13 October 2019

அவன் - அவள் - நிலா (8) ...


ரு ஆணால் என்றுமே ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடிவதேயில்லை. அந்த ஏமாற்றத்தை தருபவள்  பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவன் மேலும் மூர்க்கமாகிறான் . ஏமாற்றும் பெண் காதலியாக தான் இருக்க  வேண்டுமென்பதில்லை , சகோதரியாக , தோழியாக யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் . சுந்தரியை இன்னொரு பையனுடன் பார்த்த போது மணி யின் மனநிலை  அப்படி தான் இருந்தது . சே இவள் மேல் பெரியப்பா எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் இப்படி எவனுடனோ சிரித்துப் பேசிக்கொண்டிருக்காளே என்று ஏமாற்றத்தோடு கலந்த ஆத்திரம் வந்தது . ஆனால் அவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமே  என்று யோசிக்க ஆரம்பித்தவனுக்கு அது பிடிபடவில்லை . முக்கியமான லீக் மேட்ச் இருந்ததால் சுந்தரியின் அக்கா கல்யாணத்துக்கு முழுமையாக மணியால் இருக்க முடியவில்லை . அதனால் கார்த்திக்கின் முகம் அவனுக்கு நினைவில் வரவில்லை  . ஒரு வேளை கூட படித்தவனாக இருப்பானோ  , அவளுடைய எல்லா நண்பர்களும் ஒரு தடவையாவது வீட்டுக்கு வந்திருப்பார்களே ! ஆனால் அவனை வீட்டில் வைத்து பார்த்தது இல்லையே என்று பலவாறாக யோசிக்க ஆரம்பித்தவன் நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமல் சரி எவனாக இருந்தால் என்ன நேரடியாக கேட்டு விடுவோமென முடிவெடுத்து அவர்களை நோக்கி கிளம்பினான்  ...

கார்த்திக் சொன்னதற்கு ஏதோ பதில் சொல்லிவிட்டு திரும்பியவள் கண் முன்னே மணி அண்ணா நிற்பதை பார்த்து அதிர்ச்சியானாள் . நிச்சயம் அவன் இப்படி வந்து நிற்பான் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை . எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டும் , விக்கியாக இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் மணி அவள் அண்ணன்களிலேயே மூத்தவன் . அவளுக்கே அவனிடம் ஒரு மரியாதை கலந்த பயம் உண்டு . மணி எதையோ யூகித்துக் கொள்வதற்குள் சுந்தரி நிலைமையை சமாளிக்க முடிவெடுத்தாள் .
" அண்ணா இது யாரு தெரியல , நம்ம சொந்தக்காரா , ஜானகி மாமி புள்ள ",
மணிக்கு யார் ஜானகி மாமி என்பதே பிடிபடவில்லை .
" யாருன்னு தெரியலையே " .  " மறந்துட்டியா , நம்ம புவனா அக்கா கல்யாணத்துக்கு வந்திருந்தார் " . அவள் படபடப்புடன் சொல்ல ஆரம்பித்தாள் .
" யாரா இருந்தா என்ன , சார் வீட்டுக்குல்லாம் வர மாட்டாரா ? , வயசுப்பொண்ணோட இப்படி ரோட்ல நின்னு வழிஞ்சுக்கிட்டு இருக்காரு ! "
சுந்தரிக்கு லேசாக பயம் வந்தது ,சொந்தக்காரன் என்று தெரிந்தவுடன் மணி அண்ணா சுமூகமாகி விடுவான் என்று பார்த்தால் தேவையில்லாமல் அவனை சீண்டுவது போல பேசிக்கொண்டிருந்தான் . கார்த்திக்குக்கு கோபம் வந்தால் என்ன பண்ணுவான் என்று தெரியாது , மணி அண்ணாவுக்கும் சொந்த ஊரில் பழக்கம் அதிகம் . இவர்கள் இருவரும் அடித்துக்கொண்டால்  அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது அவள் தான் என்பது சுந்தரிக்கு நன்றாகவே புரிந்தது ...

" இல்லண்ணா  இங்க ஜஸ்ட் ஆக்சிடென்டலா பார்த்தோம் , கொஞ்ச நேரம் பேசிண்டு இருந்தோம் , இப்போ கெளம்பறார் " . கார்த்திக் எதையாவது சொல்லிவிடப்போகிறான் என்கிற பயத்தில் அவளே பேசிக்கொண்டிருந்தாள் .
அவளுடைய படபடப்பு , அவனுடைய நெருக்கம் இதையெல்லாம் பார்த்த மணிக்கு அது ஏதோ யதார்த்தமான சந்திப்பு போல தெரியவில்லை .
குட்டையை கிளறினால் தான் மீன் பிடிக்க முடியும் என அவன் நினைத்தான் .
" சார் என்ன கலெக்டர் உத்தியோகம் பாக்குறாரா ? வாய தொறந்து பேசவே மாட்டேங்கறாரு ?" பி.ஏ மாதிரி நீயே பேசிட்டு இருக்க ! " .
மணி திரும்பவும் நக்கலாக அவனை பார்த்துக்கொண்டே கேட்டான் .
வந்ததிலிருந்தே ஏதோ போலீஸ் குற்றவாளியை விசாரிப்பது போல மணி நடந்துகொண்ட விதத்தால் கடுப்பிலிருந்த கார்த்திக்கால் அதற்கு மேல் பேசாமல் இருக்க முடியவில்லை . பிரச்சனைகளை சும்மாவே தோளில்  போட்டுக்கொண்டு சுத்துபவனுக்கு  வான்ட்டடாக ஒருவன் வண்டியில் ஏறியது போலவே இருந்தது ...

:" ஏன் சாருக்கு சரியா காது கேக்காதா  ? நீ சொன்னப்புறமும் என் கிட்ட ரெண்டாவது  தடவ கேக்குறாரு ? " . அவன் பதிலால் மணி மேலும் கோபமானான் . " ஒரு அறை  விட்டேன்னா உனக்கு உண்மையிலேயே காது கேக்காம போயிடும் தம்பி " சட்டை கைகளை மடித்துவிட்டுக்கொண்டே மணி சொன்ன போது கார்த்திக் அவனை ஏற இறங்க  முழுமையாக பார்த்தான் . வயதில் என்ன தான் சின்னவனாக இருந்தாலும் முன்பின் தெரியாதவர்கள் வா போ என்று கூப்பிடுவது மதுரைக்காரர்களுக்கு பிடிப்பதில்லை . அந்த கடுப்போடு ஆறடிக்கு வாட்டசாட்டமாக இருந்தவனை கார்த்திக் நக்கலாக பார்த்தான் . மதுரையில் அவனை விட  அராத்து ஆட்களோடு சுற்றிக்கொண்டிருப்பவனுக்கு சிரிப்பு இன்னும் அதிகமானது .  தான் சொல்வதற்கு கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் சிரித்துக்  கொண்டிருந்தவனை  பார்த்து  மணிக்கு மண்டை சூடானது . நம்மள விட சின்னப்பயலுக்கு என்ன தெனாவெட்டு என்று நினைத்தான் . ஆனால் இளங்கன்று பயம் அறியாது என ஏனோ அவன் யோசிக்கவில்லை .
" தங்கச்சி இருக்காளேன்னு பார்க்குறேன் , இல்ல உன்ன " என்று மணி சொல்லி முடிப்பதற்குள்ளேயே அவன் " நானும் என் ஆளோட அண்ணன்னு தான் பார்க்குறேன் " என்றான் ..

சுந்தரி உடனே கார்த்திக்கிடம் " ப்ளீஸ் ஒன்னும் சொல்லாத " என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள்  . கல்லூரி படிப்பு முடிந்தவுடன் காதல் மேட்டரை அப்பாவிடம் சொல்லலாம் என்று நினைத்தவளுக்கு கார்த்திக் போட்டு உடைத்ததில் பக்கென்று ஆகி விட்டது . மேலும் கோபம் தலைக்கேறினால் கார்த்திக் யார் என்ன என்று பார்க்காமல் கை வைத்துவிடுவான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும் . ஏற்கனவே தியேட்டரில் ஒருமுறை தன்னிடம் வம்பு செய்தவனை கார்த்திக் புரட்டி எடுத்திருக்கிறான் . அதனால் அவனை சமாதானப்படுத்துவது  தான் சிறந்த வழி என்று அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள் . அவள் முகத்தை பார்த்த பிறகு கார்த்திக்கின் கோபம் கொஞ்சம் தணிந்தது . ஏற்கனவே அவன் என் ஆள் என்று சொன்ன கடுப்பில் இருந்த மணிக்கு  அவள் ஏதோ அவனை மட்டும் சமாதானப்படுத்துவதை பார்த்த போது என்னமோ பெரிய  பில்ட் அப் கொடுப்பது போல பட்டது . அது அவனது ஈகோவை டச் செய்யவே அவன் மேலும் உஷ்ணமானான் . கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை கொஞ்சம் விலக்கி விட்டு பளேரென அவன் கன்னத்தில் மணி ஒரு அறை விட்டான் . கிரிக்கெட்  பாலில் பௌலிங் போட்டு போட்டு காய்த்துப்போன அவன் கைகளால் வந்த இந்த பவுன்சரை கார்த்திக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை . காதுக்குள் கொயிங்க் என்றது . கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு அவன் பின் வாங்கினான் . மணி அவனை பார்த்து கொன்னுடுவேன் என்பது போல செய்கை செய்துகொண்டிருக்க சுந்தரிக்கு தலை சுற்றியது . அவள் நிச்சயம் இந்த கைகலப்பை எதிர்பார்க்கவில்லை . அவளுக்கு யார் பக்கமும் இருக்க முடியவில்லை அதே சமயம் அப்படியே விடவும் முடியாது அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்  ...

சின்ன வயதிலிருந்தே கார்த்திக்கிற்கு பொழுதுபோக்கே சண்டை போடுவது தான் . வைகை ஆற்றங்கரையில் ஒரு பக்கம்  பெரியவர்கள் கர்லா வைத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க இன்னொரு பக்கம்  சிறுவர்கள் மற்றும்  இளைஞர்கள் ஒவ்வொரு  ஆளாக சண்டையிட்டுக்கொள்வார்கள் . அவை பெரும்பாலும் பெரிய  அடிதடியாக இல்லாமல் ஆளை  பிடித்து கவிழ்த்து ஒருவர் மேல் ஒருவர் ஏறி உட்காரும் மல்யுத்த விளையாட்டாகவே இருக்கும் . அதில் ஒருமுறை அவன் ஒருவனை கவிழ்த்தி   வெற்றிக்களிப்பில் கத்த தோற்றவன் கோபத்தில் அவனை அடிக்க இன்னும் இரண்டு பேரை கூட்டிக்கொண்டு வந்து பெரிய சண்டையாகி விட்டது . " நீயெல்லாம் ஒரு ஊழப்பய என் சாதிக்காரன  அடிக்கிறியா " என்று வந்தவன் கார்த்திக் முஞ்சியிலேயே குத்து விட்டான்  . அதுவரை மல்யுத்த பாணியில் சண்டை போட்டுக்கொண்டிருந்தவனுக்கு இந்த பளீர் குத்து என்னமோ செய்தது . அதை சமாளிப்பதற்குள் மற்றொருவன் விலா  எலும்பில் உதைத்தான் . " யார் மேலடா  கை  வைக்குற தாயோளி " ஏற்கனவே அடி  வாங்கியவன் துணைக்கு ஆள் இருக்கும் சப்போர்ட்டில் எம்பி வந்து அவன் கழுத்தை பிடித்தான் . அவன் செய்த ஆகச்சிறந்த தவறு அது தான் . கழுத்தை சுற்றி பிடித்து தொங்கியவனை அப்படியே  அலேக்காக தூக்கி மற்றொருவன்  மேலே அடித்தான் கார்த்திக் . இருவரும் உடைந்து விழ அந்த இடைவெளியில்  தனியாக நின்றவனை எம்பி உதைத்தான் . அந்த பலமான அடியில்  அவனும் சுருண்டு விழுந்தான் ...

அதற்குள் அங்கே பெரியவர்கள் வந்து விட உடனே விலக்கி  விட்டார்கள் . சண்டையிட்டதில் ஒருவன்  வந்தவர் காதில் கம்ப்ளைய்ண்ட் செய்வது போல ஏதோ கிசுகிசுத்தான் . உடனே அவர் கார்த்திகை கூப்பிட்டு
" என்ன தம்பி படிக்குற வேலைய விட்டுட்டு சண்டியர்த்தனம் பண்றியா " என்று மிரட்டினார் . " இல்லேண்ணே நான் ஒன்னும் பண்ணல  அவன் தான் ஆளுங்கள கூட்டிகிட்டு வந்தான் என்ன அடிக்க " என்று சம்பந்தப்பட்ட பையனை பார்த்து கார்த்திக் கை  காட்டினான் .  அவன் " என்ன அடிச்சுட்டாண்ணே அதான் தோஸ்துகளை கூட்டிட்டு வந்தேன் " என்றான் .
அது வரை அவனுக்கு சப்போர்ட்டாக இருந்தவர் கடுப்பாகி
" ஏண்டா கல்யாணம் பண்ணா  முதல் இரவுக்கு தனியா போவியா இல்லேன்னா  நாலு பேர  துணைக்கு கூட்டிட்டு போவியா " என்று கேட்க அவனுடன் வந்தவர்கள் உட்பட அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டார்கள் .
பிறகு அவரே இருவரையும் கை  கொடுக்க வைத்து  சமாதானப்படுத்தி
 " இனி எங்கயாவது சண்டை  போடுறத பார்த்தேன் பிச்சுப்புடுவேன் "
என்று அவர்களை  மிரட்டி அனுப்பி வைத்தார் . கார்த்திகை  தனியாக கூட்டிக்கொண்டு போய் " அவிய்ங்கல்லாம் அடிதடின்னா எந்த லெவலுக்கு வேணா போவாய்ங்க , உன் சாதில  ஒரு பய வரமாட்டன் , படிக்குற வேலைய மட்டும் பாரு , திரும்ப அவனுகளே வம்புக்கு வந்தாலும் முறைச்சுக்கிட்டு தெரியாம  எண்ட  வந்து சொல்லு , நான் அங்க தான் இருப்பேன் " என்று அக்கரையை நோக்கி கை நீட்டினார் . அவன் நன்றி சொல்லி விட்டு நகர்ந்தான்.. ...

கார்த்திக் கிற்கு அந்த பழைய சம்பவம் கண் முன்னே வந்து போனது . இன்றும் அவன் மேல்  எந்த தப்புமில்லை . வாய் வார்த்தையாக பேசிக்கொண்டிருந்த போது முதலில் கை வைத்தவன் மணி  . என்ன தான் லவ்வருடைய அண்ணனாக இருந்தாலும் சொம்பை மாதிரி அவனிடமெல்லாம் அடி வாங்கிக்கொண்டிருக்க முடியாது . தீர்க்கமான முடிவுடன் ஒரு நிமிடம் அவனை முழுமையாக ஏற இறங்க பார்த்தான் . உயரமாக இருப்பவனிடம் நின்று கொண்டு சண்டை செய்வது வேலைக்காவாது  என்பதை உணர்ந்தான். மணி கை காலை நீட்டினால் இவனுக்கு தாறுமாறாக அடி  படும் . இன்னும் சிறிது பின் வாங்கினான் . கை விரல்களை ஒரு முறை நன்றாக சொடுக்கெடுத்துக்கொண்டான் . ஒரே அடியில் இவனை வீழ்த்த  வேண்டுமென்றால் நெஞ்சு சக்கரத்தில் அல்லது பொட்டில் அடிக்க வேண்டும் . மணியின் உயரத்துக்கு பொட்டில் அடிப்பது கொஞ்சம் கஷ்டம் . நெஞ்சில் அடிக்குப்போகும் போது அவன் லாவகமாக  தடுத்து இவனையே திரும்ப அடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது . சில வினாடிகள் அப்படியே நின்றவன் ஒரு முடிவோடு தலையை குனிந்து கொண்டு வேகமாக மிக வேகமாக மணியின் நெஞ்சில் மோதினான் . அதே நேரத்தில் அவன் கைகளை இறுக பிடித்துக்கொண்டு கால்களை சுழட்டி அவன் கால்களை தட்டி விட்டான் . இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த மணி அப்படியே மல்லாக்க  விழுந்தான் . ஒரு வினாடி கூட வீணடிக்காமல் அவன் மேல் பாய்ந்து வயிற்றில் கால் முட்டியால் மிதித்த கார்த்திக் அவன் தலை முடிகளை ஒரு கையில் பிடித்துக்கொண்டு இன்னொரு கையினால் ஓங்கி மூக்கில் ஒரு வலுவான குத்து விட்டான் . நிச்சயம் அந்த குத்தில் சில்லு மூக்கு உடைந்திருக்க வேண்டும் , ரத்தம் கொட்டியது ...

மணி வெறிகொண்டவன் போல கார்த்திக்கை பிடித்து தள்ளி விட்டான் . இரண்டு அடி  தள்ளிப் போய்  விழுந்தவன் சுதாரிப்பதற்குள் ஓடி வந்து கார்த்திக்கை எத்தினான் . இரண்டு மூன்று எத்துக்கு  பிறகு மணியின் கால்களை சரியாக பிடித்த கார்த்திக் அதை சுழட்ட தலை குப்புற விழுந்தான் மணி . மீண்டும் இருவரும் கட்டிப் புரண்டார்கள் . சுற்றி நின்றவர்கள் யாரும் சண்டையை விலக்கி விடாமல் வேடிக்கை பார்த்தார்கள் . கடைக்காரன் நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன நம்ம மேல விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்பது போல கடைக்கு வெளியில் அடுக்கி வைத்திருந்த சோடா பாட்டில்களை உள்ளே எடுத்து வைக்க ஆரம்பித்தான் . சுந்தரி அவர்களின் சண்டையை நிறுத்த  சொல்லி கத்திக்கொண்டிருந்தாள் . அவள்  இப்படி ஊரே வேடிக்கை பார்க்கும்  படி இருவர்  சண்டை போடுவதையெல்லாம் சினிமாவில்  தான் பார்த்திருக்கிறாள். அவளின் கத்தலையும் , கதறலையும் பொருட்படுத்தாமல் இருவரும் மாறி மாறி அடித்துக்கொள்வதிலேயே குறியாக இருந்தார்கள்  . மணி என்ன தான்  ஆள் வளர்ந்திருந்தாலும் கார்த்திக்கிற்கு இணையாக அவனால் சண்டையிட முடியவில்லை ...

சின்ன வயது சண்டையில் அந்த மதுரை பையன் செய்த அதே தவறை மணியும் செய்தான் . அவனை பின்பக்கமாக கழுத்தை வளைத்து பிடித்தான் . மணி வெயிட்டுக்கு அவனை அலேக்காக தூக்க முடியாது என்பதால் நன்றாக குனிந்த கார்த்திக் பின் முழு வேகத்ததோடு பின்னால் இருந்த சுவற்றில் மணியை முற்றிலுமாக சாய்த்தான் . அந்த பலத்த அடியில் மணிக்கு முதுகெலும்பு உடைந்தது போல வலித்தது . அவன் அப்படியே சுருண்டான் , பிறகும் வெறி அடங்காத கார்த்திக் கீழே இருந்த கல்லை எடுத்துக்கொண்டு மண்டையை உடைப்பதற்காக வெறியுடன் பாய்ந்தான் . அந்த ஒரு  நிமிடம் சுந்தரி நடுவில் வராவிட்டால் மணியின் மண்டை  உடைந்திருக்கும், கார்த்திக்கும் உள்ளே போயிருப்பான் . அவள் கையெடுத்து கும்பிட்டதை பார்த்ததும் அவன் கல்லை  கீழே போட்டு விட்டு பெட்டிக்கடைக்கு போய் சிகரெட்டை வாயினுள் வைத்துக்கொண்டு தீப்பெட்டியை தேடினான் . கடைக்காரர் எந்த தயக்கமும் இல்லாமல் உடனே தம்மை பற்ற வைத்தார் .
கூடி இருந்தவர்கள் எல்லாம் மணியை பிடித்து தூக்கி விட்டார்கள் , அவனுக்கு கோபம் குறையாமல் அவர்கள் கைகளை உதறி விட்டான் . கார்த்திக்கை வெறி கொண்டு பார்த்தவன் இனி எந்த ஜென்மத்திலும் அவன் நம் வீட்டு  மாப்பிள்ளையாக வரவே கூடாது என்று மனதுக்குள் சபதம் செய்தான் ...

தொடரும் ...

முதல் ஏழு பாகங்களை படிக்க கீழே சொடுக்கவும் ...

அவன் - அவள் - நிலா (1) ...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...