6 October 2019

அவன் - அவள் - நிலா (7) ...


சுந்தரியை பார்க்கப்போகிறோம் என்கிற பரவசத்தில் இருந்தவனுக்கு அவளை ஒருவன் வண்டியில் இறக்கி விடுவதை பார்த்ததும் பரவசம் போய் கொண்டு வந்து விட்டவன் மேல் பகையுணர்வு வந்தது . நிச்சயம் அவன் அவளின் சொந்தக்காரனாகவே இருக்க வேண்டும் . சித்தி பையன் , அத்தை பையன் என்று எவனோ ஒருவன் . ஆனால் ஆம்பளை பையன் . அது தான் நிறைய எரிச்சலை கொடுத்தது அவனுக்கு . சுந்தரியை அவனோடு பார்த்தேன் , இவனோடு பார்த்தேன் என்றெல்லாம் கேள்விப்படும் போது அவன் அவ்வளவாக கண்டு கொண்டதில்லை  ஆனால் இன்று நேரடியாக பார்க்கும் போது எரிந்தது . கடைசி இழுப்பை ஒரு இழு இழுத்து கடைக்கு பின்னால் போய் தூக்கியெறிந்து விட்டு வந்தான் . வந்தவுடன் அவள் நின்று கொண்டிருந்தாள் . மிக அருகே அவளை பாவாடை தாவணி சட்டையுடன் பார்த்த போது அவன் கோபம் வடியத்தொடங்கியது ..

" நான் எப்படி இருக்கேன் ?" பாவாடையை இரண்டு கைகளால் பிடித்துக்கொண்டு அவள் லேசாக ஆடிக்கொண்டே கேட்டாள் . உண்மையை சொல்லவேண்டுமென்றால் அவள் தேவதை போலிருந்தாள் . அவள் செய்யும் குழந்தைதனமான குணஷ்டைகள் அவனுக்கு கொஞ்சம் அசௌகரியமாக  பட்டாலும் " தேவதை மாதிரியிருக்க  என்று சொல்ல வாயெடுத்தான் , அதற்குள் அவள் " இதோ என்ன இறக்கி விட்டாரே மணி அண்ணா அவர் வாங்கிக்கொடுத்தது " , என்று சொன்னவுடனே இறங்கியிருந்த சாத்தான் திரும்ப மண்டைக்குள் ஏறிக்கொண்டது . " ஏன் உனக்கு எதுவுமே உன் அப்பன் வாங்கித்தர மாட்டானா?, எப்ப பாரு ஏதாவது ஒரு அண்ணன் ஏதாவது வாங்கி தந்துடறான்". அவன் சொன்னவுடனே அவளுக்கு லேசாக  அழுகை துளிர் விட்டது . " எனக்கு சொந்த அண்ணா இல்ல , பெரியப்பா பிள்ளை தான் என் அண்ணா , ஏன் அவன் வாங்கி தரக்கூடாதா ? " . " போன தடவை ஒரு வாட்ச் கட்டியிருந்தியே அது யாரு வாங்கிக்கொடுத்தா ? . " சுந்தர் அண்ணா வாங்கி தந்தா " . " அவன் யாரு ? " . " என் அத்தை பையன் " . " முறைப்பையன் அவன் எப்படி நொண்ணா ? ஓ அந்த அண்ணாவா ? " . அவன் சொன்னவுடன் அவளுக்கு அழுகையோடு கோபமும் பொத்துக்கொண்டு வந்தது . " தேவையில்லாம சந்தேகமா பேசாதீங்க " . நிச்சயம் அவனுக்கு அவள் மேல் ஒரு துளி கூட சந்தேகம் இல்லை , ஆனால் அவனை  தவிர அவளுக்கு யார் எதுவும் வாங்கித்தருவதோ , உரிமை கொண்டாடுவதோ சுத்தமாக பிடிக்கவில்லை . அதை அவளிடம் உட்கார்ந்து மெதுவாக பேசுவதற்கு அவனது ஈகோவோ , வயதோ , அனுபவின்மையோ ஏதோ ஒன்று தடுத்தது ...

" சே நான் உன்ன சந்தேகப்பட்டு அப்படி சொல்லல " அவனுக்கு அவளுக்கு எப்படி புரியவைப்பதென்று தெரியவில்லை . " ஒவ்வொரு தடவையும் இப்படி எதாவது சொல்லிட்டு அப்புறம்  அப்படி இல்லைன்னு சொல்ல வேண்டியது " .
அவள் இன்னும் கோபத்தோடு தான்  இருந்தாள்  . " சூச்சு என்ன நம்ப மாட்டியா?"  அவன் அவள் கண்களை விழுங்குவது போல பார்த்துக்கொண்டே கேட்டான். பெண்கள் தனிப்பட்ட முறையில் எவ்வளவு அறிவார்ந்த முறையில் சிந்தித்தாலும் இந்த காதல் வலையில்  விழுந்த பின் அவர்களுக்குள் சார்புத்தன்மை நுழைந்து விடுகிறது . அவள் வெட்கப்பட ஆரம்பித்தாள் . ரோட்டில் சண்டை கூட போட்டுவிடலாம் , ஆனால் ரொமான்ஸ்  செய்ய முடியாது , செய்தால் ஏதோ ஏலியன்களை பார்ப்பது போல வேடிக்கை பார்ப்பார்கள் . அதை உணர்ந்தவனாய் அவள் கைகளை பிடித்துக்கொண்டு எதிர்த்த மாதிரி இருந்த வழக்கமான ஃ பேமிலி ரெஸ்டாரண்டுக்கு நடக்கலானான் ...

அந்த ரெஸ்டாரண்ட் காதலர்களுக்காக கட்டப்பட்டது போலவே சிறு சிறு தடுப்புகளுடன் கூடிய அறைகளாக  இருந்தது . அதில் வாகாக இருந்த ஒன்றுக்குள் இருவரும் நுழைந்தார்கள் . ஒரே சோஃபாவில் இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டார்கள் . " இந்த ஜிமிக்கி கூட நல்லா இருக்கே " 
அவள் காதுகளில் ஆடிக்கொண்டிருந்த தோடுகளை பார்த்தவுடன் அவன் மனசு தள்ளாடியது . " இதுவா " என்று ஏதோ சொல்ல வந்தவள்  எதுக்குடா வம்பு என்பது போல வையை மூடிக்கொண்டாள் . அவள் எதுவும் பேசாதது இருவருக்குமே சவுகரியமாக  இருந்தது . கஃபே காஃபி டேவெல்லாம் வருவதற்கு முன்னாடியே  காதலர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஹோட்டல் போல அது .  சர்வர் ஆர்டர்  எடுக்கவே ஆடி அசைந்து மெதுவாக தான் வருவான். ஆர்டர் எடுத்த பிறகும் அவன் வந்து பரிமாறுவதற்கும்  நடுவிலே ஒரு ஸ்டோரி டிஸ்கஸனே முடித்து விடலாம் . அதனாலோ என்னவோ பசியில் இருந்தவன்  அவன் அவள் காதுகளை மெதுவாக கடிக்க ஆரம்பித்தான் . அவளுக்கு கண்கள் லேசாக சொருகியது . 
" ஏய் பேசலாமா சொல்லிட்டு வேலையை ஆரம்பிக்கிற பாத்தியா ?". ரொமான்ஸுக்குள் போனவுடன் தானாகவே வாங்க போங்க போய் வா போ வந்து விடுகிறது . அவனுக்கும் அது பிடித்திருந்தது ...

காதுகளில் ஆரம்பித்தவன் மெதுவாக கழுத்துக்கு வந்தான் . அதில் சிறிது  நேரம் முகம் புதைத்தவனுக்கு அப்படியே இருந்து விட மாட்டோமா என்று தோன்றியது . ஆனால் க்ஷண நேரம் தான் அவனால் அங்கே தாக்குப் பிடிக்க முடிந்தது . மீண்டும் கன்னம் வழியாக உதடுகளுக்கு போனான் . அவனுக்கு மட்டுமல்ல எல்லா காதலர்களுக்குமே ஃபேவரைட் இடம் உதடுகளாகத் தான் இருக்கும் . இதழ்களில் அவன் எழுத ஆரம்பித்த கதையில் அவள் மெய்மறந்தாள் . உதட்டு முத்தம் என்பது மனிதர்களுக்கே உள்ள சிறப்பம்சம், இனப்பெருக்கத்துக்காக மட்டும் உடலுறவு கொள்ளும் விலங்குகள் கூட சில சமயம்  காதல் வயப்படலாம் ஆனால் ஏனோ இந்த சிறப்பம்சம் அவைகளுக்கு வாய்க்கவில்லை . ஓராயிரம் வார்த்தைகள் சொல்ல வேண்டிய அர்த்தத்தை இந்த சிறு முத்தம் சொல்லி விடுகிறது . கமல்ஹாசனை திட்டிக்கொண்டே அவர் கொடுக்கும் லிப் டு லிப்பை ஓரக்கண்ணால் பார்க்கும் பெண்கள்  ஏராளம் . சிறிது நேரம் வெள்ளைக்காரியாக இருந்தவள் ஏதோ நியாபகம் வந்து அவனை தள்ளி விட்டு தமிழ்நாட்டுக்கு வந்தாள் ...

" ஏய் என்ன ஆச்சு ? " . " போதும் உங்க பேச்செல்லாம் , இப்படியே பேசிட்டு இருந்தா நான் கிளம்பறேன் " . " ஏய் பேசறதுக்காக தான் தயார் பண்ணிக்கிட்டு இருந்தேன் " அவளை பார்த்து கண்ணடித்துக் கொண்டே சொன்னான் . சின்ன சின்ன சில்மிஷங்கள்  , டயலாக்குகளால் அவளை கவர் செய்து விடுவதில் அவன் கண்ணன் . " வேற எதுவும் பேச இல்லையா ?" . " நெறைய இருக்கே " .
" உங்க வேலை விஷயம் என்ன ஆச்சு ? " . " ம் கிடைச்சாச்சு அடுத்த மாசம் சேரனும் " . அவன் சொன்னவுடன் அவளுக்கு சந்தோசம் முட்டியது . உடனே அவன் கன்னத்தில் ஒரு கிஸ் அடித்தாள் .
" என்ன கம்பெனி , எவ்ளோ சம்பளம் ?" . அவள் அவன் ஏதோ பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விட்டான் , உடனே அப்பாவிடம் சொல்ல  வேண்டுமென்கிற அளவுக்கு பிளான் போட ஆரம்பித்து விட்டாள் .
" என் காலேஜ் சீனியர் சரவணன் அண்ணனோட வீடியோ கடையில தான் " .
அவன் சொல்ல அவளுக்கு சப்பென்று ஆகி விட்டது .
" வீடியோ கடையிலயா " . ஆசையாசையாய் மேட்ச் பார்க்க உட்கார்ந்து முதல் பாலிலேயே சச்சின் அவுட் ஆனது போலிருந்தது அவளுக்கு ...

" வீடியோ கடை மட்டும் இல்ல , லோக்கல் கம்பெனிக்கெல்லாம்
ஆட் பண்றது , லோக்கல் கேபிளுக்கு ப்ரோக்ராம் பண்றது எல்லாமே  தான் " ,
அவன் பெருமையாக பேசிக்கொண்டு போனான் .
" இது என்ன வேலை " அவள் சோகத்தோடு கேட்டாள் .
" இது என்ன வேலைன்னா ? அப்போ ஆடிட்டரா இருக்கறது மட்டும் தான் வேலையா ?" , உடனே அவள்  அப்பாவை இழுக்க ஆரம்பித்தான் .
" நான் அப்படி சொல்லல , இந்த விக்கி அண்ணா மாதிரி ஏதாவது கம்பெனில "
" யாரு அவனா ? என்னிக்கு சிட் ஃபண்ட் காரன் கம்பி நீட்டுறானோ அன்னிக்கு இருக்கு அவனுக்கு வேட்டு " . அவன் வேலை பார்க்கும் பைனான்ஸ் கம்பெனியை அவன் கலாய்த்தான் . அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை . " எல்லாத்தையும் நெகட்டிவ்வா பார்க்காதீங்க " .
அவனுக்கு சற்றென்று கோபம் வந்தது , " வேலைன்னு சொன்னவுடனே முதல்ல சந்தோசப்பட்டுட்டு அப்புறம் என்ன வேலைன்னு தெரிஞ்சவுடனே நீ நெகட்டிவ்வாக மாறல ? " . " நான் நெகட்டிவ்வா ஒன்னும் சொல்லல , ஆனா யதார்த்தத்தை சொன்னேன் . விக்கி அண்ணாவுக்கு இப்போ கை நெறைய சம்பளம் , வைட் காலர் ஜாப் நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது ஆனா இன்னிக்கு எல்லோரும் நிமிர்ந்து பார்க்க மாதிரி இருக்கணும்" . " ஆமா அவனோட ஆறுக்கு ரெண்டு உயரத்துக்கு எல்லோரும் நிமிர்ந்து தான் பார்க்கணும் " அவன் இப்படி சொன்னதும் அவளுக்கு அந்த சூழல் மறந்து சிரிப்பு வந்தது . இது தான் அவன் ஸ்பெசாலிட்டி . கோபப்படுபவனாக இருந்தாலும் டைமிங்கில் எதையாவது சொல்லி அனைவரின் மூடையும் டக்கென்று ஸ்விங் செய்து விடுவான் ...

மனநிலை மாற ஆரம்பித்த அந்த நேரத்தில் சர்வர் ஆர்டர் எடுக்க வந்தான் .
" என்ன சார் சாப்புடுறீங்க " , எல்லா ஹோட்டல்களிலும் இதை சம்பிரதாயமாக கேட்டு விடுவார்கள் என்னமோ கேட்பதையெல்லாம் கொடுப்பது போல . அங்கே அந்த நேரத்தில் இருப்பதென்னமோ நான்கைந்து ஐட்டம் தான்
" எனக்கு எதுவும் வேண்டாம் " அவள் சொன்னாள் .
" ஏதாவது சாப்பிடணும் என் ட்ரீட் " . " முதல்ல நீங்க சொல்லுங்க " என்றாள் .
பசியிலிருந்த அவன் " ஒரு சாம்பார் வடை , மசால் தோசை , முடிக்கும் போது சூடா  ஸ்ட்ராங்கா ஒரு காஃபி " என்றான் . அவள் அதற்குள் யோசித்து முடித்தவளாய்  எனக்கு ஒரே ஒரு பனானா மில்க் ஷேக் மட்டும் போதும் " என்றாள் . ஒன்னு மட்டும் போதுமா , அது ஒண்ணே நம்ம  ஆர்டர் பண்ணதுக்கு மேல ரேட் இருக்கும் . இதை யோசித்தவன் சர்வர்  இருந்ததால் அதை சொல்லாமல் தண்ணீர் குடித்துக்கொண்டான் . இந்த ஹோட்டல்களில் ஆண்கள் ஆர்டர் கேட்பது இருக்கிறதோ இல்லையோ பெண்கள் கேட்பது நிச்சயம் இருக்கும் ...

ஆர்டர் செய்ததை எடுத்து வருவதற்கு அவன் இன்னும் அரை மணி நேரம் ஆக்குவான் அதற்குள் இன்னொரு மினி டிஃபனை முடித்து விடலாமா என்பது போல அவளை ஏக்கத்துடன் பார்த்தான் . அவனுடைய சில்மிஷ எண்ணம் புரிந்து கொண்டவளாய் " எப்போ அவர் கிட்ட ஜாயிண்ட் பண்ணனும் " , அவள் நேரடியாக விஷயத்துக்கு வந்தாள் . " அடுத்த மாசம் வந்து பார்க்க சொல்லியிருக்கார் " . அவளுக்கு சப்பென்று ஆனது .
" அப்போ அது கூட  கன்ஃபார்ம் இல்லையா ? " . " அப்படில்லாம் இல்ல , அவருக்கு என் டேலண்ட் பத்தி நல்லாவே தெரியும் . நெக்ஸ்ட் மன்ந்த் ஜாயிண்ட் பண்ணிடலாம் " . அவன் நம்பிக்கையாக சொன்னான் . அவன் நம்பிக்கையை கெடுக்க விரும்பாதவளாய் அவள் "ம்" மட்டும்  போட்டாள் .
" சம்பளம் எவ்வளோ ? " . " ஆமா மேனேஜர்  உத்தியோகம் அப்படியே சம்பளம் , பேட்டா ல்லாம் கொடுக்க , இது ட்ரைனிங் மாதிரி அவர் கூட இருந்தா டெக்னீக்கல்லா நெறைய கத்துக்கலாம் " . " கத்துக்கிட்டு ? " .
" கத்துக்கிட்டா ? , அவருக்கு சென்னைல  சினி ஃபீல்டுல நெறைய காண்டாக்ட்ஸ் இருக்கு , அத வச்சு அசிஸ்டன்ட் டைரக்டரா சேர்ந்துடலாம் " ...

சுஜாதா சினிமா உலகத்தை " கனவு தொழிற்சாலை " என்று சரியாக தான் சொன்னார் . அவள் சொல்லி தான் அவன் அந்த நாவலை படித்தான் . அவளுக்கு சினிமா மேல் நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் இது போல படித்ததன் மூலம் நிறைய தெரிந்து வைத்திருந்தாள் .
" இன்னும் மூணு வருஷம் தான் சுந்தரி அப்புறம் பாரு ஐயாவை " .
அதீத நம்பிக்கையோடு சொன்னான் .  விக்ரமன் படம் போல ஒரு பாட்டில் வாழ்க்கை மாறி விடாதா என்று அவள் யோசித்தாள் .
" என்ன யோசிக்குற சென்னையில எங்க வீடு வாங்கணும்னா ? " .
" இல்ல திருச்சில எங்க வாங்கணும்னு " . எதிர்காலத்தை பற்றிய பாசிட்டிவ் கற்பனை ஒரு சுகத்தை தருகிறது . தற்போதைய கவலைகளை மறக்க உதவுகிறது , புண் இருக்கும் இடத்தை லேசாக  சொரிந்து கொள்வதை போல .
" அதெல்லாம் நடக்குமா " என்பது போல அவள் ஏக்கமாக பார்த்தாள் . நிச்சயம் எல்லாம் நடக்கும் என்பது போல அவள் கைகளை இறுக்கப் பற்றிக்கொண்டான்  . அவன் தோள்களில் அவள் சாய்ந்து கொண்டாள் . அவளுக்கு லேசாக அழுகை வந்தது . அவன் சொல்வது போலெல்லாம் மூன்று வருடத்தில் சினிமாவில் செட்டில் ஆவதெல்லாம் ஆகிற கதையில்லை  என்பது அவளுக்கு உள்ளுணர்வு சொல்லியது . காலம் கடத்துவதற்காகவே யு.ஜி முடித்துவிட்டு பிஜி படிக்க வேண்டுமென்று ஏற்கனவே அப்பாவிடம் சொல்லி வைத்திருந்தாள் . படிப்பின் அவசியம் புரிந்த அவர் என்றுமே அதற்கு தடை சொன்னதில்லை ...

சர்வர் சூடாக சாம்பார் வடை , தோசையை எடுத்து வந்தான் .
" மேடம் உங்களுக்கு இப்போவே மில்க் க்ஷேக் கொடுக்கவா இல்ல காஃபியோடவா ?" , " காஃபியோடவே கொடுங்க " , அவள் சொன்னவுடன் சர்வர் இடத்தை காலி செய்தான் . பசியில் இருந்தவன் சாம்பார் வடையை ஸ்பூனால் எடுத்து சாப்பிட ஆரம்பித்தான் . அவளுக்கு ஒரு வாய் ஊட்டி விடுவான் என்று நினைத்தவள் வழக்கம் போல ஏமாந்தாள் . பர்தடே க்கு முதல் ஆளாக வாழ்த்து  சொல்வது , சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுப்பது , புது ட்ரெஸ்ஸில் பார்த்தால் கேட்காமலேயே பாராட்டுவது என இது போன்ற சின்ன சின்ன விஷயங்களில் பெண்களுக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன . பெண்கள் திருமணம் என்று வரும் போது ரியாலிட்டியை யோசிப்பவர்கள் காதலிக்கும் போது கனவுலகிலேயே இருக்கிறார்கள் .
அவனை பொறுத்தவரை பசியில் இருந்தது ப்ளஸ் அவள் எதுவும் வேண்டாமென்று சொல்லிவிட்டது இதையெல்லாம் வைத்து வேறெதுவும் யோசிக்காமல் சாப்பிட ஆரம்பித்து விட்டான் ...

" சாம்பார் வடை சூப்பரா இருக்கு , ஒரு வாய் சாப்புடுறியா " , அவளுக்கு வடையின் சுவையை விட அவன் கேட்டதால் சாப்பிட வேண்டும் போலிருந்தது ஆனாலும் அவன் முதலிலேயே கேட்டிருந்தால் அவள் உடனே தலையாட்டியிருப்பாள் இப்போது வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் .
அவன் ஓகே சொல்லிவிட்டு திரும்ப சாப்பிட ஆரம்பித்தான் . அது அவளுக்கு இன்னும் ஏமாற்றத்தையே கொடுத்தது . பெண்கள் தங்களின் முக்கியத்துவத்தை என்றுமே இழக்க விரும்புவதில்லை . ஆண்கள் செய்யும் எல்லா விஷயங்களிலும் தாங்கள் பிரதிபலிக்க வேண்டுமென நினைக்கிறார்கள் . அவள் எண்ண  ஓட்டத்தை அறியாதவனாய்  அவன் மசால் தோசையை சாப்பிட ஆரம்பித்தான் . அதை முடித்தவுடன் கை  அலம்ப போனான் . அவன் போனவுடன் சுற்றும் முற்றும் பார்த்தவள் கொஞ்சம் மீதமிருந்த மசால் தோசையை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள் . அப்பா சாப்பிட்ட பிறகு அவர் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் அதே தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த  சுந்தரியின் அம்மா இன்று குழந்தைகள் பெரிதாக வளர்ந்து விட்டதால் அதனை குறைத்துக் கொண்டாள் . சின்ன வயதிலிருந்து அதை பார்த்து வளர்ந்தவளுக்கு அவனை புருஷன் போல நினைத்து தட்டில் இருந்து எடுத்து சாப்பிட்டது தப்பாக தெரியவில்லை . ஒரு வழியாக காஃபி , மில்க் ஷேக் கை முடித்து வைத்து பில்லை கட்டி விட்டு அவன் கைகளை இறுக கோர்த்துக்கொண்டு அவள் வெளியே வந்தாள்  . அவளுக்கு நீண்ட நாட்கள் கழித்து அவனுடன் இத்தனை நேரம் இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது . ஃப்ரெண்ட் வீட்டுக்கு போகிறேன் என்று இறங்கியவள் இங்கே அவனுடன் ஜோடியாக வருவதை , வேலையை முடித்து விட்டு ஒரு காஃபி சாப்பிடலாம் என்று வந்த போது பார்த்த மணி அண்ணாவுக்கு மகிழ்ச்சியாக இல்லை ...

தொடரும் ...

முதல் ஆறு  பாகங்களை படிக்க கீழே சொடுக்கவும் ...

அவன் - அவள் - நிலா (1) ...







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...