4 January 2020

அவன் - அவள் - நிலா (15) ...


கார்த்திக்கிற்கு எல்லாமே வெறுமையாக இருந்தது . எல்லோரும்  கூட்டம் கூட்டமாக அண்ணனை  எப்படி சம்பவம் செய்தார்கள் என்பது பற்றி விவாதத்தில் இருந்தார்கள் . அண்ணன் காரியம் முடியறதுக்குள்ள அவிய்ங்கள போட்ரனும் ரமேசு என்று அவனுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்கள் . கார்த்திக் எதிலுமே கலந்து கொள்ளாமல் ஒரு ஓரமாக மரத்தடியில் உட்கார்ந்திருந்தான் . ரமேஷ் தன்னைப்போல ஆகாமல் நல்ல படியாக படித்து பெரிய ஆளாக வேண்டுமென்று அண்ணன் அடிக்கடி சொன்னது மட்டும் கார்த்திக் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது .
" சிங்கம் மாதிரி நடந்து வருவானே இப்படி செதச்சிட்டாய்ங்களே " ரமேஷ் அம்மா இடைவிடாது அழுது கொண்டே இருந்தாள் . கடந்த முறை அவர் வீட்டுக்கு போயிருந்த போது ரமேஷ் அம்மா ஒரு பெண்ணின் படத்தை காட்டி
" கார்த்தி தம்பி பொண்ணு மூக்கும் முழியுமா லட்சணமா ஹீரோயினி மாரி இருக்காள்ல "? , கார்த்திக் அம்மா காட்டிய ஃ போட்டோவை பார்த்தான் .
" தேவர் மகன் படத்துல வர  ரேவதி மாதிரி இருக்காம்மா " .
" அப்படி சொல்றா கண்ணு , அண்ணனுக்காக பார்த்திருக்கேன் , அப்புறமா அவன் கிட்ட நீயே சொல்லு " என்று ஃபோட்டோவை அவனிடம் கொடுத்து விட்டு உலையை இறக்க அடுப்பங்கரைக்கு ஓடினாள் ...

எப்பொழுது வீட்டுக்கு போனாலும் அவனை சாப்பிட சொல்லாமல் இருந்ததேயில்லை . அவன் வேண்டாம் என்று சொன்னாலும் எதையாவது கொடுக்காமல் விட மாட்டாள் . " ஏண்டி நீ பாட்டுக்கு அவனுக்கு கோழியா வைக்குற , நமக்கு பாவம் வரதுக்கா ?" ஒரு முறை ரமேஷ் பாட்டி கேட்ட பொழுது " ஆமா அப்படியே வரப்போகுது , அவன் பொறந்தது மட்டும் தான் அங்க , மத்தபடி நம்ம பய " என்று ரமேஷ் அம்மா சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவன் பாவ புண்ணியத்தையெல்லாம் கணக்கு பார்க்காமல் நாட்டுக்கோழியை ருசித்துக்கொண்டிருந்தான் . அப்படி பார்த்த பெண்மணியை இன்று தலைவிரி கோலமாக பார்க்க என்னமோ போலிருந்தது .  கணவன் இறந்த போது கூட கல்லு போல தைரியமாக இருந்தவரை புத்திர சோகம் உருக்குலைய செய்து விட்டது . பழசையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தவன் விரல்களை தம் சுட்டவுடன் சுருக்கென்று எரிய அதை தூக்கிப்போட்டு விட்டு நிமிர்ந்தான் . பலதரப்பட்ட கும்பலுக்கு நடுவே பேசிக்கொண்டிருந்த ரமேஷ் மற்றும் நண்பர்கள் சிறிது விலகி அவனை நோக்கி நடந்து வந்தார்கள் ...

அவர்கள் அருகே வந்ததும் கார்த்திக் மரத்தடியில் இருந்து எழுந்து நின்றான் .
" மச்சி சண்முகம் அண்ணன் வந்தாருடா " அவன் தெரியும் என்பது போல மண்டையாட்டினான் . " அண்ணன ராஜாவும் அவன் கூட்டாளிகளும் தான் ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கானுங்க , நாம மடக்கறதுக்குள்ள கோர்ட்ல
சரண்டர் ஆயிடலாம்னு பிளான் போட்ருக்காய்ங்கலாம் " . " ம்ம் " என்று கார்த்திக் கேட்டுக்கொண்டான் . " என்னடா சீரியஸா சொல்லிட்டிருக்கேன் , ம்ம்ன்ற " ரமேஷ் கோபத்தோடு கேட்க , " அண்ணன் ப்ரொட்யூசர் கொடுப்பாருன்னு கனவுல இருந்தான் , இப்போ அது போயிடுச்சேன்னு கவலையில இருப்பான் " , வேண்டுமென்றே கூட்டத்தில் ஒரு அல்லக்கை ரமேஷை ஸ்க்ரூ செய்தான் . கார்த்திக் பதில் சொல்வதற்குள் " ஒம்மால உன் வாய மூடுறீயா " என்று ரமேஷ் அவன் வாயை அடைத்தான் . " நீ சொல்லு மச்சி " என்று மறுபடியும் ரமேஷ் கேட்டான் . " என்ன அவிய்ங்களுக்கு ஸ்கெட்ச் போடணுமா ?" , கார்த்திக் கேட்க ரமேஷுக்கு புது தெம்பு வந்தது ...

" ஆனா என்ன ஸ்கெட்ச் போட்டாலும் மாட்டாம இருக்க முடியாது , அண்ணன போட்டது யாருன்னு இந்நேரம் போலீசும் ஸ்மெல் பண்ணியிருக்கும் , அவிய்ங்களுக்கு  எதாவது ஆச்சுன்னா நம்ம கிட்ட தான் வரும் " .
" அப்போ யாரு அண்ணனை  போட்டதுன்னு தெரிஞ்சும் பொட்ட மாதிரி பம்மிக்கிட்டு இருக்க சொல்றியா " ரமேஷ் வெடித்தான் .
" மாப்பிள்ளை நான் சத்தியமா அப்படி சொல்லல , ஆனா ஒரு நிமிஷம்  உன் அம்மாவை பாரு , நீயும் ஏதாவது பண்ணிட்டு ஜெயிலுக்கு போய்ட்டா  அவங்களுக்கு யாரு இருக்கா " கார்த்திக் கை காட்டிய திசையில் அவன் அம்மா ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள் . கல் மனதையும் கரைத்து விடும் கதறல் அது . ரமேஷ் டென்ஷனில் ஒரு தம்மை பற்ற வைத்தான் . ஒரே  இழுப்பில் அதை தூர போட்டு விட்டு ஓவென்று கார்த்திக்கை கட்டிக்கொண்டு அழுதான் .
" மச்சி ஒரே நாள்ல இப்படி எல்லாத்தையும் பொரட்டிப் போட்டுட்டாய்ங்களேடா " . அவன் அழுவதை பார்க்கும் போது கார்திக்கிற்கும் அழுகையும் , ஆத்திரமும் பொத்திக்கொண்டு வந்தது . எதிர்காலமாவது மண்ணாவது அப்படியே போய் அவனுங்களை போட்டுத்தள்ளிட்டு உள்ளே போய் விடலாம் போல இருந்தது .  ஆனால் அவன் உள்ளுணர்வு அதற்கு எதிராக எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருந்தது ...

துக்கம் விசாரித்த பிறகு ஒவ்வொருவராக சொல்லிக்கொள்ளாமல்
கிளம்பிக்கொண்டிருந்தார்கள் . ரமேஷ் அப்பாவின் நண்பர்கள் ஒரு குழுவாக சாராயம் அடித்துக்கொண்டிருந்தார்கள் . சொந்தக்காரர்கள் ஓரளவு கிளம்பி விட கார்த்திக் , ரமேஷ் மற்றும் நண்பர்கள் என்ன செய்வதென்று குழம்பிப் போயிருந்தார்கள் . அதற்கு மேல் பொறுக்க முடியாமல் வழக்கம் போல மர்ரு வும் மொக்கையும் போய் சரக்கை வாங்கிக் கொண்டு வந்தார்கள் . ரமேஷ் அவன் அம்மாவை ஒரு முறை பார்த்துக்கொண்டான் . சொந்தக்காரர்களுடன் அண்ணனின் பழைய கதைகளை பேசிக்கொண்டிருந்தாள் . நிச்சயமாய் அங்கிருந்து நகர மாட்டாள் . ரமேஷும் கார்த்திக் அண்ட் நண்பர்களுடன் சேர்ந்து மொட்டை மாடிக்கு போனான் . அங்கிருந்தஒரு போர்வையை உதறிப் போட்டுக்கொண்டு அமர்ந்தார்கள் .  பொதுவாக சரக்குடன் சோடா , தண்ணீர் சேர்த்து மெதுவாக அடிக்கும் ரமேஷ் அன்று ராவாக அடித்தான் . அதை தடுக்கும் நேரத்தில் கார்த்திக் தன்னுடைய மிக்சிங்கை மறந்து அப்படியே அடித்து விட்டான் . இருவருக்கும் தலை சுற்றி என்னமோ செய்தது . ஆனால் நிறுத்தாமல் அடித்துக்கொண்டிருந்தார்கள் ...

" அண்ணனை கொன்ன ஒவ்வொருத்தன் கதையையும் முடிக்கணும் மாப்பிள்ளை "கார்த்திக் கத்திக்கொண்டே பீர் பாட்டிலை தரையில் அடித்து உடைத்தான் .  சரக்கு ஏறினாலே அவனை சமாளிப்பது கஷ்டம் அதிலும் எதையும் கலக்காமல் ராவாக அடித்திருக்கிறான் என்ன நடக்குமோ என்று மற்றவர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள் . " ஒர்த்தனையும் விடக்கூடாதுடா " என்று கார்த்திக் கத்த ரமேஷும் சேர்ந்து  கொண்டான் . மொக்கை உடனே கீழே எட்டிப்பார்த்து விட்டு வந்து " மச்சி கத்தாதடா அம்மா சத்தம் கேட்டு மேல வந்துடப்போறாங்க " அவன் அம்மா பேரை சொன்னவுடன் கார்த்திக் லேசாக குரலை தாழ்த்தினான் . " என் அம்மாவே அருவாளை  எடுத்துட்டுப்போய் அவிய்ங்களை வெட்டுவாடா " ரமேஷ் கத்தினான் . " மச்சி ஓவர் ஆயிருச்சு அப்படியே விட்ட நீ சாப்புடாம இங்கயே மட்டையாயிடுவ "மர்ரு சொல்லிக்கொண்டே இருவரையும் கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு போய் அங்கிருந்த தொட்டிக்குள் தலையை முக்கினான் ...

தண்ணீருக்குள் தலையை முக்கியும் போதை இறங்காமல் லெமனை அப்படியே வாயில் பிழிந்து கொண்டார்கள் . ஒரு  வழியாக அவர்களை கடத்திக்கொண்டு போய்  வண்டியில் ஏற்றினார்கள் . விழுந்து விடக்கூடாதென்று  முன்னாடியும் பின்னாடியும் இருவர் உட்கார வண்டி புரோட்டா கடைக்கு பறந்தது . வண்டியை சைட் ஸ்டான்ட் போடுவதற்குள் விழுந்து எந்திரித்து கடை பெஞ்சில் உட்கார்ந்தார்கள் . அவர்கள் அமர்ந்த மாத்திரத்திலேயே கடைக்காரனுக்கு லேசாக பீதி வந்தது . பையன் வந்து என்ன வேண்டுமென கேட்க ஆளாளுக்கு புரோட்டா , கொத்து , சிக்கன் என்று ஆர்டர் கொடுக்க கார்த்திக் வழக்கமாக அதோடு சேர்த்து ஆம்லெட் சொன்னான் . கடைப்பையன் எடுத்து வருவதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்க ரமேஷ் டேபிளோடு கவிழ்த்து விட்டான் . உடனே கடையிலிருந்து ஒரு குண்டு ஆள் ரமேஷின் சட்டையை கொத்தாக பிடித்து கேள்வி கேட்க கார்த்திக் திமிறி எழுந்து அவனை உதைத்து தானும் கீழே விழுந்தான் ...

குண்டு ஆள் திரும்பவும் சுதாரித்து அடிக்க போகும் முன் நடுவில் புகுந்த
மர்ரு " அண்ணே , குடி ஓவர் ஆயிருச்சு , ராவா வேற போட்டானுங்க தப்பா  எடுத்துக்காதீங்க " என்று சமாதானம் செய்ய ஆரம்பித்தான் .
" அப்படியெண்ணயா குடி " என்று குண்டன் வினவ " இல்லேண்ணே ' என்று ரமேஷ் யாருடைய தம்பி என்பதை அவன் எடுத்து சொன்னான் . அந்த குண்டன் நேராக போய் கடைக்காரரிடம் அதை சொல்ல அவர் இன்னும் பிரச்னை வேண்டாமென்பது போல யோசித்தார் . " என்ன தான் குடின்னாலும் பொண்டாட்டிக்கும்  , அக்கா தங்கச்சிக்கும் வித்தியாசம் தெரியாதாப்பா ?"
என்று எதையோ கேட்டு வைக்க " வேணும்னா உங்க வீட்ல இருந்து ஆள அனுப்புங்க வித்தியாசம் தெரியுதான்னு பார்த்து சொல்றோம் " என்று ரமேஷ் குழறி குழறி பேசினான் . அவன் சொன்னது அவருக்கு சரியாக புரியாமல்
" என்னப்பா சொல்றான் " என்று குண்டனை கேட்க அவன் ஒண்ணுமில்லை என்பது போல தலையாட்டி வைத்தான் ...

ஒரு வழியாக பழைய படி டேபிளை எடுத்துப்போட்டு சாப்பிட உட்கார ஒவ்வொன்றாக வந்து கொண்டிருந்தது . புரோட்டாவை பலவாறாக பிச்சுப்போட்டு சால்னா வை ஊற்றிப்பிசைந்து வாயில் போட ஆரம்பித்தான் கார்த்திக் . எவ்வளவு கோடி கொடுத்தாலும் இந்த புரோட்டா சால்னாவுக்கு ஈடாகாது என்று நினைத்துக்கொண்டான் . அவனுக்கு ஆம்லெட் வர லேட்டாகவே ஒரு சவுண்ட் விட உடனே வந்தது . அதை சாப்பிட ஆரம்பிக்கும் போது  அவனுக்கு ஒரு வினோத ஆசை வந்தது . உடனே ஆம்லெட்டுக்கு தொட்டுக்கொள்ள சீனி கேட்டான் . அவன் கேட்டவுடன் கடைக்காரன் இல்லையென சொல்ல எனக்கு இப்போ வேணும் என்று எழுந்து நின்று  தகராறு செய்ய ஆரம்பித்தான் . " இது புரோட்டா கடைப்பா டீக்கடை இல்ல , இந்த மாதிரி கருமம் பிடிச்சவய்ங்களா பார்த்து என்கிட்டே அனுப்புறியே ஆண்டவா " என்று அவர் அங்கு மாட்டியிருந்த பெருமாள் படத்தை பார்த்து புலம்ப ஆரம்பித்து விட்டார் . " எனக்கு ஆம்லெட்டுக்கு தொட்டுக்கர சீனி வேணும் " அவன் 16 வயதினிலே கமல் மாதிரி சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தான் ...

அவன் செய்யும் கலாட்டாவை பார்த்து அங்கிருந்த சிலர் சிரிக்க அவன் மேலும் உஷ்ணமானான் . " என்னப் பார்த்த என்ன கேன மாதிரி இருக்கா " என்று கத்திக்கொண்டே ஒரு சேரை தூக்கி விட்டெறிந்தான் . திரும்பவும் கடைக்குண்டன்  உள்ளே இருந்து ஓடிவர மறுபடியும் கைகலப்பானது .
அங்கே ஒரே களேபரமாகி ஆளாளுக்கு எதையெதையோ தூக்கியடிக்க கடைக்காரர் வெளியே ஓடி வந்து கையெடுத்து கும்பிட ஆரம்பித்து விட்டார் .
அவன் நண்பர்கள் ஓவ்வொருவராக அமைதியாக ஆரம்பிக்க கார்த்திக் மட்டும் கத்திக்கொண்டே  இருந்தான் . அவனை  அமைதியாக இருக்கும் படி அவன் நண்பர்கள் சைகை  செய்து கொண்டே இருந்தார்கள் . " என்னடா ரொம்ப பண்றீங்க , நீங்க காரணமே இல்லாம டேபிளை கவுக்கலாம் நான் ஆம்லெட்டுக்கு சீனி கேட்டு சேரை தூக்கி அடிக்கக்கூடாதா ? " .
அவன் சொல்ல சொல்ல நண்பர்கள் பின்னால் பார்க்க சொல்லி சைகை செய்து கொண்டேயிருந்தார்கள் . அவன் உடனே ஒருவேளை போலீஸ் வந்துவிட்டதோ என்று திரும்பிப்பார்க்க அவன் அப்பா வேலையை வேலையை முடித்து  விட்டு சைக்கிளில் வந்து கொண்டிருந்தவர் அப்படியே நின்று கொண்டு அவனை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தார். அவனுக்கு பிடிக்குமே என்று அவர் வாங்கி வைத்திருந்த மசால் தோசை சூடாக ஹேண்டில் பாரில் மாட்டியிருந்த பையில் ஆடிக்கொண்டிருந்தது ...

தொடரும் ...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...