22 March 2020

அவன் - அவள் - நிலா (18) ...


வள் சில நாட்களாகவே யாருடனும் அதிகம் கலந்து கொள்ளாமல் தனியாகவே இருந்தாள் . முன்பெல்லாம் என்ன தான் புத்தகங்களுக்குள் மூழ்கினாலும் ப்ரேக் எடுத்து ரூமை விட்டு வந்து பேசி விட்டு போவாள் . கூட்டுக்குடும்பம்  என்பதால் யாராவது எதையாவது பேசிக்கொண்டிருப்பார்கள் . அவர்கள் சொல்லும் கதைகளை சுந்தரி ஆர்வமுடன் கேட்பாள் . அதிலும் இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது அம்மாவும் அத்தையும் அவள் தூங்கி விட்டதாக நினைத்து ரகசியமாய் ஏதோ பேசிக்கொண்டிருக்க புகுந்து ஏதாவது டவுட் கேட்டு வாங்கிக் கட்டிக்கொள்வாள் . பாட்டியிடம் இருந்து நிறைய கதைகள் கேட்டு வளர்ந்தவளுக்கு கதை சொல்லிகளை பிடிக்கும் . கதை சொல்லிகளின் டெக்னிக்கல் வடிவம் தானே சினிமா . அதனால் தானோ என்னவோ நேரடியாக சினிமாவின் மேல் ஈடுபாடு இல்லாவிட்டாலும் அதில் கதை சொல்ல கிளம்பியிருக்கும் கார்த்திக்கின் மேல் அவ்வளவு ஈடுபாடு வந்துவிட்டது . அவன் பேரை நினைக்கும் போதே ஏதோ மனம் கட்டுக்கடங்காமல் எங்கெங்கோ செல்கிறது ...

அவனை முதன்முதல் திருமணத்தில் வைத்து பார்த்தது , பேசியது , பழகியது எல்லாமே அவள் கண்முன் வரும் . உண்மையிலேயே நிஜத்தை விட அந்த கற்பனையில் அவள் அதிக சந்தோசத்துடனே இருப்பாள் . கற்பனையில் அவளுக்கேற்றவனாக , அவள் சொல்வதை கேட்பவனாக , கோபப்படாதவனாக , அவள் கேட்காமாலேயே ஏதாவது சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து சர்ப்ரைஸ் செய்பவனாக  என அவளுக்கேற்ற டெய்லர் மேடாக கார்த்திக் இருப்பான் . அவன்  பேசாமல் அவளை அதிகம் பேச வைத்து கேட்பான் , அவள் வெட்கப்படுவது பார்த்து ரசிப்பான் , திடீரென தொட்டு வெட்பம் ஏற்றுவான் , எதிர்காலத்தில் அவளுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதற்கான ஏற்பாடுகளில் இருப்பான் , மொத்தத்தில் அவன் உலகத்தில் இல்லாமல் அவளையே உலகமாக நினைப்பான் . பெண்களுக்கு கடவுள் கொடுக்கும் ஒரு வரப்பிரசாதம் இந்த கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பது . அதில் எந்த பிக்கல் பிடுங்கலும் அவர்களுக்கு இல்லை ...

அவனை வேண்டுமென்றே கொஞ்சம் சீண்டி விட்டு கோபப்படுத்தி அழகு பார்த்திருக்கிறாள் . ஆனால் அந்த சந்தோசமெல்லாம் கொஞ்ச நேரத்துக்கு மேல் நிலைக்காது . அந்த விளையாட்டை கூட புரிந்து கொள்ளாமல் அவன் மூர்க்கமாகி விடுவான் . அதன் பிறகு அவனை சமாதானப்படுத்துவதற்குள் அவளுக்கு போதும் போதென்றாகி விடும் . எவ்வளவு கத்தினாலும் மனதளவில் அவன் குழந்தை என்பது அவளுக்கு புரியும் . ஆனாலும் அதற்காக ஒவ்வொரு முறையும் அவனை பொறுமையாக கையாள்வதென்பது அவளுக்கு இயலாத காரியம் . ஆண்கள் அம்மாவை போலவே தங்கள் மனைவியை / காதலியை எதிர்பார்க்கிறார்கள் . நிச்சயமாக ஒரு தாயை யாராலும் சமன் செய்ய முடியாது . செய்ய வேண்டுமென்கிற அவசியமும் இல்லை . இரண்டும் வெவ்வேறு உறவுகள் , வெவ்வேறு உணர்வுகள் அவையிரண்டையும் ஆண்கள் தன்னவளிடத்தில் எதிர்பார்ப்பதும் , அதை நிறைவேற்ற பெண்கள் முயற்சிப்பதும் , முடியாமல் தோற்பதும் பெரிய சிக்கல்களின் சின்ன புள்ளியாக உருவெடுக்கிறது ...

கதவை யாரோ படபடவென தட்டும் சத்தம் கேட்டு தன்னிலைக்கு வந்தாள் சுந்தரி . " வரேம்மா " என்று சொல்லிக்கொண்டே வேகமாக கதவை திறந்தாள்.
" எந்த லோகத்துலடி இருக்க " . " பூலோகத்துல தான் " என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்  சுந்தரி . " இப்படி எதையாவது சொல்லி மழுப்பிடு , எத்தனை தடவ கூப்பிட்டேன் தெரியுமா ?" , அம்மா படபடவென பேசினாள் . " ஏம்மா எந்த ஏரோப்ளேன பிடிக்க இந்த அவசரம் ?" சுந்தரி ஆர்வமுடன் கேட்டாள் . " ஆமாம் பிடிக்குறாங்க , ஜானகி மாமி வந்துருக்கா , சீக்கிரம் ரெடி ஆயிட்டு வா , ஹால்ல இருக்கா " .  அம்மா ஏன் பம்பரமாக சுற்றுகிறாள் எனபது சுந்தரிக்கு இப்போது புரிந்தது . ஜானகி மாமி ஏற்கனவே இங்கே வந்திருக்கிறாள் . அவளுக்கு ஒரு வகையில் தூரத்து சொந்தம் .  ஒரு முறை பார்த்ததிலிருந்து அவளுக்கும் அவள் மகனுக்கும் சுந்தரியை மிகவும் பிடித்துவிட்டது . ஏற்கனவே அதை ஜானகி மாமி அம்மாவிடம் சொல்லியிருக்கிறாள் . அம்மாவுக்கும் அவர்கள் குடும்பத்தை பிடித்திருக்கிறது. சுந்தரி அப்பாவிடம் சொல்லி படிப்பை காரணம் காட்டி தட்டிக் கழித்து விட்டாள் . இப்போது அவள் கல்லூரி படிப்பு முடியப்போகும் தருவாயில் மறக்காமல் வந்திருக்கிறாள் மாமி  ...

போகவில்லையென்றால் அம்மா விட மாட்டாள் என்பதற்காகவே மனமில்லாமல் முகத்தை மட்டும் அலம்பிக்கொண்டு ஹாலுக்கு போனாள் சுந்தரி . அம்மா அவளை பார்த்து பவுடர் போட சொல்லி  சைகை செய்ய அதைப் பார்த்த மாமி " நம்ம குழந்தைக்கு எதுக்கு அதெல்லாம் சும்மாவே கோவைப்பழம் மாதிரி இருக்கா " என்றாள் . அந்த புகழ்ச்சி சுந்தரிக்கு அதீதமாக பட்டது கூடவே ஏனோ ஒரு பயம் வந்தது . மாமி அவளை பக்கத்தில் அமர வைத்துக்கொண்டு தலையை தடவிக்கொண்டே பேசினாள் .
" நெறைய புக்ஸ் படிப்பியாமே , அம்மா சொன்னா " . " ம் " என்பது போல சுந்தரி தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் . " இங்கிலிஷ் நாவல் கூட நெறைய படிப்பா " . அம்மாவை ஒரு முறை முறைத்தாள் சுந்தரி . இது ஏதோ பெண் பார்ப்பதற்கு முந்தைய ஒத்திகை போல பட்டது அவளுக்கு . சும்மாவே அம்மாக்கள் " காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு போல " பீற்றிக்கொள்வார்கள் . இப்போது ஒரு பெரிய இடத்து மாமி சுந்தரியை தனது மருமகளாக்க வீடு தேடி வந்திருக்கிறாள் , அந்த சந்தர்ப்பத்தில் மகளை பாராட்டாமல் அவள் அம்மா விட்டு விடுவாளா ?!.

மாறி மாறி மாமி கேட்டுக்கொண்டிருந்த கேள்விகளுக்கு ஏனோதானோ வென்று பதில் சொல்லிவிட்டு ஒரு  வழியாக தப்பித்து மீண்டும் ரூமுக்கு வந்து சேர்ந்தாள் சுந்தரி . " மாமி நீங்க ஒன்னும்  தப்பா எடுத்துக்காதீங்கோ , அவளுக்கு செத்த தலைவலின்னு படுத்திருந்தா , அதான் " . சுந்தரிக்கு அவள் அம்மா சமாளிப்பது நன்றாகவே கேட்டது . " சே சே அதனாலென்ன மாமி குழந்தை ரெஸ்ட் எடுக்கட்டும் " . ஜானகி மாமி குழந்தை என்று கூப்பிடும் போதெல்லாம் சுந்தரிக்கு அன்னீஸியாக இருந்தது . தான்  எப்படி அழைக்கப்பட வேண்டுமென்கிற உரிமையை நாம் தான் தரவேண்டும் , ஆனால் அதை மற்றவர்கள் எடுத்துக்கொள்ளும் போது ஒரு வித எரிச்சல் வந்து விடுகிறது . அதுவும் இது திருமணம் சம்பந்தப்பட்டது என்பதால் அவளுக்கு எரிச்சலும் , பயமும் கூடுதலாகவே இருந்தது . சுந்தரிக்கு உடனடியாக கார்த்திக்கோடு பேச வேண்டும் போல இருந்தது ...

கார்த்திக் முன்பு கொடுத்திருந்த நம்பரை புக் செல்ஃபில் இருந்து சுந்தரி தேடியெடுத்தாள் . மதுரையில் இவர்கள் டாப்படிக்கும் இட்லி கடையின் நம்பர் அது . மாமி போனவுடன் அம்மா இல்லாத நேரமாக பார்த்து ஹாலில் இருந்து அந்த நம்பருக்கு ஃபோன் செய்ய வேண்டும் . முன்பு சுரேஷ் வீட்டு நம்பர் கொடுத்திருக்கிறான் , அதில் பேசியிருக்கிறாள் . அதன் பிறகு இந்த கடை நம்பர் தான் . ஒரே ஆளே எப்பொழுதும் எடுப்பதில்லை ஆனால் யார் எடுத்தாலும் கார்த்திக் என்றவுடன் சுந்தரியா என்று கேட்பார்கள் . அப்படி கேட்டவுடன் அவளுக்கு ஒரு வெக்கம் வரும் . தான் இன்னாருடைய ஆள் என்பதை வேறொருவர் சொல்லக்கேட்பதே பெண்களுக்கு அலாதிப்பிரியம் தான் . தன் தோழியை அவள் காதலன் பேரை சொல்லி கூப்பிடும் போது அவளுக்கு வெக்கம் பிடிங்கித்தின்னும் . அதை சொல்லி சொல்லியே அவளை தோழிகள் ஓட்டுவார்கள் . சுந்தரிக்கு அது போன்றதொரு கொடுப்பினை அமையவில்லை . யாரிடமும் பகிரங்கமாக சொல்ல முடியாத சூழல் . யாராவது ஒருவருடன் சொன்னாலும் எல்லோருக்கும் வைரஸ் போல பரவிவிடும் அபாயம் . கொக்கு  மீனுக்கு காத்திருப்பது போல அவள் நல்ல சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தாள்  ...

சுந்தரி கார்த்திக்கிடம் விஷயத்தை சொல்ல காத்திருந்த அதே நேரத்தில் சரக்குக்கு தண்ணீரையும் , சோடாவையையும் மிக்சிங் செய்துகொண்டே சரியா இருக்கிறதா  என்று அவன் சென்னைக்கு தன்னை கூட்டிக்கொண்டு வந்தவரிடம் கண்களாலேயே வினவிக்கொண்டிருந்தான் .
" போதும் போதும் " என்பது போல கையை ஆட்டினார் அந்த முன்னாள் உதவி இயக்குனர் . இதே மதுரையில் நண்பன் மர்ரு மிக்சிங் செய்து கொடுத்ததை  அடித்து தான் அவனுக்கு பழக்கம் . இன்று நிலைமை உல்டாவாக மாறியிருப்பதை நினைத்து நொந்து கொண்டான் . ஆனால் இதெல்லாம் பார்த்தால் சினிமாவில் காலம் தள்ள முடியாது என்பது அவனுக்கு புரிந்தது . " தம்பி என்னடா அண்ணன் சரக்கு மண்டியா இருக்கேன்னு நினைக்காதீங்க , ஊருக்கு போனா அடிக்க முடியாது " .
ஓசி யில எவனும் வாங்கித்தர மாட்டானென்பதை அவர் நாசூக்காக சொல்வது போல காரத்திக்கிற்கு பட்டது . " அதெல்லாம் ஒன்னும் இல்லென்னே " , சொல்வதற்காக சொல்லி வைத்தான் . " இன்னிக்கு பார்த்தோம்ல அவன்லாம் ரெண்டு வருஷம் முன்னால ஒண்ணுமே இல்லாம வந்தான் , இப்போ  என்னடான்னா நம்மக்கிட்டயே பகுமானம்  பண்றான் " என்று போதையில் அவர் பொரும ஆரம்பித்தார் . ஒவ்வொரு முறையும் யாரையாவது பார்த்து விட்டு வரும் போது அவருடைய பொருமலும் அவனுடைய செலவும் அதிகமாகிக்கொண்டே இருந்தன ...

தொடரும் ...

8 March 2020

அவன் - அவள் - நிலா ( 17 ) ...


சென்னைக்கு போவதென முடிவானது . இதற்கு மேலும் கார்த்திக்கின் அப்பாவிற்கு அவன் மதுரையில் இருப்பது சரியென படவில்லை . இப்படியே போனால் ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவன் கொலை செய்யப்படுவான் அல்லது யாரையாவது ஏதாவது செய்து விட்டு ஜெயிலுக்கு போவான் என்பது அவருக்கு தெளிவாக புரிந்தது . திடுதிடுப்பென இப்படி கிளம்ப வேண்டியது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் ஏற்கனவே சினிமா ஆசையில் சென்னைக்கு போகும் முடிவெடுத்திருந்தவனுக்கு பேரதிர்ச்சியாக இல்லை . அதோடு அப்பா இப்போதிருக்கும் நிலையில் அவனால் எதுவுமே பேச முடியாது என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தது.
ஒரு பக்கம் அவனது அப்பா அங்கு சென்னையில் வேலை பார்க்கும் தனது நண்பனின் மூலம் கார்த்திக்கிற்கு வேலை வாங்கி தருமாறு பேசிக்கொண்டிருக்க அவன் எந்த டைரக்டரிடம் முதலில் போய் வாய்ப்பு
கேட்கலாம்  என்று யோசித்துக்கொண்டிருந்தான் ...

சூப்பர் குட்ஸ் ஃபிலிம்ஸ் இல் ப்ரொடக்ஷனில் இருக்கும்  சீனியர் சரவணனின் நண்பர் மதுரைக்கு வந்திருப்பது தெரிய வர அவரை போய் சந்திக்க கிளம்பினான் கார்த்திக் . கல்லூரி நண்பன் கௌசிக் அவருடன் தொடர்பிலிருப்பதால்  அவனையும் கூட்டிக் கொண்டு போவதென முடிவெடுத்தான் . அவரை பார்ப்பதற்கே ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது . அவர்கள் முன் பந்தாவாக இருக்க வேண்டுமென்பதற்காகவே அவர்  லேட்டாக வந்தது போல அவனுக்குப்  பட்டது. கௌசிக் ஏதோ பேச முற்பட அவர்  வெளியில் போய் பேசிக்கொள்ளலாம் என்பது போல சைகை  காண்பித்தார் . மூவரும் தெரு
முக்கில் இருந்த பெட்டிக்கடைக்கு போனார்கள் ...

கடையில் இரண்டு வடையை எடுத்துக்கொண்டவர் இவர்களிடம் நீட்ட கௌசிக் மட்டும் ஒன்றை வாங்கிக்கொள்ள அவர் அவனுக்கு ஒன்றை கொடுத்து விட்டு இன்னொன்றை எடுத்துக்கொண்டார்  . ஒரு பாக்கெட் வில்ஸ் வாங்கி அதில் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டவர் " சிகரெட் புடிக்கிற பழக்கம்லாம் இல்லேல்ல ? " என்று சொல்லிக்கொண்டே சிகரெட் பாக்கெட்டை பாண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார் . இருக்கு  இல்லை என்பது போல இரண்டுக்கும் பொதுவாக அவர்கள் தலையை ஆட்டி வைத்தார்கள் . சிகரெட் வீணாகி விடுமோ என்கிற பயத்திலேயே அவர் அவசரமாக உள்ளே வைத்துக்கொண்டது போலவே  அவனுக்கு பட்டது . " அண்ணே நான் சொன்ன ஃப்ரெண்ட் இவன் தான் " என்று கௌசிக் கை காட்ட அவன் கை குலுக்கிக்கொண்டான் . சம்பிரதாய அறிமுகங்கள் முடிந்தவுடன் டீ வர அவர் அதோடு சேர்த்து நேரடியாக விஷயத்துக்கு வந்தார் ...

" அண்ணன் சிபாரிசுல அசிஸ்டன்டா  யாருகிட்டயாவது சேர்த்து விட்டுரலாம் , இல்லேன்னா அது அவ்வளவு ஈசி இல்ல "
" அதாண்ணே உங்க கிட்ட கூட்டிட்டு வந்தேன் " என்று கௌசிக்கும் அவன் பங்குக்கு ஐஸ் வைத்தான் . ,
 " அண்ணன்லாம் சென்னைக்கு போய் கஷ்டப்பட்டு ஒன்னரை வருஷம் கழிச்சு தான் அசிஸ்டண்டாக முடிஞ்சது " என்று அவர் சொன்னவுடன்  " பத்து வருஷமா அப்படியே தானே இருக்கீங்க " என்று சொல்ல வந்த கௌசிக் அதை வாயோடு அடக்கிக்கொண்டான் . " தம்பி ஏதோ சொல்ல வந்தீங்க " . " இல்லேண்ணே நீங்க சொல்லுங்க " .
" அப்புறம் நானே தொல்லை தாங்காம அதுல இருந்து ப்ரொடக்ஷனுக்கு மாறிட்டேன்னா பாரேன் " என்று அதை ஏதோ பெருமையாக சொல்லிக்கொண்டார் .  " உங்களாலேயே முடியலேன்னா எப்படிண்ணே "
கௌசிக் பக்க வாத்தியம் வாசித்தான் . ஒருவரை புகழுவதில் என்ன காசா ? பணமா ? அடித்து விடுவோமே என்பது தான் அவனது சைக்காலஜி ...

" தம்பி எதுவும் பேச மாட்டாப்லயா ? என்று கார்த்திகை பார்த்து அவர் கேட்க
" உங்கள நம்பி தான்னே வந்திருக்கான் , நல்ல டைரக்டர் கிட்ட சேர்த்து விட்டுடுங்க " என்று கௌசிக் சொல்ல  " யார் நல்ல டைரக்டர் சொல்லு பார்ப்போம் " என்று கார்த்திகை பார்த்து கேட்டார் உடனடியாக .
ஏதாவது சொல்லப்போய் கருத்து வேறுபாடு வந்து விடுமோ என்று யோசித்தவன் " மணிரத்னம் " என்றான் . அவனை சட்டென்று பார்த்தவர்
" அதெல்லாம் பெரிய இடம் , இன்ஸ்டூட்ல இருந்து வந்தாலே  திரும்பி கூட பார்க்க மாட்டாங்க  " என்றார் . அவனுக்கு சப்பென்று ஆகி விட்டது .
" இல்லேண்ணே ஆழ்வார்ப்பேட்டை ல தான் அவர் வீடு நேர போகலாம்னு இருந்தேன் " .  . " தம்பி நீ போய்ட்டு அங்க இருக்குற வாட்ச்மேனுக்கு பொழுதை வேணா போக்கலாம் மத்தபடி ஒன்னும் நடக்காது " அவர் சொல்லி விட்டு சிரித்தார் ...

" வேற யாராவது சொல்லு " , அவன் உடனே ஷங்கர் என்றான் . அவர் சீரியசாக  அவனை பார்த்தார் . " தம்பி நீ சொல்ற யாரையுமே  கிட்ட கூட நெருங்க முடியாது " . சொன்னவரை ஒருமுறையும் கவுசிக்கை ஒருமுறையும் அவன் திரும்பி பார்க்க , ஏதோ யூகித்தவராய் , " அண்ணனால முடியாததுன்னு ஒன்னும் இல்ல , இருந்தாலும் கால விரயம் ன்னு ஒன்னு இருக்குல்ல " என்று சமாளித்து விட்டு மூன்றாவது சிகெரெட்டை பற்ற வைத்துக்கொண்டவர் இரண்டாவது முறையாக டீ சொன்னார் . அவர் ஆசுவாசமாக செய்வதையெல்லாம் பார்த்தால் அடுத்து அவருக்கு ஒரு வேலை வெட்டியுமில்லை என்பது தெளிவாக தெரிந்தது , அதற்கு ஏன் ஒன்  அவர் ஆக காக்க வைத்தார் என்பது மட்டும் அவனுக்கு அப்போது புரியவில்லை  . அவர் சினிமாவில் தன்  பிரதாபங்களையெல்லாம் அடுக்கிக்கொண்டு போக அவனுக்கு ஒரு கட்டத்துக்கு மேல்  இதையெல்லாம் நம்புறதா வேணாமா என்று விவேக் மாடுலேஷனில் அவனுக்கு யோசனை வந்தது . நாயகன் படத்தில் வருவது போல " நீங்க நல்லவரா கெட்டவரா " என்று கேட்க வேண்டும் போல இருந்தது ...

பேச தொடங்கியதிலிருந்து  அவனுக்கு தீர்க்கமாக அவர் நிறைய கமர்சியல் படங்களை தான் விரும்பி பார்ப்பார் என்பதும் , சினிமாவில் தான் நிறைய பணம் சம்பாதிக்க முடியுமென்கிற எண்ணத்தில் மட்டுமே அவர் அந்த துறையை தேர்ந்தெடுத்தார் என்பதும் தெரிந்தது . தரமான படங்கள் மேல் அவருக்கு பெரும்பாலும் ஈடுபாடு இல்லையென்பதும் , டெக்னிக்கல் விஷயங்களிலும் அவர்  பத்து ஆண்டுகளுக்காவது பின் தங்கியிருந்ததும்  அவனுக்கு ஆச்சர்யமாகவும் , அதிர்ச்சியாகவும் இருந்தது . உண்மையில் சாதிக்க முடியாமல் போனவர்களுக்கு தான் தங்களை யாராவது புகழ வேண்டுமென்றோ , அது கிடைக்காத பட்சத்தில் அவர்கள்  தன்னைத்தானே புகழ்ந்து கொள்வார்கள் என்றும் எங்கோ படித்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது . இப்படி பல்வேறு எண்ணங்கள் அவன் மனதுக்குள் ஓடினாலும் சினிமாவில் சேர நிச்சயம் அவர் ஒரு  துருப்புசீட்டு என்பது மட்டும்  புரிந்தது...

இந்த வாரக்கடைசியில் சென்னைக்கு போவதாக சொன்னவர் அவனிடம் எப்படி போகப்போவதாக விசாரித்தார் .  அவன் வைகையில் வருவேன் என்று சொல்ல , அது தனக்கு சரிப்படாது என்றும் கே.பி.என் பஸ்ஸில்  இந்த வாரக்கடைசிக்கு புக் செய்யுமாறு பணித்தார்  . ரயில் டிக்கெட்டை  விட அது பல மடங்கு அதிகமாச்சே  என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவர் கவுசிக்கை டீ இத்யாதிக்கு பணம் கொடுக்க சொல்ல அவன் கார்த்திக்கை பார்க்க அவன் செட்டில் செய்தான்  . பிறகு தான் கையில் வேறு பைசா இல்லையென்பது தெரிய வர அவரிடம் கேட்கலாமா என்ற யோசைனையை புறந்தள்ளிவிட்டு " அண்ணே ஒரு சிகரெட் கொடுங்க " என்று கேட்டு வாங்கிக்கொண்டான் . அதற்கு மேல் அங்கிருந்தால் மூஞ்சியிலேயே ஊதி விடுவான் என்று பட அவர் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டார் ...

" என்ன மாப்ள பெரிய அடைப்பா இருப்பாரு போல " என்று சொல்லிக்கொண்டே கௌசிக் சிகரெட்டுக்கு கை நீட்ட கார்த்திக் முறைக்கவே அவன் கடைக்காரிடம் இருந்த சில்லறைகளை பொறுக்கிக்கொடுத்து தம்  வாங்கி பற்ற வைத்துக்கொண்டான் . " ஆரம்பமே இப்படி இருக்கே அங்க எத்தனை முதலைங்க இருக்கோ " என்றான் கௌசிக் . உண்மையில் சினிமா உலகத்தை பற்றிய  உண்மை பிம்பத்தை அவர் கோடிட்டு காட்டி விட்டார் . அங்கே முதலைகள் மட்டுமல்ல  திமிங்கலம் , அனகோண்டா எல்லாமே வாயை திறந்து வைத்துக்கொண்டு அவனுக்காக காத்திருப்பது போலவே பட்டது . ஒரு சாங்கிலேயே ஹீரோவை பெரிய ஆளாக மாற்றும் விக்ரமனுக்கே  ஒரு படத்தை இயக்க பல வருடங்கள் ஆகியிருக்கும் . நடந்த உரையாடலலிருந்து சினிமாவில் முதல் அடி எடுத்து வைப்பதே எவ்வளவு கடினமென்பது அவனுக்கு புரிய வந்தது . அதே போல் எல்லா செலவுக்கும் அப்பாவை எதிர்பார்க்க முடியாதென்பதும் அவனுக்கு உரைத்தது ...

தொடரும் ...

1 March 2020

திரௌபதி - DRAUPATHI - தைரியம் ...


மாஸ் ஹீரோ / இயக்குனர் இல்லாத படங்களுக்கு ஓப்பனிங் கிடைப்பது மிக கடினம் . படம் நன்றாக இருந்து பார்த்தே ஆக  வேண்டுமென்கிற ஆர்வம் ரசிகர்களுக்கு எழுந்தாலொழிய பணம் பார்ப்பது கஷ்டம் . ஆனால் இயக்குனர் மோகன்.ஜி எடுத்துக்கொண்டகதைக்களம் , அதை ப்ரமோட் செய்த விதம் இரண்டுமே இந்த சின்ன பட்ஜெட் படத்துக்கு பெரிய வரவேற்பையும் , எதிர்பார்ப்பையும்  கொடுத்திருக்கிறது . அதை திரௌபதி  நிறைவேற்றினாளா?
பார்க்கலாம் ...

மனைவியையும், மச்சினிச்சியையும் ஆணவக்கொலை செய்து விட்டு சிறையில் இருந்து பெயிலில் வரும் ருத்ர பிரபாகரன் ( ரிஷி ரிச்சர்ட்) தன்  நண்பனின் உதவியோடு சிலரை போட்டுத்தள்ளுகிறார் . எதற்கு அப்படி செய்கிறார் , அவர் தான் மனைவி திரௌபதி ( ஷீலா ) யை  கொலை செய்தாரா போன்ற கேள்விகளுக்கு விசுவலாக இல்லாமல் நாடகத்தனமாக விடை சொல்கிறாள் திரௌபதி ...

காதல் வைரஸ் வந்து பல வருடங்கள் கடந்தும் ரிச்சர்ட் நடிப்பில் பெரிதாக தேறவில்லை . கருணாஸ் தவிர புதுமுகங்களாக இருக்கும் படத்தில் இவருக்கு நல்ல ஸ்கோப் ஆனால் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை .
சில சீன்களை தவிர பெரும்பாலும் இவர் நடிப்பு  ஃப்ளாட்டாகவே  இருப்பது மைனஸ் . திரௌபதியாக வரும் ஷீலா உண்மையிலேயே படத்துக்கு பெரிய ப்ளஸ் . பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவனுக்கு அவர் கொடுக்கும் தண்டனை அசாத்தியம் . படத்தின் குறிப்பிடத்தக்க சீன்களில் இதுவும் ஒன்று .
கருணாஸ் போலித் திருமணங்கள் பற்றி கோர்ட்டில் பேசி கவனிக்க வைக்கிறார் . ஜாக்காக வருபவரும் , தன் மகளுக்கு நடந்ததை கோர்ட்டில் விவரிப்பவரும் நல்ல தேர்வு ...


அந்தஸ்து , பணம் உள்ளவர்களின் வீட்டு பெண்களை நாடக காதல் மூலம் வசப்படுத்தி பணம் பறிக்கும் கும்பலை பற்றிய கதைக்கருவில் எல்லோரையும் அட போட வைத்திருக்கிறார் இயக்குனர் . ஆனால் அதை விட  பத்திர அலுவலகத்தில் நடக்கும் போலித் திருமணங்களிலேயே அதிக கவனம் செலுத்தியது சறுக்கல் . படம் லோ பட்ஜெட் தான் அதுக்காக நடிப்பதற்கு ஆட்களே கிடைக்கவில்லையா ? எல்லோரும் சொல்லித்தந்தது போலவே பேசி போரடிக்கிறார்கள் ...

ஆரம்ப கட்ட சீன்கள் படத்தின் மேல் ஆர்வத்தை கொடுப்பதென்னமோ உண்மை . அப்படியிப்படி இடைவேளை வரை தொய்வில்லாமல் போகும் படம் அதன் பின் தடுமாறுகிறது . திரௌபதி உயிரோடிருக்கும் போது அவரை கொலை செய்த குற்றத்திற்கு ரிச்சர்ட் கைதாவது , இரண்டு கொலை செய்தவருக்கு ஆறே மாதத்தில் பெயில்  கொடுப்பது , என்னதான்  காசு வாங்கிக்கொண்டு போலி பத்திரம் தயார் செய்தாலும் விழுப்புரத்தில் இருக்கும் பெண்ணிற்கு சென்னையில் இருந்து திருமண சான்றிதழ் இரண்டே மணி நேரத்தில் தயாரிப்பது , எம்ஜிஆர் கால பாணியில் ஹீரோ தொப்பியை போட்டதும் வில்லன் அடையாளம் தெரியாமல் முழிப்பது இவையெல்லாம் லாஜிக்கை சமாதிக்குள் தள்ளுகின்றன ...

நாடக காதலை பற்றி எடுப்பதாக  சொல்லிக்கொண்டு படத்தையே நாடகத்தனமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் . பொதுவாக படத்தின் ஹைலைட் சீன்களை ட்ரைலராக வைத்திருப்பார்கள் ஆனால் இதில் படம் மொத்தத்துக்கும் நல்ல சீன்கள் அது மட்டும் தானென்பது துரதிருஷ்டம் .
இப்படி மேக்கிங்கில் நிறைய குறைகள் இருந்தாலும் நாணயத்துக்கு இரு பக்கம் இருப்பது போல பெண்ணை பெற்றவர்களை  வில்லன்களாக காட்டும் சினிமாவில்  காதலை வைத்து பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் கும்பலின் மறுபக்கத்தை துகிலுரித்த திரௌபதியின் தையிரியத்தை நிச்சயம் பாராட்டலாம் ...

ரேட்டிங்க்     : 2.25 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 39





Related Posts Plugin for WordPress, Blogger...