21 June 2020

PENGUIN - பெண்குயின் - பணிப்பெண் ...



கீர்த்தி சுரேஷ் நடிப்பில் , கார்த்திக் சுப்புராஜ் வெளியிட , புதுமுக இயக்குனர் ஈஸ்வர்  கார்த்திக் இயக்கத்தில் அமேசான் ப்ரைமில் நேரடியாக வந்திருக்கும் வந்திருக்கும் படம் பெண்குயின். ஹீரோயின் ஓரியண்டட் படமென்பதால் தமிழில் பென்குயின் என்று வைக்காமல் பெண்குயின் என வைத்திருக்கிறார்கள்...

ஆறு வருடங்கள் முன் தொலைந்து போன தனது மகனை நம்பிக்கை இழக்காமல் தேடிக் கண்டுபிடிக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் ரிதத்தின் ( கீர்த்தி சுரேஷ் ) கதையே பெண்குயின். மகனை கண்டுபிடித்த  ரிதம் மகனை கடத்தியவனை கண்டுபிடித்தாரா ? என்பதை ஒரு விதமாக சொல்லி முடிக்கிறது படம் ...

சில படங்களில் ஹீரோயினாக வந்து போயிருந்தாலும் ஒரு நடிகையாக தனது திறமையை கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்திய முதல் படம் நடிகையர் திலகம் . அதன் பிறகு அவரை முழமையாக நம்பி எடுக்கப்பட்டிருக்கும் பெண்குயினில் குறை வைக்காமல் குயினாகவே கடைசி வரை படத்தை தோள்களில்  சுமக்கிறார் . ஆனால் அதுக்காக கர்ப்பிணிப்பெண் உடம்பை பார்த்துக்கொள்ளாமல் சூப்பர் வுமன் போல சாகசம் செய்வதெல்லாம் ஓவர். கீர்த்தி நடிப்பு மட்டும் போதுமென்பது போல மற்ற நடிகர்கள் யாரும் பெரிதாக சோபிக்காமல் போனது துரதிருஷ்டமே ....

கீர்த்தியின் முன்னாள் , இன்னாள் கணவன்களாக இருவர் வருகிறாரகள் . விஜயசாந்தி பட ஹீரோக்கள் கூட எவ்வளவோ தேவலாம் . முன்னவர் ஓவர் ஆக்டிங்க் செய்தால் பின்னவர் நடிப்புன்னா கிலோ என்ன விலைன்னு கேட்பார் போல . அதிலும் அவரை ஆடியன்ஸ் சந்தேகப்படும் படியாக வைக்கப்பட்ட சில சீன்களில் மிக்ஸர் சாப்பிட்டுக் கொணடிருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ் ...

கீர்த்தி சுரேஷ் நடிப்பு ,  கொடைக்கானல் லொக்கேஷன் , அதை கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்டிய  கார்த்திக் பழனி யின் ஒளிப்பதிவு, படத்தின் ட்ரைலர் , இரண்டு ப்ளாட்களை இணைத்த விதம் மற்றும் ஆரம்ப காடசிகள் இவையெல்லாமே படத்துக்கு ப்ளஸ் . சந்தோஷ் நாராயணனுக்கு சம்பள பாக்கியோ என்னவோ ?!!

தொலைந்த மகனை தேடும் கர்ப்பிணித்தாயை மையமாக வைத்து ஒரு சீரியல் கில்லர் கதையை யோசித்த இயக்குனருக்கு பாராட்டுக்கள் . ஆனால் அது மடடும் போதுமா ? கிட்னாப் என்றொரு ஆங்கிலப் படததில் ஆறு வயது மகனை தன் கண் முன்னால் கடத்தியவிடமிருந்து காப்பாற்றும் தாயின் கதையை அவ்வளவு விறுவிறுப்பாக எடுத்திருப்பார்கள் . இதில் அது டோட்டலி  மிஸ்ஸிங் . படம் சைலனஸ் ஆஃப் த லேம்ப் , Dr.ஹனிபல் , ஃபாரன்ஸிக் போன்ற படங்களை நினைவுபடுத்துவது சறுக்கல்...

பொதுவாக பழைய தமிழ் படங்களில்  போலீஸ் கடைசியாக வருவார்கள் ஆனால் இதில் முதலிலேயே வந்து கடைசிவரை ஒன்றுமே செய்யவில்லை .
அதிலும் க்ரைம் சீனிற்குள் போய் கீர்த்தி எவிடன்ஸை எடுப்பதை கூடவா ஒரு இன்ஸபெக்டர் தடுக்காமலிருப்பார் ? எந்த வித சடலமும் கிடைக்காமல் எப்படி கீர்த்தியின் மகன்  இறந்து விட்டதாக அவர் சொல்கிறார் ? கடைசியில் கீர்த்தியின் நாய் தான் கில்லரை கண்டுபிடிக்கிறது. போலீஸ் தரப்பில் தேட ஒரு நாயை கூட கண்ணில் காட்டவில்லை . ஒரு நாய்க்கு தான் பிஸ்கட் போட பட்ஜெட் இருந்ததோ ?!

கீர்த்தி சுரேஷ் - கார்த்திக் சுப்புராஜ் காம்போவில் ஒரு திரில்லர் , அட்டகாசமான ட்ரைலர் இதெல்லாம் படத்துக்கு ஒரு பெப்பை கொடுத்தன . ஆனால் அதை படம் நெடுக இயக்குனர் கொடுக்காமல் பிட்ஸ் அண்ட் பார்ஸலாக  கொடுத்ததால் குயினாக இருந்திருக்க  வேண்டிய பெண் வெறும் பணிப்பெண்ணாகிப் போனாள் ...

ரேட்டிங்க்  : 2.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 39 .

இந்த படத்தின் ரிவியூவை யூ டியூபில் பார்க்க கீழே சொடுக்கவும் ...




14 June 2020

அவன் - அவள் - நிலா (19) ...



சென்னைக்கு கார்த்திக் செலவில்  வந்த அந்த முன்னாள் உதவி இயக்குனர் அர் வேலைகளை பெரும்பாலும் முடித்துக்கொண்டு அவனையும் சில கம்பெனிகளுக்கு கூட்டிக்கொண்டு போய் காட்டி கடமையை முடித்ததாக நினைத்துக்கொண்டு ஒரு வழியாக மதுரைக்கு புறப்பட்டு போனார் . கார்த்திக் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தான் . அவர் அறிமுகப்படுத்திய ஆட்களை சென்று பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும் , அப்பொழுது தான் ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் என்பது அவனுக்கு தெரிந்தது . சினிமா வெற்றி பெற்றவர்களின் பக்கம் மட்டுமே நிற்கிறது . தோல்வியடைந்தவர்களுக்கு ஆறுதலும் , அனுதாபமும் கிடைக்கிறதோ இல்லையோ கேலியும் கிண்டலும் நிறையவே கிடைக்கிறது  . தெரிந்த ஆள் மூலமாக போனதால் கொஞ்ச நேர காத்திருப்பலுக்கு பின் அவனை உள்ளே அனுமதித்தார்கள் இல்லையேல் அவர்களின்  பந்தாவுக்காக அவன் வாசலிலேயே தவமிருந்திருக்க வேண்டும்..

வயது வித்தியாசம் காரணமாக அழைத்து வந்தவரின் நண்பர்களுடன் இனி தங்க முடியாது என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது . அதிலும் இனிமேலும் தொடர்ந்து அங்கே தங்கினால் அவன் கையிருப்பு அதிகமாகவே கரைந்து விடும் அபாயமும் இருந்தது . அவர்கள் நிலைமை அவனை விட இன்னும் மோசமாகவே இருந்தது . " என்ன தம்பி தூக்கம் வரலையா ? " , கேட்டுக்கொண்டே வந்து பாயை அருகில் போட்டுக்கொண்டு அமர்ந்தவாறே சிகரட்டை பற்ற வைத்துக்கொண்டார் மகாலிங்கம் . அவரை பார்த்தவுடன் படுத்தவாறே கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தவன் அதை நிறுத்தி விட்டு அமர்ந்து கொண்டான் . அங்கிருப்பவர்களிலேயே ஓரளவு சினிமா ஞானமும் அவன் எதிர்காலம் மேல் கொஞ்சம் அக்கறை கொண்டவராகவும் அவரிருந்தார் . "  இல்லேண்ணே " என்று சொல்லிக்கொண்டே சிகரெட் பாக்கெட்டை நீட்டியவரிடம் வேண்டாமென்று மறுத்தான் . அவரும் அந்த சிகெரட்டை காலைக்கடன் கழிக்கும் போது அடித்துக்கொள்ளலாம் என்கிற நினைப்பில் சட்டைப்பாக்கெட்டில் வைத்துக்கொண்டு விட்டு லேசாக சிரித்தார் ...

" என்னென்ணே சிரிக்கிறீங்க ?! " கார்த்திக் கேட்டவுடன் அவனை பார்த்தவர்
" ஒண்ணுமில்லை தம்பி என் வாழ்க்கையில நடந்த ஒரு சம்பவத்தை நினைச்சு சிரிச்சேன் " . அவன் என்ன என்பது போல் பார்க்க ஒரு இழுப்பை இழுத்து புகை விட்டுக்கொண்டே பேசத்தொடங்கினார் . " நான் அப்போ சென்னைக்கு வந்து லோல்பட்டு ஒரு வழியா ஓரளவு பிரபலமான ஒருத்தர்ட்ட அசிஸ்டெண்டா சேர்ந்தேன் . டிஸ்கசன் அப்போ டைரக்டர் கேசுவலா சிகெரெட்டை நீட்ட மத்தவங்கல கவனிக்காம நான் வாங்கி அவரோட சேர்ந்து அடிக்க ஆரம்பிச்சுட்டேன் . அடுத்த நாள் வழக்கம் போல ஷூட்டிங் போயாச்சு.
என் பேர சொல்லி டைரக்டர் கூப்பிட நான் அஸோஸியேட்ட தானே கூப்பிடுவாங்க நம்மள கூப்புடுறாரேன்னு புரியாம ஓடினேன் " . நிதானமாக தம்மை இழுத்து புகையை விட்டார் . என்கிட்டே செட் ப்ராப்பர்ட்டி பத்தி கேக்க ஆரம்பிச்சார் . நான் அது வேற ஒருத்தர் தானே பாக்குறார்ன்னு சொல்ல
" ஏன் உனக்கு தெரியாதா என்ன புடுங்குற வேலை பாக்கறியா " ன்னு டக்னு கத்திட்டாரு .  தண்டத்துக்கு வந்து சேர்ந்து என் தாலிய அறுக்குறானுங்கன்னு அவர் பாட்டுக்கு கன்னாபின்னான்னு கத்த ஆரம்பிச்சுட்டாரு . அன்னிக்கு முழுக்கவே எனக்கு நிறைய அர்ச்சனை தான் . எனக்கு ஒண்ணுமே புரியாம அன்னிக்கு நைட் சீனியர் சொல்லி தான் எல்லாம் வெளங்கிச்சு " ...

" அவர் சிகரட்டை நீட்டி நான் வாங்கினது ஒரு பெரிய கொலைக்குத்தம்  இல்ல . ஆனா இங்க நிறைய பேர் தனக்கு கீழ இருக்கறவனுக்கு இடம் கொடுத்தா  நமக்கு ஆப்பு வந்துடுமோன்னு தேவையில்லாத ஒரு பயத்துல இருக்காங்க . அதனால தான் அவனுங்க ஈகோ அதிகமாகி தான் யாருன்னு காட்டறதா நினைச்சு நம்மள நோகடிக்குறாங்க " . சினிமா பிரபலங்களின் முகத்துக்குள் இன்னொரு முகம் இருக்கிறது . " ஆனா ஒரு பியூட்டி  என்னென்னா தம்பி , ரெண்டு வாரம் முன்னாடி அவரை பார்த்தேன் . நான் சிகரெட் பாக்கட்டை நீட்ட சில வருஷம் முன்னாடி அப்படி ஒரு சம்பவமே நடக்காத மாதிரி அவர் உடனே வாங்கிக்கிட்டாரு . கடைசியா எடுத்த ரெண்டு ஃப்ளாப் அதிலயும் ப்ரொட்யூசரும் அவர் தான் , கேக்கவா வேணும் மனுசன்  ரொம்பவே நொடிஞ்சுட்டாரு " . சடுதியில் வெற்றியும் தோல்வியும் வந்து ஆளையே தூக்கியடிக்கும் துறை சினிமா ...

எல்லா துறைகளிலும் ஏற்றமும் , இறக்கமும்  ஒன்று தான் ஆனால் சினிமாவில் அவையிரண்டுமே அந்த  துறையை போலவே அபரிமிதமாக இருக்கின்றன . மூத்த உதவி இயக்குனர்கள் சொல்வதையெல்லாம் கேட்கும் போது இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி நம்மால் கரையேற முடியுமா என்று அவனுக்கு பல தடவை தோன்றியதுண்டு ஆனாலும் ஒரு வைராக்கியம் அவனை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தது . பாம்குரோவ் ஹோட்டலை தாண்டும் போதெல்லாம் அந்த வாசலில் தான் சூப்பர் ஸ்டார் ஒரு காலத்தில் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் படுத்திருப்பார் என்றெல்லாம் சொல்லி கேள்விப்படும் போது அந்த வைராக்கியம் அதிகமாகும் . அவர் மட்டுமல்ல இன்று சினிமாவில் சாதித்த பலரும் அந்த வைராக்கியத்தோடு எங்கோ இருந்து சென்னைக்கு வந்தவர்கள் தான் . அக்கடலில் நீந்தி மேலே வந்தவர்களை மட்டும் கொண்டாடுகிறோம் அதில் கரையேற முடியாமல்
மூழ்கிப் போரானவர்கள் ஏராளம் ...

" தம்பி ரொம்பெல்லாம் யோசிக்காதீங்க , மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்" அவன் முகத்தை வைத்து உள்ளே ஓடும் எண்ண ஓட்டங்களை படித்துக் கொணடிருந்தார் மகாலிங்கம் . " அப்டில்லாம் இல்லேண்ணே , எவ்வளவோ பேர் ஒண்ணுமில்லாம வந்து இங்கே எவ்ளோ பெரிய ஆளாகியிருக்காங்கன்னு யோசிச்சேன் " . அதை ஆமோதிப்பது போல அவர் தலையாட்டினார் . " ஆனா நானும் பார்த்துட்டேன் தம்பி , பெரும்பாலும் சினிமாவுல சாதிக்கணும்னா ஒன்னு எல்லா வசதியும் இருக்கறவனா இருக்கணும் , இல்லேன்னா ஒன்னுமே இல்லாதவனா  இருக்கணும் , இந்த ரெண்டுங்கட்டானா அதான் மிடில் க்ளாஸா மட்டும் இருந்தா கரையேறுரது ரொம்ப கஷ்டம் " . அவர் சொன்னதில் புதைந்து கிடைக்கும் உண்மை அவனுக்கு நன்றாகவே உரைத்தது ...

இரண்டு பேரும் சில நிமிடங்கள் வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் . வாசலில் பேசிக்கொண்டிருந்த பெண்களின் குரல்கள் சீரியலின் உபயத்தால் வெகுவாகவே குறைந்திருந்தன  . விரக்தி , அச்சம் , மலைப்பு எல்லாமே ஒரு சேர வந்து ஒரு வித சோர்வை உருவாக்கி விடுகிறது . " பணம் மாதிரி தான் தம்பி படிப்பும் " , அவர் சொன்னவுடனே அவன் புரியாமல் பார்த்தான் . " படிப்பு நிறைய இருக்கிறவன் இந்த பக்கம் வர மாட்டான் , சுத்தமா படிக்காதவன் எந்த வேலையையும் ஈகோ பார்க்காம செய்வான் , ஆனா ஓரளவு டிகிரி வரை படிச்சவனுக்கு ரெண்டு பக்கமும் சாய முடியாம நடுவுல நின்னாகனும் " . அவர் சொல்வது எல்லாமே  அவனோடு சேர்த்து அவருக்கும் பொருந்துவதாகவே இருந்தது . தஞ்சாவூரில் ஒரு மிடில் கிளாசில் இருந்து டிகிரி  வரை முடித்து விட்டு சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தவர் . இன்று நாம் யோசிக்கும் அல்லது செய்யும் விஷயத்தையும் உலகத்தில் எவனோ செய்திருக்கிறான் , செய்து கொண்டிருக்கிறான் அல்லது இனிமேல் செய்வான் என்பது ஒரு நியதி போலும்  ...

பொதுவான சில விஷயங்களை பேசிக்கொண்டிருந்தாலும் அவர் ஏதோ ஒன்றில் அவனுடைய ஆலோசனைகளையோ அல்லது கருத்துக்களையோ கேட்பதற்காக வந்தது போலவே இருந்தது  .ஏற்கனவே அவர் சொன்ன கதையை பற்றியதாக இருக்கலாமென அவன் நினைத்தான் . அவர் ஒன் லைனர் சொன்ன போதே அவனுக்கு பிடித்திருந்தது . அதை அவர் ரெடி பண்ணி முழு கதையாக ஒன்றரை மணி நேரம் நடேசன் பூங்காவில் வைத்து சொன்னது பசுமரத்தாணி போல அவன் மனதில் இருந்தது . அதிலும் குறிப்பாக கதையில் அவன் மனதுக்கு பட்ட சில குறைகளை வெளிப்படையாக சொன்னது அவருக்கு பிடித்திருந்தது ஆனால் கூட இருந்த அல்லக்கைகளுக்கு பிடிக்கவில்லை . சினிமா பத்தி உனக்கு என்ன தெரியும் என்பது போல அவனுடன் சண்டைக்கு வந்தார்கள் . அவர் சொன்ன சில சீன்களை  அவன் நன்றாக மேம்படுத்தியது அவர்களுக்கு ஏனோ பிடிக்கவில்லை . அவர் அவனுக்கு அதிக முக்கியத்துவம் தருவது அவர்களுக்கு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தது . அவர் டைரக்டரானவுடன் உடனே
அஸிஸ்டன்ட்களாக சேர்ந்து விடலாமென நினைத்தவர்களுக்கு அவன் வரவு எங்கே வேலைக்கு உலை வைத்து விடுமோ என்கிற பயத்தை தந்தது ...

அவர் நிறைய தடவை மற்றவர்களுக்கு தெரியாமல் அவனுடன் மட்டும் கதையை விவாதம் செய்திருக்கிறார் . தன்னிடம் எந்தவித பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் நேர்மையாக கதை விவாதத்தில் அவன் கலந்து கொண்டது அவருக்கு பிடித்திருந்தது . அவருக்கே சில சமயம் மொக்கையாக தெரியும் சீன்களை அவனை தவிர மற்றவர்கள் புகழ்ந்த போது அவருக்கு எரிச்சலே மிஞ்சியது . அதற்காகவே அவர் அவனுடன் கதை பற்றிய விவாதத்தில் ஈடுபடுவதையே அதிகம் விரும்பினார் . ஒரு இயக்குனருக்கு முதல் படம் எடுத்து முடித்து வெற்றிகரமாக ஓட வைப்பதென்பது தலைப்பிரசவத்தை விட
அதிக சிக்கலானது என்பது அவர் அனுபவம் சொல்லித்தந்த பாடம் . இன்னும் சில நாட்களில் அவர் கதை ப்ரொட்யூசரிடம் ஓகே ஆகி அட்வான்ஸ் வாங்கக்கூடிய நிலையில் இருப்பது அவனுக்கு தெரியும் . கதைக்கான ஃபைனல் டச்சுக்காக பேசப்போகிறாரோ என அவன் எதிர்பார்த்தான் ...

சிறிது நேரத்திற்கு பிறகு அவரே மவுனத்தை கலைத்தார் . " தம்பி நாம லாஸ்ட்டா பேசினது ஃபுல்லா ஓகே தானா  இல்ல ஏதாவது மாத்தணுமா ?!"
பொதுவாக இது தான் பெஸ்ட் என்று எதையுமே சொல்லவே முடியாது யோசிக்க யோசிக்க அது மாறிக்கொண்டே வரும் ஆனாலும் பல
திருத்தங்களுக்கு பிறகு ஒன்றை செலக்ட் செய்து விட்ட பின் அதை மாற்ற வேண்டாமென்பதே அவன் யோசனையாக இருந்தது . " ம் அப்போ இத அப்படியே வச்சுக்கலாம்ன்ற " என அவர் கேட்க அவன் ஆமாம் என்பது போல தலையசைத்தான் . " ஓகே தம்பி படுக்கலாம் " அவர் சொல்லிக்கொன்டே தலையணை மேல் சாய்ந்தார் . அவனும் அப்படியே கண்ணயர்ந்தான் . காலையில் எழுந்தவனுக்கு அவர் அங்கே இல்லாதது ஆச்சர்யம் அதிலும் பாய் , தலையணை , போர்வை எல்லாவற்றையும் அவர் எடுத்துக்கொண்டு போயிருந்தது கூடுதல் வியப்பை தந்தது . கீழே ரூமிலும் ஆளில்லையே என்று ரூம் மேட்டிடம் விசாரிக்க அவர் அவனை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டே
" என்னப்பா உனக்கே தெரியாதா ?! என்று அவனை நம்பாமல் பார்த்தார் .
" சீரியஸா தெரியாதுன்னே " என்ற பின் " அவர் காலையிலேயே சீக்கிரம் கிளம்பி ப்ரொட்யூசர் கிட்ட அட்வான்ஸ் வாங்க போயிருக்கார் " என்று சொல்லி முடிப்பதற்குள் அவனுக்கு தொண்டையில் ஏதோ கனத்தது ...

தொடரும் ...











Related Posts Plugin for WordPress, Blogger...