Showing posts with label KADAL. Show all posts
Showing posts with label KADAL. Show all posts

2 February 2013

கடல் - கலங்கல் ...


வணிக ரீதியான வெற்றி  , தோல்விகளை தாண்டி இந்தியாவே உற்று நோக்கும் முக்கியமான இயக்குனர்களுள் ஒருவர் மணிரத்னம் . கடல் மூலம் தனக்கு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் கை கோர்த்திருக்கிறார் . ராவணனை தொடர்ந்து மூன்று வருட காத்திருப்பில் கடல் மேல் பலன் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம் ...

நல் வழியில் செலும் தேவ ஊழியர் சாம் ( அரவிந்த்சாமி )  தீய வழியில் நம்பிக்கை கொண்ட தேவ ஊழியர் பெர்மேன்சன் ( அர்ஜுன் ) இவர்களுக்கிடையேயான முன் விரோதம் ,  விபச்சார தாயின் மறைவிற்குப் அனாதையான தாமஸ் ( கவுதம் கார்த்திக் ) , மன வளர்ச்சி குன்றிய பியா
( துளசி ) இவர்களின் காதல் இரண்டிற்குமிடையே  பிண்ணப்பட்ட  கதை கடலில் தத்தளிக்கிறது ...

கவுதம் கார்த்திக் இளைமையான தோற்றத்தால் கதைக்கு பொருந்துகிறார் . ஆக்ரோஷம் வரும் அளவிற்கு காதல் வரவில்லை . நல்ல படம் கிடைத்தால் மேலே வருவார் என்று நம்பலாம் ...


துளசியும் , அவர் கதாபாத்திரமும் படத்திற்கு மிகப்பெரிய சறுக்கல் . கர்ர்த்திக் கேரக்டருக்கு சொல்லப்பட்ட டீடைலிங்க் இவருக்கு சுத்தமாக இல்லை . மன வளர்ச்சி குன்றியவர் என்பதை அறிமுகத்தின் போதே விவரித்திருந்தால் ஒரு வேலை கொஞ்சமாவது டேமேஜை தவிர்த்திருக்கலாம் . 15 வயது என்கிறார்கள் , க்ளோஸ் அப் காட்சிகளில் காத்திக்கின் அக்கா போல இருக்கிறார் . இவர் அப்பா என்று அர்ஜுனிடம் உருகும் போது " ப்பா " என்று ந.கொ .ப.கா காமெடி வசனம் நியாபகம் வருமளவிற்கு பார்ட்டி அவ்வளவு வீக். " அடியே " பாடலில் இவரின் இடுப்பைக்  காட்டி வேறு பயமுறுத்துகிறார்கள் ...

படத்தின் ஹீரோ என்று அரவிந்தசாமியை சொல்லலாம் . உடல் இளைத்து இளைஞனாக வரும் முதல் காட்சியிலிருந்து , நடுத்தர வயது பாதிரியாராக
" அன்பின் வாசலே " என்று பாடிக்கொண்டு போகும் க்ளைமாக்ஸ் வரை மனதில் நிற்கிறார் . ஊரே இவரை அடித்துத் துரத்தும் போது நடிப்பால் பரிதாபப்பட வைக்கிறார் ...



முன்னவர் போல இளமை தோற்றத்திலும் சரி , கதாபாத்திரத்திலும் சரி அர்ஜுன் நம்மை பெரிதாக கவரவில்லை . க்ளைமாக்ஸ் காட்சியில் அர்ஜுன் சைக்கோ போல நடந்து கொள்வது அபத்தத்தின் உச்சம் . குரு சோமசுந்தரம் ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . சிறு வயது தாமசாக வரும் பையன் , பொன்வண்ணன் போன்றோரும் கவனிக்க வைக்கிறார்கள் ...

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் " ஏலே கீச்சான் " , " நெஞ்சுக்குள்ளே  " என்று பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டாலும் கடல் பின்னணிக்கு ஏற்றபடி பாடல்கள் பொருந்தவில்லை . படம் பெரும்பாலும் அமைதியாகவே நகர்வதால் பின்னணி இசைக்கும் அவர் மெனக்கெடவில்லை. ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு ரணகளம் . படம் முடியும் போது  வரும் " அன்பின் வாசலே " பாடலில் வரும் லைட்டிங் சூப்பர் . கலை இயக்குனர் சசிதர் அடப்பா தன்  உழைப்பால் அடடா போட வைக்கிறார்...

பாதிரியார் என்றால் பாவ மன்னிப்பு வழங்குவார் , பிரச்சாரம் செய்வார் என்கிற ஸ்டீரியோ டைப்பாக இல்லாமல் அவர்களும் செய்யும் தவறுகள் , ஊர் மக்கள் அவர்களை நடத்தும்  விதம் , அவர்கள் படும் சங்கடங்கள் இவற்றையெல்லாம் துல்லியமாக விளக்கும் காட்சிகளில் எழுத்தாளர் ஜெயமோகன் மிளிர்கிறார். தேவ ஊழியம் செய்ய வந்துவிட்டு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் ப்ரதர் அர்ஜுன் , மழையை பொருட்படுத்தாமல் சிறுவனை வெளியே துரத்தி விட்டு அவள் அம்மாவுடன் சல்லாபம் செய்யப்போகும் பொன்வண்ணன் , அம்மா இறந்ததை புரிந்து கொள்ளாமல் அவள் மார்பின் மேல் தூங்கும் சிறுவன், இறந்தவளின் காலை சவப்பெட்டிக்குள் நுழைக்க முடியாமல் அதை வெட்டி எடுக்கும் ஒருவன் இப்படி சில மிரள வைக்கும்  முதல் இருபது நிமிட காட்சிகளால் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குனர் மணிரத்னம் ...


க்யூட்டான காதல் காட்சிகளுக்கு பெயர்  போன மணி சிறு சிறு கதாபாத்திரங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கூட கார்த்திக் - துளசி காதலுக்கு தராமல்  போனது பெருத்த ஏமாற்றம் . கதை வசனம் , திரைக்கதை என எல்லாவற்றிலும் அவர் ஜெயமோகனை மட்டுமே மலையளவு நம்பியதால் மணி டச்சிங் டோட்டலி மிஸ்ஸிங் . அடுத்த படங்களில் சுதாரித்துக் கொள்வார் என்று நம்பலாம் .ஹீரோ அரவிந்த்சாமி யின் வளர்ப்பு பையன் கார்த்திக் , வில்லன் அர்ஜுனனின்  மகள் துளசி இருவரின் காதல் என்கிற வழக்கமான பாணியில் பயணித்திருந்தால் கூட ரசித்திருக்கலாமோ என்னமோ ஆனால் கடல் திரைக்கதையில் அங்குமிங்கும் அலைபாய்ந்து நம்மை கலங்கடிக்கிறது ...

ஸ்கோர் கார்ட் : 39


Related Posts Plugin for WordPress, Blogger...