4 October 2020

அவன் - அவள்- நிலா ( 20 ) ...



கார்த்திக்கால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை . நேற்று வரை அவனிடம் உள்ளூர் சினிமாவிலிருந்து உலக சினிமா வரை பேசிக்கொண்டிருந்தவர் , எதிர்காலத்து அச்சம் , இறந்த காலத்து கசப்பு என எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டவர் , பணத்தாலும் , மனத்தாலும் நீயே ஆறுதல் என்று அங்கலாய்த்தவர் இன்று அவனிடம் சொல்லாமல் அல்லது சொல்ல வேண்டுமென்று கூட நினைக்காமல் தயாரிப்பாளரை பார்க்க தாவி ஓடியிருக்கிறார் . மனிதன் எவ்வளவு பெரிய சுயநலப்பிசாசு . அவனுக்கு துக்கத்தை பகிர்ந்து கொள்ளத்தான் ஆள் அதிகம் தேவைப்படுகிறது ...

அவரும் ராமசுப்பு போல இருப்பாரென அவன் எதிர்பார்க்கவில்லை . ராமசுப்பு அவனால் சென்னைக்கு அழைத்து வரப்பட்டவன் . பேசிய சிறிது நேரத்துக்குள்ளேயே அனைவரையும் கவர்ந்து விடும் வசீகரம் அவனிடம் இருந்தது . கேட்பவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் பெரும்பாலும் பேசுவான் . அவன் முகஸ்துதி செய்வதை மற்றவர்கள் அறியா வண்ணம் செய்வது அவன் தனிச்சிறப்பு . ஒருவரால் ஆவதற்கு காரியம் ஒன்றுமில்லை என தெரிந்த  பிறகு அவர்களுடன் பழகி அவன் நேரத்தை  வீணடிப்பதில்லை.
தன்னை விட மேம்பட்டவர்களிடம் சிறு வயதிலிருந்தே அவனுக்கு ஓர் ஈர்ப்பு இருந்தது . அந்த இடத்தை அடைய வேண்டுமென்பதில் மட்டுமே முனைப்பாக இருப்பான் . அதற்கு இடையூறாக காதல் , கல்யாணம் இருக்குமென நினைத்ததால் அந்த பக்கமே அவன் இன்று வரை போகவில்லை ...

ஜானி படத்தில் வரும் தீபா கதாபாத்திரம் போல ஒன்றை விட மற்றது சிறந்ததென்றால் அதற்கு தாவும் மனநிலையில் தான் அவனிருந்தான் . அதனால் பாதிக்கப்படும் நட்புகளை அவன் பெரிதுபடுத்துவதில்லை . சினிமா என்கிற புள்ளி இணைத்ததால் தான் சென்னைக்கு வந்த புதிதில் வேலை பார்த்த ஆட் கம்பெனியில் கார்த்திக் அவனையும் சேர்த்து விட்டிருந்தான் .
சேர்ந்த சில நாட்களிலேயே அனைவருக்கும் அவனை பிடித்து விட்டது . இரவு எத்தனை மணி நேரமானாலும் கார்த்திக் வரும் வரை காத்திருந்து பேசி விட்டு செல்பவன் சிறிது காலம் கடந்தவுடன் விளம்பர ஏஜென்ஸியின்  ரெகுலர் கஸ்டமர் ரகுவுடன் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தான் . கார்த்திக்கை விட பணத்தாலும் , பழக்கத்தாலும் சென்னையில் ரகு பெரியவனாக இருந்ததே அதற்கு முக்கிய காரணம் ...

ஒரே இடத்தில் தேங்காமல் ஆறு போல ஓடிக்கொண்டேயிருப்பதில் தவறில்லை தான் ஆனால் சுழலில் சிக்கிக் கொள்ளாமலிருக்க வேண்டும் . என்றுமே யாருடைய வளர்ச்சியையும் கண்டு கார்த்திக் கவலைப்பட்டதில்லை ஆனாலும் அந்த வளர்ச்சியில் கொஞ்சமாவது எதிக்ஸ் இருக்க வேண்டுமென்று நினைத்தான் . அதிலும் குறிப்பாக செய்நன்றி கொன்றவர்களை அவன் ஒரு போதும் மதிப்பதில்லை . சொப்பணசுந்தரியை இன்று யார் வைத்திருக்கிறார்கள்  என்பது போல நட்புகளை மாற்றி மாற்றி வளர்ந்து கொண்டே போன ராமசுப்பு இன்று ஏதோ பெரிய ப்ரொட்யூசருடன் ஒட்டிக்கொண்டிருப்பதாக கேள்வி ...

ஆனால் மகாலிங்கம் கதை வேறு என்பது போலவே அவனுக்கு பட்டது. அவருக்கு பெரிதாக சூட்சுமமெல்லாம் தெரியாது . அவர் அவனை தன்னை விட திறமைசாலி என்றே நினைத்திருந்தார் . அந்த நினைப்பே அவருக்கு ஒரு பயத்தை கொடுத்திருக்கலாம் . சினிமாத்துறையில் தூங்கும் போது கூட காலை ஆட்டிக்கொண்டேயிருக்க வேண்டும் இல்லையெனில் பிணமென நினைத்து கிடாசி விடுவார்கள் . அதீத எச்சரிக்கை உணர்வே ஒரு இனம் புரியாத பயத்தை கொடுக்கிறது . பயம் நல்லவன் யார் கெட்டவன் யாரென நம்மை யோசிக்க விடுவதில்லை . சுற்றியிருப்பவர்களை சந்தேகக் கணணோடு பார்க்க வைக்கிறது . சுந்தரி ஆண் நண்பர்களுடன் நிறைய பேசினாலும் அவன் சண்டையின் போது கிண்டல் செய்திருக்கிறானேயொழிய சந்தேகப்பட்டதில்லை . ஏனெனில் என்றுமே அவள் அவனை விட்டு விடுவாளோ என்கிற பயம் அவனுக்கில்லை . ஆனால் நாம் போடும் அதே கணக்கையே காலமும் போடுவதில்லை ...

இரவு பத்து மணிக்கு மேல் மகாலிங்கம் வந்தார் . அவர் போன காரியம் என்ன ஆனதென்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்கிருந்தது ஆனால் அவரே சொல்வது தான் முறையென நினைத்தான் அதுவும் அவனிடம் சொல்லிக் கொள்ளாமல் தான் அவர் சென்றிருக்கிறார் . அவன் மொட்டை மாடிக்கு படுக்க போய் விட்டான் . அவர் குளித்து விட்டு மேலே வந்தார்.  சிறிது நேர மௌனத்திற்கு பிறகு
 " என்ன தம்பி தூங்கியாச்சா ?" என்று அவரே ஆரம்பித்தார் . " நம்ம இவ்வளவு சீக்கிரம் எப்பண்ணே தூங்கிருக்கோம் !"  என்று பதில் சொல்லிக்கொண்டே அவர் பக்கம் திரும்பினான் கார்த்திக்...

தெரு விளக்கு வெளிச்சத்தில் அவர் முகம் பிரகாசமாக தெரிந்தது ஆனால் அவர் முகத்தில் அந்த பிரகாசம் இல்லை . " திரும்பவும் க்ளைமாக்ஸ மாத்தனுமாம் கொஞ்சம் பழசா இருக்காம் " அவர் அவனிடம் இதை சொல்லி விட்டு சட்டென முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார் . அவனுக்கு அதற்கான அர்த்தம் புரிந்தது.  ஏற்கனவே க்ளைமாக்ஸில் அவனுக்கு முழு உடன்பாடு இல்லை ஆனால் அவர் தான் பிடித்த முயலுக்கு மூணு கால் போல பிடிவாதமாக இருந்தார் . அவனும் ஒரு லெவலுக்கு மேல் அதில் தலையிடுவது சரிப்படாது என்று விட்டு விட்டான் . உண்மையில் அவர் சொன்ன கதை அவனுக்கு பிடித்திருந்தது . அதில் சில சமரசங்கள் செய்து கொண்டால் வேறு லெவலில் இருக்குமென்பது அவன் கணிப்பு ...

என்ன தான் கதையை மாற்றி மாற்றி யோசித்து எழுதினாலும் கடைசியில் அதன் வெற்றி தோல்வி மக்கள் கைகளில் இருக்கிறது . எவ்வளவு தான் உழைப்பை கொட்டினாலும் அதிர்ஷ்டமும் கை கொடுக்க வேண்டும் . அதுவும் சினிமா உலகத்தில் அதிர்ஷ்டத்தின் தேவை அதிகமாகவே இருந்தது . காலையில் அவர் சொன்னாமல் போனதற்கு அவர் மேல் கோபத்தில் இருந்தான் . இரவோ அவர் நிலையை அறிந்ததும் அவருக்காக யோசிக்கத் தொடங்கி விட்டான் . அது தான் அவன் . என்றுமே அவன் யார் மேலும் வன்மமாக இருந்ததேயில்லை அந்த நேரத்தில் கோபத்தை அடக்க முடியாமல் கத்தியிருக்கிறான் ஆனால் சிலர் போல வெளியில் சிரித்து உள்ளே பகையை வளர்த்ததில்லை . அதனால் தான் அவனால் அவருடன் சேர்ந்து கதைக்கு இன்னும் பெட்டராக என்ன க்ளைமேக்ஸ் வைக்கலாம் என்று யோசிக்க முடிகிறது . அவன் அவருக்காக யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் காலம் அவனுக்கான எதிர்காலத்தை வேறு மாதிரி எழுத ஆயத்தமாகிக் கொண்டிருந்தது ...

தொடரும் ...


Related Posts Plugin for WordPress, Blogger...