26 January 2020

சைக்கோ - PSYCHO - ஸ்டன்னிங்க் ...



இசைஞானி - மிஸ்கின் கூட்டணி யில் உதயநிதி பார்வை இழந்தவராக நடித்திருக்கும் சைக்கோ திரில்லர் படம் சைக்கோ. ஏற்கனவே அஞ்சாதே , யுத்தம் செய் , பிசாசு போன்ற படங்களால்  நம்மை கவர்ந்த மிஸ்கின் பொலிவிழந்த உதயநிதியின் நடிப்போடு  இசை , ஒளிப்பதிவு , இயக்கம் என எல்லா டெக்கினிக்கல் சமாச்சாரங்களாலும் தமிழ் சினிமா உலகிற்கு ஒரு புது அனுபவத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் ...

The Chaser என்றொரு கொரியன் படம் அதில் சைக்கோ வில்லன் பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்வான் . அவனிடம் சிக்கிக்கொள்ளும் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை அவளுடைய ஓனரால் எவ்வளவு முயன்றும் காப்பாற்ற முடியாமல் போகும் . PSYCHO என்றொரு தமிழ் படம் அதில் சைக்கோ வில்லன் ( ராஜ்குமார் ) பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்கிறான்  . அவனிடம் சிக்கிக்கொள்ளும் ரேடியோ ஜாக்கி ( அதிதி ) யை கண் பார்வையிழந்த காதலன் ( உதயநிதி ) கஷ்டப்பட்டு மீட்கிறான் . The Chaser படத்தின் நாட்டை தனக்கேற்ற பாணியில் மிஸ்கின் கவனிக்கும் படி சொல்லியிருக்கும் படமே சைக்கோ ...

அமுல் பேபி போல முகம் இருந்தாலும் ( The Chaser லும் அப்படியே ) க்ளோஸ் அப் காட்சிகளில் பார்வையாலேயே மிரட்டுகிறார் புதுமுக வில்லன் அங்குலுமாலியாக வரும் ராஜ்குமார். அடிக்காதீங்க டீச்சர்  என்று இவர் க்ளைமேக்ஸ் காட்சிகளில் கதறும் நடிப்பில் கவருகிறார் . அம்மாவையே வாடி போடீ என்று வசைபாடும் முதல் சீனிலேயே அதிரடியாக அறிமுகம் ஆகிறார் நித்யா மேனன் . வீல்சேரிலேயே வலம் வந்தாலும் இவருடைய கேரக்டர் படத்தை தொய்வில்லாமல் நிமிர வைக்கிறது  . பொதுவாக மிஸ்கின் படங்களில் ஹீரோக்கள் செய்யும் எக்சன்ட்ரிக் ரோலை இதில் நித்யா மேனன் திறம்பட செய்திருக்கிறார் ...

ஆர்ஜே வாக வரும் அதிதி பார்வையில்லாதவனையே கவரும் அளவுக்கு அழகாக இருக்கிறார் . காதலையே கன்ஃபார்ம் பண்ணாமல் இன்னும் ஒரு வாரத்தில் கவுதம் ( உதயநிதி ) உன்னை கொன்று விட்டு என்னை காப்பாற்றுவான் என தலையை வெட்ட வரும் வில்லனிடம் டயலாக் விடுவது சினிமாத்தனம் . அதே போல தலையை வெட்டி கொடூரமாக கொல்லும் சைக்கோவை இவர் குழந்தை என்று கடைசியில் சொல்வது நமக்கு கொலைவெறியை ஏற்றுகிறது . மேற்படி மூன்று கேரக்டர்களுக்கு பிறகே ஹீரோ உதயநிதி நமக்கு தெரிகிறார் . அவருடைய அலட்டிக்கொள்ளாத நடிப்பு ஓகே . அழுகின்ற சீன்களில் மூஞ்சியை மூடி ஒப்பேற்றுகிறார் . தேர்தல் பிரச்சாரங்களில் காட்டிய நடிப்பில் பாதியையாவது படத்தில் காட்டியிருக்கலாம் ...


மிஸ்கின் படம் என்பதையும் தாண்டி இந்த படத்திற்கு கிடைத்திருக்கும் ஓப்பனிங்கிற்கு முக்கிய காரணம் இசைஞானியின் இசையும் , சித் ஸ்ரீராம் குரலில் " உன்னை நெனைச்சு " பாடலும் தான் . அதை தவிர " நீங்க முடியுமா" பாடலிலும் பிஜிஎம் மிலும் தனது இசையால் மெஸ்மெரிஸம் செய்கிறார் இசைஞானி . பி.சி  யின் மாணவர் தன்வீரின் ஒளிப்பதிவு குருவை போலவே  கனகச்சிதம் . பெரும்பாலான காட்சிகள் இருட்டிலேயே நடந்தாலும் இவரது ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் ஒளியேற்றுகிறது . சிங்கம் புலி யின் கதாபாத்திரமும் அவரது முடிவும் சிம்ப்ளி சூப்பர்ப் . இன்ஸ்பெக்டராக வரும் ராமை விட டீச்சராக வரும் கேரக்டர் தான் படத்துக்கு பெரிய ஹைலைட் ...

முதல் சீனிலேயே சைக்கோ அறிமுகத்தால் நம்மை உறைய வைப்பது , காதல் காட்சிகளில் நேரத்தை வீணடிக்காமல் ஒரே பாடலில் அதன் வீரியத்தை உணர்த்தியது , நித்யா மேனன் கேரக்டரால் படத்துக்கு தேவையான பெப்பை கூட்டியது , வழக்கமான தமிழ் சினிமா போல கொலைகாரானுக்கு பெரிய
ப்ளாஸ்பேக்கெல்லாம் வைக்காமல் சில சீன்களிலேயே அதை உணர வைப்பது, பெண்ணின் உடலை அடையாளம் காட்டி விட்டு அழுது கொண்டே போகும் தாயாரை ஏரியல் சாட்டில் காட்டுவது என படம் நெடுக மிஸ்கினத்தனங்கள் நம்மை கட்டிப்போடுகின்றன ...

ஒவ்வொரு கொலைக்கு பிறகும் போலீஸ் வந்து தொப்பியை கழட்டுவதை தவிர கொலைகாரனை பிடிக்க வேறு எதையும் தீவிரமாக செய்யாதது சறுக்கல் . அதிலும் இந்த கொலைகாரனை பிடிக்கும் வேளையில் பிஸியாவே இருந்ததால் பொண்டாட்டியே ஓடிட்டா என்று சொல்லும் ராம் ஒரு சிசிடிவி யை கூட செக் செய்யாமல் இருப்பது பெருத்த  பின்னடைவு . சைக்கோ கொலைகாரனுக்கு ப்ளாஷ்பேக் இல்லாதது ஓகே ஆனால் அவர் பெண்களை மட்டும் கொலை செய்வதற்கும் அவர்கள் தலையை வெட்டி விட்டு உடலை மட்டும் உள்ளாடைகளுடன் பப்ளிக்கில் டிஸ்பிளே செய்வதற்கும் உளவியல் ரீதியாக ஒரு விளக்கம் கொடுக்காமல் விட்டது பெரிய மைனஸ் . வில்லனுக்கு கட்டை விரல் இல்லை என்கிற க்ளூவை சிங்கம் புலி விட்டுச்செல்வதை வில்லனை கண்டுபிடிக்கிறார்கள் ஆனால் க்ளோஸ் காட்சிகளில் வில்லனுக்கு கட்டை விரல் இருப்பது இமாலய கவனக்குறைவு ...

The Chaser , Red Dragon , I SAW Devil போன்ற படங்களை பார்த்தவர்களுக்கு Psycho
பெரிய அதிர்வை தராது ஆனால் தமிழ் படங்களை மட்டும் பார்க்கும் திரில்லர் விரும்பிகளுக்கு இந்த படம் மஸ்ட் வாட்ச் .  கடந்த வருடம் வெளி வந்த சீரியல் கில்லர் மூவி ராட்சனில் இருந்த நிறைவு சைக்கோ வில் மிஸ்ஸிங்.  ஆனாலும் கொலைகளை பட்டவர்த்தனமாக காட்சிப்படுத்திய விதங்களில் தமிழ் சினிமா உலகுக்கு சைக்கோ நிச்சயம் ஒரு ஸ்டன்னிங்க்  எக்ஸ்பீரியன்ஸ்...


ரேட்டிங் : 3.25 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 44 










17 January 2020

அவன் - அவள் - நிலா ( 16 ) ...


ப்பாவை பார்த்தவுடன் கார்த்திக்கின் போதை அப்படியே இறங்கியது . அவர் அவன் நண்பர்களையும் சேர்த்து முறைத்துப் பார்த்துக்  கொண்டிருந்தார் . ரமேஷ்  அண்ணனுக்கு என்று  ஏதோ சொல்ல வாய் திறந்தவன் பிறகு மூடிக்கொண்டான் . கடைக்காரர் மட்டும் வெளியே வந்து " உங்க பிள்ளையா சார் , தண்ணி போட்டா கண்ணு முன்னு தெரில பார்த்து சூதானமாக கூட்டிக்கிட்டு போங்க " என்று அக்கறையாக சொல்வது போல அவன் அப்பாவிடம் போட்டுக்கொடுத்தார் . கார்த்திக் என்ன செய்வதென்று புரியாமல் சுற்றிமுற்றி பார்த்தான் . அவனுக்கு உடனே தம்மடிக்க வேண்டும் போலிருந்தது . அப்பாவிடம் " நீ போப்பா நான் வீட்டுக்கு வரேன் " என்றான் . அவனையே முறைத்துப் பார்த்த அப்பா " ஏன் இன்னொரு ரவுண்டு பாக்கி இருக்கா ?! " என்றார் . " அப்பா அதெல்லாம் ஒண்ணுமில்ல நீ போன்றேன்ல " .
" போக முடியாதுடா நீ வந்தா தான் போவேன் " அவன் அப்பா பிடிவாதமாக நின்றார் ...

ரமேஷ் " மச்சி நீ வீட்டுக்கு போ , காலையில பேசிக்கலாம் "  என்று காதுக்குள் சொன்னான் . கார்த்திக்கிற்கு அப்படி நடுவிலே போவது சுத்தமாக பிடிக்கவில்லை . எத்தனை பேரோடு தண்ணியடித்தாலும் கடைசியில் ரமேஷும் , அவனும் விடிய விடிய பேசிக்கொண்டிருந்து விட்டு ரமேஷ் வீட்டு  மொட்டை மாடியில் படுத்து விடுவது தான் வழக்கம் . அதிலும் ரமேஷ் அண்ணனை இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் அவன் அருகில் இருக்க வேண்டும் . சுற்றியிருப்பவர்கள் நிச்சயம் அவனை ஏற்றிவிட்டு பிரச்சனையை இன்னும் பெரிதாக்கி விடுவார்கள் . அவன் யோசிப்பது புரியாமல் ரமேஷ் " வீட்டுக்கு போடா அப்பா அங்கேயே நிக்குறாரு " என்றான் . " என்ன துரைக்கு வீட்டுக்கு வர மனசு இல்லையா ? இப்போ வரலேன்னா ஜென்மத்துக்கும் வர வேண்டாம்னு சொல்லிடு " கார்த்திக் அப்பா தீர்க்கமாக சொன்னார் .
" இல்ல மாமா இப்போ வந்துடுவான் " ரமேஷ் அவன் கையை பிடித்து வலுக்கட்டாயமாக அப்பாவிடம் விட்டான் ...

" தள்ளுப்பா நான் ஒட்டுறேன் " என்றவனை " இன்னும் என்ன சுமக்கிற வயசும், திறனும் உனக்கு வரலடா " என்று சொல்லி அவனை பின்னால்  உட்கார வைத்து விட்டு சைக்கிளை மிதித்தார் அப்பா . அப்பா பின்னால்  உட்கார்ந்து சைக்கிளில் போகும் போது அவனுக்கு சின்ன வயதில் அவனை உட்கார வைத்து அவன் அப்பா தங்கம் தியேட்டருக்கு சிவாஜி படம் பார்க்க அழைத்து சென்றது நினைவுக்கு வந்தது . அப்பாவின் பிடியிலேயே அப்படியே சின்னப்பையனாகவே இருந்திருக்கக் கூடாதா என்று அவன் மனம் ஏங்கியது . அவன் தூங்கி விடக்கூடாதே என்பதற்காக அப்பா சிவாஜி பற்றி ஏதாவது சொல்லிக்கொண்டே வருவார் . சிவாஜி என்றால் அவருக்கு உயிர் . சிவாஜியுடன் ஒரு முறை சேர்ந்து  எடுத்துக்கொண்ட ஃபோட்டோ அவர் வீட்டில் நடுநாயகமாக வீற்றிருக்கும் . சிவாஜி என்னமோ அவனுக்கு பெரியப்பா என தோன்றுமளவிற்கு அவரை பற்றிய பேச்சு என்றுமே நிறைந்திருக்கும் ...

" ஏம்பா யாராவது மிருதங்கம் வாசிக்கும் போது இப்படி ரத்தம் கக்கி சாவாங்களா ? , எல்லாம் ஓவர் ஆக்டிங் " என்று வேண்டுமென்றே அவன் அப்பாவை வம்பிழுப்பான் . வேறு யாராவது இப்படி சொல்லியிருந்தால் அவன் அப்பா வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு போயிருப்பார் . அவன் கேட்டதுமே சிரித்துக்கொண்டே " டே அதெல்லாம் டைரக்டர் சொல்லனும்டா , அவர் நடிப்புல மெய் மறந்து செட்டே வாயடச்சு போயிருக்கும் " என்பார் . 
" இங்கிலிஷ் படத்துலல்லாம் யாராவது இப்படி ஓவரா அழறாங்களா ?" . 
" டே அவனுங்க அப்பா அம்மா  செத்தாக்கூட பெருசா அலட்டிக்காம அடுத்த வேலைய பார்க்கப் போயிடுவாங்க , நாம அப்படியா ? அந்தந்த சமூகத்துக்கு ஏத்த மாதிரி தாண்டா நடிப்பும் " என்று விளக்கமாக சொல்வார் . அவர்  சொன்னதில் நிறையவே அர்த்தம் இருந்தது ...

" அவ்வளவு ஏன் , இன்னிக்கு  இருக்குற ரெண்டு பெரிய ஸ்டார்களுக்குமே குரு சிவாஜி தான் . அதுவும் உன் ஹீரோ கமல் டாணா நடிச்சாரே என்ன படம் ?" 
" நாயகன் " உடனே பதில் சொல்வான் . " ம் அதோட ஒரிஜினல் " காட் ஃபாதர் " ஓட ஹீரோ மார்லன் ப்ராண்டோ , அவரையே தன்  நடிப்பை பார்த்து வாயப்பொளக்க  வச்சவர் டா நடிகர் திலகம் , சின்னப்பயலே " என்று ஓங்கி அவன் தொடையில் தட்டுவார் . " அப்பா " என்று கத்திக்கொண்டே அவன் அங்கிருந்து ஓடுவான் . அப்பா மகன் இருவருக்குமே ஆதர்ச நாயகர்கள் நடித்த தேவர் மகன் படத்தை அவன் பல முறை பார்த்திருப்பான் . ஆனாலும் அப்பாவுடன் அதை பார்க்க வேண்டுமென்று அவன் ப்ளான் செய்த போதெல்லாம் ஏனோ அது முடியாமலேயே போய் விட்டது . இதோ ரஜினியுடன் சிவாஜி நடித்த படமே வந்து விட்டது . அப்பா எதுவும் பேசாமல் சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தார் . " அப்பா நான் ஓட்டவாப்பா " என்றவனை " பேசாம வாடா "  என்று கடிந்து கொண்டார் ...

இருவருக்குள்ளும் இருக்கும் அளவு கடந்த பாசத்தை இருவருமே வெளியில்  காட்டிக்கொண்டதில்லை. பத்து நிமிடம் சேர்ந்த மாதிரி உட்கார்ந்து பேசினாலே அது ஏதோ வாக்குவாதத்திலோ அல்லது  சண்டையிலோ போய் முடிந்துவிடும் . அப்பாவின் அளவு கடந்த கோபத்தை அம்மா மட்டுமல்ல  அனைவரும் சகித்துக்கொள்வது எப்படி என்கிற ஆச்சர்யம் அவனுக்கு எப்பொழுதுமே இருக்கும் . கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பது போல அவர் சுற்றியிருப்பவர்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார் , ஒரு பிரச்சனை என்றால் ஓடி வந்திருக்கிறார் . அதுவே கூட அவரை மற்றவர்கள் சகித்துக்கொள்வதற்கு காரணமாக இருந்திருக்கலாம் . ஆனால் அவனால்  மட்டுமென்னவோ அவர் சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை .அப்பாவை எதிர்த்து பேசாதே என்று  அம்மா பல தடவை சொல்லியும் அவன் அதை சட்டை செய்ததில்லை ...

இருவருக்குமிடையே  அடிக்கடி வரும் சண்டைகளுக்கு கிரக கோளாறு தான் காரணம் என்றார் ஜோசியர் . இருவருக்குமிடையேயான அதிக அளவு வயது
( 44 ) வித்தியாசம் தான் காரணம் என்றார்கள் குடும்ப நண்பர்கள் . ஆனால் இருவருக்குள்ளும் இருக்கும் அதீத அன்பு தான் அனைத்து சண்டைகளுக்கு காரணம் என அப்போது அவனுக்கு புரியவில்லை . ஒரு முறை தங்கம் தியேட்டரில் பட இண்டெர்வெல்லில் அப்பா சிகெரெட் பிடிப்பதை பார்த்து அவனும் கேட்டு அடம் பிடிக்க அந்த சிறுவனின் எதிர்காலம் கருதி அன்றிலிருந்து அவனுக்கு முன் சிகெரெட் பிடிப்பதையே விட்டுவிட்டார். அந்த சம்பவத்திற்கு பிறகு அப்பா காலைக்கடன் கழித்து வந்தவுடன் டாய்லெட் உள்ளே போகும் போது சிகெரெட் ஸ்மெல் நன்றாகவே அடிக்கும் . அதை பயன்படுத்தி அவனும் நிறைய தடவை திருட்டு தம் அடித்திருக்கிறான் . அவன் ஓரளவு பெரியவனானதும் அவன் அப்பா அவனை கண்டும் காணாமல் பெருந்தன்மையாக இருந்திருக்கிறார் . ஆனால் இன்று தண்ணியடித்து விட்டு  தகராறு பண்ணும் போது கையும் களவுமாக அவரிடம் மாட்டுவோமென்று அவன் நினைத்திருக்கவில்லை ....

நேராக வீட்டுக்கு வந்ததும் சைக்கிளை  மெயின் ஸ்டான்ட் போட்டு விட்டு அவனை சைட் வழியாக பின்னால் இருக்கும் பாத்ரூமுக்கு கூட்டிக்கொண்டு போனார் . ஷவரை திறந்து விட்டு அதில் பதினைந்து நிமிடம் நின்ற பிறகு தான் அவனுக்கு போதை இறங்கியது . கதவிலேயே துண்டு கிடந்தது . அவன் சிறு வயதில் அப்பா இதையெல்லாம் அவனுக்கு செய்திருக்கிறார் . ஆனால் அவனுக்கு இப்போது தர்ம சங்கடமாக இருந்தது . இந்த மனுஷன் எதுக்கு இதெல்லாம் பண்ணி இன்னும் நம்மள நாறடிக்கிறார் என்றே அவனுக்கு தோன்றியது . ஆனால் அவர் செய்த எதிலுமே துளி எதிர்பார்ப்போ , செயற்கைத்தனமோ இல்லையென்பது அவனுக்கு புரிந்தது . அவனுடைய  எதிர்காலம் குறித்த கவலையே அவருக்கு அதிகமாக இருந்தது . தான் சரியாக கவனிக்காததால் தான் அவன் இந்த அளவுக்கு போய்  விட்டானோ என்கிற குற்ற உணர்வும்  அவருக்கு மேலோங்கியிருந்தது ...

அவன் உள்ளே வந்த நடையிலிருந்தே என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்த அம்மா அவன் குளித்து விட்டு வருவதற்காக காத்திருந்தவள் போல கத்த ஆரம்பித்தாள் . அவன் அப்பா ஒரு முறை முறைத்தவுடன் அடங்கி அடுப்பங்கரைக்கு போனவள் பாத்திரத்துடன் போட்ட சண்டை ஹாலில் நன்றாகவே கேட்டது . " உங்க புள்ளையாண்டான் ஏதாவது சாப்பிடுறானான்னு கேட்டு சொல்லுங்க " என்று அம்மா கேட்டவுடன் தான் அவனுக்கு பசி உரைத்தது . ஆம்லெட்டுக்கு சீனி கேட்டு அவன் செய்த களேபரத்தில்  ஒழுங்காக சாப்பிடவேயில்லை . தட்டை எடுத்துக்கொண்டு தரையில் உட்கார்ந்தான் . என்ன அமளி துமளி நடந்தாலும் வயிற்றுக்கு உணவிட வேண்டும் என்பதை பற்றி எப்பொழுதுமே சிந்திக்கும் ஒரே  ஜீவராசி அம்மா தான் . " என்ன மிளகாப்பொடி தானா ? சட்னி இல்லையா " அவன் கேட்டவுடனே " ஆமாமா நீ பண்ணிட்டு வந்த வேலைக்கு சட்னி , சாம்பார் லாம் பண்ணி வைக்கிறாங்க " என்று சத்தம் போட்டு விட்டு " பக்கத்துல சீனி வேணா இருக்கு போட்டுக்கோ " என்று சொல்லவே அவனுக்கு குபீரென்று சிரிப்பு வந்தது. அவன் எதற்கு சிரிக்கிறான் என்று புரியாமலேயே அவனை பார்த்தவுடன் அவன் அம்மாவுக்கும் சிரிப்பு தானாக வந்தது ...

சாப்பிட்டு முடித்தவுடன் வாசல் வராண்டாவை தாண்டி தெருவுக்கு போக முற்பட்டவனை அவன் அப்பா குரல் தடுத்தது . " கொஞ்சம் உட்காரு உன் கூட பேசணும் " . அவன் எதை அவாய்ட் செய்ய வேண்டுமென்று நினைத்தானோ அது முடியாமல் போனது . " சொல்லுப்பா " என்று எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான் . " இது  வரைக்கும் உன் விஷயத்துல நான் குறுக்க வந்ததில்லை ஆனா நான் இனிமேலும் வராம இருக்கறது நல்லதா படல " . அப்பா ஏதோ முடிவெடுத்தது போல பேசத்  தொடங்கினார் .  " நானும் நீ எல்லாத்தையும் நிறுத்திட்டு நார்மலாயிடுவேன்னு பாத்தேன் ஆனா எதுவுமே நடக்கல " அவர் பேசும் போதே அவன் குறுக்கிட்டு " இப்போ என்ன " என்று ஆரம்பிக்கும் போதே " இனிமேலும் என்னடா நடக்கணும் " என்று அவர் தெருவே கேக்கும்படி கத்தினார் . " இன்னிக்கு கடைக்காரன போட்டு அடிக்கிற , அடுத்து ரமேஷ் அண்ணனை கொன்னவன  ஏதாவது பண்ணிட்டு ஜெயிலுக்கு போவ , நீ திரும்ப வந்தவுடனே சும்மா விடுவாங்களா ? உன்ன அவனுங்க எதாவது பண்ணுவானுங்க , இதுக்காகவாடா உன்ன படிக்க வச்சேன் " . அவன் அப்பாவின் கண்களில் முதன்முதலாக கண்ணீரை பார்த்தவுடன் அவனால் எதுவும் பேச முடியவில்லை . " நான் முடிவு பண்ணிட்டேன் இனிமே நீ இங்க இருக்க வேணாம் , மெட்ராஸ் ல இருக்குற என் தம்பி வீட்டுக்கு போ , அங்க ஏதாவது வேலை தேடிக்கோ " . அவர் சொன்னவுடன் தனது  சினிமாக்கனவுக்கு மெட்ராஸ்  உகந்தது தான் என்று யோசித்தவன் " அப்பா என்னால வேற வேலைக்குல்லாம் போக முடியாது நான் ஆட் ஏஜென்சில சேரப்போறேன் " என்று சொன்னான் . அவனை ஏற இறங்க பார்த்தவர்  " நீ என்ன எழவு வேணா பண்ணு  ஆனா இங்க பண்ணாத மெட்ராஸ் ல போய் பண்ணு  " . அவர் தீர்க்கமாக சொல்லிவிட்டு நகர்ந்தார் . அந்த கடையிலிருந்து அவனை வீட்டுக்கு கூட்டி வந்து அவனது எதிர்காலத்தையே  அப்பா மாற்றியிருக்கிறார் என்பது அவனுக்கு சில காலங்கள் கழித்து  புரிந்தது ...

தொடரும் ...


11 January 2020

தர்பார் - DARBAR - நோ ஏஜ் பார் ...




மணா , கஜினி , துப்பாக்கி என மாஸ் ஹிட்ஸ் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் அதற்கு மேல் மாஸ் ஹிட்ஸை கையில் வைத்திருக்கும் சூப்பர் ஸ்டாருடன் முதன்முதலாக இணைந்திருக்கும் படம் தர்பார் . இரண்டு கமர்ஸியல் ஜாம்பவான்கள் இணைந்ததால் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லை . அதை நிறைவேற்றினார்களா ? அலசலாம் ...

மும்பையில் கேங்க்ஸ்டர்களை தொடர்ந்து  என்கவுன்டர் செய்கிறார் கமிஷனர் ஆதித்யா அருணாச்சலம் ( ரஜினி ) . அவர் ஏன் டில்லியிலிருந்து மும்பைக்கு வந்தார் ? அவரின் வெறித்தனத்துக்கு என்ன காரணம் ? அவரின் ஒரே மகள் வள்ளிக்கு ( நிவேதா தாமஸ் ) நடந்தது என்ன ? வேர்ல்ட் கேங்க் லீடர் ஹரி சோப்ராவை ( சுனில் ஷெட்டி ) அவர் அழித்தாரா ? என எல்லா கேள்விகளுக்கும் விடையை முதல்பாதியில் எக்ஸ்பிரஸ் வேகத்திலும் , இரண்டாம் பாதியில் பேசஞ்சர் வேகத்திலும் சொல்லியிருப்பதே தர்பார் ...

70 வயதிலும் அதே வேகம் , அதே ஸ்டைல் , அதே குறும்பு என படம் முழுவதும் ரஜினி சும்மா கிழித்திருக்கிறார் . நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வருபவர்களுக்கு " கண்ணா இங்கே பார் " என்று தனக்கு ரிட்டையர்மெண்ட் இல்லையென நிரூபித்திருக்கிறார் . யோகி பாபுவின் நக்கல்களுக்கு " இரு உன்னை வச்சுக்கிறேன் " என வித்தியாசமான மாடுலேஷன்களில் சொல்வதெல்லாம் சூப்பருக்கு மட்டுமே கை வந்த கலை.
ஆக்சன் அதிரடிகளை  தாண்டி மகளுக்காக அவர் உருகும் காட்சிகள் படத்தின் ஹைலைட் . இப்படியே போச்சுன்னா மனுஷன் 2026 க்கு கூட அரசியலுக்கு வருவது அதிசியம் தான் போல ?! ...

நயன்தாராவுக்கு கஜினி யிலாவது தனியாக ஒரு அயிட்டம் சாங்க்  இருந்தது . ஆனால் இதில் யோகி பாபு அளவுக்கு கூட அவருக்கு சீன்கள் இல்லாதது நயன் பேரவை ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே ! இமாலய சூப்பர் ஸ்டாருக்கு முன்னாலும் தன் உருக்கமான நடிப்பால் கவர வைக்கிறார் நிவேதா தாமஸ் . 
ஐ.சி.யு வில் படுத்திருக்கும் அப்பாவுக்கு அருகில் கட்டிக்கொண்டு படுக்கும் காட்சி கல் மனதையும் கரைய வைத்துவிடும் ...


முதல் பாதியில் சீரியசான என்கவுன்டர்களுக்கு மத்தியில்  தன் கவுண்டர்களால் நன்றாகவே  கிச்சு கிச்சு மூட்டுகிறார் யோகி பாபு . இடைவேளைக்கு பின்னரும் இவரை  யூஸ் செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது . மெய்ன் வில்லன் சுனில் ஷெட்டி ஆரம்பத்தில் கவனிக்க வைத்து பின் வழக்கம் போல ஹீரோ கையால் அடி வாங்கி சாகிறார் . அனிருத் அருணாச்சலம் பட பிஜிஎம் மை  புது பாணியில் போட்டு மிரட்டுகிறார் . மற்றபடி " சும்மா கிழி " பாடல் தவிர அவர் பெரிதாக ஒன்றும் கிழிக்கவில்லை. பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சிகள் அருமையாக படமாக்கப்பட்டிருக்கின்றன...

சூப்பர் ஸ்டார் படம் , பொங்கல் விடுமுறை , ஹீரோ - இயக்குனர் இருவருக்குமே முந்தைய  படங்களின் வெற்றி இவையெல்லாமே படத்தின் கமர்ஸியல் சக்ஸசுக்கு  பெரிய கை கொடுக்கும் . ரஜினி இந்த வயதிலும் ஃப்ரெஸ்ஸாக , துடிப்பாக  இருக்கிறார் ஆனால் அதே போல கதையும் , திரைக்கதையும் இல்லாதது துரதிருஷ்டமே . மாஸ் ஹீரோ  படங்களில் லாஜிக் பார்க்கக்கூடாது தான் . அதுக்காக இப்படியா ? ரஜினி நிஜத்தில் தான் சூப்பர் ஸ்டார் ஆனால் கதைப்படி அவர் கமிஷனர் தானே தவிர கடவுள் இல்லையென்பதை இயக்குனர் ஏனோ மறந்து விட்டார் . இரண்டாம் பாதியை ஹீரோ - வில்லன் விளையாட்டாக சுவாரசியமாக கொண்டு செல்லாமல் வெறும் சென்டிமென்டை மட்டும் நம்பியது சறுக்கல் ...

ரஜினி - நயன் உறவுக்குள்ளான குழப்பம் , க்ளைமேக்சில் துப்பாக்கியை தூக்கிப்போட்டு விட்டு சவடால் பேசி அடி வாங்கும் வில்லனின் டெம்ப்லேட் காட்சிகள் , ஹீரோ தான் ஜெயிப்பான் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதில் எந்தவிதமான சேலஞ்சும் இல்லாமல் போகும் ஃப்ளாட்டான ஸ்க்ரீன்ப்ளே , கபாலி , பேட்ட என்று ரஜினியின் சமீபத்திய படங்களையே நினைவுபடுத்தும் சீன்கள் இவையெல்லாம் தாறுமாறாக இருந்திருக்க வேண்டிய தர்பாரை தடம் மாற்றுகின்றன ...

ரத்தம் , சதை , நாடி நரம்பெல்லாம் ரஜினி வெறி ஊறிப்போன ரசிகர்களுக்கும்  , பொங்கலுக்கு குடும்பத்தோட ஏதோ ஒரு படத்துக்கு போனும் என்று நினைப்பவர்களுக்கும் படம் நிச்சயம் பிடிக்கும் . ஹீரோவையும் தாண்டி படமே நல்ல அனுபவமாக இருக்க வேண்டுமென நினைப்பவர்களுக்கு
( பாட்சா , படையப்பா )  ரஜினியே படத்தில்  " எம்ஜிஆர் ஏன் மூணு தடவ அடி  வாங்குறார் தெரியுமா " என்று சொல்வது போல " நாம ரஜினிக்காக மூணு அடிக்கு மேலயே வாங்குறோமோ ?! என்றே தோன்றும் ஆனால்
" நம்புறவங்களுக்கு வயசு வெறும் நம்பர் " என்று டயலாக் மட்டும் பேசாமல் நிரூபித்தே காட்டியிருக்கும் சூப்பர் ஸ்டாருக்காக அதை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம்  ...

( டிஸ்கி : நான் ரஜினி யின் அரசியல் வருகையை வரவேற்கிறேன் , நடிகராகவும் மதிக்கிறேன் ஆனால் ஒரு விமர்சகனாக அவர் நடிக்கும் படம் எப்படி இருந்தாலும் பாராட்ட வேண்டுமென்பதில்லை . இது புரியாதவர்கள் சுற்றும் கம்புக்கு நிர்வாகம் பொறுப்பல்ல ) ...

ரேட்டிங் : 2.5 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 41 








4 January 2020

அவன் - அவள் - நிலா (15) ...


கார்த்திக்கிற்கு எல்லாமே வெறுமையாக இருந்தது . எல்லோரும்  கூட்டம் கூட்டமாக அண்ணனை  எப்படி சம்பவம் செய்தார்கள் என்பது பற்றி விவாதத்தில் இருந்தார்கள் . அண்ணன் காரியம் முடியறதுக்குள்ள அவிய்ங்கள போட்ரனும் ரமேசு என்று அவனுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்கள் . கார்த்திக் எதிலுமே கலந்து கொள்ளாமல் ஒரு ஓரமாக மரத்தடியில் உட்கார்ந்திருந்தான் . ரமேஷ் தன்னைப்போல ஆகாமல் நல்ல படியாக படித்து பெரிய ஆளாக வேண்டுமென்று அண்ணன் அடிக்கடி சொன்னது மட்டும் கார்த்திக் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது .
" சிங்கம் மாதிரி நடந்து வருவானே இப்படி செதச்சிட்டாய்ங்களே " ரமேஷ் அம்மா இடைவிடாது அழுது கொண்டே இருந்தாள் . கடந்த முறை அவர் வீட்டுக்கு போயிருந்த போது ரமேஷ் அம்மா ஒரு பெண்ணின் படத்தை காட்டி
" கார்த்தி தம்பி பொண்ணு மூக்கும் முழியுமா லட்சணமா ஹீரோயினி மாரி இருக்காள்ல "? , கார்த்திக் அம்மா காட்டிய ஃ போட்டோவை பார்த்தான் .
" தேவர் மகன் படத்துல வர  ரேவதி மாதிரி இருக்காம்மா " .
" அப்படி சொல்றா கண்ணு , அண்ணனுக்காக பார்த்திருக்கேன் , அப்புறமா அவன் கிட்ட நீயே சொல்லு " என்று ஃபோட்டோவை அவனிடம் கொடுத்து விட்டு உலையை இறக்க அடுப்பங்கரைக்கு ஓடினாள் ...

எப்பொழுது வீட்டுக்கு போனாலும் அவனை சாப்பிட சொல்லாமல் இருந்ததேயில்லை . அவன் வேண்டாம் என்று சொன்னாலும் எதையாவது கொடுக்காமல் விட மாட்டாள் . " ஏண்டி நீ பாட்டுக்கு அவனுக்கு கோழியா வைக்குற , நமக்கு பாவம் வரதுக்கா ?" ஒரு முறை ரமேஷ் பாட்டி கேட்ட பொழுது " ஆமா அப்படியே வரப்போகுது , அவன் பொறந்தது மட்டும் தான் அங்க , மத்தபடி நம்ம பய " என்று ரமேஷ் அம்மா சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவன் பாவ புண்ணியத்தையெல்லாம் கணக்கு பார்க்காமல் நாட்டுக்கோழியை ருசித்துக்கொண்டிருந்தான் . அப்படி பார்த்த பெண்மணியை இன்று தலைவிரி கோலமாக பார்க்க என்னமோ போலிருந்தது .  கணவன் இறந்த போது கூட கல்லு போல தைரியமாக இருந்தவரை புத்திர சோகம் உருக்குலைய செய்து விட்டது . பழசையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தவன் விரல்களை தம் சுட்டவுடன் சுருக்கென்று எரிய அதை தூக்கிப்போட்டு விட்டு நிமிர்ந்தான் . பலதரப்பட்ட கும்பலுக்கு நடுவே பேசிக்கொண்டிருந்த ரமேஷ் மற்றும் நண்பர்கள் சிறிது விலகி அவனை நோக்கி நடந்து வந்தார்கள் ...

அவர்கள் அருகே வந்ததும் கார்த்திக் மரத்தடியில் இருந்து எழுந்து நின்றான் .
" மச்சி சண்முகம் அண்ணன் வந்தாருடா " அவன் தெரியும் என்பது போல மண்டையாட்டினான் . " அண்ணன ராஜாவும் அவன் கூட்டாளிகளும் தான் ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கானுங்க , நாம மடக்கறதுக்குள்ள கோர்ட்ல
சரண்டர் ஆயிடலாம்னு பிளான் போட்ருக்காய்ங்கலாம் " . " ம்ம் " என்று கார்த்திக் கேட்டுக்கொண்டான் . " என்னடா சீரியஸா சொல்லிட்டிருக்கேன் , ம்ம்ன்ற " ரமேஷ் கோபத்தோடு கேட்க , " அண்ணன் ப்ரொட்யூசர் கொடுப்பாருன்னு கனவுல இருந்தான் , இப்போ அது போயிடுச்சேன்னு கவலையில இருப்பான் " , வேண்டுமென்றே கூட்டத்தில் ஒரு அல்லக்கை ரமேஷை ஸ்க்ரூ செய்தான் . கார்த்திக் பதில் சொல்வதற்குள் " ஒம்மால உன் வாய மூடுறீயா " என்று ரமேஷ் அவன் வாயை அடைத்தான் . " நீ சொல்லு மச்சி " என்று மறுபடியும் ரமேஷ் கேட்டான் . " என்ன அவிய்ங்களுக்கு ஸ்கெட்ச் போடணுமா ?" , கார்த்திக் கேட்க ரமேஷுக்கு புது தெம்பு வந்தது ...

" ஆனா என்ன ஸ்கெட்ச் போட்டாலும் மாட்டாம இருக்க முடியாது , அண்ணன போட்டது யாருன்னு இந்நேரம் போலீசும் ஸ்மெல் பண்ணியிருக்கும் , அவிய்ங்களுக்கு  எதாவது ஆச்சுன்னா நம்ம கிட்ட தான் வரும் " .
" அப்போ யாரு அண்ணனை  போட்டதுன்னு தெரிஞ்சும் பொட்ட மாதிரி பம்மிக்கிட்டு இருக்க சொல்றியா " ரமேஷ் வெடித்தான் .
" மாப்பிள்ளை நான் சத்தியமா அப்படி சொல்லல , ஆனா ஒரு நிமிஷம்  உன் அம்மாவை பாரு , நீயும் ஏதாவது பண்ணிட்டு ஜெயிலுக்கு போய்ட்டா  அவங்களுக்கு யாரு இருக்கா " கார்த்திக் கை காட்டிய திசையில் அவன் அம்மா ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள் . கல் மனதையும் கரைத்து விடும் கதறல் அது . ரமேஷ் டென்ஷனில் ஒரு தம்மை பற்ற வைத்தான் . ஒரே  இழுப்பில் அதை தூர போட்டு விட்டு ஓவென்று கார்த்திக்கை கட்டிக்கொண்டு அழுதான் .
" மச்சி ஒரே நாள்ல இப்படி எல்லாத்தையும் பொரட்டிப் போட்டுட்டாய்ங்களேடா " . அவன் அழுவதை பார்க்கும் போது கார்திக்கிற்கும் அழுகையும் , ஆத்திரமும் பொத்திக்கொண்டு வந்தது . எதிர்காலமாவது மண்ணாவது அப்படியே போய் அவனுங்களை போட்டுத்தள்ளிட்டு உள்ளே போய் விடலாம் போல இருந்தது .  ஆனால் அவன் உள்ளுணர்வு அதற்கு எதிராக எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருந்தது ...

துக்கம் விசாரித்த பிறகு ஒவ்வொருவராக சொல்லிக்கொள்ளாமல்
கிளம்பிக்கொண்டிருந்தார்கள் . ரமேஷ் அப்பாவின் நண்பர்கள் ஒரு குழுவாக சாராயம் அடித்துக்கொண்டிருந்தார்கள் . சொந்தக்காரர்கள் ஓரளவு கிளம்பி விட கார்த்திக் , ரமேஷ் மற்றும் நண்பர்கள் என்ன செய்வதென்று குழம்பிப் போயிருந்தார்கள் . அதற்கு மேல் பொறுக்க முடியாமல் வழக்கம் போல மர்ரு வும் மொக்கையும் போய் சரக்கை வாங்கிக் கொண்டு வந்தார்கள் . ரமேஷ் அவன் அம்மாவை ஒரு முறை பார்த்துக்கொண்டான் . சொந்தக்காரர்களுடன் அண்ணனின் பழைய கதைகளை பேசிக்கொண்டிருந்தாள் . நிச்சயமாய் அங்கிருந்து நகர மாட்டாள் . ரமேஷும் கார்த்திக் அண்ட் நண்பர்களுடன் சேர்ந்து மொட்டை மாடிக்கு போனான் . அங்கிருந்தஒரு போர்வையை உதறிப் போட்டுக்கொண்டு அமர்ந்தார்கள் .  பொதுவாக சரக்குடன் சோடா , தண்ணீர் சேர்த்து மெதுவாக அடிக்கும் ரமேஷ் அன்று ராவாக அடித்தான் . அதை தடுக்கும் நேரத்தில் கார்த்திக் தன்னுடைய மிக்சிங்கை மறந்து அப்படியே அடித்து விட்டான் . இருவருக்கும் தலை சுற்றி என்னமோ செய்தது . ஆனால் நிறுத்தாமல் அடித்துக்கொண்டிருந்தார்கள் ...

" அண்ணனை கொன்ன ஒவ்வொருத்தன் கதையையும் முடிக்கணும் மாப்பிள்ளை "கார்த்திக் கத்திக்கொண்டே பீர் பாட்டிலை தரையில் அடித்து உடைத்தான் .  சரக்கு ஏறினாலே அவனை சமாளிப்பது கஷ்டம் அதிலும் எதையும் கலக்காமல் ராவாக அடித்திருக்கிறான் என்ன நடக்குமோ என்று மற்றவர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள் . " ஒர்த்தனையும் விடக்கூடாதுடா " என்று கார்த்திக் கத்த ரமேஷும் சேர்ந்து  கொண்டான் . மொக்கை உடனே கீழே எட்டிப்பார்த்து விட்டு வந்து " மச்சி கத்தாதடா அம்மா சத்தம் கேட்டு மேல வந்துடப்போறாங்க " அவன் அம்மா பேரை சொன்னவுடன் கார்த்திக் லேசாக குரலை தாழ்த்தினான் . " என் அம்மாவே அருவாளை  எடுத்துட்டுப்போய் அவிய்ங்களை வெட்டுவாடா " ரமேஷ் கத்தினான் . " மச்சி ஓவர் ஆயிருச்சு அப்படியே விட்ட நீ சாப்புடாம இங்கயே மட்டையாயிடுவ "மர்ரு சொல்லிக்கொண்டே இருவரையும் கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு போய் அங்கிருந்த தொட்டிக்குள் தலையை முக்கினான் ...

தண்ணீருக்குள் தலையை முக்கியும் போதை இறங்காமல் லெமனை அப்படியே வாயில் பிழிந்து கொண்டார்கள் . ஒரு  வழியாக அவர்களை கடத்திக்கொண்டு போய்  வண்டியில் ஏற்றினார்கள் . விழுந்து விடக்கூடாதென்று  முன்னாடியும் பின்னாடியும் இருவர் உட்கார வண்டி புரோட்டா கடைக்கு பறந்தது . வண்டியை சைட் ஸ்டான்ட் போடுவதற்குள் விழுந்து எந்திரித்து கடை பெஞ்சில் உட்கார்ந்தார்கள் . அவர்கள் அமர்ந்த மாத்திரத்திலேயே கடைக்காரனுக்கு லேசாக பீதி வந்தது . பையன் வந்து என்ன வேண்டுமென கேட்க ஆளாளுக்கு புரோட்டா , கொத்து , சிக்கன் என்று ஆர்டர் கொடுக்க கார்த்திக் வழக்கமாக அதோடு சேர்த்து ஆம்லெட் சொன்னான் . கடைப்பையன் எடுத்து வருவதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்க ரமேஷ் டேபிளோடு கவிழ்த்து விட்டான் . உடனே கடையிலிருந்து ஒரு குண்டு ஆள் ரமேஷின் சட்டையை கொத்தாக பிடித்து கேள்வி கேட்க கார்த்திக் திமிறி எழுந்து அவனை உதைத்து தானும் கீழே விழுந்தான் ...

குண்டு ஆள் திரும்பவும் சுதாரித்து அடிக்க போகும் முன் நடுவில் புகுந்த
மர்ரு " அண்ணே , குடி ஓவர் ஆயிருச்சு , ராவா வேற போட்டானுங்க தப்பா  எடுத்துக்காதீங்க " என்று சமாதானம் செய்ய ஆரம்பித்தான் .
" அப்படியெண்ணயா குடி " என்று குண்டன் வினவ " இல்லேண்ணே ' என்று ரமேஷ் யாருடைய தம்பி என்பதை அவன் எடுத்து சொன்னான் . அந்த குண்டன் நேராக போய் கடைக்காரரிடம் அதை சொல்ல அவர் இன்னும் பிரச்னை வேண்டாமென்பது போல யோசித்தார் . " என்ன தான் குடின்னாலும் பொண்டாட்டிக்கும்  , அக்கா தங்கச்சிக்கும் வித்தியாசம் தெரியாதாப்பா ?"
என்று எதையோ கேட்டு வைக்க " வேணும்னா உங்க வீட்ல இருந்து ஆள அனுப்புங்க வித்தியாசம் தெரியுதான்னு பார்த்து சொல்றோம் " என்று ரமேஷ் குழறி குழறி பேசினான் . அவன் சொன்னது அவருக்கு சரியாக புரியாமல்
" என்னப்பா சொல்றான் " என்று குண்டனை கேட்க அவன் ஒண்ணுமில்லை என்பது போல தலையாட்டி வைத்தான் ...

ஒரு வழியாக பழைய படி டேபிளை எடுத்துப்போட்டு சாப்பிட உட்கார ஒவ்வொன்றாக வந்து கொண்டிருந்தது . புரோட்டாவை பலவாறாக பிச்சுப்போட்டு சால்னா வை ஊற்றிப்பிசைந்து வாயில் போட ஆரம்பித்தான் கார்த்திக் . எவ்வளவு கோடி கொடுத்தாலும் இந்த புரோட்டா சால்னாவுக்கு ஈடாகாது என்று நினைத்துக்கொண்டான் . அவனுக்கு ஆம்லெட் வர லேட்டாகவே ஒரு சவுண்ட் விட உடனே வந்தது . அதை சாப்பிட ஆரம்பிக்கும் போது  அவனுக்கு ஒரு வினோத ஆசை வந்தது . உடனே ஆம்லெட்டுக்கு தொட்டுக்கொள்ள சீனி கேட்டான் . அவன் கேட்டவுடன் கடைக்காரன் இல்லையென சொல்ல எனக்கு இப்போ வேணும் என்று எழுந்து நின்று  தகராறு செய்ய ஆரம்பித்தான் . " இது புரோட்டா கடைப்பா டீக்கடை இல்ல , இந்த மாதிரி கருமம் பிடிச்சவய்ங்களா பார்த்து என்கிட்டே அனுப்புறியே ஆண்டவா " என்று அவர் அங்கு மாட்டியிருந்த பெருமாள் படத்தை பார்த்து புலம்ப ஆரம்பித்து விட்டார் . " எனக்கு ஆம்லெட்டுக்கு தொட்டுக்கர சீனி வேணும் " அவன் 16 வயதினிலே கமல் மாதிரி சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தான் ...

அவன் செய்யும் கலாட்டாவை பார்த்து அங்கிருந்த சிலர் சிரிக்க அவன் மேலும் உஷ்ணமானான் . " என்னப் பார்த்த என்ன கேன மாதிரி இருக்கா " என்று கத்திக்கொண்டே ஒரு சேரை தூக்கி விட்டெறிந்தான் . திரும்பவும் கடைக்குண்டன்  உள்ளே இருந்து ஓடிவர மறுபடியும் கைகலப்பானது .
அங்கே ஒரே களேபரமாகி ஆளாளுக்கு எதையெதையோ தூக்கியடிக்க கடைக்காரர் வெளியே ஓடி வந்து கையெடுத்து கும்பிட ஆரம்பித்து விட்டார் .
அவன் நண்பர்கள் ஓவ்வொருவராக அமைதியாக ஆரம்பிக்க கார்த்திக் மட்டும் கத்திக்கொண்டே  இருந்தான் . அவனை  அமைதியாக இருக்கும் படி அவன் நண்பர்கள் சைகை  செய்து கொண்டே இருந்தார்கள் . " என்னடா ரொம்ப பண்றீங்க , நீங்க காரணமே இல்லாம டேபிளை கவுக்கலாம் நான் ஆம்லெட்டுக்கு சீனி கேட்டு சேரை தூக்கி அடிக்கக்கூடாதா ? " .
அவன் சொல்ல சொல்ல நண்பர்கள் பின்னால் பார்க்க சொல்லி சைகை செய்து கொண்டேயிருந்தார்கள் . அவன் உடனே ஒருவேளை போலீஸ் வந்துவிட்டதோ என்று திரும்பிப்பார்க்க அவன் அப்பா வேலையை வேலையை முடித்து  விட்டு சைக்கிளில் வந்து கொண்டிருந்தவர் அப்படியே நின்று கொண்டு அவனை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தார். அவனுக்கு பிடிக்குமே என்று அவர் வாங்கி வைத்திருந்த மசால் தோசை சூடாக ஹேண்டில் பாரில் மாட்டியிருந்த பையில் ஆடிக்கொண்டிருந்தது ...

தொடரும் ...

Related Posts Plugin for WordPress, Blogger...