27 October 2019

அவன் - அவள் - நிலா (9) ...


தான் கட்டிய கனவுக்கோட்டை தன் கண் முன்னாலேயே இடிந்து விழுவதென்பது புத்திர  சோகத்தை போலவே கொடுமையானது . அண்ணனும் , காதலனும்  அடித்துக்கொண்ட  தருணத்தில் சுந்தரி அந்த கொடுமையை அனுபவித்தாள் . எல்லாமே எதிர்பாராத நேரத்தில் நடந்து முடிந்தே விட்டது .
இதில் யார் பக்கமும் அவளால் நிற்க முடியவில்லை . அழுவதை தவிர அவளால் வேறொன்றும் செய்ய இயலவில்லை . கார்த்திக் அவளை நோக்கி வந்து " நான் கெளம்பட்டா ? " என்றான் . ஏதோ ஒன்றுமே நடக்காதது போல அவன் நின்று கொண்டிருப்பதை பார்த்த அவளுக்கு எரிச்சலாக வந்தது .
" அதான் எல்லாத்தையும் முடிச்சாச்சே அப்போ கிளம்ப வேண்டியது தானே ! "
அவள் அந்த எரிச்சலோடே அவனுக்கு பதில் தந்தாள் . அவன் மணியை  சைடாக பார்த்தான் , " இன்னும் முடியலையே அவன் உயிரோட தானே இருக்கான் " , அவன் சொன்னது அவளுக்கே கலக்கமாக இருந்தது .
" இப்போ என்ன அவனை கொலை பண்ணிட்டு நீ ஜெயிலுக்கு போவ , நான் லோலோன்னு அலையணுமா ?" . " உன்னை யாரு  அலைய சொன்னா ? "
அவள் அவனின் முகத்தை பார்த்து நேராக கேட்டாள் ,
" இப்போ என்ன சொல்ல வர்ற ? " ...

உண்மையில் கார்த்திக்கிற்கு என்ன சொல்வதென்றே  தெரியவில்லை . அவன் அவளுக்காக பொறுமையாக இருந்திருக்கலாம் தான் ஆனால் அவனால் யாருக்காகவும் தனது சுயமரியாதையை விட்டுக்கொடுக்க முடியவில்லை .
ஒருவன் தன்னை அறைந்த பின் இன்னொரு கன்னத்தை காட்ட அவன் ஒன்றும் ஏசு பிரான் அல்ல ஆனால் பதிலுக்கு ஒரு அறையோடு விடாமல் மணியை புரட்டி எடுத்து விட்டான் . அவள் கேட்ட போது அவனுக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது . " நான் ஒன்னும் சொல்ல வரல " என்று மொட்டையாக
பதில் சொன்னான் . " அங்க அவனை அடிக்கும் போது கொஞ்சமாவது என்ன நெனைச்சு பாத்தியா ? " . " ஏன் உன் அண்ணன நான் அடிச்சது மட்டும் வலிக்குதா ? அப்போ அவன் என்ன அடிச்சது ? " , அவனுக்கே உண்டான
ஆக்ரோஷத்துடன் கேட்டான் . " எப்பவுமே  இப்படி தப்பாவே புரிஞ்சுக்கோ ,
நான் சொல்ல வந்தது இப்படி சண்டை போட்டா நாம எப்படி ஒன்னு சேர்றது?"
அவனுக்கு அப்பொழுது தான் அது உறைத்தது . பிரச்சனை என்னவென்றால் போட்டி அல்லது சண்டை என்று வந்து விட்டால் அது வாயாலோ அல்லது கையாலோ அவனால் அங்கே விட்டுக்கொடுக்கவோ தோற்கவோ முடியாது .
இது போல சுந்தரியோடு பல முறை சண்டை போடும் போதும் எதையெதையோ சொல்லி அவள் வாயை அடைத்து விடுவான் ...

ஒரு வெற்றியை அடைய வேண்டுமானால் சில தியாகங்களை செய்ய வேண்டுமென விவேகானந்தர் சொல்லியிருக்கிறார் . ஆனால் புயலடிக்கும் போது நாணல் போல வளைந்து கொடுக்காமல் ஆலமரம் போல உறுதியாக இருப்பது வேரோடு சாய்த்து விடும் . பதிலுக்கு பதில் பேசினாலும் சுந்தரி கடைசியில் அவனுக்காக விட்டுக்கொடுத்து விடுவாள் அல்லது விட்டுக்கொடுக்க வைக்கப்படுவாள் . இது இருவருக்குமான தனிப்பட்ட சண்டையில் நடக்கும் ஆனால் இன்று அவள் அண்ணனோடு சண்டை போட்டிருக்கிறான் அதுவும் தெருவில் அனைவரும் பார்க்க அவனை அடித்து உதைத்து கட்டியுருண்டு வெறித்தனமாக சண்டையிட்டுருக்கிறான் . மணி தான் சண்டையை  முதலில் ஆரம்பித்தாலும் அதை மூர்க்கத்தனமாக மாற்றியதென்னமோ கார்த்திக் தான் . கார்த்திக்கிற்கு லேசாக பதட்டம் வந்தது.
பேசாமல் அவள் அண்ணனிடம் போய் மன்னிப்பு கேட்டுவிடலாமா என்று கூட யோசித்தான் . மனதார மன்னிப்பு கேட்க முடியாவிட்டாலும் சண்டையின் முடிவில் ஜெயித்ததென்னமோ அவன் தான் .அதனால் அவன் தான் முதலில் இறங்கி வரவேண்டும் . சுந்தரிக்காக கேட்டால் தான் இந்த பிரச்சனையை இப்போதைக்கு முடிவுக்கும்  கொண்டுவர முடியும் ...

" சுந்தரி நான் வேணா உன் அண்ணன்கிட்ட சாரி கேக்கவா ?" , அவன் அப்படி இறங்கி வந்து கேட்டதே அவளுக்கு ஆச்சர்யமாகவும் , சந்தோசமாகவும் இருந்தது ஆனால் அவன் கேட்பதால் நடந்தது எதுவும் மாறப்போவதில்லை என்பது அவளுக்கு தெளிவாக புரிந்தது . ஆனாலும் அது  அடிபட்ட உடனே செய்யப்படும் முதலுதவி போல உணர்ந்தாள் . அவளுக்கு லேசான பயமும் இருந்தது . மன்னிப்பு கேட்கும் போது மணி ஏதாவது பேசி வைக்க திரும்பவும் அவன்  முருங்கை மரம் ஏறிவிட்டால் என்ன செய்வதென்றும் யோசித்தாள் .
" சரி நீ இரு நான் போய் அண்ணா கிட்ட பேசுறேன் " அவள் அவனிடம் சொல்லி விட்டு சைக்கிள் ஸ்டாண்டில் உட்கார்ந்திருந்த மணியை நோக்கி போனாள் .
ஒரு சின்னப்பயல் தங்கைக்கு முன்னால் தன்னை அடித்துவிட்டான் என்பதை மணியால் ஜீரணிக்கவே  முடியவில்லை . ஏதோ ரெண்டு தட்டு தட்டினால் பயந்து விடுவான் என்று மணி தப்புக்கணக்கு போட்டுவிட்டதன் விளைவே இந்த அசிங்கம் . அந்த உண்மையை  மணியால்  ஒத்துக்கொள்ள முடியவில்லை . என்றாவது ஒருநாள் இதற்கு சரியாக பழி தீர்க்க வேண்டுமென்று மட்டும் அவன் மனம் கருவிக்கொண்டே இருந்தது ...

" அண்ணா எந்திரிண்ணா போலாம் " கூப்பிட்ட சுந்தரியை உட்கார்ந்த இடத்திலிருந்தே மேலெழுந்த வாரியாக பார்த்தான் மணி . " என்னம்மா சார சமாதானப்படுத்திட்டியா " அவன் கேட்டதிலே இருந்த நகலை அவள் புரிந்து கொண்டாள் . " அவரே உன் கிட்ட சாரி கேக்குறேன் சொன்னார் , நான் தான் பேசிட்டு வரேன்னு சொன்னேன் ". நம்மிடம் சண்டையிட்டவர் கொஞ்சம்
இறங்கி வரும் போது உடனே அதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் யாருக்கும் வருவதில்லை . சொல்லப்போனால் அது அவர்களுக்கிருக்கும் இறுமாப்பை இன்னும் ஏற்றி விடுகிறது . " ஆமாம் வயசு வித்தியாசம் பார்க்காம அவன் அடிப்பான் , அப்புறம் சாரி கேட்டவுடனே நான் ஒத்துக்கணுமா ?" . அவன் அப்படி பேசியது அவளுக்கு மேலும் ஒரு மாதிரி இருந்தது . " எதுக்குண்ணா  இப்போ நமக்குள்ள சண்டையை வளர்க்கணும் ?" .
அவனையும் சேர்த்து அவள் நமக்குள்ள என்று சொன்னது மணியை மேலும் உசுப்பேற்றியது . " என்ன நமக்குள்ள , ஏதோ ஒரு வகையில  சொந்தம்னா
அதுக்காக அவனும் நாமளும் ஒன்னா ?" . அவன் எங்கு வருகிறான் என்பது அவளுக்கு புரிந்தது , பணம் அது தான் இருவருக்கும் இடையில் இருக்கும் பெரிய இடைவெளி . மணி அப்படி நினைக்கலாம் ஆனால் சுந்தரியின் அப்பா கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் அதனால் பணம் அவருக்கு பெரிதில்லை . அவருக்கு முக்கியம் நல்ல குடும்பம் அதிலும் பையன் நன்கு  படித்திருக்க வேண்டும் ...

ஏற்கனவே நார்மலாக படித்து வேலைக்கு போவது போலில்லாமல் அவன் சினி ஃபீல்டில் நுழைவதே அவளுக்கு பெரிய தலைவலி , அந்த ஒரு விஷயத்துக்கே அவள் அப்பாவை , உறவினர்களை சமாளிக்க வேண்டும் . அண்ணன்களின் உதவியினால் அதை சமாளிக்கலாம் என்று நினைத்தவளுக்கு புது தலைவலியாய் இந்த சண்டை வந்து சேர்ந்தது . மணி அண்ணா சொன்னால் வீட்டில் உள்ளவர்கள் நிச்சயம் கேட்பார்கள் அல்லது குறைந்த பட்சம் பரிசீலிப்பார்கள் . பாசிட்டிவாக அவரை சொல்ல வைக்கலாமென்று நினைத்தவளுக்கு இன்று அவரே நெகட்டிவ்வாக மாறி விடுவாரோ என்கிற பயம் நெஞ்சை கவ்வியது . அந்த  நேரத்தில் என்ன நினைத்தாளோ தெரியவில்லை சற்றென்று அவன் காலில்  விழுந்து விட்டாள்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத மணி துள்ளியெழுந்து அவளை தூக்கினான் .
" என்னமா இப்படி பண்ற , இப்போ என்ன நான் அவனை மன்னிக்கனுமா ?"
பெண் அழுதால் பேயே இறங்கும் என்பார்கள் அவன் சாதாரண மனிதன் அதுவும் காலில் விழுந்தவள் தான் தூக்கி வளர்த்த தங்கை . அவன் மனம் உடனே இளகியது . அவளை தோளோடு கூட்டிக்கொண்டு கார்த்திக் பக்கம் போனான் ...

மணி காலில் அவள் விழுந்ததை பார்த்து செம்ம கோபத்தில் இருந்தவன் இருவரும் அவனை நோக்கி வருவதை பார்த்ததும் கொஞ்சம் சாந்தமானான்.
அண்ணன் காலில் தங்கை விழுவதில் தப்பில்லை ஆனாலும் அவன் சண்டைக்காக அதுவும் பொது இடத்தில் காலில் விழுந்ததை அவனால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை . இருந்தாலும் இப்பொழுது ஏதாவது சொன்னால் திரும்பவும் சண்டை வருமென்பதால் அவன் பொறுத்துக்கொண்டான் . அதைப்பற்றி கேட்க வேண்டாமென நினைத்தான் .
சுந்தரி அவனைப் பார்த்து மணியிடம் சாரி கேளு என செய்கை செய்தாள்  . அதை புரிந்து கொண்டவனாய் " சாரி ப்ரதர் " என்று கையை நீட்டினான் கார்த்திக் . பதிலுக்கு மணியும் கை நீட்டியதை பார்த்ததும் சுந்தரிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது . மணி அண்ணா உடனே சமாதானமாவானென அவள் நினைக்கவில்லை . கார்த்திக்கை அனுப்பாமல் தான் சென்று காலில் விழுந்தது நல்லதாக போய் விட்டது என்று அவள் நினைத்துக்கொண்டாள்...

மணி இருவரின் மேலும் பயங்கர கோபத்தில் இருந்தான் . சுந்தரி காலில்  விழுந்ததும் ஒரு தங்கை என்ற முறையில் அவள் மேல் அவனுக்கு இரக்கம் வந்தது . அவள் முன்னாலேயே தன்னை புரட்டியெடுத்த கார்த்திகை அவனால் மன்னிக்க முடியவில்லை . மணி நினைத்தால் கார்த்திக் ஊருக்கு போவதற்குள் நண்பர்களை திரட்டிக்கொண்டு வந்து அவனை பொளந்து எடுக்கலாம் . அப்புறம் சுந்தரிக்கு மணி மேல் இருக்கும் மரியாதை குறைந்து கார்த்திக் மேல் பச்சாதாபம் பெருகி விடும் . தேவையில்லாமல் அவர்கள் நெருக்கத்தை பெரிதுபடுத்த மணி விரும்பவில்லை . அவன் தனக்கு உடலால் தான் வலி கொடுத்தான் அது சில நாளில் மறைந்து விடும் . ஆனால் அவனுக்கு நாம்  கொடுக்கும் அடி மரண அடியாக இருக்க வேண்டும் . காலம்  முழுவதும் அவன் அதை நினைத்து கதற வேண்டும் . அதற்கு சுந்தரியை அவனுடன் பழக விட்டு சேர்வோம் என்கிற நம்பிக்கையை கொடுத்து பிரிக்க வேண்டும் . சுந்தரி என்ன தான் அவனை காதலித்தாலும் குடும்பத்தாரின் மேல் அவளுக்கு இருக்கும் பாசம் அலாதியானது . அதை வைத்து அவளை வழிக்கு கொண்டு வந்துவிடலாம் . இப்படி பலவாரியாக மணியின் மூளை சிந்தித்துக் கொண்டிருந்தது . இந்த வன்மம் எதுவும் தெரியாமல் கார்த்திக் பிரச்சனை சுமூகமாக முடிந்த சந்தோசத்தில் கடைக்காரரிடம் மூன்று பவண்டோ கேட்டுக்கொண்டிருந்தான் ...

தொடரும் ...










No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...