1 March 2020

திரௌபதி - DRAUPATHI - தைரியம் ...


மாஸ் ஹீரோ / இயக்குனர் இல்லாத படங்களுக்கு ஓப்பனிங் கிடைப்பது மிக கடினம் . படம் நன்றாக இருந்து பார்த்தே ஆக  வேண்டுமென்கிற ஆர்வம் ரசிகர்களுக்கு எழுந்தாலொழிய பணம் பார்ப்பது கஷ்டம் . ஆனால் இயக்குனர் மோகன்.ஜி எடுத்துக்கொண்டகதைக்களம் , அதை ப்ரமோட் செய்த விதம் இரண்டுமே இந்த சின்ன பட்ஜெட் படத்துக்கு பெரிய வரவேற்பையும் , எதிர்பார்ப்பையும்  கொடுத்திருக்கிறது . அதை திரௌபதி  நிறைவேற்றினாளா?
பார்க்கலாம் ...

மனைவியையும், மச்சினிச்சியையும் ஆணவக்கொலை செய்து விட்டு சிறையில் இருந்து பெயிலில் வரும் ருத்ர பிரபாகரன் ( ரிஷி ரிச்சர்ட்) தன்  நண்பனின் உதவியோடு சிலரை போட்டுத்தள்ளுகிறார் . எதற்கு அப்படி செய்கிறார் , அவர் தான் மனைவி திரௌபதி ( ஷீலா ) யை  கொலை செய்தாரா போன்ற கேள்விகளுக்கு விசுவலாக இல்லாமல் நாடகத்தனமாக விடை சொல்கிறாள் திரௌபதி ...

காதல் வைரஸ் வந்து பல வருடங்கள் கடந்தும் ரிச்சர்ட் நடிப்பில் பெரிதாக தேறவில்லை . கருணாஸ் தவிர புதுமுகங்களாக இருக்கும் படத்தில் இவருக்கு நல்ல ஸ்கோப் ஆனால் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை .
சில சீன்களை தவிர பெரும்பாலும் இவர் நடிப்பு  ஃப்ளாட்டாகவே  இருப்பது மைனஸ் . திரௌபதியாக வரும் ஷீலா உண்மையிலேயே படத்துக்கு பெரிய ப்ளஸ் . பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவனுக்கு அவர் கொடுக்கும் தண்டனை அசாத்தியம் . படத்தின் குறிப்பிடத்தக்க சீன்களில் இதுவும் ஒன்று .
கருணாஸ் போலித் திருமணங்கள் பற்றி கோர்ட்டில் பேசி கவனிக்க வைக்கிறார் . ஜாக்காக வருபவரும் , தன் மகளுக்கு நடந்ததை கோர்ட்டில் விவரிப்பவரும் நல்ல தேர்வு ...


அந்தஸ்து , பணம் உள்ளவர்களின் வீட்டு பெண்களை நாடக காதல் மூலம் வசப்படுத்தி பணம் பறிக்கும் கும்பலை பற்றிய கதைக்கருவில் எல்லோரையும் அட போட வைத்திருக்கிறார் இயக்குனர் . ஆனால் அதை விட  பத்திர அலுவலகத்தில் நடக்கும் போலித் திருமணங்களிலேயே அதிக கவனம் செலுத்தியது சறுக்கல் . படம் லோ பட்ஜெட் தான் அதுக்காக நடிப்பதற்கு ஆட்களே கிடைக்கவில்லையா ? எல்லோரும் சொல்லித்தந்தது போலவே பேசி போரடிக்கிறார்கள் ...

ஆரம்ப கட்ட சீன்கள் படத்தின் மேல் ஆர்வத்தை கொடுப்பதென்னமோ உண்மை . அப்படியிப்படி இடைவேளை வரை தொய்வில்லாமல் போகும் படம் அதன் பின் தடுமாறுகிறது . திரௌபதி உயிரோடிருக்கும் போது அவரை கொலை செய்த குற்றத்திற்கு ரிச்சர்ட் கைதாவது , இரண்டு கொலை செய்தவருக்கு ஆறே மாதத்தில் பெயில்  கொடுப்பது , என்னதான்  காசு வாங்கிக்கொண்டு போலி பத்திரம் தயார் செய்தாலும் விழுப்புரத்தில் இருக்கும் பெண்ணிற்கு சென்னையில் இருந்து திருமண சான்றிதழ் இரண்டே மணி நேரத்தில் தயாரிப்பது , எம்ஜிஆர் கால பாணியில் ஹீரோ தொப்பியை போட்டதும் வில்லன் அடையாளம் தெரியாமல் முழிப்பது இவையெல்லாம் லாஜிக்கை சமாதிக்குள் தள்ளுகின்றன ...

நாடக காதலை பற்றி எடுப்பதாக  சொல்லிக்கொண்டு படத்தையே நாடகத்தனமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் . பொதுவாக படத்தின் ஹைலைட் சீன்களை ட்ரைலராக வைத்திருப்பார்கள் ஆனால் இதில் படம் மொத்தத்துக்கும் நல்ல சீன்கள் அது மட்டும் தானென்பது துரதிருஷ்டம் .
இப்படி மேக்கிங்கில் நிறைய குறைகள் இருந்தாலும் நாணயத்துக்கு இரு பக்கம் இருப்பது போல பெண்ணை பெற்றவர்களை  வில்லன்களாக காட்டும் சினிமாவில்  காதலை வைத்து பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் கும்பலின் மறுபக்கத்தை துகிலுரித்த திரௌபதியின் தையிரியத்தை நிச்சயம் பாராட்டலாம் ...

ரேட்டிங்க்     : 2.25 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 39





2 comments:

Rathinam said...

இரண்டு கொலை செய்தவருக்கு ஆறே மாதத்தில் பெயில் கொடுப்பது...
.......
ஆறு மாதமே அதிகம் bro..
மதுரைக்காரனுக்கு வந்த சோதனை...

ananthu said...

பிணத்த போஸ்ட்மார்ட்டமே பண்ணாம கொலைக்கு தண்டனை கொடுக்கும் போது ஆறே நாள்ல கூட வாஙகலாம் போல ப்ரோ😀

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...