8 March 2020

அவன் - அவள் - நிலா ( 17 ) ...


சென்னைக்கு போவதென முடிவானது . இதற்கு மேலும் கார்த்திக்கின் அப்பாவிற்கு அவன் மதுரையில் இருப்பது சரியென படவில்லை . இப்படியே போனால் ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவன் கொலை செய்யப்படுவான் அல்லது யாரையாவது ஏதாவது செய்து விட்டு ஜெயிலுக்கு போவான் என்பது அவருக்கு தெளிவாக புரிந்தது . திடுதிடுப்பென இப்படி கிளம்ப வேண்டியது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் ஏற்கனவே சினிமா ஆசையில் சென்னைக்கு போகும் முடிவெடுத்திருந்தவனுக்கு பேரதிர்ச்சியாக இல்லை . அதோடு அப்பா இப்போதிருக்கும் நிலையில் அவனால் எதுவுமே பேச முடியாது என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தது.
ஒரு பக்கம் அவனது அப்பா அங்கு சென்னையில் வேலை பார்க்கும் தனது நண்பனின் மூலம் கார்த்திக்கிற்கு வேலை வாங்கி தருமாறு பேசிக்கொண்டிருக்க அவன் எந்த டைரக்டரிடம் முதலில் போய் வாய்ப்பு
கேட்கலாம்  என்று யோசித்துக்கொண்டிருந்தான் ...

சூப்பர் குட்ஸ் ஃபிலிம்ஸ் இல் ப்ரொடக்ஷனில் இருக்கும்  சீனியர் சரவணனின் நண்பர் மதுரைக்கு வந்திருப்பது தெரிய வர அவரை போய் சந்திக்க கிளம்பினான் கார்த்திக் . கல்லூரி நண்பன் கௌசிக் அவருடன் தொடர்பிலிருப்பதால்  அவனையும் கூட்டிக் கொண்டு போவதென முடிவெடுத்தான் . அவரை பார்ப்பதற்கே ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது . அவர்கள் முன் பந்தாவாக இருக்க வேண்டுமென்பதற்காகவே அவர்  லேட்டாக வந்தது போல அவனுக்குப்  பட்டது. கௌசிக் ஏதோ பேச முற்பட அவர்  வெளியில் போய் பேசிக்கொள்ளலாம் என்பது போல சைகை  காண்பித்தார் . மூவரும் தெரு
முக்கில் இருந்த பெட்டிக்கடைக்கு போனார்கள் ...

கடையில் இரண்டு வடையை எடுத்துக்கொண்டவர் இவர்களிடம் நீட்ட கௌசிக் மட்டும் ஒன்றை வாங்கிக்கொள்ள அவர் அவனுக்கு ஒன்றை கொடுத்து விட்டு இன்னொன்றை எடுத்துக்கொண்டார்  . ஒரு பாக்கெட் வில்ஸ் வாங்கி அதில் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டவர் " சிகரெட் புடிக்கிற பழக்கம்லாம் இல்லேல்ல ? " என்று சொல்லிக்கொண்டே சிகரெட் பாக்கெட்டை பாண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார் . இருக்கு  இல்லை என்பது போல இரண்டுக்கும் பொதுவாக அவர்கள் தலையை ஆட்டி வைத்தார்கள் . சிகரெட் வீணாகி விடுமோ என்கிற பயத்திலேயே அவர் அவசரமாக உள்ளே வைத்துக்கொண்டது போலவே  அவனுக்கு பட்டது . " அண்ணே நான் சொன்ன ஃப்ரெண்ட் இவன் தான் " என்று கௌசிக் கை காட்ட அவன் கை குலுக்கிக்கொண்டான் . சம்பிரதாய அறிமுகங்கள் முடிந்தவுடன் டீ வர அவர் அதோடு சேர்த்து நேரடியாக விஷயத்துக்கு வந்தார் ...

" அண்ணன் சிபாரிசுல அசிஸ்டன்டா  யாருகிட்டயாவது சேர்த்து விட்டுரலாம் , இல்லேன்னா அது அவ்வளவு ஈசி இல்ல "
" அதாண்ணே உங்க கிட்ட கூட்டிட்டு வந்தேன் " என்று கௌசிக்கும் அவன் பங்குக்கு ஐஸ் வைத்தான் . ,
 " அண்ணன்லாம் சென்னைக்கு போய் கஷ்டப்பட்டு ஒன்னரை வருஷம் கழிச்சு தான் அசிஸ்டண்டாக முடிஞ்சது " என்று அவர் சொன்னவுடன்  " பத்து வருஷமா அப்படியே தானே இருக்கீங்க " என்று சொல்ல வந்த கௌசிக் அதை வாயோடு அடக்கிக்கொண்டான் . " தம்பி ஏதோ சொல்ல வந்தீங்க " . " இல்லேண்ணே நீங்க சொல்லுங்க " .
" அப்புறம் நானே தொல்லை தாங்காம அதுல இருந்து ப்ரொடக்ஷனுக்கு மாறிட்டேன்னா பாரேன் " என்று அதை ஏதோ பெருமையாக சொல்லிக்கொண்டார் .  " உங்களாலேயே முடியலேன்னா எப்படிண்ணே "
கௌசிக் பக்க வாத்தியம் வாசித்தான் . ஒருவரை புகழுவதில் என்ன காசா ? பணமா ? அடித்து விடுவோமே என்பது தான் அவனது சைக்காலஜி ...

" தம்பி எதுவும் பேச மாட்டாப்லயா ? என்று கார்த்திகை பார்த்து அவர் கேட்க
" உங்கள நம்பி தான்னே வந்திருக்கான் , நல்ல டைரக்டர் கிட்ட சேர்த்து விட்டுடுங்க " என்று கௌசிக் சொல்ல  " யார் நல்ல டைரக்டர் சொல்லு பார்ப்போம் " என்று கார்த்திகை பார்த்து கேட்டார் உடனடியாக .
ஏதாவது சொல்லப்போய் கருத்து வேறுபாடு வந்து விடுமோ என்று யோசித்தவன் " மணிரத்னம் " என்றான் . அவனை சட்டென்று பார்த்தவர்
" அதெல்லாம் பெரிய இடம் , இன்ஸ்டூட்ல இருந்து வந்தாலே  திரும்பி கூட பார்க்க மாட்டாங்க  " என்றார் . அவனுக்கு சப்பென்று ஆகி விட்டது .
" இல்லேண்ணே ஆழ்வார்ப்பேட்டை ல தான் அவர் வீடு நேர போகலாம்னு இருந்தேன் " .  . " தம்பி நீ போய்ட்டு அங்க இருக்குற வாட்ச்மேனுக்கு பொழுதை வேணா போக்கலாம் மத்தபடி ஒன்னும் நடக்காது " அவர் சொல்லி விட்டு சிரித்தார் ...

" வேற யாராவது சொல்லு " , அவன் உடனே ஷங்கர் என்றான் . அவர் சீரியசாக  அவனை பார்த்தார் . " தம்பி நீ சொல்ற யாரையுமே  கிட்ட கூட நெருங்க முடியாது " . சொன்னவரை ஒருமுறையும் கவுசிக்கை ஒருமுறையும் அவன் திரும்பி பார்க்க , ஏதோ யூகித்தவராய் , " அண்ணனால முடியாததுன்னு ஒன்னும் இல்ல , இருந்தாலும் கால விரயம் ன்னு ஒன்னு இருக்குல்ல " என்று சமாளித்து விட்டு மூன்றாவது சிகெரெட்டை பற்ற வைத்துக்கொண்டவர் இரண்டாவது முறையாக டீ சொன்னார் . அவர் ஆசுவாசமாக செய்வதையெல்லாம் பார்த்தால் அடுத்து அவருக்கு ஒரு வேலை வெட்டியுமில்லை என்பது தெளிவாக தெரிந்தது , அதற்கு ஏன் ஒன்  அவர் ஆக காக்க வைத்தார் என்பது மட்டும் அவனுக்கு அப்போது புரியவில்லை  . அவர் சினிமாவில் தன்  பிரதாபங்களையெல்லாம் அடுக்கிக்கொண்டு போக அவனுக்கு ஒரு கட்டத்துக்கு மேல்  இதையெல்லாம் நம்புறதா வேணாமா என்று விவேக் மாடுலேஷனில் அவனுக்கு யோசனை வந்தது . நாயகன் படத்தில் வருவது போல " நீங்க நல்லவரா கெட்டவரா " என்று கேட்க வேண்டும் போல இருந்தது ...

பேச தொடங்கியதிலிருந்து  அவனுக்கு தீர்க்கமாக அவர் நிறைய கமர்சியல் படங்களை தான் விரும்பி பார்ப்பார் என்பதும் , சினிமாவில் தான் நிறைய பணம் சம்பாதிக்க முடியுமென்கிற எண்ணத்தில் மட்டுமே அவர் அந்த துறையை தேர்ந்தெடுத்தார் என்பதும் தெரிந்தது . தரமான படங்கள் மேல் அவருக்கு பெரும்பாலும் ஈடுபாடு இல்லையென்பதும் , டெக்னிக்கல் விஷயங்களிலும் அவர்  பத்து ஆண்டுகளுக்காவது பின் தங்கியிருந்ததும்  அவனுக்கு ஆச்சர்யமாகவும் , அதிர்ச்சியாகவும் இருந்தது . உண்மையில் சாதிக்க முடியாமல் போனவர்களுக்கு தான் தங்களை யாராவது புகழ வேண்டுமென்றோ , அது கிடைக்காத பட்சத்தில் அவர்கள்  தன்னைத்தானே புகழ்ந்து கொள்வார்கள் என்றும் எங்கோ படித்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது . இப்படி பல்வேறு எண்ணங்கள் அவன் மனதுக்குள் ஓடினாலும் சினிமாவில் சேர நிச்சயம் அவர் ஒரு  துருப்புசீட்டு என்பது மட்டும்  புரிந்தது...

இந்த வாரக்கடைசியில் சென்னைக்கு போவதாக சொன்னவர் அவனிடம் எப்படி போகப்போவதாக விசாரித்தார் .  அவன் வைகையில் வருவேன் என்று சொல்ல , அது தனக்கு சரிப்படாது என்றும் கே.பி.என் பஸ்ஸில்  இந்த வாரக்கடைசிக்கு புக் செய்யுமாறு பணித்தார்  . ரயில் டிக்கெட்டை  விட அது பல மடங்கு அதிகமாச்சே  என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவர் கவுசிக்கை டீ இத்யாதிக்கு பணம் கொடுக்க சொல்ல அவன் கார்த்திக்கை பார்க்க அவன் செட்டில் செய்தான்  . பிறகு தான் கையில் வேறு பைசா இல்லையென்பது தெரிய வர அவரிடம் கேட்கலாமா என்ற யோசைனையை புறந்தள்ளிவிட்டு " அண்ணே ஒரு சிகரெட் கொடுங்க " என்று கேட்டு வாங்கிக்கொண்டான் . அதற்கு மேல் அங்கிருந்தால் மூஞ்சியிலேயே ஊதி விடுவான் என்று பட அவர் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டார் ...

" என்ன மாப்ள பெரிய அடைப்பா இருப்பாரு போல " என்று சொல்லிக்கொண்டே கௌசிக் சிகரெட்டுக்கு கை நீட்ட கார்த்திக் முறைக்கவே அவன் கடைக்காரிடம் இருந்த சில்லறைகளை பொறுக்கிக்கொடுத்து தம்  வாங்கி பற்ற வைத்துக்கொண்டான் . " ஆரம்பமே இப்படி இருக்கே அங்க எத்தனை முதலைங்க இருக்கோ " என்றான் கௌசிக் . உண்மையில் சினிமா உலகத்தை பற்றிய  உண்மை பிம்பத்தை அவர் கோடிட்டு காட்டி விட்டார் . அங்கே முதலைகள் மட்டுமல்ல  திமிங்கலம் , அனகோண்டா எல்லாமே வாயை திறந்து வைத்துக்கொண்டு அவனுக்காக காத்திருப்பது போலவே பட்டது . ஒரு சாங்கிலேயே ஹீரோவை பெரிய ஆளாக மாற்றும் விக்ரமனுக்கே  ஒரு படத்தை இயக்க பல வருடங்கள் ஆகியிருக்கும் . நடந்த உரையாடலலிருந்து சினிமாவில் முதல் அடி எடுத்து வைப்பதே எவ்வளவு கடினமென்பது அவனுக்கு புரிய வந்தது . அதே போல் எல்லா செலவுக்கும் அப்பாவை எதிர்பார்க்க முடியாதென்பதும் அவனுக்கு உரைத்தது ...

தொடரும் ...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...