22 March 2020

அவன் - அவள் - நிலா (18) ...


வள் சில நாட்களாகவே யாருடனும் அதிகம் கலந்து கொள்ளாமல் தனியாகவே இருந்தாள் . முன்பெல்லாம் என்ன தான் புத்தகங்களுக்குள் மூழ்கினாலும் ப்ரேக் எடுத்து ரூமை விட்டு வந்து பேசி விட்டு போவாள் . கூட்டுக்குடும்பம்  என்பதால் யாராவது எதையாவது பேசிக்கொண்டிருப்பார்கள் . அவர்கள் சொல்லும் கதைகளை சுந்தரி ஆர்வமுடன் கேட்பாள் . அதிலும் இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது அம்மாவும் அத்தையும் அவள் தூங்கி விட்டதாக நினைத்து ரகசியமாய் ஏதோ பேசிக்கொண்டிருக்க புகுந்து ஏதாவது டவுட் கேட்டு வாங்கிக் கட்டிக்கொள்வாள் . பாட்டியிடம் இருந்து நிறைய கதைகள் கேட்டு வளர்ந்தவளுக்கு கதை சொல்லிகளை பிடிக்கும் . கதை சொல்லிகளின் டெக்னிக்கல் வடிவம் தானே சினிமா . அதனால் தானோ என்னவோ நேரடியாக சினிமாவின் மேல் ஈடுபாடு இல்லாவிட்டாலும் அதில் கதை சொல்ல கிளம்பியிருக்கும் கார்த்திக்கின் மேல் அவ்வளவு ஈடுபாடு வந்துவிட்டது . அவன் பேரை நினைக்கும் போதே ஏதோ மனம் கட்டுக்கடங்காமல் எங்கெங்கோ செல்கிறது ...

அவனை முதன்முதல் திருமணத்தில் வைத்து பார்த்தது , பேசியது , பழகியது எல்லாமே அவள் கண்முன் வரும் . உண்மையிலேயே நிஜத்தை விட அந்த கற்பனையில் அவள் அதிக சந்தோசத்துடனே இருப்பாள் . கற்பனையில் அவளுக்கேற்றவனாக , அவள் சொல்வதை கேட்பவனாக , கோபப்படாதவனாக , அவள் கேட்காமாலேயே ஏதாவது சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து சர்ப்ரைஸ் செய்பவனாக  என அவளுக்கேற்ற டெய்லர் மேடாக கார்த்திக் இருப்பான் . அவன்  பேசாமல் அவளை அதிகம் பேச வைத்து கேட்பான் , அவள் வெட்கப்படுவது பார்த்து ரசிப்பான் , திடீரென தொட்டு வெட்பம் ஏற்றுவான் , எதிர்காலத்தில் அவளுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதற்கான ஏற்பாடுகளில் இருப்பான் , மொத்தத்தில் அவன் உலகத்தில் இல்லாமல் அவளையே உலகமாக நினைப்பான் . பெண்களுக்கு கடவுள் கொடுக்கும் ஒரு வரப்பிரசாதம் இந்த கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பது . அதில் எந்த பிக்கல் பிடுங்கலும் அவர்களுக்கு இல்லை ...

அவனை வேண்டுமென்றே கொஞ்சம் சீண்டி விட்டு கோபப்படுத்தி அழகு பார்த்திருக்கிறாள் . ஆனால் அந்த சந்தோசமெல்லாம் கொஞ்ச நேரத்துக்கு மேல் நிலைக்காது . அந்த விளையாட்டை கூட புரிந்து கொள்ளாமல் அவன் மூர்க்கமாகி விடுவான் . அதன் பிறகு அவனை சமாதானப்படுத்துவதற்குள் அவளுக்கு போதும் போதென்றாகி விடும் . எவ்வளவு கத்தினாலும் மனதளவில் அவன் குழந்தை என்பது அவளுக்கு புரியும் . ஆனாலும் அதற்காக ஒவ்வொரு முறையும் அவனை பொறுமையாக கையாள்வதென்பது அவளுக்கு இயலாத காரியம் . ஆண்கள் அம்மாவை போலவே தங்கள் மனைவியை / காதலியை எதிர்பார்க்கிறார்கள் . நிச்சயமாக ஒரு தாயை யாராலும் சமன் செய்ய முடியாது . செய்ய வேண்டுமென்கிற அவசியமும் இல்லை . இரண்டும் வெவ்வேறு உறவுகள் , வெவ்வேறு உணர்வுகள் அவையிரண்டையும் ஆண்கள் தன்னவளிடத்தில் எதிர்பார்ப்பதும் , அதை நிறைவேற்ற பெண்கள் முயற்சிப்பதும் , முடியாமல் தோற்பதும் பெரிய சிக்கல்களின் சின்ன புள்ளியாக உருவெடுக்கிறது ...

கதவை யாரோ படபடவென தட்டும் சத்தம் கேட்டு தன்னிலைக்கு வந்தாள் சுந்தரி . " வரேம்மா " என்று சொல்லிக்கொண்டே வேகமாக கதவை திறந்தாள்.
" எந்த லோகத்துலடி இருக்க " . " பூலோகத்துல தான் " என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்  சுந்தரி . " இப்படி எதையாவது சொல்லி மழுப்பிடு , எத்தனை தடவ கூப்பிட்டேன் தெரியுமா ?" , அம்மா படபடவென பேசினாள் . " ஏம்மா எந்த ஏரோப்ளேன பிடிக்க இந்த அவசரம் ?" சுந்தரி ஆர்வமுடன் கேட்டாள் . " ஆமாம் பிடிக்குறாங்க , ஜானகி மாமி வந்துருக்கா , சீக்கிரம் ரெடி ஆயிட்டு வா , ஹால்ல இருக்கா " .  அம்மா ஏன் பம்பரமாக சுற்றுகிறாள் எனபது சுந்தரிக்கு இப்போது புரிந்தது . ஜானகி மாமி ஏற்கனவே இங்கே வந்திருக்கிறாள் . அவளுக்கு ஒரு வகையில் தூரத்து சொந்தம் .  ஒரு முறை பார்த்ததிலிருந்து அவளுக்கும் அவள் மகனுக்கும் சுந்தரியை மிகவும் பிடித்துவிட்டது . ஏற்கனவே அதை ஜானகி மாமி அம்மாவிடம் சொல்லியிருக்கிறாள் . அம்மாவுக்கும் அவர்கள் குடும்பத்தை பிடித்திருக்கிறது. சுந்தரி அப்பாவிடம் சொல்லி படிப்பை காரணம் காட்டி தட்டிக் கழித்து விட்டாள் . இப்போது அவள் கல்லூரி படிப்பு முடியப்போகும் தருவாயில் மறக்காமல் வந்திருக்கிறாள் மாமி  ...

போகவில்லையென்றால் அம்மா விட மாட்டாள் என்பதற்காகவே மனமில்லாமல் முகத்தை மட்டும் அலம்பிக்கொண்டு ஹாலுக்கு போனாள் சுந்தரி . அம்மா அவளை பார்த்து பவுடர் போட சொல்லி  சைகை செய்ய அதைப் பார்த்த மாமி " நம்ம குழந்தைக்கு எதுக்கு அதெல்லாம் சும்மாவே கோவைப்பழம் மாதிரி இருக்கா " என்றாள் . அந்த புகழ்ச்சி சுந்தரிக்கு அதீதமாக பட்டது கூடவே ஏனோ ஒரு பயம் வந்தது . மாமி அவளை பக்கத்தில் அமர வைத்துக்கொண்டு தலையை தடவிக்கொண்டே பேசினாள் .
" நெறைய புக்ஸ் படிப்பியாமே , அம்மா சொன்னா " . " ம் " என்பது போல சுந்தரி தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் . " இங்கிலிஷ் நாவல் கூட நெறைய படிப்பா " . அம்மாவை ஒரு முறை முறைத்தாள் சுந்தரி . இது ஏதோ பெண் பார்ப்பதற்கு முந்தைய ஒத்திகை போல பட்டது அவளுக்கு . சும்மாவே அம்மாக்கள் " காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு போல " பீற்றிக்கொள்வார்கள் . இப்போது ஒரு பெரிய இடத்து மாமி சுந்தரியை தனது மருமகளாக்க வீடு தேடி வந்திருக்கிறாள் , அந்த சந்தர்ப்பத்தில் மகளை பாராட்டாமல் அவள் அம்மா விட்டு விடுவாளா ?!.

மாறி மாறி மாமி கேட்டுக்கொண்டிருந்த கேள்விகளுக்கு ஏனோதானோ வென்று பதில் சொல்லிவிட்டு ஒரு  வழியாக தப்பித்து மீண்டும் ரூமுக்கு வந்து சேர்ந்தாள் சுந்தரி . " மாமி நீங்க ஒன்னும்  தப்பா எடுத்துக்காதீங்கோ , அவளுக்கு செத்த தலைவலின்னு படுத்திருந்தா , அதான் " . சுந்தரிக்கு அவள் அம்மா சமாளிப்பது நன்றாகவே கேட்டது . " சே சே அதனாலென்ன மாமி குழந்தை ரெஸ்ட் எடுக்கட்டும் " . ஜானகி மாமி குழந்தை என்று கூப்பிடும் போதெல்லாம் சுந்தரிக்கு அன்னீஸியாக இருந்தது . தான்  எப்படி அழைக்கப்பட வேண்டுமென்கிற உரிமையை நாம் தான் தரவேண்டும் , ஆனால் அதை மற்றவர்கள் எடுத்துக்கொள்ளும் போது ஒரு வித எரிச்சல் வந்து விடுகிறது . அதுவும் இது திருமணம் சம்பந்தப்பட்டது என்பதால் அவளுக்கு எரிச்சலும் , பயமும் கூடுதலாகவே இருந்தது . சுந்தரிக்கு உடனடியாக கார்த்திக்கோடு பேச வேண்டும் போல இருந்தது ...

கார்த்திக் முன்பு கொடுத்திருந்த நம்பரை புக் செல்ஃபில் இருந்து சுந்தரி தேடியெடுத்தாள் . மதுரையில் இவர்கள் டாப்படிக்கும் இட்லி கடையின் நம்பர் அது . மாமி போனவுடன் அம்மா இல்லாத நேரமாக பார்த்து ஹாலில் இருந்து அந்த நம்பருக்கு ஃபோன் செய்ய வேண்டும் . முன்பு சுரேஷ் வீட்டு நம்பர் கொடுத்திருக்கிறான் , அதில் பேசியிருக்கிறாள் . அதன் பிறகு இந்த கடை நம்பர் தான் . ஒரே ஆளே எப்பொழுதும் எடுப்பதில்லை ஆனால் யார் எடுத்தாலும் கார்த்திக் என்றவுடன் சுந்தரியா என்று கேட்பார்கள் . அப்படி கேட்டவுடன் அவளுக்கு ஒரு வெக்கம் வரும் . தான் இன்னாருடைய ஆள் என்பதை வேறொருவர் சொல்லக்கேட்பதே பெண்களுக்கு அலாதிப்பிரியம் தான் . தன் தோழியை அவள் காதலன் பேரை சொல்லி கூப்பிடும் போது அவளுக்கு வெக்கம் பிடிங்கித்தின்னும் . அதை சொல்லி சொல்லியே அவளை தோழிகள் ஓட்டுவார்கள் . சுந்தரிக்கு அது போன்றதொரு கொடுப்பினை அமையவில்லை . யாரிடமும் பகிரங்கமாக சொல்ல முடியாத சூழல் . யாராவது ஒருவருடன் சொன்னாலும் எல்லோருக்கும் வைரஸ் போல பரவிவிடும் அபாயம் . கொக்கு  மீனுக்கு காத்திருப்பது போல அவள் நல்ல சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தாள்  ...

சுந்தரி கார்த்திக்கிடம் விஷயத்தை சொல்ல காத்திருந்த அதே நேரத்தில் சரக்குக்கு தண்ணீரையும் , சோடாவையையும் மிக்சிங் செய்துகொண்டே சரியா இருக்கிறதா  என்று அவன் சென்னைக்கு தன்னை கூட்டிக்கொண்டு வந்தவரிடம் கண்களாலேயே வினவிக்கொண்டிருந்தான் .
" போதும் போதும் " என்பது போல கையை ஆட்டினார் அந்த முன்னாள் உதவி இயக்குனர் . இதே மதுரையில் நண்பன் மர்ரு மிக்சிங் செய்து கொடுத்ததை  அடித்து தான் அவனுக்கு பழக்கம் . இன்று நிலைமை உல்டாவாக மாறியிருப்பதை நினைத்து நொந்து கொண்டான் . ஆனால் இதெல்லாம் பார்த்தால் சினிமாவில் காலம் தள்ள முடியாது என்பது அவனுக்கு புரிந்தது . " தம்பி என்னடா அண்ணன் சரக்கு மண்டியா இருக்கேன்னு நினைக்காதீங்க , ஊருக்கு போனா அடிக்க முடியாது " .
ஓசி யில எவனும் வாங்கித்தர மாட்டானென்பதை அவர் நாசூக்காக சொல்வது போல காரத்திக்கிற்கு பட்டது . " அதெல்லாம் ஒன்னும் இல்லென்னே " , சொல்வதற்காக சொல்லி வைத்தான் . " இன்னிக்கு பார்த்தோம்ல அவன்லாம் ரெண்டு வருஷம் முன்னால ஒண்ணுமே இல்லாம வந்தான் , இப்போ  என்னடான்னா நம்மக்கிட்டயே பகுமானம்  பண்றான் " என்று போதையில் அவர் பொரும ஆரம்பித்தார் . ஒவ்வொரு முறையும் யாரையாவது பார்த்து விட்டு வரும் போது அவருடைய பொருமலும் அவனுடைய செலவும் அதிகமாகிக்கொண்டே இருந்தன ...

தொடரும் ...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...