"அமராவதி"யில் அறிமுகம் ஆகி "ஆசை"க்கு பிறகு இளம் பெண்கள் மனதில் ஆசை நாயகனாக உருமாறி "காதல் கோட்டை"யில் தன்
வெற்றிக் கொடியை நட்டு ,"வாலி"க்கு பிறகு தனக்கென தனி வழியை ஏற்படுத்திக் கொண்டு தமிழ் திரையுலகை அமர்களப்படுதியவர் அஜித்...
இவரின் "மங்காத்தா" ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலாய்
காத்துக் கொண்டிருக்கிறார்கள்... ....
" உழைப்பாளர் தின" மன்று தன் பிறந்த நாள் காணும் அஜித் சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் தன் சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர் ..அஜித் திரை உலகிற்கு வந்து 20 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் அவரின் 50 வது படமான "மங்காத்தா" இந்த வருடம் வெளிவருவது மற்றொரு சிறப்பம்சம்....
சிவாஜி,கமல்,விக்ரம் என மிக சிறந்த நடிகர்கள் வரிசையில் அஜித்
இல்லையென்றாலும் எல்லா தரப்பிலும் இவருக்குள்ள ரசிகர்களால் இவர்
படங்களுக்கு கிடைக்கும் முதல் வாரத்திற்கான வசூலையும்,வரவேற்பையும் யாரும் மறுக்க முடியாது .....அதனால் தான்
தோல்வி படங்கள் அதிகம் கொடுத்திருந்தும் வர்த்தக ரீதியாக இவர்
படங்களை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் விரும்புகிறார்கள் ....
அஜித்தின் கடந்த பதினெட்டு வருட கால வளர்ச்சியை உற்று நோக்கினால் அதில் நிறைய ஏற்ற தாழ்வுகள் இருப்பதை காணலாம்...
முதல் படமே தோல்விப் படம்...மூன்றாவது படமான "ஆசை" பெரிய வெற்றியை பெற்ற போதும் அதை தொடர்ந்து ஒரே வருடத்தில் "உல்லாசம் ","ராசி" உட்பட ஐந்து தோல்வி படங்கள் ...வேறு யாராவதாக
இருந்திருந்தால் தொடர்ந்து இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்திருப்பார்களா என்பது சந்தேகமே.....
ஆரம்ப காலங்களில் அஜித் பத்திரிக்கையாளர்களிடம் அதிகமாக கோபப்படுகிறார் என்ற சர்ச்சையும் இருந்தது...இவர் எடுத்த சில முடிவுகளும் தவறாகவே இருந்தன..திரை உலகில் இவரை வழி நடத்த "காட் பாதர் " யாரும் இல்லாததும் காரணமாக இருக்கலாம்...
ஆனால் இன்றைய கால கட்டத்தில் சிம்பு,ஜெய் போன்ற சம கால
நடிகர்களே இவரை "காட் பாதர் " என்று சொல்வது தமிழ் சினிமா வரலாற்றில் அஜித்தின் வெற்றியை குறிக்கும் வார்த்தைகள்...
சிவாஜி, ரஜினி,கமல் வரிசையில் அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட வேடங்களில் நடித்த பெருமையும் அஜித்திற்கு உண்டு...அதில் "வாலி","வரலாறு","வில்லன்" ,"பில்லா" உட்பட பெரும்பாலான படங்கள் வெற்றிபடங்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.....
விஜயகாந்தை போல இவரும் நிறைய புது முக இயக்குனர்கள் படங்களில் நடித்திருக்கிறார் .... அதில் சரண்,எஸ்.ஜே.சூர்யா,துரை போன்றவர்கள்
குறிப்பிடத்தக்கவர்கள் ..ஆனால் அஜித் கே.எஸ். ரவிக்குமார்,லிங்கு சாமி தவிர பெரிய
இயக்குனர்கள் யார் படத்திலும் நடிக்காதது ஒரு குறை ...
ஏனெனில் பாலா,அமீர்,கெளதம் மேனன் போன்ற நல்ல இயக்குனர்கள் படங்களில் நடித்திருந்தால் தன் நடிப்பு திறமையை மேலும் வளர்த்து கொள்வதற்கு
பெரிய வாய்ப்பாக இருந்திருக்கும் ..மேலும் புது இயக்குனர்கள் பெரும்பாலும்
"இமேஜ்" வட்டத்தை தாண்டி யோசிக்காததாலும் , அஜித்தும் வட்டத்தை தாண்டி வெளியே வராததாலும் நிறைய தோல்வி படங்களே மிஞ்சின ...
"ரெட்","ஜனா" போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்...
தோல்விகளுக்கு பிறகு அஜித் "முகவரி","ஜி","கிரீடம்" போன்ற படங்களில் "இமேஜ்' வட்டத்தை தாண்டி நடித்திருந்தது வரவேற்ப்பை பெற்றது....
விஜய் ,சூர்யா போன்ற நடிகர்களை போல அஜித்தால் நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் பிரகாசிக்க முடிவதில்லை..அவர் உடல் எடையை கவனிக்காததும் காரணமாக இருக்கலாம்...எது எப்படியோ
அவர் தான் எங்க "தல" என்கிறார்கள் ரசிகர்கள்...
தனக்கு சரியென பட்டதை சொல்லும்,செய்யும் தைரியம் அஜித்திற்கு உண்டு...விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் ,எந்த ஒரு சினிமா சம்பத்தப்பட்ட விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டேன், பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன்
(பிற்காலத்தில் இதை தளர்த்தி கொண்டார் ) என்று அவர் சொன்ன
வார்த்தைகளில் முடிந்த அளவு எந்த ஒரு சமாதானமும் செய்து கொள்ளாதது அவர் தனித்துவம் ...
முதல்வர் உட்பட அனைவரும் அமர்ந்திருந்த மேடையில் தன்னை
வலுக்கட்டாயமாக வர சொன்னார்கள் என்று அஜித் தைரியமாக சொன்னதும்,
அதற்கு ரஜினி எழுந்து நின்று கை தட்டியதும் யாவரும் அறிந்த உண்மை...
அரசியல் லாபங்களுக்காக தன் ரசிகர் மன்றங்கள் உபயோகப்படுத்தப்படுவதை
உணர்ந்த அஜித் ரசிகர் மன்றங்களையே கலைக்க சொன்னதும் அவரின்
தைரியத்திற்கு மற்றுமொரு சான்று...
புகழின் உச்சியில் இருந்த போதே சினிமா தவிர ரேசிங் போன்ற தனக்கு
பிடித்த விசயங்களில் கலந்து கொள்ளும் துணிவும் இவருக்கு இருந்தது....
நடிப்பு திறமையால் பெரிதாக ஈர்க்காவிட்டாலும்
தன் முயற்சி,உழைப்பு,துணிவு மற்றும் போலித்தனமில்லாத இயல்பு இவற்றின் மூலம் "அசல்" நாயகனாகவே
நம் கண் முன் தெரிகிறார் அஜித் ....

























