எதிர்பார்த்ததைப் போலவே
2014 தேர்தலில் அ.தி.மு.க தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்ததும் , தி.மு.க காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியிருப்பதும் நடந்திருக்கிறது . வாஜ்பாயை பாராட்டிய கையோடு
பி.ஜே.பி கூட்டணிக்கு தாவுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அதனுடன் கூட்டு இல்லை என்று கலைஞர் அறிவித்திருப்பது ஆச்சர்யமே . ஆனால் இன்னும் தேர்தலுக்கு குறைந்தது நான்கு மாதங்கள் உள்ள நிலையில் இது தான் அவருடைய உறுதியான முடிவா என்பதையும் சொல்வதற்கில்லை...
ஏனெனில் முன்பொரு முறை மத சார்புடைய (!) பி.ஜே.பி யுடன் கூட்டு இல்லை என்று சொன்ன
கலைஞர் அதனோடு கூட்டணி வைத்துக் கொண்ட பின் " நான் இருக்கும் இடத்தில் தான் மதசார்புக்கு இடமில்லையே " என்று மழுப்பியதை யாரும் மறந்திருக்க முடியாது . பெரிய கட்சியான தி.மு.க கூட்டணியில் சேர்ந்திருந்தால் பி.ஜே.பி க்கு அது வலு சேர்க்கும் என்றாலும் ஊழலுக்கு எதிரான அதன் பிரச்சாரத்திற்கு பெரிய சறுக்கலை ஏற்படுத்தியிருக்கும் ...
கடைசியில் ஒரு வழியாக இரண்டு பிரதான கழகங்களும் காங்கிரசை கை கழுவியிருக்கும் இந்த வேளையில்
ம.தி.மு.க ., பா.ம.க போன்ற இதர கட்சிககளை தன்னுடன் இணைத்துக் கொண்டு பி.ஜே.பி தேர்தலை சந்திப்பது தன்னை மேலும் வலுப்படுத்திக்கொள்ள அதற்கு பெரிய வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை . பி.ஜே.பி யை தீண்டத்தகாத கட்சி போல வர்ணித்து வந்த காங்கிரசிற்கு இன்று அதே நிலை ஏற்பட்டிருப்பதும் எதிர்பார்த்ததே...
தி.மு.க வுடன் கூட்டணி வைப்பதை விட தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதே
தே.மு.தி.க விற்கு வலிமை சேர்க்கும் . 2016 இல் நடக்கவிருக்கும் சட்டசமன்ற தேர்தலுக்கும் தன் தலைமையில் கூட்டணியை தயார்படுத்திக் கொள்ள விஜயகாந்திக்கு இந்த கூட்டணி அருமையான சந்தர்ப்பம் . காங்கிரஸ் மேல் எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் பி.ஜே.பி யுடன் சேர்வது அவரது சரிந்த செல்வாக்கை கொஞ்சமேனும் தூக்கி நிறுத்தும் என எதிர்பார்க்கலாம் ...
நடந்து முடிந்த ஐந்து சட்டமன்ற தேர்தல்களில் பி.ஜே.பி மூன்றில் ஜெயித்திருப்பதும் , பெரும்பான்மை கிடைக்காமல் போனாலும்
32 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக டில்லியில் உருவெடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது . மூன்று மாநிலங்களை கைப்பற்றியதை கணக்கில் கொள்ளாமல் டில்லியில் தோற்றதையே காரணமாக்கி மோடி அலையெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல சில மீடியாக்கள் விஷமமாக பிரச்சாரம் செய்து வருவது வேடிக்கையாக இருக்கிறது . டில்லியை பொறுத்த வரை காங்கிரஷிற்கு எதிரான ஓட்டுக்கள் பி.ஜே.பி க்கு மட்டும் விழாமல்
ஆம் ஆத்மி க்கும் சென்றதே பி.ஜ.பி யின் சறுக்கலுக்கு காரணம் . ஆனால் தேசிய அளவில் காங்கிரஷிற்கு வலுவான மாற்றாக பி.ஜே.பி மட்டுமே உள்ளது ...
அதே நேரத்தில் திரிமூணல் , எஸ்.பி ,
அ.தி.மு.க உள்ளிட்ட வலுவான பிராந்திய கட்சிகள் காங்கிரஷிற்கு எதிரான ஓட்டுக்கள் பி.ஜே.பி க்கு மட்டும் போகாமல் பார்த்துக் கொள்ளும் . பிஹார் , ஓடிஸா இரண்டிலும் தனக்கிருந்த வலுவான கூட்டணியை பி.ஜே.பி இழந்திருப்பதும் அதற்கு பெரிய சறுக்கல் . மோடி அலை இதையனைத்தும் சரிக்கட்டுவது கஷ்டமே . இருப்பினும் பி.ஜே.பி வலுவாக உள்ள குஜராத் , மத்திய பிரதேஷம் , ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களையும் சேர்த்து 200 இடங்களுக்கு மேல் கிடைத்து விட்டால் அது ஆட்சியமைப்பது உறுதி . இதை மனதில் வைத்து அவர்கள் தேர்தல் வியூகம் அமைப்பார்கள் என்று நம்பலாம் ...
தங்களால் ஆட்சி அமைக்க முடியாதது கிட்டத்தட்ட உறுதியானதால் பி.ஜே.பி யை வர விடாமல் தடுப்பதே காங்கிரசின் முக்கிய குறிக்கோளாக இருக்கும் . பிராந்திய கட்சிகளின் களப்பில் அமையும் மூன்றாவது அணிக்கு அது வெளியிலிருந்து ஆதரவு தரலாம் . இந்த கட்சிகளுக்குள் யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பது என்பது இமாலய சிக்கல் . அப்படியே ஒருவரை ஒருமித்த ஆதரவுடன் தேர்ந்தெடுத்தாலும் அவர் எத்தனை நாட்கள் பிரதமாராக நீடிப்பார் என்பது கேள்விக்குறி . ஏற்கனவே இது போன்ற சிக்கலான சந்தர்ப்பங்களை இந்திய ஜனநாயகம் சந்தித்திருக்கிறது ...
பல விதமான பிரச்சனைகளையும் தாண்டி இன்று மக்கள் முன் நிற்கும் மிகப்பெரிய பிரச்னை விலைவாசி உயர்வு . அடுத்து
பி.ஜே.பி ஆட்சியமைத்தாலே இதனை உடனடியாக சரிக்கட்ட முடியாது , அப்படியிருக்க யார் வழி நடத்தப் போகிற தலைவர் என்பது தெரியாமலேயே பல கட்சிகள் அணி சேர்ந்து ஆட்சியமைத்தால் ஏற்கனவே படு குழியில் இருக்கும் நமது பெருளாதாரம் அதள பாதாளத்திற்குள் போவது உறுதி ...
இப்பொழுதிருக்கும் சூழ்நிலையில் குழப்பமில்லாத நிலையான ஆட்சியை மத்தியில் அமர்த்துவதே ஒவ்வொரு குடிமகனின் தலையாய ஜனநாயக கடமை . அதற்கு பி.ஜே.பி ,
காங்கிரஸ் , அ.தி.மு.க , தி.மு.க என்று கட்சிகளின் தனிப்பட்ட நிறை குறைகளையும் தாண்டி நாட்டை வழிநடத்துவதற்கு ஒரு நல்ல தலைவன் தேவை . இன்று நம் கண் முன் தெரியும் ஒரே தலைவன் மோடி . அவர் வந்து மட்டும் பெரிதாக என்ன செய்து விடப்போகிறார் என்று எதிர்மறையாக கேட்காமல் , ஒரு சாதாரண டீ வியாபாரியாக இருந்து இன்று ஒரு மாநிலத்திற்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலைமைச்சராகி அதை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கும் ஒருவர் ஏன் இந்திய நாட்டிற்க்கு பிரதமாராக வரக் கூடாது என்று ஒவ்வொருவரும் யோசிக்க ஆரம்பித்தால் ஒரு விடிவு பிறக்கும் ...
எது நடந்தாலும் காங்கிரஷிற்கு தான் ஓட்டுப் போடுவேன் என்பவர்கள் போட்டு விட்டுப் போகட்டும் . ஆனால் காங்கிரஸ் ஆட்சியின் மேல் வெறுப்பிலிருப்பவர்கள் தங்கள் ஓட்டுக்களை பி.ஜே.பி க்கு போடுவது மட்டுமே சரியான தீர்வு . ஏனெனில்
டில்லி யில் மக்கள் எடுத்த குழப்பமான முடிவால் அவர்கள் எந்த கட்சியை தூக்கியெறிய நினைத்தார்களோ அதே கட்சியின் ஆதரவுடன் தான் இன்று ஆம் ஆத்மி யே அரசமைக்க முடிகிறது . அதே போல
2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஷிற்கு எதிரான ஓட்டுக்கள் அனைத்தும் பி.ஜே.பி க்கு சென்றடையாத நிலையில் காங்கிரசின் ஆதரவுடன் மீண்டும் பல கட்சிகளின் கூட்டணியாட்சி அமையக் கூடிய பரிதாபமான நிலைக்கு நாளை மீண்டும் நாம் தள்ளப்படலாம் . அப்படி ஒரு நிலைமை வராமல் இருப்பதற்கு ஒரே தீர்வு
மோடி ஆர் நோபடி ...