எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கே.பாக்யராஜின் " இன்று போய் நாளை வா " படத்தை சந்தானமும் , இயக்குனர் மணிகண்டனும் பவர் முந்திரி தூவி இனிப்பு லட்டாய் தந்திருக்கிறார்கள் . டைட்டிலில் பாக்யராஜிற்க்கு நன்றி மட்டும் போட்டு விட்டு அதற்குரிய பேமென்டை கொடுக்கவில்லை என்கிற சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும் பார்ப்பவர்களை யோசிக்க விடாமல் சிரிக்கவைக்கிறது லட்டு ...
நெருங்கிய நண்பர்களான கே.கே ( சந்தானம் ) , பவர் ( ஸ்ரீநிவாசன் ) , சிவா ( சேது ) மூவருமே சேதுவின் எதிர்த்த வீட்டுக்கு குடி வரும் விசாகாவை லவ்வுகிறார்கள் . கடைசியில் லவ் போட்டியில் யார் ஜெயித்தார்கள் என்பதே கதை ...
கதை இருக்கிறதோ இல்லையோ சந்தானம் கால்ஷீட் இருந்தால் போதுமென்கிற நிலை இருக்கும் போது , அவரே தயாரித்து நடிக்கும் படத்தில் காமெடிக்கு பஞ்சமிருக்குமா ? அவர் லைனில் சொல்ல வேண்டுமென்றால் " ஓசிக்குடிக்கு அலையறவனுக்கு ஒயின்ஷாப்பே கிடைச்சா " என்பது போல படம் முழுவதும் பவரை மட்டுமல்லாமல் எல்லோரையும் போட்டு தன் ஸ்டைலில் கலாய்க்கிறார் சந்தானம் . வழக்கமாக சந்தானம் படங்களில் வரும் டபுள் மீனிங் வசனங்கள் படத்தில் இல்லாததும் ஆரோக்கியமான விஷயம் ...
படத்தின் சர்ப்ரைஸ் பாக்கேஜ் பவர் ஸ்டார் தான் . மனிதர் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறார் . அப்பாவித்தனமான இவரின் முகபாவமும் , செய்யும் கோணங்கி சேட்டைகளும் சந்தானத்தை விட அதிகமாகவே பவருக்கு கிளாப்ஸ் வாங்கித்தருகின்றன . இந்த வெற்றியை வைத்துக் கொண்டு பவர் சரியான பாதையில் பயணித்தால் ரசிகர்கள் நிறையவே ஆனந்த தொல்லைகளை எதிர்பார்க்கலாம் ...
நிஜ வாழ்க்கையிலும் சந்தானத்தின் நண்பரான சேதுவிற்கு நல்ல அறிமுகம் , ஆனால் சந்தானம் , பவர் இருவருக்கு மத்தியில கிங்காங் கையில் மாட்டிக்கொண்ட ஹீரோயின் போல நம்மை கவர முடியாமல் தவிக்கிறார் . முதல் படமாதலால் மன்னிக்கலாம் ...
மூன்று பேர் விழுந்து விழுந்து காதலிக்கும் அளவிற்கு விசாகா அழகாய் இல்லை . காமெடி படத்திற்கு இவர் போதுமென்று நினைத்து விட்டார்களோ என்னவோ ? !... கோவை சரளா , வி.டி.வி கணேஷ் , சிவங்கர் மாஸ்டர் , தேவதர்ஷினி என்று ஒரு பட்டாளமே கிச்சு கிச்சு மூட்டினாலும் குண்டு பையனும் , பவரின் அண்ணனாக வருபவரும் கவனிக்க வைக்கிறார்கள் . தமன் இசையில் " லவ் லெட்டெர் " , " லட்டு தின்ன ஆசையா " பாடல்கள் முணுமுணு வைத்தாலும் இடைவேளைக்கு பிறகு வரும் பாடல்கள் ஸ்பீட் ப்ரேக்கர்ஸ் ...
படம் நெடுக பஞ்ச் இருந்தாலும் ஒரிஜினலில் வரும் "ரஹ்தாதா" அளவிற்கு மனதை தொடும் சீன் எதுவும் இல்லை , அதே போல ஹீரோயினுக்கு அறிவுரை வழங்கும் கதாபாத்திரத்தில் தேவதர்ஷினியை போட்டு ஒரிஜினலில் இருந்த இம்பேக்டை கெடுத்து விட்டார்கள் என்று சொல்லலாம் . முதல் பாதியில் திருப்பதி லட்டு போல சுவையாய் இருக்கும் படம் பின் பாதியில் சிம்புவுடன் விசாகா காதல் என்கிற ரீதியில் தேவையில்லாமல் படம் பயணித்து பூந்தி போல உதிர்ந்து விடுகிறது ...
இந்த குறைகளை தவிர சிரிக்க மட்டும் தான் இனி சினிமாவா என்கிற கவலை ஒருபுறம் மனதை அரித்தாலும் , பல பிரச்சனைகளால் மன அழுத்தத்துடன் அலையும் பலருக்கு ஒரு வடிகாலாகவும் அமைந்து , படத்துடன் சம்பத்தப்பட்டவர்களுக்கு குறைந்த முதலீட்டில் நல்ல லாபத்தையும் தரும் கண்ணா லட்டு தின்ன ஆசையா - சின்ன லட்டு பெத்த பிசினசு ...
ஸ்கோர் கார்ட் - 42


