14 December 2019

அவன் - அவள் - நிலா (13) ...


மாட்டுத்தாவணிக்கு இரவு ஏழரை மணி போல வந்து சேர்ந்தான் கார்த்திக். சுரேஷ் தங்கைக்காக செய்த அடிதடிக்கு பிறகு அவன் வேறெந்த வம்பு தும்புக்கும் போகவில்லை . அதன் பிறகு சுந்தரியின் அண்ணனோடு திருச்சியில் நடந்த சண்டை  தான் . எல்லாமே எதிர்பாராத நேரத்தில் நடந்து முடிந்து விட்டது . கோபம் தலைக்கேறினால் அவனால் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை . பள்ளிக்காலத்திலேயே அவனை ஏற்றி விட்டு தங்களின் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்பவர்கள் உண்டு . அதெல்லாம் அவனுக்கு போகப்போக தான்  புரிய ஆரம்பித்தது . யார் யாருக்காகவோ சண்டை போட்டவன் தனக்கென்று வரும் போது சும்மா இருக்க முடியவில்லை . சுந்தரியின் முகத்துக்காகவாவது  பொறுத்திருக்கலாம் . அது கூட முடியாமல் போனது அவனுக்கு வருத்தம் தான் . அவனுடைய ஆக்சன் பிரதாபங்களை சுந்தரியிடம் சொல்லும் போது அவள் மர்ரு தங்கை போல ஆவலோடு வாய் பிளந்து கொண்டு  கேட்பதில்லை . தங்கை  கேட்கிறாள் என்பதற்காகவே மர்ரு ரெண்டு மூணு பிட்டை  எக்ஸ்டராவாக எடுத்து விடுவான் . உடனே அவள் " அப்படியான்னா அவன் பாஞ்சு பாஞ்சா அடிச்சானா  ?" என்று கார்த்திக்கிடம் அப்பாவியாக கேட்பாள் . அவனுக்காக கார்த்திக்கும் ஆமாம் போட்டு வைப்பான் ...

அதே சண்டையை சுந்தரியிடம் சொன்ன போது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்து  விட்டு " என்ன உனக்கு பெரிய ஹீரோன்னு நினைப்பா?" என்று சர்வ சாதாரணமாக கேட்டு அந்த பிம்பத்தை உடைத்தெறிவாள்.  " நம்ம வாழ்க்கை என்ன ரெண்டரை மணி நேர சினிமான்னு நினைச்சியா ?அதுல போலீஸ் கடைசியில தான் வருவாங்க , ஆனா நிஜத்துல முதல்லயே வந்து தூக்கிட்டு போய்டுவாங்க ! . அவனுக்கு புரியும் பாஷையில் பேசினாள். அவனுக்கு முதலில் கோபம் தான் வந்தது .
" அதுக்காக என்ன பயந்து பயந்து பொட்டை மாதிரி வாழ சொல்றியா ? " .  
" ஓ அப்போ நீ வாழற வாழ்க்கைக்கு பெரியார் பஸ் ஸ்டாண்ட்ல சிலை வப்பாங்களா ? ".  " உன்ன உங்கப்பன் ஆடிட்டராக்குறதுக்கு பதிலா வக்கீலாக்கலாம் , வாய் வத்தலகுண்டு வரைக்கும் நீளுது ! " .  அவனிடம் உள்ள பிரச்சனை அது தான் . அவள் தன்னுடைய நல்லதுக்காக தான்  சொல்கிறாள் என்பதை முழுதாக புரிந்து கொள்ளாமல் அவள் பதிலுக்கு பதில் பேசுகிற விதத்தில் கடுப்பாகி அந்த ஆர்க்யூமென்ட்டில் வின் பண்ண வேண்டுமென்கிற வெறியில் கத்துவான் ...

ஒரு கட்டத்துக்கு மேல் அவனோடு போராட முடியாமல் அவளுக்கு அழுகை வந்து விடும் . இவன் ஏன் இப்படியிருக்கிறான் என்று ஆத்திரம் வரும் . எக்கேடு கெட்டோ போகிறான் நாம் ஏன் நம் தரத்தை இறக்கிக்கொள்ள வேண்டும் என்கிற நினைப்பு வரும் . சத்தியமாக இரண்டு பேர் எண்ணங்களுக்கும்  செட்டே ஆகாது என்றே தோன்றும் . அந்த நிமிடம் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு விட்டு " சரிதான் போடா " என்று கத்தி விட்டு போய்விடலாம் போல இருக்கும். ஆனால் அவை எதையும் செய்ய விடாமல் ஏதோ ஒன்று தடுக்கும் . அதற்கு பெயர் தான் காதலா ?!.  " ஓகே உன் இஷ்டத்துக்கு நீ இரு , என்ன வேணா பண்ணு , நான் யாரு இதெல்லாம் கேக்க ? ஆஃப்டர்ஆல் பொண்ணு தானே? 
நான் சொல்லி கேட்டுட்டா உங்க கீரிடம் இறங்கிடுமே ! " . அவள் அழுகையோடு பேசி விட்டு அங்கிருந்து கிளம்புவாள் . அவனுக்கு அவள் போகிறாள் என்றவுடனே தான் புத்தி வரும் . " இல்லடி சாரி , ஏதோ ஒரு இதுல பேசிட்டேன் , நீ பதிலுக்கு பதில் பேசினியா அதான் டென்சன் ஆயிட்டேன்". 
" அப்போ நான் எதுவுமே பேசக்கூடாது , நீ சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டனும் " ...

அவன் அப்படியெல்லாம் நினைக்கிற ஆள் இல்லை ஆனாலும் அவன் ஆழ் மனதுக்குள் ஆணை விட பெண் மட்டம் அல்லது ஆணுக்கு பெண் அடங்கி தானிருக்க வேண்டும் என்கிற எண்ணம் படிந்திருக்கிறது . அது அவன் அப்பாவை பார்த்தோ அல்லது மற்ற ஆண்களின் அடக்கு முறையை பார்த்தோ அவனுக்குள் வேரூன்றியிருக்கலாம் . எதிரில் இருக்கும் பெண்ணிற்கு இதையெல்லாம் உற்று நோக்க முடியாது . அவள் யார் தனக்கு நெருக்கம் என்று நினைக்கிறாளோ அவனே அப்படி பேசுவது இதயத்தை நொறுக்குகிறது . ஆனால் அது தான் நிதர்சனம் . யாரை நாம் அதிகம் நேசிக்கிறோமோ அவர்களால் மட்டுமே நம்மை அதிகமாக காயப்படுத்த முடியும் . அவன் கைகளை பிடித்துக்கொண்டு " ப்ளீஸ் மன்னிச்சுடு " என்று . கெஞ்சலானான் . அது தான் அவனின் வினோத குணம் . என்ன தான் கோபம் இருந்தாலும் அவள் அழ ஆரம்பித்தால்  அவனால் தாங்க முடியாது . பெண் அழுதால் பேயும் இறங்கும் என்பார்கள் அவன் மனிதன் தானே ! ...

" இந்தோ  பாரு நான் சும்மா ஜாலியா சுத்திட்டு போக உன்ன லவ் பண்ணல , 
நாம நல்லா இருக்கணும்னா கண்டிப்பா கேள்வி கேப்பேன் " .
அவன் " ம் " என்றான் . " ஏற்கனவே உன் சினிமா ஆசைய வீட்ல ஏத்துப்பாங்களான்னு தெரியல  , இதுல இந்த அடிதடி வேறென்னா எந்த வீட்ல ஒத்துப்பாங்க ? " . அவன் அமைதியானவுடன் அவள் சொல்வது புரிய  ஆரம்பிக்கும் . அவன் முடியை கோதிக்கொண்டே அவள் சொல்லும் போது தாய் மடிக்கு ஏங்கும் குழந்தை போலானான் . எப்பொழுதுமே இதே போல அவன் தான்  சொல்வதைக் கேட்டால் என்ன என்று அவளுக்கு தோன்றும் . 
பதிலுக்கு பதில் சண்டை போடாமல் பொறுமையாக அவனுக்கு இப்படி எடுத்து சொன்னால் என்ன என்று அவனுக்கு தோன்றும் . நாம் மற்றவர்களின் 
செய்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதை விட நாம் விரும்பும்படி அவர்கள் நடக்க வேண்டுமென்றே விரும்புகிறோம் .  எல்லாம் நாம் நினைத்தபடியே நடந்து விட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் ஏது ? இரண்டரை மணி நேர படத்திலேயே காதல் , செண்டிமெண்ட்,  ஆக்சன் , ட்விஸ்ட் என பலவற்றை எதிர்பார்க்கும் போது குறைந்தபட்சம் 60 வருட வாழ்க்கை அது அப்படியே ஒரே நேர்கோட்டில் போகுமா என்ன ?!.

மனிதனின் வினோத உணர்வுகளில் முக்கியமானது காதல் . சுஜாதா சொன்னது போல எல்லாமே இருபாலரின் உடல்நிலையில் ஏற்படும் வேதியல் கோளாறுகள் மட்டும் தான் என்று அதை ஒதுக்கி விட முடியுமா ? நிச்சயம் முடியாது . காதலில் நிச்சயம் காமம் இருக்கும் ஆனால் காமத்துக்குள் காதல் இருக்காது . அவனுக்கு தெரிந்த ஒரு பிடிசி டிரைவர் அண்ணன் ஊர் ஊராக சுற்றுவார் . அவனுடைய டீன் ஏஜ் வயதில் அவரின் ஜகதலப்பிரதாபங்களை நிறைய கேட்டிருக்கிறான் . அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை . ஏன் என்று கேட்டால் " காஃபி குடிக்க ஏண்டா வீட்லயே மாட்ட வாங்கி கட்டணும் ? 
தேவைப்படும் போது  வாங்கி குடிக்க  வேண்டியது தான " என்று சூசகமாக சொல்லி விட்டு சிரிப்பார் . தனிக்கட்டையாக இருப்பதாரீலும் , சொத்து இருப்பதாலும் அவரிடம் காசுக்கு பஞ்சமில்லை . ஃபாரீன் சரக்கு ஒரு பாட்டில் எப்பொழுதுமே அவர் வீட்டில் இருக்கும் . பணத்தில் மட்டுமல்ல  ஆள் பார்க்கவும் எம்ஜிஆர் போன்ற சிகப்பு உடல்வாகுடன் இருப்பார் . எப்பொழுதுமே அவர் மேல் ஒரு வித சென்ட் வாசனை இருந்து கொண்டே இருக்கும் ...

" ஏண்ணே  அதுக்கு காசு கொடுத்து போறீங்களே ,போரடிக்காதா ? இல்ல ஒரு  மாதிரி இருக்காதா ? . அவனிடம் எப்பொழுதமே அவர் வயது வித்தியாசம் பார்க்காமல் பழகுவதால் நேரடியாகவே கேட்டு விடுவான் . 
" நீ காலையில டிஃபன் சாப்ட்டியா ? " . " சாப்ட்டேனே பொங்கல் கொஸ்து".
" அது ஹெவியா இருக்குமே அப்போ மத்தியானம் சாப்பிட மாட்டியா ?" .
" போங்கண்ணே இப்போ போய் ரெண்டு மேட்ச் ஆடி முடிச்சாலே பசி ஆரம்பிச்சுடும் " . அவர் பிளாக் சிகரட்டை எடுத்து பற்ற வைத்துக்கொண்டே பேச ஆரம்பித்தார் . " அதே மாதிரி தான் தம்பி இந்த உடம்புக்கும்  அடிக்கடி பசிக்கும் . பொங்கல் , இட்லி , தோசை , சோறுன்னு மாறி  மாறி  சாப்பிடுற மாதிரி உடம்புக்கும் அத்தினி ,  சித்தினின்னு எல்லாமே  விதவிதமா தேவை ".
அவர் சொல்லும்போதே அவனுக்கு போதையாக இருந்தது . ஆனால் என்ன தான் இருந்தாலும்  அதுக்கு காசு கொடுப்பதில் அவனுக்கு உடன்பாடே இல்லை . அது ஏதோ கடமைக்கு செயற்கையாக நடப்பது போலவே அவனுக்கு பட்டது . அவன் அதையும் கேட்டவுடன் அவர் சிரித்தார் .
" பரவாயில்லையே யார்ட்டயும் போலேன்னாலும் அனுபவஸ்தன் மாதிரியே பேசுற , ஒரு வேளை அண்ணனுக்கு தெரியாம ஏதாவது தப்பு தாண்டா பண்ணிட்டியா ?! : . "என்னன்னே அதெல்லாம் ஒன்னும் இல்ல , என் மனசுக்கு பட்டுச்சு " . " நீ சொல்றது உண்மை தான் , எனக்கும் அந்த மாத்ரி எனக்கே எனக்குன்னு பிரத்தேயகமா ஒருத்தி இருந்தா " . சொல்லும் போதே அவர் கண்கள் லேசாக கலங்கின ...

அவர் எத்தனையோ பெண்களுடன் உல்லாசமாக இருந்திருந்தாலும் அவருக்கென வாழ்ந்த ஒரு பெண்ணை பற்றி பேசும் பொழுது மட்டும் ஒரு வித்தியாசம் தெரிகிறது . அதற்கு பெயர் தான் காதலா ? இது இது தான்  காதல் என்று யாராலும் ஒரு கூண்டுக்குள் அடைக்க முடியாததன் பெயர் தான் காதலா ?!.சுந்தரியுடன் எவ்வளவோ முறை சண்டை போட்டிருக்கிறான்  அந்த கருமம்  பிடித்த காதலே  வேண்டாமென்று நினைத்திருக்கிறான்.
அவளை மறந்து விட  வேண்டுமென்று நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பான் ஆனால் போதையேறியதும் நேராக திருச்சிக்கே போய்  அவளை பார்க்க வேண்டும் போல இருக்கும் . அவளிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தோன்றும் .  நண்பர்கள் அவனை டைவர்ட்  செய்ய எவ்வளவோ முயற்சி செய்து தோற்றுப்போவார்கள் . சாதாரணமாக இருக்கும் நேரத்தை  விட அதை விட்டு விலக வேண்டுமென்று நினைக்கும் போது  தான் காதல் உக்கிரமடைகிறது . என்ன எழவுடா இது ? என அவன் பலமுறை யோசித்ததுண்டு ...

சுரேஷ் மாதிரி , பாபு அண்ணன் மாதிரி பெண்களை வெறும் உடல்களாக மட்டும் நினைக்கும் போது சண்டை சச்சரவுகள் வருவதில்லை . அது முடிந்தவுடன் அவளை பற்றிய நினைப்பு இருப்பதில்லை . அவள் பேசுவதெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொண்டு குழம்ப தேவையில்லை . அவளோடு சண்டை போட்டுக்கொண்டு  பேசாத தருணங்களிலெல்லாம் ஏதோ இதய நோயாளி மாதிரி துடிக்க தேவையில்லை . பாக்காத நேரங்களிலெல்லாம் ஏதோ திருவிழாவில் காணாமல் போன சிறுவன் போல கதறிக்கொண்டிருக்க வேண்டியதில்லை . ஆனால் இத்தனை  இல்லைகளிலும் சுந்தரியை விட்டு பிரிய வேண்டுமென்கிற எண்ணம் மட்டும் அவனுக்கு இல்லவேயில்லை ...

மினி பஸ்சுக்காக சிறிது நேரம் காத்திருந்தவன் பிறகு ஒரு  சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு நடக்கலானான் . இந்த சிகெரட் , அப்புறம் சுந்தரி இரண்டையுமே மட்டும் அவனால் விடவே முடியாது என்று நினைத்துக்கொண்டான் . தன் காதலியை உடலுக்கு தீங்கு தரும் சிகரெட்டோடு ஒப்பிடுகிறோமே என அவனுக்கு யோசனை வந்தது. நல்லதோ தீங்கோ இரண்டையும் விட்டு அவனால் இருக்க முடியாது என்பதே நிதர்சனம். சிகரெட்டை  விட சொல்லி சுந்தரியே கேட்டிருக்கிறாள் . ஆனால் நல்ல வேளை நானா ? சிகரெட்டா என்று அவள் முரண்டு பிடிக்கவில்லை . அப்படி கேட்டிருந்தால் என்ன செய்திருப்பான் என்று அவனுக்கு நினைத்துப் பார்க்கவே முடியவில்லை . அவள் அப்படித்தான் நிறைய விஷயங்களில் நாசூக்காக நடந்து கொள்வாள் . அவனே முடிவெடுக்கும்படியாக ஒரு ஸ்பேஷ் கொடுப்பாள் . அதனால் அவள் குறைத்துக்கொள்ளும் படி சொன்ன பிறகு அதை கடமையாக செய்ய ஆரம்பித்தான் . ஆனால் இவையிரண்டையும்  விடவே முடியாது என்று நினைத்தானோ அதை விட்டு விட்டு ஒரு நாள் தனிமையில் நிற்கப்போகிறான் என்பது அப்போதைக்கு அவனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை ...

தொடரும் ...




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...