4 July 2015

பாபநாசம் - PAPANASAM - ஆஸம் - AWESOME ...


நான் பார்த்து வியந்த மலையாள படங்களுள் முக்கியமானது த்ரிஷ்யம் . எந்த மொழிக்கும் பொருந்தக்கூடிய அந்த கதை ரீ மேக்கில் தெலுகு , கன்னட வெற்றியை தொடர்ந்து தமிழில் அதே  இயக்குனர் ஜீது ஜோசப்பின் கைவண்ணத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசமாக வந்திருக்கிறது . என்ன தான் ஒரிஜினல் இயக்குனர் எடுத்தாலும் கமல் எதையாவது புகுந்து கெடுத்து விடுவாரோ என்கிற பயம் இருந்தது . ட்ரைலரில் மீனா ரோலில் கவுதமியை க்ளோஸ் அப்பில் பார்த்த போது அந்த பயம் இன்னும் அதிகமானது . ஆனால் அதையெல்லாம் மறக்கடிக்க செய்யும் வகையில் சுயம்புலிங்கம் & ராணி யாகவே கமலும் கவுதமியும் வாழ்ந்து காட்டியிருக்கிரார்கள் ...

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து தன் உழைப்பிலேயே சுயம்பாக வளர்ந்து சொந்தமாக கேபிள் டிவி வைத்து நடத்தி வரும் சுயம்பு லிங்கம்  ( கமல்ஹாசன் ) தானுண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்ந்து வருகிறார் . நாலாம் க்ளாசை கூட தாண்டிறாத சினிமா பைத்தியம் சுயம்பு ஒரு அழையா விருந்தாளியால் ஏற்படும் பெரிய பிரச்சனையிலிருந்து த்ன்து குடும்பத்தை சினிமா தந்த அறிவிலிருந்து எப்படி புத்திசாலித்தனமாக காப்பாற்றுகிறார் என்பதே இந்த மூன்று மணிநேர பாபநாச பயணம் ...


கமல்ஹாசன் மிகச்சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமேயில்லை . ஆனால் நடிப்பதே தெரியாமல் அண்டர்ப்ளே செய்யும் மோகன்லால் கேரக்டரில் கமல் எப்படி சூட்டாவார் என்கிற தயக்கம் இருந்தது . கேசுவலாக நம்மை ஆளுமை செய்த ஜார்ஜகுட்டியை போலவே எமோஷனலாக சுயம்புவும் நம் நெஞ்சை தொடுகிறார் . என்னதான் கேசுவலாக இருந்தாலும் பெத்த பொண்ணுக்கு இவ்வளவு பெரிய பிரச்சனை வரும்போதும் மனுஷன் கல்லு மாதிரி நிக்கிறாரே என்று மோகன்லாலை பார்த்து நான் நினைத்ததுண்டு . அந்த குறையை கமல் நிவர்த்தி செய்கிறார் . அதே சமயம் க்ளைமேக்ஸ் நடிப்பில் கமல் நம்மை நெகிழ வைத்தாலும் ஐ.ஜி. கணவரிடம் உண்மையை கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டு ஒரு பாவ மன்னிப்பு போல பேசியது கொஞ்சம் நெருடுகிறது . த்ரிஷ்யத்தில் மோகன்லால் பேசும்போது இருந்த ஹீரோயிஸம் இதில் மிஸ்ஸிங் . ஒரு வேளை இயக்குனர் தெரிந்தே தமிழுக்காகவோ இல்லை கமலுக்காகவோ செண்டிமெண்டை சேர்த்திருக்கலாம் ...

கமல் - கவுதமி ஜோடி எப்பவுமே நல்ல பொருத்தம் . இப்பொழுது நிஜ வாழ்க்கையிலும் அவர்களுக்குள்ள நெருக்கம் படத்தின் கெமிஸ்ட்ரிக்கு நன்றாகவே வொர்கவுட் ஆகியிருக்கிறது . சொந்த குரல் என நினைக்கிறேன் கமலுக்கு ஈடாக கவுதமியும் நெல்லை தமிழில் நன்றாகவே பேசி நடித்திருக்கிறார் . குட் கம் பேக் . கமலின் மகள்களாக நிவேதா மற்றும் ஈஸ்தர் நல்ல தேர்வு . எம்.எஸ்,பாஸ்கர் , இளவரசு , சுயம்புலிங்கத்தை காவு வாங்கத்துடிக்கும் பெருமாள் ( கமல் குசும்பு ?! ) வேடத்தில் கலாபாவன் மணி என்று எல்லோருமே இயல்பான நடிப்பால் நம்மை கவர்கிறார்கள் . குறிப்பாக கடுமையான ஐ.ஜி யாகவும் , அதே சமயம் மகனை பறிகொடுத்த தாயாகவும் நடிப்பில் நம்மை மிரள வைக்கிறார் ஆஷா சரத் . அவருக்கு உறுதுணையாக அடக்கி வாசிக்கும் கணவர் ஆனந்த் மகாதேவன் க்ளைமேக்ஸ் காட்சியில் ஒரே டேக்கில் பேசி உருக வைக்கிறார் . கமல் & கவுதமி யை போலவே இந்த ஜோடியையும் நம் மனதில் அழுத்தமாக பதிய வைக்கிறார் இயக்குனர் . ஜிப்ரான் இசையில் இரண்டு பாடல்களுள் பின்னணி இசையும் இமயம் ...

ஜெயமோகன் - சுகா வசனங்களில் உள்ள சிலேடை ரசிக்க வைக்கின்றன. இடைவேளை வரை கொஞ்சம் நீளமாக இருந்தாலும் சுயம்பு லிங்கம் குடும்பத்தில் நடக்கும் காட்சிகள் அவர்களோடு சேர்த்து நம்மையும் ஒன்ற செய்வதால் போரடிக்கவில்லை  . குறிப்பாக குட்டிகோரா பவுடர் போடும் கமலை வாரும் மகள் , கார் வாங்கும் விஷயத்தில் கமல் - கவுதமி இடையே நடக்கும் ஊடல் - கூடல் எல்லாமே எல்லை மீறாமல் இயல்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன . இடைவேளைக்குப் பின் அங்கே இங்கே நகர விடாமல் திரைக்கதை  நம்மை கட்டிப்போடுகிறது . ஆடியன்ஸ் இப்படி கேட்பார்கள் என்பதை யோசித்து லாஜிக்கலாக சில பதில்களை சொல்லியிருப்பது புத்திசாலித்தனம். சில இடங்களில் உறுத்துகிற கமலின் ஒட்டு மீசை , நெல்லை பேச்சு போன்ற  குறையை  தவிர்த்து எளிமையான குடும்பத்தில் நடக்கும் அப்நார்மலான விஷயங்களை சினிமாத்தனமாக இல்லாமல் இயல்பான காட்சிகளால் நம்மை ஒன்ற செய்த விதத்தில் பாபநாசம் - ஆஸம் ...

ஸ்கோர் கார்ட் : 48 

பின்குறிப்பு : ( பல வருடங்கள் கழித்து குடும்பத்தோடு பார்க்க வேண்டிய கமல் படம் )




2 comments:

Jayadev Das said...

tHANKS

Anonymous said...

I just saw this movie at ganapathyram theatre adyar. 6.30 show; 90% of the theatre is empty. this is just an ordinary another stupid movie with no logical backing. stupid movie

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...