு உருண்டு  கொண்டிருந்தது . கொஞ்சம் தொலைவில் இட்லிக்கடை கம் பெட்டிக்கடைக்காரன் வேட்டி  விலக விழுந்து கிடந்தான் . பார்த்த மாத்திரத்திலேயே போதை என்று தெரிந்தது . ஆனால் காஸ்ட்லியான சரக்கெல்லாம் அவன் அடிக்க மாட்டானே அந்த பாட்டிலை யார் வாங்கிக்கொடுத்தது என்று யோசித்துக்கொண்டே கார்த்திக் குடிசைப்பக்கம் பார்க்க அந்த விரிசலில் சுரேஷ் சரக்கடித்து விழுந்து கிடந்தவன் மனைவியுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தான் . பார்த்த மாத்திரத்திலேயே அவனுக்கு கடைக்காரனுக்கு யார் சரக்கு வாங்கிக்கொடுத்து மட்டையாக்கியது என விளங்கியது .  அவனுக்காக அவர்கள் வேலை செய்த இடைவெளியில் அவன் என்னடாவென்றால் புருசனுக்கு சரக்கை வாங்கி ஊற்றிக்கொடுத்து விட்டு பொண்டாட்டியோடு ஜல்சா செய்து கொண்டிருக்கிறான் . அவர்கள் தண்ணியடிக்கும் போதெல்லாம் சுரேஷ் அடிக்கடி பின்னால் போய்விட்டு லேட்டாக வருவதன் சூட்சுமம் அவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது . ஆனால் அவர்கள் செட்டிலேயே எந்த பெண்ணை பற்றியும் அனாவசியமாக பேசாத அல்லது சைட் அடிக்காதவன் இவ்வளவு பெரிய வேலையையே கமுக்கமாக செய்து கொண்டிருப்பதை  பார்த்தவனுக்கு ஒரு பக்கம் அதிசயமாக இருந்தது . மிகவும்  அமைதியாக இருப்பவர்களுக்கு பின்னால் தான் நிறைய அதிசியங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன ...

எது எப்படியோ இப்பொழுது அவர்கள் இருக்கும் நிலையில் நடுவே புக  விரும்பாமல் ஓரமாக வந்தான் . ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்து கிடைக்கும் மர்மங்கள் அவனுக்கு ஆச்சர்யமாக  இருந்தன .  அவள் சாப்பிடும் போது சுரேஷ் அண்ணனுக்கு இன்னும் கொஞ்சம் மீன் குழம்பு ஊத்துங்க என்று புருஷனிடம் சொல்லி ஊற்ற சொல்லுவாள் . அவனும் அதை வேத வாக்காக எடுத்துக்கொண்டு அவனுக்கு மீனை நிறையவே  வைப்பான் . ஆனால்  யோசித்துப் பார்த்தால் இது ஏதோ அவசர கதியில் நடந்தது போல அவனுக்கு படவில்லை . அவள் புருஷனுக்கு குடி இல்லாமல் இருக்க முடியாது . குழந்தைக்கு பாலுக்காக வைத்த காசை கூட எடுத்துக்கொண்டு போய் குடித்திருக்கிறான் .  அவளுடைய முயற்சியால் இந்த கடை அமைந்தது . அதன் பிறகு கடனை உடனை வாங்கி இந்த இட்லிக்கடையை நடத்திக்கொண்டிருக்கிறாள் ...

சுரேஷ் அவர்களுக்கு நிறைய தடவை கடனாக பண உதவி செய்திருக்கிறான்.
அதை கொடுத்துக்கழிப்பதற்கு பதில் படுத்துக்கழிக்கிறாள் போலிருக்கிறது , ஆனால் பண விஷயத்தையும் தாண்டி அதீத நெருக்கத்தை அவர்களிடம் அவனால் காண முடிந்தது  . உதவி செய்தவன் மேலுள்ள விசுவாசம் காதலாக மாறியிருக்கலாம் . புருஷனின் கையாலாகாத்தனம் அவளை சுரேஷ் பக்கம் ஈர்த்திருக்கலாம் . சுரேஷ் அதிக செலவு செய்து அக்காவை பெரிய இடத்தில் கட்டிக்கொடுத்த கடனையே இன்னும் அடைத்துக்கொண்டிருக்கிறான் . இன்னும் தங்கை , தம்பி இவர்களின் படிப்பு, குடும்ப செலவையும் அவன் தான்  பார்க்க வேண்டும் . அவனது அப்பா தனியார் கம்பெனியில் குமாஸ்தாவாக இருந்து ரிட்டையர் ஆனவர் .  அவருடைய கொஞ்சம் சேமிப்பு மருத்துவ செலவுக்கே சரியாக இருக்கும் ...

கல்யாண வயதை தாண்டி குடும்பத்துக்காக உழைப்பவர்களுக்கு  என்றுமே மனதுக்குள் ஒரு தீராத ஏக்கம் இருக்கும் . அந்த ஏக்கத்தை தான் அவன் குடிசைக்குள் தணித்துக் கொண்டிருப்பதாய் கார்த்திக் நினைத்தான் . சுந்தரிக்கும் அவனுக்கும் நடுவில் இருப்பது காதல் ஆனால் அவர்களுக்குள் நடப்பது கள்ளக்காதல் ஏனென்றால் அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது . இதெல்லாம் யார் போட்ட சட்டம் ? . இந்த வயதிலிருந்து இந்த வயதுக்குள் தான் காதல்  வர வேண்டுமென்று யார் சொல்வது ? வேலைக்காகாதவனாக  இருந்தாலும் அவன் கூடவே தான் குப்பை கொட்ட வேண்டுமென்கிற விதியை அவளுக்கு யார் எழுதியது ? . அதே சமயம்
கணவன் மனைவி இருவரிடையேயும் ஒரு  அன்யோன்யத்தை அவன் பலமுறை பார்த்திருக்கிறான் . அவள் புருஷன் சரக்கடிக்கும் போது அவள் ஒரு நாளும் ஆம்லெட் வைக்க தவறியதில்லை . மனித மனங்களின் விளையாட்டு அவனுக்கு விசித்திரமாக இருந்தது ...

" என்ன பாஸ் போன விஷயம் என்ன ஆச்சு  ? ரொம்ப பதட்டமாகவே இருந்தேன் " சுரேஷ் சொல்லிக்கொண்டே அவனிடம் தான் வைத்திருந்த சிகரெட்டை நீட்டினான் . கார்த்திக் நடந்து முன் பக்கம் வந்து விட்டதால் சுரேஷுக்கு அவன் மேல் துளியும் சந்தேகம் வரவில்லை . ஆமாமாம் உங்க பதட்டத்தை தான் நான் பார்த்தேனே என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே
" போன வேலை நல்லபடியா முடிஞ்சது , இனிமே அவன் நம்ம தங்கச்சி பக்கம் வரவே மாட்டான் " . கார்த்திக் சொன்னவுடனே சுரேஷுக்கு ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது . " ரொம்ப தேங்க்ஸ் பாஸ் நீங்க தான் சுமூகமா இத முதல்லயே முடிச்சு வச்சீங்க " . அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது போல கார்த்திக் அவனையே பார்த்தான் . " இல்ல பாஸ் இந்த பொண்ணுங்களோட வயச நம்ப முடியாது , அவ பாட்டுக்கு லவ் கிவ்வு ன்னு அவன் பின்னாடி போக ஆரம்பிச்சுட்டான்னா அப்புறம் குடும்ப மானம் கப்பலேறிடும் " . அவன் சொன்னவுடனே கார்த்திக்கிற்கு சிரிப்பு வந்தது.
" அட தாயோளி தங்கச்சி வேற ஜாதிக்காரன  லவ் பண்ணா குடும்ப மானம் போய்டும் ஆனா இவன் வேற ஜாதிக்காரப் பொண்ணோட படுத்தா மானம் போகாதா ? என்னடா லாஜிக் என்பது போல நினைத்துக்கொண்டே
" அதான்  மேட்டர் முடிஞ்சாச்சே , டோன்ட் ஒரி , அப்புறம் உங்க வேலைல்லாம் நல்லா முடிஞ்சதா ?" கார்த்திக் கேட்டவுடனே சுரேஷுக்கு பக்கென்று இருந்தது. " இன்னிக்கு ஏதோ பெரிய பெரிய டீல் முடியறதா சொன்னீங்களே பாஸ் ?  கார்த்திக் சொன்னவுடனே " ஓ அதுவா " என்று கேட்டுக்கொண்டே அசடு வழிந்தான் சுரேஷ் . அவர்கள் இருவரும் தம்மை அடித்து முடிக்கும் போது மர்ரு அண்ட் கோ சரக்குக்கேற்ற இத்யாதிகளுடன் வந்து சேர்ந்தார்கள் ...

தொடரும் ...








1 December 2019

அவன் - அவன் - நிலா ( 11 ) ...


ன்று மாதா கோவிலில் எதிர்பார்த்ததற்கு மேலாகவே கூட்டம் இருந்தது . பெண்கள் முகத்தை அதிக நேரம் செலவிட்டு அழகு படுத்தியிருந்தார்கள் . அதில் கொஞ்சமாவது கை கால்களுக்கும் செலவிட்டிருக்கலாம் . அவன்
கிறிஸ்துவப் பள்ளியில் படித்ததால் இயேசு கிறிஸ்துவை பார்த்ததும் பழக்க தோஷத்தில் ப்ளஸ் போடப்போன கைகைளை பிரயத்தனப்பட்டு அடக்கிக்கொண்டான் . பள்ளி நாட்களில் அவனது ஆசிரியர்கள் பாடத்தோடு சேர்த்து சிலபஸில் இல்லாத போதனைகளையும் வழங்கினார்கள் . அவனவன் கர்மா வை அவனவன் கடந்தே தீர வேண்டுமென்கிற சிந்தனை உரைக்கும் வரை அவன் கஷ்டம் வரும் போதெல்லாம் தெரு முக்கு பிள்ளையாரையும் சரி , ஜீசஸையும் சரி  விட்டுவைக்கவில்லை . பத்தாவது படிக்கும் போது அவனுடன் நெருக்கமான  கேரளத்து கிறிஸ்துவ பெண் காதலோடு சேர்த்து கர்த்தரின் கருத்துக்களையும் பரப்பினாள் . ஒருவேளை அவள் கூட இங்கே வரலாம் என்று யோசித்தவனுக்கு உடனே சுந்தரியின் முகம் நியாபகத்துக்கு வர அந்த நினைப்பை உடனே அழித்தான் ...

அவன் அவ்வளவு யோக்கியனெல்லாம் இல்லை , ஆனாலும் அவனுக்கு சுந்தரி எல்லா விஷயத்திலும் ஏற்றவளாகவே இருந்தாள் . அவள் போன்ற ஒருத்தியை சந்திக்கும் வரை அந்தந்த வயதிற்கான தேடல் இருக்கவே செய்தது . அதிலும் பேருந்தில் , ஏரியாவில் பேருக்காவது ஒரு பெண்ணோடு சம்பந்தப்படுத்தி பேசப்படாதவன் கேலி செய்யப்பட்டான் அல்லது கழட்டி விடப்பட்டான் . அந்த பெண்ணிற்கு ரூட் போட பல பேர் சுற்றினார்கள் . ஏரியா பரிச்சியத்தாலும் , அவள் அப்பாவை அவன் அப்பாவிற்கு ஏற்கனவே தெரியும் என்பதாலும் அவளுடன்  பழகுவதற்கு எந்த தடையுமில்லை . அவளுடன் வராந்தாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் அந்த ஒரு மணி நேரத்தில் குறைந்தது ஐந்து பேராவது சைக்கிள் பெல் வேலை செய்கிறதா என்பதை செக் செய்து கொண்டே அவள் வீட்டை கடந்திருப்பார்கள் . இருவருக்குமே  சிரிப்பாக வரும் . அதிலும் ஒரு ஆளுக்கு காலாகாலத்தில் கல்யாணம் ஆகியிருந்தால் அவள் வயதுக்கு பையனோ , பொண்ணோ இருந்திருக்கும் . ஆனாலும் அத்தனை ஆட்கள் தன்னை சுற்றி வருகிறார்கள் என்பதில் அவளுக்கு பயத்தை விட கர்வமே மேலோங்கியிருந்தது ...

அந்த கர்வம் தொடங்கிய புள்ளியிலிருந்து தான் அவளுக்கு சிக்கல் தொடங்கியது . பொதுவாகவே  கேரளத்து பெண்கள் மற்ற ஆண்களுடனும் இயல்பாக பேசக்கூடியவர்கள் . பாசாங்கு , போலித்தனமில்லாத அவர்கள் பேச்சு இங்கே பல ஆண்களுக்கு தனக்கான பிரத்தியேகமான பாசமாகவோ , அழைப்பாகவோ பார்க்கப்படுகிறது . அதனால் தான் வயது வித்தியாசம் கூட பார்க்காமல் சிலர் அவளை துரத்திக்கொண்டு அலைகிறார்கள் .
ஒரு முறை அவனது அப்பாவே அவள் வீட்டு வாசலருகே சைக்கிளை ரிப்பேர் செய்வது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தவனை கூப்பிட்டு பளேரென அறைந்து எச்சரித்து அனுப்பியிருக்கிறார் . வேறு ஏரியாவிலிருந்து வந்தவன் அதன் பிறகு அந்த பக்கம் தலை வைத்தே படுக்கவில்லை . அந்த பிரச்சனைக்கு பிறகு அவளது அப்பா ஓரளவு மகளிடம் புத்தி சொல்லி  அனைவருடனும் பேசுவதை  தவிர்க்க சொன்னார் . அவளுக்கே அது கடுப்பாகி அவள் அப்பாவை பற்றி அவனிடமே திட்டியிருக்கிறாள்  ...

அந்த சம்பவத்துக்கு பிறகு அவளோடு எந்த தடங்கலும் இல்லாமல் அவள் வீட்டிலேயே அமர்ந்து பேசக்கூடிய ஒரே ஆணாக அவன் மாறிப்போனான் . அவள் அருகாமையில் இருக்கும் போது தான் ஏன் அத்தனை ஆண்கள் அவள் பின்னால் நாயாய் அலைந்தார்கள் என்பதை தெரிந்து கொண்டான் . அவள் தோற்றமே வயதுக்கு மீறியதாக இருந்தது . மாநிறமாய் பெண்கள் அலைந்த ஊருக்குள்ளே அவள் மாம்பழ கலரில் இருந்தாள் . அவள் சிரிப்பு அழகாக இருக்கும் . அதை அனைவரும் ரசிக்கிறார்கள் என தெரிந்தோ என்னமோ அவள் அடிக்கடி சிரித்தாள் . அவன் அவளை அதிகம் பாராட்டாமலேயே இருந்தது அவளுக்கு போரடித்தது . அவனுக்கு என்றுமே அதீத அலட்டல் பிடிப்பதேயில்லை . அவளிடம் பல நல்ல குணங்கள் இருந்தாலும் தனது அழகை பற்றிய அளவு கடந்த தற்பெருமை இருந்தது . அதனாலேயே அவளை புகழ்பவர்களிடம் அவள் மயங்கினாள் . அவளது வீக்னெஸ்ஸை புரிந்து கொண்டவர்கள் அதை பயன்படுத்தினார்கள் ...

அவளுடன் அதிக நெருக்கமாக இருந்தவனுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் அவள் நடவடிக்கைகள் மேல் அதிருப்தி வந்தது . தன்னை பாராட்டுபவர்களுக்கு மத்தியில் யதார்த்தமாக இருக்கும் அதுவும் தொட்டதுக்கெல்லாம் கோபப்படும் அவன் மேல் அவளுக்கும் எரிச்சல் வந்தது . அதிலும் அவன் பன்னிரெண்டாவது வந்தவுடன் படிப்பிலும் , நண்பர்களோடும் பிஸியானதால் இருவருக்கும் விரிசல் அதிகமானது . அந்த விரிசலும் பிறகு அவளை இவனோடு பார்த்தேன் , அவனோடு பார்த்தேன் என்று யாராவது சொல்லும் போது அவனுக்கு ஏதோ ஒரு வெறுமை வரும் பிறகு நண்பர்களோடு பேச பேச அது கரைந்து விடும் . காதலியை பிரிந்து வரும் காதலனுக்கு நண்பர்களிடத்தில் அமோக வரவேற்பு இருக்கும் . அவன் இத்தனை நாட்கள் நம்மை கண்டுகொள்ளாமல் அந்த பெண்ணோடு சுத்தினானே என்கிற ஏக்கம் , பொறாமை எல்லாமே கலந்து வருபவனை  சற்று கூடுதலாகவே கவனிப்பார்கள் . அதுவும் சில நேரங்களில் அவனை சந்தோசப்படுத்துவதாக நினைத்து அவளை பற்றி ஏதாவது ஏடாகூடமாக பேசி அவனிடம் வாங்கிக்கட்டிக் கொள்பவர்களும் உண்டு ...

அவள் நினைவிலிருந்து மீண்டு அவன் சுரேஷின் தங்கையின் வழியில் வந்து தொல்லை கொடுப்பவர்கள் வருகிறார்களா என்று தேட ஆரம்பித்தான் . அவனுடைய ஆட்களும் ஆங்காங்கே சிதறியிருந்தார்கள் .  அந்த மூன்று
பேரையும் எப்படியாவது அந்த சந்து வழியாக துரத்திக்கொண்டு சுடுகாடு ஸ்பாட்டுக்கு கொண்டு போய் விடவேண்டும் . அங்கே நண்பனின் அண்ணனை வைத்து பஞ்சாயத்து பேசி முடித்து விடலாம் . ஆனால் அது சொல்வது போல அவ்வளவு எளிதில்லை . அவர்களுக்கு தெரிந்தவர்கள் கூடி விட்டாலோ , போலீஸ் வந்துவிட்டாலோ கதை கந்தலாகி விடும் . ஒரு
சேஃப்டிக்கு பொருள் வைத்திருந்தாலும் அதை எடுப்பது நல்லதில்லை . அடிதடி என்பது இல்லாமல் அது கொலை முயற்சி என்கிற லெவெலுக்கு போய் வாழ்க்கையையே தடம் மாற்றி விடும் . அந்த உள்ளுணர்வு எப்பொழுதுமே அவனுக்கு உண்டு . அதனால் தானோ என்னமோ அவன் பல கண்டங்களிலிருந்து தப்பி வந்திருக்கிறான் ...

மர்ரூ எதெற்கெடுத்தாலும் சட்டென்று  பொருளை எடுத்து விடக்கூடியவன் . அதனால் அவனை கூட்டம் அதிகம் இல்லாத இடத்திலேயே நிற்க வைத்திருந்தான் . அந்த மூவரில் முக்கியமானவனை அவன் வம்பிழுத்து அடிதடியை ஆரம்பிக்க வேண்டும் . அதன் பிறகு மொக்கையும் மற்றவனும்
வேறு திசைகளிலிருந்து வந்து அட்டாக் செய்ய வேண்டும் . அவர்களை ஓடவிட்டு துரத்திக்கொண்டு ஸ்பாட்டுக்கு போக வேண்டும் . ப்ளானை யோசித்துக்கொண்டே ஒரு தம்மை பற்ற வைத்தான் கார்த்திக் . இரண்டு இழுப்பு இழுப்பதற்குள் அவர்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள் . அவன் தம்மை அணைத்து  விட்டு நேராக அவர்களை நோக்கி போனான் . அவன் கவனம் முழுவதும் மெயின் ஆள்  மேலேயே  இருந்தது . யார் அந்த க்ரூப்புக்கு தலைவனோ அவனை முதலிலேயே அடித்து விட வேண்டும் . அப்பொழுதான் கூட இருப்பவர்கள் பயத்தில் குழம்பிப்போய் சிதறி ஓடுவார்கள் ...

நடுவில் வந்து கொண்டிருந்தவன் மேல் கார்த்திக் வேகமாக போய் மோதினான் . " டே தாயோளி பாத்து வர மாட்ட " மோதின வேகத்தில் தடுமாறியவன் கோபத்தோடு கத்தினான் . அதையே எதிர்பார்த்திருந்த கார்த்திக் உடனே அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ட்யூப் லைட்டை எடுத்து
சொன்னவன் தோள்களில் அடித்தான் . அதை சற்றும் எதிர்பாராதவன் தடுமாறி விழ அருகில் இருந்தவர்கள் யோசிப்பதற்குள்ளேயே இடுப்பில் ஒரு உதை  விட்டான் . இதை பார்த்தவுடன் அவன் நண்பர்கள் வேறிடத்திலிருந்து வந்து அவர்களை தாக்கினார்கள் . பயத்தில் மூவரும் ஓட ஆரம்பிக்க திட்டமிட்டபடியே அவர்களை சுடுகாடு வழியிலே துரத்திக்கொண்டு போனார்கள் கார்த்திக் & கோ . திடீரென அதில் ஒருவன் விலகி மெயின் ரோட்டுக்கு ஓட ஆரம்பிக்க கார்த்திக் துரத்த ஆரம்பித்தான் . வேகமாக வந்து கொண்டிருந்த பேருந்தை தாண்டி கண நேரத்தில் ஓடினான் கார்த்திக் . டிரைவர் சடன் ப்ரேக் போட்டு வண்டியை நிப்பாட்டி அவனை வசை பாடிக்கொண்டிருந்தார் ...

இது எதுவும் தெரியாமல் சொன்னபடி மர்ரூ அங்கே சரியாக நிற்க வேண்டும் அவன் ஏதாவது பெட்டிக்கடைக்கு போயிருந்தால் சிக்கல் என்பதை யோசித்துக்கொண்டே அவன் ஓடினான் . அவன் நினைத்தது போலவே மர்ரூ சிப்ஸ் பாக்கெட்டை வாங்கி கொறித்துக்கொண்டிருந்தான் . " டே " என்று சத்தம் கேட்டு கார்த்திக் வந்த திசையில் பார்த்தவன் முதலில் உனக்கும் வாங்கவா என்பது போல சைகை செய்ய கார்த்திக் கொன்னுடுவேன் என்று கை காட்டியதையும் உடனே எதிரி ஓடும் திசையை பார்த்தான்  .  அதனை பார்த்தவுடன் சுதாரித்த மர்ரூ  வேறு திசையில் ஓடி வந்து காலை தடுக்க அவன் எகிறி போய் விழுந்தான் . அங்கே வந்து சேர்ந்த கார்த்திக் விழுந்தவனை கொத்தாய் தூக்கி ரெண்டு அறை விட்டான் . பிறகு சுடுகாட்டு வழியாக அவனை ஓடுவதற்கேற்ப திருப்பி விட்டான் . அது புரியாத அவனும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அந்த வழியாக ஓட இடைவெளி விட்டு அவர்கள் துரத்திக்கொண்டு போனார்கள் . ஒரு வேலையாக மதுரைக்கு வந்திருந்த சுந்தரியின் மாமா பேருந்தின் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்ததால் எவனோ ஓடுவதையும் அவனை துரத்திக்கொண்டு கார்த்திக் ஓடுவதையும் பின்னர் நடந்த கூட்டத்தையும் நன்றாகவே பார்க்க முடிந்தது ...


ஒரு வழியாக ஓடி ஓடி கடைசியில் தடுப்பு சுவர் மேல் அவர்கள் முட்டி நின்றார்கள் . ஒன்று அதை  தாண்ட வேண்டும் அல்லது சற்று தள்ளியிருந்த சின்ன சந்து வழியாக ஓட வேண்டும் . அங்கே சந்து இருப்பது இருட்டில் தெரியாமல் அவர்கள் கஷ்டப்பட்டு சுவற்றில்  ஏறிக்கொண்டிருந்தார்கள் . ஏற்கனவே இருவர் ஏறி விட கடைசியாக ஏறிக்கொண்டிருந்தவனை மர்ரூ பிடித்து இழுத்துப் போட்டு மேலே ஏறி உட்கார்ந்தான் . அவன் எடைக்கு விழுந்தவன் தாக்குப்பிடிக்க முடியாமல் கத்த கார்த்திக் ஏதாவது ஆகி விடுமோ என்று பயந்து அவனை பிடித்து இழுத்துப் போட்டான் . இந்த கேப்பில் விழுந்து கிடந்தவன் எழுந்து சந்தை கண்டுபிடித்து ஓட இவர்கள் பொறுமையாக சிகரெட்டை பற்ற வைத்தார்கள் . அவர்களின் ஓட்டம் முடியும் இடம் இவர்களின் ஸ்பாட் என்று நன்றாகவே தெரியுமென்பதால் ஆசுவாசமாக அதை நோக்கி நடந்தார்கள் ...

தொடரும் ...




Related Posts Plugin for WordPress, Blogger...