6 March 2016

தெருக்கூத்து - தமிழக சட்டசபை தேர்தல் 2016 ...



மிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்து தேர்தல் நடைமுறை விதிகளையும் அமல்படுத்தி விட்டது தேர்தல் ஆணையம் . கடந்த தேர்தல்களை விட இந்த முறை தமிழக அரசியல் களம் பெரிய சூடு பிடிக்காமல் ஒரு குழப்பமாக இருப்பது போலவே படுகிறது . இப்போதிருக்கும் சூழ்நிலையில் நடுநிலை வாக்காளனுக்கு நிறைய சாய்ஸ் இருப்பது போல பட்டாலும் எந்த கட்சிக்கு ஒட்டு போடுவது என்பதில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியாத சூழ்நிலையே நிலவுகிறது . கடந்த 50 ஆண்டுகளாகவே தி.மு.க , அ .தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கின்றன . ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த இரண்டு கட்சிகளையும் தவிர்த்து மாற்று வரவேண்டும் என்று பேச்சுக்கள் எழுந்தாலும் தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது அவை நீர்த்துப் போய் விடுகின்றன . மாற்று என்று தங்களை கூறிக்கொள்ளும் கட்சிகள் மேல் மக்களுக்கு நம்பிக்கை இல்லாததும் , அப்படி சொல்லிக்கொள்ளும் கட்சிகள் கூட கடைசி நேரத்தில் ஏதோ ஒரு கழகத்துடன் கூட்டு சேர்வதுமே வாடிக்கையாகி வருகிறது . ஆனாலும்  2014  நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி தலைமையில் அமைந்த அணி 18 சதவிகித வாக்குகளை பெற்று பல இடங்களில் திமுக வையே பின்னுக்கு தள்ளியிருந்தாலும் இப்போது தனித்தனியே இருந்து அந்த வெற்றிடத்தை நிரப்பாமல் விட்டது துரதிருஷ்டம். தனிப்பட்ட வாக்கு வங்கிகளை பொறுத்தவரை திமுக , அதிமுக இரண்டுமே கிட்டத்தட்ட சமபலத்துடன் இருப்பதை சமீபத்திய கருத்துக் கணிப்புகளும் ஊர்ஜிதம் செய்கின்றன . இருப்பினும் ஒரு கட்சி ஆட்சி முடியும் போது அடுத்த முறை மக்கள் அடுத்த கட்சிக்கு வாய்ப்பளித்து வருகிறார்கள் . 1996 - 2001 திமுக ஆட்சி , 2001 - 2006 அதிமுக ஆட்சி இரண்டும்  ஓரளவு  சிறப்பாக செயல்பட்டும் மாற்றப்பட்டிருக்கின்றன . 2004 இல் அரசு ஊழியர்களை கைது செய்தது அதிமுக ஆட்சிக்கு எதிராக போனாலும் மற்றபடி பொது மக்களிடையே பெரிய அதிருப்தி இல்லை .  இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒவ்வொரு கட்சிகளின் வாய்ப்பு எப்படியிருக்கும் என்பதை அலசலாம்...

அ.தி.மு.க 

தொழில் வளர்ச்சியின்மை , நிர்வாக மந்தம் போன்ற குறைகள் இந்த ஆட்சியில் பரவலாக பேசப்பட்டாலும் அம்மா உணவகம் , மருந்தகம் என பல நலத்திட்டங்கள் மக்களிடையே  ஏற்படுத்திய நல்ல பெயரை சமீபத்தில் வந்த வெள்ளம் அடித்துக் கொண்டு போனது என்றே சொல்லலாம் . ஆனால் வெள்ளம் வந்த நான்கு மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஆளுங்கட்சியின் மேல் பெரிய அதிருப்தி இல்லாதது போலவே படுகிறது .
 " வளர்ச்சிய விடுங்க ரவுடிங்க பிரச்சனை இல்லாம  நிம்மதியா இருக்கோம் " என்று பலர் பேசுவதை காண முடிகிறது . அதே போல மின்வெட்டு பிரச்சனை பெரிய அளவு குறைக்கப்பட்டிருப்பதையும் பலர் நினைவு கூர்கிறார்கள் . ஊழல்  குற்றச்சாட்டுக்கள் ஆங்காங்கே சொல்லப்பட்டாலும் கடந்த ஆட்சியைப் போல மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு அது பெரிய எதிரலையாக வீசவில்லை . எதிரணிகள் பிரிந்து கிடப்பது பலமாக இருப்பினும் 2014 நாடாளுமன்ற  தேர்தலை போல நாளை நமதே நாற்பதும் நமதே என்று முழங்கக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை .  தொடர்ந்து ஒரே கட்சிய ஆள விட்டா  சரிப்படாது என்பது போன்ற கருத்துக்கள் நிலவுவதை அவர்களாலும் உணர முடியும் . தேமுதிக எந்த பக்கம் போகிறது என்பதை பொறுத்து கூட்டணிக்கான நிர்பந்தம் இங்கே அதிகரிக்கும் என நம்பலாம் . கிடைக்கிற கேப்பில் எல்லாம் அம்மா ஸ்டிக்கரை ஒட்டிய கட்சிக்கு திரும்பவும் மக்கள் ஓட்டு குத்துவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ...

தி.மு.க 

மக்களின் நியாபக மறதி மேலுள்ள நம்பிக்கையில் " என்னம்மா இப்புடி பன்னுறீங்கலேம்மா " என்பது போன்ற விளம்பரங்களை கட்சி செய்தாலும் அடுத்து என்ன நம்ம தானே என்கிற தன்னம்பிக்கையை கட்சிக்காரர்களிடம் அதிகம் பார்க்க முடிகிறது . தலைவர் ஒரு வழியாக குடும்ப சிக்கல்களை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதும் , தளபதியின் நமக்கு நாமே ஊர்வலமும் அந்த நம்பிக்கையை மேலும் கூட்டியிருக்கின்றன. 2 ஜி விவகாரத்துக்காக ஈழத் தமிழர்களின் பெயரை சொல்லி காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி விட்டு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அதனோடு கூட்டு வைத்திருப்பது திமுக மீது கட்சிக்காரர்களுக்கே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது . அதிலும் ஏற்கனவே கட்சியே உடைந்து பலம் குன்றிப் போயிருக்கும் காங்கிரசுடன் திமுக கூட்டணி வைத்தது சந்தர்ப்பவாதமாகவே இருந்தாலும் அவர்களுக்கு சறுக்கல் . ஸ்டாலினை முன்னிருத்தினால் பிஜேபி + திமுக + தேமுதிக கூட்டணி ஏற்படலாம் என்று சுப்ரமணியசுவாமி போட்ட குண்டில் காங்கிரஸ் அலறியடித்துக்கொண்டு வந்து கலைஞரை பார்த்ததும் அவர் உடனே கூட்டணிக்கு ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணம் மகனாகவே இருந்தாலும் தன்னைத் தவிர  வேறொருவரையும் அரியணையில் ஏற்றி அழகு பார்க்கும் பெருந்தன்மை அவருக்கு இல்லாததே . ஏற்கனவே சில கருத்துக் கணிப்புகள் முதல்வர் பதவிக்கு ஜெயலலிதாவுக்கு அடுத்து ஸ்டாலினை முன் வைத்ததும் கலைஞரின் உடனடி முடிவுக்கு காரணமாக இருக்கலாம் . மேயராக , துணை முதல்வராக இருந்த அனுபவமும் , குளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வாக சிறப்பாக  செயல்பட்டதோடு நமக்கு நாமே மூலம் மக்களிடையே நேரடித் தொடர்பை அதிகப்படுத்தியன் மூலமும் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடியிருப்பதை மறுப்பதற்கில்லை . 2ஜி விவாகரத்தால் பிஜேபி திமுக வுடன் சேர்வதற்கு தயக்கம் இருந்தாலும் இந்த கூட்டணி அமைந்திருந்தால் திமுக வின் வெற்றி வாய்ப்பு அதிகரித்திருக்கும் ...

தே.மு.தி.க 

சினிமாவில் ரஜினி , கமலுக்கு அடுத்து இருந்தாலும் வருகிறேன் , வரமாட்டேன் என்றெல்லாம் இழுக்காமல் 2006 இல் கட்சியயை ஆரம்பித்து எந்த கூட்டணியும் இல்லாமல் முதல் தேர்தலிலேயே தில்லாக விருத்தாலச்சத்தில் வெற்றி பெற்றவர் விஜயகாந்த் . ஆனால் இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக வருவார் என ஒட்டு போட்டவர்கள் எதிர்பார்த்த நிலையில் 2011 இல் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்ததில் இருந்து ஆரம்பித்தது அவரது இறங்குமுகம் . சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் சட்டசபையில் நாக்கை துருத்தி அவர் காட்டிய வேகம் அவரை ஹீரோவாக பார்த்தவர்களுக்கே காமெடியனாக ஆக்கியது . அடுத்தடுத்து அவர் பேச்சுக்கள் , பேட்டிகள் எல்லாமே மீம்ஸ் பிரியர்களுக்கு இலவச ஆந்திரா மீல்ஸ் ஆகின . கோபமோ , சோகமோ எங்கள் தலைவருக்கு மறைக்க தெரியாது என்று அவர்கள் ஆதரவாளர்கள் மழுப்பினாலும்  கேட்பார் யாருமில்லை . ஆனால் இப்படி நெட்டிசன்களால் கிண்டல் செய்யப்பாட்டாலும் இவரது துணையில்லாமல் பெரிய கட்சிகள் ஆட்சியமைக்க முடியாது என்கிற சூழல் உருவாகியிருப்பதையும் மறுப்பதற்கில்லை . 2014 இல் மோடி அலை நாடு முழுவதும் வீசியும் இவரால் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாதது மேலும் சரிவை ஏற்படுத்தியிருக்கும் . இன்னும் இவர் ஒரு முடிவுக்கு வராமல் கிங்கா - கிங் மேக்கரா என்றெல்லாம் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருப்பது மீடியாக்களுக்கு பாப்கார்ன் . திமுக , அதிமுக அல்லாத மாற்று அணியுடன் கை கோர்க்க தயக்கம் காட்டுவது அரசியலுக்கு வந்த போது இருந்த தையிரியம் கேப்டனுக்கு இப்போது இல்லாததற்கு சான்று ...

பா.ஜ.க 

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இருந்தது போலல்லாமல் இப்போது தமிழகத்தில் கட்சி வலுப்பெற்றிப்பினும் அது  யானைப்பசிக்கு சோளப்பொறி போலத்தான் . நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியை அமைத்து  விட்டு இந்த முறை விஜயகாந்தை எதிர்பார்த்து கூட்டணி வரும் ஆனா வராது என்பது போல இவர்கள் தேவுடு காத்துக் கொண்டிருப்பது பகல் கனவு . பிஜேபி ஆளும் மாநிலங்களில் ஊழல் குறைவாக இருப்பதும்   , வளர்ச்சி பெற்றிருப்பதும்  , மத்தியில் இவர்கள் ஆட்சி  இருப்பதால்  அதை பயன்படுத்தி தமிழகத்துக்கு நிறைய நலத்திட்டங்களை கொண்டு வரமுடியும் என்பதும் பலம் . தேமுதிக , பாமக இரண்டையும் கூட்டணிக்கு இழுப்பதோ அல்லது தேமுதிக திமுக பக்கம் போகும்  பட்சத்தில் அதிமுக கூட்டணியில் சேர்வதோ தான்  இவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு . பிஜேபி யுடன்  சேர்வது வெள்ளத்தால் வெறுப்பில் இருக்கும் சென்னை நகர  வாக்களர்களை ஒன்று சேர்ப்பதற்கு அதிமுக வுக்கும் உதவும் . மேலும் இந்த இரண்டு கட்சிகள் ஒன்று சேர்வதில் கொள்கை(!) ரீதியாகவும் எந்த சிக்கலும் இருக்காது ...

பா.ம.க 

ஓவர் கான்பிடென்ஷ்  போல பட்டாலும் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் கேப்டனை விடவும் , கூட்டணியின் பெயரில் மக்களை வைத்து விட்டதால் ஜெயித்து விடுவோம் என்பது போல நினைப்பில் இருக்கும் மக்கள் நலக் கூட்டணி யை விடவும் கார்பரேட் பாணியில் தனது பிரசார வேலையை செய்து கொண்டிருக்கும் அன்புமணி ராமதாஸ் தேவலாம் என்றே தோன்றுகிறது . ஆனால் அது மட்டும் அவரை ஆட்சிக்கட்டில் ஏற்றுவதற்கு பத்தாது . கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயித்த அதிமுக அல்லாத இரண்டு எம்பிக்களில் அன்புமணி யும் ஒருவர் . ஆனால் அதற்கு உண்மையான காரணம் யார்  என்று அவர்களுக்கே தெரியும் . வன்னியர்களின் வாக்கு எண்ணிக்கை இவர்களுக்கு பலமாக இருந்தாலும் அவர்கள் மற்ற கட்சிகளிலும் நிறைய இருப்பதும்  ,  வெறும் சாதிக்கட்சியாக பொதுமக்கள் மத்தியில் பார்க்கப்படுவதும் கட்சிக்கு பலவீனம் . தனியாக நிற்பதால் ஓட்டு கிடைக்கலாமே தவிர சீட்டு கிடைப்பது கஷ்டம் . ஈகோக்களுக்கு இடம் கொடுக்காமல் பிஜேபி - தேமுதிக வுடன் கை கோர்ப்பது  கட்சிக்கு பலம் சேர்ப்பதோடு பெரிய கட்சிகளுக்கு பயத்தையும் கொடுக்கும் ...

மக்கள் நலக் கூட்டணி 

இந்த தேர்தலுக்கு முதல் கூட்டணியை அமைத்தது இவர்கள் தான் . மதிமுக , கம்யூனிஸ்டுகள் , விடுதலைசிறுத்தைகள் கட்சி மூன்றும் இணைத்து அமைத்திருக்கும் கூட்டணிக்கு மக்கள் நலம் செய்வார்களே என்பது சந்தேகமே . இரண்டு திராவிட கட்சிகளுடனும் மாறி மாறி இருந்து விட்டு இப்போது நாங்கள் கொள்கை ரீதியாக சேர்ந்த கூட்டணி என்று சொல்வதெல்லாம் பிம்பிளிக்கோ பிலேப்பி . அதிமுக வுக்கு எதிரான ஓட்டு இப்படி சிதறுகிறதே என்கிற கடுப்பில் இவர்களை அதிமுக 2 என்று திமுக திட்டுவது " இன்னுமா நம்பள நம்புராய்ங்க " என்பது போன்ற தன்னம்பிக்கையை இவர்களுக்கு கொடுத்திருக்கும் . மற்றபடி முதல் முறை எல்லா தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் எங்களை விட அதிக வாக்குகளை பெற்று விட்டால் கட்சியை கலைத்து விட்டு உங்களுடன் சேர்ந்து விடுகிறேன் என்று ஓப்பனாக கலாய்க்கும் நிலைமையில் தான் இந்த கூட்டணி இருக்கிறது . முன்னரே சொன்னது போல இப்படி ஆளாளுக்கு சிதறிக் கிடப்பது " இவிங்க எடுக்குற முடிவெல்லாம் நமக்கு சாதகமாத்தான் இருக்கு " என்று அதிமுக தலைமையை சொல்ல வைக்கிறது ...

NOTA 

எந்த கட்சிக்கும் தங்களை ஆட்சி செய்யும் தகுதியில்லை என்று நினைக்கும் வாக்களார்களுக்கு தேர்தல் ஆணையம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் சாதனம் NOTA ( None of the above ) . இந்த முறை இது சின்னத்துடன் வந்திருப்பது மகிழ்ச்சி . இந்த தேர்தலில் இது அதிக வாக்குகளை பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை ...











Related Posts Plugin for WordPress, Blogger...