29 September 2019

அவன் - அவள் - நிலா (6) ...


லகின் எல்லா ஜீவராசிகளும் ஒரு செல் அமீபாவிலிருந்து தோன்றியவை தான் . வெவ்வேறு வடிவங்களில் , பரிமாணங்களில் எல்லாவுமாக அவை வியாபித்திருக்கின்றன . ஆனால் ஒவ்வொரு உயிர்க்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்து கொண்டு தானிருக்கிறது . தனக்கான சரியான துணையை ஓர் உயிர் அடையுமேயானால் அது பாக்கியம் . காதலித்தவர்கள் , கல்யாணம் செய்து கொண்டவர்கள் ஏன் கூடவே சாகும் வரை இருப்பவர்கள் கூட அந்த உயிர்த்துணையாக இல்லாமலேயே இருக்கலாம் . ஏதோ ஒரு சவுகரியத்துக்காக அல்லது விதியின் வழியில் ஒரு பயணம் தொடர்கிறது . சுஜாதா சொன்னது போல வாழ்க்கையே ஒரு " PROGRESSIVE COMPROMISE "
தான் போல . கார்த்திக்கிற்கு சுந்தரி அது போல ஒரு சோல் மேட்டா என தெரியவில்லை . ஆனால் எவ்வளவோ சண்டைகளுக்கு பிறகும் இருவரும் சேர்ந்திருக்கிறார்கள் . அவளை பிரிந்து நடைப்பிணமாக அவன் அலைந்திருக்கிறான் . பகலிலேயே மதுக்கடைகளில் மல்லாந்து படுத்திருந்திருக்கிறான் . வாந்தியெடுத்து அது  மேலேயே படுத்திருந்தவனை அவன் அப்பா நள்ளிரவில் தூக்கிக் கொண்டு போய் குளிப்பாட்டிய நாட்களும் உண்டு ...

இளமைக் காலத்திலிருந்த அதே  பரவசம் இன்றும் அவள் மேல் அவனுக்கு குறையவில்லை ஆனால் காலம் கற்றுக்கொடுத்த பாடத்தால் மெச்சூரிட்டி கூடியிருக்கிறது . குறிப்பாக பெண்களின் உடல் கொடுத்திருக்கும் அனுபவமும்  காதல் போலவே மகத்தானது . கைகளை மூடிக்கொண்டிருப்பவன் உள்ளே என்ன என்று தேடும் ஆர்வத்தை வயது கொடுக்கிறது . ஒரு முறை திறந்து பார்த்து என்ன என்று தெரிந்தவுடன் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது போல மனதுக்கு ஒரு அமைதி கிடைக்கிறது . ஆனால் அதுவும் வயிற்றுக்கு உணவிடுவதை போல தான்.
மனதை கட்டுப்படுத்த  முடிந்தவனுக்கு  பசிக்கும் போதெல்லாம் உணவு தேவைப்படுவதில்லை . அவன் ஒரு வகையில் அப்படி வாழ்ந்திருக்கிறான் . எங்கோ மலை குகைளுக்குள் இருந்து கொண்டு சந்நியாசம் செய்வது எளிது ஆனால் எல்லா வித சந்தர்ப்பங்களுக்கும் நடுவில் யோக்கியமாக இருப்பது கடினம் . இங்கே பலருக்கு சந்தர்ப்பம் கிடைக்காததாலேயோ  அல்லது தண்டனையும் , அவமானமும்  கிடையாது என்கிற  நிலைமை இல்லாததாலேயோ  தான் படிகளை தாண்டாமல் இருக்க முடிகிறது  ...

இதோ இந்த நிலா சாட்சியாக அவனுக்கும் அவளுக்கும் எத்தனையோ முறை ஊடல்கள் , கூடல்கள் , கொஞ்சல்கள் , கெஞ்சல்கள் , ஆத்திரங்கள் , அரவணைப்புகள் எல்லாமே நிகழ்ந்திருக்கின்றன  .
" இந்த கதை எழுதுறவங்க , சினிமாக்காரங்க எல்லோருக்குமே ஒரு வசதில்ல , தனியா எத்தனை நேரம் வேணாலும் எதையாவது நெனைச்சுக்கிட்டே நிக்க முடியும் " சுந்தரியின்  குரல் கேட்டு திரும்பினான் . யாருடைய  பிரிவால் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று பல வருடங்களை தொலைத்தானோ  அதே சுந்தரி நிற்கிறாள் பாவாடை சட்டடைக்குப் பதில் சுடிதாருடன் . இன்றும் சத்தம்  எழுப்பாமல் பூனை போல அவளால் மட்டுமே  வர முடிகிறது .
" பிடிச்சவங்க பிரிஞ்சாலும் அவங்களால தனியா சமாளிக்க முடியறது நல்லது தானே " . அவன்  சொன்ன பதில் அவளுக்கு லேசாக ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டுமென்பது  அவள் கண்கள் குனிந்த போதே தெரிந்தது . " அந்த பிரியக்கூடிய சூழ்நிலைக்கு  அவங்களும் ஒரு காரணம் தானே " அவளின் வழக்கமான சுபாவத்தை மாற்ற முடியாமல் உடனே பதில் சொன்னாள்  . உண்மை தான் இருவரின் பிரிவுக்கு ஒருவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது . பிரிவிற்கு பிறகு பெண்கள் தண்ணியடிப்பதில்லை , தாடி வளர்ப்பதில்லை என்பதாலேயே பழியை அவர்கள் மேல் போட்டு விட்டு எஸ்கேப்  ஆகி விடுகிறார்கள் ஆண்கள் . ஆனால் நிச்சயம் அவன் அவளிடம் இதை ஒரு குறையாக சொல்லவில்லை , வருத்தமாக தான் சொன்னான் ...

இதே முன்னொரு காலமாக இருந்திருந்தால்  அவனும் பதில்  பேச அவளும் பேச பெரிய களேபரம் நடந்திருக்கும் . காலம் எல்லா உணர்ச்சிகளையும் மாற்றுகிறது , ஆசுவாசப்படுத்துகிறது . மற்றவர் சொல்வதை அப்படியே கேட்க வைக்கிறது , நம் விருப்பப்படி அவர்களை பேச வைப்பதில்லை  அல்லது அவர்கள்  பேசும் வரை சண்டை பிடிப்பதில்லை .
" நீ சொல்றது உண்மை தான் சுந்தரி " உடனடியாக அவள் சொல்வதை ஒப்புக்கொண்டவனை ஆச்சரியமாக பார்த்தாள் சுந்தரி .
" நான் ஒன்னும் தப்பா  சொல்லல " எங்கே கோபப்பட்டு விடுவானோ என்கிற பயம் அவளுக்குள் லேசாக  துளிர்விட்டது .
" இல்ல உண்மையா தான் சொல்றேன் " . அவர்களுக்குள் இந்த  உரையாடல்
அமைதியாக சுமூகமாக நடந்தது . காதல் எப்போதும்  கழுத்தில் கிடக்கும் தங்கச்சங்கிலி போலத்தான் அது தொலைந்து போகும் வரையோ அல்லது
சேட்டுக்கடையில் அடமானம் வைக்கப்படும் வரையோ  அதன் மதிப்பு யாருக்கும் தெரிவதே இல்லை . அவனுக்கும் கூட அப்படி தான் இருந்தது.
இதோ இங்கே அருகில் அமர்ந்திருக்கும் அந்த தேவதையை எத்தனை முறை கோபத்தால் திட்டியிருக்கிறான் , அழ வைத்திருக்கிறான் , அழுவதன் அர்த்தத்தை  கூட புரிந்து கொள்ளாமல்  எத்தனை முறை எரிச்சல் பட்டிருக்கிறான் ?!!

அவனுக்கு அவளிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் போலிருந்தது , அவள் மடியில் படுத்துக்கொண்டு அழ வேண்டும் போலிருந்தது . பலதடவை அவளை அழ வைத்திருந்தாலும் அவள் முன்னாள் ஒரு  முறை கூட அவன் அழுததில்லை . எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் . " என்ன உங்க மாப்ளைய ஆளே  காணோம்?"
சிவாவை பற்றி கேட்டு அவன் கவனத்தை அவள் திசை திருப்பப் பார்த்தாள் .
" அவன் அப்பவே மட்டை ஆயிட்டான்  " . " நீங்க அடிக்கலையா ?! " .
" இல்ல , ஆனா ரெண்டு நாள் தங்க சொல்றான் " . அடுத்த இரண்டு  நாட்களில்
எப்படியிருந்தாலும் தண்ணியடிக்கப்போகிறேன் என்பதை சூசகமாக சொன்னான் . " அதானே அவளோ சீக்கிரம் உங்கள  விட்டுருவாரா ?" .
இன்னும் இரண்டு நாட்கள் அவன் இருக்கப்போவது அவளுக்கு ஒரு விதமான புத்துணர்ச்சியை  கொடுத்தது . " நானும் நாலு நாள் அக்கா வீட்ல தான் இருப்பேன் " . அது ஏற்கனவே முடிவு செய்தது தான் . அவன்  சொன்னவுடனேயே அவளும் சொல்லிவிட்டாள்  ...

" என்ன மன்னிச்சுரு சுந்தரி " , அவன் சொன்னவுடன் அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . எதை அவன் ஆரம்பிக்கக்  கூடாது என அவள் நினைத்தாளோ அதை நோக்கியே அந்த பேச்சு திரும்பியது .
" உங்க மேல தப்பில்லை என்னால தான் வெயிட் பண்ண முடில "
" எந்த பெண்ணால் சுந்தரி இத்தனை வருஷம் வெயிட் பண்ண முடியும் " .
நிச்சயமாக உண்மை தான் . காதல் இரண்டு தனி நபர் விருப்பத்திற்கு உட்பட்டது . கல்யாணம் இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்டது . கல்யாணத்திற்கு பிறகு அவள் மனைவியாக மட்டுமல்ல மருமகளாக , அண்ணியாக , நாத்தனாராக , பல வகையான உறவுகளாக ஒரு வீட்டுக்குள் நுழைகிறாள் . அது அவ்வளவு எளிதில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நடந்து  விடுவதில்லை . பெற்றவர்கள் , உறவினர்கள் என எல்லோரையும் துறந்து விட்டு இருவர் ஓடிப்போகும் போதே அவர்களின் சுயநலம் தான்  மேலோங்கி நிற்கிறது . பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களில் கூட விரிசல்கள் வரலாம் ஆனால் அவை மற்றவர்களின் சாபத்தின் மேல் தொடங்குவதில்லை ...


  • " நான் உன் அப்பாவல்லாம் அப்படி பேசியிருக்கக்கூடாது " . அவன் சுந்தரியிடம் மன்னிப்பு கேட்பது போல சொன்னான் . அவர்கள் பேசிக்கொள்ளும்போதெல்லாம் அவன் அவள் அப்பாவை , மாமாவை நிறைய தடவை கிண்டலடித்திருக்கிறான் . சுந்தரியின் அப்பா சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவர் . அப்பாவை இழந்து தவித்த அவருக்கு ஆரம்ப காலங்களில் உதவியது அவரின் தாய்மாமா . பிறகு தாய்மாமாவின் மகளையே அவர் மணந்து கொண்டார் . அவருக்கு சரஸ்வதியின் ஆசி நிறைய இருந்தது ஆனால் அதனை லட்சுமியாக மாற்றியதென்னமோ தாய்மாமாவின் தொடர்புகள் தான் . பெரிய பங்களாவில் சுந்தரியின் அப்பா அம்மாவுக்கு தனி அறைகள் ஒதுக்கப்பட்டன . சுந்தரி தாத்தாவின்  பங்களாவில் கூட்டுக் குடும்பத்துடனேயே வளர்ந்தாள் . அவள் என்றும் தனிமையை சந்தித்ததே இல்லை . சிறு வயதில் சில ரூம்களுக்கோ , மாட்டுத்தொழுவத்துக்கோ போகும் போது கூட அவள் பயத்தினால் யாருடைய துணையோடு தான் போவாள் . அப்படி அன்யோன்யமாக வாழ்ந்தும் அவன் அவர்களை கிண்டல் செய்யும் போது அவனது குணம் அறிந்து சண்டை வேண்டாமென தவிர்த்திருக்கிறாள் . ஆனால் அவள் ஏதாவது அவன் வீட்டை பற்றி சொல்லிவிட்டால் அவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும் . அவள் மன்னிப்பு கேட்கும் வரை  விடமாட்டான்...


அவனது அப்பா பயங்கர கோபக்காரர் . சட்டென்று யார் என்னவென்று பார்க்காமல் எரிந்து விழக்கூடியவர் . ஒரு முறை அவனுக்கு கணக்கு சொல்லிக்கொடுப்பதற்காக  அவன் வீட்டில் தங்கியிருந்த அத்தை பையன்  ரமேஷ் அண்ணாவை ஏதோ ஒரு  சின்ன விஷயத்துக்காக அதிகமாக திட்டி விட்டார் . அவன் அப்பாவிடம் சண்டை போட்டான் . " அவர் எனக்காக தான்பா வந்திருக்காரு , எதுக்கு திட்டுற " . தன்  மகன் தன்னையே எதிர்த்து பேசுவது அவர் கோபத்தை அதிகப்படுத்தியது .
" உனக்கு அவ்ளோ ரோஷம் வந்தா நீயே ஒழுங்கா படிடா , அவனுக்கு சிபாரிசோ ?" . "அதெல்லாம் இல்ல திட்டாத அவ்ளோ தான் " .
" நீ என்னடா எனக்கு புத்திமதி சொல்றது , அவனை கிளம்ப சொல்லு , உனக்கும் வேணும்னா நீயும் கூடவே  போ " . அவர்கள் சண்டைக்குள்  உள்ளே நுழைய வேண்டாமென வராந்தாவில்  நின்று கொண்டிருந்த ரமேஷுக்கு அது நன்றாகவே கேட்டிருக்க வேண்டும் . காம்பவுண்ட் கேட் திறக்கும் சத்தம் கேட்டு அவன் வேகமாக ஓடினான் ...

" நீ ஒன்னும் மனசுல வச்சுக்காத விடுண்ணா " , ஒரு கோல்ட் ஃப்ளாக்கை ரமேஷிடம் நீட்டிக்கொண்டே அவனும் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டான் .
" காசில்லாதவன்னா எல்லோருக்கும் இளக்காரமா போச்சுல்ல " லேசான விசும்பலுடன் அவர் பேச்சு வந்தது . அவனுக்கு அவரென்னடா புதுக்கோணத்திலிருந்து பேசுகிறார் என்பது போல பட்டது . அவன் அப்பா கோபம் வந்தால் கன்னாபின்னாவென்று திட்டக்கூடியவர் ஆனால் என்றுமே காசு பணம் பார்த்தெல்லாம் அவர் பழகியதில்லை . முதலாளி பையனிடமே அவர் கோபப்பட்டு முதலாளியே அவரை சமாதானப்படுத்தியதை அவனே கண் கூடாக பார்த்திருக்கிறான் .
" அவர் கேரக்டர் தான் தெரியும்ல சட்னு கோபப்படுவார் அப்புறம் மறந்துடுவார்" .  " ஆமாண்டா அந்த ஆளுக்கென்ன திட்டிட்டு மறந்துடுவாரு ,
வாங்கினவனுக்கு தானே வலி தெரியும் , கூப்புட்டு வச்சு  அவமானப்படுத்தறது தான அவன் வேலை " . ரமேஷ் சொன்னவுடன் அவனுக்கே சற்றென்று  கோபம் வந்தது .    " அண்ணா தேவையில்லாம பேசாத " .
ரமேஷ் தம்மை ஒரு இழுப்பு இழுத்துக்கொண்டே " அப்பன சொன்னா  புள்ளைக்கும் பொத்துக்கிட்டு வந்துடுமே ?" . அவனுக்கு வந்த கோபத்துக்கு ஓங்கி ஒரு குத்து விட்டிருப்பான். அவன் அடியையெல்லாம் தாங்க முடியாத ஒல்லி தேகம் அவருடையது . வந்த கோபத்துக்கு கம்பில் ஓங்கி குத்தினான் , அடி  தாங்காமல் தட்டி அப்படியே சரிந்தது . ரமேஷின் வாயிலிருந்த தம் பாதியிலேயே கீழே விழுந்தது . வீட்டுக்கு வந்தவுடன் அவன் அப்பா தங்க சொல்லியும் கேளாமல் ரமேஷ் உடனே கிளம்பி விட்டான் . அவன் அவரை தடுக்கவில்லை ...

கல்லூரி படிப்பை முடித்து விட்டு நண்பர்களுடன் வெட்டியாக டாப் அடித்துக்கொண்டிருந்த காலம் அது . சினிமாவில் சேர்வதற்கு  முன் லோக்கல் சேனலுக்காக ஏதாவது பண்ணலாமென ஒருவன் ஐடியா கொடுக்க உடனே அடுத்தவன் சரவணன் அண்ணனை பார்க்கலாம் என்று சொன்னான் . சரவணன் லோக்கலில் வீடியோ கேமரா கடை வைத்திருப்பவர் . திருமணம் , சடங்குகள் தவிர லோக்கல் கம்பெனிகளுக்கு விளம்பரம் செய்து தருபவர் . அவர்களின்  காலேஜ்  சீனியர் . அவரும் அடுத்த மாதம் வந்து பாருங்கள் என்று நம்பிக்கை தரவே அவனுக்கு வேலையே கிடைத்தது போல ஒரு சந்தோசம் . அவனுக்கு உடனே சுந்தரியை பார்க்க வேண்டும் போல இருந்தது . வழக்கமான ஒரு லேண்ட்லைனில் அவளை தொடர்பு கொள்ளவே அவளும் வர சொன்னாள் . சத்திரம் பேருந்து நிலையத்துக்கு சற்று தள்ளிய ரெஸ்ட்ராரெண்டில் காஃபி குடித்துவிட்டு அமர்ந்திருந்தவனுக்கு அவள் வராமல் போரடித்தது . அதுக்கு மேல் பொறுக்க முடியாமல் பெட்டிக்கடைக்கு போய்  தம்மை பற்றவைத்தான் . தம்மை ஊதிக்கொண்டிருக்கும் போதே ஹீரோ ஹோண்டாவில்  கூலிங் க்ளாஸ் போட்ட ஒரு பையனுடன் சுந்தரி வந்துகொண்டிருந்தாள் . அவனுக்கு காதுகளிலும் சேர்த்து புகை வர ஆரம்பித்தது ...

தொடரும் ...

அவன் - அவள் - நிலா (1) ...

அவன் - அவள் - நிலா (2) ...

அவன் - அவள் - நிலா ( 3 ) ...

அவன் - அவள் - நிலா ( 4 ) ...

அவன் - அவள் - நிலா (5) ...




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...